Tuesday 30 December 2014

கோபம் ஏன் அன்னையே?


தலைகோதி அன்பை
சொரியும் அன்னையாய்
அலைக்கரங்களால்
படகை தழுவும் கடல் அன்னையே!
 

பசியை தானே உண்டு
அந்த ஒற்றை சொல் மகனாய்
வளர்க்கும் தெய்வமாய்
மடி சுரக்கும் மீன்வளம் தந்தாய்!


கரையில் காத்திருக்கும்
தாயையும் பிரிந்து
உன் மடியில் தஞ்சமடைந்தோம்
உன் மீதான எங்கள்
நம்பிக்கையை பொய்ப்பித்தது ஏன்?

அதிகாலையில் ஆவேசம் கொண்டு
கடலோர குழந்தைகளை
உதைத்து எழுப்பியது ஏன்?

தாயாய் காப்பாய் என
நம்பி இருந்த எங்களை
கபளீகரம் செய்தது ஏன்?

குஞ்சுகளை இரையாக்கும்
பகாசுர மீனாகியது ஏன்?

உன் சதிராட்டத்தில்
உறவுகளை தொலைத்தோர் எத்தனை?
உயிர் பிரியும் தருணத்தில்
தனுஷ்கோடி லெமூரியா
கண்டோர் எத்தனை?

கண்டிக்கும் அன்னையிடம்
காணும் கனிவு உன்னிடம்
காணாமல் போனதெங்கே?
இனியாவது அன்பு காட்டும்
அன்னையாய் இரு
உன் கோபத்தை தாங்கும்
சக்தி இல்லை எங்களுக்கு....

= வை.ரவீந்திரன்

Wednesday 24 December 2014

அணுகுண்டு சோதித்த தலைவர்



வாஜ்பாய் பிறந்த நாள் கவிதை (25-12-2011)


=============================

இந்தியாவின் தன்னிகரற்ற
தலைவர்களில் தனிப்பெரும் தலைவா,
அருமைமிகு கலாமுடன் அன்பு கரம் கோர்த்து
அணுகுண்டு சோதித்தாய்,

இந்தியாவின் பெருமை உயர்ந்தது
வல்லரசுகளின் எதிர்ப்பும் வலுத்தது. - அந்த
எதிர்ப்புகளையும் பொருளாதார தடைகளையும்
துணிவுடன் தகர்த்தெறிந்த தலைவா,

அன்னிய சிட்டுக் குருவிக்கும் 
அஞ்சி நடுங்கும் ஆட்சியாளர்களையும்
அசையா உறுதியுடன் நின்ற உமது ஆட்சியையும்
அண்ணலே, அசைபோட்டு பார்க்கிறோம்
  
நீ நடத்திய ஏழாண்டு
ஆட்சியில் எழுந்தது பாரதம்
ஏழு ஜென்மத்துக்கும்
மறக்குமோ மனம்  அதை

அனைவரையும் அரவணைப்பதில்
அன்னையான வாழும் மகாத்மாவே - உமது
அவதார நாளில் வணங்குகிறோம் உம்மையே 
உமக்காக  வேண்டுகிறோம் இறையையே

= வை.ரவீந்திரன் 


மனித நேயர் எம்ஜிஆர்


 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

= வை.ரவீந்திரன்




மடைமை ஒழித்த வெண்தாடியார்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச அறியார்
அறியாதோர் புத்தியில்
அறையும்படி கூறும் புலியார்

மூட பழக்கத்தின்
மாயையை சிறிதும் தெரியார்
பாரதிக்கு பின் மாதர் தம்
குரலாய் ஒலித்த ஒலியார்

திக்கற்ற தமிழருக்கு ஒளியாய்
திகழும் பேரொளியார்
சிறியோரையும் மரியாதையுடன்
விளிக்கும் பெரியார்

வாழ்க்கை நெறியை
வகுத்து தந்த எளியார்
மடைமையை ஒழித்து
தூய்மை படுத்திய வெண்தாடியார்

= வை.ரவீந்திரன்

Tuesday 23 December 2014

ஊதா நிற நூல்

புத்தகக் கண்காட்சி
கடைகள் தோறும்
கேள்வி கணைகளால்
துளைத்தெடுத்தாய்
எந்த நூல் பிடிக்கும் என்று
பதிலெதும் கூறாமல்
மவுனமாக இருந்தேன்


உனக்கு தெரியுமா
முந்தைய சந்திப்பில்
உனது தாவணியில் இருந்து
உனக்கு தெரியாமல்
உருவி எடுத்த ஊதா நிற
நூல் மட்டுமே பிடிக்கும் என்று

= வை.ரவீந்திரன் 

Monday 15 December 2014

மறதியை மறக்கலாம்

(காற்றுவெளி / இலக்கிய இணைய இதழில் வெளியான கட்டுரை)
 
வீட்டில் மூக்குக் கண்ணாடியை தேடுவது முதல் 10 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நண்பரின் பெயரை நினைவுபடுத்துவது வரை மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதில் மறதிக்கு முக்கிய இடம் உண்டு. ஆண்டுதோறும் வயது அதிகமாகும்போது மறதி குணமும் அதிகமாகி தொல்லை கொடுக்கிறது. வயதான காலத்தில் அல்சீமர் என்ற மறதி நோயால் அவதிப்படும் சிலரை கண் கூடாகவே நாம் காண்கிறோம்.

இதுபோன்ற மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டு பிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணு முணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த மிகச் சிறந்த பயிற்சி.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ண பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பஸ் பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவு படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.

மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

நினைவாற்றலை பெருக்குவதற்காக மேற்சொன்ன முறைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய தலைமுறையினரிடம் இத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்து வந்தன என்பதே அந்த உண்மை. பழைய பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களும் ஓய்வு நேரங்களில் புத்தகங்களை வாசிப்பவர்களும், குழந்தைகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் நினைவாற்றலும் நம்மை பிரமிக்கச் செய்பவையே. 

= வை.ரவீந்திரன் 





Saturday 13 December 2014

இறைவன் தோட்டத்தின் பாத்திகள்

இறைவன் படைத்த  பூமி தோட்டத்தில்
மனிதர்கள் கட்டி வைக்கும்
பாத்திகள் எதுவும் எப்போதும்
நிரந்தரமாக இருப்பதில்லை

தூது சென்ற புறாக்கள்
மறைந்து விட்டன
தபால்காரனும் தந்தியும்
தேவையற்று போய் விட்டன

போகாமல் கெட்டது உறவு
என்ற வசனம் பொய்த்து போனது
நேரில் பார்க்காமலேயே
இணைய வழியில்
நட்பு சிறகு விரித்து
உறவு பாலம் பிணைக்க
இ மெயிலும் முக நூலும்
வாட்ஸ் அப்பும் வந்து விட்டன

= வை.ரவீந்திரன் 



Thursday 11 December 2014

பாரதியின் வாழ்வில் புதுச்சேரி

‘உள்ள நிறைவிலோர்
கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? நன்னெஞ்சே,
தெள்ளிய தேனிலோர்
சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? நன்னெஞ்சே?’


சூரத்தில் 1907ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. திலகர், அரவிந்தர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் என புரட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து தனி அணியமைத்தனர். அவர்களின் வேகத்தின் முன்னால் ஆங்கிலேயரால் ஈடு கொடுக்க முடியவில்லை. சென்னையில் ‘இந்தியா‘ பத்திரிகை ஆசிரியராக இருந்த பாரதியின் புரட்சிகரமான கட்டுரைகளால் ஆக்ரோஷமடைந்த ஆங்கிலேயர், பாரதியை கைது செய்ய முடிவு செய்தபோது அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாடுகளுக்கு பதில் செக்கில் பூட்டப்பட்ட வ.உ.சிதம்பரனார், தொழுநோய்க்கு ஆளான சுப்பிரமணிய சிவா போன்றோரின் சிறைக் கொடுமைகளை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்ததால் பாரதியை சென்னையை விட்டு அனுப்ப தீர்மானித்தனர். அப்போது நினைவில் வந்த ஊர், புதுச்சேரி.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்கு அவர்கள் பாரதியை அனுப்பி வைத்தனர். நண்பர்களின் ஏற்பாட்டின்படி, புதுவைக்கு 1908ம் ஆண்டு ரயிலில் வந்திறங்கிய பாரதியின் கையில் குப்புசாமி அய்யங்கார் என்பவருக்கு நண்பர் ஒருவர் எழுதிக் கொடுத்த கடிதம் மட்டுமே இருந்தது. புதுவையில் அவருக்கு யாரையும் தெரியாது. அவரையும் யாருக்கும் தெரியாது. ஏனடா, இந்த புதுச்சேரிக்கு வந்த சோதனை? என அவர் நினைத்தபோது குவளைக் கண்ணன், சுந்தரேச அய்யங்கார் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலமாகவே தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தார்.

