Wednesday 20 December 2017

ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன்...

ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன்...


எத்தனையோ பேர் வந்தாலும் திறமைகள் குவிந்திருப்பவரைத்தான் மக்கள் எப்போதுமே ஏற்றுக் கொள்வார்கள். அதுவும் இரண்டு மூன்று தலைமுறைகளை கட்டிப் போடும் திறமையும் அதிர்ஷடமும் சிலருக்கே வாய்க்கும். அதில் ரஜினிக்கும் இடமுண்டு.

40 ஆண்டுக்கு முன் 16 வயதினிலே தொடங்கி மூன்று முடிச்சு என வரிசையாக தொடர்ந்த ரஜினியின் வில்லத்தனமான நடிப்பு... சந்திரமுகி வேட்டையன்,  எந்திரன் சிட்டி வரை சூடு குறையாமல் இருப்பதை கண்டு வியக்கும் ரசிகன் நான்.

தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் இப்படியாக சந்திரமுகி சரவணன் வரை ஆண்டுகளை கடந்தும் கலகலப்பூட்டும் ரஜினியின் நகைச்சுவைக்கு நிரந்தர ரசிகன் நான்.

ரஜினியின் சண்டை காட்சிளை 1980களின் குழந்தைகள் தொடங்கி 2010களின் குழந்தைகளும் ரசிப்பதை சாதாரணமாக பார்க்க முடியாது. எந்த ஒரு மனிதரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என கூற முடியாது. ஆனால், திரைப்படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களை கவரும் 68 வயது இளம் காந்தத்தை வியக்கிறேன்.

=நெல்லை ரவீந்திரன்

துயிலெழுப்பும் அதிகாலை...

துயிலெழுப்பும் அதிகாலை


இதழெனும் போர்வை மூடி
இதமூட்டும் நறுமண மலரின்
மகரந்த மெத்தையில்
மயங்கி கிடக்கும் வண்டினத்தை
பறவைகள் பூபாளம் இசைக்க
பனித் துளிகள் பன்னீர் தெளித்து
துயிலெழுப்பும் 
அதிகாலைப் பொழுது...


= நெல்லை ரவீந்திரன்


குறுநகை புரிகிறாள் எழுத்து காதலி...

குறுநகை புரிகிறாள் எழுத்து காதலி...


மழைக்கால ஈசல் போல
சுற்றி சுழலுகின்றன எழுத்துகள்
ரீங்காரமிடும் ஓசையில்
ஒவ்வொன்றாய் பிடித்துப் போடுகிறேன்
நெல்லிக்கனி எண்ணும் சிறுவனாய்

சிறு சிறு சரமாக கோர்க்கிறேன்
மாலை தொடுக்க முயற்சிக்கிறேன்
எழுத்து மலர்கள் சிதறுகின்றன
ஒன்றும் வகைப்படவில்லை
ஒழுங்கற்று சிதறுகின்றன
மணல் சிற்பமாய் சிதறுகிறது
அடுக்கி கோர்த்த எழுத்தோவியம்

கவிஞனா, எழுத்தாளனா
தகவல் கூறும் கட்டியக்காரனா
குழம்பும் மனம் பார்த்து
கேலி கும்மியடிக்கின்றன 
தன்னை உதிர்த்துக் கொண்ட எழுத்துகள்

கவிப்பாதையில் செல்லும் 
எழுத்து கோர்ப்பவனை பார்த்து 
பரிகசிக்கும் எழுத்துகள் 
அதை பார்த்து தவிக்கும் 
தகவல் கட்டியக்காரனின்
கனவில் குறுநகை புரிகிறாள்
என்னுடைய எழுத்து காதலி...

= நெல்லை ரவீந்திரன்



Sunday 10 December 2017

எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...


எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...
 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசும் பெரும்பாலானோரின் கருத்துகளில் தவறாமல் இடம் பெறும் பெயர் எம்.ஜி.ஆர்.  ரஜினியை ஆதரிப்பவர்களும் சரி. எதிர்ப்பவர்களும் சரி. எம்.ஜி.ஆரை உதாரணம் காட்ட தவறுவதே கிடையாது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நடிகராக நீடித்ததை தவிர, எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை யோசிப்பதில்லை. அதுவே, அரசியலுக்கு தகுதி என்ற ரீதியில் பேசுகின்றனர். 



1950ம் ஆண்டில் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான மந்திரி குமாரி படத்தில் நடித்தபோதே திராவிட இயக்கத்துடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்.  தென்குமரி தொடங்கி இமயமலை வரையிலும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலத்திலேயே, அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுப்பதில் எந்த அளவுக்கு உறுதி வேண்டும். அதுவும் திரை உலகில் ஆரம்பகட்ட நடிகராக இருந்த ஒருவருக்கு... இந்த உறுதி ரஜினியிடம் இருக்கிறதா...? 

1951 முதல் 1967 வரை 17 ஆண்டு காலம், தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நேரத்தில், அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்ததோடு, நடிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தி.மு.க மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக ஊர் ஊராக சென்றவர், எம்.ஜி.ஆர். அதுபோன்று ஆளும் தலைமையை  தொடர்ந்து எதிர்க்கும் துணிச்சல் ரஜினியிடம் துளி கூட கிடையாது. 

எம்.ஜி.ஆரின் பாடல்களில் கூட நேரடியாகவே கொள்கை பிரச்சார நெடியை பார்க்கலாம்.  அதன் தாக்கம் தாங்க முடியாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்த நெருக்கடி அதிகம். பெற்றால்தான் பிள்ளையா படத்தின் பாடலில், 'மேடையில் முழங்கு... அறிஞர் அண்ணா போல்...'  என்ற பாடல் மேடையில் முழங்கு திரு.வி.க. போல் என மாற்றப்பட்டதே அதற்கு சாட்சி. இப்போதும் இரண்டு விதமான வரிகளில் அந்த பாடல்களை கேட்கலாம்.

முழுக்க முழுக்க காங்கிரஸ்காரரான ஏ.வி.எம். தயாரித்த அன்பே வா படத்திலேயே, 'உதய சூரியனின் பார்வையிலே... உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...' என்ற வரிகளை வைத்தவர், எம்.ஜி.ஆர். 'ஓடும் ரயிலை வழி மறித்து, அதன் பாதை தனிலே தலை வைத்து...' என்ற எங்கள் தங்கம் பாடல் தொடங்கி, 'கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு...' என காதல் பாடல் வரை கட்சியை நினைவூட்டிக் கொண்டே இருந்தவர், எம்.ஜி.ஆர். 

இது மட்டுமல்ல, நல்லவன் வாழ்வான் போன்ற கருப்பு வெள்ளை படங்களில் வரும் வீடுகளின் ஜன்னல், கதவுகளில் உதய சூரியன் போன்ற வடிவமைப்பு இருப்பதை பார்க்கலாம். ஈஸ்ட்மெண்ட் கால படங்களில் எம்.ஜி.ஆரின் காஸ்ட்யூமே கருப்பு, சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும். இவை எல்லாம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 17 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர். செய்த அட்ராசிட்டிகள். இதில் துளி அளவு துணிச்சலாவது ரஜினியிடம் இருந்ததா...? 

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தபோது சிறிதளவு முணுமுணுப்பை கூட காட்டாத ரஜினி, இப்போது சிங்கம், புலி இல்லாத சமயத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என கூறிக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் அவரது துணிச்சல். எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோதே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் நடித்ததோடு, தி.மு.க. கரை வேட்டியையும் கட்டி நடித்துக் கொண்டு, மறைமுகமாக தி.மு.க. ஆதரவு நடிகர் போலவே வலம் வந்த விஜயகாந்திடம் இருந்த தைரியம் கூட ரஜினிக்கு கிடையாது. 

இது தவிர, அரசியல் அனுபவம் என்று பார்த்தால் கூட, எம்.ஜி.ஆருடன் ஏணி வைத்தால் கூட எட்டாது. எம்.ஜி.ஆர். தனது 45ஆவது வயதிலேயே (1962ம் ஆண்டு) எம்.எல்.சி.யாகி விட்டார். அதன்பிறகு, 1967 முதல் இறக்கும் வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 1969ல் அண்ணா மறைந்ததும் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலையில், தி.மு.க.வில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படாமல் கருணாநிதியை முதலமைச்சராக்கியதில் எம்.ஜி.ஆருக்கும் கணிசமான பங்கு உண்டு. பின்னர், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது ஆட்சியின் நெருக்கடியையும் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கொடுத்த தொல்லைகள் ரஜினிக்கு தெரியுமா...? அதை எல்லாம் எதிர் கொண்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெற்றியே அதற்கு சாட்சி. ஆனால், பா.ம.க.வின் எதிர்ப்பை கூட 'பாபா'வால் சமாளிக்க முடியவில்லையே...?

1977ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராவதற்கு முன் 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்து இருந்தவர் எம்.ஜி.ஆர். நடிப்புடன் கூடவே, அவரது அரசியல் பயணம் நீடித்து இருந்தது. திடீரென கட்சி ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக ஆட்சியை எம்.ஜி.ஆர். பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியலோடு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிடுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

ரஜினி நல்லவர்... வல்லவர்... பச்சை தமிழர்... அவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும்... இப்படி எதை வேண்டுமானாலும் அவரது ஆதரவாளர்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால், எம்.ஜி.ஆருடன் மட்டும் ரஜினியின் அரசியலை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

= நெல்லை ரவீந்திரன்

Tuesday 29 August 2017

அடுத்த முதல்வர்... மக்கள் அங்கீகாரம் யாருக்கு...?

தமிழக அரசியலுக்கும் திரைத் துறைக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதனால் தான், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சூழ்லையில் மீண்டும் சினிமா பக்கம் தனது பார்வையை தமிழகம் திருப்ப, அங்கிருந்தும் சில சிக்னல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரஜினி, கமல், விஜய், விஷால் என தமிழ் ஹீரோக்களுக்கு அரசியல் ஆசை முளை விட்டு துளிர்த்து செடியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மரமாகும் முன் சிலவற்றை அலசிப் பார்ப்பது நல்லது.

திரையில் இருந்து அரசியலுக்கு வரும் அனைவருமே உதாரணமாக கூறும் பெயர் எம்.ஜி.ஆர். ஆனால், காங்கிரஸ்காரர், திமுகவில் 17 ஆண்டு நட்சத்திர பேச்சாளர், எம்.எல்.ஏ, சிறுசேமிப்பு தலைவர் (அமைச்சர் பதவிக்கு நிகரானது), தனிக்கட்சி, எதிர்க்கட்சி என 20 ஆண்டு போராட்டத்துக்கு பிறகே அவர் முதலமைச்சரானார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் போல திமுக அனுதாபியாக இருந்தவர். அரசியலுக்கு வந்து மாநிலங்களவை எம்.பி., தனிக்கட்சி, எதிர்க்கட்சி தலைவர் என 10 ஆண்டுகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகே, 1991ல் அவரால் முதலமைச்சராக முடிந்தது.



தற்போது, தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் யாருமே இல்லாத நிலையில் ரஜினியின் அரசியல் ஆர்வம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பாட்ஷா படத்தின்போது அதன் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனுக்கு ஜெயலலிதாவுடன் முரண்பாடு இருந்தது. அந்த சூழ்நிலையில், பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது என குரல் கொடுத்தது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 40 பிளஸ் வயதில் ரஜினி இருந்த கால கட்டம்.


அப்போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் இருந்த சமயம். அதே வேகத்தில் அரசியலில் ரஜினி தீவிர ஆர்வத்துடன் இருந்தார். அதனால் 1996 தேர்தலில் அவரது பங்கு முக்கியமாக இருந்தது. அந்த தேர்தலில் புதிதாக மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரசுடன் ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து கூட்டணி சேர்ந்திருந்தால் அந்த கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும். அந்த சமயத்தில் தான் நீல வண்ணத்தில் நட்சத்திரமிட்ட கொடியையும் ரஜினி ரசிகர்கள் பயன்படுத்த தொடங்கி இருந்தனர். ஆனால், கருணாநிதியின் ராஜதந்திரத்தின் முன்பு, ரஜினியின் அரசியல் அப்போது கருகிப்போனது.

20 ஆண்டுகளுக்கு பிறகு, அரசியல் வசனத்தை நிஜ மேடைகளில் ரஜினி பேசத் தொடங்கி இருக்கிறார். சிஸ்டம் சரியில்லை. போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது இன்றைய அவரது கருத்துகள். ஆனால், மன்றத்தை நடத்துவதற்கும் கட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விரைவில் அடுத்த ரசிகர்கள் சந்திப்பை நடத்தவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார். அதன் பிறகு, அரசியல் பற்றி அவர் முடிவு எடுக்கலாம் அல்லது ஏதேனும் கட்சியில் சேரவோ குரல் கொடுக்கவோ  அவருக்கு நிர்ப்பந்தங்கள் நேரிடலாம்.


ஒன்று நிச்சயம். ரஜினியை மென்மையாக அணுகுபவர்கள் கூட கன்னடர், அவரது மனைவியின் பள்ளி விவகாரம், திருமண மண்டபம் என ஏராளமான விமர்சனங்களை முன் வைப்பார்கள். அவற்றை எந்த அளவுக்கு அவர் எதிர்கொள்வார் என்பது அவரது அரசியலை பொறுத்து இருக்கிறது. ஆனால், போர் வரும்போது பார்க்கலாம் என்ற அவரது கருத்தைப் பார்த்தால், தேர்தல் சமயத்தில் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து விட்டு ஒதுங்கவும் செயயலாம்.


கமலை பொறுத்தவரை திரைப்படத்தை கடந்து பல ஆண்டுகளாகவே ஏதேனும் அரசியல் கருத்தை கூறி வருபவர். தீவிர நாத்திகவாதி, திராவிட இயக்க கொள்கை உடையவர் என்பது அனைவரும் அறிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து 8 மாதங்களாக மிகத் தீவிரமாக டுவிட்டரில் கருத்து கூறி வரும் கமலுக்கு திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், நேரடியாக அரசியலுக்கு இவர் வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இளைய தலைமுறை நடிகர்களில் விஜய் மனதில் அரசியல் ஆசை அதிகமாகவே உண்டு. மக்கள் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அவர் மீது, மெர்சல் படத்தின் பாடல் வரிகளால் அரசியல் முத்திரை அழுத்தமாகவே விழுந்திருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் வரை அனைவருமே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது போல பேசியது தான் இன்றைய பரபரப்பு பேச்சு. ஆனால் அதே மேடையில் பேசிய விஜய், சுற்றி இருப்பவர்கள் இக்கட்டில் தள்ள நினைப்பார்கள் என கூறி இருக்கிறார். இதுவும் கவனிக்கத்தக்கது.

ஆனால், தமிழக அரசியல் களம் அவ்வளவு எளிதானதல்ல. இந்த மூன்று பேருமே தமிழகத்தில் அரசியல் ஆளுமைகள் வலிமையாக இருந்தபோது எதிர்த்து குரல் கொடுக்க துணியாதவர்கள். இதையும் தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இந்த 3 பேருமே கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று எதிர்ப்பு அரசியல் அறியாதவர்கள். 1961 முதல் 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு மேல்சபை எம்.பியாகவும் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரசியல் வெற்றி எப்படி அமைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய சிவாஜி, திருவையாறு தொகுதியில் 1989 தேர்தலில் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பித்த பாக்யராஜ், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் என அரசியலில்  அடி சறுக்கியவர்களின் எண்ணிக்கை ஏராளம். நடிக்கும் போது, தி.மு.க. சார்பு நடிகர்களுடன் நெருக்கமாக இருந்து 2005ல் தனிக்கட்சி தொடங்கிய விஜயகாந்த், அரசியலுக்கு வந்த பிறகு எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தனை… எத்தனை…? அவரது கட்சியின் தற்போதைய நிலை…?

அனைவருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விட்டாலும், மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் தான் வெற்றி என்னும் பட்டம் அரசியல் வானில் வெற்றிகரமாக பறக்கும். தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அதிகம். ஜெயலலிதா மறைந்து விட்டதால் அ.தி.மு.க வாக்குகள் அவர்களுக்குள் சிதறுமே தவிர, மற்றவர்களுக்கு செல்லும் என எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், ரஜினியின் கருத்துகள் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இருந்து வரும் நிலையில், அ,தி.மு.க. அனுதாபிகளின் வாக்கு அவருக்கு செல்லும் என்பது நிச்சயமில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கென கிடைக்கும் வாக்கு வங்கியில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்படும் எனவும் உறுதி இல்லை. ஏனெனில், 1989 தேர்தலின்போது ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, ஜெ., ஜா என இரு அணிகள் வாங்கிய மொத்த வாக்கு சதவீதமானது, தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் சதவீதத்தை விட கொஞ்சம் தான் குறைவாக இருந்தது. இப்போது, ஆட்சி அதிகாரம் இரண்டும் அதிமுக.விடம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் வரை ஓ.பன்னீர் செல்வத்துக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை உறுதி செய்து வருகின்றன. அதாவது, அரசியல் களத்தில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் என புதிய முகங்கள் அறிமுகமாகி மக்களிடம் பிரபலமாகி விட்டது.


இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழக மக்களிடம் ஒரு பிரபல முகத்தை முன்னிறுத்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க வின் முகமாக ரஜினி மாறலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால், அவருக்கு சிவாஜி கணேசனின் நிலைமை மனதுக்குள் வந்து போகும். அதுபோலவே, அ.தி.மு.க.வுக்கும் 30 ஆண்டுக்கு முந்தைய அனுபவம் கண் முன்னே வந்து செல்வதால் தான் இந்த அளவுக்கு பிரிந்து, பிரிந்து… பின்… இணைகிறார்கள். ஆக, தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை இல்லை என்ற குறை மட்டுமே. அதே சமயத்தில், பலமாக இருக்கும் இரண்டு கட்சிகள் மற்றும் அதன் அனுபவஸ்தர்களை தாண்டி புதிதாக ஒருவர் வருவதும், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் எளிதானது அல்ல.

ஆனால், அரசியல் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு பரமபத விளையாட்டு. பிப்ரவரி 15க்கு முன், தினகரனையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக மக்களுக்கு தெரியுமா…? விதி போடும் முடிச்சு என்ன என்பதை காலம் மட்டுமே அறியும். எனினும், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா என ஆதரித்து வந்த தமிழ் மக்கள், தகுதியான ஒரு ஆளுமையைத்தான் எதிர்காலத்தில் தேர்வு செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 22

   
வெற்றிக்கு முன்…
இந்த உலகில் பிறந்த  ஒவ்வொரு மனிதரிடமும், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலாக அவர்கள் நம்புவதை விட அதிகமான ஆற்றல் குடி கொண்டிருக்கிறது. அதை அவர்கள் அறிவதில்லை. ஒவ்வொருவரும் தன்னை சுய பரிசோதனை செய்து தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து வெற்றிப் பாதை நோக்கி செல்ல வழி காட்டுவதே தன்னம்பிக்கை அறிவுரைகள். அதற்கு பல்வேறு பெயர்களை சூட்டினாலும் அதன் பொருள் ஒன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அறிவுரைகள் மேலோட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறதே அன்றி, உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டு நடக்கும்போது வெற்றியின் முதல் படிக்கட்டு புலப்படும். 

சாத்தியமே இல்லை என கருதும் ஒன்றை நோக்கி படிப்படியாக முன்னேறி செல்வதே வெற்றிக்கான வழிமுறைகள். மெதுவாகவும் படிப்படியாகவும் முன்னேறாமல் ஏதோ ஒரு மந்திரக் கோலால் ஒருவர் உயர்ந்தபட்ச அதிகாரத்தை அடைந்து விட்டார் என்றால் அவருக்கு மட்டுமல்லாமல் அவரால் அதிகாரம் செலுத்தப்படும் நபர்களுக்கும் அது அழிவையே தேடித் தரும். அதே வேளையில் தனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை மிகச் சரியாக கண்டறிந்து வழி நடத்தாமல் போனாலும் அழிவு நிச்சயம். ஏனெனில், ஒருவரை வெற்றியின் சிகரத்துக்கு கொண்டு செல்வதற்கு அந்த ஆற்றலுக்கு எந்த அளவு வலிமை உண்டோ, அதே அளவுக்கு அவரை அழிக்கவும் அந்த ஆற்றலுக்கு வலிமை உண்டு. அதனால் தான், எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்று முன்னோர் கூறி வைத்து இருக்கின்றனர்.

இந்த பூமியில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் என்பது மிகவும் சொற்பமானது. தீபத்தை ஏற்றி வைத்து அணைப்பது போன்றது. எனவே, நடுக்காட்டிலோ ஆள் அரவமற்ற பாலைவனத்திலோ செல்லும் அச்சமற்ற பயணி போல எதிர்பார்ப்பு இல்லாமல் பயணிப்பது அவசியம்.  முன்னேற்றம் என்ற கீழ் வானத்தில் புத்திசாலித்தனம் என்னும் கதிரவன் உதித்தால் அறியாமை, சோம்பல், தோல்வி, ஏமாற்றம் என வெற்றிப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அனைத்தும் உதிரிகளாகி பொசுங்கி விடும். அதே நேரத்தில், வாழ்க்கையின் எந்தவொரு கணத்திலும் உண்மையான உழைப்பும் நேர்மையும் மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழி அமைத்து தரும்.
விடா முயற்சி, கற்பனை வளம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, உற்சாகம், சகிப்பு தன்மை, ஆளுமை திறன் என வெற்றிப் பாதைக்கு ஏராளமான உந்து சக்தி இருக்கலாம். அதன் கூடவே, அன்பு என்னும் விதையை தூவிச் செல்லுங்கள். அதனால் விளையும் அறுவடை மகத்தானதாக இருக்கும். தோல்வி என்பது வெளியில் இருந்து வருவது அல்ல. உள்ளுக்குள்ளேயே இருந்து வெளிப்படுவதாகும். எனவே, ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உள்ள வெற்றிக்கான குணங்களில் பலவீனமானது எது என்பதை கண்டுபிடித்து அறிந்து சரி செய்து கொள்வது அவசியம். நம்முடைய பலவீனத்தை விட மிக மோசமான தடை எதுவும் கிடையாது, என்கிறார் ஆங்கில சிந்தனையாளர் எமர்சன்.
மனித மனங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகள் அதிகம். பத்தில் ஒரு பங்கு மட்டுமே நேர்மறை எனப்படும் பாசிடிவ் எண்ணங்கள் உள்ளன. எதிர்மறை எண்ணங்களை எண்ணினால் பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், பொறாமை, பதற்றம், விரக்தி, படபடப்பு, மன அழுத்தம், தாழ்மை உணர்வு, குற்றவுணர்ச்சி என ஏராளமாக பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் என பட்டியலிட்டால் சந்தோஷம், வியப்பு, உற்சாகம் இப்படி மிக குறைவானதாகவே தேறும். இது, சமூகம் கட்டமைத்துள்ள மனித இயல்பு. அதனாலேயே எதிர்மறை எண்ணங்கள் குறித்த செய்திகளையே மனம் அதிகமாக விரும்புகிறது.

இத்தகைய நெருக்கடியில் இருந்து வெளியேறினால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்ல முடியும். எதிர்மறை எண்ணங்களை வேரறுக்க நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். அதை மனதுக்குள் அடிக்கடி கூறி பார்த்துக் கொள்வதும் அவசியம். ‘ஆல் இஸ் வெல்’, ‘உன்னால் முடியும்’, ‘யெஸ்’ இது போன்ற வார்த்தைகளால் நம்மை நாமே ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும். இதை நம்முடைய தினசரி உணவு போல தொடருவது அவசியம்.  

மனித வாழ்க்கையில் வெற்றி என்ற சொல்லுக்கு அர்த்தமாக பார்க்கப்படுவது சொகுசான வாழ்க்கை, பணம், பதவி, அதிகாரம் மற்றும் அதற்கு நிகரானவை தான். உண்மையில், நல்ல குணாதிசயங்களே ஒவ்வொரு வெற்றிக்கும் அடிப்படையாக இருக்கிறது. நல்ல குணங்களையும் நேர்மறை எண்ணங்களையும் ஒருவர் வளர்த்துக் கொண்டு இருந்தால் அவரை பற்றிய மற்றவர்களின் கருத்துகள் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், இறுதி வெற்றி அவர்கள் பக்கமே இருக்கும்.

ஆன்மிக பூமியான இந்தியாவின் பழங்கால புராணங்களும் இதிகாசங்களும் அதைத்தான் வெவ்வேறு கதை வடிவங்களில் வலியுறுத்துகின்றன. மகாபாரதத்தில் பாண்டவர்&கவுரவர் மோதல், ராமாயணத்தில் ராம பிரான்&ராவணன் மோதல் என ஒவ்வொன்றும் நல்ல குணங்களை கொண்டவர்களுக்கே இறுதி வெற்றி என்பதை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அத்தகைய நல்ல குணங்களை அடிப்படையாக கொள்வதோடு வெற்றி பெற தேவையான அனைத்து தகுதிகளையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அந்த வெற்றியை நோக்கிய பாதையில் நடை போட்டு செல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(முற்றும்)

வெற்றியை நோக்கி ... 21

ஆறு மனமே ஆறு    


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெற்றி பெறும் எண்ணம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த மனதுக்குள் ஆறு விதமான குணங்கள் நுழைந்து விட்டால் வெற்றி என்பது அதோகதியாகிவிடும். நம் அனைவரையுமே தனது கொடூர முகத்துடன் அந்த குணங்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த ஆறும் எவை தெரியுமா? சகிப்பு தன்மை இல்லாமை, பேராசை, பழிவாங்கும் உணர்ச்சி, தற்செருக்கு அல்லது தலைக்கனம், பிறர் மீது சந்தேகம், பொறாமை.

இவற்றில் சகிப்பு தன்மை இல்லாத குணமானது உறவுகளையும், நட்புகளையும் அழித்து விடும். வாழ்க்கையில் முன்னேறவும் வெற்றி பெறவும் உறவுகளும் நட்புகளும் தேவை அல்லவா? அப்படி இருக்கும்போது இதுபோன்று நிகழ்ந்தால் துயரம் தான் மிஞ்சும். இது மட்டுமல்ல சண்டை, சச்சரவுகளும் நீடிக்கும். மாறுபட்ட சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே சகிப்பு தன்மை வளரும். அதற்கு மிக அதிகமான பயிற்சி தேவை.

பேராசை என்பது தனக்குள் வேலி அமைத்து மற்றவரை வெளியேற்றுவதில் இருந்து தொடங்குகிறது. ஆசையை மனதால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது பேராசை உருப்பெறுகிறது. செல்வம், சொத்து, பணம் என அனைத்தையும் பார்த்து அவற்றின் பின்னால் ஓடுவது பேராசையின் குணாதிசயங்கள். பேராசை அளவுக்கு மீறும்போது பழிவாங்கும் உணர்வும் ஆட்கொள்ளத் தொடங்கும்.

பழிவாங்கும் உணர்ச்சி மனதுக்குள் குடியேறத் தொடங்கினால் புகழையும், பெருமையையும் சீர் குலைக்கும். அவ்வளவு ஏன்? வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும், வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியானது அவரைக் குப்புறத் தள்ளி விடும். எனவே, அதை மனதுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பது அவசியம். 

அடுத்தவர்களின் திறமை மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையில் முன்னேற்றத்துக்கான வழியே. அடுத்தவர் மீது நம்பிக்கை இல்லாமல் போனால், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும். நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியை பெற முடியாது. அடுத்தவர் மீதான நம்பிக்கையின் வலிமையை, ‘கடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் மலையை புரட்டலாம்’ என்று பைபிள் கூறுகிறது. நம்பிக்கை ஊட்டுவது என்பது தங்கத்தால் திரி செய்து ஒளியை ஏற்றுவது போன்றதாகும். எனவே, மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்து பலன் பெறுங்கள். 

அதே வேளையில், நம்பிக்கையின்மை என்பது நாளடைவில் சந்தேக குணமாக மாறி விடும். சந்தேகம் எழும்போது தானாகவே மனதுக்குள் செருக்கு தோன்றும். தற்செருக்கு என்ற தலைக்கனம் அதிகரிக்கும்போது, ‘நான்’ என்ற வார்த்தை மிக அதிக அளவில் தோன்றும். அதுபோன்ற நபர்கள், பேசுவதிலும் எழுதுவதிலும் அந்த வார்த்தையே அதிகமாக பயன்படுத்துவார்கள். உங்களை சுற்றிலும் உள்ளவர்களில் ‘நான்’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரிக்கும் நபர்களை ஆய்வு செய்தால் நிச்சயமாக சந்தேக குணம் உடையவராகவே இருப்பார்.

பயனுள்ள ஒரு வேலையைச் செய்யும் ஒருவன் தன்னைப் பற்றியும் தன்னலம் பற்றியும் முற்றிலுமாக மறந்து விட்டால் அவனை ஒருபோதும் சந்தேகம் நெருங்காது. சந்தேகம், தற்செருக்கு எனப்படும் தலைக்கனம் அல்லது தற்பெருமை உடையவர்களால் வெற்றி என்ற இலக்கை எட்டவே முடியாது. மற்றவர்களை விடுங்கள். நீங்கள் அதுபோன்று இருக்கிறீர்களா? என்பதை முதலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகமும், தற்பெருமையும் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

சந்தேகத்துக்கு இளைய சகோதரன் பொறாமை. ஆண், பெண் என அனைத்து தரப்பினரிடமும் இந்த குணம் குடி கொண்டிருக்கும். பொறாமைக்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. அது, பல்வேறு வகைப்படும். வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் சிதறும். பொறாமை நுழைவதே தெரியாது. மனம் அல்லது மூளைக்குள் மெதுவாக பதுங்கி பதுங்கி நுழையும். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பூதாகரமாக வெளிப்படும். அது மட்டுமல்ல. குடும்ப உறவுகள் மற்றும் தொழில், முன்னேற்றம் என அனைத்தையும் அழித்து விடும்.

