Sunday 15 March 2020

கொரோனா

பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ், சார்ஸ் வைரஸ் இந்த வரிசையில் கொரோனா. முந்தையவை எல்லாம் இந்த அளவுக்கு இல்லை. ஆனால், இதன் தாக்கம் கொடூரம். சீனாவில் ஆயிரக்கணக்கில், இத்தாலியில் ஒரே நாளில் 250 என பலி வாங்கி, கார்பரேட் வங்கி போல 130 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது, இந்த கொள்ளை நோய்.



சீதபேதி, கக்குவான் இருமல், காலரா, தட்டம்மை, டிபி மாதிரி நோய்களுக்கான மருந்து பரவலாக இல்லாதபோது கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது. 50ஐ நெருங்கிய, கடந்தவர்களுக்கு இது தெரியும். இன்ன காரணம் என தெரியாமலேயே பலரும் உயிர் இழந்த காலம் அது.

 'பேதியில போறவன், கொள்ளையில போறவன்' மாதிரியான கிராமத்து பாட்டிகளின் சரளமான ஏச்சுகள் எல்லாம் காலரா மற்றும் கொள்ளை நோய்களில் இருந்து வந்தவை தான். அது போன்ற கொள்ளை நோய் தான் இதுவும்.

கொள்ளை நோயால் அரண்டு கிடந்த சமயத்தில் அமெரிக்காவின் ஸ்கைலாஃப் ராக்கெட் விழுந்து உலகம் அழியப் போவதாக கூறி, வீட்டில் வளர்த்த ஆடு, கோழிகளை எல்லாம் அடித்து சாப்பிட்டதும் உண்டு. அப்புறம் ஸ்கைலாஃப் ராக்கெட் கடலுக்குள் விழுந்தது தனிக்கதை. 

இதற்கு கொஞ்சமும் குறையாத பீதியை ஏற்படுத்தி கொத்து கொத்தாக உயிர் பறிக்கும் கொரோனா என்ற கொள்ளை நோயும் இந்த சோகமும் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்று கொத்தாக உயிர் பறிக்கிறது. உயிர்களை பறிப்பதில் போரும் நோயும் ஒன்று.

புதுப்புது நோய்கள், புதுப்புது மருந்துகள். காலரா, அம்மை, சீதபேதி, டிபி, காமாலை, கக்குவான் இருமல் இதெல்லாம் கொள்ளை நோய்களாக இருந்ததென்றால் இன்றைய தலைமுறையினர் யாராவது நம்புவார்களா? இதற்கும் தீர்வு இருக்கும். 

கார்பரேட் கம்பெனிகளின் திட்டம்,  வல்லரசுகளின் சதி. இப்பிடியாக கொரோனா உட்பட எல்லாவற்றுக்கும் ஒரு குரூப் காரணம் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், சுய சுத்தமும், கட்டுப்பாடும் ஆரோக்யத்தின் அடிப்படை.

#கந்தையானாலும்_கசக்கிக்கட்டு 

#கூழானாலும்_குளித்துக்குடி

இதெல்லாம் நம்ம முன்னோர்கள் நமக்குச் சொல்லி நாம மறந்து விட்ட வார்த்தைகள். அதை கடைப்பிடித்தால்

#சுத்தம்_சுகம்தரும்