Tuesday, 25 June 2019

ஜனநாயகத்தின் கருப்பு தினம்

45 ஆண்டுகளுக்கு முன்.... 

இதே நாளில்... 

1975 ஜூன் 25... 

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம். 

அன்றைய தினம் தான் ரேபரேலி தொகுதி எம்பியாக தேர்வான தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவருடைய ஆணையை ஏற்று எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால், 1975 மிசா நிலைமை முற்றிலும் வேறானது. கொடுமைகள் நிறைந்தது.

சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்க தேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு சாதாரன மனிதன் தண்டனை தருவதா...? என்ற மனோபாவத்தில் எழுந்த எண்ணம்...! 

இந்திராவின் எமர்ஜென்சி ஐடியாவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்க முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே மற்றும் இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இந்திராவுக்கு எதிராக தேர்தல் வழக்கு போட்டவர் உட்பட... அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர். 

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி. 

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது. மாநில அளவிலும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அதற்கு இணையான கொடுமைகளும் அரங்கேறின. இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்களும் சிறையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. 

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் கூட எமர்ஜென்சியால் மனம் நொந்து இருந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்றாவது  எமர்ஜென்சி முடிவுக்கு வரும் (1977 ஜனவரி வரை எமர்ஜென்சி இருந்தது) என எதிர்பார்த்து இருந்த காமராஜரின் காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது வரலாறு. 

எந்த பதவியிலும் இல்லாத இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை காலத்தில் அதிகார மையமாக இருந்தார் என்றால்  நிலைமையை யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. 



பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன. 



1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (இது சர்வதேச நாடுகளின் கணக்கு) கைது செய்யப்பட்டனர். டெல்லி ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. 



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 45 ஆண்டுகளாகி விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கசப்பான வரலாறு.

- #நெல்லை_ரவீந்திரன்

Monday, 24 June 2019

புகைப்படமாக மாறிப்போன கழுதை

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதையை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? 

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். 

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக  அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர். அதற்காக வீடுகளிலேயே கழுதைகளை வளர்த்து வந்தனர்.  

ஊர் முழுவதும் வீடுகளில் அழுக்கு துணியை எடுத்து வந்து வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். இந்த வெள்ளாவி வைப்பது தனி வேலை. வட்டமாக திறந்த வெளி அடுப்பு ஒன்று வீட்டு முன் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மீது அழுக்கு துணியை ஈரமாக்கி வேக வைப்பதுதான் வெள்ளாவி.

அதிலேயே விடாப்பிடி அழுக்கெல்லாம் லேசாக உதிர தொடங்கியதும் கழுதை மேல் பொட்டலத்தை ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் குளம், ஊருணியில் துவைத்து அங்கேயே காய வைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். 



இப்பல்லாம் குளமும் இல்லை ஊருணியும் இல்லை. அதனால கழுதைகளும் இல்லை. ஊரில் திருவிழா என்றால் பந்தலில் கலர் துணி அலங்காரத்துக்கு இப்பிடி துவைத்த சேலைகளைத்தான் பயன் படுத்துவார்கள். கோயிலில் தன்னோட சேலையை பார்த்து அதிர்ச்சியாகும் பெண்கள் பலரும் மறுநாள், அந்த சலவை தொழிலாளிக்கு தனியாக கொடை குடுப்பது தனிக் கதை. இப்பல்லாம் பந்தல் அலங்காரததுக்கு தனியாகவே துணி தயாராகிறது.

பண்டிகை, கோயில் கொடைவிழா மாதிரி விசேஷ தினங்கள் தான் கழுதைங்களுக்கு விடுமுறை நாட்கள். எங்கள் ஊரில் வைத்தியலிங்க சாமி கோயிலில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்தைப்பகுதியில் கூடி நிற்கும்.