அதனால் தான்,
   ‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
   தீயுழி உய்த்து விடும்’
என்று திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

அதாவது, பொறாமை என்னும் பாவி குணமானது செல்வத்தை அழித்து விடும். நரகம் என்னும் தீ குழிக்குள் தள்ளி விடும் என்று எச்சரிக்கிறார்.

பொறாமை என்ற குணமானது வளர்ந்து நம்முடைய கழுத்தை நெரிக்கும் முன் அதன் கழுத்தை மிதித்து விட வேண்டும்.

சரி. மேற்சொன்ன இந்த ஆறு வகையான குணங்களை மனதுக்குள் நெருங்க விடாமல் யாரேனும் இருக்கிறீர்களா? இதற்கு நிச்சயமாக ஆம் என்ற பதில் கிடைக்காது. ஆம். என்ற பதிலை நீங்கள் கூறினால் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர். வெற்றி தேவதை மாலையுடன் உங்களுக்காக காத்திருக்கிறாள் என்று உறுதியாக கூற முடியும்.         


(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 20

உற்சாக மனநிலை    

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாளில் காலையில் இருந்தே ஏமாற்றமும் தோல்வியும் தொடர்ந்தால் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? ‘காலங்காத்தால யாரு முகத்துல முழிச்சோமோ’ என்ற எண்ணம் மெதுவாக மனதுக்குள் துளிர் விடும். பிறர் மீது பழி போடுவதை விடுத்து உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். காலையில் எழுந்ததும் மனதுக்குள் சோம்பலும், உற்சாகமின்மையும் குடி கொண்டால் அந்த நாள் எப்படி அமையும்?

ஒரு நாளின் தொடக்கத்தில் உற்சாகமான மனநிலை அமைந்தால் தான் அந்த நாளில் வெற்றி முழுமையாகும். ஒரு மனிதனை வெற்றியாளராக மாற்றுவதில் உற்சாகமான மனநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மனம் சோர்ந்திருக்கும் சமயத்தில் உற்சாகம் தரும் துள்ளல் இசையை கேட்டால் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும். எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பவரையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பவரையும் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

விளையாட்டு, வர்த்தகம், கல்வி, சமூகம், அரசியல், திரைப்படம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நம்பர் ஒன் சாதனையாளர்களை உற்று நோக்கினால் ஒரு ஒற்றுமை புலப்படும். அவர்கள் அனைவருமே சோர்வு என்பதே அறியாமல் தானும் உற்சாகமாக இருந்து தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் கலையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிகச் சிறந்த என்டர்டெய்னர்களுக்குத்தான் எப்போதுமே மவுசு.

விற்பனைத் துறைகளில் வெற்றிகரமாக உள்ளவர்களிடம் இத்தகைய உற்சாகம் எந்நாளும், எந்த நேரமும் குடிகொண்டு இருப்பதை காண முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் அந்த துறையில் ஜொலிக்க முடியாது. உற்சாகமான சூழ்நிலையை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்வதையும் காணலாம்.

அதனாலேயே, சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒவ்வொன்றிலும் இதுபோன்ற விற்பனை பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவிலான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். கூட்டத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரி அல்லது வெளியில் இருந்து முக்கிய சொற்பொழிவாளர் யாரையாவது அழைத்து வந்து உற்சாகமூட்டும் கருத்துகளை பேசச் செய்வார்கள். மனதுக்குள் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும் வேலையிலும் அதன் விளைவாக நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும்.

வெற்றியை உருவாக்கிக் கொள்ள மிகுந்த செயல்திறன் தேவை. செயல்திறன் மிக்க மனிதனாக இருப்பதற்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வது மட்டுமே போதுமானதல்ல. அறிந்து கொள்வது, செயல் திறன் இரண்டுமே மிகவும் அவசியம். அறிந்து கொண்டதை செயலாக்கி காட்டுவதற்கு உற்சாகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதுபோல வெற்றிக்கு உற்சாகம் மிகவும் முக்கியம். மனதுக்குள் உற்சாகம் வடிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எதிர்மறை எண்ணம். அந்த எண்ணம் தோன்றிய மறுகணமே உற்சாகம் காணாமல் போய்விடும். வாய்ப்புகளால் உருவாவது அல்ல. தானாகவே, புறத் தூண்டலால் ஏற்படுவதுதான் உற்சாகம்.

ஒரு பிரபலமான சோப் உற்பத்தி நிறுவனப் பொருட்களின் விற்பனையில் சில நாட்களாக மந்தமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த முக்கியமான விற்பனைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விற்பனை மந்தமானது குறித்து விவாதம் ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் கூறினார்கள். ‘மாற்று நிறுவனத்தின் போட்டி பலமாகி விட்டது’, ‘மக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டது’, ‘நம்முடைய உற்பத்தி பொருளுக்கு இன்னும் அதிக விளம்பரம் தேவை’ - இப்படி பல்வேறு யோசனைகள் அந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

உடனே, நிறுவனத்தின் முதலாளி எழுந்து அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறினார். பின்னர், நிறுவனத்தில் கேன்டீன் நடத்துபவரை அழைத்து வந்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேண்டீன்காரருக்கு இந்த கூட்டத்தில் என்ன வேலை? என நினைத்தனர். ஏற்கெனவே, அந்த நிறுவனம் நட்டத்தில் செல்வதாக வதந்திகள் கிளம்பி இருந்ததால், நம்முடைய முதலாளிக்கு ஏதோ ஆகி விட்டது என்றே அவர்கள் கருதினர்.

சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர், மெதுவாக முதலாளி பேசத் தொடங்கினார். ‘நம்முடைய நிறுவனத்தில் முன்பு இருந்த கேன்டீன் உரிமையாளர், தகுந்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறிச் சென்று விட்டார். தற்போது, புதிதாக கேன்டீன் உரிமையை இவர் எடுத்திருக்கிறார். இவருக்கு முந்தைய நபருக்கு வழங்கியது போல இவருக்கு நிறுவனத்தில் இருந்து மானியத் தொகை வழங்குவதில்லை. கேன்டீன் நடத்தும் இடத்துக்கு கூட வாடகை வசூலிக்க தொடங்கியுள்ளோம். ஆனாலும், இவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. நகருக்குள்ளும் புதிதாக ஒரு கேன்டீன் திறந்திருக்கிறார். எப்படி? அதற்கு காரணம் என்ன? இப்படி கேள்விகளை எழுப்பிவிட்டு அவரே பதில் கூறத் தொடங்கினார்.

“பழைய கேன்டீன் உரிமையாளர், குறிப்பிட்ட நேர அளவில் மட்டும் தான் திறந்து வைத்திருந்தார். நமது நிறுவனத்தில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உற்பத்தி நடைபெறுகிறது என்பதும் 16 மணி நேரம் வரை ஊழியர்கள் பணியாற்றுவதும் அனைவருக்கும் தெரியும். இதை சரியாக புரிந்து கொண்டு கேன்டீன் நேரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார், இந்த புதிய உரிமையாளர். மனதுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த சமயத்தில் எந்த பொருள் தேவை என்பதை கணித்துக் கொண்டு செயல்படுகிறார்.

இப்போது, உங்களுடைய பிரச்சினைக்கு வருகிறேன். உங்களுடைய விற்பனைக் குறைவுக்கு நீங்கள் தெரிவித்த காரணங்கள் எதுவுமே பொருத்தமானவை அல்ல.  நமது நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பத் தொடங்கி விட்டீர்கள். அதனால், உங்களுக்குள் உற்சாகம் குன்றி விட்டது. அதுதான் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம்.

அந்த எண்ணத்தை முற்றிலுமாக துடைத்து எறியுங்கள். இன்றில் இருந்து தினமும் குறைந்தது 5 ஆர்டர்களாவது பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விடாப்பிடியாக இருந்து சாதித்தீர்கள் என்றால் விற்பனை அதிகரிக்கும். நிறுவனத்தின் லாபமும் தானாகவே ஏறு வரிசையில் அமைந்து விடும்”

இப்படி மிக நீளமான உரையை முதலாளி முடித்த மறுகணமே வந்திருந்தவர்களின் மனதுக்குள் உற்சாக ஊற்று சுரக்கத் தொடங்கியது. அதன்பிறகு, அந்த நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

ஏற்கெனவே கூறியது போல, உற்சாகம் என்பது புறத்தூண்டல்களால் வருவது. அத்தகைய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனதுக்கு பிடித்தமான வேலையில் சேர்ந்து பணியாற்றுவது, எப்போதுமே உற்சாகத்துடன் இருக்கும் மனிதர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, மற்றவருக்கு உதவி செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது, நேர்த்தியான ஆடை அணிவது போன்றவை உற்சாகத்தை தானாகவே வரவழைக்கும் காரணிகளில் சில.

மனதுக்குள் உற்சாக வெள்ளம் கரை புரளத் தொடங்கினால் தானாகவே வெற்றியை நோக்கி அது நம்மை இழுத்துச் செல்லும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 19

தேடல் சுகமானது

இந்த உலகத்தில் நாம் பிறந்த காரணம் என்ன? எதற்காக இந்த உலகுக்கு வந்திருக்கிறோம்? எங்கிருந்து நாம் வருகிறோம்? இது போன்ற கேள்விகளை எழுப்பினால் யாருக்குமே பதில் கூற தெரியாது. மனித வாழ்க்கை என்னும் புதிருக்கு பல ஆண்டுகளாக பலரும் விடை தேடி முயன்று பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. நம்மை படைத்த படைப்பாளியான இறைவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே ஒவ்வொருவரையும் படைத்துள்ளார். அதற்காக, அந்த காரணத்தை அவனே நிறைவேற்றி முடித்து வைப்பான் என விட்டு விட முடியுமா? இந்த கேள்விகளை மனதில் சுமந்து கொண்டே பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதோ ஒன்றை அடைவதற்காக மனம் துரத்திக் கொண்டே செல்கிறது.
குழந்தைப் பருவத்தில் கையில் உள்ள பொம்மையை விட மற்றொரு குழந்தையின் கையில் இருக்கும் பொம்மை அல்லது கடையில் இருக்கும் பொம்மை அழகாக இருப்பது போல தெரியும். வளர்ந்து இளைஞனான பிறகு நல்ல வசதியும் செழிப்பான பேங்க் பேலன்சும் உள்ளவனை பார்த்து மனம் தடுமாறுகிறது. தெருவில் காய்கனி விற்பவன், அந்த வழியாக காரில் செல்லும் மனிதரை பார்த்து மனம் விசனம் கொள்கிறான். அதே நேரத்தில், அலுவலகத்தில் குளு குளு அறையில் இருக்கும் அந்த மனிதரோ வங்கி கணக்கில் மேலும் சில கோடிகளை எப்படி உயர்த்துவது என ஆர்வமாகிறார். ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த சிந்தனை ஒளிந்துள்ளது.

இதை திருப்தியின்மை என்பார்கள், சிலர். ஆனால், அதை அடுத்தகட்ட முயற்சிக்கான தேடல் என்றும் கூறலாம். இக்கரைக்கு அக்கரை பச்சை அல்லது தூரத்து பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி என்றும் கூட ஒரு சிலர் கூறுவது உண்டு. ஆனால், மகிழ்ச்சி என்பது கைக்கெட்டும் தொலைவில் எப்போதுமே இருந்ததில்லை. சராசரி மாத வருமானம் உள்ள ஒருவனுக்கு திடீரென சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் உடனே கூடுதல் தொகையை அப்படியே சேமிப்பில் அவன் போடுவதில்லை. கையில் வைத்திருக்கும் சைக்கிளை மாற்றி விட்டு பைக் வாங்கலாமா அல்லது நல்ல வசதியான வீட்டுக்கு செல்லலாமா என சிந்தனை உருவாகும். அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் தேடல் உருவாகிறது.
ஒருவனுக்கு மிக அழகான வீடு கட்டி சுற்றிலும் தோட்டம் அமைத்துக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற வீட்டை அவன் கட்டிய பிறகு, மேலும் சில செடிகளை அதில் நட்டு வைக்க ஆசைப்படுவான். பின்னர், அந்த தோட்டத்தை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வேலி அமைப்பான். அதன்பிறகு, ஒரு கார் வாங்கி அது வந்து செல்ல பாதை அமைப்பான். அந்த காரை நிறுத்துவதற்கு சிறிய ஷெட் அமைப்பான். இப்போது, தோட்டத்தின் நடுவே அவன் கட்டிய வீடு சின்னதாகி விடும். ஏராளமான அறைகளுடன் கூடிய பெரிய பங்களா போன்ற வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை மெதுவாக அவனுக்குள் குடியேறும். மனித மனதுக்குள் தேடல் குணம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சென்று சொகுசான வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறது.

ஆனால், கண்ணுக்கு தெரிந்து கைக்கு கிட்டாத வரையிலும் எந்தவொரு பொருளும் அழகு தான். அதை வேறு யாராவது பெற்று விட்டால் அதிசயமாகவே பார்ப்போம். அந்த பொருளின் மதிப்பும் பெரிதாக தெரியும். அதுவே, நம்முடைய கைக்கு கிடைத்து விட்டால் அதன் மீதான ஆர்வம் வடிந்து விடும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலைகளும் மலை முகடுகளும் பசுமையாக மிக அழகுடன் காட்சி அளிக்கும். ஆனால், அருகில் சென்றால் மரம், மண், பாறை என்று சீர் குலைந்து கிடப்பதை காணலாம். தேடல் என்பது இதுபோன்ற முடிவையும் தரலாம். இந்த உலக வாழ்க்கையை துறந்து ஆன்மிக பாதையில் செல்லலாம் என முடிவெடுத்தால் அப்போதும் எந்த வழியை தேர்வு செய்வது என்ற தேடலுடன் கூடிய வினா எழும்பும். 

