Monday, 13 July 2026

புரட்சி தலைவரை தேடிச்சென்ற புரட்சி திலகம்

 டைரக்டர் டச்...

டைரக்டர் டச்னு சொல்லுவாங்க...

அது இவருக்காகவே வந்த வார்த்த. 

மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே  சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா அவரோட தெறமைய தவிர வேறென்ன..?

கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' 'ஒரு கைதியின் டைரி'  மாதிரியான கிரைம் திரில்லர் படங்களுக்கு இவருதான் அஸ்திவாரம்.

 'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?

ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'பாமா ருக்மணி' எல்லாம் இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. ''மவுன கீதங்கள்' தான் இவரோட சொந்த குரலில் வந்த மொத படம். 

அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...

அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம் தான். 

1980களில் பவர் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு சினிமா ஹீரோவா ஃபேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் அவருக்கு சுத்தமா வராது...

இவரு ஒரு ரூட்டுன்னா, அந்த சமயத்தில டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம் உண்டு. அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. 

'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விஷேசங்க' இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம். 

தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் 'தாவணிக் கனவுகள்'னு சொல்லுவாங்க... அதில் அவரோட குருநாதர் பாரதிராஜாவையும் நடிக்க வச்சிருப்பாரு.

ரஜினியோட சேர்ந்து  நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.

இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியாக்கி ஹீரோயினா அழகு பார்த்தவர். 

சினிமாவோட சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசனை 'தாவணி கனவுகள்' படத்துல வேற கோணத்தில காமிச்ச துணிச்சல் காரர். ஒரு படம்னாலும் சிவாஜி சினிமா வாழ்க்கையில இவரு மறக்க முடியாத மனிதர்.

நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே  இவரு ஒருத்தரு தான். 

அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.

இவரைப்போல இவரது சிஷ்யர்களான பாண்டிய ராஜன், பார்த்திபனும் நடிகர் கம் இயக்குநர்கள்...

இவர் படத்துல எல்லாமே 'நச்' ஸீன்கள் தான். அதிலயும் சூப்பரா ரசிகர்களை கவருத மாதிரி வார ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு தன்னோட பெயரை போடுறது இவரோட ஸ்டைல். 

இவரோட  திரைக்கதையை பார்த்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'

இவரோட 'இன்று போய் நாளை வா' படத்தோட ரீ மேக் தான் சந்தானம் நடிச்ச 'கண்ணா லட்டு திங்க ஆசையா' இவர் படத்துக்கு தனியா காமெடியன் அவசியமில்ல. இவரே திருட்டு முழியோட பண்ற சேட்டைகளை போதுங்கிற அளவுக்கு இருக்கும்.

இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட... 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசையும் இவர் தான்...! அந்த படத்தில "பச்ச மல சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டும் இவரு பாடுனது தான்... 

தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்குன்னு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக் காய், சின்ன வீடு மாதிரி நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர். 

எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான். 

எம்ஜிஆர மாதிரியே தமிழ் சினிமாவில இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு.  என்னையே 'எங்க சின்ன ராசா' வெளியான சமயத்தில 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு...

திரையுலகை தாண்டி 'பாக்யா'ங்கிற பெயரில் பல்சுவை வார இதழ் பத்திரிகையையும் 30 வருஷத்துக்கும்  மேல் நடத்துன பத்திரிகையாசிரியர். குட்டிக் கதைகளோட அவரு சொல்ற கேள்வி பதில் பகுதி பிரசித்தம்.

பாமா ருக்மணி' படத்தில் இவரோட நடிச்ச பிரவீணா முதல் மனைவி. அவர் மறைஞ்சதும் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடிச்ச பூர்ணிமாவை இரண்டாவது மனைவியா கட்டிகிட்டாரு. நடிகர் சாந்தனு, இவரோட மகன்

2006ல் வந்த 'பாரிஜாதம்' பட ஹீரோயின் சரண்யா, இவரோட மகள்.

இன்றைய தலைமுறை நடிகர்கள் வரைக்கும் அப்பா கேரக்டரிலும் நடிச்சிட்டாரு. இறக்கும் வரையிலும் ஆக்டிவா வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் 'கலை உலக வாரிசு' 'புரட்சி திலக'த்துக்கு அஞ்சலி...

#நெல்லை_ரவீந்திரன்




காலமெல்லாம் காதல் வாழ்க

 தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடக்கையில் தவிக்குது மனசு தவிக்குது...

டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ, உன்னால வாழுறேன்...

இது மாதிரியான பாட்டுகளும் அவை ஒலித்த சூழ்நிலைகளும் மனதில் அலை மோதி, நினைவுகளில் நீர் தெளித்து எழுப்பி விட்டன, அந்த இரண்டு பெண்களின் கிசுகிசுப்பு உரையாடல்.

பெரிய தொட்டியில் நிரப்பி இருக்கும் தண்ணீர் அல்லது கிணற்று தண்ணீர் எடுக்க காலை, மாலை இரு வேளையும் செல்வது பெண்கள் வழக்கம், குறிப்பாக இளங்குமரிகள். காலையில் ஊர் விழிக்க நேரமாகும், மாலைப்பொழுது தான் ஆண்டாண்டு காலமாகவே காதலுக்கே உண்டான பொழுது. கடை வீதிகளும் சுறுசுறுப்பாகி, மங்கைகளுக்கு வலை வீசும் பாடல்களும் ஒலிபரப்பாகும்.

90களில் சினிமா பாடல்களை ஆடிேயோ கேசட்டுகளில் பதிவு செய்து தரும் ரிக்கார்டிங் சென்டர்கள் அதிகம் உண்டு. அங்கு பாடல்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்து வந்து, டெய்லர் கடைகளில் தொடங்கி, பலவிதமான கடைகளிலும் பலவிதமான பாடல்கள் வாயிலாக யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு வலை வீசிக்கொண்டு இருப்பார். 