சில மாதங்களில் இந்தியா பத்திரிகையின் முதலாளி மண்டையம் ஸ்ரீனிவாச்சாரியும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவர், புதுவையில் படித்தவர் என்பதால் புதுச்சேரி நகரம் அவருக்கு நல்ல பரிச்சயமாக இருந்தது. எனவே,  ‘இந்தியா‘ பத்திரிகையை புதுவையில் தொடங்கினார். அதற்கு பாரதியை ஆசிரியராக நியமித்தார். பின்னர், புரட்சியாளர்களின் அடைக்கல பூமியானது, புதுவை. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், ‘இந்தியா‘ பத்திரிகையை இந்திய பகுதிக்குள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

அதன் பிறகு விஜயா, கர்மயோகி, தருமம், பாலபாரதம், சூரியோதயம் என பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக புதுவையில் பாரதியார் பணியாற்றினார். அத்துடன், சுதேசமித்திரனில் சுதந்திர வேட்கை ஊட்டும் கவிதைகளையும் எழுதினார். தமிழ் பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடும் வழக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர், பாரதியார். அந்த சாதனையை புதுவை மண்ணில் தான் அவர் ஆரம்பித்து வைத்தார். முழுநீள கார்ட்டூன் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், அது கனவாகவே போனது.

கொல்கத்தாவில் இருந்து 1910ம் ஆண்டு புதுவைசெட்டித் தெருவில் தங்கி இருந்த அரவிந்தருக்கு துணையாகவும் இருந்திருக்கிறார். அரவிந்தர் நடத்திய ஆர்யா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். அரவிந்தருக்கு தமிழ் கற்றுத் தந்தவர், பாரதியார். பாரதியாரிடம் தமிழ் பயின்ற அரவிந்தர், பின்னாளில் தமிழில் இருந்து திருக்குறள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பத்திரிகை, தேசப்பணி என இருந்த பாரதியை பாட்டுக்கொரு புலவனாக மாற்றியது, புதுவை மண். அதுவரை பாரதி எழுதி வைத்திருந்த கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சுதேச கீதங்கள் என்ற பெயரில் புத்தகமாக 1908ம் ஆண்டு புதுவையில் வெளியிடப்பட்டது. அதுவே, அவருடைய முதல் புத்தகத் தொகுதி. பின்னர், பாரதியின் கனவு, ஜன்ம பூமி, மாதா மணிவாசகம் என பாரதியின் எழுத்துப் பணி தொடர்ந்தது. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பகவத் கீதை மொழி பெயர்ப்பு என காலத்தால் அழியாத காவியங்கள் அனைத்தும் புதுவை மண்ணில்தான் கருத்தரித்தன. அவற்றை 1912ம் ஆண்டில் பாரதி எழுதினார். பின்னாளில், அவை தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளியாகின.

புதுவையில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், குயில் தோப்பு, மணக்குள விநாயகர் கோவில், உப்பளம் முத்துமாரியம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் ஆலயம் என அவர் பாடித் திரிந்த இடங்கள் ஏராளம். குறிப்பாக, குயில் தோப்பு தான் அவருடைய கவிதை வளத்துக்கு ஆதார சுருதியாக அமைந்தது. ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என பாட வைத்தது, குயில்தோப்பு. ‘சித்தானந்த சாமி திருக்கோயில் வாசலில் தீபவொளியுண்டாம் பெண்ணே’ என்றும் ‘நானும் ஒரு சித்தன் வந்தேனே, நான் சாகாமல் இருப்பேனே’ என்றும் சித்தானந்தர் கோவிலில் அமர்ந்து எழுதினார்.

1882ம் ஆண்டு பிறந்து 1921ம் ஆண்டு வரை 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த பாரதியாரை 10 ஆண்டு காலம் புதுச்சேரி மண் பாதுகாத்தது. வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை புதுவையில் தான் அந்த தேசியக்கவி வாழ்ந்தார். புதுவை மண்ணை விட்டு பிரிந்த 3 ஆண்டுக்குள் உலகை விட்டே பிரிந்த பாரதியின் நினைவு வாசத்தை குயில் தோப்பு இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

= புதுவையின் பழமை நூலில் இருந்து
    நூல் ஆசிரியர் வை.ரவீந்திரன்



ஆதாம் ஆப்பிளின் மிச்சம்

முன் பின் அறியாத
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது


= வை.ரவீந்திரன் 

Wednesday 10 December 2014

பறவையின் சுயசரிதை

வானமே எல்லை என
பறக்கும் பறவை
காற்று வெளியின்
முற்றுப் பெறா பக்கங்களில்
எழுதிச் செல்கிறது
தனது சுய சரிதையை...
சிறகுகள் என்னும்
மெல்லிய தூரிகை கொண்டு

= வை.ரவீந்திரன் 


கூத்து முடிந்த கொட்டகை


நதிக் கரையோர நாணல்கள்
நெட்டி முறித்துக் கொள்கின்றன
வௌ்ளம் வடிந்து விட்டாலும்

செவ்வரி பூசிய தண்ணீர்
நீர்ச் சூழலின் மிச்சம் கூறிச் செல்கிறது


கழனிகள் தத்தளிக்கின்றன
நெடுவயல்களில் நதியின்
கால் தடம் பதிந்து கிடக்கிறது
ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம்
கோரிக்கைகளும் அறிக்கைகளும்
 

அச்சில் ஏற பரபரத்து கிடக்கின்றன
வாய்க்கால் தூர்வாருவதில்
லாவணி கச்சேரி கூச்சல்
மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்தது
கூத்து முடிந்து கலைத்த
கீற்றுக் கொட்டகையாய் விளை நிலம்


= வை.ரவீந்திரன் 

Tuesday 9 December 2014

வார்த்தைகளற்ற கவிதை....

கவிதை சொல் என்றாய்
நீயே கவிதை தானே என்றேன்
உன்னை ஓவியம்
வரையட்டுமா என கேட்டபோது
ஓவியமும் வரைவாயா..? என
விழி விரித்து வியந்தாய்
 

உன் பெயரை எழுதினாலே
ஒரு ஒவியம் தானே என்றேன்
எந்நேரமும் பொய் என
பொய் கோபம் கொண்டாய்


அப்படியே இரு
அழகான ஒரு ஓவியக் கவிதை
தீட்டுகிறேன் என கூறியபடி
உன் முகம் பார்த்தேன்

செல்ல சிணுங்கலுடன் என்
தலையில் தட்டி விட்டு
குதித்தோடிச் சென்றாய்
உன்னைத் தொடர்ந்து
வார்த்தைகளும் ஓடோடிச் சென்றன
எப்படி நான் கவிதை எழுதுவது...?

= வை.ரவீந்திரன் 

Monday 1 December 2014

அழிந்து போன அளத்தல் அளவைகள்



பள்ளிக்கூட பாடங்களில் மில்லி லிட்டர், லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவை பற்றி படித்திருப்போம். ஆனால் உழக்கு, படி, நாழி, மரக்கால் போன்ற அளவைகள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இவை எல்லாம் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் உபயோகப்படுத்திய அளவை முறை. அப்போதெல்லாம் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இவற்றைக் கொண்டு தான் அளந்தார்கள். இதற்காகவே அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்று 20 வகையான அளத்தல் அளவைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆழாக்கு அரிசிய போட்டு சோறு வடிக்கத் தெரியாதா?’ என்று கிராமங்களில் ஒரு  சொல்வடை உண்டு. அதாவது, ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆழாக்கு அளவு அரிசியை எடுத்து சோறு வடித்தால் போதும் என்பதே அதன் உள் அர்த்தம். இந்த ஆழாக்கு என்பது அளத்தல் அளவையில் ஒரு சிறிய அளவீடு. தோராயமாக 400 கிராம் அளவுக்கு இருக்கும்.