மனித வாழ்க்கை என்பது தேடல் இருக்கும் வரை தான் ருசிக்கும். அதே நேரத்தில் தேடல் மட்டுமே வாழ்க்கையாகி போய் விடக் கூடாது. அங்கு அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் மேலோங்கி நிற்கும். அதனால் தான், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ துரத்திச் செல்வது போல மனிதன் ஓடிக் கொண்டு இருக்கிறான். அந்த ஓட்டமானது குழப்பத்துடன் இருந்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்காது. குழப்பத்துடன் கூடிய ஓட்டத்தை விட தெளிவான சிந்தனையுடன் கூடிய நடைபயணமே சிறந்தது. இதன் காரணமாகவே, தன்னம்பிக்கை தொடர்பான வகுப்புகளில் எல்லாம் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுய சார்புடன் வளர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். அதற்கு, திருப்தியுடன் கூடிய தேடல் அவசியம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 18

தன்னம்பிக்கை

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்’ - என்பது நம்முடைய முன்னோர் வாக்கு. மிக அழகான ஒரு ஓவியத்தை படைப்பதற்கு முன் அதை தாங்கிக் கொள்ளும் தளம் ஒன்று நிச்சயம் தேவை. அதன்படி பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி என்னும் மிக அழகான ஓவியத்தை படைப்பதற்கு சுவராக இருப்பது தன்னம்பிக்கை. இது தான், ஒரு மனிதனை வெற்றியாளராக, சாதனை மனிதராக மாற்றுகிறது.

மலையில் பிறந்து கானகத்தில் ஊர்ந்து பாறைகளில் ரணமாகி மக்களால் மாசுபடுத்தப்பட்டு செல்லும் நதியை பாருங்கள். மிகப்பெரிய அருவியாக வீழ்ச்சியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நின்று நதியாக ஓடுகிறது. கடலில் கலக்கும் வரை நதியின் ஓட்டம் நிற்பதில்லை. மேற்பரப்பில் சலசலப்பும் பயங்கர ஓசையும் எழும்பினாலும் நதியின் ஆழமான பகுதியில் நிசப்தமும் அமைதியான ஓட்டமும் நீடித்து இருக்கும். அதுதான், நதி தரும் தன்னம்பிக்கை பாடம். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம்.

ஒருவர், தனது ஆழ் மனதுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் அதுவே வெற்றி என்னும் விருட்சமாக வெளிப்படும். அடி மனதுக்குள் பயம், தோல்வி, தாழ்வு மனப்பான்மை என வளர்ந்து வந்தால் அதுவே பூமராங் போல திரும்பி வெளிப்படும். மனித உடலில் மூன்றாவது கையாக கடவுள் இணைத்திருப்பதே தன்னம்பிக்கை.

‘உங்களுக்கு வெற்றியை தருவது வேறு யாருமல்ல. நீங்கள் மட்டும்தான்’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரே விதமான படிப்பு, பயிற்சி, வேலை திறன் ஆகியவை கொண்டவர்களில் ஒருவர் மட்டும் உயர்ந்த நிலைக்கு செல்வதும் மற்ற பலரும் அவருக்கு கீழே பணிபுரிய நேருவது ஏன்? இந்த சிந்தனை உங்களுக்குள் அடிக்கடி எழுந்திருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளை நேரிலும் பார்த்திருக்கக் கூடும்.

அவ்வாறு உயர்ந்தவரை நீங்கள் உற்று நோக்கினால் அவருக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை அதாவது தன் மீதான நம்பிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதை கண்கூடாக காணலாம். முகபாவனை, நடை,  பேச்சு போன்றவற்றை கவனித்தாலே ஒருவரின் தன்னம்பிக்கையை மிக துல்லியமாக எடை போட்டு விட முடியும். ஒருவரிடம் தன்னம்பிக்கை குடி கொண்டிருந்தால் முகம் மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அது துளிர் விடுவதை காணலாம்.

பிரபல ஆலிவுட் நடிகர் ஜிம்கேரி நடித்த ‘யெஸ் மேன்’ திரைப்படத்தின் கதை இது. வங்கி ஊழியராக இருக்கும் ஜிம்கேரி வாழ்வில் எதுவுமே ருசிக்கவில்லை. அவரது மனைவி பிரிந்து சென்று விடுவார். எதிர்மறை எண்ணங்களையே மனதுக்குள் வைத்திருப்பதால் பலவித சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும். வாழ்க்கை சவால்களை சந்திக்க தைரியம் இல்லாத மனிதராக வலம் வருவார், ஜிம்கேரி.

ஒரு நாள், அந்த ஊரில் நடைபெற்ற வெற்றிக்கான வழிகள் பற்றிய ஆலோசனை வகுப்பில் அவர் கலந்து கொள்வார். அங்கு, சில அறிவுரைகள் கூறப்பட்டன. ‘எதிர்மறை எண்ணங்களை மாற்றுங்கள்’, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘சரி. செய்கிறேன்’ என்று கூறுங்கள். ‘யெஸ்’ என்ற சொல்லையே எப்போதும் நீங்கள் கூறிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையை அந்த சொல் மாற்றிவிடும்.

இந்த அறிவுரைகளைக் கேட்டதும், அதைப் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்ற சிந்தனை அவருக்குள் தோன்றும். அதை செயல்படுத்த தொடங்கியதுமே ஜிம்கேரி வாழ்க்கையில் நினைத்துப் பார்க்காத மாற்றங்கள் ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கும். புதிய உறவுகள், நட்புகள், வங்கிப் பணியில் பதவி உயர்வு, புதிய எண்ணங்கள் என வரிசையாக அவரை நாடி வரும். மிகவும் நெருக்கடியான தருணங்களில் கூட அவருடைய மனம் எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு நேர்மறை எண்ணங்களை உருவாக்கியது. அதனால், தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்தது.

‘யெஸ்’ என்ற ஒற்றை வார்த்தை, ஒருவரின் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏராளமான அபார திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அவை மிகச் சரியாக மலர்வதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. மொட்டாக இருக்கும் ஒரு மலர், ஒவ்வொரு இதழாக விரிந்து அதிகபட்சமாக இதழ்களை விரித்து முழுமையான மலராக மாறும். அதுபோல, மனித மனதும் அதிகபட்ச வளர்ச்சியை அடையும் வரை மலருகிறது. அந்த அதிகபட்ச வளர்ச்சி அல்லது எல்லை என்பது அந்தந்த மனிதனின் இயல்பு மற்றும் அதற்கு அந்த மனிதன் எந்த அளவுக்கு வேலை தருகிறான் என்பதை பொருத்தது.

உலகில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களை அடக்கி ஆளும் அனைத்து மனிதர்களும் அடிப்படையில் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தான். நீங்கள் வெற்றி பெற விருப்பம் கொண்டு, வெற்றி பெற இயலாது என கருதினால் நிச்சயமாக வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் வலிமை வாய்ந்த மற்றும் உறுதியானவர்களுக்கு வெற்றி கிட்டும் வரை போராட்டங்கள் ஓய்வதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 17

இலக்கு நோக்கிய பயணம்

இந்த உலகில் அனைத்துக்குமே ஒரு இலக்கு உண்டு. வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றால் கூட, அதுவும் ஒரு இலக்கு தான். வெளியூர் பயணம், இன்ப சுற்றுலா என ஒவ்வொன்றும் ஒரு இலக்கை நோக்கிய நகர்தலாகவே இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இந்த இலக்கு என்ற வார்த்தையானது, ஒட்டு மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். அது, நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்ற இலக்கு. உலக மனிதர்களில் 90 சதவீதம் பேர், எந்தவித இலக்கையும் நிர்ணயிக்காமல் தான் வாழ்கின்றனர்.

ஒரு மனிதன், தன்னுடைய இலக்கை தேர்வு செய்வதில் இரண்டு வகையான காரணங்கள் குறுக்கீடு செய்யும். ஒன்று, பொருளாதார ரீதியிலானது. மற்றொன்று, உளவியல் ரீதியிலானது. இதில் உளவியல் ரீதியிலான சவால்களை எதிர் கொள்வது மிகவும் முக்கியம். குத்துச் சண்டை போட்டிக்கு தயாராகும் வீரரை நீங்கள் உற்று நோக்கினால் ஒன்று புரியும். தனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் வலிமையாக்கும் பயிற்சியை அவர் மேற்கொள்வார். அதுபோல, குதிரையை நாம் கவனித்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான நடை, ஓட்டம் என தனித்தனி பாணியுடன் இருக்கும். பந்தயம், தடை தாண்டுதல், பயணம், வண்டி இழுத்தல் என ஒவ்வொரு பணிக்கும் வேறு வகையான பயிற்சிகள் குதிரைக்கு அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் இலக்கை நோக்கிய மனித பயணத்துக்கும் பொருந்தும். இலக்கு, வெற்றி என்றதும் அனைவருடைய நினைவிலும் பணம் மட்டுமே பிரதானமாக வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை. மிகப்பெரிய செல்வந்தராகி விட்டால் போதும், வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டதாக நாம் கருதுகிறோம். அதுவும் ஒரு வகையான வெற்றி என வைத்துக் கொண்டாலும் அனைவருமே செல்வந்தராவது என்பது அரிதான ஒன்று.

பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் வழக்கமாக ஒரு கேள்வியை எழுப்புவது உண்டு. ‘வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆனதும் என்னவாக ஆசைப்படுகிறாய்?’. இந்த கேள்விக்கு டாக்டர், என்ஜினீயர், வக்கீல் என்ற ரெடிமேடான பதில்கள் எப்போதுமே கைவசமாக மாணவர்கள் வைத்திருப்பார்கள்.

அந்த பருவத்தை தாண்டிய பிறகு, அந்த மாணவன் அல்லது மாணவியிடம் அதே கேள்வியை கேட்டால் அடி மனதில் உள்ள லட்சியத்தை கண்டிப்பாக அடையாளம் காட்டி கூறுவார்கள். அது தான், உண்மையான இலக்கு அல்லது இலட்சியம். அதில் அலட்சியமாக இருப்பது சரியானது அல்ல. அதை அடைவதற்கு தினமும் 5 முறையாவது அதை மனதுக்குள் நினைத்துப் பார்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதை பார்க்கும் விதத்தில் எழுதியும் வைத்துக் கொள்ளலாம். மேலும், லட்சியத்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டு வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வறுமையில் வாடிய நெப்போலியன், தனக்குள் ஒரு லட்சியத்தை வகுத்து கொண்டதாலேயே பிரான்ஸ் தேசத்தின் சர்வாதிகாரியாக முடிந்தது. இளம் வயதில் செய்தித் தாள்களை வீடு வீடாக போடும் பேப்பர் பாயாக இருந்த எடிசனும், அப்துல் கலாமும் தங்களுக்குள் லட்சியத்தை வகுத்துக் கொண்டதாலேயே பார் போற்றும் விஞ்ஞானியாக ஜொலிக்க முடிந்தது. இலக்கு இல்லாத வாழ்க்கை பயணம் என்பது பழுதான சுக்கானுடன் நடுக்கடலில் அலையும் கப்பலை போன்றது. சுக்கான் சரியாக இல்லாமல் கடலுக்குள் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சுற்றி முழு எரிபொருளையும் அந்த கப்பல் இழந்து விடும். உண்மையில் கரைக்கு செல்லும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக அந்த கப்பலில் எரிபொருள் இருந்தாலும் சுக்கான் பழுதானதால் அனைத்துமே வீணாகப் போகும்.

இதுபோலவே, பள்ளி படிப்பு முடிந்ததும் அடுத்த இலக்கு என்ன? என்பதில் நோக்கம் இல்லாமல் பல்வேறு விதமான பாதைகளில் மனம் சென்றால் கவனம் சிதறும். இலக்கை வடிவமைக்க முடியாமல் திணற நேரிடும்.  அதன் விளைவு. இலக்கை நோக்கிய பயணத்தில் முழுமையான ஆற்றல் கிடைக்காமல் பலவீனம் ஏற்படும். அதே நேரத்தில், திரும்ப திரும்ப ஒரே வகையிலான பயிற்சியை அளிக்கும்போது இலக்கை நோக்கி நம்முடைய மனம் பயணம் செய்யும். இதற்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை கூறலாம்.

மகாபாரதம் என்றதும் வில்லாளன் அர்ச்சுனன் தான் முதலில் நினைவுக்கு வருவான். அவனைப் பற்றிய கதைதான் இது.  அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்டவர்கள் மற்றும் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் இளம் வயதினராக இருந்தபோது அவர்கள் அனைவருக்கும் வில்வித்தை கற்று கொடுத்தவர், துரோணாச்சாரியார். வில்வித்தை பயிற்சி முடிந்த ஒரு நாளில் மாணவர்களான கவுரவ, பாண்டவர்களுக்கு வில்வித்தை தேர்வு நடத்த துரோணாச்சாரியார் முடிவு செய்தார். அனைவரையும் ஒரு மாமரத்தின் கீழ் அழைத்து வந்தார். முதலில் துரியோதனனை அழைத்து அந்த மரத்தின் குறிப்பிட்ட கிளையில் தொங்கும் மாம்பழத்தை அம்பு எய்தி வீழ்த்துமாறு கூறினார்.

அதற்கு முன், மாம்பழம் தெரிகிறதா? என துரோணர் கேட்டார். தெரிகிறது என துரியோதனன் பதிலளித்தான். அது மட்டுமல்ல. அவர் அடுத்தடுத்து கேட்ட ஒவ்வோரு கேள்விகளுக்கும், மரம் தெரிகிறது; கிளை தெரிகிறது; மாமரத்தில் பழம் அருகில் உள்ள இலைகள் தெரிகின்றன; என ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அம்பை எய்துமாறு குரு துரோணர் உத்தரவிட்டார். துரியோதனன் அம்பை எய்தான். ஆனால், துரியோதனன் விட்ட அம்பானது மாம்பழத்தை வீழ்த்தவில்லை. வேறு திசை நோக்கி பயணித்தது.

அடுத்ததாக அர்ச்சுனனை அழைத்தார், துரோணர். துரியோதனனிடம் கேட்ட அதே கேள்விகளை திரும்பவும் அர்ச்சுனனிடமும் கேட்டார். அனைத்து கேள்விகளுக்குமே 'இல்லை’ என்ற பதில் மட்டுமே திரும்பத் திரும்ப அர்ச்சுனனிடம் இருந்து வந்தது. உடனே, ‘உனக்கு என்ன தான் தெரிகிறது?’ என துரோணர் கேள்வி கேட்டபோது, ‘மாம்பழத்தை தாங்கி நிற்கும் காம்பு மட்டும் எனது கண்ணுக்கு தெரிகிறது’ என அர்ச்சுனன் பதிலளித்தான். அம்பை எய்யுமாறு குரு துரோணர் உத்தரவிட, மிகச்சரியாக மாம்பழத்தை வீழ்த்தியது, அர்ச்சுனன் விட்ட அம்பு.

மாம்பழம் வீழ துவங்கியதுமே தன்னுடைய வில்லை தரையில் கீழே போட்டு விட்டு ஓடோடி சென்று மாம்பழம் தரையில் விழாதவாறு தனது மடித் துணியை விரித்து பிடித்தான். பின்பு, அதை தனது குரு துரோணருக்கு காணிக்கையாக அர்ச்சுனன் அளித்தான்.

