Thursday 30 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -46

ஒரு நடிகரையே சூப்பர் டூப்பர் ஹீரோவாக்கிய குரல், இவருடையது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், நடிகர் இப்படி பன்முக கலைஞரான இவர், இளைய தளபதி விஜயின் தாய்மாமன். அவர்தான் எஸ்.என்.சுரேந்தர். 

சிறு வயதிலேயே குழந்தை பாடகராக பாடல்களை பாடியிருக்கிறார். 1960களின் ஹிட்டான 'பாமா விஜயம்' படத்தில் வரும் "வரவு எட்டணா செலவு பத்தணா..." பாடலில் வரும் குழந்தை குரல் இவருடையதுதான்.


சினிமாவில் நடிகராகவோ, பின்னணி பாடகராகவோ மாற வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் பின்னணி குரல் கொடுப்பவராகி விட்டார். சீயான் விகரம் கூட, முதலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதன் பிறகு தான் நடிகரானார் தெரியுமா?

கன்னடத்தில் இருந்து டப்பிங் செய்து தமிழில் வெளியான, 'அதிசய மாப்பிள்ளை' என்ற படத்தில்தான் சுரேந்தர் முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு, 'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தார். இதுதான் அவர் டப்பிங் பேசிய முதல் தமிழ் படம். ஆதன் பிறகு, பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக 600 படங்களில் முன்னணி ஹீரோக்கள் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு எஸ்.என்.சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். 

'மைக்' புகழ் நடிகர் மோகனுக்கு முற்றிலுமாக இவரது இரவல் குரல்தான். ஆனால், மோகனின் முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே', படத்தின் ஹீரோவான நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனுக்குத்தான் எஸ்.என். சுரேந்தர் குரல் கொடுத்திருப்பார்.

டி.ராஜேந்தரின் 'ரயில் பயணங்களில்' படத்தில் ஹீரோ ஸ்ரீநாத்துக்கு, 'ஒரு தலை ராகம்' சங்கருக்கு... 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்குக்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் விஜயகாந்துக்கு, 'ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் ரகுவரனுக்கு... 1980ஸ் டிஸ்கோ டான்சரான நடிகர் ரவீந்தர் என சுரேந்தர் குரல் கொடுத்த நடிகர்கள் பட்டியல் ஏராளம். 'அந்நியன்' படத்தில் விக்ரமின் தந்தையாக வரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணுவுக்கும் இவரது குரல்தான்.

தமிழ் சினிமாவில் 1980களின் பெரும்பாலான அறிமுக நடிகர்களுக்கு முதலில் இவரது குரலைத்தான் பயன் படுத்தி இருக்கிறார்கள். 

ஆனால், இவரது குரல் என்றாலே மோகன் தான் நினைவுக்கு வருவார். (எனக்கும் கூட மோக் பற்றி எழுதியதுமே இவர் நினைவுக்கு வந்ததால் தான் இந்த கட்டுரை) 1981ல் 'கிளிஞ்சல்கள்' படம் துவங்கி 1987 வரை 75 படங்களுக்கு மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். படங்களில் மோகன் தான் வசனம் பேசுவதாகவே ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இவரது குரல் கன கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

மென்மையான ரொமான்டிக்கான,  வார்த்தைகளுக்கு வலிக்காத மென்மையான குரல் எஸ்.என்.சுரேந்தருக்கு. கண்களை மூடியபடி கேட்டால், 1990ஸ் படங்களில் நடிகர் விஜயின் குரல் போலவே இருக்கும். அவரது தாய்மாமன் இல்லையா? 


விஜயுடன் 'நாளைய தீர்ப்பு', 'பிரியமுடன்', 'நெஞ்சினிலே' மாதிரியான சில படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் நடித்திருக்கிறார். 'சென்னை 28' படத்திலும் தலை காட்டியிருக்கிறார்.

டப்பிங் குரல் கொடுப்பதை தாண்டி, எஸ்.என். சுரேந்தர் மிக அருமையான பின்னணி பாடகர். நான்கு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். இவரது காதல் டூயட் பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடுபவை.


"மா மரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா..."

"பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே..."

"கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா..."

"தனிமையிலே ஏஏஏ ஒரு ராகம்.. " 

"தேவதை போலொரு பெண் ஒன்று வந்தது இங்கே..."

"மாலை என் வேதனை கூட்டுதடி..."

இவை எல்லாம் சாம்பிள்தான்.. 


விஜய்க்காக 'தேவா', 'ஒன்ஸ்மோர்', 'விஷ்ணு', 'மாண்புமிகு மாணவன்', 'காதலுக்கு மரியாதை' என பல படங்களில் பாடி இருக்கிறார். அதில் சில...

"பூவே பூவே பெண் பூவே.. என் பூஜைக்கு..."

"ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..."

"சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா பாட்டு வரும்..."


பின்னணி பாடகர் ஒருவர் பாடல்களையும் பாடிக் கொண்டு, படங்களில் பின்னணி குரலும் கொடுத்துக் கொண்டு தனது குரலாலேயே தமிழ் சினிமாவுக்கு உச்ச நட்சத்திரமாக ஒருவரை அடையாளப்படுத்தியவர், எஸ்.என்.சுரேந்தர் ஒருவராகத்தான் இருக்கும்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 8 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -45

சினிமா என்றாலே வெவ்வேறு விதமான மயக்கம் தான். வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்றோ வாணி ஜெயராமுக்கும் சுசீலாவுக்கும் வேறுபாடு அறியாமலோ 1990களின் தேவா பாடல்களை இளையராஜா என்றோ நினைத்து பலரும் மயங்குவதுண்டு. அப்படித்தான் 1980களின் இவரது பல பாடல்களை இளையராஜா என்றே நினைப்போம். ஆனால் இவர் இளையராஜாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகுக்கு வந்தவர். அவர்தான் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.



தமிழின் மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தியிடம் தான் இவரும் சங்கரும் இசை படித்தனர். பிறகு, எம்.எஸ்.வி. தனியாக இசையமைத்தபோது அவரிடம் உதவியாளர்களாக சேர்ந்தனர். சங்கர் கணேஷ் இரட்டையர்களை தனியாக இசையமைப்பாளராக்கியவர் கவியரசர் கண்ணதாசன். அவர் தயாரித்த 'நகரத்தில் திருடர்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் நின்று போனது. அதன் பிறகு சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 'மகராசி' படத்துக்கு அவர்களை கண்ணதாசன் சிபாரிசு செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகன் ரவிச்சந்திரனுக்கு உடல் நல குறைவால் படம் தள்ளிப் போக, நாயகியான ஜெயலலிதாவும் தேவரிடம் இவர்களுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்.

காரணம், திரைக்கு வரும் முன்பே ஜெயலலிதாவின் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாட்டிய நாடகப் பணிகளில் சங்கர் கணேஷ்  இருந்திருக்கின்றனர். நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக போயஸ் தோட்ட இல்லத்துக்கும் சென்றதால் அறிமுகம். பல தடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 'மகராசி' படம் 1967ல் வெளியானது. 

அதன் பிறகு ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற இரண்டாம்கட்ட நாயகர்களின் படங்களில் இசையமைத்த இவர்களுக்கு 1971ல் எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில், "உனது விழியில் எனது பாடல்...", "சித்திரச் சோலைகளே..." "தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு..." என அனைத்து பாடல்களுமே ஹிட்.  இதுபோல 1972ல் வெளியான எம்ஜிஆரின் 'இதய வீணை' படத்துக்கும் (காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்... பொன்னந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு... மாதிரியான ஹிட் பாடல்கள்) இவர்தான் இசை. அப்போதிருந்தே எம்ஜிஆருடன் கணேஷூக்கு நல்ல பழக்கம்.