இதே மாதிரி, ‘படி’ என்பது ஆழாக்கை விட கொஞ்சம் பெரிய அளத்தல் கருவி. வயலில் விளைந்த நெல் மணிகளை கதிரடிக்கும் களத்தில் மொத்தமாக குவித்து வைத்து அங்கிருந்து மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்து வருவார்கள். அப்போது மூட்டைகளில் இருந்து நெல்லை அளந்து போடுவதற்கு படி என்ற அளத்தல் கருவியை பயன்படுத்தினர். மேலும், வயலில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கூலியாக நெல் வழங்கிய காலம், அது. அதனால், படியை வைத்து அளந்தே கூலியை வழங்கினர். இதில் இருந்து தான், ‘படியளத்தல்’ என்ற வார்த்தை தோன்றியது. இப்போதும் கூட, ‘ஏதோ, ஆண்டவன் படியளந்து கொண்டு இருக்கிறான்’ என்ற வார்த்தைகளை சிலர் கூறுவதை கேட்கலாம்.
  
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற அளவை கருவிகள் மிக பிரபலமாக இருந்துள்ளன. கி.பி.10ம் நூற்றாண்டில சோழ பேரரசர் ராஜராஜன் ஆட்சி புரிந்தபோது, நெல் மணிகளை அளப்பதற்கு ‘மரக்கால்’ என்ற அளவை கருவியை அதிகமாக பயன்படுத்தினர். இப்போது உள்ள மில்லி லிட்டர், லிட்டர் அளவை கருவி போலவே உருளை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு அளவைக்கு ஏற்ப அதன் வடிவமும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காணப்படும்.

மன்னராட்சி காலத்தில், பாசனத்துக்கு ஏரிகளை திறந்து விடும் பணியை கண்காணிக்க, ‘கலிங்கு வாரியம்’ என்ற ஒரு அமைப்பை ஒவ்வொரு ஊரிலும் சோழ மன்னர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வாரியம் முறையாக செயல்பட, அதற்கு பொருளாதார வசதி தேவை. எனவே, வரி வசூல் முறை அமலில் இருந்தது. அதன்படி, வயலில் விளையும் தானியங்களில் 250 மரக்கால் அளவுக்கு நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியத்தை கலிங்கு வாரியத்துக்கு விவசாயிகள் அளந்து வழங்க வேண்டும். அதைக் கொண்டு அந்த வாரியம் செயல்படும். மரக்கால் என்ற கருவியை ‘பக்கா’ என்றும் அழைப்பது உண்டு.

மரக்காலை விட சற்று சிறிய அளவிலான அளவை கருவியின் பெயர் நாழி. பொங்கல் திருநாள் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் நாழி கருவியில் நெல்மணிகளை நிறைத்து வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இதை, ‘நிறை நாழி’ என்று நமது முன்னோர் அழைத்தனர்.


ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட விவசாயிகளின் வீடுகளில் பயன்படுத்தி வந்த இந்த கருவிகள் அனைத்தும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சிறிது சிறிதாக காணாமல் போயின. இந்திய விடுதலைக்கு பிறகு அந்த அளவை முறைகளை சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பது போன்ற வார்த்தைகள் அனைத்தும் புத்தகங்களில் தான் இருக்கின்றன. ஒரு சில கிராமங்களில் மட்டும் விசேஷ தினங்களில், ‘நிறை நாழி’யை காண முடிகிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ.....?

இதுதவிர, தானியங்களை மொத்தமாக சேகரித்து வைப்பதற்கு அந்த காலத்தில் சரியான வசதிகள் கிடையாது. அதனால், வீடுகளிலேயே பெரிய சைஸ் மண் பானை போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அதன் பெயர், ‘குதிர்’. பெரும்பாலும் நெல் சேமித்து வைக்க பயன்படுத்தியதால், ‘நெல்லு குதிரு’ என்று கிராமங்களில் அதை அழைப்பது உண்டு. பழங்கால முதுமக்கள் தாழி போன்ற வடிவத்தில் ஒரு சராசரி மனிதன் உயரத்துக்கு தோற்றமளிக்கும் ‘குதிர்’ என்ற பெரிய சைஸ் பானையை குக்கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. 

= வை.ரவீந்திரன் 






Thursday 27 November 2014

மண்டல் கமிஷன் நாயகன்...

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இன்று நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) என்ற பிரிவை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அறிமுகம் செய்தவர். அதற்காக, மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற தனது பிரதமர் பதவியையே பணயம் வைத்தவர்.

இத்தனைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் பி.பி.மண்டல் அறிக்கை அளித்தும் 10 ஆண்டுகளாக பரணில் கிடந்தது. அந்த அறிக்கையை 10 ஆண்டுகள் கழித்தும் மறந்து விடாமல் தூசிதட்டி எடுத்து, அமல்படுத்தி சாமானிய மக்களுக்கு வாழ்வு அளித்தவர்.

இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா என நெருங்கவே இயலாத இரண்டு வெவ்வேறு துருவங்களின் ஆதரவோடு ஆட்சி நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். ராமர் கோயில் கோஷம் எழுந்தபோது ரத யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்ட துணிச்சல்காரர்.

ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பவர்புல் இலாகாவில் இருந்தாலும் பிரதமர் ராஜீவ் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டும் ஆமாம் சாமியாக இல்லாமல் தவறை துணிச்சலாக தட்டிக் கேட்டவர். போபர்ஸ் ஊழலை தோலுரித்த நேர்மையாளர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராஜ வம்சத்தில் பிறந்த போதிலும் ஏழை மக்களைப் பற்றியும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் சிந்தித்த சிந்தனையாளர். 

இந்தியாவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற உண்மையை தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி நிரூபித்து காட்டியவர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணியின் பிரதமராக பதவியேற்றபோது, தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களை அதிமுக=காங்கிரஸ் அணி கைப்பற்றி இருந்தது. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

அந்த சூழ்நிலையிலும், மந்திரிசபையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பதவியை அளித்து நகர்ப்புற வளர்ச்சி துறையை ஒதுக்கியவர்.

இப்படி, அவரின் பெயரைப் போலவே அவரது பெருமைகளும் சாதனைகளும் மிக நீளமானவை. அவர்
.
.
.
.
.
.
.
.

முன்னாள் பாரத பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இன்று அவரது நினைவு தினம் (27-11-2008)

= வை.ரவீந்திரன் 

மங்காத வீரம்... மண்டியிடாத மானம்

கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் இணையற்ற இனமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் இனம், தமிழ் இனம்.

உடலில் தொண்ணூற்று மூன்று விழுப்புண்களை பெற்று, மகன் ஆதித்த சோழனுக்கு மகுடம் சூட்டிய பிறகும் கூட முதிய வயதில் இரண்டு கால்களை இழந்த நிலையில் போர்க்களம் புகுந்த விஜயாலய சோழன் பிறந்தது, தமிழ் மரபு. இரண்டு வீரர்கள் தோளில் சுமந்து செல்ல இரண்டு கைகளிலும் வாள்களை ஏந்தி எதிரிகளின் தலைகளை பந்தாடியவன், விஜயாலய சோழன்.
எண் கொண்ட தொன்னூற்றின் மேலுமிரு மூன்று
புண் கொண்ட வெற்றிப் புரவலன்’

= என விஜயாலயச் சோழனை புலவர்கள் பாடி வைத்துள்ளனர்.

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட (சேர, சோழ, பாண்டிய) தமிழ் தேசத்தின் பெருமையை இமயமலையில் வில் கொடியை பதித்து பறை சாற்றினான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனது இந்த பெருமையை,
‘அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க....’

= என்று பதிற்றுப்பத்து இலக்கியம் பாடுகிறது.

18 வயது சிறுவனாக இருந்தபோதிலும் மிகப்பெரிய படைகளை தலையலங்கானம் என்ற இடத்தில் தன்னந்தனியனாக எதிர் நின்று வென்ற தலையலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பிறந்ததும், இந்த தமிழ் மரபில் தான்.

குடம் நிறைய ஆயர் குல பெண்டிர் சேமித்து வைத்திருக்கும் பாலுக்குள் துளி அளவு மோர் கலந்து அதை கலங்கச் செய்வது போல, எதிரியின் படைக்குள் புகுந்து கலங்கச் செய்பவன், என பண்டைய தமிழகத்தின் சாதாரண படை வீரர்களுக்குள் கூட மிகப்பெரிய அளவில் பராக்கிரமம் நிறைந்து கிடந்தது என்பதை,
‘குடப்பால் சில்லுறைப் போல படைக்கு
நோய் எல்லாம் தான் ஆயினவே’

= என்று புறநானூறு பாடல் விளக்கி கூறுகிறது.