அதை சீண்டிப் பார்ப்பதுதான் திருவிழா ஜாலி. கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும். நாங்களும் துரத்திச் செல்வோம்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் கம்ப்யூட்டர் கேமில் தொலைந்து விட்டார்கள். டெம்பிள் ஃபெஸ்டிவலில் ஓடிய சிறுவர்கள் இப்போது இல்லை. டெம்பிள் ரன் சிறுவர்கள் தான். 

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.

அது மாதிரியே... இப்பல்லாம் 'கழுத கெட்டா குட்டிச் சுவர்' கிடையாது... 'முகநூல் சுவருதான்'... 😂😂

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 10 June 2019

காற்றில் கரைந்த கிரேஸி..

டிவி சீரியல்கள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் 'கிரேஸி டைம்ஸ்', 'விடாது சிரிப்பு' மாதிரியான தொடர்கள் தான் ஃபேவரைட். இரவு சாப்பாடு முடிந்ததும் ரிலாக்ஸ் அதுதான். அப்படித்தான் கிரேஸி மீது கிரேஸ் ஆனேன். அப்புறம் நம்ம ஃபேவரைட் ஹீரோவின் ஆஸ்தான எழுத்தாளர் என தெரிந்ததும் கூடுதல் பற்று. சென்னை வந்த புதிதில் அவ்வப்போது மேடை நாடகங்களும் பார்ப்பதுண்டு.

.



நகைச்சுவை நடிப்பு என்றால் வடிவேலுவுக்கு மாற்றாக யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல, நகைச்சுவை ஸ்கிரிப்ட் என்றால் கிரேஸி மட்டும் தான். சதிலீலாவதி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, வசூல்ராஜா மாதிரி படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. காரணம், இந்த விகடானந்தா தான்.


சேது ராமன் கிட்ட ரகசியமா..? 

ஓ நர்சோட பர்ஸா...?

மார்கபந்து முதல் சந்து...

மனமிருந்தா மார்க பந்து...

நீயும் எம்பி எம்பி பிஎஸ் படி...

ராமண்ணா... ஆங்.. அவரு பழைய டைரக்டரு...

முன்னாடி... பின்னாடி... 

என் பிரதர் கோ பரதன்...

எச்சக்கல சிங்கம்... எச்சக்கல புலி... இது மாதிரி... 

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளோவா நகைச்சுவை நீரோடை வழிந்தோடுவதும் டைமிங் காமெடியும் சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் கிரேஸி பெருங்கடலின் சில சொட்டுகள் தான். 

திரையுலக பயணம் ஒரு பக்கம் இருந்தாலும் 6500 நாடக அரங்கேற்றம். அதிலும் சாக்லேட் கிருஷ்ணா மட்டும் 500 முறை. தம்பி பாலாஜியோடு சேர்ந்து மாது, சீனு, மைதிலி, ஜானகி கேரக்டர்களோடு கிரேஸியின் அதகளம்.. தனி ரகம். ஜானகி, மைதிலி கேரக்டர் பெயர்களுக்கு தனது ஆசிரியை நினைவாக சூட்டிய பெயர் என அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

இதுபோல,  வெண்பா இலக்கண வரம்புக்குள் நான்கு வரி வெண்பா எழுதுவதிலும் வல்லவர் அவர். கூடவே கார்ட்டூன் வரைவதிலும் கில்லாடி. நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கம் வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவை எழுத்தாளர், வெண்பா கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என ஒரு மெக்கானிகல் என்ஜினீயருக்குள் ஏராளமான திறமைகளை நிரப்பி அனுப்பிய கடவுள், சாக்லேட் கிருஷ்ணனை திரும்பவும் அழைத்துக் கொண்டார். 

திரை, நாடக எழுத்தாளர், கவிஞர் என யாராவது மறைந்தால் அவரது துக்ககரமான வசனங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவரது வசனத்தில் ஒன்று கூட தேடிப் பார்த்தாலும் தென்படவே இல்லை. பாசக் கயிற்றுடன் வந்த எமன் கூட, நிச்சயமாக இவரது வசனங்களை கேட்டு, சிரித்தபடியேதான் உயிரை எடுத்துச் சென்றிருப்பான். எமனுக்கும் கூட அந்த சமயத்தில் ஏதாவது ஒரு டைமிங் காமெடி சொல்லி விட்டுத்தான் பயணித்திருப்பார், கிரேஸி...