1970களில் நிறைய படங்களுக்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இதற்கிடையே சங்கர் மரணமடைய, சங்கர் கணேஷ் என்ற இரட்டை பெயரிலேயே கணேஷ் தொடர்ந்து இசையமைத்தார். தமிழ் ரசிகர்களிடம் அவரை அடையாளம் காட்டிய படம், 1977ல் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு'. தேவர் தயாரித்த அந்த படத்தில் "பருத்தி எடுக்கையில என்ன பல நாளும் பாத்த மச்சான்...", "ஆத்துல மீன் பிடிச்சி..." பாடல்கள் இன்றளவும் ஹிட்...

கமலுக்கு 'நீயா', 'மங்கம்மா சபதம்'. ரஜினிக்கு 'தாய்வீடு', 'ரங்கா', 'ஊர்க்காவலன்'. பாக்யராஜுக்கு 'கன்னிப் பருவத்திலே', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'எங்க சின்ன ராசா'. விசுவுக்கு 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'வீடு மனைவி மக்கள்' என தொடங்கி 1990களின் ஆரம்பம் வரை 15 ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்திருக்கிறார் கணேஷ். 

சில்க் ஸ்மிதா அறிமுகமான 'வண்டிச்சக்கரம்' படத்தின் இசையமைப்பாளரும் கணேஷ் தான். அந்த படத்தில் எஸ்பிபி பாடிய "வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட..." பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ரகம். 

இதே டைப்பிலான 'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் டிகேசி நடராஜன் பாடிய, "என்னடி முனியம்மா ஒன் கண்ணில மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..." பாடலும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த பாடல்தான்.

1950, 1960களில் பிரபலமான பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜாவை திரும்ப அழைத்து வந்து "செந்தாமரையே செந்தேன் இதழே..." பாடலை பாட வைத்து ஹிட்டாக்கினார்.



"செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..."

"உத்தரவின்றி உள்ளே வா, உன்னிடம் ஆசை கொண்டேன் வா..."

"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..."

"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..."

"பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம்..."

"மேகமே மேகமே பால் நிலா காயுதே... தேகமே தேயினும்..."

"ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு..."

"மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..."

"ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்..."

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது..."

"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட..."

"ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்..."

"பட்டுக்கோட்டை அம்மாளே பாத்துப்புட்டான் நம்மாளே..."

"மாசி மாசம் தான் சொல்லு சொல்லு... மேள தாளம் தான்..."

"மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்  மண்ணில் இறங்குது ஆகாசம்..."


இப்பிடி ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் சங்கர் கணேஷின் ஹிட் பாடல்கள் ஏராளம். 1980களின் வானொலிகளில் இளையராஜாவுக்கு இணையாக இவர் பாடல்கள் ஒலிப்பது வழக்கம்.

1980களில் 'டிஸ்கோ டான்ஸ்' மிக  பிரபலமாக இருந்தபோது 'டிஸ்கோ டான்சர்' இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்த எடுத்த 'பாடும் வானம்பாடி' படத்துக்கும் இவர்தான் இசை. நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நாயகனாக நடித்த இந்த படத்தில் அனைத்து டான்ஸ் பாடல்களுமே ஹிட்.

எம்.எஸ்.வி.யிடம் இருந்தபோது 'கலாட்டா கல்யாணம்' மாதிரி ஒரு சில படங்களில் கணேஷ் பாடியும் இருக்கிறார்.  இது போலவே 1980 வரை சில படங்களிலும் கணேஷ் நடித்திருக்கிறார். 'ஒத்தையடி பாதையிலே' படத்தின் ஹீரோ இவர்தான். அதில் கே.ஜே.யேசுதாஸ் குரலில் "செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா நான் விக்கிப் போறேன் தாகத்தில நில்லம்மா..." ன்னு டூயட் பாடலும் கணேஷுக்கு உண்டு.

1986ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் தபாலில் அனுப்பிய குண்டு வெடித்ததால் கணேஷின் கை விரல்கள் சிதறியதோடு வலது கண் பார்வையும் பறி போனது. இன்று வரை கையில் உறையுடனும் கருப்பு கண்ணாடி அணிந்தபடியும் கணேஷ் இருப்பதற்கு இதுதான் காரணம்.