இது தான் இலக்கை நோக்கிய தெளிவான பயணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனது இலக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதே சிந்தையுடன் இருந்ததாலேயே காலத்தை வென்ற வில்லாளனாக அர்ச்சுனன் விளங்குகிறான். எனவே, நம்முடைய இலக்கை மிகச் சரியாக வகுத்து வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணம் செய்வோம். அதற்கு முன், நம்முடைய இலக்கு நன்மை பயப்பதாகவும் அடுத்தவருக்கு தீங்கிழைக்காததாகவும் இருப்பதையும் உறுதி செய்து கொள்வோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 16


ஒத்திசைவான மனம்

பிரபஞ்ச வெளியில் சூரியன், பூமி, சந்திரன் உள்ளிட்ட கோள்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தொலைவுக்குள் நிற்பதாலேயே பூமி என்னும் இந்த உலகம் சாதாரணமாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த ஒத்திசைவு என்பது சிறிது மாறினாலும் நிலைமை தலைகீழாகி விடும்.

திரைப்படம் பார்க்கச் செல்கிறோம். அந்த திரைப்படத்தின் வசன ஒலியும் காட்சியும் தொடர்பற்றோ அல்லது சில வினாடிகள் இடைவெளியிலோ இருந்தால் எப்படி இருக்கும்? உங்களால் எவ்வளவு நேரம் அப்படி பொறுமையாக காண முடியும்? தலையை அசைத்து இனிமையாக கேட்கும் பாடல் வரிகளில் கூட இசையும் வார்த்தைகளும் ஒத்திசைவுடன் இருந்தால் மட்டுமே ரசிக்க முடிகிறது. மனதை கட்டிப்போடும் கதாகாலட்சேபம், பிரார்த்தனை கூட்டம், பிரசங்கம் போன்ற நிகழ்வுகளில் இசையுடன் சேர்ந்து ஒத்திசைவுடன் இருக்கும் வசீகர சொற்பொழிவுகள் தான் மனதை ஈர்க்கும். குடும்பத்திலும் ஒத்திசைவு இல்லாவிட்டால் சிதைந்து விடும்.

இவை அனைத்தும் தனி மனிதனுக்கும் பொருந்தும். மனித உடல் இயங்குவதே ஒத்திசைவு அடிப்படையில் தான். உடலுக்குள் ஏராளமான உள்ளுறுப்புகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மிகச் சரியான அசைவில் ஒருங்கிணைந்து இயங்காவிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும். வெளிப்புற நெருக்கடி ஏற்படும்போது உடலும் மனமும் ஒத்திசைவுடன் இல்லாத நிலை உருவாகும். அந்த சமயங்களில் அஜீரணம், பசியின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுவது உண்டு.

மனித மனம் என்பது குறைந்தபட்சம் 2 வகையில் இருந்து அதிகபட்சமாக 6 வகையில் இயங்கக் கூடியது. இந்த ஆறு வகையான உள் மனதை கட்டுப்படுத்தி இயங்கச் செய்வதே வெற்றிக்கு அடித்தளம். கல்வி என்ற சொல்லின் ஆங்கில வார்த்தை எஜூகேசன் என அனைவருக்கும் தெரியும். ‘எஜூகோ’ என்பது லத்தீன் வார்த்தை. அதில் இருந்து வந்தது தான் எஜூகேசன். எஜூகோ என்றால் உள்ளிருந்து வளர்வது என்று பொருள். ஆம். உள்ளுக்குள் வளர்ந்து வெளிப்படுவதுதான் கல்வி.

உண்மையான கல்வி என்பது அறிவாற்றலை ஒட்டு மொத்தமாக மூளைக்குள் குவித்து வைத்திருப்பது அல்ல. மனதை மிகச் சரியாக ஒருங்கிணைத்து தனது அறிவாற்றலை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகும். அதனால் தான் வெளித் தோற்றத்தில் படிப்பறிவற்றவராக இருப்பவர்கள் கூட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி காப்பவராக இருக்கின்றனர். சட்டம், மருத்துவம் அல்லது இதுபோன்ற உயர் கல்வியில் தங்கப்பதக்கம் வென்றவர்களை காட்டிலும் சராசரியாக கல்வி கற்றவர்கள், அந்தந்த துறைகளில் உயர்ந்து நிற்பதை காணலாம். அதற்கு மனமும் மூளையும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

உலகில் மிகப்பெரிய வெற்றியாளராக, அறிவு மிகுந்தவராக அறியப்படும் அனைவரும் பெரிய அறிவாளிகள் அல்ல. அனைத்தையுமே அறிந்தவர்களும் அல்ல. சராசரி அறிவுக்கும் குறைந்தவர்களாக கூட இருக்கலாம். ஆனால், தாங்கள் அறிந்து வைத்துள்ளவற்றை சரியான சமயத்தில் சரியான முறையில் வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். தனது அறிவை முழுமையான முறையில் மிகச் சரியாக பயன்படுத்துவதே அவர்களின் வெற்றி ரகசியம். அதற்கு அடிப்படையாக இருப்பது உள் மனதின் சரியான ஒருங்கிணைப்பு.

ஆண்டுதோறும் ஏராளமான இளைஞர்களை பட்டதாரிகளாக்கும் மிகப்பெரிய கல்வி குழுமங்களின் உரிமையாளரான கல்வியாளர் ஒருவருக்கு  பூர்வீக சொத்து ஒன்று கிடைத்தது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த அந்த இடத்தில் எதுவுமே விளையாது. அந்த நிலத்தால் எந்த உபயோகமும் இல்லை என அவர் கருதினார். அதனால், யாரிடமாவது விற்கலாம் என்ற யோசனையில் இருந்தார். இதற்கிடையே, அந்த வழியாக காரில் சென்ற கல்வியறிவு குறைந்த வர்த்தகர் ஒருவரின் கண்ணில், அந்த இடம் தென்பட்டது.

அவருடைய பார்வையில், மிக அமைதியான இடமாக அது தோன்றியது. மேலும், அங்கிருந்து பார்த்தபோது மலை முகடுகளும் இயற்கை காட்சிகளும் வித்தியாசமாக காட்சி அளித்தன. உடனே, கல்வியாளரை அணுகி அந்த நிலத்தை விலைக்கு தருமாறு கேட்டார். அவரும் மிக மகிழ்ச்சியாக குறைந்த விலைக்கு தனது நிலத்தை அந்த வர்த்தகருக்கு விற்று விட்டார். நிலத்தை வாங்கியவரோ, அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியதாக ஒரு உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதியை முதலில் கட்டினார். வியாபாரம் மெதுவாக சூடுபிடிக்கத் துவங்கியதும் அந்த இடத்தை முற்றிலும் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றினார்.

சுற்றிலும் பல கி.மீட்டர் தொலைவுக்கு அங்குள்ள மக்களுக்கு விடுமுறையை கழிக்க பொழுதுபோக்கு பூங்கா போன்ற முக்கிய இடங்களோ, கடல் பரப்போ இல்லை என்பதால் அது பிரபலமடைய தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு இடத்தையும் அவர் விலைக்கு வாங்கியதோடு ஆழ்துளை கிணறுகளை அமைத்து பண்ணை மற்றும் பூங்காக்களை அமைத்தார். எதற்குமே உதவாது என கல்வியாளரால் கருதப்பட்ட இடம், இப்போது பச்சைப் பசேலென அருமையான பூங்காவானது. அங்கிருந்த தங்கும் விடுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இருந்து விடுமுறையை கழிக்கத் தொடங்கினர்.

இதை பார்த்த அந்த கல்வியாளர், ‘பல ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் நடத்தி நான் சம்பாதித்ததை ஒரே ஆண்டில் இவர் சம்பாதித்து விட்டாரே?’ என ஆச்சரியமடைந்தார். இத்தனைக்கும் அந்த நிலத்தை வாங்கியவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரால் அதை எப்படி சாதிக்க முடிந்தது? அதற்கு காரணம், மனமும் மூளையும் ஒரே திசையில் பயணித்தது தான்.

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆறு வகையான மனதை ஒரே லகானில் பூட்டினால் ஒத்திசைவாக மாற்றினால் அந்த மனக் குதிரையின் வேகமும் வெற்றியும் அலாதியானது. அதைத்தான், அந்த வழிப்போக்கர் நிரூபித்தார். நாமும் அந்த வழிப்போக்கராக மாறினால் வெற்றி நிச்சயம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

Sunday 29 January 2017

வெற்றியை நோக்கி ... 15

ஆசை நூறு வகை

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒன்றை மையமாகக்  கொண்டே இயங்குகின்றன. சக்கரத்தை சுழலச் செய்யும் அச்சாணி போல அது செயல்படுகிறது. அதேபோல, மனித இனத்தையும் இயக்கும் அச்சாணி ஒன்றும் உண்டு. அது, ஆசை என்ற இரண்டெழுத்து மந்திரம். அதுவே, மனித வாழ்க்கையை முன்னோக்கி தள்ளிச் செல்லும் எந்திரம். 

மனித இனத்தின் பிரதானமான குணமாகவே ஆசை மாறி விட்டது. ஆடையின்றி இந்த உலகில் பிறந்த நாம் ஆசையின்றி பிறந்தோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அந்த ஆசை தான் மனிதனின் துன்பகரமான வாழ்க்கைக்கு திறவுகோலாகவும் அமைகிறது என்றால் மிகையில்லை. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தபிரான். ஒரு மனிதனுக்கு தீராத துன்பத்தை தருபவை எவை என்று பட்டியலிட்டால் பொறாமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஆசையை வைக்கிறார், திருவள்ளுவர்.

மனதுக்குள் குடியமர்ந்து கோலோச்சி ஒட்டு மொத்த மனித உடலையும் ஆட்டிப்படைக்கும் ஆசை பல வகைப்படும். சாலையில் நடந்து செல்லும் மனிதனுக்கு சைக்கிள் மீது ஆசை. சைக்கிள் வைத்திருப்பவனுக்கு பைக் மீதும் பைக் வைத்திருப்பவனுக்கு கார் மீதும் ஆசை. பஸ், ரயில் என பயணம் செய்து அலுத்தவனுக்கு வானில் மிதந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்பது தீரா ஆசை. எனவே, ஆசைக்கு அளவுகோல் இல்லை. அது, தொட்டு விட தொட்டு விட தொடரும் பயணம். 

இவை, சின்னச் சின்ன ஆசைகளாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதுவே, பேராசையாக வடிவம் கொள்ளும்போது பிரச்சினைகளும் விசுவரூபம் எடுக்கத் துவங்கும். குறுக்கு வழியில் வாழ்க்கையை திசை திருப்பிச் செல்வதும் பேராசையே. அதனால் தான், ‘ஆசை, கோபம், பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடுபவரே உறுதியானவர்’ என பகவத்கீதை கூறுகிறது. மனிதனின் பேராசைக்கு அடிப்படை காரணமாக இருப்பது பணம். ஏனெனில், மனிதனின் கல்வி, அதிகாரம், செல்வாக்கு, குடும்பம் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது பணம்.

500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் பணத் தாளை நன்றாக கசக்கி, அழுக்கேற்றி கொடுத்தால் கூட மனம் கோணாமல் வாங்கிக் கொள்ளும் ஒரு மனிதன், அந்த பணத்தாளை விட அதிக விலையில் இருக்கும் ஒரு ஆடையை மிகவும் கசக்கி அழுக்காக கொடுத்தால் அணியத் தயங்குகிறான். அதுபோன்று ஆடை அணிந்த சக மனிதனையும் ஏற்க மறுக்கிறான். உயிரற்ற ஒரு காகிதம், உயிருள்ள மனிதனை எப்படியெல்லாம் பல வழிகளில் ஆட்டிப் படைக்கிறது.

ஆனால், பல ஆயிரம் செலவு செய்து படுக்கையை வாங்கினாலும் நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியுமா? ஏராளமாக செலவழித்து வீடு நிறைய புத்தகங்களை அடுக்கினாலும் அவற்றை படித்த உடன் அறிவை பெற எந்த பணமாவது உதவுமா? இதை அறிவுப்பூர்வமாக சிந்திக்க துவங்கினால் பணத்தின் மீதான பேராசையானது ஓடோடி வந்து சிந்தனை சிறகின் மீது திரையை போட்டு அமுக்கி விடும். அதற்காக, ஆசையை துறக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், முன்பே கூறியபடி மனித வாழ்வை இயக்குவதே ஆசை என்ற அச்சாணி தான். ஆனால், அந்த ஆசையானது ஒரு அளவுக்குள் அடங்கி இருக்கச் செய்ய வேண்டும்.

கண்ணாடிப் பொருட்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் ஒருவன் இருந்தான். அவனுக்கு தனது வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து ஊரே மதிக்கும் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது நெடுநாளைய தீராத ஆசை. அத்துடன், அந்த ஊரின் தலைவருடைய மகள் மீதும் அவனுக்கு ஒரு கண். அவருக்கு பிறகு தானே அந்த ஊரின் தலைவராக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்குள் வேர் பிடித்து வளர்ந்து நின்றது.

ஒரு நாள் கண்ணாடிப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றபோது நண்பகல் நேரத்தில் மதிய உணவு உண்டு விட்டு சாலையோர மர நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். உண்ட மயக்கத்தில் அப்படியே தலை சாய்த்து உறங்கத் துவங்கினான். அவன் கொண்டு வந்த கண்ணாடிக் கூடை, கால்மாட்டில் இருந்தது. நல்ல தூக்கத்தில் பட்டப் பகலிலேயே கனவு காண ஆரம்பித்து விட்டான்.

அந்த கனவில் வழக்கம்போல ஊரின் மிகப்பெரிய வியாபாரி ஆனான். ஊர் தலைவரின் மகளையும் திருமணம் செய்தான். திருமணம் முடிந்து அந்த ஊரின் அடுத்த தலைவராகவும் தேர்வாகி விட்டான். ஒரு நாள் வீட்டில் பஞ்சணையில் சாய்ந்தபடியே மனைவியை (அதாங்க ஊர் தலைவருடைய பெண்) அழைத்து காலை அமுக்கி விடச் சொன்னான். அந்த பெண், ஏதோ நினைவில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த அவன், காலால் அந்த பெண்ணை எட்டி மிதித்தான். அடுத்த வினாடியே அவனது காலில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவனது கனவும் கலைந்தது.

மனைவியாக வந்த ஊர் தலைவரின் பெண்ணை எட்டி உதைப்பதாக நினைத்துக் கொண்டு கால் அருகே வைத்திருந்த கண்ணாடிப் பொருட்களை மிதித்து நொறுக்கி விட்டான். கனவிலேயே ஆகாயத்தில் கோட்டை கட்டிய அவனுடைய பேராசையால், ஏற்கனவே இருந்த முதலுக்கும் மோசமாகிப் போனது. இனிமேல், மீண்டும் வியாபாரத்தை துவக்க வேண்டுமானால் அந்த ஊர் தலைவரிடம் சென்று கடன் வாங்கினால் தான் உண்டு. பேராசை பெரு நஷ்டத்தை விளைவிக்கும் என்பதே இந்த கதையின் கருத்து. 

