Tuesday, 1 December 2015

வழக்கங்களை கைவிட்டு முன்னேறிய சமூகத்தின் கதை




மாற்றம்... முன்னேற்றம்... 


பாரம்பரியத்தை மாற்றிக் கொண்ட ஒரு சமூகத்தின் கதை


 1960ம் ஆண்டுகளில் சாதி ரீதியாக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ‘சம்ஸ்கரா’. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய இந்த நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு இதே பெயரில் கன்னட மொழியில் 1970ம் ஆண்டு திரைப்படமும் வெளியானது. பிராமண சமுதாய வாழ்வியல் நெறிமுறைகளை மீறி வாழும் நரனப்பா என்ற பிராமண சமுதாயத்தில் பிறந்த ஒரு மனிதன் இறந்ததும் இறுதிச் சடங்கில் எழும் சர்ச்சையும் அதைத் தொடர்ந்து எழும்பும், யார் உண்மையான பிராமணன்? என்ற கேள்வியும் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தருணம் அது





தமிழ் பிராமண்ஸ் - ஒரு மத்திய நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கம்என்ற புத்தகம் அதற்கு பதிலளிக்கிறது.  கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறிய தமிழ் பிராமண சமூகத்தினர் பற்றி சி.ஜே. புல்லர் மற்றும் ஹரிபிரியா நரசிம்மன் ஆகியோர் எழுதிய  இந்த புத்தகத்தை ‘தி யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் பிராமண சமுதாயத்தின் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கட்டமைப்பு தொடங்கி சுதந்திரத்துக்கு பிறகு அதன் மாற்றம் வரை ஒரு நூற்றாண்டு கால அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியையும் சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை அந்த சமூகத்தினர் மாற்றிக் கொண்ட விதத்தையும் புத்தகம் விவரிக்கிறது.

நவீன யுகத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றத்தை சுவீகரிப்பதோடு தனது பாரம்பரிய முறையையும் கைவிடாமல் இருப்பது என்ற இறுக்கமான சூழலுடன் அந்த சமூகம் பயணிக்கிறது. அதே வேளையில், தமிழகத்தில் மொத்தம் 10.4 லட்சம் பேரை மட்டும் மக்கள் தொகையாக கொண்ட அந்த சமூகம், தனது அடையாளத்தை மட்டுமன்றி கலாச்சாரம், அரசியல், சமூக அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிராமணர் என்றால் கோயில்களில் பூசை செய்யும் சமூகம் என்றே பொதுவாக கருதுகின்றனர். ஆனால், அந்த சமூகத்தின் மிகவும் அடித்தட்டு மக்களில் சிலரே அந்த தொழிலை செய்கின்றனர். நிலச்சுவான்தாரர்களாகத்தான் பலரும் இருந்தனர். ஏராளமான நிலங்களை அவர்கள் வைத்திருந்தாலும் உடல் வளைத்து வயல்களில் வேலை செய்தது இல்லை. கைகளில் அழுக்கு படிவதை அவர்கள் விரும்பவில்லை. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் ஆடையில் அழுக்குப்படாத வேலைகளிலேயே அவர்களின் ஆர்வம் இருந்தது. அதனால் தான், 19ம் நூற்றாண்டின் மத்தியில் கிராம பகுதிகளில் இருந்து நகர பகுதிகளை நோக்கி அவர்களின் இடப்பெயர்ச்சி தொடங்கியது.

சாதி ரீதியிலான தங்களின் ஆண்டாண்டு கால மேலாதிக்க உரிமையை அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே, சட்டம், கல்வி மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வேரூன்ற தொடங்கும் வரை இந்த போக்கே நீடித்தது. பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியதுமே, தமிழ் பிராமணர்கள் உடனடியாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.

தங்கள் சமூகத்தின் பாரம்பரிய ஆடையான பஞ்சகட்சத்தை ஆண்கள் துறந்து நீள கால்சட்டையான பேண்ட் அணிய தொடங்கினர். பூணூலை மறைக்கும் விதத்தில் சட்டையையும் அணிந்தனர். பெண்களும் கூட 16 முழ மடிசார் புடவையை துறந்து 8 முழ புடவை அணியத் தொடங்கினர். இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சல்வார் கமீஸ் அணிகின்றனர்.  நகரங்களுக்கு குடியேறிய பின்னர் தாராளமயமாக்கலுக்கு பிறகு நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கை முறையையும், நவநாகரீகத்தையும் தமிழ் பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

வேலையில் கூட பணிப் பாதுகாப்பு, அதிகபட்ச மரியாதையுடன் கூடிய அதிகாரிகள் பணி போன்றவற்றை நோக்கிய பயணத்தை அந்த சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் விட்டு விட்டனர்.  அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, அரசியல் போன்றவை கலந்த பிறகு அதிக சம்பளம், விரைவில் பதவி உயர்வு போன்றவற்றை தரும் தனியார் வேலையின் மீது இளம் தலைமுறை பிராமணர்களின் பார்வை திரும்பி உள்ளது. அதுவும் .டி. துறையின் வளர்ச்சிக்கு பிறகு, அந்த போக்கு அதிகமாகி விட்டது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் தாக்கம் அதிகமாக தொடங்கியதும் பெரும்பாலானோர் வெளிநாட்டு படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலையில் ஆர்வமாகி விட்டனர்.  

வழக்கமான பாணியிலேயே செல்வதை தவிர்த்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களின் முயற்சிகளையும் திசை திருப்பி பிராமணர்கள் வெற்றி பெற்று வருவதை திரும்ப திரும்ப நூல் ஆசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதுபோல கல்வியறிவு பெற்ற மத்திய நடுத்தர குடும்பத்தில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதையும் கல்வியுடன் சேர்ந்து வயலின், கர்நாடக இசை, பரதம் என கலைகளுக்கு அவர்கள் இடமளிப்பதையும் புத்தகத்தில் சுட்டிக் காட்டி உள்ளனர்.