சம்பந்தப்பட்ட இருவருக்கும் தான் அது புரியும். பரவசப்படுத்தும். சில தருணங்களில் நேயர் விருப்பம் போல காதலர் விருப்பமாக பாடல் ஒலிக்கும். டேப் ரிகார்டரில் ரீவைண்ட் பட்டனும் ஆடியோ கேசட்டின் நாடாவும் தேயும் அளவுக்கு ஒலித்த பாடல்களும் உண்டு...

"சுமதி நாமஸ்தயே...". என்ற சிங்கார வேலன் பாடல்

"தேவி ஸ்ரீதேவி..." என்ற வாழ்வே மாயம் பாடல்கள் எல்லாம் துணிந்த காதலர்களையும்

'தண்ணி குடம் எடுத்து...' மாதிரியான  பாடல்கள் எல்லாம் மறைமுக குறிப்பால் உணர்த்தும் காதலர்களையும் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவை.

‘சுவரில்லாத சித்திரம்’ படத்தில் சுதாகருக்கு இடம் தரும் டெய்லர் கவுண்டமணி போலவும் சில பரோபகாரிகளும் உண்டு. சுதாகரிடம் தோற்று போகும் பாக்யராஜ்களும் உண்டு. சில காதலர்களை பார்க்கும்போது, ‘பல மணி நேரமா எப்பிடி இப்பிடி பார்த்துக்கொண்டே இருக்காங்க..? என்னதான் பேசிகிட்டு இருப்பாங்க..?’ இப்படி எல்லாம் மனதில் தோன்றும்.

ஊரில் பணி புரிந்த ஒரு இடத்தில், கேஷியர் அண்ணனை தேடி, சரியாக ஐந்து மணிக்கு ஒரு பெண் வந்து விடுவார். அப்புறம்  ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவர்களை பார்க்க முடியாது. சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது, பக்கத்தில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு தெருவில், படங்களில் டி.ராஜேந்தரின் காதல் போல ‘ரொமான்ஸ்’ செய்து கொண்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் கடை வாசலிலேயே லவ்விய அவர்கள், திடீரென ஒருநாள் திருமணம் செய்தனர்.

இந்த திருமணங்களை ஊரில், ‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டான்’, 'கூட்டிட்டு ஓடிட்டாங்க...' என்பார்கள். ஒரு சில காதலில், கத்தரிக்காய் முற்றி கடைத்தெரு  வரும் முன், இரு வீட்டார் பேசி, முறைப்படி முடித்து வைத்து விடுவார்கள். அவர்கள் ‘மனதில் நின்ற காதலியே, மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்...’ என பாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்த காதல்கள் எல்லாம் எங்கு முளை விடும், துளிர் விடும் என்பதெல்லாம் நீண்ட கால கேள்விகள். சனி, ஞாயிறு நாட்களில் தியேட்டர்களிலும் ரொமான்ஸ் நடக்கும். சீட் நிறைந்து, எக்ஸ்ட்ரா சேர் போட்டு, நின்று கொண்டு படம் பார்க்கும் அளவுக்கு கூட்டம் இருந்தாலும், கண்களாலே கைது செய்து கொண்டு இருப்பார்கள்.  

பாபநாசம் மலையில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்காக நாட்கணக்கில் மக்கள் போய் தங்குவார்கள். அங்கும் கூட, தாமிரபரணி நதிக்கரையில் புதிய காதலுக்கு நாற்றாங்கால் பரப்புவதோடு, காதல் திருமணத்துக்கான அச்சாரமும் நடைபெறும், மறு மாதமே ஆவணி, கூடுதல் வசதி.

பின்னாளில், ஒரு பெண் மையல் கொண்டதை கூட, அறியாமல் இருந்திருக்கிறேன். அவருடன் இருந்த சில பெண்கள் சொன்ன பிறகுதான், அதை அறிந்தேன். எப்படி எங்கு காதல் துளிரும்? காதல் பார்வை எது? இப்படி காதலின் அடிப்படை விஷயங்கள் கூட புரியாத ஜடமாக இருந்திருக்கிறேன். ஆனால், காதலர்களை சரியாக இனம் காண தெரிந்தது எப்படி என்று தான் இன்று வரை விளங்கவில்லை.

ஷாப்பிங் மாலில் பில்லிங்கில் நிறைய பேர் வரிசையில் நிற்க, கடையின் மிக பரபரப்பான வேளையில், அந்த இரு பெண்களின் கிசுகிசுப்பும் இப்படித்தான் காதில் விழுந்தது. 

‘எனக்குல்லாம் ஆளு இருக்குப்பா?’ அந்த பெண் சொல்ல, இந்த பெண், அவனா... இவனா... அந்த கருப்பனா... இப்படி விசாரிக்க... ‘இல்லை.. இல்லை.. ச்சி ச்சி அவன்லாம் இல்ல..’ என சொல்லி விட்டு ‘அது சஸ்பென்ஸ்...’ என்றார். 

பில் போட்டுக்கொண்டே அந்த பெண்கள் பேசிய கிசுகிசுப்பும், காதல் நினைவில் அவர்களின் முக பூரிப்பும் எனக்கு டெய்லர், கேஷியர் அண்ணன், சொரிமுத்து அய்யன் கோவில், தியேட்டர் என எதையெல்லாமோ நினைவூட்டியது. நண்பகலின் பசி வேளையில் காதலை ருசித்துக் கொண்டிருந்தேன்.

குறுந்தொகையின் ‘செம்புலப் பெயல் நீர் போல...’ என்ற இலக்கிய காலம் தொடங்கி, இப்போதும் எப்போதும் காதலுக்கு காலம், நேரம் ஏது? அழிவும் ஏது?

#நெல்லை_ரவீந்திரன்



விண்ணோக்கி பறந்த வானம்பாடி

 “சாந்தா, ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்..? உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே...”

“என் இசை... உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...”

“தேனோடு சேர்ந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல். இந்த சிங்கார வேலன் சன்னதியில் நம் சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்... பாடு சாந்தா, பாடு...”

‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் ஜெமினி, சாவித்திரி உரையாடலை தொடர்ந்து, ‘சிங்கார வேலனே தேவா...’ என தொடரும் அந்த குரல்..., சுப்பையா நாயுடு இசையில், நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுறிச்சி  அருணாசலத்தின் நாதஸ்வரத்தோடு பின்னி பிணைந்து..., இன்றும் மனதை மயக்குகிறது.

1962ல் வெளியான அந்த படத்தில், பத்து பாடல்கள் வரை உண்டு. கந்த சஷ்டி பாடிய சூலமங்கலம் ராஜலட்சுமியும் கூட, வள்ளலாரின் ‘ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற...’ என்ற முருகன் பாடல் பாடி இருப்பார். ஆனால், இன்றும் சிங்கார வேலன் தான், நினைவில் நிற்கிறது, அந்த காந்தர்வ குரலால். 

அந்த பாடலுக்கு ஐந்தாண்டுக்கு முன்பே, தமிழில் அறிமுகமாகி இருந்தாலும்... ஒரே ஆண்டில் ஆறு மொழிகளில் நூறு பாடல்களை பாடி இருந்தாலும்... சிங்கார வேலன் அருளில் தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அறிமுகமான கால கட்டத்தில், லீலா, ஜிக்கி, சுசீலா என பின்னணி பாடகிகள் பலர் இருந்ததால், வாய்ப்புகள் அரிதானது. ஆனாலும், 1960களில் ஒலித்த குரலின் இனிமை, குழைவு, வசீகரம் ஆறு தசாப்தங்களை கடந்தும் அப்படியே இருந்தது, இறைவன் அளித்த வர பிரசாதம். 

1960களில் தொடங்கி, 1970களின் பிற்பகுதி வரை டிஎம்எஸ் - சுசிலா ஜோடிக்குரல் தான் பிரதானம். எம்ஜிஆரின் 50வது படமான ‘நல்லவன் வாழ்வான்’ (1961) படத்தில் லீலா, சுசீலா பாடியவை, நாயகிக்கானவை. இவர் பாடிய ‘அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு...’ நம்பியாருக்கான ஜோடிப்பாடல். 

சுமார் இருபது ஆண்டுகள், இதுபோன்றே இருந்தாலும், ஜெமினி போன்ற பிற நடிகர்களின் பட வாய்ப்புகளில் நிறைவாகவே பாடினார். 

தேனிலவு படத்தின் “ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி...’ போலீஸ்காரன் மகள் படத்தில் ‘இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கிறேன்...’ என பல பாடல்கள் நிறைவானவை. 

1970களின் இறுதியில் தொடங்கியது,  இவரது இசை சாம்ராஜ்யம். அடுத்த 25 ஆண்டுகள்,  இவரது குரலில் தான் தமிழ் திரை இசை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 

பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், இவரது கால்ஷீட் கிடைக்காமல், அறிமுகமாகி நறுமணம் வீசிய மலர்கள் தான் சித்ரா, ஸ்வர்ணலதா. 

இளையராஜா அறிமுக படமான அன்னக்கிளி, ஸ்ரீதேவியின் அறிமுக பாடலான 16 வயதினிலே ‘செந்தூரப்பூவே...’, ராதிகா அறிமுக பாடலான கிழக்கே போகும் ரயில் ‘பூவரசம் பூ பூத்தாச்சி...’ ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை, ‘புத்தம் புது காலை...’ இப்படி அடுத்த தலைமுறைகளுக்கு பாடியவர், அதற்கு இளம் தலைமுறை அனிருத் இசையிலும் வேலையில்லா பட்டதாரியில்  ‘அம்மா... அம்மா...’ பாடலையும் பாடினார்.

ஜெயலலிதாவுக்கும் அவர் தாய் சந்தியாவுக்கும், தேவிகாவுக்கும் அவர் மகள் கனகாவுக்கும், லட்சுமிக்கும் அவர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பின்னணி பாடி இருக்கிறார்.

நான்கு, ஐந்து தலைமுறைகளுக்காக பாடிய இவரது பாடல்களில் எஸ்பிபி உடனான பாடல்கள் அனைத்தும் தேனில் தோய்த்த பலாச்சுளைகள். எஸ்பிபியை திரையில் பின்னணி பாட வருமாறு அறிவுறுத்தியவரே இவர் தான். இருவரின் குரல்களும் மாயாஜாலம். இசைக்கும், பாடல் வரிகளுக்கும் உயிருட்டியவை. ‘ஆவாரம்பூ’ போன்ற சில படங்கள் இருவரின் பாடல்களாலேயே இன்றளவும் பிரபலமானவை. 

‘சிங்கார வேலனே தேவா...’ நாயனத்தோடு இயைந்து நின்றது போலவே, ‘அழகு மலராட அபிநயங்கள் சூழ...’ பரதத்தோடு இயைந்து நிற்கும். சலங்கை ஒலி ‘ஓம் நமச்சிவாயா...’வும் அப்படித்தான். இந்த பாடல் வாயிலாக எஸ்.பி.ஷைலஜா என்ற பின்னணி பாடகிக்கே, பின்னணி பாடிய பெருமை பெற்றவர். அவர்கள் ‘காற்றுக்கென்ன வேலி...’ பாடல் பொங்கி வரும் பிராவக குரல்.

வரிகளின் ஊடே, சிணுங்கல், சிருங்காரம், செல்ல சிரிப்பு இப்படி சில விஷயங்களை செய்து பாடலை உயிர்ப்பிப்பது இவரும் எஸ்பிபியும் தான். இருவர் பாடல்களும் மனிதனின் எந்த சூழலையும் மாற்றும் வித்தை அறிந்தவை. 

எந்த இடத்தில் எஸ்பிபி சில்மிஷங்கள் செய்வார் என்பதை அறிந்து இவர் பாடியதால், இருவர் குரலை தனித்தனியே ரெக்கார்டிங் செய்து பின், இசையுடன் கோர்த்தாலும், நெருடல் இருக்காது. அப்படித்தான், இருவரின் ஜோடி பாடல்கள் பல, 1980களில் உருவாகின. 

தனது மார்கண்டேய குரலை என்றும் 16ஆக வைத்திருந்தாலும், 6 வயது குழந்தை தொடங்கி 60 வயது மூதாட்டி வரைக்கும் குரல் மாற்றும் வித்தைக்காரர். 1960களில் எம்.எஸ். ராஜேஸ்வரி தான், குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடுவார். ஆனால், குழந்தைக்கும் குமரிக்கும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தவர். 

‘டூத் பேஸ்ட் இருக்கு, டவல் இருக்கு குளிச்சிடு மாமா...’ ‘டாடி டாடி ஓ மை டாடி, உனை கண்டாலே ஆனந்தமே..’ என குழந்தை குரலில் கொஞ்சி பாடியவர். தல அஜித்தின் மனைவி ஷாலினி,  பேபி ஷாலினியாக, 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, அவருக்காக பாடியவர்.

பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களை பாடி, தேசிய விருது, பல மாநிலங்களின் விருதுகள் என வாங்கி குவித்தவர். மிக, மிக தாமதமாக 2013ல் ‘பத்ம பூஷண்’வழங்கியபோது, ஏற்க மறுத்தவர். படங்களிலும் மேடை கச்சேரிகளும் பாடியவர், பத்தாண்டுக்கு முன், இளம் தலைமுறைக்கு வழி விடுவதாக கூறி, பாடுவதை நிறுத்திக் கொண்டார். 

தமிழ் ரசிகர்களின் முப்பொழுதும் உடன் பயணிக்கும் கற்கண்டு பாடல்களில் இவரது பாடல்களே முதன்மையானவை. அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை, வானம்பாடியாக வாழ்ந்திருப்பார். 

#நெல்லை_ரவீந்திரன்





Wednesday, 24 December 2025

நூற்றாண்டில் நேசமிகு வானொலி




இது இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ் சேவை....

1980களில், தென் மாவட்டங்களில் இந்த வார்த்தைகளை கேட்காதவர்களே கிடையாது.

பொழுது போக்குக்கு தியேட்டர்களை மட்டுமே நம்பி இருந்த காலம். அதுவும் கைக்கெட்டும் தொலைவில் இல்லாமல், படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதே திருவிழாவாக  இருந்த காலம். 

அந்த சூழலில் அனைவரையும் காற்றின் வழியே சென்றடைந்து மகிழ்வித்தது, தமிழ் பாடல்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்தது... எல்லாமே இலங்கை வானொலி தான்.

நெல்லை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டில் சில வானொலி நிலையங்கள் இருந்தாலும், அதிக தொலைவுக்கு அவற்றின் ஒலிபரப்பு கிடைக்காது மற்றும் இன்றைய தூர்தர்ஷனின் ஓல்டு வெர்ஷன் தான் அவை.

ஆனால், இலங்கை வானொலி அப்படி அல்ல. கடல் கடந்தும் அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மண்ணில் மணம் வீசியது. நெல்லையர்களின் சுத்த தமிழுக்கு இலங்கை வானொலியும் முக்கிய காரணம் என்பது என் நம்பிக்கை.

கண்டசாலா தொடங்கி ஏ.எம். ராஜா ஜிக்கி, டி.எம்.எஸ்., சுசீலா, ஜானகி, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் என ஒரு சேர அனைவரையும் அழைத்து வந்து கான கீதங்களை அறிமுகம் செய்த வானொலி அது.

ஒவ்வொரு சினிமா பாடலிலும் அதை எழுதியவர் துவங்கி பாடியவர் இசை என அனைத்து தகவல்களையும் விரிவாக சொல்வார்கள்.

இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் என்றதும் அப்துல் ஹமீதையே பலரும் சொல்வர். அவர் தமிழகம் வந்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மாதிரியான வெகுஜன பொது மேடைகளில் தோன்றியது காரணமாக இருக்கலாம்.

ஆனால், ராஜேஸ்வரி சண்முகம், ராஜா உட்பட பலர், அன்றைய நேயர்களின் ஆதர்ச அறிவிப்பாளர்கள்.

'நேயர் விருப்பம்' என சினிமா  பாடல்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் மூச்சு விடாமல் பெயர்களை  (அப்பப்பா, அம்மம்மா... என இலங்கை உறவு முறைகளையும்) அடுக்கும் போது, 'மண்ணில் இந்த காதலன்றி...' என மூச்சு விடாமல் பாடிய எஸ்.பி.பி. தோற்றுப்போவார்.


'சின்ன மாமியே...' மாதிரியான பாடல்களால் சிலோன் மனோகர் போன்றவர்களின் தமிழ் பாப் இசை பாடல்களையும் அறிமுகம் செய்த வானொலி. தமிழின் தனி ஆல்பம் பாடல்களின் ஊக்க சக்தி.

சினிமா பாடல்கள் தவிர, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு மணி நேர நாடகம், முழு நீள தமிழ்  திரைப்படத்தை ஒரு மணி நேரத்துக்குள் வசன காவியமாக சுருக்கி ஒலிபரப்பாகும் 'ஒலிச்சித்திரம்' (முழு சினிமாவையும் காதால் பார்த்த அனுபவம் அது) என விதம் விதமான நிகழ்ச்சிகள், இலங்கை வானொலியின் அக்மார்க் ரகம்.

சிறுகதை ஒன்றை எழுதி, அதற்கு வானொலி அறிவிப்பாளர்களே ஏற்ற இறக்கத்துடன் குரல் கொடுத்து, அந்த கதையில் வரும் சம்பவங்களுக்கு பொருத்தமான சினிமா பாடலை இடை இடையே ஒலிபரப்புவது எல்லாம் வேற லெவல் புரோக்ராம். 