ஜானகி, மைதிலி, மாது, சீனு இவர்களுடன் நாங்களும் மிஸ் யூ கிரேஸி...

-நெல்லை ரவீந்திரன்

Sunday, 9 June 2019

இதே நாளில் அன்று

எமர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வென்று மத்திய ஆட்சியை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைப்பற்றி இருந்தார், இந்திரா காந்தி. தமிழ் நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை பிடித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக 2 எம்பி இடங்களை மட்டுமே பிடித்தது.

இதனால், ஆட்சியை கைப்பற்ற இதுவே சரியான தருணம் என நினைத்த கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்குமாறு இந்திராவுக்கு நிர்பந்தம் கொடுத்தார். விளைவு, மத்திய ஆட்சிக்கு வந்த மறு மாதமே எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திரா. தமிழகத்தில் எம்ஜிஆர் அரசு உட்பட இந்தியா முழுவதும் ஜனதா ஆதரவு கட்சிகளின் அரசு மற்றும் ஜனதா கட்சி அரசு என ஒரே நாளில் 17 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 பிரிவை பயன்படுத்தி எதிர்க்கட்சி மற்றும் பிடிக்காத முதல்வர்களின் அரசுகளை கலைப்பது காங்கிரசுக்கு கைவந்த கலை.

இப்படியாக, எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு 1980ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மீண்டும் களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ஜனதா, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு இரண்டும் தனியாக போட்டியிட்டன. குமரி அனந்தனின் காகாதேகா, பழ. நெடுமாறன் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 177 இடங்களில் அதிமுக களமிறங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்தாவது மாதத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக அணியில் அதிமுக மட்டும் 130 இடங்களை பிடித்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர். தமிழக மக்களின் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பை வைத்து கருணாநிதியும் இந்திராவும் கணித்த கணிப்பு பொய்யாக முடிந்தது.

தமிழக அரசியலில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றார், எம்ஜிஆர். (இந்த பட்டியலில் 2016ல் ஜெயலலிதா இடம் பெற்றார்) அப்படி இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழக  முதல்வராக எம்ஜிஆர் மீண்டும் பதவியேற்றது இதே நாளில் தான்... 9-6-1980.



அதன்பிறகு, 1984 தேர்தலிலும் மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தில் யாருமே முறியடிக்காத ஹாட்ரிக் வெற்றியை எம்ஜிஆர் அழுத்தமாக பதிவு செய்தார் என்பது வரலாறு.

Monday, 27 May 2019

சைக்கிள் எனும் காதல் வாகனம்

 அத காதல் வாகனம்னும் சொல்லலாம். கனவு வாகனம்னும் சொல்லலாம். அதில ஏறி ஊர சுத்துறதே தனி சுகம். வீட்டுக்கு ஒண்ணு இருக்கிறதே அதிசயம். கொஞ்சம் வசதியான வீடுங்கள்ல ரெண்டு கூட இருக்கும். சைக்கிள் தாங்க அது.



மொத மொத அத ஓட்டிப் பழகிறதே பெரிய சாதன. சைக்கிள் கடைங்கள்ல குட்டி சைக்கிள், கொஞ்சம் பெரிசு, அத விட பெரிசுன்னு ரக வாரியா வாடகைக்கு கிடைக்கும் அப்பல்லாம்.. ஊருக்கு ரெண்டு மூணு சைக்கிள் கடைங்க இருக்கும். ஆனாலும் லீவு நாட்கள்ல சைக்கிள் கிடைக்காது. ஒரு மணி நேரத்துக்கு வாடகை 50 பைசா.


ஊரு பெரிய கோவில் ரத வீதிங்களும்… வியாழக்கிழமை சந்த நடக்கிற கிரவுண்டும் தான் சைக்கிள் பழகும் இடம். ரெண்டாப்பு படிக்கும்போது பழைய சைக்கிள் ஒண்ண எங்க வீட்டுக்கு வாங்கினப்ப ரொம்ப பெரிசா தெரிஞ்சிச்சி. குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து பழகி இருந்ததால, கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் பழக ஆரம்பிச்சேன். சைக்கிள் சீட்டுக்கும் முன்பக்க ஹேண்ட் பாருக்கும் நடுவில இருக்கிற கம்பிக்கு கீழ தொங்கிக்கிட்டே மிதிக்கிறது தான் கொரங்கு பெடல். 


அப்புறம், கொஞ்சம் வளந்ததும் பெடலுக்கு கால் எட்டாட்டாலும் சீட்டில உக்காராமலே அசைஞ்சி அசைஞ்சி மிதிக்கிறதே தனி சாதனையா நினைச்ச காலம். அப்புறம் டபுள்ஸ் வச்சி சைக்கிள் மிதிக்க படிக்கிறது தனிக் கத. நானெல்லாம் எங்க அண்ணன பின்னால உக்கார வச்சி ஓடைக்குள்ள குப்புறத் தள்ளி டபுள்ஸ் ஓட்ட படிச்சேன்.


குட்டி சைக்கிள்ல இருந்து படிப்படியா வளந்த முன்னேற்றம் இது. ரோட்டுல இறக்கத்தில வண்டிய ஓட்டி, வௌங்காட்டுக்கு போயிட்ட வந்த ஒரு தாத்தா மேல சைக்கிள மோதிட்டு பயந்து நடுங்கின அனுபவமும் உண்டு.

அதுக்கு பிறவு, நான் ஐஸ்கூல் போன சமயத்தில குலுக்கல் சீட்டுல புது சைக்கிள் வாங்கினோம். வாரம் 50 ரூபா கட்டணும். அந்த சைக்கிள ஓட்டுறதில அண்ணன் கூட பெரிய போட்டியே நடக்கும்.


சாயந்திர நேரம் சைக்கிள எடுத்திட்டு காசியாபுரத்திலேருந்து ஆலங்குளம் வரைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாறதும் வைகாசி பொறந்தாச்சி பிரசாந்த் மாதிரி யாரையாவது வம்பிழுத்து சைட் அடிச்சதும் தனிக் கதை.


ஆடியோ கேசட்டில இருக்கிற ஒலி நாடாவ ஒரே அளவா துண்டு துண்டா கட் பண்ணி, சைக்கிள் ஹேண்ட் பாரில் ரெண்டு பக்கமும் இருக்கிற கைப்பிடியில ஒட்ட வச்சி சில பேரு சைக்கிள ஓட்டுவாங்க. ராசுக்குட்டி படத்தில பாக்யராஜ்  புல்லட்டில ஒட்டி வச்சிருப்பாரே அத மாதிரி. அந்த புல்லட் அலங்காரம் மாதிரியே சைக்கிளிலும் விதம் விதமா அலங்கரிச்சி சுத்துறது தனி பேஷன். அதுவும் சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் நாட்கள்ல சைக்கிளையும் அலங்காரம் பண்ணி அதே அளவுக்கு அலங்காரத்தோட புது டிரஸ் போட்டு சுத்துற சுகமே தனி.


இளசுங்களோட சைக்கிள் கத இதுன்னா… பொடிசுங்களோட கத வேற லெவல். சைக்கிள் வீலுங்கள்ல இருக்கிற போக்ஸ் கம்பியில படுற மாதிரியே பலுன ஊதி கட்டி விட்டு, அது போடுற வித்தியாசமான சத்தத்தை ரசிச்சிகிட்டே சைக்கிள ஓட்டுவாங்க. இத மாதிரி சைக்கிள்ல நிறைய வித்தைங்கள காட்டுவாங்க.