வடநாட்டு மன்னர்கள் கனகர் மற்றும் விசயனை வென்று அவர்களுடைய தலை மீது கற்களை ஏற்றி சுமந்து வந்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை எடுத்தவர்கள், தமிழ் மன்னர்கள். இலங்கையை வென்று மீன் கொடி ஏற்றிய பாண்டியனும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று ஈழத்தை கைப்பற்றியதோடு முந்நீர் பழந்தீவு என அழைக்கப்பட்ட மாலத்தீவுக்கு கடல் கடந்து சென்று போர் முரசம் கொட்டிய ராச ராச சோழனும் தமிழரின் வீரம் செறிந்த மரபின் வரலாற்று உதாரணங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து மாபெரும் கடற்படையை திரட்டிச் சென்று மலேசியா எனப்படும் கடாரம் தீவை வெற்றி கொண்ட ராசேந்திர சோழனின் வீரத்தை என்னவென்று வியப்பது....?
தமிழ் மரபில் இந்த அளவுக்கு வீரமும் தீரமும் செறிந்தவர்கள் இருந்தார்களா...? மனதுக்குள் இதுபோன்ற ஒரு ஐயம் எழுந்ததும் அதை போக்கும் விதமாக பிறந்தவர், பிரபாகரன்.

நான்கு வகை படைகளை நடத்திய தமிழ் மன்னர்களை நினைவூட்டும் வகையில் இந்த நவீன விஞ்ஞான உலகில் ஆதரவு ஏதுமின்றி முப்படைகளை திறமாக நடத்தி வெற்றிகளை குவித்தவர். காய்த்தல், உவர்த்தல் இன்றி தனி மனிதனாக அவரை உற்று நோக்கினால் தமிழர் வீரத்தின் மிச்சம் அவர் என்பதை உணரலாம்.

நாகரீக உலகில் நாடு பிடிப்பதற்காக இதுபோன்று சண்டை போடுவதா? என்ற கேள்வி எழும்போது, அவரது அருமை தம்பி திலீபன் நடத்திய அறவழி போராட்டத்தினால் கிடைத்த பலன் பற்றி அறிந்தால் எழுந்த வேகத்திலேயே அந்த கேள்வி அடங்கி விடும்.

சொந்த மண்ணிலேயே அடிமைகளாக கிடந்து அடிப்படை உரிமைகளுக்கு கூட போராடி, வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலைக்காக வீறு கொண்டு எழுந்து,

பாரதி கூறிய, ‘ரவுத்திரம் பழகி’ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த வீரத் திருமகன் அவதரித்த தினத்தில் (நவம்பர் 26) தமிழ் இனத்தின் மங்காத வீரத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 




வீரனின் வாழ்வு...
வீழ்ந்து விடுவதில்லை...
விதைக்கப்படுகிறது....
வரலாறாய் மாறுகிறது

= வை.ரவீந்திரன் 

Tuesday 25 November 2014

அமைதி நோக்கி பயணம்

ஆள் அரவமற்ற வெட்ட வெளி
அதிகாலை பனித் துளிகளை
தாங்கி நிற்கும் தாவரங்கள்
வேகமாக நடந்தால் கூட
தூரம் குறுகியதாக தெரியவில்லை
சமவெளியை கடந்தால்
ஆழமான பள்ளத்தாக்கும்
கூடவே அதி பயங்கர நீர் வீழ்ச்சியும்
நிச்சயமாக ஏற்ற இடம் தான்

இன்னும் கொஞ்சம் நடையை
எட்டிப் போட்டால் அடைந்து விடலாம்
மனது எண்ணியதை கால் செயல்படுத்தியது

அடையாளங்களை தொலைத்து
சாதாரண மனிதனாக வாழ தீர்மானித்து
தொடங்கிய பயணம் இது
அனைத்தையும் உதறி விட்டு
கால்கள் பரபரத்து ஓடின
சற்று தொலைவில் இருக்கும்
அடையாளம் ஏதுமற்ற அமைதி நோக்கி.... 


= வை.ரவீந்திரன்

Monday 24 November 2014

அப்பிராணியும்.... அதானியும்....




வணக்கமுங்க... நடுத்தர வர்க்கமுன்னு சொல்றாங்கள... அந்த வர்க்கத்துல நானும் ஒருத்தன். என் பேரு... அது அவ்ளோ முக்கியமில்லீங்க... அப்பிராணின்னு வச்சிக்கோங்களேன். வந்தார வாழ வைக்கிற சென்னைக்கு குடியேறி 17 வருசம் ஓடிட்டு. சொன்னது போலவே, நல்லாவே சென்னை வாழ வச்சுதுங்க. புறநகர் பக்கமா 10 வருசத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு வூடு வாங்குனேங்க. அது ஒரு சென்டு இடம் இருக்குங்க... அப்போ பொழச்ச பொழப்புக்கு அதுவே பெரிய விஷயங்க.

அப்ப வூடு வாங்குறதுக்காக அரசாங்க பேங்குல 20 வருசத்துக்கு ரூ.3 லட்சம் கடன வாங்கினேங்க. மாச சம்பள வேல பாத்ததால லோன குடுத்தாங்க. மாசா மாசம் நான் கட்டுன தொகையில வட்டிக்கு தாங்க அதிகமா போய்கிட்டு இருந்துச்சு. எப்படியாச்சும் இந்த தொல்லைய ஒழிச்சு கட்டணுமின்னு ராப்பகலா யோசிச்சேங்க.. அதே சிந்தனையா இருந்ததால ஒரு வழியா 10 வருசத்துக்குள்ள அந்த கடன முழுசா அடைச்சிட்டேங்க.

இப்போ, வீட்ட சுத்தி பாத்தா நெறய வீடுங்க வளந்து நின்னுகிட்டு இருக்குங்க. அத பாத்ததும் இந்த மனசுக்குள்ள ஒரு ஆச வந்து ஆட்டிச்சு. அதுக்கு நாலே கால் லட்சம் வரை செலவாகுமுன்னு சொன்னாங்க. கடன தான் அடைச்சிட்டோமே... அதனால மாடிய கட்டதுக்கு அதே வங்கில போயி லோன கேட்டா என்ன? நம்ம வூட்டு பத்திரம் கூட பத்திரமா அங்க தான இருக்கு? இப்படி மனசுக்குள்ள கேள்வியோட மேனசர போய் பாத்தேங்க.

அவரும் சம்பளம் என்ன?ங்கிற விவரம் எல்லாம் கேட்டுட்டு... மாடி கட்ட பிளான மட்டும் வாங்கிட்டு வாங்கன்னாரு. இந்த 10 வருசத்துக்குள்ள மாநகராட்சிய விரிச்சிட்டாங்க. என் வீடும் மாநகராட்சிக்குள்ள வந்துட்டு. அதனால, மாடி கட்ட பிளான் கேட்டு மாநகராட்சிக்கு போனேங்க. அந்த நேரத்துல தான் மவுலிவாக்கங்கிற இடத்துல பெரிய கட்டிடம் ரெண்டு இடிஞ்சு விழுந்துடுச்சு.

உடனே, பிளான குடுக்குறதுல பயங்கரமா கெடுபுடி காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வழியா அறுபது ஆயிரம் ரூபா வரைக்கும் (சத்தியமாங்க... ஒரு சென்டு இடத்துல மாடி கட்டத்தான்) செலவு பண்ணி பிளான வாங்கிட்டேன். அதுவும் 5 மாசத்துக்கு மேல ஆயுடுச்சு. அத வாங்கிக்கிட்டு பேங்குக்கு போனா, அங்க புது மேனேசரு ஒக்காந்து இருக்காரு. மனசுக்குள்ள சின்னதா அதிர்ச்சி.

ஆனாலும், மனச திடப்படுத்திக்கிட்டு அவருகிட்ட போயி முழு விவரத்தையும் சொன்னேன். பழைய மேனேசர் சொன்னதையும் சொல்லி பிளானயும், பில்டரு கொடுத்த எஸ்டிமேட்டையும் என்னோட சம்பள பட்டியலயும் (இந்த பத்து வருசத்துல சம்பளமும் கணுசமா கூடிட்டுங்க.. அத நான் சொல்லியே ஆகணும்) கொடுத்தேங்க.. மாடிய கட்றதுக்கு எனக்கு 3 லட்சம் லோன் குடுங்க சார். மீதிய நானே பாத்துக்கறேன்னேன். 