சமூதாயத்தின் மிகவும் சிறிய அளவிலான, அதே நேரத்தில் அதிகாரம் செலுத்திய ஒரு சமூதாயம் எவ்வாறு பாரம்பரியத்தில் இருந்து படிப்படியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்கும் மிக முக்கியமான புத்தகம், ‘தமிழ் பிராமண்ஸ்’. அடிக்கடி குறுக்கிடும் அரசியல், சமூக இயக்கங்களை எதிர்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் அந்த சமுதாயம் தங்கள் முன்னேற்றத்தை எப்படி தக்கவைத்துக் கொண்டு வருகிறது என்பதை விளக்குகிறது. தமிழ் பிராமணர்களின் பொருளாதார நிலைமை, சமூக அந்தஸ்து போன்றவற்றோடு தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் தொடர்வது எங்ஙனம்? என்பதையும் இந்த புத்தகம் விரிவாக கூறுகிறது.


பிராமணர்களை பற்றி எழுதும் பெரும்பாலான நூலாசிரியர்களின் புத்தகங்களில் இருந்து இந்த புத்தகம் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. தமிழ்நாட்டில் அரசியலும் சாதியும் இணைந்து இருப்பது மற்றும் பிராமணர்களுக்கு எதிரான சுயமரியாதை இயக்கம் போன்றவை பற்றியே பேசப்படும் சூழ்நிலையில், அந்த இயக்கத்தை மீறி, தங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டு தமிழ் பிராமணர்கள் எவ்வாறு வெற்றிகளை தொடருகின்றனர் என்பதை விளக்கமாகவே இந்த புத்தகம் கூறுகிறது.

நூலாசிரியர்களில் ஒருவரான ஹரிபிரியா நரசிம்மன், சென்னையில் மத்திய நடுத்தர வகுப்பு பெண்ணாக வளர்ந்த தனது சொந்த அனுபவத்தையே ஆதாரமாக கூறுகிறார். சில பிராமணர்கள், தங்கள் குடும்பத்தினர் அனுமதிக்காத போதிலும் வெளியில் அசைவ உணவு சாப்பிடுகின்றனர். ‘புனிதம்’ என்ற பெயரில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட சமூகத்தில் இது மிகப்பெரிய மாற்றம். இதுபோல, வீட்டில் முட்டை சாப்பிடாத போதிலும் வெளியில் முட்டை கலந்த கேக் சாப்பிடுகின்றனர். பாரம்பரிய ‘கொலு’ பண்டிகை கொண்டாட்டத்தில் இடம்பெறும் பொம்மைகள் மாற்றம் பெற்று விட்டன. மது அருந்துவதும் கூட சமூகத்தின் மாற்றங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் மிக கவனமாக எழுதியுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சமூகத்தினர் எப்படி தங்களுடைய பாரம்பரிய கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு தங்களின் சரியான இலக்கை எட்டுகின்றனர் என்பதை ‘தமிழ் பிராமண்ஸ்’ புத்தகம் நிச்சயமாக தெளிவு படுத்துகிறது என கருதலாம். தமிழ் பிராமணர்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டும் இந்த புத்தகத்தை படிக்கும்போது, கடந்த 1960களில் அதிர்வலைகளை எழுப்பிய ‘யார் உண்மையான பிராமணன்?’ என்ற கேள்வி வெகு சாதாரணமாகி விட்டது.


(தி இந்து / ஆங்கிலத்தில் 22.11.2015 அன்று வெளியானது)


 தமிழில் வை.ரவீந்திரன்.

Monday, 30 November 2015

அகநானூறு கூறும் தமிழ் மங்கையர் காதல்



ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிதைகளை செய்யுளாக அறிமுகம் செய்த மொழி தமிழ். ஆண் புலவர்கள் மட்டுமன்றி பெண் புலவர்களும் ஏராளமான செய்யுளை வடித்துள்ளனர். தமிழரின் அகவியல் வாழ்க்கையை கூறும் அகநானூறு உள்ளிட்ட இலக்கியங்களும் இதில் குறை வைக்கவே இல்லை. ஆணின் காதல் ஏக்கத்துக்கு இணையாக காதல் வயப்பட்ட பெண்ணின் கொஞ்சு மொழிகளையும் செய்யுளாக வடித்து வைத்திருக்கிறது.
அடுத்த நாட்டில் இருந்து கானகம் வழியே வரும் ஆணழகன் மீது காதல் வயப்படுகிறாள் அந்த பெண். தனது வயல்வெளியில் விளைந்து நிற்கும் தினைகளுக்கு காவலாக தோழியுடன் சென்ற இடத்தில் தினையுடன் சேர்த்து இவர்களின் காதலும் வளருகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தாயாருக்கு அந்த காதல் குறித்து தெரிய வருகிறது. உடனே, தனது மகளை தினைப்புன காவலுக்கு செல்ல விடாமல் தடுக்கிறாள். இதை அறிந்த அந்த பெண், தனது தோழியிடம் காதல் பிரிவின் வெம்மை தாங்காமல் புலம்புகிறாள்.
சிலம்பில் போகிய செம்முக வாழை

அலங்கல் அம்தோடு,அசைவளி உறுதோறும்

பள்ளியானைப் பரூஉப் புறம் தைவரும்

நல்வரை நாடனோடு அருவி ஆடியும்

பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றறும்

நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்

வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்

அரியபோலும்  காதல் அம் தோழி


 தோழியே! மலையில் செழித்து வளர்ந்து நிற்கும் செவ்வாழை இலைகள் அனைத்தும் காற்றில் அசையும் போது, அங்கே உறங்கிக் கொண்டு இருக்கும் யானையின் பருத்த உடலை தழுவும். இத்தகைய வளம் மிகுந்த மலை நாட்டைச் சேர்ந்த எனது காதலனுடன் அருவியில் நீராட முடியாதோ? சுனையில் நீலப் பூக்களை பறித்து மகிழ்ந்திருக்க முடியாதோ? வாசனை மிகுந்த மலர்களை கொண்ட வேங்கை மரத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் சோலையில் அவருடன் விளையாட முடியாதோ? இவை அனைத்தும் இனிமேல் அரிதாகி விடும் போல தெரிகிறதே? என்று புலம்புகிறாள். அதன்பிறகும் அவள் கூறுகிறாள் பாருங்கள்…

இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத

கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல்

கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்க என

நம் அவண் விடுநள் போலாள் கை மிகச்

சில சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை

மெல்இயல் ஒலிவரும் கதுப்போடு

பல்கால் நோக்கும் அறன் இல்யாயே

அருகில் இருக்கும் பெரிய கற்களை கொண்ட மலையின் அடிவாரத்தில் எனது குடும்பத்தினர் விளைவித்த தினைப்பயிரானது கரும்பு போல அழகுடன் திரண்டு வளர்ந்து நிற்கிறது. இந்த நிலைமையில், அதை கிளிகள் வந்து கொத்தும் என அறிந்தும் என்னை காவலுக்கு அனுப்பாமல் எனது தாய் இருக்கிறாள். அவள் எனது திரண்டு வளர்ந்து நிற்கும் கொங்கைகளையும் மென்மையாக தழைந்து கிடக்கும் எனது கூந்தலையும் அடிக்கடி பார்த்து செல்கிறாள். அதனால், இனிமேல் எனது காதலரை காண முடியாதோ? என தோழியிடம் ஏங்கித் தவிக்கிறாள். 




அப்படியும் அவளது நெஞ்சம் ஆறவில்லை. இளங்குளிரை மேனியெங்கும் வீசிச் செல்லும் வாடைக் காற்றை அழைத்து அதனிடம் தனது நிலைமையை கூறி வேதனையை வெளிப்படுத்துகிறாள். எப்படி?
விண்அதிர்பு தலைஇய, விரவு மலர் குழையத்

தண்மழை பொழிந்த தாழ்பெற் கடைநாள்

எமியம் ஆகத் துனி உளம் கூரச்

சான்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்

 பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி

விளியும் எவ்வமோடு, அளியள் என்னாது

களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை

முளரி கசியும் முன்பனிப் பானாள்

குன்று நெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை

எனக்கே வந்தனை போற்றி புனற்கால்

அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிக்

கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது

இனையை ஆகிச் செல்மதி

வினை விதுப்புனர் உள்ளலும் உண்டே

வானத்தில் முழங்கி கூடிய குளிர்ந்த மேகம், தனது குறைவான பொழிதலைக் கொண்ட கூதிர் காலத்தின் இறுதி நாள். இப்போது, பல்வேறு வகையான மலர்களும் குழைந்து கிடக்கின்றன. இப்போது உள்ளத்தில் வெறுப்பு மிகுந்து என்னை பிரிந்து சென்ற காதலரை நினைத்து எனது கை வளையல்கள் கழன்று விழுகின்றன. அதிக ஆர்வத்துடன் அவர் வரும் பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இறப்புக்கு காரணமான துன்பம் என்னை சூழ்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட என் மீது உனக்கு இரக்கம் இல்லையா? தண்ணீரை யானை குடித்து விட்டு பெருமூச்சு விடும்போது சிதறும் நீர்த்துளிகளால் கண் பார்வை மறைப்பது போல பனித் துளிகளால் தாமரை மலர் மறைக்கப்படுகிறது.  இத்தகைய பனிப் பருவத்தில் மலைகளையும் நடுங்கச் செய்யும் குளிர்காற்றே என்னை வருத்துவதற்காக வந்திருக்கிறாய்.
வாய்க்காலில் நீர் ஓடும்போது மணல் மேடு கரைவது போல உனது நெஞ்சம் இளகாதா? அப்படி இளகினால் கொடியவரான எனது காதலர் சென்ற திசை நோக்கி செல். அவர் எனது நிலைமை அறிந்து என்னிடம் திரும்பி வந்தாலும் வருவார். 



இப்படி தோழியிடமும் வாடைக் காற்றிடமும் தனது காதலை அடக்க மாட்டாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் காதல் கைகூடி விடுகிறது. தோழி உதவியுடன் வீட்டாரை உதறி விட்டு காதலனை கரம் பிடிக்கிறாள். இனிமையாக செல்லும் இல்லறத்தில் சிறிது விரிசல் விழுகிறது. தலைவனின் உள்ளத்தில் பரத்தைக்கு சிறிது இடம் கிடைக்கிறது. விரைவிலேயே பரத்தையின் வசிப்பிடத்தில் தலைவனுக்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. அதை அறிந்த அந்த பெண் மனம் கொதிக்கிறாள். பரத்தை வீட்டில் இருந்து திரும்பி வரும் தனது காதலனை அதாவது கணவரை பார்த்து கூறுகிறாள்.
இது நற்றிணையில் வரும் பாடல்…
வெண்ணெய் அரிநர் தண்ணுமை வெரீஇ

பழனப் பல் புள்இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார

விடேஎன் விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய, குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு உடை கலம் தழீஇயற்று

வாரல்; வாழிய, கவைஇ நின்றாளோ!  

நீண்டு கிடக்கும் நெல் வயலில் கதிரை அறுக்கும்போது பறவைகள் வந்து கொத்திச் செல்வதை தடுப்பதற்காக தண்ணுமை என்ற மேளத்தை முழங்குவார்கள். அந்த முழக்கத்தை கேட்டதும் பறவைகள் அஞ்சி, வயலில் தாழ்ந்து நிற்கும் கிளைகளை கொண்ட மருத மரத்தின் மீது சென்று அமரும். அதன் சுமை தாங்காது மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் வயலில் உதிரும். அத்தகைய செழிப்பான ஊர் இருப்பையூர். அதுபோன்ற செழிப்பான எனது இயற்கை அழகு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.
எனது கணவா! உன்னை எனது அருகில் நெருங்க விட மாட்டேன். அப்படி நீ வந்தாலும் எனது கைகள் உன்னை தடுக்கும் வலிமை கொண்டது. நீ பரத்தையரின் சந்தனம் பூசிய மார்பகத்தை தழுவியவன். வாடிய மாலையை சூடியவன். உன்னை தொடுவது குறைகளுடைய கலங்களை தொடுவது போன்றது. ஆதலால், நீ வர வேண்டாம். நீயும் உன்னை தழுவிய பரத்தையும் நெடுங்காலம் வாழ்வீர்களாக…! என்கிறாள்.
இப்படியாக காதல், காதல் சார்ந்த வாழ்வும் வாழ்ந்த பழங்கால பெண்டிரை பற்றி அகநானூறும், நற்றிணையும் அக இலக்கியங்களும் அவர்கள் மொழியிலேயே பேசுகின்றன. சங்ககால பெண்களின் காதல் வாழ்வை பதிவு செய்து வைத்துள்ளன. தமிழில் கவிதை வடிவம் என்பது பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து விட்டது. பழங்கால இலக்கியங்களை ஒப்பிடும்போது காதல் வயப்பட்ட பெண் கூறுவது போன்ற காதல் கவிதைகள் இன்றைய நிலையில் சற்று குறைந்து விட்டதாகவே தெரிகிறது.
= வை.ரவீந்திரன்

