Friday, 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 5 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -60




"நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு முட்டாளுங்க..."

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

"சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..."

"பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..."

"ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."

இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான தத்துவ பாடல்களை தனது சொந்த குரலிலேயே பாடியவர்.


அப்படியே,

"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..."

"குங்குமப் பூவே கொஞ்சிப் புறாவே தங்கமே உன்னை கண்டதும்..."

"உனக்காக... எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக..."

"உன் திருமுகத்த ஒரு முகமா காட்டு..."

"கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே..."

இப்பிடி ஹீரோக்களைப் போலவே டூயட்டுகளிலும் கலக்கியவர். காமெடியன், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக ஜொலித்தவர் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' சந்திரபாபு. 

அவரது தந்தை அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று முழு சொத்தையும் இழந்ததால், சந்திரபாபுவின் சின்ன வயதிலேயே தூத்துக்குடியில் இருந்து சிலோனுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம். 



அங்குதான் சந்திரபாபு கல்லூரி படிப்பு வரை முடித்தார். அங்குதான் வெளிநாட்டு பாணியில் கோட், சூட், நடனம், பாடல் எல்லாமே அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தது அவரது குடும்பம். சந்திரபாபுவின் தந்தை இலங்கையில் மட்டுமல்ல, சென்னையிலும் தினமணி போன்ற பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறார்.

சென்னை வந்ததும் சினிமா சான்சுக்காக அலைந்த சந்திரபாபு 1947ல் 'தன அமராவதி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் விரக்தியில் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றத்துக்காக கைதாகி நீதிபதி முன் நின்றபோது, நீதிபதியிடமே தனது சேஷ்டை கலந்த நடிப்பை நடித்து காண்பித்திருக்கிறார். பின்னர், எச்சரிக்கப்பட்டு விடுதலையானதும், நடந்த விஷயங்களை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) 1952ல் வெளியான 'மூன்று பிள்ளைகள்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.



சேஷ்டை, அஷ்ட கோணலில் முக பாவம், பாடகர் என காமெடியன்களில் தனித்து நின்ற சந்திரபாபுவின் 'சார்லி சாப்ளின்' டைப் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர,  அடுத்த 15 ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லாருடனும் மிக முக்கியமான வேடங்களில், நாயகனுக்கு நிகராகவே நடித்தார். 

'குலேபகாவலி', 'மகாதேவி', 'புதையல்', 'பதிபக்தி', 'நாடோடி மன்னன்', 'மரகதம்', 'கவலை இல்லாத மனிதன்', 'பாதகாணிக்கை', 'கவலை இல்லாத மனிதன்' என அவர் நடித்த படங்கள் ஏராளம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான கேரக்டர். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடி சரோஜாதேவி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாடோடி மன்னன் படத்தில் கருப்பு வெள்ளை, கலர் என இரண்டு பகுதியிலும் படம் முழுவதும் வரும் நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.



சந்திரபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு நிச்சயமாக பாடல் இருக்கும். அதை அவரே பாடி நடித்திருப்பார். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மற்றும் அவர்களுக்கு முந்தைய கால பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். 

டிஎம்எஸ், ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, ஜமுனா ராணி என பிரபல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுடன் பாடியவர். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'  படத்தில் இவர் பாடிய "ஜாலி லைப்... ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்" பாடலுக்கு வாயசைத்தவர்,  சிவாஜிகணேசன்...!



1960, 70 ஸ் மட்டுமல்ல இன்றளவும் சந்திரபாபு காமெடிக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்த சந்திர பாபுவின் திருமணமே தடபுடலாகத்தான் நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற திருமண விழா அது.



"உல்லாசமாகவே... உலகத்தில் வாழவே... கல்யாணம்... ஆஹா கல்யாணம்..." என திரையில் பாடியவருக்கு நிஜத்தில் கல்யாண வாழ்வு உல்லாசமாக அமையவில்லை. அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்ததால் அந்த நபருடனேயே மனைவியை சேர்த்து வைத்து விட்டார்.

மண வாழ்வு சோகத்தை தொடர்ந்து பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார், சந்திரபாபு. சொந்த படம் தயாரித்து  நஷ்டம் அடைந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணத்தால் எதிரிகளை சம்பாதித்தார். இப்படியாக, சந்திரபாபுவின் பின்னாளைய வாழ்க்கை பரிதாபமாகி போனது. வெஸ்டர்ன் ஸ்டைலிலான அவரது நடை, பாவனை, ஸ்பூனில் சாப்பிடும் அழகு என சக நடிகர்களே வியந்து பார்த்த சந்திரபாபு பரிதாபமாக சரிந்தார்.

எம்ஜிஆருடன் தகராறு இருந்ததாக சொல்வார்கள். ஆனால், தனது சொந்த படமான 'அடிமைப் பெண்' (1969) படத்தில் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆர் தயாரித்த நாடோடி மன்னனிலும் (1958) சந்திரபாபு உண்டு.

சந்திரபாபுவின் கடைசி காலங்களில் தனது வீட்டில் இடம் கொடுத்து உதவி இருக்கிறார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 1974ல் சந்திரபாபு மரணமடைந்தபோது இறுதிச் சடங்கை நடத்த உதவியவர், சிவாஜி கணேசன்.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து, நாடு விட்டு நாடு சென்று படிப்படியாக முன்னேறி, அப்படியே படிப்படியாக சறுக்கியவர் சந்திரபாபு. அவரது பாடல்கள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கற்றுத் தரும் பாடங்கள் பல....