அதுக்கு அந்த மேனேசரு சொன்னாரு பாருங்க. ‘வீட்டுக்கு ஒரு எவாலுயசன் ரிப்போர்ட்ட வாங்கிடுங்க. அப்படியே லீகல் ஒப்பினீயன் வாங்கிடுங்க. ஈசியும் போட்டு எடுத்துட்டு வாங்க. சீக்கிரமா லோன குடுத்துரலாம்’ இந்த பதில கேட்டதும் ஆடிப் போயிட்டேங்க. ஏன்னா, என்னோட வூட்டு பத்திரம் அந்த பேங்குலதாங்க இருக்கு.  

சரி. அது என்ன எவாலுயசன், லீகல் ஒப்பீனியன் அப்படின்னு விசாரிச்சேன். அந்த பேங்குக்குன்னு வக்கீலும் என்ஜீனீயரும் இருந்தாங்க. அவங்க கிட்ட போன போட்டு பேசுனா ஒரு 15 ஆயிரத்துக்கு பில்ல போடுறாங்க. நாலே கால் லட்சத்துல மாடிய  கட்டுறதுக்கு ஏற்கெனவே, பினானுக்கு 60 ஆயிரம் செலவழிச்ச நெலமையில இது என்னடா எக்ஸ்ட்ரா செலவுன்னு நொந்து போயிட்டேங்க.. ஒரு 3 லட்சம் லோனா தரதுக்கு இவ்ளோ பார்மாலிட்டியா...?

இவ்ளோத்துக்கும் இப்போ என்னோட வீட்டு சந்த மதிப்பு 15 லட்சத்த தாண்டிடுச்சுங்க. என்னோட சம்பளத்த மட்டும் வச்சே பர்சனல் லோனா தனியார் பேங்குங்கள்ல ரூ.3 லட்சம் வரை வாங்கலாங்கிறதையும் விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டேங்க. இப்பிடி இருக்கும்போது என்னோட வீட்டு பத்திரத்த வச்சிகிட்டே 3 லட்சம் தரதுக்கு பேங்கில இந்த அளவுக்கு யோசிக்கிறாங்களே...?ன்னு எனக்கு கோபம் கோபமா வந்துச்சுங்க.. அப்புறமா... பரவாயில்ல. நம்ம அரசாங்க பேங்குல்லாம் ரொம்பவும் உஷாரா இருக்காங்களே.. இந்த அளவுக்கு உஷாரா இருந்தா சீக்கிரமே இந்தியா ரொம் முன்னேறிருமுன்னு நெனச்சுகிட்டேன். இந்தியா முன்னேறிச்சுன்னா நல்லதுதாங்களே..

அதுக்கு பொறவு கொஞ்ச நாளுல பேப்பருங்கள்ல பார்த்தேங்க. ஆஸ்திரேலியாவுல இருக்குற அதானின்னு ஒருத்தருக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய இந்தியாவுல இருக்க ஸ்டேட் பேங்கு கடனா குடுக்கப் போவுதாம். என்னோட பத்துரத்த பேங்குல வச்சிக்கிட்டே 3 லட்சத்துக்கு இந்த பாடு படுத்துன அரசாங்க வங்கிங்க, அந்த அதானியா என்ன பாடு படுத்த போறாங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். என்னோட வீடாவது பேங்கு பக்கத்துலேயே இருக்குது. இந்த அதானி, ஆஸ்திரேலியாவுலல்லா கம்பெனி ஆரம்பிக்காறாம். அதுக்கு என்னென்ன பார்மாலிட்டியோ? எவாலுயசேனோ? லீகல் ஒப்பீனியனோ? அத அந்த மனுஷன் எப்படி சமாளிக்க போறாரோ?ன்னு நெனச்சுக்கிட்டேன். இத அப்படியே எங்க ஆபீசுல ஒண்ணா வேல பாக்குற ஒருத்தருகிட்ட சொன்னேன்.


என்னைய மேலயும் கீழயும் பார்த்துகிட்டு அவரு சொன்னாருங்க.. “இவ்ளோ அப்பிராணியா இருக்கியே... அந்த லோன குடுக்கதுக்கு பிரதமரே சிபாரிசு பண்ணிட்டாருப்பா... ஏற்கெனவே, இப்படித்தான் மல்லையான்னு ஒருத்தரு மூவாயிரம் கோடிக்கு மேல பேங்குல வாங்கிட்டு மஞ்ச கடுதாசி குடுத்துட்டாரு... இந்த அதானி எப்போ மஞ்ச கடுதாசி குடுக்க போறாரோ...?’ ன்னு சலிச்சுக்கிட்டே சொன்னாரு.

இப்போ எனக்கு ஒரு சின்ன கேள்விங்க.. உங்கள்ல யாருக்காவது பிரதமர நல்லா தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி எனக்கு 3 லட்சத்த வாங்கி குடுங்கங்க. மல்லையா, அதானி மாதிரி நான் மஞ்ச கடுதாசில்லாம் குடுக்க மாட்டேன். ஏற்கெனவே, என்னோட 20 வருஷத்து  லோன 10 வருசத்துக்குள்ள வேற கட்டி முடிச்சிருக்கேங்க. அதனால... கொஞ்சம் பிரதமருகிட்ட சொல்லி அதானிக்கு மாதிரி இந்த அப்பிராணிக்கும் சிபாரிசு பண்ணுங்களேன்.

= வை.ரவீந்திரன்.
 

Monday 17 November 2014

தட்டழியும் தட்டச்சு இயந்திரங்கள்





கால் காசு உத்தியோகம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கணும். 40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த அறிவுரை இப்போதும் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அரசு வேலையை கைப்பற்ற 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய தகுதியாக கருதப்பட்டது, தட்டச்சு. இதனால், 1990களில் தட்டச்சு பயிற்சிக்கு இருந்த மவுசே தனி. சில பகுதிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலைமை எல்லாம் இருந்தது. மையங்களில் உள்ள தட்டச்சு இயந்திரங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசுகளும் கூட தேவைப்பட்ட காலம் அது. சில மையங்களில் டூடோரியலும் இணைந்து செயல்பட்டது.

இதனால், மினி கல்லூரி போல இயங்கிய தட்டச்சு மையங்களில் காதல் மலர்கள் மலர்ந்த அனுபவங்களையும் கல்லூரிகளுக்கு நிகரான காதல் கலாட்டாக்களையும்  நடுத்தர வயதை கடந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அப்போது 10வது தேர்ச்சி பெற்றால் மட்டுமே தட்டச்சு தேர்வு எழுத முடியும். இப்போது, 7வது முடித்தாலே ‘பிரி ஜூனியர்’ தேர்வை எழுதலாம். ஆனாலும், இன்றைய காலத்தில் தட்டச்சு வழக்கொழிந்து வருகிறது. மகாராஷ்டிராவில், 2015ம் ஆண்டு நவம்பருக்குள் தட்டச்சு மையங்களை முற்றிலுமாக நீக்கி விட்டு கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றுத் தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தட்டச்சு மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் தட்டச்சு மையங்களாக மாறி வருகின்றன. டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது அமலாகி விட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை என காரணம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும் தட்டச்சு மையங்கள் தட்டழிந்து தான் வருகின்றன.

இன்றைய தட்டச்சு மையங்களில் பெரும்பாலானவை, முந்தைய தலைமுறையால் விட்டு செல்லப்பட்டு வாரிசுகள் நடத்தி வருபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டச்சு மையங்களின் நிலைமை குறித்து அவற்றின் நிர்வாகிகளிடம் கேட்டால், ‘தந்தை நினைவாக இதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்’ என்ற பதிலே அதிகமாக கிடைக்கிறது. கம்ப்யூட்டர் கீ போர்டு பயிற்சிக்காகவே மாலை நேரங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அந்த காலத்தில் ஒவ்வொரு மணவருக்கும் மெஷின்களை ஒதுக்கி கால அட்டவணை போடுவதே தனி வேலையாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது.

இன்றைய அலுவலகங்களில் தனியாக நெட்வொர்க் என்ஜினீயர்கள் இருப்பது போன்று. முன்பெல்லாம் தட்டச்சு இயந்திரங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் தனி மெக்கானிக்குகள் இருந்தனர். ரெமிங்டன், கோத்ரேஜ், பாசிட் போன்ற முன்னணி தட்டச்சு இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் செலவிலேயே மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்தன. இது மட்டுமல்ல தட்டச்சு தேர்விலும் தட்டச்சு இயந்திர பராமரிப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மெக்கானிசம் வகுப்புகள் தனியாக உண்டு. அதற்காக, தட்டச்சு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் மெக்கானிக் ஒருவர் வந்து பயிற்சி அளிப்பது உண்டு.