Sunday, 8 November 2015

பட்டை சோறு

தலை வாழை இலை விரித்து சூடான சோற்றை அதில் பரப்பியதும் இளஞ்சூட்டோடு வினை புரிந்து இலையில் எழும் வாசனைக்கு சிறிதும் குறைவில்லாதது, பனை ஓலையை வாகாக மடித்து பரிமாறும் சூடான சோறும். இளங் குருத்தும் இல்லாத முதிர்ந்த ஓலையும் அல்லாத பருவ பனை ஓலையை நேர்த்தியாக வகுந்து நுனி பகுதிகளை சேர்த்து, நடுப்பகுதியில் குழிவாக்கினால் ஓலைப்பட்ட(டை) தயார். அளவில் சிறிதாக குருத்து ஓலையில் செய்த ஓலைப்பட்டையில் பதநீர் ஊற்றி அருந்தும் சுகமே அலாதியானது. பதநீருடன் சுண்டு விரலின் நகம் அளவுக்கு நறுக்கிய மாங்காய் துண்டுகள் அல்லது இள நுங்கு சேர்த்தால்... அதுவே தேவாமிர்தம். அதுபோல, அளவில் பெரியதான ஓலைப்பட்டையில் சோறு பரப்பி சாப்பிடுவது தனி அனுபவம். அதுதான், பட்டை சோறு. 




ஆண்ட்ராய்டு போன், ஐ போன், டேப்லட், பேஸ்புக், விடுமுறை தின சிறப்பு திரைப்படம் இதுபோன்று எதுவுமே இல்லாத 20 ஆண்டுகளுக்கு முந்தைய விடுமுறை தினங்களில் பட்டை சோறுக்கு முக்கிய இடம் உண்டு. ஊரை ஒட்டிய காட்டுப்பகுதிக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அரிசி, மசாலா பொருட்களுடன் கும்பலாக சென்று சமையல் செய்து சாப்பிடுவதே அன்றைய விடுமுறை தின கொண்டாட்டமாக இருந்தது. பனை வடலி (இளம் பனை)யில் இருந்து வாகான ஓலையை வெட்டி வந்து அழகாக பட்டை பிடித்து அதில் சோற்றையும் குழம்பையும் நிரப்பி பனை ஓலையின் வாசனை கலந்த சுவையுடன் உணவை ருசிப்பது…. பேரானந்தம்.

நெல்லை மாவட்டத்தில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அம்மன் கோயில்களில் கொடை விழா வெகு பிரசித்தம். விழாவின் இறுதி நாளில் ஊர் மக்கள் சார்பாக அண்டாவில் சோறு வடித்து, அதன்பிறகு கோயிலினுள் ஒரு பகுதியில் வைக்கோல் பரப்பி அதன் மீது பனை ஓலையால் செய்த பாயை விரித்து அந்த சோற்றை அம்பாரமாக கொட்டி வைப்பார்கள். அதற்கு, பெரும்பட(டை)ப்பு என பெயர். கூடவே, கோயில் சார்பாக (ஊர் மக்கள் சார்பாக) பொது கிடா ஒன்று அம்மனுக்கு பலி கொடுக்கப்படும். நண்பகல் பூஜை நேரத்துக்குள் அந்த கிடா சமைக்கப்பட்டு விடும். பெரும் படப்பு சோற்றுடன் ஆட்டு கறிக் குழம்பை ஊற்றி பெரிய அளவிலான ஓலைப் பட்டையில் அம்மன் முன் படைத்து வழிபடுவது வழக்கம்.



அம்மன் கொடை விழாவின் இறுதி நாள் கொண்டாட்டங்களில் வீட்டில் இருந்து பெண்கள் எடுத்து வரும் முளைப்பாரி, பலியிடப்படும் ஆடு, கோழிகள், மலர் மாலைகள் என பல்வேறு வகையான கதம்ப வாசனைகளுக்கு இடையே இந்த பட்டை சோற்றின் நறுமணம் தனித்து நிற்கும். திருவிழா முடிந்து சாமிக்கு வைத்த படப்பை (படையலை) எடுத்து அந்த சாதமும், குழம்பும் ஊர் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இப்படியாக நினைவுக்குள் சுவை பரப்பி கிடக்கிறது பட்டை சோறு ...

= வை.ரவீந்திரன் 

Monday, 7 September 2015

கண்ணதாசனை கவர்ந்த காப்பியம்


உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ் மொழியை இயல், இசை, கூத்து (நாடகம்) என முன்னார் வகுத்து வைத்துள்ளனர். தொல்காப்பியத்தில் இதற்கு முழுமையான விளக்கம் கூறப்பட்டுள்ளது. இயல் தமிழ் என்பது மனதில் உள்ளதை இயல்பாக, யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவதாகும். இசைத் தமிழ் என்பது செய்யுளை இசையோடு இணைந்து பாடல் இசைப்பதற்கு ஏற்ற வகையில் எழுதுவதாகும். நாடகம் என்பது செய்யுளுக்குள்ளேயே கதா பாத்திரங்கள் உரையாடுவது போன்ற பாணியில் எழுதுவது. இது போன்ற மூன்று தமிழும் ஒருங்கே அமைந்த காப்பியம் சிலப்பதிகாரம்.

வழக்கமாக ஒரு காப்பியமோ அல்லது நெடுங்கதையோ முக்கிய கதாபாத்திரத்தின் பெயரிலேயே அழைப்பது வழக்கம். இதுவே தொன்று தொட்டு தொடரும் வழக்கம். அப்படித்தான் காளிதாசர் எழுதிய சாகுந்தலம் அமைந்தது. சகுந்தலையை காதல் கணவருடன் சேர்ப்பதற்கு உதவிய கணையாழி (மோதிரம்) முக்கிய பாத்திரமாக இருந்தாலும் கூட சகுந்தலையின் பெயரிலேயே சாகுந்தலம் என அந்த காவியம் அழைக்கப்பட்டது.