ஆகஸ்ட் 5. சந்திரபாபு பிறந்த நாள்...


#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 27 July 2023

அம்மா...

ஜூலை 27. 

இதே நாளின் இரவில் தான் இடியாய் வந்தது அந்த செய்தி. தொலைபேசி மட்டுமே இருந்த காலம் அது. ஊரில் இருந்து அண்ணாசாலையில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து அறையில் இருந்த என்னை வந்து சேர்ந்தது, செய்தி.

ஆறு மாதத்துக்கு முன்பு தான், ஒற்றை பையுடன், வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலை. ஆனாலும் கூட, 40 நாட்களுக்கு முன் தான் புற்று நோயுடன் போராடியவரை கலங்கிய விழிகளுடன் ஊருக்கு சென்று பார்த்து விட்டு வந்திருந்தேன். செவியில் அந்த செய்தி விழுந்ததுமே தரை நழுவிச் சென்றது போன்ற உணர்வு.

ஒருவாறாக சமாளித்து, அடுத்து என்ன செய்வது? ஊருக்கு உடனே செல்ல வேண்டுமே. பணம்...? இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் பணம் கடனாக கேட்க முடியுமா? நண்பர்களும் என்னைப்போலவே... ஆனாலும் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் அலுவலக சர்குலேஷன் கலெக்சன் பணத்தை அறை நண்பர் ஒருவர் வைத்திருந்தார். இரவு வேளையில் மேனேஜரிடம் அனுமதி பெற்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பியபோது நள்ளிரவை நெருங்கி விட்டது.

பாரீசில் திருவள்ளுவரை பிடித்து, பிறர் அறியாமல் மனதுக்குள்ளேயே அழுது, புலம்பி உறங்காத விழிகளுடன் ஊர் சென்றபோது மறுநாள் மதியத்தை கடந்து விட்டது. அங்கே எல்லாம் முடிந்து விட்டது. 

ஊரில் அண்ணன் இருந்ததால் அவனை வைத்தே எல்லா காரியமும் முடிந்து விட்டது. ஆறு மாதமாக புற்று நோயுடன்  போராடித் தோற்றுப்போன உடல் தாங்காது என்றார்கள். எப்படியோ, எனக்கு உயிரும் உடலும் தந்த அந்த தெய்வத்தின் இறுதி நாளில் அருகில் இருக்கும் கொடுப்பினை வாய்க்கவில்லை.

இருபது ஆண்டுகளில் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். இன்பம், துன்பம், அதிர்ஷ்டம் என்று பல... ஆனால், கடைசி முகம் பார்க்க முடியாத அந்த துரதிர்ஷ்டம் மட்டும் நெஞ்சு கூட்டுக்குள் துடித்துக் கொண்டே இருக்கிறது, வேறு எவருக்கும் இந்த நிலைமை வரவே வேண்டாம் என்ற முணுமுணுப்புடன்...

#நெல்லை_ரவீந்திரன் 

Monday, 24 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -59

தமிழ் சினிமாவில் இயக்குநர் டூ நடிகர்கள் பலர் உண்டு. ஆனால், இசையமைப்பாளர் டூ நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நாகர்கோவில் காரர். அடிப்படையில் சவுண்ட் என்ஜினீயர். அவருக்கு விஜய் என்ற பெயரை சூட்டியவர் இளைய தளபதி விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏசி.

2 கே சினிமாக்களில் இசையமைப்பாளராக  நுழைந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் ராப் பாடல்களுக்கு சொந்தக்காரர். 'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்', 'அங்காடி தெரு', 'உத்தம புத்திரன்', 'வேலாயுதம்' இப்படி பல படங்களில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம்.

"டைலமோ டைலமோ, டைல டைல டைலாமோ காலைலேக்கி ராத்திரி மேல் காதலே..."

"ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திச் சூடி..."

"அட்றா அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க.."

"மஸ்காரா போட்டு மயக்குறீயே..."

"என் உச்சி மண்டைல சுர்ருங்குது..."

"தப்பெல்லாம் தப்பே இல்லை..."

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..".

"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் வருமா..."

"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே..."

"கரிகாலன் கால போல கருத்திருக்கு குழலு...

"இடிச்ச பச்சரிசி புடிச்ச மா விளக்கு... "


இப்பிடியான வெரைட்டியான பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, பல பாடல்களை பாடியும் இருக்கிறார், குறிப்பா ராப் டைப் பாடல்கள்

 "ஆத்திச்சூடி.." பாடலில் அவரே ஆடிப்பாடி நடித்திருப்பார். அவர் முழுமையான நடிகராக மாறியது, 'நான்' படத்தில் தான்.  யாரையும் சோதனை செய்து பரீட்சித்து பார்க்காமல் அவரே அந்த படத்தை சொந்தமாக தயாரித்தார்.



தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் இன்றைய நடிகர்களாக இரண்டு பேரை சொல்லலாம். ஒருவர் விஜய் ஆண்டனி. அடுத்தவர் அருள்நிதி.

கதையைப் போலவே தன்னுடைய படத்தின் டைட்டில்களிலும் வித்தியாசம் காட்டி, எதிர்மறையான பெயர்களாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாதவர், விஜய் ஆண்டனி.