அப்புறம் டைனமோ வச்ச சைக்கிள் வச்சிருந்தா அது தனி கெத்து. பின் வீல் டயரில் உரசிற மாதிரி, சின்ன எண்ணெய் பாட்டில் சைசில ஒரு டைனமோ இருக்கும். டயர் சுத்துற வேகத்துக்கு ஏத்த மாதிரி அதிலேருந்து கரண்டு உருவாகும். அந்த கரண்டினால சின்ன ஒயர் மூலமா முன்பக்கம் இணைச்சிருக்கும் டைனமோ லைட் எரியும். பைக் ஹெட் லைட் மாதிரி இது. இந்த லைட் இல்லாட்டா, நைட் நேரத்தில போலீஸ் பிடிச்சிக்கும். தாலாட்டு கேட்குதம்மா படத்தில பிரபும், கவுண்டமணியும் சைக்கிள்ல போவாங்களே அந்த சீன் மாதிரி நடக்கும். காலேஜ் பஸ்ட் இயர் படிச்சப்ப எனக்கும் அந்த அனுபவம் உண்டு.


இப்பிடி நிறைய பேரோட அனுபவங்கள தனக்குள்ள புதைச்சி வச்சி சுத்திகிட்டு இருக்கிற சைக்கிள், இப்பலாம் எக்சர்சைஸ் இன்ஸ்ட்ரூமென்டா போச்சி. பாண்டிச்சேரியில இருக்கிற வரைக்கும் காலங்காத்தால சைக்கிள எடுத்துகிட்டு சில கிலோ மீட்டர் ஓட்டுறது வழக்கமா இருந்திச்சி. இப்போ... ஹும்..


நெல்லை ரவீந்திரன்

Monday, 20 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -25

இந்தியாவின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கான முயற்சியும் இரண்டே ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தாலும், 40 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆதிக்கத்தின் முடிவுரை துவங்கி வைக்கப்பட்டது. பிரதமர் சந்திரசேகர் அரசு கவிழ்ந்து 1991ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் காஷ்மீர், பஞ்சாபில் 19 தொகுதிகள் தவிர்த்து நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவித்தார்கள். 

திமுக ஆட்சி கலைக்கப் பட்டதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தது. ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எம்ஜிஆரின் கூட்டணி பார்முலாப்படி, சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு, நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு என ஒதுக்கப்பட்டது. இதனால், 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் அதிமுக களமிறங்கியது. 

இதுதவிர, பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கின. அத்வானியின் ரத யாத்திரையை தொடர்ந்து ராமர் கோவிலை தேர்தல் கோஷத்தில் முன் வைத்தது பாஜக. 1980 தேர்தல் போலவே, காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்ற கோஷத்தை எழுப்பியது. 1991 மே 20ம் தேதியன்று 211 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. 

இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தமிழகத்தில் மே 21ம் தேதியன்று தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என உயிரிழந்தது, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரம் வெடித்தது. திமுகவுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடியது. வெளி மாநிலங்களில் தமிழர்களை விரோதமாக பார்க்க, மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.





ஒத்தி வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு ஜூன் மாதத்தில் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் 1991 ஜூன் மாதத்தில் தான் இரண்டு தேர்தல்களும் நடைபெற்றன. ராஜீவ் கொலையால் நாடே உறைந்திருந்ததால் வாக்குச் சாவடிக்கு வர மக்கள் அச்சப்பட்டனர். இதனால், அதுவரை இல்லாத அளவில் 53% வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக வெளியாகின.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

Friday, 17 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -24

1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதன்முறையாக அமைந்த சிறுபான்மை அரசு, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே நாட்களை கடத்தியது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை விபி சிங் அறிமுகம் செய்தபோது, ஆட்சி நாற்காலியின் முதலாவது கால் ஆடத் தொடங்கியது. உயர் வகுப்பினர் அதிகமாக இருக்கும் வட மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்தது.



மற்றொருபுறம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை ஆரம்பித்தார், பாஜக தலைவர் அத்வானி. இதற்கிடையே, ஜனதா தளத்துக்குள்ளேயே தலைவர்களிடையே வேறுபாடு ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், பீகாருக்குள் ரத யாத்திரையை நுழைய விடாமல், அத்வானியை கைது செய்தார், அம்மாநில முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ். சமஸ்திபூரில் 1990 அக்டோப் 23ம் தேதி நடந்த இந்த கைதைத் தொடர்ந்து, விபி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது, பாஜக. 


இதனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைமைக்கு ஆளானது, விபிசிங் அரசு. பதவியேற்ற ஓராண்டுக்குள் நவம்பர் 7ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சியை பறி கொடுத்தது, இந்தியாவின் முதலாவது சிறுபான்மை கூட்டணி அரசு. ஏற்கனவே உரசிக் கொண்டிருந்த சந்திரசேகர், 64 எம்பிக்களுடன் ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி சமாஜ்வாடி ஜனதா என்ற கட்சியை தொடங்கினார்.

இவரது கட்சி ஆட்சியமைக்க, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது, ராஜீவின் காங்கிரஸ் கட்சி. தேவிலால் துணை பிரதமராகவே நீடித்தார். 1979ல் சரண்சிங் பிரதமரானது போலவே, பத்து ஆண்டுகள் கழித்து அதே காட்சிகள் அரங்கேறின. கதாபாத்திரங்கள் மட்டும் மாற்றம். அன்று இந்திரா, இப்போது அவது மகன் ராஜீவ். அப்போது சரண்சிங் இப்போது அவரது சீடர் சந்திரசேகர். அப்போது மொரார்ஜி பதவியிழந்து அரசியல் ஓய்வு பெற்றார். இப்போது அந்த இடத்தில் விபி சிங்.



சரண்சிங் அரசு போலவே ஆறே மாதத்தில் சந்திரசேகர் அரசும் ஆறே மாதத்தில் கவிழ்ந்தது. ராஜீவை உளவு பார்த்ததாக கூறி ஆதரவை வாபஸ் பெற்றது, காங்கிரஸ். இதனால், 1991 மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார், சநதிரசேகர். ஒன்றரை ஆண்டுகளிலேயே அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. 1991 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. 'காங்கிரசால் மட்டுமே ஐந்தாண்டு நிலையான ஆட்சியை தர முடியும்' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

இதற்கிடையே பதவியில் இருந்த ஆறு மாதத்துக்குள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்திருந்தது, சந்திரசேகர் அரசு. ஜெயலலிதா கோரிக்கையை ராஜீவின் பரிந்துரையின் பேரில் சந்திரசேகர் நிறைவேற்ற, அதற்கு ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன். இதனால் 1991 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. தமிழக தேர்தல் களத்தில் நடந்த அந்த பயங்கரம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday, 15 May 2019

நாடாளுமன்ற தேர்தல் 23

ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி சந்தித்த நாடாளுமன்ற தேர்தல், 1989 நவம்பரில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ராஜீவின் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. 1984 தேர்தலில் 400க்கு மேல் வென்ற காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 195 இடங்களே கிடைத்தது. தனது சொந்த செல்வாக்கில் சந்தித்த ஒரே தேர்தலில், ராஜீவ் தோல்வியடைந்தார் என்ற வரலாறை, இந்திய தேர்தல் களம் தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை பெற்ற கட்சி காங்கிரஸ்தான். தமிழகம், ஆந்திரா என தென் மாநிலங்கள், வழக்கம்போல காங்கிரசுக்கு கை கொடுத்திருந்தன. ஆனால்,  ஆட்சியமைக்க 272 பேர் தேவை.

மறுபுறம் ராஜீவுக்கு எதிராக அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதாதளம் 142 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வென்றது. அந்த கூட்டணியின் முக்கிய பங்காளியான தெலுங்கு தேசம் 2 இடத்தில்தான் வென்றது. திமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்த போதிலும், 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ஜெயலலிதா தலைமையில் ஒன்று சேர்ந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வென்றது. திமுக அணியில் நாகை தொகுதியில் வலது கம்யூனிஸ்ட் மட்டும் வென்றது.

கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் 89 இடங்களை பிடித்தது. இது தவிர மார்க்சிஸ்ட் 34 உட்பட இடதுசாரி கட்சிகளும் கணிசமான இடங்களை பிடித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய முன்னணி கூட்டணியின் தலைவரான விபி சிங்கை பிரதமராக தேர்வு செய்தன. தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்தது. சுதந்திர இந்தியாவில் முதலாவது சிறுபான்மை அரசு இதுதான். பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்த அரசும் இதுதான்.



150க்கு சற்று அதிகமான எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த  விபி சிங் அரசுக்கு பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தபடி ஆதரவை அளித்தன. அந்த வகையில் பாஜக மற்றும் கம்யூனிஸ்டுகளை ஒரே புள்ளியில் இணைத்த ஒரே அரசும் விபி சிங் அரசுதான். தேசிய முன்னணியில் இருந்த எல்லா கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளித்தார், விபி சிங். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க துணை பிரதமர் பதவி, ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான தேவிலாலுக்கு கொடுக்கப்பட்டது.



ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மாநிலங்களவை திமுக உறுப்பினராக இருந்த முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கினார். அவர்தான் திமுக சார்பாக பதவியேற்ற முதலாவது மத்திய அமைச்சர். 1977ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றதை இங்கே நினைவில் கொள்ளலாம். 

இப்படியாக பாஜக, இடதுசாரி ஆதரவோடு 1989 டிசம்பர் 2ம் தேதி பதவியேற்ற விபி சிங் அரசு, அடுத்த ஓராண்டு கூட முழுமையாக நிலைக்கவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. அதற்குள் பல அரசியல் அதிர்ச்சிகளும் குழப்பங்களும்...

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday, 13 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -22

1984 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 3 ஆண்டுகளில் எம்ஜிஆர் மறைந்தார். இப்போது போலவே, அதிமுக பிளவுபட்டதோடு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பின்னர் கட்சி ஒன்று சேர்ந்து சின்னமும் மீட்கப்பட்டது. இப்போது போலவே அப்போதும் இந்த முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது, அன்றைய மத்திய அரசு. அதாவது ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு. இப்படியாக 1984 முதல் 1989 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் கட்சி ஒன்று சேர்ந்தது.


 (இந்த விபரங்களை எனது தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு பதிவில் பார்க்கலாம் http://thileeban81.blogspot.com/2016/04/?m=1)


அதிமுக அணிகள் இணைப்புக்கு முன்னதாக 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே நடந்த தமிழக தேர்தலில் திமுக வென்று, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல்வரானார், கருணாநிதி.


அதே நேரத்தில், 1984 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜீவ்காந்தி அரசின் மீது,  போபார்ஸ் ராணுவ பீரங்கி ஊழல் புகார் எழுந்தபோது அந்த ஆட்சியின் முடிவுரை வரையப்பட்டு, இந்தியாவின் முதலாவது பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறைக்கு முகவுரை எழுதப்பட்டது. ராஜீவ் அமைச்சரவையில் நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த விபி சிங் எழுப்பிய இந்த புகாரால் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பிரச்சார பீரங்கியாக போபார்ஸ் பேர ஊழல் மாறியது.



நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை அவையிலேயே கிழித்து எறிந்து ஆவேசமாக பேசினார், காங்கிரஸ் கூட்டணியான அதிமுகவை சேர்ந்த எம்பி ஆலடி அருணா. பாஜக, இடதுசாரிகள், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிசத் என ஏராளமான கட்சிகளும் ராஜீவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒன்று திரண்டன. இதற்கிடையே, இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதாக கூறி, ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், அங்குள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பகைத்ததால் எழுந்த கோபமும் அவர் மீது சேர்ந்தது.

ராஜீவுக்கு மாமா உறவு முறை கொண்டவரான அன்றைய பிரபல தலைவர்களில் ஒருவரான அருண் நேருவும் அவருக்கு எதிராக இருந்தார்.

இப்படியான சூழலில் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட விபி சிங், அருண் நேருவுடன் சேர்ந்து 'ஜன மோர்ச்சா' என்ற கட்சியை தொடங்கினார். பிறகு ஜனதாதளம் கட்சியுடன் இணைந்தார். மறுபுறம், ராஜீவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கினார், தெலுங்கு தேசம் தலைவர் ராமாராவ். அந்த முயற்சியின் விளைவாக தோன்றியது தேசிய முன்னணி என்ற பல கட்சி கூட்டணி.



திமுக, தெலுங்கு தேசம், அசாம் கணபரிசத், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என பல கட்சிகள் அமைத்த தேசிய முன்னணி கூட்டணியின் தலைவராக, விபி சிங் தேர்வானார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ராமாராவ். போபர்ஸ் என்ற ஒற்றைச் சொல்லே ராஜீவுக்கு எதிராக இந்திய அளவில் கட்சிகள் ஒன்று திரள வழி வகுத்தது. 1989 தேர்தலில் ராஜீவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அஜென்டாவுடன் தயாரானது, தேசிய முன்னணி கூட்டணி. அவர்கள் எதிர்பார்த்தபடியே 1989 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதன் முடிவுகள் இரு தரப்புக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தன.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Sunday, 5 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -21

 இந்திரா காந்தி கொல்லப்பட்டு சரியாக 60 நாட்களுக்குள் 1984 டிசம்பர் இறுதி வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நடந்த அந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு மாநில தொகுதிகளில் 10ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தியின் அனுதாப அலையில் மற்ற கட்சிகள் காணாமல் போயின.

ஜனசங்கத்தில் இருந்து மாறிய பிறகு, பாஜக போட்டியிட்ட அந்த முதல் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற தேசிய கட்சிகளின் நிலையும் அப்படியே. ஆனால், இந்திரா காந்தி அனுதாப அலையிலும் கூட,  ஆந்திராவில் என்டி ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களை வென்று, அகில இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்தது. 



சுதந்திர இந்தியாவில் மாநில கட்சி ஒன்று இரண்டாம் இடத்தை பிடித்தது அதுவே முதன்முறை. தற்போதைய மக்களவையில் அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 39 என நான்காவது, மூன்றாவது பெரிய கட்சிகளாக இருப்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். இதற்கு என்டிஆர் தான் முன் உதாரணம்.


இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அந்த அனுதாப அலையும் சேர்ந்தது. 'எம்ஜிஆர் ஃபார்முலா' அடிப்படையில் உருவான அதிமுக காங்கிரஸ் கூட்டணி, வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் இந்த கூட்டணி வென்றது. மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37ஐ (அதிமுக -12, காங்கிரஸ் - 25) இந்த கூட்டணி கைப்பற்றியது. இரண்டு இடங்களை மட்டுமே திமுக பிடித்தது.

நாடாளுமன்ற தேர்தலுடன், 1984 டிசம்பர் 24ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 195 இடங்களை (அதிமுக 132, காங்கிரஸ் 61, குமரிஅனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2) அதிமுக கூட்டணி வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகி ஹாட்ரிக் சாதனை படைத்தார் எம்ஜிஆர். இந்த ஹாட்ரிக் சாதனை எம்ஜிஆருக்கு முன்னும் பின்னும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. நேரடியாக தேர்தல் களம் காணாமல், அமெரிக்காவில் இருந்தபடியே இந்த சாதனையை படைத்தார், எம்ஜிஆர்.



இப்படியாக தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பல அதிசயங்களை ஏற்படுத்தியது, 1984ம் ஆண்டு தேர்தல். அப்போது, இந்தியாவின் இளம் பிரதமராக அறியப்பட்ட ராஜீவ்காந்தி, தொழில்நுட்பம் உட்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டியதோடு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதை கட்டாயமாக்கும் 'பஞ்சாயத் ராஜ்' சட்டத்தையும் கொண்டு வந்தார். 

ஆனால், 1989ல் நடந்த அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்திய ஆட்சி முறையிலும் புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை வை.ரவீந்திரன்