அதுபோல, மேலைநாட்டு அறிஞர் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஒத்தல்லோ’ நாடகத்தில் சாதாரண கைக்குட்டையே பிரதான பாத்திரமாக இருக்கும். ஆனால், அந்த நாடக காவியத்துக்கு கதையின் நாயகன் ஒத்தல்லோ பெயரையே அவர் சூட்டி இருந்தார்.

ஆனால், அவற்றில் இருந்து மாறுபட்டு தனது காப்பியத்துக்கு பெயரிடுவதிலேயே புதுமையை ஆரம்பித்து வைக்கிறார், இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரமான கால் சிலம்பையே அதற்கு பெயராக சூட்டியுள்ளார். கோவலன் பெயரிலோ, கண்ணகி பெயரிலோ அந்த காவியம் அழைக்கப்படவில்லை. காற் சிலம்பின் பெயரால், ‘சிலம்பு அதிகாரம் (சிலப்பதிகாரம்) என அழைக்கப்படுகிறது. தலைப்பில் ஆரம்பிக்கும் புதுமையானது வழி நெடுகிலும் சிலப்பதிகாரத்தில் சிதறிக் கிடப்பதை காணலாம்.

இயல் தமிழின் முக்கிய பகுதியாக ஆசிரியப்பா, கலிப்பா போன்றவற்றால் சிலப்பதிகாரத்தில் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது. காப்பியத்தின் ஆரம்பத்திலேயே,
‘திங்களை போற்றுதும் திங்களைப் போற்றுதும்...’

என்ற வரிகளிலேயே இயல் தமிழின் சாரம் சுரக்கத் தொடங்கி விடுகிறது.

மதுரையில் அருள் வந்து ஆடும் சாலினி என்ற பெண் கூறும்போது, 

‘இவளோ கொங்கச் செல்வி... குடமலையாட்டி... தென்றமிழ்ப் பாவை... செய்தவக் கொழுந்து... ஓருமாமணியாய் வந்த திருமாமணி...’
என கண்ணகியை பார்த்து கூறுகிறாள்.

இப்படி படிக்கும்போதே யாவரும் எளிதில் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் இயல் தமிழின் தாக்கம் சிலப்பதிகாரத்தில் விரவிக் கிடக்கிறது.

அடுத்ததாக இசைத் தமிழ் என்று பார்த்தோமானால் ஏராளமான பகுதிகளில் அதை இளங்கோவடிகள் அழகாக வடித்திருப்பார். மாபெரும் வணிகர்களின் குலக் கொழுந்துகளாக கோவலனுக்கும் கண்ணகிக்கும் மணம் முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கின்றனர், இருவரும். அப்போது,

“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விறையே.. கரும்பே.. தேனே..’
என கோவலன் பாடுவதாக செய்யுள் அமைந்திருக்கிறது. இது இசைத்தமிழுக்கு சிறந்த சான்று.

இதுபோலவே, யாழிசை, குழலிசை போன்றவற்றை அரங்கேற்று காதையிலேயே இளங்கோவடிகள் அறிமுகம் செய்கிறார்.

‘குழல்வழி நின்றது யாழே யாழ் வழித்

தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே முழவோடு

கூடி நின்றசைத்தது ஆமந்திரிகை...

என குழல், யாழுடன் மத்தளம் குயிலு போன்ற கருவிகள் இணைந்து வாசிக்கப்பட்டதை அழகாக வருணிக்கிறார். அது மட்டுமல்ல குழல் என்பது எப்படி இருக்க வேண்டும்? யாழ் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றொரு இடத்தில் மிக அழகாக இளங்கோவடிகள் விளக்குகிறார்.  

‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

காரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’

என்று கிருஷ்ணரை பக்திப் பெருக்குடன் ஆயர்குலச் சிறுமி பாடுவதாக அமைந்துள்ள செய்யுள் வரிகளில் இசை நயத்தை பருக முடிகிறது.

கண்ணகியை விட்டுப் பிரிந்து ஆடல் மாது மாதவியுடன் கூடி களிக்கும் கோவலன் பாடுவதாக அமைந்துள்ள செய்யுள்களும், இந்திர விழாவில் இருவரும் மாற்றி மாற்றி இசைத்துக் கொள்ளும் கானல்வரி பாடல்களும் இசைத் தமிழுக்கு மிகச் சிறந்த சான்று. அதில் இரண்டு துளிகள் இதோ....

‘திரைவரி தருதுறையே திருமணல் விரியிடமே

விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே

மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே

இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே’

என கோவலன் பாடும் பாடலும் அதற்கு பதில் கூறும் வகையில் மாதவி பாடுவதாக அமைந்துள்ள


‘கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே

எதிர்மலர் புரையுன்கண் எவ்வநீ ருகுத்தனவே

புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொல்

மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை’

என்ற பாடலும் அகத்திணையை அழகாக எடுத்துரைக்கும் வரிப்பாடல்களாக இசை இன்பம் ஊட்டும் சொல்நயமிக்க செய்யுளாக விளங்குகின்றன.

மூன்றாவதாக சிலப்பதிகாரத்தில் நாடகத் தமிழ் குறித்து பார்க்கலாம். நாடகம் என்றால் முழு நீள கதையும் அதன் இறுதியில் மங்களகரமாகவோ அல்லது அமங்களமாகவோ முடிவையும் கொண்டதாகவே இருக்கும். சிலப்பதிகாரமும் அப்படித்தான் அமைந்துள்ளது.

கோவலன்-கண்ணகி திருமணம், வசதி வாய்ப்பு பெருகவும் பரத்தையர் மற்றும் மாதவியுடன் கோவலன் செல்வது, பரத்தையருள் மாதவியின் கற்பு நெறி வாழ்க்கை, மனந்திருந்தி கண்ணகியிடம் கோவலன் திரும்புதல், மறுபடியும் வணிகத்தை தொடங்க கால் சிலம்பை விற்க செல்வது, சிலம்பு விற்க சென்ற இடத்தில் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுவது, கணவன் மரணத்துக்கு கண்ணகி நீதி கேட்பது என்று பெருங்கதையாகவே சிலப்பதிகாரம் விரிகிறது.