விஜயகாந்த் நடித்த 'தெருப்பாடகன்' பட டைட்டிலையே 'புதுப்பாடகன்' என மாற்றிய அளவுக்கு சென்டிமெண்டில் சிக்கி தவிக்கும் தமிழ் திரையுலகில், இவரது பட டைட்டில்களைப் பாருங்கள். 'எமன்', 'சைத்தான்', 'பிச்சைக்காரன்', 'கொலை', 'கொலைகாரன்'... 



விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' படம், சாமான்யன் ஒருவன் முதல்வர் ரேஞ்சுக்கு உயருவது போன்ற கதை. ஒரு மாஸ் ஹீரோ அதில்  நடித்திருந்தால் அரசியலுக்கு அச்சாரம் போடும் படமாக இருந்திருக்கும்.

'திமிரு பிடிச்சவன்' - மாநரில் போதை பொருள் கடத்தல் தாதாவை ஒழிக்கும் காவல் அதிகாரியின் கதை.

'காளி' - டிஎன்ஏ மூலமாக தனது தந்தையை கண்டு பிடிக்கும் ஒரு டாக்டரின் கதை.

அவரது படம் எல்லாமே ஒன் லைனில் மிக எளிமையாக இருந்தாலும் திரைக்கதையும் படத்தை கொண்டு செல்லும் விதமும் அருமையாக இருக்கும். விஜய் ஆண்டனி படம் என்றால் போரடிக்காமல் போகும் என்பது உறுதி.



பெரும்பாலும்  திரில்லர் கலந்த கிரைம் ஸ்டோரியாகத்தான் அவரது படம் இருக்கும். அதே நேரத்தில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனது படங்களில் மிகத் தெளிவாக பதிவு செய்பவர், விஜய் ஆண்டனி.

'பிச்சைக்காரன்' படம் அவரது திரை வாழ்வின் அச்சீவ்மெண்ட். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தை அவரது பிச்சைக்காரன் படத்தில் முன்கூட்டியே பேசியதெல்லாம் வேற லெவல்.

கிரைம் பிளஸ் திரில்லரை தாண்டி, 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் எம்.எஸ் பாஸ்கர்,  மனோபாலா ஜெகன் ஆகியோருடன் காமெடியில் கலக்கி இருப்பார். 

'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில், மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கி மறு பிறவி எடுத்து வந்துள்ள விஜய் ஆண்டனி அவரது பாணியிலேயே மேலும் பல படங்களை கொடுக்க வாழ்த்துகள்.

 கூடவே, இசையமைப்பாளராக  துள்ளல் பாடல்களும் நிறைய தர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

ஜூலை 24, அவரது பிறந்த தினம்.

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 21 July 2023

சிவாஜியை வியக்க வைத்த குரு, சிஷ்யன்

முதல் படத்திலேயே மிக நீளமான வசனங்களை பேசி பெயர் பெற்றதாலோ என்னவோ, சினிமாவில் வசனங்கள் என்றால் சிவாஜியே அழைக்கப்பட்டார். 

சிவன் துவங்கி வீரபாகு வரை கடவுள்களையும் புராணங்கள்,  வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கதாபாத்திரங்களை பார்த்தது, இவர் வடிவில்தான். 

'தெய்வமகன்', 'பாசமலர்', 'படிக்காத மேதை', 'திரிசூலம்', 'புதியபறவை' என ஏராளமான படங்களில் நடிப்புக்காகவே கொண்டாடப் படுபவர்.

நடிப்பு ஒருபுறம் என்றால் வசனம் தான் சிவாஜியின் மற்றொரு அடையாளம். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'திருவிளையாடல்', 'மனோகரோ' மாதிரியான படங்கள் எல்லாம் வேற லெவல். 

உண்மையில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் எம்ஜிஆருக்கானது. ஆனால் கடைசியில் இறப்பது போன்ற காட்சி கடடாயம் என்பதால் எம்ஜிஆர் அதில் நடிக்கவில்லை. மதுரை வீரனுக்கு பிறகு அதை கொள்கையாகவே எம்ஜிஆர் வைத்திருந்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', சிவாஜியால் வசன காவியமானது.  எம்ஜிஆர் நடித்திருந்தால் அது வேறு விதமாகி இருந்திருக்கும்.

நிற்க...


இப்படி வசனத்தாலேயே தூள் கிளப்பிய சிவாஜி, 1984ல் வெளியான 'தாவணிக் கனவுகள்' படத்தில் ஸ்கிரிப்டுக்காக தவித்திருக்கிறார். துணை இயக்குநர்களிடம் வசன பேப்பர் கேட்பாராம். ஆனால், முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எழுதி வசனத்தை மனப்பாடம் செய்வது கே.பாக்யராஜ் ஸ்டைல் கிடையாது. எல்லாமே ஷூட்டிங்கில்தான். அப்படித்தான் சிவாஜிக்கும். அதுவும் ஒன்றிரண்டு வசனங்கள் தான் இருக்கும். 



இந்த படத்தில், எக்ஸ் மிலிட்டரி மேனான சிவாஜி, சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பார். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக, வேலையில்லாத வாலிபராக சைக்கிள் கடையின் எதிர் வீட்டில் வசிப்பவராக பாக்யராஜ். இந்த படத்தில் சிவாஜியை தனக்கு இணையாக ஒரு காமெடியனாகவே மாற்றி இருப்பார், பாக்யராஜ்.