தற்போது, தட்டச்சு  மையங்களே தத்தளிக்கும் நிலையில் அந்த இயந்திரங்களின் மெக்கானிக்குகளுக்கு வேலை இல்லை. பிளம்பிங், வயரிங் என வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். எனினும், 60 வயதை கடந்த ஒரு சிலர் மட்டும் ‘அந்த காலத்தில் ஓய்வே இல்லாமல் ஊர் ஊராக சென்று சர்வீஸ் செய்து வந்தோம்’ என்று வீட்டில் விட்டத்தை வெறித்தபடி நினைவலைகளை அசை போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில், ஒரு சிலர் இன்னமும் அந்த மெக்கானிக் பணியையே தொடருகின்றனர். தபால் அலுவலகங்களில் இருந்த தந்தி முறை வழக்கொழிந்து விட்டது போல, தட்டச்சும் முடிந்து விடுமோ என்ற நிலைமை உருவாகி உள்ள போதிலும், அப்படி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளுகின்றன, தட்டச்சு பள்ளிகள். நம்பிக்கை தானே வாழ்க்கை....!!!!

= வை.ரவீந்திரன் 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். 

இந்த பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பத்து என்ன என்று தெரியுமா?
.
.
.
.
.
1) தன்மான உணர்வு,
2) குடும்ப கவுரவம்,
3) கல்வி,
4) அழகு,
5) அறிவு,
6) இரக்க குணம்,
7) அற சிந்தனை,
8) உயர்ந்த பெருமை,
9) விடா முயற்சி அல்லது ஊக்கம்,
10) பெண் ஆசை அல்லது காம உணர்வு.


இதை நான் சொல்லலீங்க...
தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்லி வச்சிருக்காங்க... அவர் எழுதிய பாடல் இதோ.....
.
.
.
.
.
மானம்குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம். 


-  நல்வழி பாடல்

Monday 10 November 2014

வதந்தியால் வீழ்ந்த துய்ப்ளக்ஸ்






 = வை.ரவீந்திரன்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றிய வரலாறு எழுதும்போது ராபர்ட் கிளைவ் பெயரை எழுதாமல் நிறைவு பெறாது. அதுபோல, பிரெஞ்சு ஆட்சி பற்றி எழுதினால் ஒருவரை தவிர்க்கவே முடியாது. அவர், துய்ப்ளக்ஸ். இந்தியாவுக்குள் இருந்த பிரெஞ்சு காலனி பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். இந்தியாவுக்குள் வணிக நோக்கில் நுழைந்த மேலை நாட்டவர்களில் பிரெஞ்சியரும் உண்டு. அதற்காக, ‘பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி’ என்ற வணிக நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதில் பணி புரிவதற்காக 1731ல் தனது 35வது வயதில் இந்தியாவுக்கு வந்தார் துய்ப்ளக்ஸ்.

தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்திர நாகூர் என்ற மாநகரம், அப்போது பிரெஞ்சியர் வசம் இருந்தது. அங்கு தான் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அதன் இயக்குநராக 10 ஆண்டு பணிபுரிந்த துய்ப்ளக்ஸ் திறமையை பார்த்து இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக பிரான்ஸ் மன்னர் நியமித்தார். இதையடுத்து, காலனி ஆதிக்க தலைநகரான புதுச்சேரியில் 1942ம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றார்.

துய்ப்ளக்ஸ் பதவியேற்றபோது தற்போதைய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் செயின்ட் லூயி என்ற பிரமாண்டமான கோட்டை இருந்தது. அதுவரை கவர்னர் ஜெனரலின் ஆளுகை அலுவலகமாகவும் தங்கும் இடமாகவும் அந்த கோட்டை இருந்தது. துய்ப்ளக்ஸ் வந்த பிறகு, கவர்னருக்கென தனி மாளிகை உருவாக்கினார். அது தான், இன்றளவும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் மாளிகையாக செயல்படும் ராஜ்நிவாஸ். துய்ப்ளக்ஸ் காலத்துக்கு பிறகு சென்னையில் இருந்து வந்த ஆங்கிலேய படைகளால் அந்த கோட்டை சின்னா பின்னமாக்கப்பட்ட போதிலும், ஆளுநர் மாளிகை மட்டும் மீண்டும் எழுந்தது.

இந்தியா முழுவதையும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட துய்ப்ளக்ஸ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயருடன் அடிக்கடி போர் நேரிட்டது. அதில் முக்கியமான போராக சென்னை போரை கூறலாம். தளபதி மாகே லாபுர்தனே தலைமையில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பெரிய கடற்படை ஒன்று 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று சென்னையை கைப்பற்றியது.  அப்போது பிரெஞ்சு படையிடம் அடி பணிந்த ஆங்கில படையின் தளபதியாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இது மட்டுமல்ல மேற்கில் செஞ்சி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, தக்காணம் என துய்ப்ளக்சின் வெற்றியால் பிரெஞ்சு ராஜ்ஜியம் மேற்கு நோக்கி விரிவடைய தொடங்கியது.

ஆனால், திருச்சி, ஸ்ரீரங்கம் என தெற்கு நோக்கி சென்ற அவருடைய படைகள் தோல்வியை ருசிக்க தொடங்கின. அதற்கு காரணமாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இதற்கிடையே, துய்ப்ளக்ஸ் அடைந்த வெற்றிகள் குறித்த செய்திகளை விட தோல்வி பற்றிய செய்திகளும் அது தொடர்பான வதந்திகளும் மிக வேகமாக பிரான்சுக்கு இறக்கை கட்டி பறந்தன. இதனால், அவரை பதவியில் இருந்து பிரான்ஸ் அரசு 1754ம் ஆண்டு நீக்கியது. அவரையும் நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. இந்தியாவில் துய்ப்ளக்சின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஆதிக்கப் பகுதிகளில் தனது புகழை நிலைநாட்டி விட்டு தனது 60வது வயதில் நாடு திரும்பினார்.

துய்ப்ளக்ஸ் ஆட்சி காலம் முழுவதும் அவருக்கு துபாசாகவும் (மொழிபெயர்ப்பாளர்) வர்த்தக ஆலோசகராகவும் இருந்தவர், அனந்தரங்க பிள்ளை(1709-1761). அவர், 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகாலம் எழுதி வைத்த நாட்குறிப்புகள் தான் இன்றளவும் புதுச்சேரியின் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவுகின்றன. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலுக்கு என தனியாக பிரத்தியேக ஆடையை வடிவமைத்ததோடு பிரெஞ்சிந்திய ராணுவ சிப்பாய்களுக்கும் சீருடை அறிமுகம் செய்தவர், துய்ப்ளக்ஸ்.  இந்தியாவில் கைம்பெண் திருமணம் என்ற வார்த்தையே கேள்விப்படாத காலத்தில் கைம்பெண் திருமணத்தை அறிமுகம் செய்தவரும் துய்ப்ளக்ஸ் தான். தனது நண்பன் ஆல்பர்ட் இறந்த பிறகு ஆதரவற்று நின்ற அவரது மனைவி ழான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சியை விரிவு படுத்தும் முயற்சிகள் தொடங்கி பல்வேறு வழிகளிலும் புகழ் பரப்பி நின்ற துய்ப்ளக்சின் இறுதி காலம் மிகக் கொடுமையானது. இந்தியாவில் சிம்மமாக உலவிய அவர், பிரான்ஸ் திரும்பியதும் தேச துரோக குற்றத்தை எதிர்நோக்கினார். நீதிமன்ற விசாரணையில், அவரது சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அவருக்கு முன்னதாகவே பிரான்சுக்கு திரும்பி இருந்த வதந்திகளே வெற்றி பெற்றன. அவரால், தீர்ப்பை மட்டுமே தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடிந்தது. அதற்குள், விதி முந்திக் கொண்டது. இந்தியாவில் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவடைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை  பின்னாளில் தான் பிரான்ஸ் அரசு அறிந்தது. 