கோவலன் மாள்வது, மதுரை மன்னன் வீழ்வது என துன்பியலாக சிலப்பதிகாரம் கதை முடியும் தருணத்தில் வானுலகில் இருந்து புஷ்பக விமானம் கீழிறங்கி வந்து கோவலன், கண்ணகி இருவரையும் அழைத்துச் செல்வதாக இன்ப முடிவை அளித்திருப்பார், இளங்கோவடிகள். நாடக காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உரையாடுவதாக அமைந்துள்ள செய்யுள் பகுதிகள் அனைத்தும் நாடகத் தமிழுக்கு சிறந்த உரைகல்.

சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி...
கையில் ஒற்றை சிலம்பேந்தி கருங்கயற் கண்களில் கோப ஒளியை ஏற்றி ஓங்கார ரூபமாக மதுரை வீதிகளின் வழியே நடந்து சென்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க கண்ணகி செல்லும் காட்சியும்... அரண்மனை வாசலில் பெருங்குரல் எடுத்து அவள் பேசும் வார்த்தைகளும் நாடகத் தமிழுக்கு அருமையான கட்டியம் கூறுபவை.

கண்களில் கனல் தெறிக்க மதுரை அரண்மனை வாயிலில் நிற்கும் வாயில் காப்போனிடம் பேசுகிறாள் கண்ணகி..







“வாயிலோயே வாயிலோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே

இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத்தாளென்று

அறிவிப்பாயே.. அறிவிப்பாயே...’

அதாவது, ‘வாயில்காப்போனே! அறிவு முழுவதும் அற்றுப்போன, நெஞ்சத்தில் அறநெறி தவறிப்போன, அரசநீதி தவறி விட்ட பாண்டிய மன்னனின் வாயில் காப்போனே..! பரலினை உடைய இரண்டு சிலம்புகளில் ஒன்றினைக் கையில் ஏந்தியபடி, கணவனை இழந்த பெண் ஒருத்தி அரண்மனை வாசலில் நிற்கிறாள் என்று உன் மன்னனிடம் சென்று கூறுவாய்’ என்கிறாள் கண்ணகி.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம். முத்தமிழின் உடலாக விளங்கும் மெய் எழுத்துகளை மூன்று வகையாக நமது முன்னோர் பிரித்து வைத்திருக்கின்றனர். வல்லினம், இடையினம், மெல்லினம் என்பவை அவை. மிக அழுத்தமாகவும் வலிமையாகவும் உச்சரிக்கும் எழுத்துகளே வல்லினம். அவை க,ச,ட,த,ப,ற ஆகிய எழுத்துக்களாகும்.  

ஒருவன் மிகவும் கோபத்துடன் பேசினால் பற்களை ‘நறநற’வென கடிப்பான் என்பது நாம் அனைவருமே அறிந்தது. அதே கோணத்தில் கண்ணகி கூறும் மேற்சொன்ன 6 வரிகளில்
‘அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்..’
என்ற வரிகளை மட்டும் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். மிகவும் கடுங் கோபத்துடன் இருக்கும் ஒருவர், தனது பற்களை நறநறவென கடித்தபடி பேசுவது போலவே அந்த வரிகள் அமைந்திருக்கும். இதுதான், சிலப்பதிகாரத்தின் நாடகத் தமிழ்ச் சிறப்பு ஆகும்.


இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கியதால்தானோ என்னவோ...? ‘காவியத்தாயின் இளைய மகனும்... காதல் பெண்களின் பெருந்தலைவனுமான’ கண்ணதாசனும் சிலப்பதிகார காவியத்தின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். கவியரசராக மட்டுமே அவரை நோக்கும் பலரும் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியதை அறிந்திருக்க முடியாது.

எம்ஜிஆர் நடிப்பில் உருவான மதுரை வீரன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் ஆகிய படங்களுக்கும் அவரே கதை, வசனகர்த்தா. அதில், மன்னாதி மன்னன் என்ற திரைப்படமானது சேர, சோழ மன்னர்களைப் பற்றிய கற்பனை கலந்த கதை. அந்த படத்தை பார்த்தால் சிலப்பதிகார காட்சிகள் ஒத்துப் போவதை அறியலாம்.  

வஞ்சி அரண்மனையின் ஆடல் பெண்ணான (நர்த்தகி) பத்மினி மீது இளவரசரான எம்ஜிஆர் மையல் கொண்டு மோதிரம் அணிவித்து கந்தர்வ முறையில் ஏற்றுக் கொள்வது, சோழ மண்டலமான உறையூரில் காவிரி கரையில் நடைபெறும் இந்திர விழா, சோழ அரச குல பெண்ணை எம்ஜிஆர் மணம் புரிந்ததும் புத்த நெறியை பத்மினி தழுவுவது என ‘மன்னாதி மன்னன்’ திரைப்பட கதையின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தை நினைவூட்டியபடியே செல்லும்.

மன்னர் காலத்து கதையை கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் கூட சிலப்பதிகாரம் மீது கண்ணதாசன் கொண்டிருந்த காதலால் சிலப்பதிகார காட்சிகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. படத்தின் பாடல்களும் கூட சிலப்பதிகாரத்தின் பிரதிநிதியாகவே அமைந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, தென் தமிழகத்தின் மிகப் பழமையான கர்ண பரம்பரை கதைகளில் ஒன்றான ‘மதுரை வீரன்’ கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவான ‘மதுரை வீரன்’ படத்துக்கும் திரைக்கதை, வசனம் கண்ணதாசன் தான். அந்த திரைப்படத்திலும் சிலப்பதிகார காட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.