குண்டு வெடிப்பால் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அப்பலோவில் சிகிச்சை பெற்ற கணேஷுக்கு முழு உதவியும் செய்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். எம்ஜிஆரை தனது தெய்வம் என்றுதான் கணேஷ் சொல்வார். அவரது படத்துக்கு இசையமைத்ததில் இருந்தே கணேஷூக்கு எம்ஜிஆருடன் நல்ல பழக்கம். ஆரம்ப கால அதிமுக காரர் என்றே கணேஷை சொல்லலாம். 

ஐந்து ஆண்டுகள் கழித்தும் கணேஷை வெடிகுண்டு தாக்குதல் துரத்தியது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் ஸ்ரீபெரும்புதுரில் கொலை  செய்யப்பட்டபோது அங்கு நடந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவரது இசைக் கச்சரிதான். மனித வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் மேடையில் இருந்தார்.

1980க்கு பிறகு திரைப்படம், இசைக் கச்சேரி மட்டுமே என இருந்த கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆயிரம் படங்களில் சுமார் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். உடலை ஒட்டி பிடித்தபடி டைட்டான சட்டை, கழுத்து கைகளில் நகைகள், 1960, 70களில் பிரபலமாக இருந்த நறுக்கு மீசை, இதுதான் இசையமைப்பாளர் கணேஷின் அடையாளம்.



இவரது மகனும் நடிகர் தான் சன், விஜய் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ இவரது மகன் தான்.

இசையமைப்பாளர் கணேஷுக்கு மார்ச் 4ல் 80ஆவது பிறந்த நாள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 2 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -44

1980களில் ரஜினி, கமலுக்கு செம டஃப் கொடுத்த நடிகர் இவர். இவரது பாதி படங்களுக்கு மேலாக சில்வர் ஜூப்ளி ஹிட் ரகங்கள். இன்று வரை பலரது இரவு தாலாட்டு கீதமாக நிச்சயம் இவரது படப் பாடல்களும் இருக்கும். நடிகர் மோகன். 'மைக்' மோகன் என செல்லமாக அழைப்பார்கள். 



கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இன்று வரை (35 ஆண்டுகளாக படம் எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும் கூட) இருப்பவர். 

கர்நாடகாவில் சாதாரணமா ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்க, அப்படியே அங்கிருந்து மோகனை சினிமாவில் அறிமுகம் செய்தவர், இயக்குநர் பாலு மகேந்திரா. 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? கமல். அடுத்த நான்கைந்து ஆண்டுகளிலேயே நமக்கு போட்டியாக மோகன் படங்கள் இருக்கும் என கமல் நிச்சயமாக அப்போது நினைத்திருக்க மாட்டார்.



கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்கில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்கான, தூர்ப்பு வெல்லே ரயிலு' என வலம் வந்த மோகனை தமிழுக்கு 1980ல் அழைத்து வந்தவர், இயக்குநர் மகேந்திரன். 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகம் செய்தார். இந்த படத்திலும் அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான ரோலில் நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே ஹிட்.

முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின்  "பருவமே புதிய பாடல் பாடு..." பாடலில் இருந்து மோகனின் வெற்றிக் கணக்கு  தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோகனே கதாநாயகனாக நடித்து வெளியான 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை' இரண்டும் அதிரி புதிரி ஹிட். இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. இந்த படங்களை இப்போது பார்த்தாலும் அறிமுக நாயகன் மாதிரியே தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஹிட் ரகம் தான்.  குறைந்தது 175 நாட்களை தாண்டின. 



1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கேமரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் ரிலீசான வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.



அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை

என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர். 