இலங்கை வானொலி மட்டும் இல்லாவிட்டால் 1980ஸ் தலைமுறைக்கு பித்து பிடித்திருக்கும்.

MW எனும் மத்திய அலைவரிசை,  SW சிற்றலை; அதிலும் SW 1, 2 என்றெல்லாம் வெவ்வேறு அலைவரிசைகளில் அதன் ஒலிபரப்பு சேவைகள் உண்டு.

பெரும்பாலும் கொழும்பு வானொலி சேவையின் நிகழ்ச்சிகள் கிடைக்கும். கொஞ்சம் பிராண்டட் ரேடியாவாக இருந்தால்  கண்டி வானொலி நிலைய ஒலிபரப்பையும் அவ்வப்போது கேட்க முடியும்.

இதற்கு இடையே, விடுதலைப் புலிகளின் வானொலியும் அவ்வப்போது கிடைக்கும். 'விக்ரம்' படத்தின் டைட்டில் ஸாங்கை (இதோ புலி வருது திட்டத்தால்...) அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.

இலங்கை வானொலியை போலவே, அந்த நாட்டின் 'ரூபவாஹினி' தொலைக்காட்சி சேவையையும் மறக்க முடியாது. அது பற்றி கூட நிறைய எழுதலாம். 

கொடைக்கானலில் துணை நிலையம் ஒன்றை சென்னை தூர்தர்ஷன் அமைக்கும் வரை, (அதன் பின்னரும் கூட), 'ரூபவாஹினி' தான் தென்னக மக்களின் பொழுதுபோக்கு.

இப்போது இலங்கை வானொலி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில், அதன் நேயராக மனம் மகிழ்கிறேன்

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 22 December 2025

சார் போஸ்ட்...

 80ஸ், 90ஸ் தலைமுறையினருக்கு போஸ்ட் மேன்களுடனும் போஸ்ட் ஆபீஸ்களுடனும் நெருங்கிய பந்தம் உண்டு. கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் வரை தெரிந்து வைத்திருப்பார், கிராமத்து போஸ்ட் மேன். 

சார் போஸ்ட்...

இந்த வார்த்தைகள் ஆயிரம் அர்த்தங்களுடனும் தகவல்களுடன் வந்து சேருபவை..

அரசு வேலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் தொடங்கி மணி ஆர்டரை எதிர்பார்த்து காத்திருப்பவர் வரை போஸ்ட் மேனை எதிர்பார்த்திருப்போர் அநேகம்.

எங்கள் கிராமத்தில் 4000 க்கு குறையாமல் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும்  ஒவ்வொருத்தரையும் தெரிந்து  வைத்திருப்பார், எங்கள் ஊர் போஸ்ட் மேன் காந்தி. முக்கிய தபால் ஏதாவது வந்தால் வழியிலேயே பார்த்து தந்து விடுவார்.

புத்தாண்டு, பொங்கல்  சமயங்களில் மூடடை மூட்டையாக தபால்கள் குவிந்தாலும், சளைக்காமல் சைக்கிளில் அள்ளிப்போட்டுக் கொண்டு, உரியவர்களிடம் சேர்த்து விடுவார். துளி கூட, சலிப்பை அவரிடம் பார்த்ததில்லை. அவருக்குப் பின் பலர் வந்தாலும் போஸ்ட் மேன் என்றாலே காந்தி சார் தான்.

அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தேர்வு கட்டணமாக  போஸ்டல் ஆர்டர் அனுப்ப வேண்டி இருக்கும். போஸ்டல் ஆர்டர் என்பது வங்கி வரைவோலை மாதிரி. பார்ப்பதற்கும், வரைவோலை போலவே இருக்கும். 20 ரூபாயில் இருந்தே கிடைக்கும். பி.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., போன்ற மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு போஸ்டல் ஆர்டர் தான். 

அதுபோல,  பூர்த்தி செய்த  விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்பனும். பதிவு தபால், உரிய முகவரிக்கு சென்றடைந்து, அங்கிருந்து, ஒப்புகை அட்டை எனப்படும் அக்னாலட்ஜ்மென்ட் அட்டை  திரும்ப வரும் வரை ஒரு வித பதட்டம் அன்றைய வேலை தேடும் இளைஞர்களிடம் இருக்கும். 

போஸ்டல் ஆர்டர், அக்னாலட்ஜ்மென்ட் கார்டு எல்லாம் 90ஸ் தலைமுறையினர் வரையிலும் அறிந்தவை.

இப்போது ஆன்லைனிலேயே போட்டோ ஸ்கேனிங் அட்டாச் செய்து, விண்ணப்பம் பூர்த்தி செய்து, கட்டணத்தையும் கூட ஆன்லைனிலேயே செலுத்த முடிகிறது. இது, டிஜிடல் இந்தியாவின் வளர்ச்சி.

மொபைல் போன்களின் பயன்பாடும் 5ஜி வரையிலான இணைய வேகத்தின் ஓட்டத்தில் மிதிபட்டு, தந்தி சேவை மூச்சை நிறுத்தி விட்டது. தெருவோர சிவப்பு நிற தபால் பெட்டிகளும் மறைந்து போய் விட்டன.



விண்ணப்பம் போன்றவற்றை கவரில் வைத்து, அதன் எடைக்கேற்ப தபால் தலைகளை ஒட்டி அனுப்பனும். அதாவது, இன்றைய கூரியர் போல. பணத்துக்கு பதில் தபால் தலை. இந்த தபால் தலைகளின் மதிப்பு குறைவாக ஒட்டி அனுப்பினால், தபாலை பெறுபவரிடம் போஸ்ட்  மேன் அபராதம் வசூலிப்பார். 

தபால் தலைகளை சேகரிப்பதே, 90ஸ் மாணவர்களிடம் பெரிய கிறக்கம் உண்டு. அதிலும், வெளிநாட்டு தபால் தலைகளை சேகரித்து வைத்திருந்தால், நண்பர்கள் மத்தியில் ஹீரோவாக உலா வரலாம். 