படம் சூப்பர்ஹிட். "எப்பிடிடா... இப்பிடி படம் எடுக்கிறீங்க. ஹிட் குடுக்கிறீங்க..."ன்னு தன்னோட நீண்ட வசனம் பேசிய சினிமா அனுபவத்தோடு முடிச்சிப் போட்டு ஆச்சரியப்பட்டிருக்கார், சிவாஜி.


இதுக்கு அடுத்த வருடமே 1985ல் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படம். சிஷ்யன் பாக்யராஜாவது சிவாஜிக்கு ஒன்றிரண்டு வசனம் குடுத்திருப்பார். ஆனால், 'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் கூட குருநாதர் பாரதிராஜா, சிவாஜிக்கு கொடுத்திருக்க மாட்டார். 


"சும்மா இப்பிடி அப்பிடி நடங்கண்ணே போதும். இப்பிடி பாருங்க.. இந்தப் பக்கமா போங்க்ணே.."ன்னு பெரிதாக வசனமே இல்லாமல் சிவாஜியின் உடல், முக அசைவுகளைக் கொண்டே அந்த படத்தை ஹிட்டாக்கி  இருப்பார் பாரதிராஜா.

"சிஷ்யனாவது ஏதாவது டயலாக் குடுத்தான். நீ அது கூட தரலியேப்பா..."ன்னு பாரதிராஜா கிட்ட சலிச்சிகிட்ட சிவாஜி, அந்த படம் முழுமையானதும், "அட... இது தெரியாம இத்தன வருஷமா மூச்சப் பிடிச்சி வசனம் பேசி நடிச்சிருக்கேனப்பா..."ன்னாராம்.

பாடல்களுக்காகவும் கொண்டாடப்படும் 'முதல் மரியாதை'யில், சிவாஜியின் மனைவியாக வரும் வடிவுக்கரசி முழம் முழமாக வசனம் பேசுவார். கிராமத்து சொல்வடயில் கழுவி கழுவி ஊற்றுவார். ஆனால், சிவாஜிக்கு ஒரு வார்த்தை கூட வசனம் இருக்காது...! முக பாவனை மட்டுந்தான். 

இந்த படத்தில், "சாமி எனக்கு ஒரு உண்ம தெரியணும்..." என்ற டயலாக் நல்ல பேமஸ்... ஆனால், அது சிவாஜிக்கு அல்ல... சிவாஜியை சந்திக்கும் மற்றொரு கேரக்டருக்கானது...!

சிவாஜின்னதும் அவரது வசனங்களையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த ரெண்டு படங்களும் தான் எனக்கு நினைவுக்கு வருது...

இன்று சிவாஜி கணேசன் நினைவு நாள்...

  #நெல்லை_ரவீந்திரன்

Thursday, 20 July 2023

எஸ்.ஏ.ராஜ்கண்ணு... சினிமா உலகம் மறந்து போன பிரபலம்...

 16 வயதினிலே...

தமிழ் சினிமாவை முற்றிலுமாக திருப்பிப் போட்ட படம். இயக்குநராக பாரதிராஜா, நாயகியாக ஸ்ரீதேவி என  மாஸ் அறிமுகங்கள் ஒருபுறம் இருக்க... ரஜினி, கமல், கவுண்டமணி, பாக்யராஜ், காந்திமதி என பின்னாளைய பிரபலங்கள் பலரையும் மொத்தமாக ஒரே படத்தின் மூலமாக ரசிகர்களிடம் சேர்த்த படம் அது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்  பாலசந்தருக்கு நிகராக இந்த படத்தின் அறிமுக இயக்குநரும் வருவார் என உறுதியாக சொன்னவர், அந்த படத்தின் தயாரிப்பாளர்...



கிழக்கே போகும் ரயில்...

அதே இயக்குநருக்கு அடுத்த சூப்பர் ஹிட் படம். 1980களின் நாயகன் சுதாகர், தமிழின் எவர்கிரீன் நாயகி ராதிகா என இருவரையும் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்தார், அந்த தயாரிப்பாளர்...



கன்னிப் பருவத்திலே...

படு பயங்கர காமுக வில்லனாக நடிப்பின் மறு பக்கத்தை கே.பாக்யராஜ் காண்பித்த படம். தமிழ் சினிமாவின் அம்மா நடிகை வடிவுக்கரசி, நாயகியாக திரைக்குள் அறிமுகமான படமும் இதுதான். ஹீரோ அன்றைய பிரபல நாயகன் ராஜேஷ். இந்த படத்தையும் அவர் தான் தயாரித்தார்...

இது தவிர, 'வாலிபமே வா வா' (கார்த்திக்), 'எங்க சின்ன ராசா' (பாக்யராஜ்), 'மகாநதி' (கமல்), 'பொண்ணு புடிச்சிருக்கு' (ரேவதி) என பத்துக்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' என்ற பேனரில் தயாரித்தவர்...

அப்போதெல்லாம் படம் ரீலிசுக்கு முன் மொத்த பாடல்களுமே ஆடியோ கேசட்டாக வெளியாகி விடும். வழக்கமாக, அனைத்து படங்களுக்குமே பாடல்கள் மட்டுமே வரிசையாக ஒலிப்பதிவு செய்து கேசட் வெளியிடுவார்கள்.