இதையே, பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்படி கூறுகிறார். ‘கடலில் எவ்வளவோ நதிகள் வந்து கலந்தாலும் கடலின் நீர் மட்டம் உயர்ந்து பொங்கி வழிவதில்லை. தன்னுள் வந்து சேரும் அனைத்து நதிகளின் நீரையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இயல்பாகவே இருக்கிறது.

அதுபோலவே, தனக்குள் அனைத்து ஆசைகளையும் யார் அடக்கி வைத்துக் கொள்கிறாரோ? அவருக்குத்தான் மன அமைதி கிடைக்கும். ஆசையின் மீது பேராசை கொண்டிருப்பவனுக்கு மன அமைதி எப்போதுமே கிடைப்பதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 14

வெற்றிக் கூட்டணி


வெற்றி என்ற சிகரத்தை எட்ட ஏராளமான சக்தி தேவை. கருவிகளிலும் இயந்திரங்களிலும் உற்பத்தியாவது மட்டுமே சக்தி அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் அறிவாற்றலும் மிகப்பெரிய சக்தி. இன்று நாகரீக வளர்ச்சி என நாம் கூறுவது எதை தெரியுமா? மனித இனத்தின் வளர்ந்து நிற்கும் அறிவாற்றலின் ஒட்டு மொத்த கூட்டு தொகுப்பை தான்.

அறிவியல் பாடங்களில் தனிமங்களை பற்றி படித்திருப்போம். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட தனிமங்கள் ஒன்று சேரும்போது புதிய வடிவிலான பொருள் கிடைக்கும். நாம் எழுதும் பேனா, இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பேப்பர் என எதை எடுத்தாலும் பல்வேறு தனிமங்கள் அல்லது துகள்களின் கூட்டுத் தொகுப்பு. இதை அப்படியே மனித ஆற்றலுடன் பொருத்திப் பாருங்கள். தனி ஒரு மனிதனின் அறிவாற்றலுக்கு பதிலாக பல்வேறு மனிதர்களின் கூட்டுறவுடன் கூடிய அறிவாற்றல் இணைந்தால்....? அதன் சாதனையே தனி அல்லவா....?

மனிதர்களின் சிந்தனை இரண்டு வகைப்படும். ஒன்று சுயமாக சிந்தனை செய்வது. தனக்குள் வந்து சேரும் அல்லது தனக்கு போதிக்கப்படும் சிந்தனையை வரவேற்று ஏற்றுக் கொள்வது அல்லது ஒதுக்கி தள்ளுவது என்பது மற்றொன்று. இதையே, ‘சுயபுத்தி, சொல்புத்தி’ என முன்னோர் கூறினர். காற்று வெளியில் தவழ்ந்து வீடுகளுக்கு ஒலியாகவும் படக் காட்சிகளாகவும் நுழையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி தகவல்களை சற்று யோசித்துப் பாருங்கள். எந்தவித கம்பித் தொடர்பும் இல்லாமல் வான் வழியாகவே நம்மை வந்து சேருகின்றன. மனிதர்களின் மூளைகளுக்கு இடையிலும் அந்த குணம் உண்டு.

இரண்டு பேருக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத ஒரு பிணைப்பு இருப்பது அதிசயமானது அல்ல. ஒருவரை பார்த்ததும் பிடித்து விடுகிறது. கண்டதும் காதல், அவனை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் மனித மூளைகளுக்கு இடையிலான கண்ணுக்கு தெரியாத பரஸ்பர பரிமாற்றத்தின் விளைவுகளே. இரு மனிதர்களிடம் நடைபெறும் இந்த பரிமாற்றத்தால் இருவருக்கும் ஆனந்தம் விளையலாம் அல்லது வெறுப்பு உருவாகலாம்.

அதே நேரத்தில் இரண்டு மனமும் ஒருங்கிணைந்தால் அது பேராற்றலாக மாறி விடும். இனிமையாக செல்லும் இல்லற வாழ்க்கையில் இதை நாம் கண்கூடாக காணலாம். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்தும் தோள் கொடுத்தும் செல்லும் குடும்பமானது உலக வாழ்க்கையில் வெற்றி பெறும். அந்த ஒத்திசைவு என்பது ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினால் மறுகணமே ஒட்டு மொத்த குடும்ப வாழ்க்கையும் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும்.

இதையே ஒரு நிறுவனம் அல்லது ஒரு புதிய முயற்சிக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைந்து இருக்கும் இரண்டு மனிதர்களின் சிந்தனை அல்லது அதற்கு மேற்பட்ட பல்வேறு மனிதர்களின் சிந்தனைகள் ஒன்று சேர்ந்தால் அங்கு மிகப்பெரிய சிந்தனையும் பேராற்றலும் வேலை செய்ய துவங்கி விடும். ராணுவம், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போன்றவற்றில் இதை நாம் கண்கூடாக காண முடியும். ‘தனி மரம் தோப்பாகாது’ என்பது நம்முடைய தமிழ்ப் பழமொழி.

ஒரு குழு என எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு தனி நபர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. இது போன்ற தனித்தனி ஆற்றல்களை ஒன்று சேர்த்து பேராற்றலை உருவாக்கினால் வெற்றி நிச்சயம். சில பெரிய நிறுவனங்களின் வெற்றிக்கு இதுவே சூட்சும மந்திரம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் மிகப்பெரிய திறமைசாலி என்பது போல தோன்றும்.

உண்மையில், அவருக்கு பின்னால் மனதை ஒன்றாக வைத்திருக்கும் மனோ ரசாயன வித்தை அறிந்த ஒரு சிறந்த குழுவின் கூட்டு முயற்சி கண்டிப்பாக இருக்கும். அந்த குழுவை மிகச் சரியாக வழி நடத்திச் செல்லுவதில் அந்த தலைவர் திறமைசாலியாக இருப்பார். தற்காலிக அளவிலாவது ஒரு குழுவின் மனநிலையை ஒட்டு மொத்தமாக ஒரே நிலைக்கு கொண்டு வருவதில் அவர் தலைசிறந்த நிபுணராக இருப்பார். அதே நேரத்தில் இதுபோன்ற பேராற்றலை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டத்தில் தனிநபர் ஒருவரின் சிந்தனை மாற்றுக் கருத்துடன் இருந்தால் அங்கு பேராற்றல் தத்துவமும் மிகப்பெரிய சிந்தனையாற்றல் உருவாக்கமும் சிதைந்து போகும். டீம் ஒர்க் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அந்த வார்த்தைக்கு அர்த்தம், இதுதான்.

மகாபாரதக் கதையில் பாண்டவர், கவுரவர் இடையிலான போர்க்களக்காட்சி. போரில், யுத்த விதிகளின்படி கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியனை துரியோதனன் நியமித்து இருப்பான். சல்லியன் ஒரு தேசத்தின் மன்னர். அதனால் வேண்டா வெறுப்பாக அவர் தேரோட்டி வரும் சூழ்நிலையில்,  போர்க்களத்தில் மணலுக்குள் தேர் சக்கரம் சிக்கி விடுகிறது. உடனே, அதை தூக்கி விடுமாறு கர்ணன் கூறுகிறான். ஏற்கனவே, ஒரு தேசத்தின் மன்னரான தன்னை கர்ணனுக்கு தேராட்டியாக்கி விட்டனரே என்ற கடுப்பில்  சல்லியன் இருந்தான். அதனால், ‘அது என் வேலை அல்ல. தேர் ஓட்டுவது மட்டுமே எனது பணி’ என கூறியதோடு கர்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில், தேரை அப்படியே போர்க்களத்தில் விட்டு விட்டு, கர்ணனையும் தனியாக தவிக்க விட்டு  போர்க்களத்தை விட்டே சல்லியன் புறப்பட்டுச் சென்று விட்டான். அதன்பிறகு, கர்ணனே கீழிறங்கி தேரை சரி செய்யும்போது அர்ச்சுனனின் அம்புக்கு பலியாவான். இன்றும் கூட, இழிவான அல்லது துரோக செயலில் ஈடுபடும் ஒருவரை ‘சல்லிப்பயல்’ என வசைமொழி கூறுவது உண்டு. கூட்டணியாக செயல்படும் ஒரு பணியில் இது போன்ற முரண்பாடுகள் தோன்றினால் இழப்பும் தோல்வியும் ஏற்படும் என்பதையே மகாபாரதக் கதையில் வரும் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. அதே நேரத்தில் பாண்டவர் தரப்பில் கிருஷ்ணர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் வேதவாக்காக ஏற்று படைகளும் தளபதிகளும் மன்னர்களும்  செயல்பட்டனர். அதனால், வெற்றியும் பாண்டவர் அணிக்கே கிடைத்தது.

ராமாயணக் கதையிலும் கூட, இறுதிகட்டப் போரில் ராவணனிடம் இருந்து தம்பி விபீடணன் பிரிந்து சென்றான். மற்றொரு தம்பி கும்பகர்ணனோ அண்ணனுடன் வாக்குவாதம் செய்த பிறகே செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக போர்க்களத்துக்கு சென்று மடிந்தான். இப்படி முரண்பாடுகள் தலை தூக்கியதாலேயே ராவணன் படை அழிந்தது. ராமபிரான் படையிலோ, ராமர் சொல்லை வேதவாக்காக கொண்டு வானரப் படை செயல்பட்டது. வெற்றியும் பெற்றது. மனித மனங்கள் இணைந்தால் மட்டுமே வெற்றிக் கூட்டணி சாத்தியமாகும் என்பதற்கு இவை எல்லாம் இதிகாசங்கள் கூறும் வெற்றிக் கூட்டணி பற்றிய செய்திகள்.

நிகழ்கால வரலாற்றிலேயே பல்வேறு உதாரணங்களை நாம் கண்கூடாக காணலாம். எனவே, ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கு பல்வேறு மனிதர்களின் மனங்களை ஒருங்கிணைந்து செயல்படுவோம். வெற்றிக் கூட்டணியை உருவாக்குவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 13

புறங்கூறுதல் அழகல்ல...


எந்தவொரு பயணமாக இருந்தாலும் செல்லும் வழியை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வெற்றி பயணத்துக்கும் அது பொருந்தும். பயணத்தை ஊக்குவிப்பவை எவை? பயணத்துக்கு தடைக் கற்களாக இருப்பவை எவை? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் வெற்றிக்கான பயணத்தின் தடைக் கற்களில் முதன்மையானது, குறை காணும் வழக்கம். மனித மனத்தை குழப்பத்தில் ஆழ்த்தி கலங்கிய குட்டையாக மாற்றுவதில் இதற்கு முக்கிய இடம் உண்டு.

குறை காணும் குணத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாகவே ஒருவரை அடுத்தடுத்து குறை கூறிக் கொண்டு இருப்பது. மற்றொன்று, மூன்றாவது நபரிடம் குறை கூறுவது. அதாவது, கோள் மூட்டுதல். இதை, புறங்கூறுதல் என திருவள்ளுவர் கூறுகிறார். மேலும், புறங்கூறாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே எழுதி வைத்துள்ளார். ஒரு குறளில், ‘புறம் கூறி பொய்யாக நடித்து உயிர் வாழ்வதை விட செத்து விடுவது மேலானது’ என மிகக் கடுமையாக கூறுகிறார். மற்றொரு குறளில், ‘பிறருடைய குறையை தேடிக் கண்டுபிடித்து மற்றவரிடம் கோள்  மூட்டுபவனின் குறையை மற்றவர்கள் கவனிக்காமல் விட்டு விடுவார்களோ?’ என கேட்கிறார். அந்த அளவுக்கு புறங்கூறுதல் என்பது மிகவும் மோசமான குணம்.

இந்த உலகில் உள்ள உயிரினம் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான மன நிலை உண்டு. இதுவரை யாருமே பார்த்திராத ஒரு பொருளை விவரித்து கூறுவதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வித வகையிலான கற்பனையிலேயே அந்த பொருளை காண்பார்கள். இதுபோலவே, ஒரே விதமான வேலையை இரண்டு வெவ்வேறு நபர்களிடம் அளித்தால் இருவரும் வெவ்வேறு வழிமுறைகளில் அந்த வேலையை செய்து முடிப்பதை காணலாம். உலகில் உள்ள எந்த ஒரு பாதையும் நேர் கோட்டில் இல்லை என்பதே உண்மை.  

மனிதர்களின் இந்த முரண்பாடான செயல்களே குறை காணும் வழக்கத்துக்கும் அடிகோலுகிறது. ஒருவருக்கு ஒருவர் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமை, புரிந்து கொள்ளுதல் இல்லாமை, கருத்து வேற்றுமை போன்றவற்றின் விளைவே அடுத்தவருடைய குணம் மற்றும் செயல்களில் குறை காண்பதில் முடிகிறது. ‘மற்றவரின் குணங்களை நீ கணிக்க துவங்கினால், அவர் மீது அன்பு செலுத்த உனக்கு நேரம் இருக்காது’ என்கிறார், அன்னை தெரசா.

பொதுவாகவே, தன்னை பற்றி குறை கூறுபவரை ஒரு பொருட்டாகவே மற்றவர் எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில், ஒருவரை குறை கூறும்போது யாருடனும் ஒப்பிட்டு பேசுவது சரியான செயல் அல்ல. அதுபோன்ற வார்த்தைகள் கூறுபவருக்கு வேண்டுமானால் எளிதான வெறும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அதை கேட்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் வேதனை அளிக்கும் சொற்களாக அவை அமையும். தீயினால் சுட்ட வடுவை விட நாவினால் சுட்ட வடு மிகவும் ரணம் மிகுந்தது அல்லவா? ஒருவரை மதிப்பீடு செய்து அவரை குறை காணும் உரிமை யாருக்குமே அளிக்கப்படவில்லை.

மற்றவரை மாற்ற நினைத்து அவரை குறை காண்பதை விட்டு விட்டு அவரை அவருடைய இயல்பிலேயே ஏற்றுக் கொள்ள முயற்சிப்பது நன்மை விளைவிக்கும். அதன் மூலமாக, அவர் நம் வசமாகக் கூடும். இதனால் தான், பிறருடைய நல்ல குணங்களை மட்டுமே நினைத்துப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் இனிமையாக அமையும் என்கிறார், ரமண மகரிஷி.

குறை காணும் குணம் யாரிடம் இருக்கும் தெரியுமா? மோசமானவர்களிடம் மட்டுமே அது நிரம்பி வழிந்து கிடக்கும். இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத கதையின் கிளைக் கதை ஒன்று உண்டு. குருகுல பயிற்சியின்போது சமூக நிலைமையை கண்டறிந்து வருமாறு கவுரவர்களில் மூத்தவரான துரியோதனனையும், பாண்டவர்களில் மூத்தவரான தருமரையும் குரு அனுப்பி வைக்கிறார். இருவரும் தனித்தனியாக வெளியுலகை சுற்றிப் பார்க்க கிளம்பினர். சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தனர். ஓரிரு நாட்கள் இந்த பயிற்சி தொடர்ந்தது. குரு நிர்ணயித்த நாட்கள் முடிந்ததும் இருவருமே குருகுலம் திரும்பினர்.