கதையின் இறுதி காட்சியில் மதுரை வீரன் (எம்ஜிஆர்) மீது கள்வர்களுடன் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டி திருமலை மன்னன் அரசவையில் நடைபெறும் விசாரணை காட்சி, மன்னனிடம் நீதி கேட்டு வெள்ளையம்மாள் (பத்மினி), பொம்மி (பானுமதி) இருவரும் வாதிடும் காட்சி ஆகியவற்றை பார்க்கும்போது பற்களை நறநற என கடித்தபடி கண்ணகி வாதிடும் கோபாவேச காட்சிக்கு இணையாகவே இருக்கும். அரசவையில் கதறும் பொம்மி, ‘சிலப்பதிகார கண்ணகி’யை சுட்டிக் காட்டியே பேசுவார்.

இருவருடைய வாதங்களைக் கேட்டதும், ‘தவறு இழைத்து விட்டேன்’ என திருமலை மன்னன் மனம் திருந்தி தண்டனையை நிறுத்த புறப்பட்டுச் செல்வார். ஆனால், அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். சிலப்பதிகாரம் போலவே துன்பியலில் முடியும் இந்த கதையையும் கடைசி நேரத்தில் இன்பியலாக மாற்றி விடுகிறார், கண்ணதாசன். எப்படி..?

மாறு கால், மாறு கை வாங்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரனுடன் சேர்ந்து அவனது இரண்டு மனைவிகளும் உயிர் துறக்கின்றனர். விடுகின்றனர். அதன் பிறகு, விண்ணில் இருந்து பூமாரி பொழிந்து மூவருமே தெய்வமாகி விடுகின்றனர்.

இப்படி, கவியரசு கண்ணதாசனை கவர்ந்த சிலப்பதிகார காப்பியமானது தமிழின் மிக உன்னத காப்பியம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முற்கால தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய மண்டலங்களை கதைக்களமாக கொண்ட இந்த காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், சேர குலத்து இளவரசர்.

முத்தமிழும், மூன்று மண்டலங்களும் ஒரு சேர நிறைந்திருக்கும் சிலப்பதிகாரமானது, காலங்களை கடந்து தமிழர்களின் காதுகளில் சிலம்பு ஓசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும். 

= வை.ரவீந்திரன் 

Friday, 21 August 2015

புத்தபிரான்



 
நீண்டு வளர்ந்த காதுகள்
பாம்படம் அணிந்து அழகு பார்க்க
காது வளர்க்கும் கபடமற்ற
கிராமத்து மூதாட்டிகளை நினைவூட்டும்

உதடுகளில் கோடாய் விரியும்
மென்மையான சிரிப்பு
வெட்கத்தை வதனத்தில் தாங்கி
பூரித்து நிற்கும் பக்கத்து வீட்டு
அக்காளை நினைவூட்டும்

உயர்ந்து நிற்கும் குடுமியும்
தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
சாந்தமான முகமும்
ஊர் கோயிலில் இருக்கும்
ஜடாமுடீசுவரரை நினைவூட்டும்

நிலம் நோக்கி மூடிக் கிடக்கும்
கண்களை காணும்போதெல்லாம்
ஏரி, கண்மாயில் ஒற்றையாய்
தவமிருக்கும் கொக்குகளே
கண்முன்னே வந்து செல்லும்

பள்ளிக் கூட பருவத்தில்
இப்படித்தான் மனதினுள்
புதைந்து கிடந்தது
புத்தபிரானின் உருவம்...

= வை.ரவீந்திரன் 

Friday, 14 August 2015

விடியல் பொழுதில்...






இளங்காற்று கையணைக்க
இளஞ்சூரியன் கதகதப்பு ஊட்ட
மேகப்பஞ்சு எடுத்து மனம் வருடுகிறது
ஒரு நாளின் அதிகாலை விடியல் பொழுதில்...

தவழ்ந்து அன்னநடை பயின்று
உலக வாழ்வை உணர்ந்து
தனக்கெனதொரு பரம்பரையை
ஈன்று செல்லும் மனித இனம்
இளந்தளிர் கைகள் அசைத்து
இளம் புன்னகை வீசி
பிஞ்சுக் கால்களால் நெஞ்சம் உதைக்கிறது
வாழ்க்கையின் விடியல் பொழுதில்...

துளிர் விட்டு தளிராக வளர்ந்து
மொட்டவிழ்ந்து மலராய் மலர்ந்து
உலகுக்கு உபயோகமாய் கனிகளை
சுரந்து செல்லும் தாவர இனம்
மண்ணை மெல்ல கிழித்து
விண்ணை தலை குனிந்து நோக்கி
இளம் குருத்து முகிழ முளை விடுகிறது
தனக்கானதொரு நல்ல விடியல் பொழுதில்...

ஜனனம் தொடங்கி மரணம் வரை
உலக உயிரினங்களின் வாழ்க்கை ஒன்றே...!
விடியல் மட்டும் விதிவிலக்காகி விடுமா...?


= வை.ரவீந்திரன்

Friday, 31 July 2015

உரு பெற்று அலையும் தனிமை

பூட்டிய அறைக்குள்
தனிமை உரு பெற்று
பராரியாய் அலைகிறது

புகையாய் அலையும் நினைவுக்கு
வெளிச்சம் காட்டியபடி
ஊரடங்கும் நடுச்சாமத்தில்
என் கரம் பற்றி அழைக்கிறது


மெய்யை விழுங்கிய இருட்டுக்கு
செரிமானம் ஆகாமல்
பொய்யை துப்பலாம்
அந்த பொய்யே மெய்யென
வீதியுலா போகலாம்

உண்மையின் குரல்வளையை
பொய்மை நெறிக்கலாம்
அடிமைகளின் விம்மல் ஒலி
அடங்கி போகலாம்

ஊமைகளின் மனக்காயங்களை
காலம் ஒருநாள் மாற்றும்
பேருண்மை என்ற பேரொளியில்
ஒருநாள் மெய் வெளிப்பட்டே தீரும்

= வை.ரவீந்திரன் 

Sunday, 19 July 2015

அருவி ஒரு ஆச்சரியம்...





அருவி ஒரு ஆச்சரியம்...

பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் மெலிதான புன்னகையையாவது வரவழைக்கும் சூட்சுமம் அருவிக்கு உண்டு. அருவி என்றதும் முதலில் குற்றாலம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

முன்பெல்லாம் வாடை காற்றின் குளிர்ச்சியை வைத்தே குற்றாலத்தில் சாரல் சீஸன் ஆரம்பித்து விட்டதை சுற்றியுள்ள ஊர்களில் கண்டு பிடித்து விடுவார்கள். கூடவே விசிறி வரும் சாரல் மழை தூறலின் புண்ணியத்தில் அருவியில் குளிக்கும் ஆசை துளிர் விட தொடங்கி விடும். 30 கி.மீ. தொலைவில் உள்ள எங்கள் ஊரிலும் அப்படித்தான்.

