Thursday 7 November 2019

கமல் '65... கலை.'60....

திரைத்துறையில் 60 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறையினரை சரியாக புரிந்து வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஏவி மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்.



'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

திரையுலக பிரபலத்தின் மூலம், அடுத்தகட்ட உயர்வை எதிர்பார்த்து கிடக்கும் நடிகர்கள் மத்தியில், தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 

பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது.

16 வயதினிலே, அவள் அப்படித்தான், ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள், குணா, மூன்றாம் பிறை, பேசும்படம், ஆளவந்தான், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

கமலின் 60 ஆண்டு கலைப்பயணத்தை 60 ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். கமலின் குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல். 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

எந்த துறையில் இருப்பவர்களுக்கும், அவரவர் துறையில் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா, வசூல் ராஜா என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. 

16 வயதினிலே, மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி,  என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்

ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விருமாணாடி, விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, இந்தியன் தாத்தா, அவ்வை சண்முகி மாமி, தசாவதாரம் பாட்டி என தன்னை முற்றிலும் மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 

மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 

கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி. அம்பிகா, ராதா, ரேகா. சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் தொடரும் முன்னணி நாயகன். 



இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு கடந்து சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னை அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம். 

அட... கமலின் தாயார் ராஜலட்சுமி, அவரை எப்போதுமே உண்மை பெயரான பார்த்தசாரதி என்றே கூப்பிடுவாராம்... தெரியுமா...?

#நெல்லை_ரவீந்திரன்