ஆனால் இவர் தயாரிப்பு படங்களுக்கான கேசட்டுகள் மட்டும் வித்தியாசமாக, பெண் குரல் ஒன்று, பாடல்களை தொகுத்து வழங்கும். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் படத்தின் இயக்குநர் ஹீரோ தயாரிப்பாளர் பெயர்களுடன் படத்தின் பெயரை சொல்லி விட்டு பாடலை அறிமுகம் செய்யும் அந்த குரல். 'பொண்ணு ஊருக்கு புதுசு',  'எங்க சின்ன ராசா' பட பாடல் கேசட் வரை கேட்ட அந்த குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது...

அன்றைய நாளில் மிகச் சாதாரணமானவர்களாக இருந்து இன்று பிரபலங்களாக இருக்கும் பலர், இவரிடம் வாய்ப்பு கேட்பதற்காக காத்துக் கிடந்த காலம் உண்டு.



அவர்தான் 1980ஸ்களின் பிரபல தயாரிப்பாளர் 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' எஸ்.ஏ.ராஜ்கண்ணு.

சில நாட்களுக்கு முன், சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் அவர் மரணமடைந்து விட்டார். சினிமா துறையில் இருந்து யாருமே எட்டிப் பார்க்கவில்லை. சமூகவலை தளங்களில் இரங்கல் பதிவுகளோடு சரி... 

இதைப் பார்த்தால், ஓய்வு பெற்ற தலைமை செயலாளரும் எழுத்தாளருமான இறையன்பு எழுதிய 'நரிப்பல்' என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது...

இதுதான் இன்றைய உலகம்... அதுவும் இது கனவு தொழில் உலகம்... கேட்கவா வேண்டும்...?

#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 15 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -58

"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி...", "கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ஆனா கை விட்டிருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்..." - பாட்ஷா

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும தப்பு இல்ல...", "அவன நிறுத்த சொல்லு நின் நிறுத்துறேன்...", "தாத்தா... நீங்க நல்லவரா? கெட்டவரா? தெரியலியேப்பா..." -நாயகன்

"கோபமோ, ஆத்திரமோ, பத்து வரைக்கும் எண்ணு. அப்புறமா முடிவு பண்ணு..." -காதலன்

"நான் தனி ஆள் இல்ல...", "இது ஒரு கருப்பு சரித்திரம்..." -சிட்டிசன்

"பயப்படுறீயா குமாரு..." -புதுப்பேட்டை

இப்படி தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற வசனங்களை வடித்தவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

தமிழ் இலக்கிய உலகின் பொக்கிஷம். சுமார் 200 நாவல்கள், 100 சிறுகதைகள் வாரி வழங்கிய அவரது

உடையார், கங்கை கொண்ட சோழன் என தஞ்சை பெருவுடையார் கோயிலையும் ராஜராஜ சோழனையும் அவனது மைந்தன் ராஜேந்திர சோழனையும் பேசிய நாவல்களாகட்டும்...

இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அம்மையப்பன் தெரு, கடரோர குருவிகள், கல்யாண முருங்கை, மீட்டாத வீணை என சமூகம் பற்றி பேசும் புத்தகங்களாகட்டும்...

மகாபாரதம், பிருந்தாவனம் (ராகவேந்திரர்), பேய் கரும்பு (பட்டினத்தார்), காதல் பெருமான் (அருணகிரி நாதர்) சிம்மாசனம் (குமரகுருபர்) என பக்தி சுவை ஊட்டும் வரிசைகளாகட்டும்...

அவரது புத்தகங்களின் ஒவ்வொரு வரிகளுமே வாழ்வியலுக்கான அறிவுரை கூறுபவை. அதனாலேயே, அவர் எழுத்துச் சித்தரானார். 

'விசிறி சாமியார்' எனப்படும் யோகி ராம்சுரத் குமாரின் சீடரான இவரும் தவ யோகியே.

ஆரம்ப கால ஆனந்த விகடன், குமுதம், கல்கி என வார பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகளும் கதைகளும் நாவல்களும் பெரும்பாலும் பெண்மையை முன்னிலைப் படுத்துபவையே.

ஒரு மனிதரால் அதிகபட்சம் பத்து பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக எழுத முடியும். அதன் பிறகு வாசகர்களை கவர முடியாது அல்லது வேறு வீச்சுக்கு மாறி விடும். ஆனால், 40 ஆண்டுக்கு மேல் தொய்வே இல்லாமல் எழுதியவர். 

1970களில் வெளியான 'மவுனமே காதலாக...' அவரது முதல் எழுத்து படைப்பு. அவரே இன்றைய டிரெண்டுக்கு புதுப்பேட்டை திரைப்படத்துக்கும் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்...!

அவரது எழுத்துகளை பற்றி அறியாதவர்களுக்கு அவரை வேறு வகையில் அறிமுகம் செய்ய முடியும்.

ஜனரஞ்சக துறையான சினிமாவிலும் கால் பதித்து சுமார் 25 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் பாலகுமாரன். 'குணா', 'நாயகன்', 'பாட்ஷா', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'சிட்டிசன்', 'முகவரி', 'புதுப்பேட்டை', 'மன்மதன்'.... இப்படி அந்த படங்களின் வரிசை மிக நீளம்.

கே.பாலசந்தரிடம் 'புன்னகை மன்னன்', 'சிந்து பைரவி' படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்துக்கு இவர்தான் இயக்குநர்...!



சித்தர்களுக்கு ஒருபோதும் இறப்பு இல்லை...