தபால் தலைகள், தபால் அட்டை, இன்லேன்ட் லட்டர், ஏர் மெயில் என்ற வார்த்தைகள் எல்லாம் காலாவதியாகி விட்டன. தபால் துறைக்கு இப்போதெல்லாம் என்ன வேலை இருக்கிறது என்றே பலரும் கருதுவோம். ஆனால், இன்னமும் தபால் துறை அதே துடிப்புடன் தான் இருக்கிறது, போஸ்ட்மேன் காந்தி போல. 

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இருந்து ஆர்சி புக், டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் ஸ்மார்ட் கார்டு, வங்கி ஏ.டி.எம். கார்டு, ஆதார், பாஸ்போர்ட் போன்றவை தபால் வாயிலாகத்தான் வருகின்றன.

பரபரப்பான சென்னையில் போஸ்ட் உமன்களை அதிகமாக பார்க்க முடிகிறது. புதிதாக நான் குடி பெயர்ந்திருக்கும் பகுதியில் சேவை அளிப்பவரும், பெண் தான். 



சென்னையின் பரபரப்பான பகுதி தான். ஆனாலும் கிராம பஞ்சாயத்து. ஐ.டி. பூங்கா அமைந்திருக்கும் சிறுசேரியே ஊராட்சி என்றால் நம்ப முடிகிறதா?

எங்கள் பகுதியில் அனைவரையும் அறிந்து வைத்திருக்கிறார், எங்கள் போஸ்ட் உமன். தபால் வந்தால் கூட, முன்கூட்டியே செல்போனில் தகவல் (டெக்னாலஜி வளர்ச்சி) சொல்லி விடுவார். அதாவது 90ஸ்களில் நான் பார்த்த போஸ்ட் மேன் காந்தி போலவே.

கொசுறு தகவல், என் மாமனாரும் முன்னாள் போஸ்ட் மேன் தான்.

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 31 December 2023

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

 "அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

பனி துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே..."

...




சாதி மதம் இனம் அரசியல் அனைத்ததையும் கடந்து தமிழகமே துடிக்குது, இந்த மனிதனின் இறப்பை கேட்டு...

எனக்கு தெரிந்தவரை ஒரு பெரிய நெடுஞ்சாலை முழுக்க 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வெள்ளம் நிறைந்து கிடக்க, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலம் நடந்தது ஈதுவே முதன் முறை.

தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளுக்கு கூட இப்படி பார்க்கவில்லை...!





மதுரையில் ரைஸ் மில் ஓனர் மகனாக இருந்தபோதே ஆரம்பித்த உதவும் குணம், கடைசி வரை தொடர்ந்தது. 

80, 90களில் நடிகர்கள் ஆட்டோகிராப் போட்டு படங்களை ரசிகர்களுக்கு அனுப்புவது வழக்கம். இவரோ ஒரு படி மேல்...  படிப்பு போன்று ஏதாவது உதவி கேட்டால் மணி ஆர்டரும் சேர்த்து அனுப்புவார். (9ம் வகுப்பில் நண்பன் ஒருவன் மூலம் தெரிந்தது)

சக நடிகர்களுக்கு படப்பிடிப்பு முதற் கொண்டு சொந்த வாழ்க்கை வரை உதவிக்கரம் நீட்டுவது பற்றி பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். கடந்த வாரம் நடிகர் போண்டா மணி மரணத்தின் போது கூட இவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் போனது.

1980களில் மிக உச்சத்தில் இருந்தபோது கூட 'பூந்தோட்ட காவல் காரன்', 'ஊமை விழிகள்' மாதிரி வயசான கேரக்டர்களிலும் 'வைதேகி காத்திருந்தாள்' மாதிரியான மனப்பிறழ்வு வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்தவர்.

வெற்றிப்பட இயக்குநர்களையே திரும்ப திரும்ப தேடி ஓடாமல் புதியவர்களை கைதூக்கி விட்டவர். 150  படங்கள் நடித்திருக்கிறார். அதில் 50க்கும் மேற்பட்டவை புதிய இயக்குநர்களின் படங்கள். ஆர்.கே.செல்வமணி உட்பட பலரை சொல்லலாம். பூந்தோட்ட காவல்காரனில் லிவிங்ஸ்டன், புலன் விசாரணையில் சரத்குமார், கேப்டன் பிரபாகரனில் மன்சூர் அலிகான், செந்தூரப்பூவே ராம்கி என  துவங்கி ஏராளமான திரை பிரபலங்கள் அவரால் திரையில் முகம் காட்ட துவங்கியவர்கள் தான். 

ஆரம்ப காலத்தில் விஜய் பெரிதாக சோபிக்காமல் இருந்தபோது அவரது தந்தை எஸ்ஏசி மீதான பாசத்தால் 'செந்தூரப் பாண்டி' மாதிரியான படங்களில் கூடவே நடிக்க வைத்தவர்.

இப்படி திரையுலகினருக்கு மட்டுமல்ல. நடிகர் சங்கத்துக்கே இவரால் தான் விடிவு காலம் பிறந்தது. எம்ஜிஆர் சிவாஜி என ஜாம்பவான்கள் கோலோச்சிய நடிகர் சங்கம் கடன் சுமையில் தள்ளாடியபோது இவர்தான் தலைமை ஏற்று நடிகர் சங்க கடனை முழுமையாக அடைத்து உபரி நிதியை சேர்த்தவர்.

இதற்காக நடிகர் நடிகைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த ஒருங்கிணைப்பு வேலை எல்லாம் அவ்வளவு லேசானதல்ல. இப்போதும் அவர் தலைவராக இருந்திருந்தால் சங்க கட்டிடம் கட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால் அவர் தகுதியான கேப்டன். மற்ற எந்த நடிகரையும் போல இல்லாமல் தனது நூறாவது படத்தை கூட மாபெரும் வெற்றிப் படமாக கொடுத்த கேப்டன்.

