Monday, 13 July 2026

காலமெல்லாம் காதல் வாழ்க

 தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடக்கையில் தவிக்குது மனசு தவிக்குது...

டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ, உன்னால வாழுறேன்...

இது மாதிரியான பாட்டுகளும் அவை ஒலித்த சூழ்நிலைகளும் மனதில் அலை மோதி, நினைவுகளில் நீர் தெளித்து எழுப்பி விட்டன, அந்த இரண்டு பெண்களின் கிசுகிசுப்பு உரையாடல்.

பெரிய தொட்டியில் நிரப்பி இருக்கும் தண்ணீர் அல்லது கிணற்று தண்ணீர் எடுக்க காலை, மாலை இரு வேளையும் செல்வது பெண்கள் வழக்கம், குறிப்பாக இளங்குமரிகள். காலையில் ஊர் விழிக்க நேரமாகும், மாலைப்பொழுது தான் ஆண்டாண்டு காலமாகவே காதலுக்கே உண்டான பொழுது. கடை வீதிகளும் சுறுசுறுப்பாகி, மங்கைகளுக்கு வலை வீசும் பாடல்களும் ஒலிபரப்பாகும்.

90களில் சினிமா பாடல்களை ஆடிேயோ கேசட்டுகளில் பதிவு செய்து தரும் ரிக்கார்டிங் சென்டர்கள் அதிகம் உண்டு. அங்கு பாடல்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்து வந்து, டெய்லர் கடைகளில் தொடங்கி, பலவிதமான கடைகளிலும் பலவிதமான பாடல்கள் வாயிலாக யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு வலை வீசிக்கொண்டு இருப்பார். 

சம்பந்தப்பட்ட இருவருக்கும் தான் அது புரியும். பரவசப்படுத்தும். சில தருணங்களில் நேயர் விருப்பம் போல காதலர் விருப்பமாக பாடல் ஒலிக்கும். டேப் ரிகார்டரில் ரீவைண்ட் பட்டனும் ஆடியோ கேசட்டின் நாடாவும் தேயும் அளவுக்கு ஒலித்த பாடல்களும் உண்டு...

"சுமதி நாமஸ்தயே...". என்ற சிங்கார வேலன் பாடல்

"தேவி ஸ்ரீதேவி..." என்ற வாழ்வே மாயம் பாடல்கள் எல்லாம் துணிந்த காதலர்களையும்

'தண்ணி குடம் எடுத்து...' மாதிரியான  பாடல்கள் எல்லாம் மறைமுக குறிப்பால் உணர்த்தும் காதலர்களையும் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவை.

‘சுவரில்லாத சித்திரம்’ படத்தில் சுதாகருக்கு இடம் தரும் டெய்லர் கவுண்டமணி போலவும் சில பரோபகாரிகளும் உண்டு. சுதாகரிடம் தோற்று போகும் பாக்யராஜ்களும் உண்டு. சில காதலர்களை பார்க்கும்போது, ‘பல மணி நேரமா எப்பிடி இப்பிடி பார்த்துக்கொண்டே இருக்காங்க..? என்னதான் பேசிகிட்டு இருப்பாங்க..?’ இப்படி எல்லாம் மனதில் தோன்றும்.

ஊரில் பணி புரிந்த ஒரு இடத்தில், கேஷியர் அண்ணனை தேடி, சரியாக ஐந்து மணிக்கு ஒரு பெண் வந்து விடுவார். அப்புறம்  ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவர்களை பார்க்க முடியாது. சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது, பக்கத்தில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு தெருவில், படங்களில் டி.ராஜேந்தரின் காதல் போல ‘ரொமான்ஸ்’ செய்து கொண்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் கடை வாசலிலேயே லவ்விய அவர்கள், திடீரென ஒருநாள் திருமணம் செய்தனர்.

இந்த திருமணங்களை ஊரில், ‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டான்’, 'கூட்டிட்டு ஓடிட்டாங்க...' என்பார்கள். ஒரு சில காதலில், கத்தரிக்காய் முற்றி கடைத்தெரு  வரும் முன், இரு வீட்டார் பேசி, முறைப்படி முடித்து வைத்து விடுவார்கள். அவர்கள் ‘மனதில் நின்ற காதலியே, மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்...’ என பாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்த காதல்கள் எல்லாம் எங்கு முளை விடும், துளிர் விடும் என்பதெல்லாம் நீண்ட கால கேள்விகள். சனி, ஞாயிறு நாட்களில் தியேட்டர்களிலும் ரொமான்ஸ் நடக்கும். சீட் நிறைந்து, எக்ஸ்ட்ரா சேர் போட்டு, நின்று கொண்டு படம் பார்க்கும் அளவுக்கு கூட்டம் இருந்தாலும், கண்களாலே கைது செய்து கொண்டு இருப்பார்கள்.  

பாபநாசம் மலையில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்காக நாட்கணக்கில் மக்கள் போய் தங்குவார்கள். அங்கும் கூட, தாமிரபரணி நதிக்கரையில் புதிய காதலுக்கு நாற்றாங்கால் பரப்புவதோடு, காதல் திருமணத்துக்கான அச்சாரமும் நடைபெறும், மறு மாதமே ஆவணி, கூடுதல் வசதி.

பின்னாளில், ஒரு பெண் மையல் கொண்டதை கூட, அறியாமல் இருந்திருக்கிறேன். அவருடன் இருந்த சில பெண்கள் சொன்ன பிறகுதான், அதை அறிந்தேன். எப்படி எங்கு காதல் துளிரும்? காதல் பார்வை எது? இப்படி காதலின் அடிப்படை விஷயங்கள் கூட புரியாத ஜடமாக இருந்திருக்கிறேன். ஆனால், காதலர்களை சரியாக இனம் காண தெரிந்தது எப்படி என்று தான் இன்று வரை விளங்கவில்லை.

ஷாப்பிங் மாலில் பில்லிங்கில் நிறைய பேர் வரிசையில் நிற்க, கடையின் மிக பரபரப்பான வேளையில், அந்த இரு பெண்களின் கிசுகிசுப்பும் இப்படித்தான் காதில் விழுந்தது. 

‘எனக்குல்லாம் ஆளு இருக்குப்பா?’ அந்த பெண் சொல்ல, இந்த பெண், அவனா... இவனா... அந்த கருப்பனா... இப்படி விசாரிக்க... ‘இல்லை.. இல்லை.. ச்சி ச்சி அவன்லாம் இல்ல..’ என சொல்லி விட்டு ‘அது சஸ்பென்ஸ்...’ என்றார். 

பில் போட்டுக்கொண்டே அந்த பெண்கள் பேசிய கிசுகிசுப்பும், காதல் நினைவில் அவர்களின் முக பூரிப்பும் எனக்கு டெய்லர், கேஷியர் அண்ணன், சொரிமுத்து அய்யன் கோவில், தியேட்டர் என எதையெல்லாமோ நினைவூட்டியது. நண்பகலின் பசி வேளையில் காதலை ருசித்துக் கொண்டிருந்தேன்.

குறுந்தொகையின் ‘செம்புலப் பெயல் நீர் போல...’ என்ற இலக்கிய காலம் தொடங்கி, இப்போதும் எப்போதும் காதலுக்கு காலம், நேரம் ஏது? அழிவும் ஏது?

#நெல்லை_ரவீந்திரன்



No comments: