Thursday 20 February 2020

இடது கை

இடது கை எப்போதுமே சபிக்கப்பட்டது. வலது கை தரும் மரியாதையை மகிழ்வுடன் ஏற்கும் மக்கள் இடது கையின் மரியாதையை கூட அவமரியாதை சின்னமாகவே பார்க்கிறார்கள். 

வலது கை செய்யும் வேலைகள் என சில உண்டு. அது உயர்வாக கருதப்படுகிறது. பெருமையுடன் பட்டியலிடலாம். அந்த வேலையை வலது கை தான் செய்ய வேண்டும் என்பது  நியதி. அநேகமாக அதை எழுதியதும் வலக் கையாகத்தான் இருக்கக் கூடும்.

வலது கையே போன மாதிரி இருக்கு... இப்பிடி சொல்கிறவர்களிடம் இடது கை போனா பரவா இல்லையான்னு.. இடது கை கூட கேட்க முடியாது. இதுதான் நிஜம்.

இடது கைக்கு தரப்படும் வேலைகள்...? நினைத்துப் பார்க்க கூட மனம் மறுக்கிறது. உண்மையில் இடக்கை இல்லா விட்டால் வலக்கைக்கு ஏது தனி மரியாதை. ஊனம்... அங்கஹீனன்... இப்படித்தானே கூப்பிடும் நிலை உருவாகும்.

இந்த ஏற்ற தாழ்வு பற்றி #இடக்கை நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி கூறுகிறார்.

👉 வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்கிறார்கள். இடது கைக்கு தெரியாமல் வலது கை என்னவெல்லாமோ செய்கிறது.  வலது கைக்கு கிடைக்கும் மரியாதை ஏன் இடது கைக்கு கிடைப்பதில்லை. இடது கையை எப்போதுமே அற்பமாக ஏன் நாம் கருதுகிறோம்.

வலது கை சூதாடுகிறது. வலது கை ஆளை அடிக்கிறது. கள்ளத்தனமாக பணம் வாங்குகிறது. ஆனாலும் வலது கை புனிதமானது. ஒரே உடலில் இருந்தாலும் இரண்டு கையும் ஒன்றில்லை. இடது கை புறக்கணிக்கப்பட்ட ஒன்றே👈

இப்படியாக அவர் கூறிச் செல்கிறார்.

கைகளில் மட்டுமல்ல மனிதரிலும் இடது கை வகையினர் உண்டு. அப்படி பிரித்து வைத்திருக்கிறார்கள். அற்பமாக பார்க்கப்படும் அவர்களை வலது கை வகையினர் ஒரு  பொருட்டாக ஒருபோதும் பார்த்ததே இல்லை. 

இடது கை பிரிவில் இருந்து அதிர்ஷ்ட வசமாக யாராவது வலது கை வகையினராக மாறினாலும், அவரும் கூட இடது கை பிரிவை அற்பமாக பார்க்க பழகி விடுகின்றார். ஏனென்றால் இடதை எப்போதுமே அற்பமாகவே நாம் கருதுகிறோம்.

சமூகம், பணி சூழல், அரசியல், நிர்வாகம் இப்படி எங்கெங்கும் இந்த இரண்டு வகை பிரிவு நிறைந்திருக்கிறது... நீடித்திருக்கிறது...