பாரதிராஜாவின் அறிமுகமான நடிகர் சுதாகர், தமிழில் தவற விட்ட இடத்தை மோகன் கச்சிதமாக பிடித்துக் கொண்டார். மோகன் நடித்த படங்களில் பைட் ஸீன் எதுவுமே இருக்காது. மசாலா படமாகவும் இருக்காது. ஆனாலும், மோகன் படங்களுக்கு திருவிழா கூட்டம் போல மக்கள் குவிந்தனர்.



அப்பாவித்தனமாக முகத்துடன் உருகி உருகி காதலிப்பது, மைக்கை பிடித்துக் கொண்டு நிஜ பாடகர் போலவே பாடி நடிப்பது என கலக்கியதால் மைக் மோகன் ஆனார்.

இப்படி ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக  'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.



வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக',  'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே'  'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன  பட்டியலுக்குள் அடங்காது. 

இது போலவே,


"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்..."

"இளைய நிலா பொழிகிறது..."

"வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்..."

"பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..."

"ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே..."

"தேவதாசும் நானும் ஒரு சாதிதானடி.."

"பாடவா உன் பாடலை..."

"தேவன் தந்த வீணை அதில் தேவி உந்தன் கானம்..."

"சங்கீத மேகம் தேன் சிந்தும் வானம்..."

"தென்றல் வந்து என்னைத் தொடும் சத்தமின்றி முத்தமிடும்..."

"கண்மணி நீ வர காத்திருந்தேன்..."

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது..."

"இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்..."

"வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்..."

"நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா..."

"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..."

"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ..."

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா..."

"ஊரு சனம் தூங்கிடுச்சி ஊதக் காத்தும் அடிச்சிடுச்சி..."

"வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..."

"மலையோரம் வீசும் காத்து மனசோரம் பாடும் பாட்டு கேட்குதா.."


இதெல்லாம் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டும் மோகன் ஹிட்ஸ்களில் வெகு சில. 1980களின் காதலர்களுக்கு மோகன் பாடல்கள் தான் காதல் கீதங்கள்.  

தமிழ் சினிமாவை இப்படி பலவிதமாக கலக்கிய நடிகர் மோகன் தனது சொந்தக் குரலில் படங்களில் பேசவில்லை. மைக்கை அடையாளமாகவே வைத்து மேடை பாடகராக நடித்து ஹிட் கொடுத்த மோகனுக்கு படங்களில் குரல் கொடுத்தவர் ஒரு பாடகர். அவர்தான் இளைய தளபதி விஜயின் தாய் மாமாவும் அன்றைய பிரபல பினனணி பாடகருமான எஸ்.என்.சுரேந்தர். 

மோகன் நடித்த தமிழ் படங்களில் 70%க்கும் அதிமானவை சுரேந்தர் குரல் தான். 1981ல் 'கிளிஞ்சல்கள்' துவங்கி 1987ல் வெளியான 'கிருஷ்ணன் வந்தான்' படம் வரை சுரேந்தர் குரல் தான் மோகனுக்கு. ஆனால் டப்பிங் குரல் என்பது கூட  ரசிகர்களுக்கு தெரியாத வகையில் மிக அருமையாக நடித்திருப்பார் மோகன். பாடலுக்கு எஸ்பிபி...! வசனத்துக்கு எஸ்.என்.சுரேந்தர்...!

முதல் படத்தில் இருந்தே வசனம் பேசுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த மோகன் 'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. மோகன் குரலே நன்றாக இருப்பதால் அவரையே பேச சொல்லுங்கள் என  கருணாநிதி சொன்னதால் அந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் மோகன் பேசினார்.

இதற்கிடையே, எஸ்.என்.சுரேந்தரும் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்த, கூடவே திரை வட்டாரத்தில் மோகனின் உடல் நிலை குறித்து வதந்தியும் பரவ, மோகனின் திரையுலக வாழ்க்கை இறங்கு முகமானது. 

அதன்பிறகு இப்போது வரை அவ்வப்போது தமிழில் மோகன் தலை காட்டினாலும் 1980களின் மோகன் தான் ரசிகர்களின் மனதில் என்றென்றும் ததும்பி நிற்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்