ஆனால், தனது மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய குறிப்பில், “ஆசியாவில் எனது நாட்டை வளப்படுத்துவதற்காக எனது இளமை, செல்வம், வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்தேன். ஆனால், எனது பணிகள் அனைத்துமே வெறும் கட்டுக் கதைகளாக இங்கு (பிரான்ஸ்) கருதப்படுகின்றன. மனித இனத்திலேயே மிக மோசமானவனாக நடத்தப்படுகிறேன். எனது சிறிதளவு சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் கொடிய வறுமையில் வாடுகிறேன்” என குமுறி இருக்கிறார், துய்ப்ளக்ஸ். இத்தகைய மனக் குமுறலுடனேயே 1763ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். இன்றைய காலத்தை போல கணினி, மெயில் என தொழில்நுட்ப வசதிகள் பெருகாத சூழ்நிலையில் மிக வேகமாக பிரான்சுக்கு பறந்து சென்ற வதந்தி, துய்ப்ளக்சின் புகழை சிதைத்ததோடு அவரது உயிரையும் பறித்தது.

இந்தியாவில் ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் துய்ப்ளக்சின் பெருமைகளை பிரெஞ்சு கலாச்சாரத்தை கைவிடாமல் உள்ள புதுச்சேரி மாநிலம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அவரது சிலையை காணலாம். வாழும்போது அவதிப்பட்டு, வாழ்க்கைக்கு பிறகு கொண்டாடப்படுபவர்களில் துய்ப்ளக்சும் ஒருவர்.


(நவ.10  - 1763 துய்ப்ளக்ஸ் நினைவு தினம்)

= வை.ரவீந்திரன்  
(புதுவையின் பழமை - நூலாசிரியர்)

Friday 7 November 2014

ஆறில் இருந்து அறுபது .....

= வை.ரவீந்திரன்





ஒரு துறையில் 50 ஆண்டுக்கு மேல் நிலைத்து இருப்பதும் சிறந்தவராக கோலோச்சி நிற்பதும் சாதாரண விஷயம் கிடையாது. வெகுஜன ரசிப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட திரையுலகில் அதை நிகழ்த்துவது என்பது இரண்டு தலைமுறைகளின் ரசிப்புத் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அதை சரியாக உணர்ந்து உலக நாயகனாக உலா வருபவர் கமல்ஹாசன்.

தனது இளமை பருவத்தில் ‘ஏக் துஜே கேலியே’, ‘மரோ சரித்திரா’, ‘மூன்றாம் பிறை’ என கமலை பல்வேறு மொழிகளிலும் ரசித்து பார்த்து தனது காதலை வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தன்னுடைய இளமை பருவ காலத்தில் கமல் திரைப்படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் கரம் பிடித்து 6 வயதில், ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம் திரையுலகில் பிரவேசித்தவர், இந்த பரமக்குடி தமிழன். மெத்த படித்த குடும்பத்தில், பல வக்கீல்களை கொண்ட குடும்பத்தில் பிறந்த கமல், பள்ளி படிப்பை தாண்டாதவர். திரையுலக பிரபலம் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட உயர்வு எப்போது கிடைக்கும் என சிந்திக்கும் நடிகர்கள் மத்தியில் தமிழ் திரையுலகையும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்துக் கொண்டு இருப்பவர்.  

பால்யம் முடிந்து பருவம் தொடங்கிய கால கட்டத்தில் நடிப்பா?, நடனமா? என்ற மயங்கி நின்று, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர். ஆனால், காலம் அவரை பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி இழுத்து வந்தது. உண்மையில், காலம், விதி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத நாத்திகர் கமல். ஆனால், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வழியில் நடப்பவர்.

அதனால் தான், நடிப்பையும் தாண்டி எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றிருக்கிறது. 16 வயதினிலே, அவள் அப்படித்தான்,  ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள் குணா,  மூன்றாம் பிறை, பேசும்படம், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அவரது படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக  அரசியலில் அங்கீகாரம் பெற நடைபெறும் முயற்சிகளை காணும்போது, தன்னை காய்த்த மரம் என அவர் நிரூபித்துக் கொண்டிருப்பது புரிகிறது.  

ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அந்த கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் கமலுக்கு உண்டு. அதனால், தான் சண்டியர் என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியபோது அந்த கதைக்கு சண்டியரை விட மிகவும் பொருத்தமான விருமாண்டி என்ற தலைப்பை அவரால் உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. உண்மையில், ‘விருமாண்டி’ என்பது தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குல தெய்வத்தின் பெயர். சண்டியர் என்பது ஊருக்குள் அடங்காமல் திரிபவர்களை குறித்த பொதுப் பெயர். எந்த ஒரு சமுதாயத்துக்கும் உரித்தான பெயர் அல்ல.

திரையுலகை தாண்டி இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு நல்ல பரிச்சயம் அனுபவம் இருந்தாலும் திரையுலகில் மட்டுமே அவரது முழுமையான அர்ப்பணிப்பு உள்ளது. இந்த உலகில் உள்ள வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் கமலின் திரை தொழில் மீதான பற்றுதலானது நல்ல படிப்பினை. ஒவ்வொரு தனி நபரும் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் மேலும் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதை கமலிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவரது, சக ஊழியர்களான திரை உலகினருக்கும் இது பொருந்தும்.

சினிமா என்பது பலருக்கும் பொழுதுபோக்கு. மிகச் சிலருக்கோ கலைப் படைப்பு. ஆனால், கலைப்படங்களை கொண்டாடும் சமுதாயத்தில் நாம் இல்லை. எனினும்,  பொழுதுபோக்கு படத்தையே கலையாக மாற்றும் வித்தையை கற்றவர் கமல். அதுபோன்ற முயற்சிகளில் கையை சுட்டுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அதை தொடருகிறார்.

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் அவரால் முடியும். ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகவும் அவரால் முடியும். இந்தியன் தாத்தா, தசாவதாரம் பாட்டி என முற்றிலுமாக தன்னை மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். அனைவரையும் போல, சாமான்ய ரசிகர்களை திருப்தி படுத்தும் மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் மகா நடிகர்.

அதனால் தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட, ‘ஏன் இன்னும் ஆஸ்கர் விருதை கமல் வாங்க முடியவில்லை’ என்று கேள்வி எழுப்புகின்றனர். கமல்ஹாசனால் மட்டுமே அத்தகைய விருதை பெற்றுத் தர முடியும் என அவர்களும் நம்புவதன் வெளிப்பாடே அது. அனைவரின் நம்பிக்கையை பெற்று ஆறில் தொடங்கி அறுபதை கடந்து பயணிக்கும் கமலின் கலைப் பயணம் தொடரட்டும்.

ஹாட்ஸ் ஆப் கமல்....

சிந்தனைக்கு....



”இந்தியா நாடு முழுவதும் வடக்கு, தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் முழுமையான சுற்றுப்பயணம் செய்தேன். ஒரு பிச்சைக்காரனையோ அல்லது ஒரு திருடனையோ என்னால் காண முடியவில்லை. அந்த நாட்டின் உயர்ந்தபட்ச நீதி நெறிமுறைகள் போன்ற சொத்தை எங்கும் நான் கண்டதில்லை. மிகச் சிறந்த கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம், ஆன்மிகம் என இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் சிலவற்றை நாம் உடைக்காதவரை அந்த நாட்டை நாம் நிரந்தரமாக ஆளுவது முடியாத காரியம் என நான் கருதுகிறேன்.

அதனால், அந்த நாட்டின் மிகப் பழமையான கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை மாற்றும் வகையிலான ஒரு திட்டத்தை இங்கு முன் மொழிகிறேன். தங்களுடைய சொந்த கல்வி முறை மற்றும் கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம் ஆகியவற்றை விட மேலைநாட்டு ஆங்கிலேய கல்வி முறையே சிறந்தது என இந்தியர் ஒவ்வொருவரும் கருதத் தொடங்கினால் அவர்களுடைய சுயத்தையும் இயற்கையான கலாச்சார பண்பாடு போன்றவற்றை இழப்பார்கள். எவ்வாறு அவர்கள் மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு தகுந்தவாறு அவர்கள் மாறுவார்கள். தொடர்ச்சியாக அவர்களை நம்மால் எளிதாக மேலாதிக்கம் செய்ய முடியும்”

= இது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பிரபு ஆற்றிய உரை.