பள்ளிப் பருவத்தின்போது ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை (பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை வாரச் சம்பளம் வழங்குவார்கள்) குடும்பத்துடன் அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம். தென்காசி பேருந்து நிலையத்தை அடைந்ததுமே மனதில் உற்சாகம் கொப்புளிக்க தொடங்கி விடும்.

மெலிதான ஊசி போன்ற சாரல் மழையின் தூறல், பேருந்து நிலையத்தின் மெல்லிய ஈரப்படலம், குளிர்ந்த காற்று என தென்காசியிலேயே குற்றால சீஸன் வரவேற்க தொடங்கி விடும். கோடை முடிந்த உடனேயே ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் வரை கூட சீஸன் நீடிக்கும்.

குற்றாலம், ஐந்தருவி. அதன்பிறகு சிற்றருவி அல்லது பழைய குற்றாலம் என கண்டிப்பாக 3 அருவிகளில் குளித்து விடுவோம். வீட்டில் அம்மா தயாரித்து எடுத்து வரும் இட்லி, கெட்டியான தேங்காய் சட்னி கூடவே சேமியா பாயசம் என குற்றாலம் சென்று வருவதே ஜாலி டிரிப்.

ஒரு சில சமயங்களில் சாரல் மழை இல்லாமல் மேகமூட்டமாக மப்பும் மந்தாரமுமாக வானம் காணப்படும். அந்த சமயங்களில் ஒட்டு மொத்த குற்றாலத்துக்கும் ஏசி வசதி செய்யப்பட்டது போல இருக்கும். தென்காசி பேருந்து நிலையம், குற்றாலம் பேருந்து நிலையம், ஐந்தருவி என அனைத்து இடங்களிலும் எந்நேரமும் பேருந்துகளும் தயாராக இருக்கும். கூடவே, வெளியூர்களில் இருந்து வேன், கார்களில் வரும் பயணிகள் கூட்டமும்.

அருவிக்கரை, பேருந்து நிலைய பூங்கா, ஐந்தருவி, குற்றாலநாதர் கோயில், கடை வீதி என எங்கு சென்றாலும் மனித தலைகளே தென்படும். அரைக்கால் சட்டை அணிந்து மேலுக்கு சீஸன் துண்டு போர்த்தியபடி உலவுவதே தனி அனுபவம்.

1995ல் ஊரில் இருந்து புறப்பட்டு வந்த பிறகு ஆண்டுதோறும் சீஸன் சமயத்தில் குற்றாலம் செல்வது எட்டாக்கனியாகி விட்டது. இந்த ஆண்டில் சந்தர்ப்பம் வாய்த்ததால் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே ஜூலை முதல் வாரம் குற்றாலம் புறப்பட்டுச் சென்றேன். கூடவே எனது மூத்த மகன் திலீபன்.
தென்காசி பேருந்து நிலையத்தில் (இப்போது அது பழைய பேருந்து நிலையம்) இறங்கியதுமே சுள்ளென முகத்தில் அறைந்த வெயில் தான் எங்களை வரவேற்றது.

குற்றாலம் செல்ல பேருந்து தேடினால் ஒரேயொரு மினி பேருந்து மட்டும் நின்றது. அதில் ஏறி குற்றாலம் சென்றால் பேருந்து நிலைய வாசலிலேயே இறக்கி விட்டு சென்றார்கள். பேருந்து நிலையத்தினுள் எட்டிப் பார்த்தால் பேருந்துகள் எதுவுமில்லை. ஐந்தாறு வேன்கள் நின்றிருந்தன. வேன் நிறுத்தமாக மாறி விட்டது. பேருந்து நிலைய பூங்காவும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சீஸன் சமயத்தில் இருந்த குற்றாலமாக தெரியவில்லை. அருவியிலாவது தண்ணீர் விழுமா என மனதில் எழுந்த சந்தேகத்துடனேயே சென்றோம். பேரூராட்சியின் சுற்றுலா பயணியர் விடுதியை கடந்ததுமே மெல்லிய இரைச்சலை முன் அனுப்பி வரவேற்கும் பேரருவியின் உபசரிப்பு இல்லை. அருவிக்கு வயதாகி விட்டதா...? இல்லை எனக்கா...? குழப்பத்துடனே அருவிக் கரை அருகே சென்றபோது மெலிதாக இரைச்சலை கேட்க முடிந்தது.

அருவியின் நடுப்பகுதியில் மட்டும் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அருவிக் கரையின் இரு மருங்கிலும் படர்ந்து விரிந்து விழும் குற்றால அருவி மிஸ்ஸிங். பேரிரைச்சலுடன் வீழும் கம்பீரத்தை பார்க்க முடியவில்லை. நடுங்கும் குளிரில் வெடவெடக்கும் உடலுடன் சிரித்தபடி குளிக்கும் முகங்களையும் காண முடியவில்லை. சுற்றுப்பகுதியில் உள்ள ஏதோ ஒரு கோயிலுக்கு குடங்களில் புனித நீர் சேகரித்துச் செல்லும் ஒரு கும்பல் மட்டும் நின்றிருந்தது. கூடவே, சிறிய அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

குறைவான அளவில் கூட்டம் இருந்ததால் நிறைவாகவே எங்களால் அருவியில் குளிக்க முடிந்தது. ஆனால், 20 ஆண்டுக்கு முந்தைய பழைய உற்சாகம் மருந்துக்கும் இல்லை...

பயணம்... அருவி குளியல்... கடைவீதி.. இத்யாதி.. என இதே நிலைமை தான் ஐந்தருவியிலும்....

இரண்டு அருவியிலும் ஒரு ஒற்றுமையை என்னால் உணர முடிந்தது. அருவி நீரின் ஆவேசமான வீச்சை விட மதுவின் வீச்சம் அதிகமாக இருந்தது....!

= வை.ரவீந்திரன்