எம்ஜிஆருக்கு பிறகு தனது சொந்த செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கட்சி ஆரம்பித்து தனியாகவே எம்எல்ஏவாக வென்றவர். 2006 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்எல்ஏ. 

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் திமுக அதிமுக அல்லாத ஒரே எதிர்க்கட்சி தலைவர் இவர்தான். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மூத்த காபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஜெயலலிதா உடன் கூட்டணியால் கிடைத்தது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை இந்த கூட்டணிதான்  பெற்றது. திமுக அணிக்கு மூன்றாவது இடம்தான். இவரது கட்சி ஒரு எம்பி கூட பெறாதபோதும் டெல்லி சென்றபோது  பிரதமர் மோடி ஓடோடி வந்து கட்டித் தழுவி வரவேற்றார்.


இப்படி கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த தவறியது, விதிப்பயன்றி வேறென்ன...?

நல்ல மனிதர். மனதில் பட்டதை பேச்சிலும் செயலிலும் காட்டும் குணம் படைத்தவர். புனித மாதமான மார்கழியில் இறைவனிடம் சென்றிருக்கிறார்...

எந்த ஒரு உயர்ந்த பதவியிலும் இருந்தவர் இல்லை... 

ஆனாலும் குவிந்து கிடக்குது லட்சக்கணக்கான ஜனம்...

இந்த மனுசப்பயலுக குணமே இதுதான்...

இருக்கும்போது கண்டுக்காம கல்லறையில் வந்து பூ வைப்பாங்க...

...







இந்த வீடு நமக்கு சொந்தமில்லை...

அதனால நமக்கு துன்பமில்லை...

உள்ளவங்க எத்தனையோ

வந்து வந்து போனாங்க...

சந்தையில வெள்ளாட்டு

மந்தையைப் போல் ஆனாங்க...


எந்நாளும் நல்லவர்களுக்கு

ஏழைகளின் மனம்தான்

பொன்னான வீடாகும்...

ஊராரின் வாழ்த்துகள் தான்

நிலைத்திருக்கும் பொருளாகும்...


உன் பெயரை சரித்திரத்தில்

மனிதன் என்று பொறித்திடு...

இங்கு வெல்லுறவன் யாரு...

மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில்

நிற்கும் உந்தன் பேரு...


#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 7 November 2023

பிறவிக் கலைஞனுக்கு பிறந்த நாள்...

வெகுஜனங்களின் பொழுதுபோக்கும் துறையான சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாகவே ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறை ஜனங்களையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்து அவர்களுக்கேற்ப அப்டேட் ஆனால் மட்டுமே "தக் லைஃப்" காலம் வரை நீடிப்பது சாத்தியம்.




தமிழ் சினிமாவின் ஆரம்ப கால ஜாம்பவான்களில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்...!

'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவரது மகனோ, மகளோ..., இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான் அல்லது ரசிக்கிறாள்.



தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 



முழு நேர நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது. 

ரஜினிக்கு முன்பு 1970களின் இறுதி மற்றும் 1980களின் ஆரம்பத்தில் இவர்தான் தமிழின் உச்ச நட்சத்திரம். 16 வயதினிலே படத்தில் ரஜினியை விட பத்து மடங்கு சம்பளம் அதிகம், இவருக்கு...!



'16 வயதினிலே', 'அவள் அப்படித்தான்', 'ராஜபார்வை', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'இந்தியன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'குணா', 'மூன்றாம் பிறை', 'பேசும்படம்', 'ஆளவந்தான்', 'ஹே ராம்', 'பாசவலை', 'குருதிப் புனல்', 'தசாவதாரம்' என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் 'விஸ்வரூபம்' எடுத்து நிற்கிறது. 

இவரது  கலைப் பயணத்தை பல ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.  குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், ஜெமினி என பிரபலங்களுடன் நடித்த கமல்...

1970களில் 'அவர்கள்', 'அவள் ஒரு தொடர்கதை' போன்ற கருப்பு வெள்ளை படங்களின் கமல்...

1980களில் 'சகலகலா வல்லவன்' மாதிரியான ஹிட் கொடுத்த கமர்ஷியல் ஹீரோ கமல்...



1990களின் 'இந்தியன்' (சேனாதிபதி கிழவன் முன்பு அசல் கிழவன் தோற்றுப் போவான்...) போன்ற மெச்சூரான நடிப்பு பசி கொண்ட கமல்...

2000களின் 'தசாவதாரம்' போன்று புதுமைகளை பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கிய கமல்...


பாடகர் கமல்... 

டான்ஸ் மாஸ்டர் கமல்... 

இப்படி வெவ்வேறு விதமாக கமலைப் பற்றி தனித்தனியாகவே பக்கம் பக்கமாக எழுதலாம்...

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல்.

 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் செல்போனில் ஒலிக்கும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான். தான் நடனம் அமைத்த பாடலையே தனது படத்துக்கு பயன்படுத்தி இருப்பார்.



என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இயற்கையான நடிகர் என்றால் இவர் ஒருவரைத்தான் சொல்வேன்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

ஒருவர் எந்த துறையில் இருந்தாலும், தத்தமது துறையில் சிறப்பாக இருப்பது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

'மகராசன்', 'தெனாலி', 'சதி லீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்', 'பஞ்ச தந்திரம்', 'காதலா காதலா', 'வசூல் ராஜா' என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்...

'16 வயதினிலே', 'மூன்றாம் பிறை', 'குணா', 'மகாநதி', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து' என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

'பேசும்படம்', 'குருதிப் புனல்', 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்



'ஹே ராம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்' என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, 'இந்தியன்' தாத்தா, 'அவ்வை சண்முகி' மாமி, 'தசாவதாரம்' பாட்டி, 'அபூர்வ சகோதரர்கள்' குள்ள அப்பு என தன்னை முற்றிலுமாக மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 



மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர் மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 


அவர் கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி.... அம்பிகா, ராதா, ரேகா.... சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் இன்றும் தொடரும் முன்னணி நாயகன். 

இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னைக்கு அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம்...



சினிமாவை அடி ஆழம் வரை அலசிப் பார்த்த கமல், அரசியல் பாடத்தை மட்டும் ரஜினியிடம் கொஞ்சம்  படித்திருக்கலாம்...!


#நெல்லை_ரவீந்திரன்

Friday, 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 5 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -60




"நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு முட்டாளுங்க..."

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

"சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..."

"பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..."

"ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."

இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான தத்துவ பாடல்களை தனது சொந்த குரலிலேயே பாடியவர்.


அப்படியே,

"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..."

"குங்குமப் பூவே கொஞ்சிப் புறாவே தங்கமே உன்னை கண்டதும்..."

"உனக்காக... எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக..."

"உன் திருமுகத்த ஒரு முகமா காட்டு..."

"கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே..."

இப்பிடி ஹீரோக்களைப் போலவே டூயட்டுகளிலும் கலக்கியவர். காமெடியன், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக ஜொலித்தவர் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' சந்திரபாபு. 

அவரது தந்தை அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று முழு சொத்தையும் இழந்ததால், சந்திரபாபுவின் சின்ன வயதிலேயே தூத்துக்குடியில் இருந்து சிலோனுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம். 



அங்குதான் சந்திரபாபு கல்லூரி படிப்பு வரை முடித்தார். அங்குதான் வெளிநாட்டு பாணியில் கோட், சூட், நடனம், பாடல் எல்லாமே அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தது அவரது குடும்பம். சந்திரபாபுவின் தந்தை இலங்கையில் மட்டுமல்ல, சென்னையிலும் தினமணி போன்ற பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறார்.

சென்னை வந்ததும் சினிமா சான்சுக்காக அலைந்த சந்திரபாபு 1947ல் 'தன அமராவதி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் விரக்தியில் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றத்துக்காக கைதாகி நீதிபதி முன் நின்றபோது, நீதிபதியிடமே தனது சேஷ்டை கலந்த நடிப்பை நடித்து காண்பித்திருக்கிறார். பின்னர், எச்சரிக்கப்பட்டு விடுதலையானதும், நடந்த விஷயங்களை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) 1952ல் வெளியான 'மூன்று பிள்ளைகள்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.



சேஷ்டை, அஷ்ட கோணலில் முக பாவம், பாடகர் என காமெடியன்களில் தனித்து நின்ற சந்திரபாபுவின் 'சார்லி சாப்ளின்' டைப் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர,  அடுத்த 15 ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லாருடனும் மிக முக்கியமான வேடங்களில், நாயகனுக்கு நிகராகவே நடித்தார். 

'குலேபகாவலி', 'மகாதேவி', 'புதையல்', 'பதிபக்தி', 'நாடோடி மன்னன்', 'மரகதம்', 'கவலை இல்லாத மனிதன்', 'பாதகாணிக்கை', 'கவலை இல்லாத மனிதன்' என அவர் நடித்த படங்கள் ஏராளம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான கேரக்டர். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடி சரோஜாதேவி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாடோடி மன்னன் படத்தில் கருப்பு வெள்ளை, கலர் என இரண்டு பகுதியிலும் படம் முழுவதும் வரும் நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.



சந்திரபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு நிச்சயமாக பாடல் இருக்கும். அதை அவரே பாடி நடித்திருப்பார். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மற்றும் அவர்களுக்கு முந்தைய கால பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். 

டிஎம்எஸ், ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, ஜமுனா ராணி என பிரபல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுடன் பாடியவர். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'  படத்தில் இவர் பாடிய "ஜாலி லைப்... ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்" பாடலுக்கு வாயசைத்தவர்,  சிவாஜிகணேசன்...!



1960, 70 ஸ் மட்டுமல்ல இன்றளவும் சந்திரபாபு காமெடிக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்த சந்திர பாபுவின் திருமணமே தடபுடலாகத்தான் நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற திருமண விழா அது.



"உல்லாசமாகவே... உலகத்தில் வாழவே... கல்யாணம்... ஆஹா கல்யாணம்..." என திரையில் பாடியவருக்கு நிஜத்தில் கல்யாண வாழ்வு உல்லாசமாக அமையவில்லை. அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்ததால் அந்த நபருடனேயே மனைவியை சேர்த்து வைத்து விட்டார்.

மண வாழ்வு சோகத்தை தொடர்ந்து பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார், சந்திரபாபு. சொந்த படம் தயாரித்து  நஷ்டம் அடைந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணத்தால் எதிரிகளை சம்பாதித்தார். இப்படியாக, சந்திரபாபுவின் பின்னாளைய வாழ்க்கை பரிதாபமாகி போனது. வெஸ்டர்ன் ஸ்டைலிலான அவரது நடை, பாவனை, ஸ்பூனில் சாப்பிடும் அழகு என சக நடிகர்களே வியந்து பார்த்த சந்திரபாபு பரிதாபமாக சரிந்தார்.

எம்ஜிஆருடன் தகராறு இருந்ததாக சொல்வார்கள். ஆனால், தனது சொந்த படமான 'அடிமைப் பெண்' (1969) படத்தில் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆர் தயாரித்த நாடோடி மன்னனிலும் (1958) சந்திரபாபு உண்டு.

சந்திரபாபுவின் கடைசி காலங்களில் தனது வீட்டில் இடம் கொடுத்து உதவி இருக்கிறார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 1974ல் சந்திரபாபு மரணமடைந்தபோது இறுதிச் சடங்கை நடத்த உதவியவர், சிவாஜி கணேசன்.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து, நாடு விட்டு நாடு சென்று படிப்படியாக முன்னேறி, அப்படியே படிப்படியாக சறுக்கியவர் சந்திரபாபு. அவரது பாடல்கள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கற்றுத் தரும் பாடங்கள் பல....

ஆகஸ்ட் 5. சந்திரபாபு பிறந்த நாள்...


#நெல்லை_ரவீந்திரன்