அவர்களை குரு அழைத்தார். முதலில் தருமரை அழைத்து, ‘உலகை சுற்றிப் பார்த்தாயே? உனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? எனக்கு விளக்கமாக கூறு’ என்றார். ‘அய்யா, இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சியானது. உலகில் உள்ள மக்கள் அனைவருமே மிகவும் நல்லவர்களாக உள்ளனர். மாதம் தவறாது மழை பொழிகிறது என்றால் அந்த நல்லவர்களால் தான். மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்’ என தருமர் பதிலளித்தார்.

அடுத்து துரியோதனனிடமும் அதே கேள்வியை எழுப்பினார், குரு. அதற்கு துரியோதனன், ‘அய்யா. இந்த உலகம் மிகவும் பொல்லாதது. எங்கு பார்த்தாலும் சூது, நயவஞ்சகம், பொறாமை. அப்பப்பா. மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மோசமானவர்களாகவே திரிகின்றனர். அதனால், மகிழ்ச்சி என்பதையே அறியாமல் இருக்கின்றனர்’ என்று பதிலளித்தான்.

இதில் இருந்து என்ன தெரிகிறது? இருவருமே ஒரே ஊரின் பகுதியை தான் சுற்றி பார்த்தார்கள். ஆனால், இருவரின் கண்களும் வெவ்வேறு விதமாக அந்த ஊரை பார்த்துள்ளது. ஒருவருடைய மனம் எப்படி இருக்கிறதோ? அதன்படியே வெளி உலகும் அவருடைய கண்களுக்கு புலப்படும் என்பதே இந்த கிளைக்கதை மூலமாக மகாபாரதம் நமக்கு கூறும் செய்தி.

குறை காணும் வழக்கத்தை ஒருவன் ஏற்படுத்திக் கொண்டான் என்றால், அவனிடம் திறமை இல்லை அல்லது திறமை குறைந்து கொண்டு வருகிறது என்பதே அர்த்தம். நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத ஒருவன் தான், தனது எதிராளியை மோசமான வகையில் மிகவும் அசிங்கப்படுத்துவதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என நம்புவான். 

எனவே, அடுத்தவர் மீது குறை காணும் போக்கை விட்டொழிப்பது என்பது வெற்றிக்கான ஏணியின் ஒரு படிக்கட்டு. அதே நேரத்தில், ஒருவன் தன் மீது குறைகளை கூறிக் கொண்டு இருந்தால் அதை பொருட்படுத்தாமல் இருப்பதும் வெற்றிக்கான சூட்சும மந்திரமே. குறைகளை விட்டொழிப்போம். வெற்றிப் பாதையில் முன்னேறுவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 12

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

மூன்றெழுத்து. இந்த எழுத்துகளை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். தமிழிலும், தமிழர் வாழ்விலும் மாற்றத்தையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவது மூன்றெழுத்து. மூன்றெழுத்துக்காக எதையும் செய்ய பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றனர். இப்படி, மூன்றெழுத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஹலோ. வெயிட் வெயிட் வெயிட். ஏதேதோ கற்பனையில் மிதக்க வேண்டாம். வெற்றி, சாதனை, பணம், பதவி என்பது போன்ற மூன்றெழுத்துகள் தான் அவை. அந்த மூன்றெழுத்துகளை எப்படியாவது அடைய வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு வித வேகம் இருப்பது உண்மை. இதில் அனைவருடைய மூச்சு காற்றும் அடங்கி இருக்கிறது. அட. வேகம், மூச்சு, காற்று மூன்றெழுத்து தொடருகிறதே. சரி. விஷயத்துக்கு வருவோம்.

அனைவருடைய உள்ளத்திலும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதை அடைய உழைப்பது வழக்கம். அந்த இலக்கை அடைவதே வெற்றி கனியை பறிப்பது அல்லது வெற்றி கோட்டையை எட்டுவது என கருதுகின்றனர். ஆனால், எந்தவொரு இலக்கும் கைக்கெட்டும் தொலைவில் எளிதாக அமைந்து விடுவது இல்லை. அந்த இலக்கை நோக்கி நாம் தான் படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். நாம் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் கடவுளும் நம்மை நோக்கி இரண்டடி எடுத்து வருவார், என்கிறது ஆன்மிகம். அது வெற்றியை நோக்கிய பயணத்துக்கும் பொருந்தும்.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் கடமை என்ற மூன்றெழுத்து இருந்தால் மட்டுமே வெற்றி என்ற மூன்றெழுத்து நம் வசப்படும். திரைப்படம், அரசியல், கல்வி, அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சி என ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து நிற்கும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கினால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஓய்வறியாத உழைப்பும் கடமை உணர்வும் இருப்பதை அறிய முடியும். இதையே, ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என பகவத் கீதை கூறுகிறது. அதாவது, எந்தவித எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாத கடமை உணர்வே வெற்றி கோபுரத்தை அலங்கரிக்கும்.

ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்யும் வேலையை கடமை என கூற முடியாது. கடன் என்று தான் கூற முடியும். பழங்காலத்தில் வேலை செய்தால் கூலியாக பணத்துக்கு பதில் நெல் அளந்து கொடுப்பது வழக்கம். அந்த கால கட்டத்திலும் கடனுக்கு வேலை பார்த்தவர்கள் இருந்துள்ளனர். இதனாலேயே, கட்டிட வேலையை முடித்து விட்டு கூலிக்காக புறப்பட்டுச் செல்லும் ஒரு தொழிலாளி, ‘நெல் கொண்டு போகும் வரை நில்லாயோ நெடுஞ்சுவரே’ என கூறியதாக பழமொழி உண்டு. அதாவது, நான் கூலியாக நெல் பெற்று செல்லும் வரையாவது நில் என தான் கட்டிய சுவரை பார்த்து அந்த தொழிலாளி கூறினானாம். இது எப்படி இருக்கிறது?
அவனுடைய வழித் தோன்றல்கள் இன்றும் கூட இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால், அவர்களால் வெற்றி என்னும் கோட்டையை அடைய முடியாது.
கடமை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு ஒரு புராணகதையை உதாரணமாக கூறலாம். சிவபெருமான் தலையில் தும்பை மலர் சூடி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘தும்பை மலர் சூடும் ஈசன் திருப்பாதமே...’ என்ற பாடலையும் கேட்டிருப்போம். இந்த தும்பை விஷயத்தில் கடமை உணர்வை வலியுறுத்தும் சுவாரஸ்ய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் தேவதாசி முறை இருந்தது. ஊர் தோறும் ஆடல் மகளிர் எனப்படும் விலைமாதர்கள் வசித்து வந்தனர். அதுபோன்ற ஒரு விலைமாது குலத்தில் பிறந்த ஒரு பெண், தனது பிறப்பு குறித்து தினந்தோறும் கவலையில் ஆழ்ந்திருந்தாள். ஆனாலும், தனது விலைமாது தொழிலில் மிகுந்த கடமை உணர்வுடன் செயல்பட்டாள். ஒவ்வொரு நாளும் யார் முதலில் தன்னிடம் வந்து பணம் தருகிறாரோ அவரையே அன்றைய தினத்தில் மகிழ்விப்பது அவளது வழக்கம். அதன்பிறகு, அரசரே வந்தாலும் பொன்னை கொட்டி கொடுத்தாலும் ஏற்பதில்லை என்பது அவளுடைய கொள்கை.

ஒருநாள் ஏராளமான காணிக்கையுடன் அந்த நாட்டு அரசர் அவளை நாடி வந்தார். ஆனால், அவர் வரும் முன்பே மிக வயதான கிழவர் ஒருவர், அந்த பெண்ணை நாடி வந்து பொருளை அள்ளி கொடுத்திருந்தார். எனவே, கிழவரை விட்டு விட்டு அரசரை அழைக்க அந்த பெண் விரும்பவில்லை. விலைமகளாக இருந்தாலும் கடமை மற்றும் கொள்கையில் இருந்து தவறாமல் கிழவரை வீட்டுக்குள் அழைத்தாள். அரசனின் பொன், பொருளை திருப்பி அனுப்பினாள்.

அதே நேரத்தில், மிகவும் வயதான அந்த கிழவரால் ஒரு அடி கூட நகர முடியாமல் தேவதாசி வீட்டு படுக்கையிலேயே விழுந்து விட்டார். முதுமை மற்றும் நோய் காரணமாக படுக்கையிலேயே அசைவற்று கிடந்த அந்த கிழவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதே தனது கடமை என அந்த பெண் கருதினாள். ஒருநாள் முடிந்து இரவு கடந்து மறுநாள் பொழுது புலர்ந்தது. அப்போது தான் தெரிந்தது. வந்தவர் கிழவர் அல்ல. வயோதிக உருவத்தில் வந்த சிவபெருமான்.

‘பெண்ணே, நான் கொடுத்த சிரமங்களை இந்த அளவுக்கு பொறுத்துக் கொண்டாயே உனக்கு என் மீது வருத்தம் இல்லையா?’ என சிவபெருமான் கேட்டார்.

‘இல்லை. ஒவ்வொரு நாளும் ஒருவரை கணவனாக ஏற்றுக் கொள்ளும் விலைமாது நான். இன்றைய தினம் கணவராக வந்த உங்களுக்கு கடமை தவறாமல் பணிவிடை செய்து விட்டேன். அவ்வளவுதான். விலைமகளான எனக்கு இதில் என்ன வருத்தம்? இது எனது கடமை’ என்றாள்.

அதைக் கேட்ட சிவபெருமான் அகம் மகிழ்ந்து, ‘பெண்ணே. மானுடப் பிறவி உனக்கு இன்றோடு முடிந்தது. அடுத்த பிறவியில் நீ தும்பை மலராக பிறப்பாய். என்னை பூஜிக்க தும்பை மலரை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்’ என வரமளித்தார். தும்பை பூவை சிவபெருமான் சூடுவதற்கு பின்னால் கடமை உணர்வுடன் தொடர்புடைய இந்த புராண கதை இருக்கிறது.

அலுவலகங்களில் பணியாற்றுவோரும் சரி. வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும் சரி. நமக்கு கிடைக்கும் ஊதியம் அல்லது வருமானத்துக்கு இந்த அளவுக்கு வேலை செய்தால் போதும் என கருதக் கூடாது. அதற்கு பெயர் கடன். அதையும் தாண்டி நம்முடைய கடமை என ஒன்று உள்ளது. அதுதான், பிற்காலத்தில் நம்மை பாதுகாக்கும் கவசமாக இருக்கும். கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் மனிதருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேரும். வெற்றியும் குவியும். கடமை என்ற மூன்றெழுத்தே வெற்றி என்னும் மூன்றெழுத்தின் உயிர் மூச்சு.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 11

நீங்களும் பாஸ் தான்

உயரச் செல்ல வேண்டும் என்பதில் அனைவருக்குமே விருப்பம் அதிகம். இது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். பண்டைய அரசர் காலங்களில் விண்ணை முட்டும் ராஜ கோபுரங்கள், வான் தொடும் அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் என அனைத்தையுமே மிகப் பெரியதாக அமைத்தனர். அதன் அடிப்படை உளவியல் என்னவென்றால், நான் உயர்ந்தவன் என்பதே. இது அனைவருக்குமே அடி மனதில் இருக்கும் குணம். ஆனால், உண்மையில் அதுபோன்ற வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்து விடுகிறதா என்ன?

ஒருவேளை கிடைத்து விடக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலையில் உயர்ந்த பதவியை தக்க வைத்துக் கொள்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்படும். அதனாலேயே பதவி என்பது முள் கிரீடம் என சொல்லி வைத்துள்ளனர். தலைமை பீடத்தை எட்டுவதை விட அந்த பீடத்தை தக்க வைப்பதில் தான் போட்டி அதிகம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் உங்களுக்குள் உள்ள திறமையை கண்டு வியந்து நிர்வாக பொறுப்பை அளித்து விட்டனர் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, வழக்கமான பணி முறையையே கையாண்டால் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். உங்களுடைய பணி நேரம் மாறும். அது சாதாரணம். அதற்கும் மேல் சில விஷயங்கள் உள்ளன.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை திறமையாக கையாண்டு நிர்வாக பொறுப்பில் எப்படி பாஸ் ஆகிறீர்கள் என்பதே மேட்டர். தலைமை என்றதும் முதலில் குழப்பமும் தடுமாற்றமும் ஒரு சேர வந்து நிற்பது இயல்பு. அதை வெற்றிகரமாக தாண்டிச் சென்று திறமையாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியின் ஒளிக்கீற்று தென்படும். அதற்கு சில சூட்சுமங்கள் உள்ளன. எப்படிப்பட்ட அலுவலகமாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அங்குள்ள ஊழியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அந்த மூன்று பிரிவுக்குள் தான் நிச்சயமாக அவர்கள் இருப்பார்கள்.

முதலாவது பிரிவில் நேர்மை, உண்மை, பணிவு கொண்ட பணியாளர்கள் அடங்குவர். இரண்டாவது பிரிவில் ஒழுக்கமின்மை, சோம்பேறித்தனம், விளையாட்டு தனம் போன்றவற்றின் மொத்த குத்தகைதாரராக உள்ள ஒரு பிரிவு இருக்கும். இந்த இரண்டு பிரிவுக்கும் இடைப்பட்ட லெவலில் ஒரு சாரார் எப்போதுமே இருப்பார்கள். நேரம் மற்றும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு இந்தப் பக்கத்திலோ அல்லது அந்தப் பக்கத்திலோ அவர்களுடைய குணம் வெளிப்படும்.

குடும்ப சிக்கல், சரியான சம்பள உயர்வு கிடைக்காமை, விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமை, நிராசை என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குறைகள் இருக்கக் கூடும். யாருக்கு என்ன சிக்கல் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றும் ஊழியர்களை அவ்வப்போது பாராட்டினாலே போதும். அவர்கள் குளிர்ந்து விடுவார்கள். மேம்போக்கான பொதுவான பாராட்டாக இல்லாமல் அவர்களுடைய ஏதாவது ஒரு செயலை ஆதாரத்துடன் எடுத்துக் கொண்டு பாராட்ட வேண்டும். அதுவே, அவர்களுக்கு உற்சாக டானிக்காக மாறி விடும்.

அதே நேரத்தில், மற்ற ஊழியர் மத்தியில் பாராட்டுவதும் தவறாகிப் போகும். இதில் தான் அலுவலக சூட்சுமம் இருக்கிறது. ஏனெனில், இந்த அலுவலகத்தில் அவன் மட்டும்தான் வேலை பார்க்கிறானோ, நாம் யாரும் வேலை பார்க்கவில்லையோ என்பது போன்ற எண்ணம் மற்ற ஊழியர் மத்தியில் காரணமே இல்லாமல் எழக் கூடும். எனவே, தனியாக அழைத்து பாராட்டுவது மிகுந்த பலனை தரும்.

இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் எதற்கும் மசியாதவர்கள். அறிவாற்றல் இருந்தாலும் தங்களை தாங்களே பெரியவர்கள் என மெச்சிக் கொண்டு அந்த வட்டத்துக்குள்ளேயே இருப்பவர்கள். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். உடனடி மாற்றத்தை எதிர்பார்த்து பஞ்ச தந்திரங்களை கையாண்டால் அது நிலைக்காது. ஏனெனில், அலுவலக நிர்வாக சட்ட விதிகளும் ஓரளவுக்குத்தான் துணைக்கு வரும். அந்த சட்ட விதிகளை அடிக்கடி பிரயோகித்தால் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

இது மட்டுமல்ல, அடிக்கடி பணி இடம் மாறுதலுக்கு உட்பட்ட தலைமை பதவியாகவே இருந்தால் கூட குறைந்த பட்சம் 4 ஆண்டுகளாவது அந்த ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற நேரிடும். எனவே, மனிதாபிமானத்துடன் கூடிய இனிய அணுகுமுறையே எப்போதும் நல்ல பலனை அளிக்கும்.

‘நீ ஒருவரை விரும்பும்போது அவரிடம் இல்லாத பல விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். அதேபோல, ஒருவரை வெறுக்கும்போதும் ஒரு சில விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். விரும்பும்போது கடவுளாக தெரியும் நபர், வெறுக்கும்போது பிசாசாக தோற்றமளிக்கிறார். உண்மையில் அவர் கடவுளும் இல்லை. பிசாசும் இல்லை. அவர், அவராகவே இருக்கிறார். நாம் மிகைப்படுத்திக் கொள்வதில் தான் அனைத்தும் இருக்கிறது’ என்பது ஓஷோ அறிவுரை.

எனவே, எந்த ஒரு ஊழியராக இருந்தாலும் தராசு போல நடுநிலைமையுடன் அணுக வேண்டும். இது அலுவலக பணிக்கு மட்டுமல்ல. வாழ்க்கையிலும் உதவும். தனிப்பட்ட குணத்திலும் எரிச்சல், கோபம் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பொறுமை, தன்னடக்கம் கண்டிப்பாக தேவை. நிதானமற்ற பேச்சு காரியத்தை கெடுக்கும். முதலில் இவற்றை கடைப்பிடிப்பதும் மிகவும் கஷ்டமாக தெரியும். மன அழுத்தம் கூட வரலாம். ஆனால், நாளடைவில் இந்த குணங்கள் தான் மிகவும் நல்லதொரு கவசமாக மாறும்.

ஒருமுறை தனது சீடர்களுடன் ராஜகிரியில் இருந்து நாளந்தா நோக்கி புத்த பிரான் பயணம் மேற்கொண்டார். அவரும் புத்த பிட்சுகளும் குழுவாக சென்றபோது வழியில் ஒருவர், அவர்களை மறித்தார். பின்னர், மிக மோசமான வார்த்தைகளால் புத்தரை நோக்கி அந்த மனிதர் திட்டத் தொடங்கினார். அதைக் கேட்ட, சீடர்களான புத்த பிட்சுகள் அனைவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஆனால், புத்தரின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. ஓவியத்தில் வரைந்த தாமரை மலர் போன்று மலர்ந்து காணப்பட்டது. அதைக் கண்ட பிட்சுகள் ஆச்சரியம் அடைந்தனர்.

பிறகு, அந்த மனிதர் போய் விட்டார். இதையடுத்து, நாளந்தா நோக்கிய பயணம் அவர்களது பயணம் தொடர்ந்தது. சீடர்களுக்கு பொறுக்க முடியவில்லை. தங்களுக்குள் குமைந்து கொண்டிருந்த கேள்வியை புத்த பிரானை பார்த்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த புத்தர், “யுத்த களத்தில் புகுந்து செல்லும் யானை மீது அனைத்து திசைகளில் இருந்தும் அம்புகள் பாய்ந்து வந்து தாக்கும். ஆனால், அவற்றை பொறுத்துக் கொண்டு தனது இலக்கு நோக்கி அது நடந்து செல்லும். அது போலத்தான், எனது செயல்பாடும். இகழ்ச்சியும், புகழ்ச்சியும் எனக்கு ஒன்றே. இரு சூழ்நிலைகளிலும் சம நிலையில் இருப்பதே உண்மையான தர்மம்” என விளக்கம் அளித்தார்.

மலர்ந்து நிற்கும் மலர்கள் அனைத்தும், தம் மீது அருவருப்பான வண்டு அமர்ந்தாலும் முகம் சுளிப்பதில்லை. கொடூர மனிதர்கள் இருக்கிறார்களே என்பதற்காக சூரியன் உதிக்காமல் இருப்பதில்லை. அன்பும் அரவணைப்பும் ஒன்று சேர்ந்திருந்திருந்தால்...
.
.
நீங்களும் பாஸ் தான்.

(வெற்றி பயணம் தொடரும்…)

Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 10

காலம் பொன் போன்றது

காலம், நேரம், தருணம் இப்படி பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம் அது. ஓலைக் குடிசையின் வழியே வானை நோக்கிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி. ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி. உலகிலேயே மிக அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி. உலகின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் சரி. அனைவருக்குமே இறைவன் அளித்திருப்பது ஒரே மாதிரியான கால அளவு தான். ஒரு நாளுக்கு 24 மணி என்பது அனைவருக்குமே சமமானது.
 
அனைவரிடமும் மணிக்கு தலா 60 நிமிடங்கள் வீதம் வாரியாக முழுதாக 24 மணி நேரம் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த காலத்தை பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, வாழ்க்கைத் தரம், வேலை, புகழ், பணம், பதவி, சொகுசான வாழ்க்கை, அடுத்தவரை அண்டி நிற்கும் நிலைமை என பலதரப்பட்ட நிலைமைகளும் ஏற்படுகின்றன. நேரம் போதவில்லை. பொழுது போகவில்லை என்பதெல்லாம் சோம்பேறிகளின் கூற்று. ஏனெனில், தினமும் 3 கோடியே 15 லட்சத்து 36 ஆயிரம் விநாடிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.

இந்த பூவுலகில் மனிதனின் சராசரியான வாழ்நாள் 65 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால் தோராயமாக ஒவ்வொருவருக்கும் சுமார் 25 ஆயிரம் நாட்கள் மட்டுமே கடவுளால் எண்ணி வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்பின் அறியாத ஊருக்குச் சென்றால் கையில் சிறிதளவே இருக்கும் பணத்தை எந்த அளவுக்கு மிகச் சிக்கனமாக செலவு செய்கிறோமோ? அதுபோலவே, இந்த நாட்களையும் மிக மிக கவனமாக செலவு செய்ய வேண்டும்.

அப்படி நாம் செய்திருக்கிறோமா? இந்த கேள்வியுடன் கடந்த காலத்தை நாம் சிறிது திரும்பிப் பார்த்தால் திருப்தியான பதில் கிடைக்காது என்பதே கசப்பான உண்மை. காலாவதியான செக் போல கடந்து விட்ட கடந்த காலம் குறித்து யோசிப்பதில் அர்த்தம் கிடையாது. செலவழிக்காமல் கையில் குவிந்து கிடக்கும் ரொக்கப் பணம் போல இருக்கும் நிகழ்காலம் குறித்து யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறவும் வேலையில் முன்னேறவும் நிகழ்கால முடிவுகள் அர்த்தம் நிறைந்தவை. அவசியமானவை.

அந்த முடிவுகளை எடுப்பதற்கு முன், திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. நேரத்தை மிகச் சரியாக நிர்வகிப்பதில் தான் ஒவ்வொருவருடைய வெற்றியின் சூட்சுமமும் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் பட்டியலிட்டு கொள்ள வேண்டும். முதலில் எந்த வேலை என்பதை அறிந்து அந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பெரியவர்களும் இதையே, ‘பருவத்தே பயிர் செய்’ என்றனர். அதாவது, மிகச் சிறந்த விளைச்சலை பெற வேண்டுமானால் மிகச் சரியான மழைப் பருவத்தை அறிந்து அதற்கு ஏற்ற சரியான விதையை நிலத்தில் விதைக்க வேண்டும். 

இது, வாழ்க்கைக்கும் 100 சதவீதம் பொருந்தும். இளமை பருவத்தில் வேலையை தேடிக் கொள்ள வேண்டும். காலம் கடந்து விட்டால் எக்ஸ்பயரி ஆன உணவு பொருட்கள் எப்படி உதவாதோ? அதுபோலவே எக்ஸ்பயரி ஆகி விடுவோம். ‘பர்ஸ்ட் இம்ப்ரஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன்’ என ஆங்கிலத்தில் கூறுவார்கள். முதலில் தோன்றும் அபிப்பிராயமே நல்ல அபிப்பிராயமாக இருக்கும். இதையே, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற வார்த்தைகளில் கூறி வைத்தனர். உங்களுடைய கால நிர்ணய பட்டியலை எப்படி முதலில் வகுத்துக் கொள்கிறீர்களோ? அதற்கு ஏற்பவே பலன் கிடைக்கும். அதிகாலையிலேயே பணிகளை சுறுசுறுப்பாக துவங்க வேண்டும். அடுத்தவரை சார்ந்து இருக்காமல் சுயமாக வேலையை செய்து முடிப்பது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனை தான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

எதையுமே நல்ல விதமாகவும் நேர்மறை எண்ணத்துடனும் அணுக வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வீண் பேச்சு, தூக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றை குறைத்து பயனுள்ள பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். நேரம் தவறாமை மிகவும் அவசியம். நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் அவசியம் அற்றவை. எல்லா நேரமும் நல்ல நேரமே. ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய தினத்தில் செய்த சிறப்பான பணி எது என உங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி நல்லதொரு பதிலை பெற்று விட்டீர்கள் என்றால் எதிர்காலம் சிறப்படையும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 9

மறந்துடாதீங்க ப்ளீஸ்...

‘சார். உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா, சட்டுன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது’ இது போன்ற வார்த்தைகளை அவ்வப்போது நாம் கேட்க நேரிடும். இவற்றை சொல்லும் நபர்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், வார்த்தைகள் வேறுபடுவதில்லை. நாமே கூட, நல்ல பரிச்சயமான பள்ளித் தோழன் அல்லது நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பன் பெயரை பார்த்த உடனேயே நினைவுக்கு கொண்டு வர முடிவதில்லை.

மாடியில் உள்ள படிக்கட்டுகளை பாருங்கள். ஒவ்வொரு படிக்கட்டுக்கும் அடுத்த படிக்கட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி தருவதோடு பணி நிறைவடைந்து விடுகிறது. அதுபோலத்தான் மனமும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடும். உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்வோம். உங்களின் 5 வயதில் இருந்து 25 வயது வரையிலான உங்களுடைய நினைவுகளை வரிசையாக கூறச் சொன்னால் அதிக பட்சமாக 24 மணி நேரத்துக்கு மேல் கூறுவதற்கு உங்களிடம் எதுவும் இருக்காது.

அந்த 24 மணி நேரத்திலும் நீங்கள் கூறும் வார்த்தைகளை அவ்வப்போது ‘நல்லா நினைவிருக்கு’ என்ற வலு சேர்க்கும் வாதத்துடன் தான் கூறுவீர்கள். ஏனெனில் மனித மனம் என்பது மறப்பதில் கில்லாடி. அதில் ஒரு சில விஷயங்கள் விதி விலக்கு. உண்மையில், மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது, இந்த நினைவாற்றல் தான். ஆனால், நினைவாற்றல் என்பதை மனப்பாடம் செய்து கொள்வது என அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதனால் தான் பள்ளி மாணவர்கள், பாடங்களை உருப்போடும் பழக்கத்தில் ஊறிப்போய் இருக்கின்றனர். நினைவாற்றல் என்பது வேறு. அது 3 வித தன்மை உடையது.

முதலாவது, பட்டறிவு மூலமாக பெறும் செய்திகள். இதை நம்முடைய மனது உள்வாங்கி நரம்புகள் வழியாக நரம்பு மண்டலத்தில் பதிவு செய்கிறது. இரண்டாவது அந்த நரம்பு மண்டலத்தில் தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. மூன்றாவதாக நமது பட்டறிவு மூலமாக அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது. இது தவிர, நம்முடைய தகவல்களை குறிப்பெடுத்து பதிவு செய்து கொள்வதும் கூட நினைவாற்றலை அதிகரிக்கும்.

பள்ளிக்கூடங்களில் நடத்தும் போட்டிகளின்போது நாம் ஒரு போட்டியை கவனிக்கலாம். ஒரு அறைக்குள் ஏராளமான பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்து அதை கவனித்துவிட்டு வெளியே வந்து அதில் உள்ள பொருட்களை நினைவு படுத்தி பட்டியலிட்டு எழுதி கொடுக்கச் சொல்வார்கள். இது நினைவாற்றலை அதிகரிக்கும் போட்டிகளில் ஒன்று. ஆசிரியர்களும் கூட பாடங்களை திட்டமிட்டு நினைவுப்படுத்தி, குறிப்பெடுத்து வந்தால் தான் சிறப்பாக மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தர முடியும்.

மனித மனத்தில் எழுத்துகள், வார்த்தைகளை விட காட்சிகளே எளிதில் பதியும். இன்றைய சமூகத்தில் பத்திரிகை, இலக்கியங்கள் ஆகியவற்றை விட சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதே இதற்கு சிறந்த உதாரணம். பாடங்களை விட படங்களே மனித மனதில் நன்றாக நினைவில் நிற்கும். அதனால், எந்தவொரு தகவலையும் படக்காட்சிகள் போல மனதில் பதிவு செய்து கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் தொடர்புடையவற்றை சேர்த்து நினைவில் பதிவு செய்வது நல்லது.
நினைவாற்றல் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மூளைக்கான மிகச் சிறந்த பயிற்சி என்றும் கூறலாம். எந்த அளவுக்கு மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது.

மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணுமுணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ணப் பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பேருந்து பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவுப்படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.
மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

மறதி இல்லாமையே நினைவாற்றல் என கூறப்படுகிறது. இந்த மறதியின்மை என்ற சொல்லை பொச்சாவாமை என கூறுகிறார், வள்ளுவர். அதனால் தான், பொச்சாவாமை என்ற தலைப்பில் தனி அதிகாரம் எழுதியுள்ளார். ‘பொச்சாப்பு கொல்லும் புகழை’, ‘பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை’, ‘பொச்சாப்பு உடையார்க்கு இல்லை நன்கு’ என 10 குறள்களை அடுக்குகிறார். எனவே, எப்போதுமே மறந்திடாதீங்க... நினைவாற்றல் நல்லது. அதுவே வெற்றிக்கு சிறந்தது.

(வெற்றி பயணம் தொடரும்…)