Tuesday 26 May 2015

குறள் கூறும் துறவறம்




உலகம் உருண்டு கொண்டிருப்பது, ஆசை என்ற இரண்டு எழுத்தில் தான். நடந்து செல்வோருக்கு சைக்கிள் வாங்க ஆசை. சைக்கிளில் செல்வோருக்கு பைக் வாங்க ஆசை. பைக் வைத்திருப்பவருக்கு கார் வாங்க ஆசை. சாலையிலேயே எத்தனை நாள் பயணிப்பது?. விமானம் ஏறி வானில் பறக்க வேண்டும் என்பதும் உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகளுள் ஒன்று. இது தவிர பணம், பதவி, பொன், பொருள் என ஆசையின் பட்டியல் நூறு வகைகளை தாண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஆசைக்கு கடிவாளமிடுவது கடினம்.

ஆனால், ஆசை என்பது அதிகமாகி பேராசை என்னும் சேற்றுக்குள் சிக்கும் போது தான் புதைகுழி நோக்கி வாழ்க்கை செல்ல துவங்கும். இதைத்தான், ஆசையே அனைத்து துன்பத்துக்கும் காரணம் என புத்தர் கூறினார். அவர், சுக போகங்களில் திளைக்கும் அரச வாழ்வை துறந்து துறவறம் மேற்கொண்டு இந்த பேருண்மையை கண்டுபிடித்த அனுபவசாலி. அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசையை விட்டொழிக்க வலியுறுத்திய சமூக விஞ்ஞானி, திருவள்ளுவர்.

உலகில் இன்பம், துன்பம் இரண்டும் கலந்து இருக்கிறது. எந்த ஒரு பொருளை வேண்டாம் என நாம் ஒதுக்குகிறோமா, அந்த பொருளால் வரும் துன்பம் குறைகிறது. இதையே, துறவு என்ற அதிகாரத்தில்

 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்  = என திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

எதுவுமே சாப்பிட கிடைக்காத போது சாப்பிடாமல் இருப்பது விரதம் அல்ல. அதற்கு பெயர் பட்டினி. அனைத்துமே இருந்து மனதையும் நாவையும் அடக்குவதே சிறப்பு. துறவறத்துக்கும்
இது பொருந்தும் என்பதை, வேண்டின் உண்டாக துறக்க.... என்ற குறளில் வலியுறுத்துகிறார்.

துன்பத்துக்கு காரணமாக அமையும் ஆசையூட்டும் பொருட்களை துறப்பது என ஒருவர் முடிவு செய்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு, தன் பொருள் மற்றும் பிறர் பொருள் என பாகுபாடு பார்க்க கூடாது. மற்றவர் பொருளை தனதாக்கி உரிமை கொண்டாடுவதும் கூடாது. அப்படி கொண்டாடாமல் இருந்தால் அவர்களின் சிறப்பானது, வானில் உள்ள தேவதைகளுக்கும் மேலாக இருக்கும் என்பதை,

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்  =  என கூறியுள்ளார், தெய்வப் புலவர்.

சரி. எல்லோரும் துறவியாகி விட முடியுமா? முடியாது. எப்படி இருந்தால் துறவியாகலாம்? இந்த உலகில் துறவறம் பூணுவதற்கு எதை கைவிட வேண்டும்? இந்த கேள்விகளுக்கும் தன்னுடைய குறளிலேயே விடையளிக்கிறார். அதாவது, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள தெரிய வேண்டும், என கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

திருவள்ளுவர் கூறிய துறவற நெறியில் தான் புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசகர், அப்பர் போன்ற மகான்கள் வாழ்ந்தனர். இந்த உடல் கூட எனக்கு சொந்தமானது அல்ல. நான் என்று கூறுகிறோமே, அந்தநான்என்பது யார்? என கேள்வி கேட்டு முற்றும் துறந்த மோன நிலையை அடைந்தவர், ரமண மகரிஷி. இப்படி ஏராளமான துறவிகளுடைய வாழ்க்கை முழுவதும் வள்ளுவர் காட்டிய துறவற நெறியே மேலோங்கி நிற்கிறது.