#நெல்லை_ரவீந்திரன்

Monday, 10 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -57

சிலருக்கு நிறைய துறைகளில் நிறைய விஷயங்கள் தெரியும். அதன் அடி நாதம் வரை அலசி பார்க்கவும் முடியும். ஆனால் அவர்களால் தனக்கு தெரிந்ததை மிக எளிமையாக மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியுமா என்றால் சந்தேகம். ஆனால், எழுத்தாளர் சுஜாதா விதிவிலக்கானவர்.



உண்மையான பெயர் ரங்கராஜன். சென்னை எம்ஐடி-யில் படித்த என்ஜினீயர். முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நண்பர். அறிவியல், வானியல், இயற்பியல், எழுத்து, தமிழ் இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் கரை கண்டவர். மனைவி பெயரில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்து விட்டது. 100க்கும் அதிகமான நாவல்கள், 250க்கும் அதிகமான சிறுகதைகள் ஏராளமான கட்டுரைகள் என எழுதியவர்.

ஆனந்த விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் எல்லாம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தவை. பின்னாளில் நாவலாகவும் திரைப்படமாகவும் மாறியவை. கணையாழி புத்தகத்தின் கடைசி பக்க கட்டுரைகளே,  தனி தொகுப்பாக ரசனைக்குரியது.



சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்தால் எந்த அளவுக்கு அவர் எதிர் காலத்தை துல்லியமாக கணித்திருக்கிறார் என்பது புரியும். அறிவியல் புனைவு கதைகளுக்கு அவருக்கு நிகர் அவர்தான். கம்ப்யூட்டர் பற்றி பரவலாக அறியாத காலத்திலேயே கம்ப்யூட்டர் என்னென்ன செய்யும் என சொன்னவர். இன்றைய மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் ரோபோக்களையும் அந்த நாளின் அவரது கதைகளில் பார்க்கலாம். உலகை அச்சுறுத்தும் கிருமிகளையும் கூறியவர்.

அறிவியல் கதை, பிரபஞ்சம் பற்றிய கதை, அரசியல் கதை, துப்பறியும் கதை, கூடவே கிராமத்து மனிதர்களை பற்றிய கதை என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடியவர். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் உதாரணம். எதை தொட்டாலும் அதை விரிவாக அலசி எளிதாக விளக்கி சொல்பவர். 

கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்தில் தமிழே கிடையாது, ஆங்கிலம் தான். ஆனால் தமிழில் எப்படி எழுதலாம் என்பதை சொல்லி அதற்கு கோட் உருவாக்குவது வரை ஆலோசனை சொன்னவர். இப்போது தமிழிலேயே செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் எழுதுவதற்கு நன்றி சொல்ல வேண்டியவர்களில் அவரும் ஒருவர்.



கமல் நடித்த பழைய 'விக்ரம்' படம் இவரது கதைதான். அதில் இவர் சொன்ன ஏவுகணை தான் இன்றைய நவீன ஏவுகணையான டொமோஹாக்.

எழுத்தாளர் சுஜாதாவை கதாசிரியர் சுஜாதாவாக சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாலச்சந்தர். ரஜினிக்கு 'காயத்ரி', 'ப்ரியா', 'நினைத்தாலே இனிக்கும்', 'சிவாஜி' படங்கள். கமலுக்கு 'விக்ரம்', 'இந்தியன்' படங்கள். இயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ரோஜா', 'உயிரே' படங்கள். இயக்குநர் சங்கரின் 'எந்திரன்', 'முதல்வன்', 'அன்னியன்' படங்கள். இப்படி தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்கள் சுஜாதாவின் கைவண்ணம் தான். இவரது வசனங்கள் தான்.



என்ஜினீயர் ரங்கராஜனாக சுஜாதா படைத்த முக்கிய சாதனை இன்று உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் வரை பயன்படுத்தும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். ஈவிஎம் மெஷின்களை முதன் முதலில் வடிவமைத்து அதை அறிமுகப்படுத்திய குழுவில் இவர் முதன்மையானவர்.

என்ஜினீயராக, எழுத்தாளராக, சினிமா கதாசிரியராக தனக்கு தெரிந்த அனைத்தையும் பாமரருக்கு புரியும்படி சொல்லத் தெரிந்த திறமைசாலியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 5 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -56

சாகர சங்கமம் @ சலங்கை ஒலி, சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து, சங்கரா பரணம்... இந்த மூன்று படங்கள் போதும், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பெயரை காலத்துக்கும் திரையுலகம் பேசிக் கொண்டிருப்பதற்கு.



நடனம் மீது பெரு விருப்பம் கொண்டு வெறியாய் சுற்றும் ஒரு கலைஞனுக்கு உதவும் பெண். அவளுடனான காதல், அந்த காதலில் தோல்வி, நடனத்தை வணிகமாக்கிய சமூகத்தின் மீது வெறுப்பு, இறுதியில் போதையில் மூழ்கி வாழ்வை முடிக்கும் கதைதான் 'சலங்கை ஒலி'.



 1980களின் காதல் இளவரசனையும் காதல் இளவரசி ஜெயப்பிரதாவையும் அப்படி காட்டி இருப்பார் இயக்குநர் கே.விஸ்வநாத். "இது மவுனமான நேரம்..." பாடலே போதும்...