(பி.கு: இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை அறிமுகம் செய்தவர் தான், இந்த மெக்காலே. இந்திய கல்வி முறைக்கு மெக்காலே கல்வி திட்டம் என்ற பெயரும் உண்டு)

Monday 3 November 2014

தத்தளிக்குமா? தப்பிப் பிழைக்குமா? புதிய தமாகா


தமிழக அரசியல் வானில் கூடுதலாக ஒரு கட்சி உதிக்க தொடங்கி விட்டது. ஏற்கனவே, 1996ம் ஆண்டு உதித்து 6 ஆண்டுகளில் உதிர்ந்து போன கட்சி தான். தற்போது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அப்போது, அந்த கட்சி உதயமான தருணத்தில் தமிழக மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குளத்தில் குளியல், தமிழகமெங்கும் இடங்களை வளைத்து போடுவது, ஊழல் என அதிமுக மீது மக்களுக்கு மிக அதிக அளவிலான வெறுப்பு நிலவியது. அதே நேரத்தில், திமுக மீதும் அதிக அளவில் பாசம் ஏற்பட்டு விடவில்லை. எம்ஜிஆர் காலம் தொட்டு நீடித்த வெறுப்பு அப்போதும் அடங்கவில்லை. அந்த வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலேயே 1989ம் ஆண்டு அமைந்த திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியும் இருந்தது. இப்படி இரண்டு கழகங்கள் மீதும் தமிழக மக்கள் வெறுப்பில் இருந்த சமயத்தில் தான் 1996ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. அப்போது, பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். காங்கிரஸ் மேலிட முடிவை எதிர்த்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற ஒற்றை அஜன்டாவுடன் உதித்தது தான் தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் மற்றும் முக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அணி திரண்டனர். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனையும் தமாகா கைப்பற்றியது. அதிமுக கூட்டணியை எதிர்த்ததன் மூலமாக காங்கிரஸ் பாராம்பரிய மானம் மற்றும் கவுரவத்தையே அந்த கட்சி காப்பாற்றி விட்டது போன்ற பிரச்சாரமும் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு எதிரான மன நிலையில் இருந்த ரஜினிகாந்தும் மூப்பனாருக்கு ஆதரவு கரம் நீட்டினார். நடிகர் சரத்குமாரும் வாலன்டியராக பிரசாரம் செய்ய முன்வந்தார். இவ்வளவு சாதகமான சூழ்நிலை கனிந்தும் கூட, மூப்பனாரால் தமிழக அரசியலில் ஒளிர முடியாமல் போய்விட்டது.

‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது, கருணாநிதியின் ராஜதந்திரம். அந்த சமயத்தில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதனால், மூப்பனாரை தேசிய அரங்குக்கு தள்ளி விடும் வகையில் கருணாநிதியின் அரசியல் சதுரங்க மூவ் அனைத்தும் அமைந்தன. தேசிய அரசியல் என்பது மிகப்பெரிய கடலில் சுறா மீன்களுக்கு இடையே ஜீவிப்பது. இது கருணாநிதிக்கு தெரியும். ஆனால், தேசிய அரசியலில் இருந்த மூப்பனாருக்கு தெரியவில்லை. மாநில கட்சி மூலமாக தேசிய அரசியல் செய்யும் அனுபவத்தின் ஆரம்ப கட்டத்தை அப்போது தான் அவர் தொடங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் சரிபாதியை மூப்பனாருடைய தமாகாவுக்கு ஒதுக்கி விட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதியை எடுத்துக் கொண்டது, திமுக. இந்த பார்முலாப்படி திமுக=தமாகா கூட்டணி தோன்றியது. உண்மையில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருந்தாலே ரஜினி ஆதரவோடு பெரிய வெற்றியை தமாகா பெற்றிருக்கும் அல்லது தமிழகத்தில் புதிய ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு பலத்தையாவது சட்டசபையில் தமாகா பெற்றிருக்கும். அதை கருணாநிதி அறிவார். அதனால் தான், சட்டப்பேரவை தொகுதிகளில் தமாகாவுக்கு குறைவாக ஒதுக்கினார். பாராளுமன்ற தொகுதிகளில் தாராளம் காட்டினார். இதை மூப்பனார் புரிந்து கொள்ளாதது அவரது துரதிர்ஷ்டம்

கட்சி ஆரம்பித்து சில நாட்களில் பெற்ற சைக்கிள் சின்னம், ரஜினிகாந்த் ஆதரவு, தென்மாவட்டங்களில் நடிகர் சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களின் இடைவிடாத தீவிர பிரசாரம், ‘றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமல சைக்கிள்’ என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் ஆகியவை இணைந்து கூட்டணியை வெற்றி முகட்டில் ஏற்றியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அறிமுகமில்லா வேட்பாளரிடம் பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். தமிழகமே சுத்தமாகி விட்டது போன்ற உணர்வு அப்போது நிலவியது. தமிழக ஆட்சியை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது, தமிழ் மாநில காங்கிரஸ்.

அதே நேரத்தில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்தது. இந்த சமயத்தில் தான், தேவகவுடா பிரதமரான அதிசயமும் நடைபெற்றது. ஏற்கனவே, 43 எம்பிக்களுடன் சந்திரசேகர் பிரதமரான அதிசயமும் 1990ல் இந்தியாவில் நடந்திருந்தது. அந்த வரிசையில் திமுக எம்பிக்களையும் சேர்த்தால் 40 எம்பிக்கள் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடனும் பிரதமர் பதவியில் மூப்பனார் அமருவதற்கான சூழ்நிலை கனிந்திருந்தது. தமிழகத்தில் ஏமாந்ததை தேசிய அளவில் அவர் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டது. தமிழன், பிரதமராகும் வாய்ப்பு கருகிப்போனது. அதற்கான காரணம், ஊரறிந்த ரகசியம். இதனால், இந்த கூட்டணி 3 ஆண்டுகள் வரையே தாக்குப் பிடித்தது. 1999ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு திமுக தாவியதால் கூட்டணி, ‘பணால்’ ஆனது.

1996ல் தானாக கனிந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ள மூப்பனார் தவறியதன் விளைவுகள், 1999 முதல் தொடங்கின. இறுதியாக, எந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி தமாகா கட்சியை 1996ல் தொடங்கினாரோ அதே அதிமுகவுடன் 2001 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ் மாநில காங்கிரஸ் கைப்பற்றியது. சில மாதங்களில் மூப்பனார் மறைந்தார். அதன்பிறகு, அந்த கட்சியின் தலைமை பதவிக்கு வந்த ஜி,கே.வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடனே தமாகாவை இணைத்து விட்டார். இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். புதிய கட்சியை தொடங்குகிறார்.

ஆனால், அப்போது தமாகாவில் இருந்தவர்கள் இப்போதும் அவருடன் இருக்கிறார்களா? 1996ல் வாய்ப்பை தவறவிட்ட வாய்ப்பை புதிதாக தொடங்கும் தமாகாவால் பெற முடியுமா?  இப்போது பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து நல்ல ஓட்டு வங்கியுடன் வலிமையாக உள்ளன. இந்த சூழ்நிலையில்,  புதிய கட்சியை கொண்டு ஜி.கே.வாசனால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே இலங்கையில் இன அழிப்பு சமயத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவை இன்னும் தமிழக மக்கள் மன்னிக்க தயாராக இல்லை. அந்த அரசில் தான் வாசனும் அமைச்சராக இருந்தார். இதுபோல, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது கூறப்படும் ஊழல்களில் வாசனுடைய பதில் என்னவாக இருக்கும்? காங்கிரசில் இருந்து வெளியேறும் தமாகாவுக்கும் அந்த ஊழல் குறித்து பொறுப்பு உண்டா...? இல்லையா...?

இது மட்டுமல்ல, கட்சியை காங்கிரசில் இணைத்த பிறகு இரண்டு முறை ராஜ்யசபா எம்பியாக (12 ஆண்டுகள்)வும் மத்திய அமைச்சராகவும் வாசன் இருந்துள்ளார். எனவே, மத்தியில் அதிகாரத்தை காங்கிரஸ் இழந்து விட்டதால் புதிதாக மீண்டும் தமாகா உருவாகிறதா? என்ற சந்தேகமும் சாதாரண மக்கள் மனதில் தோன்றுகிறது. ஏற்கனவே, 1996 முதல் 2004 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத சமயத்தில் தான் தமாகா என்ற கட்சி இயங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கட்சி தனித்து செயல்படுமா அல்லது தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளைப் போல கிடைத்த இடங்களை பெற்றுக் கொண்டு திராவிட கட்சிகளின் கீழ் அடங்கிப் போய் விடுமா ....? இந்த கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் அளிக்கும் பதில்களை பொறுத்தே தமிழக அரசியல் ஆழியில் தமாகா தத்தளிக்குமா? அல்லது தப்பிப் பிழைக்குமா? என்று தெரியவரும்.

= வை.ரவீந்திரன்