இறைமகன் இயேசுபிரான், தனது சீடர்களை பார்த்து, ‘அனைத்தையும் விட்டு பின்னே வாருங்கள். ஆடை, உணவு கவலை கூட உங்களுக்கு வேண்டாம். குருவிக்கு ஊட்டி, அல்லிக்கு ஆடை அணிவித்து காப்பாற்றுபவன், உங்களையும் கூட காப்பாற்றுவான்என கூறுகிறார். இயேசு கூறிய இந்த கருத்தை,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு = என அறநெறியாக அய்யன் வள்ளுவர் அறிவிக்கிறார்.

அது சரி. துறவறம் என்றாலே உலக வாழ்வியல் இன்பங்களை துறப்பது மட்டும் தானா. இறைவனை அடைய துறவிகளாகவே சென்று விட வேண்டுமா? இல்லை. இல்லற வாழ்விலும் கூட ஆசை, கோபம், பொறாமை போன்றவற்றை துறந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்கும். அதுவும் ஒருவகையான துறவற வாழ்வு தான். மிகச் சிறந்த தவ வாழ்வு தான்.

அய்ந்தறிவு படைத்த பயிர் வாடினால் கூட வாட்டம் கண்ட வள்ளலார் அவதரித்த மண் இது. எனவே, துறவறம் என்பதை முற்றும் துறந்த ஞானி என்றோ பட்டினத்தார் போன்று உலகை மறந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றோ கருதுவது கூடாது. அப்படி ஒரு எண்ணம் தோன்றி விடக் கூடாது என்பதாலேயே துறவறம் கூறிய வள்ளுவ பெருந்தகை, இல்லற வாழ்வை கூட நல்லற வாழ்க்கையாகவும் துறவறத்துக்கு நிகரான வாழ்க்கையாகவும் மாற்றிக் காட்டி இனிமையாக வாழ முடியும் என்கிறார்.

வள்ளுவர் காட்டிய வழி நடப்போம். வாழ்வை இனிமையாக்குவோம்.

= வை.ரவீந்திரன் 

Friday 22 May 2015

ஆரஞ்சு மிட்டாயும் ... ரிசல்ட்டும்

பிளஸ் 2 ரிசல்ட், எஸ்எஸ்எல்சி ரிசல்ட், காலேஜ் அட்மிஷன், பள்ளிக் கூட அட்மிஷன். இப்படியாக ஆரவாரம் தொடங்கியாச்சு. கடந்த வாரத்துல ஒருநாள் பிளஸ் 2 ரிசல்ட் வந்த அன்னிக்கு காலையிலேயே அடுத்த தெருவுல இருக்குற ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு வந்திருந்தாள்.

‘அங்கிள், ஆண்ட்டி, நான் பிளஸ் 2 பாஸாயிட்டேன். 1162 மார்க். கட் ஆப் 186 வருது’ இப்படி உற்சாகமாக சொல்லிக்கிட்டே பெரிய சாக்லெட் ஒண்ணு கொடுத்தாள்.

அவளை வாழ்த்தி அனுப்பிவிட்டு சாக்லெட்டை பிய்த்து வாயில் போட்டதும், அது கரையத் தொடங்கியது. அப்போ, அந்த பொண்ணு சொல்லிட்டு போன வார்த்தைகளோட 25 ஆண்டுக்கு முன்னால நான், என்னோட பத்தாங் கிளாஸ் பரீட்சை ரிசல்ட்ட பார்க்க அலைஞ்சு திரிஞ்ச நெனப்பு மெதுவா எட்டிப்பார்த்துச்சு.

அப்போல்லாம், விஞ்ஞானம் இந்த அளவுக்கு வளரலை. பரீட்ச நம்பரை தட்டுனதும் இண்டெர் நெட்டில், மொபைல் போனில மார்க்க முழுசா பாக்குற வசதில்லாம் கிடையாது. ஏன்னா, இண்டெர் நெட், மொபைல் எல்லாம் அப்போ ஏது?

காலையில் அரசாங்கம் வெளியிடுற ரிசல்ட்ட பிரிண்ட் பண்ணி சாயந்தரம் வரும் மாலைமுரசு பேப்பருக்காக எல்லாரும் காத்து கிடப்போம். அதுவும், திருநெல்வேலில பிரிண்டாகுற அந்த பேப்பர், அங்கேயே பெரும்பாலும் வித்து தீர்ந்துடும்.

அங்கிருந்து தென்காசிய பாக்க ஒரு சில பேப்பர் தப்பி வருவது உண்டு. அதை ஆலங்குளத்துல வழியிலேயே சிலர் மடக்கிப் பிடிப்பாங்க. அதுக்காக, ஆலங்குளத்த சுற்றி இருக்கும் பல கிராமங்கள்ல இருந்து கொரங்கு பெடல் போட்டு ஆலங்குளத்துக்கு பையங்க எல்லாம் வந்து நிப்பாங்க. என்னோட, பத்தாவது பரிட்ச ரிசல்ட்ட பாக்குறதுக்கும் அப்படித்தான் போய் நின்னேன்.

அன்னிக்கு திருநெல்வேலில இருந்து தப்பிப் பிழைத்து ஆலங்குளத்துக்கு மாலைமுரசு பேப்பர் வந்த நேரம் என்ன தெரியுமா? நைட் 7 மணி. அதுல ஒரு பேப்பர அப்படியே அமுக்கிக்கிட்டு போய் சேக்காளிங்களோட (நண்பர்கள்) சேர்ந்து கிட்டு ஊருக்குள்ள ஒரு டீக்கடைக்கு போய் அந்த பேப்பர விரிச்சு பார்த்தோம்.

ஒவ்வொரு நம்பராக தேடித் தேடி பார்த்து யாருல்லாம் பாஸ், யாருல்லாம் பெயில் அப்படின்னு பார்க்கிறதோட எங்க கூட வராத சேக்காளிங்க வீட்டுக்கு நேரா போயி பரிட்ச ரிசல்ட்ட சொல்லுவது உண்டு. அதுவும், ஒண்ணா படிக்கிற பொம்பள புள்ளைங்க வீட்டுக்கு போய் ரிசல்ட்ட சொல்லுறதுக்கு சேக்காளிங்களுக்குள்ள பெரிய அடிதடியே நடக்கும்.

அப்போல்லாம், பேப்பருல ரிசல்ட்ட பாக்கிறதே தனி கலை. ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியா ரிசல்ட்ட பிரிண்ட் பண்ணி இருப்பாங்க. பேப்பருல ஒரு பக்கத்தில ஆரம்பத்துல மட்டும் முழுசா நம்பர் இருக்கும். அதுக்குப் பிறகு, கடைசி 3 நம்பர மட்டும் வரிசையா பிரிண்ட் பண்ணி இருப்பாங்க. அதனால், நம்மோட பரீட்ச நம்பரோட முதல் பகுதி முழுசா எந்த பக்கத்துல இருக்குன்னு முதல்ல கண்டு புடிக்கணும். அப்புறமா, அதுல இருந்து நூல் பிடிச்சு போயி நம்ம நம்பர் எங்க இருக்குன்னு பார்க்கணும்.

நம்மோட கடைசி மூன்று லக்க நம்பர் இருந்தா பாஸ். இல்லாட்டா.... அவ்ளோதான். இப்பிடி பரிட்ச எழுதுன நம்பர மட்டும் பேப்பருல பாக்குறதுக்குள்ள அன்னைக்கு முழுசும் மனசுக்குள்ள ஓடுற பதற்றம், பயம் இதெல்லாம் இருக்கே... அப்பப்பா.... அத விவரிக்கவே முடியாது.

கொஞ்சம் அரகொற மாணவனா இருந்தா அவ்ளோதான். அவன அன்னிக்கு யார் பார்த்தாலும் அவன இளக்காரமா பாக்குறது மாதிரியே அவனுக்கு தெரியும். இதனாலேயே, ஒரு சில அரகொறைங்க ரிசல்ட்ட பாக்காமலேயே தற்கொலைக்கு போயிருவாங்க. அதுல சிலர், வாழ்க்கைல தோத்த பிறகு, பேப்பர் ரிசல்ட்டுல பாஸாகி இருப்பாங்க.

இவ்ளோ கலாட்டாவுக்கு நடுவுல ரிசல்ட்ட பார்த்து முடிக்கும்போது அன்னிக்கு நைட்டாயிரும். மறுநாள் தான் பாஸான விஷயத்தை அக்கம்பக்கம், சொந்தக்காரங்க அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்ல முடியும். அதனால, மறுநாள் காலங்காத்தால எழுந்திருச்சி அண்ணாச்சி கடை எப்போ திறக்குமுன்னு பார்த்து 5 பைசா ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட் வாங்கி ஒவ்வொருத்தருக்கா கொடுப்போம்.

இந்த கூத்துங்க எல்லாம் முடியறதுக்கு முழுசா ரெண்டு நாளாயிரும். அதுக்கு பிறகு, எந்தெந்த பாடத்துல எத்தன மார்க்குன்னு பாக்கணுமே? அதுக்கு மூணு, நாலு நாளாகும். பள்ளிக்கூடத்துக்கே நேரடியா மார்க் லிஸ்ட்ட அனுப்பி வச்சிருவாங்க. அங்க போயிதான் மார்க்க பாக்க முடியும்.

பள்ளிக் கூடத்துல அரகொறைக்கு என்ன மதிப்பு இருக்கும்? அங்க நல்லா படிக்கிற டாப் டென் பையங்க மார்க்க மட்டுந்தான் மொதல்ல காட்டுவாங்க.  அப்புறம் பொறுமையா இருந்து என்ன மாதிரி கொஞ்சம் சுமார், சுமார், பேக் பெஞ்சு மாணவங்க ரிசல்ட்ட எல்லாம் பாக்குறதுக்கு ஒரு வாரம் வரை ஆயிடும்.

இப்படித்தான், 25 ஆண்டுக்கு முன்னால என்னோட பள்ளிக்கூட ரிசல்ட்ட திருவிழா மாதிரி ஒரு வாரம் கொண்டாடுன நெனப்பு முழுசும் என்னோட அடி நாக்குல இப்பவும் இனிச்சு கெடக்கு, அப்போ நான் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த ஆரஞ்சு மிட்டாய் மாதிரியே.

ஆனா, இன்னிக்கு.....? அந்தப் பொண்ணு குடுத்த சாக்லேட் மாதிரியே ரிசல்ட்டு கொண்டாட்டமும் அரை நாளுக்குள்ள கரைஞ்சு போயிருது.

= வை.ரவீந்திரன் 


Sunday 10 May 2015

எக்காளமிடுகிறது இயற்கை...


 
திட்டமிட்டு சேர்த்த
தங்கம், வெள்ளி
எல்லை தகராறுடன்
எழுப்பிய வீடு - அனைத்தும்
கணப்பொழுதில் வீழ்ந்தன
புழுதிப்படலம் சூழ
மண்ணில்

பாசம் ஊட்டிய அன்னை
அறிவு வளர்த்த தந்தை
பரிவு காட்டிய உறவுகள்
ஓருயிராய் இணைந்த மனைவி
வாழ்வை அர்த்தமாக்கிய மழலை
எவருமில்லை ஒரு நொடியில்
கதறி அழவும் ஆளில்லை

பணம், செல்வாக்கு, அதிகாரம்
அனைத்தும் போலி என உணரும்
வலிமிகு அந்த தருணத்தில்
கண்ணீரும் இழப்பீடும்
மீட்டுத் தரப்போவதில்லை
இழந்து விட்ட
எந்த ஒன்றையும்...

உடலா, உயிரா,
சொத்தா, சொந்தமா
மிதந்து கொண்டிருக்கும்
புழுதிச் சாம்பலில்
பிரித்தறிய முடியாவண்ணம்
புதைந்து விட்டன அனைத்தும்
ரிக்டர் கூறிய நடுக்கத்தினால்...

எல்லாம் வென்ற மமதையில்
நிற்கும் மனிதனை வென்று
எக்காளமிடுகிறது இயற்கை...
காதறுந்த ஊசியும்
கடைவழி வருமோ...?
காலம் வென்ற இவ்வுண்மையை
முற்றாய் உணர்ந்தார் யாரோ?

= வை.ரவீந்திரன் 


Thursday 7 May 2015

அழுகையில் கரையும் துயரம்



கிராமங்களில் உறவினர்கள் இறந்து விட்டால் ஊரே கூடி வந்து அழுது ஒப்பாரி வைப்பது உண்டு. துக்க வீட்டின் அருகில் வரும் வரை மிக நன்றாக பேசிக் கொண்டு வருபவர்கள் கூட, துக்க வீட்டையும் உயிரற்று கிடக்கும் உறவினரையும் பார்த்த உடனேயே கதறி அழுவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். எங்கிருந்து அந்த அழுகை வருகிறது? பால்ய பருவத்தில் அந்த நிகழ்வுகளை மிரட்சியுடனேயே பார்த்திருக்கிறேன்.

உறவினர் வீடுகளில் துஷ்டி கேட்பதோடு (துக்கம் விசாரிப்பது என்பதன் எங்கள் ஊர் மொழி) அங்கு உறவை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு துணையாக இருந்து இறுதிச் சடங்குக்கு தேவையான பொருட்களை நினைவூட்டி எடுத்து வைப்பது, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து உதவுவது என எனது தாயார் எப்போதுமே முன்னால் நிற்பார். அது கிராமத்து வழக்கம். சில துக்க வீடுகளில் அவரது அழுகையையும் கண்டு நான் அச்சமடைந்திருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, எனது மனதில் நெடுநாளாக குமைந்து கொண்டிருந்த கேள்வியை எனது தாயாரிடமே கேட்டு விட்டேன். துக்க வீட்டை அடைந்ததும் அழுகை பீறிட்டு வருவது எப்படி? அதுவும் பெண்கள் மட்டும் மிகப் பெருங்குரலெடுத்து ஓ வென கதறும் மர்மம் என்ன?

இதற்கு எனது தாயார் சொன்ன பதில், இதுதான். ஒவ்வொரு மனிதருக்கும் அடி மனதில் பல்வேறு ஏமாற்றங்கள் உண்டு. சிறிய வயதில் நெருங்கிய உறவினரின் பிரிவு, மிகவும் பாசம் வைத்த ஒருவரின் திடீர் மரணம் என ஏதாவது ஒரு துக்கம் ஒளிந்து கிடக்கும். அந்த துயரத்துக்கு ஒரே வடிகால் அழுகை. அதைத்தான் துக்க வீடுகளில் வந்து கொட்டிவிட்டு மனம் லேசாகி அவர்கள்  திரும்புகின்றனர் என்றார். என் தாயார் கூட இறந்து போன அவரது தாய், தந்தையை நினைத்து அழுவது உண்டாம். இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் என் மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது? காரணம் இருக்கிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகள் ஒன்றாக கூடி முதல் நாளில் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடியதும், மறுநாளில் தாலியை அறுத்து கதறி அழுது ஒப்பாரி வைத்து வீங்கிய கண்களுடன் ஊர் திரும்பியதும் செய்தித்தாள்களில் அடுத்தடுத்த நாட்களில் என் கண்களில் தென்பட்டன. அவற்றை பார்த்ததும் எனது தாயார் என்னிடம் கூறிய வார்த்தைகள் மனதுக்குள் ஒலிக்கத் தொடங்கின. 




தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆற்ற முடியாத உணர்வுகளை
ஆண்டுக்கு ஒருமுறை கூவாகம் வந்து கொட்டிச் செல்கின்றனர், திருநங்கைகள். திருமணம் என்பது கானல் நீராகிப் போன அவர்கள் வாழ்க்கையில், அரவானை கணவராக வரித்து தாலி கட்டிக் கொள்கின்றனர். பின்னர், உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சியில் விடிய விடிய ஆடிப் பாடுகின்றனர். விடிந்ததும் அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும் ஒப்பாரி வைத்து கதறி அழுகின்றனர்.

அந்த அழுகையில், மானுட சமூகத்திடம் இருந்து கிடைக்கும் அவமானம், உறவினர்களின் புறக்கணிப்பு, முகம் அறியா நபர்களின் உதாசீனம், கேலி, கிண்டல் என அனைத்தையும் கரைத்து விட்டு திரும்பிச் செல்கின்றனர்.

அதன்பிறகு....? மீண்டும் அதே அவமானம், புறக்கணிப்பு, உதாசீனம், கேலி, கிண்டல்... அடுத்த ஆண்டில் மீண்டும் திருவிழா, தாலி, ஒப்பாரி, அழுகை..... இப்படியாக தொடருகிறது அவர்களின் வாழ்க்கைப் பயணம்... கிராமத்து முன்னோர்கள் வகுத்து தந்த பாதையில்....   

= வை.ரவீந்திரன்