படத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு காட்சிகளில் வலம் வரும் "ஓம் நமச்சிவாயா..." பாடலும் அதில் வரும் "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்..." என தொடங்கி வரும் வரிகளும் சலங்கை ஒலியோடு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.



திருமணமாகிப் போன தனது காதலி, வயதுக்கு வந்த மகளுடன் இருப்பதை  அறிந்து காண செல்லும் காதலன்... அவன் வரும் போது விதவை கோலத்தில் தன்னை பார்த்தால் வேதனைப் படுவானே என நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வரும் காதலி... அப்படி வரும் போது மழையில் அவளது குங்குமம் கரைய அதை கையால் மறைத்து தடுக்கும் காதலன்... 


"தகிட தகிட தகிட தகிட தம் தானா..." இது பாடல் அல்ல... காதல் காவியம்.


1980களில் விதவைக்கு பொட்டு வைப்பது, மறுமணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அதிலும் சினிமாக்களில் அது போன்ற காட்சிகளை எல்லாம் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்று கமர்சியலான வெற்றியை தரும் என்பதெல்லாம் நிச்சயம் கிடையாது. நாயகன் நாயகியை மணம் ஆனவர்களாக காண்பித்தாலே ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தவர், இயக்குநர் கே விஸ்வநாத்



அதற்கு சாட்சி சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து. சலங்கை ஒலியில் சிவன் பாடல் பிரபலம் என்றால் இதில் ராமன் பாடலும் சீதா கல்யாணமும். மன வளர்ச்சி குறைந்த ஆட்டிசம் குறைபாடு கொண்ட நாயகன். ஒரு மகனுடன் வாழும் விதவைப் பெண், நாயகி. கிராமம், வீடு என சுற்றிலும் கொடுமைகளை அனுபவிக்கும் அந்த விதவைக்கு கோயிலில் சீதா கல்யாண வைபவம் நடக்கும் போது தாலியை கட்டி விடுவான் நாயகன். கிராமத்தாரின் எதிர்ப்புகள் சூழ, பல போராட்டங்களுக்கிடையே  நாயகனை குணமாக்கி விட்டு ஒரு குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டு அந்த பெண் இறந்து போவார். இதுதான் கதை. 

முழுவதும் பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் முதல் காட்சியே மனைவி நினைவாக துளசியை வைத்து பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நாயகன், கடந்த கால நினைவுகளில் மூழ்குவதாகத்தான் படம் தொடங்கும். 



முந்தைய படத்தில் சிறந்த நடன கலைஞராகவும் இந்த படத்தில் சரியாக குதிக்கக் கூட தெரியாத ஆட்டிசம் நபராகவும் கமலை வாழ வைத்திருப்பார், கே.விஸ்வநாத். பிரபல நாயகியாக இருந்தாலும் துணிச்சலாக இளம் விதவையாக, ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்த ராதிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

கே.விஸ்வநாத்தின் இந்த இரண்டு படங்களுமே ஓராண்டுக்கு மேல் தெலுங்கில் ஓடி வசூலை குவித்து அப்படியே தமிழ் பேசியவை. இரண்டுக்குமே எஸ்.பி.பி. கூடுதல் பலம். 'சிப்பிக்குள் முத்து'எல்லா பாடல்களுமே அவர்தான். தமிழில் அந்த படத்தில் கமலுக்கு டப்பிங்கும் எஸ்பிபி தான்.

இசைப் படைப்பான 'சங்கரா பரணம்' எல்லாம் விஸ்வநாத்தை போலவே சாகாவரம் படைத்தவை. அந்த படத்தில் யாருமே அதுவரை அறிந்திராத சோமயாஜுலுவை (இது நம்ம ஆளு பாக்யராஜின் மாமனார்) பட்டை தீட்டியிருப்பார். 



இயக்குநரை கடந்து நடிகராக கே.விஸ்வநாத்தை தனுஷின் 'யாரடி நீ மோகினி' தான் நினைவுக்கு வரும். அதற்கு முன் 'காக்கைச் சிறகினிலே...' படத்தில் பார்த்திபனின் (வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி வருமே) வளர்ப்பு தந்தையாக படம் முழுதும் வாழ்ந்திருப்பார், கே.விஸ்வநாத். நடித்தது மாதிரியே தெரியாது.

1960களிலேயே சினிமாவுக்கு வந்தாலும் தாமதமாகவே ஜொலித்த கே.விஸ்வநாத் வெற்றி இயக்குநராக மட்டுமல்ல... அப்பா  வேடங்களுக்கு ஏற்ற சிறந்த குணசித்திர நடிகராகவும் கொண்டாடப்பட வேண்டியவர்.

பத்மஸ்ரீ தாதா சாகேப் பால்கே விருது வரை வென்ற அவர் 90 வயதை கடந்து நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார். 

அதுவும் அவரது 'சங்கரா பரணம்' படம் வெளியான நாளின் நள்ளிரவில் தான் மறைந்திருக்கிறார். இசை உள்ளளவும் சங்கராபரணமும், சங்கராபரணத்துடன் விஸ்வநாத் பெயரும் வாழ்வாங்கு வாழும்.

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 30 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -55

 "எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்... அது எதற்கோ..."

"மேகமே... மேகமே..." என காற்றில் கலந்த கலைவாணி...


19 மொழிகளில் பத்தாயிரம் பாடல்கள். ஆயிரத்துக்கும் அதிகமான தனி ஆல்பம் பாடல்கள். குஜராத் (1975), ஒடிஷா (1984), ஆந்திரா (1979), தமிழ்நாடு (1979) என நான்கு மாநிலங்களில் அரசு விருது. பத்மபூஷண். இப்படி சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைவாணி என்கிற வாணி ஜெயராம், வேலூரில் சாஸ்த்ரீய இசை குடும்பத்தில் பிறந்து சென்னையில் படித்து மும்பையில் பாடகி ஆனவர்.



கல்லூரி முடித்து பாரத ஸ்டேட் வங்கி பணியில் சேர்ந்து மணமாகி ஐதராபாத்தில் இருந்தபோது அவரது இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம், மும்பைக்கு குடி பெயர்ந்து  இந்துஸ்தானி படிக்க வைத்து இசை பயணத்துக்கு வழி காட்டினார். தனது கணவரின் பெயரையும் சேர்த்து கலைவாணி,  வாணி ஜெயராம் ஆனார்.



1969ல் இசைக் கச்சேரியில் பாடியபோது இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை கவனித்து தனது மராத்தி மொழி பாடல் ஆல்பத்தில் பாட வைத்தார். அப்படியே இந்தி படத்திலும் பின்னணி பாடகியாக்கினார். 1971ல் வெளியான அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் நடித்த 'GUDDY' தான் அவரது முதல் படம். வாணி ஜெயராம் பாடிய முதல் திரைப்பாடலே ("போலே ரே பாபிஹரா...") அந்த ஆண்டின் சிறந்த பாடல். இந்தியில் ஆர்.டி.பர்மன் பண்டிட் ரவி சங்கர் போன்ற பிரபலங்களின் இசையில் பாடியவர் அப்படியே தெலுங்கில் அடியெடுத்து வைத்தார்.

தெலுங்கில் 1973ல் வெளியான 'அபிமான வந்துலு' படத்தில் முதல் பாடல். தெலுங்கில் இயக்குநர் கே.விஸ்வநாத் மற்றும் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் கூட்டணியில் இவரது பாடல்கள் ஹிட் ரகம். அதற்கு 'சங்கராபரணம்' படத்தின் எவர் கிரீன் பாடலான "மானஸ ஸங்கரரே..." உதாரணம்.



அதன்பிறகு, தமிழில் என்ட்ரி கொடுத்த வாணி ஜெயராமின் முதல் பாடல் கண்ணதாசன் எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தின் "ஓரிடம் உன்னிடம்... என் தேவையை கேட்பது யாரிடம்..." பாடல். 

ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகம் செய்தது,  1974ல் வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தின் "மல்லிகை  என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா..." பாடல் தான். அந்த ஆண்டு 'எங்கம்மா சபதம்' படத்தில் பாடியதை தொடர்ந்து அதன் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கன்னடத்திலும் வாணி ஜெயராமை அறிமுகம் செய்தார்.

1970களின் மத்தியில் துவக்கி 1980களின் பிற்பகுதி வரை தமிழில் சுசீலா, ஜானகி குரல்களுக்கு நிகராக  இவர் குரலும் ஒலித்தது. பலரும் இவர் பாடிய பாடல்களை ஜானகி என்றே  நினைத்திருப்பார்கள். வாணியை பெண் எஸ்பிபி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குரலில் லாவகம், உச்சரிப்பு, சுத்தம் இருக்கும். 80களின் வானொலி ரசிகர்களால் இவரது பாடல்களை மறக்கவே முடியாது.


"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா...", 

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..."

"இன்று சொர்கத்தின் திறப்பு விழா.. புது சோலைக்கு வசந்த விழா..."

""பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா..."

"மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும்...", 

"நான் ஒன்ன நெனைச்சேன் நீ என்ன நெனைச்சேன் தன்னாலே ரெண்டு ஒண்ணாச்சி...",  

"மழைக்கால மேகம் ஒன்று.."

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." 

"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே..."

"மூங்கில் இலை காடுகளே முத்து மணி மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்.."

"சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்கார பூங்குயிலே..."


எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, கமல், ரஜினி, பாக்யராஜ், ராம்கி படங்கள் வரை பாடியிருக்கும் அவரது பாடல்களை பட்டி(யலு)க்குள் அடைக்க முடியாது. 

1990களின் துவக்கத்திலேயே பாடுவதை குறைத்தாலும் முருகன், அம்மன், கண்ணன் பக்தி பாடல்கள் பஜனைகள், கீதா கோவிந்தம், இசை ஆல்பங்கள் அதிகம் பாடி இருக்கிறார். 

1980களில்  ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பாடியவர்.

மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மார்வாரி, பெங்காளி, ஒரியா, போஜ்புரி, ராஜஸ்தானி, உருது, பஞ்சாபி, துளு, படகா, சமஸ்கிருதம், ஹர்யான்வி, ஆங்கிலம் என பாடியவர். 

"எல்லா மொழிகளிலும் அதன் த்வனி தவறாமல் உச்சரிக்கும் வாணி ஒரு ஆயுள் கால பாடகி..." இது வாணி ஜெயராம் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள். 

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்..." என பாடியவர் உயரிய பத்ம பூஷண் விருது அறிவிப்பை கேட்டும் அதை கைகளில் பெறாமலேயே தைப்பூச நாளில் முருகனிடம் சென்று விட்டார்.

#நெல்லை_ரவீந்திரன்