Tuesday 26 October 2010

நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகன்


பெரோஸ் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே. இவர், நேருவின் மருமகன். இந்திராவின் கணவர், ராஜீவின் தந்தை, சோனியாவுக்கு மாமனார், ராகுலுக்கு தாத்தா. பெரோஸ் காந்தியிடம் இருந்து தான், ராகுல் வரையிலும் ‘காந்தி’ என்ற பெயர் ஒட்டிக் கொண்டு வருகிறது. இந்திராவின் தந்தை ‘நேரு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பெரோஸ் காந்தியின் தந்தை ஜெஹாங்கீர் காந்தி. தாயார் ரத்தினமாய் காந்தி. இவர்கள், பார்சி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு மகனாக 1912&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பம்பாய் நரிமன் மருத்துவமனையில் பெரோஸ் பிறந்தார். மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம், இது.

ஆனால், இந்திராவோ அலகாபாத்தில் அரண்மனை போன்ற பங்களாவில் பிறந்தவர். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு காலத்தில் இருந்தே பெரிய பணக்காரர்கள். அந்த காலத்திலேயே வெளிநாட்டுக்கு சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக் காருக்கு வெள்ளைக்காரர் ஒருவரையே டிரைவராக நியமிக்கும் அளவுக்கு வசதி மிகுந்தது, நேரு குடும்பம். இந்தியாவில் முதன் முதலில் வெள்ளைக்கார டிரைவரை வேலைக்கு வைத்ததும் நேரு குடும்பம் தான்.

கமலா நேருவின் அறிமுகம் காரணமாக அலகாபாத் ஆனந்தபவனில் (இந்திராவின் பங்களா) நடைபெறும் அனைத்து விழாவிலும் கலந்து கொண்டார், பெரோஸ் காந்தி. கமலா நேருவை தனது தாயார் போலவே கருதி அன்பு செலுத்தி வந்தார். நேரு குடும்பத்து அறிமுகத்தின் பரிணாம வளர்ச்சியாக, பெராஸ் & இந்திரா இடையே காதல் மலர்ந்தது.
1942&ம் ஆண்டு மார்ச் 16&ந் தேதி அன்று அலகாபாத் ஆனந்த பவனில் பெரோஸ் & இந்திரா திருமணம் நடந்தது. நேரு குடும்பத்து மகளான இந்திரா, ‘இந்திரா காந்தி’ ஆன தினம் அது.

மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில், முக்கிய விருந்தினர்கள் யாருமே இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, மகாத்மா காந்தி கூட கலந்து கொள்ளவில்லை.
திருமணத்துக்கு பிறகு, போர்ட் ரோட்டில் உள்ள சிறிய வீட்டில் பெராஸ் & இந்திரா தம்பதி குடியேறியது. பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு பெரோஸ் குடும்பத்தை நடத்தினார்.
துணிச்சலான, நேர்மைத் திறன் மிக்க பத்திரிகையாளர், அவர். அவருடைய பெரும்பாலான எழுத்துகளால் ஆங்கில அரசு நிலை குலைந்தது. ஆங்கிலேயே அரசின் தந்தி தொடர்பு சேவையை துண்டிக்கும் திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார். 1930&ம் ஆண்டு மாணவப் பருவத்திலேயே சுதந்திர போராட்டத்தில் குதித்தார்.
1942&ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.200 (அந்தக் காலத்தில்) அபராதமும் விதிக்கப்பட்டது. அதே, போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திராவும் தடியடிக்கு ஆளானதோடு, 243 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
கணவன்&மனைவி இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இருவரும் சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொள்ளலாம். ஒரே சிறைக்குள் இருந்து கொண்டு இருவரும் கடிதம் எழுதிக் கொண்டாலும் கடுமையான சோதனைக்கு பிறகே கையில் கொடுக்கப்பட்டன. அதுவும் 90 சதவீதம் வரை அழிக்கப்பட்டிருக்கும்.
திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள்ளேயே, இளம் தம்பதிகளாக இந்த சோதனைகளை அனுபவித்தனர்.

மணவாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திராவிடம் இருந்து அன்பு, அரவணைப்பு, ஆறுதல் போன்றவற்றை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு பெரோஸ் வந்தார். ஏற்கனவே, மது மற்றும் புகைப் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது, அவை வரம்பு மீறிய நிலைக்கு சென்றன.
இந்திரவோ தனது எதிர்காலம் மற்றும் தனது குழந்தைகள் (ராஜீவ், சஞ்சய்) எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய விரும்பவில்லை.

அதே நேரத்தில், தனது மருமகன் பெரோஸ் காந்திக்கு நிரந்தர வேலை ஏதாவது இருந்தால் நல்லது என மாமனாரும் பிரதமருமான ஜவஹர்லால் நேரு விரும்பினார். அந்த எண்ணத்தை புரிந்து கொண்ட இந்திரா, தனது தந்தையின் எண்ணத்தை தங்களுடைய குடும்ப நண்பரான ராம்நாத் கோயங்காவிடம் (இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர்) தெரிவித்தார். ஏற்கனவே, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரைகளை பெரோஸ் எழுதியவர் தான். எனவே, எக்ஸ்பிரஸ் நாளிதழில் இணையாசிரியர் வேலையை பெரோசுக்கு கோயங்கா அளித்தார்.
பெரோஸ் காந்தியின் இறுதிக் காலம் வரை அவருக்கு துணையாக இருந்தவர் என்பதால் ராம்நாத் கோயங்காவை ‘சாச்சா’ (மாமா) என்றே இந்திரா காந்தி அழைப்பது வழக்கம்.
1952&ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் (பின்னாளில் இந்திரா குடும்பத்தினரின் பரம்பரை தொகுதியாகி விட்டது) பெரோஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இன்சூரன்ஸ் கம்பெனிகளை நாட்டுடைமை ஆக்குவதை வரவேற்றார். பாராளுமன்றத்தில் சூறாவளியைப் போல பேசும் பெரோஸ் காந்தியின் சொல்லாற்றல் மற்றும் நேர்மையான வாதத்திறளால் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.
ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த டி.டி.கே. போன்றவர்களுக்கு எதிராக, வலுவான ஆதாரங்களுடன் பெரோஸ் காந்தி பேசிய பேச்சுகள் அனைத்தும் நேருவையே கலங்கச் செய்தன. நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகனாக பெரோஸ் இருந்ததால், நேரு அவருடைய நிரந்தர பகைவரானார். நேருவுக்கு பாராளுமன்றத்தில் அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தார், பெரோஸ் காந்தி. பெரோசின் நேர்மை, துணிவு, உண்மை போன்ற குணங்கள் நேருவை பகைவராக்கியது.

ஒரு நாள், கடுமையான மார்பு வலி காரணமாக பெரோஸ் காந்தி நினைவு இழந்தார். அதற்கு முன்பு, ‘இந்து எங்கே?’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார். அதாவது, மனைவி இந்திரா காந்தியை தேடினார். திடீர் என ஒருமுறை அவர் கண் விழித்தபோது சோகமே உருவாக இந்திரா அமர்ந்திருப்பதை பார்த்தார். அவரிடம், ‘எப்போது வந்தாய்? ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறாய்?’ என்று கேட்டு விட்டு மீண்டும் மயக்கமானார்.

எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரே குடும்பமாக வாழலாம் என முடிவு எடுத்த சமயத்தில் தான் மரணம் அவரை தழுவியது. இறக்கப்போகும் தருணத்தில் இனிமையான நினைவுகள் வரும். எனவே தான், தனது மனைவியிடம், ‘ஏன் கவலையுடன் இருக்கிறாய்?’ என அன்புருக கேட்டார். அரசியலில் உச்ச கட்டத்தில் இருந்தபோதே, பெரோஸ் காந்தி மரணமடைந்து விட்டார். 1960&ம் ஆண்டு செப்டம்பர் 8&ந் தேதி அன்று பெரோஸ் காந்தி இறக்கும்போது அவருக்கு வயது 47.


பெரோஸ் காந்தியின் உடலை சுத்தம் செய்யும் பொறுப்பை இந்திரா காந்தியே செய்தார். யாரையும் துணைக்கு வைத்துக் கொள்ளவில்லை. பெரோஸ் காந்தியின் இறுதி ஊர்வலம் சுமார் 2 கி.மீ.க்கு மேல் சென்றது. வழி நெடுகிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
பெரோஸ் காந்திக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா? என நேருவே வியந்தார். இவ்வளவு இருந்தும் என்ன பயன்? பெரிய குடும்பத்தின் வேண்டாத மருமகனாயிற்றே?

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவிடத்துக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஆனால், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு ஒருவர் கூட வந்து அஞ்சலி செலுத்துவது கிடையாது. கேட்பாரின்றி அந்த நினைவிடம் கிடக்கிறது.
வாழும்போது எப்படி இருந்தார் என்பதை விட, சாகும்போது ஒரு மனிதர் என்னவாக இருந்தார் என்பது தான் இந்த உலகத்தில் முக்கியம் போல தெரிகிறது.

= வை.ரவீந்திரன் 

Saturday 18 September 2010

ராணிக்கே இதுதான் கதி










ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர்.


மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தால் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



உலகின் முதல் பத்து அழகிகளில் ஒருவராக ‘வோக்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர், மகாராணி காயத்திரி தேவி. அவருடைய ஒரே மகன் ஜகத் சிங், 1997&ம் ஆண்டு இறந்து விட்டார். பேரன் தேவராஜ், சொத்தில் பங்கு பெறுவதற்காக கோர்ட்டுகளில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.


மகாராஜா மான்சிங்கின் மூன்றாவது மனைவியாக காயத்திரி தேவி இருந்தார் அல்லவா? ஏற்கனவே, மகாராஜா மணந்து கொண்ட இரண்டு மூத்த தாரங்களின் மூலமாக பிரித்விராஜ் சிங், ஜெய்சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வளவும் இருந்து என்ன பயன்?


ராஜஸ்தான் ராஜ குடும்ப வழக்கப்படி, மகாராஜாவோ அல்லது மகாராணியோ இறந்து விட்டால், அவர்களை எரியூட்டிய இடத்தில் ‘சத்ரி’ என்ற பெயரில் நினைவிடம் கட்டுவார்கள். அதுபோல மகாராஜா மான்சிங் மற்றும் அவருடைய முதல் இரண்டு மனைவிகளான மருதார் அன்வர், கிஷோர் அன்வர் ஆகியோர்க்கு ‘சத்ரி’ கட்டப்பட்டுள்ளன.


ஆனால், தன்னுடைய 90&வது வயதில் மரணமடைந்த மகாராணி காயத்திரி தேவிக்கோ, அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ராஜ குடும்ப வாரிசுகள் யாருக்கும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூட நேரமில்லை. ராஜ குடும்ப சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, தங்களுடைய கடமையை செய்ய யாருமே தயாராக இல்லை.


ராஜபுத்திர வழக்கப்படி ராஜ குடும்பத்தினரின் மறைந்த தினத்தன்று அவர்களுடைய நினைவாக, அவர்களுடைய நினைவிடத்துக்கு மக்கள் வந்து விளக்கேற்றி வைப்பார்கள்.


உலகப் பேரழகியாகவும், மக்களின் உள்ளம் கவர்ந்த ஜெய்ப்பூர் மகாராணியாகவும் கின்னஸ் சாதனை புரியும் வகையில் மக்களின் பேராதரவை பெற்ற தலைவியாகவும் வலம் வந்த மகாராணி காயத்திரி தேவிக்கு நினைவிடம் கட்டக்கூட யாருமே இல்லை என்றால், இதை என்னவென்று சொல்லுவது?


இவவளவு சிறப்பு வாய்ந்த ஜெய்ப்பூர் மகாராணிக்கே இது தான் கதி.


றேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகி இருக்கும் நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தன்னிலை மறந்து ஆடும் சாதாரண மனிதர்களும் இதில் இருந்து பாடம் படித்தால் நல்லது.

-நன்றி ‘தினமணி’

= வை.ரவீந்திரன் 

Tuesday 14 September 2010

பேராசைப் பெருந்தகையே போற்றி


அண்ணாவின் கவிதை
-----------------------------
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
தாசர்தம் தலைவர் போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
வன்கண நாதா போற்றி
கொடுமைக் குணாளா போற்றி
கோழையே போற்றி
பயங்கொள்ளிப் பரமா போற்றி
படுமோசம் புரிவாய் போற்றி
சிண்டுமுடித் திடுவாய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
- இந்தக் கவிதை, 1945 ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது.

சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கவிதையில் அண்ணாவின் துணிச்சல், தெளிவு, கருத்துச் செறிவு தெளிவாகத் தெரிகிறது. மனித மேம்பாடு பேணப்படுவதற்கான போராட்டமே தனது இயக்கம் என்றும் அந்த போராட்டத்தை புனிதப் போர் என்றும் அறிவித்த அண்ணா, இத்தகைய கவிதையை எழுதியிருக்கிறார்.
குறிப்பு:- யாருக்கோ அண்ணா எழுதிய இந்தக் கவிதை, 65 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவருடைய சீடருக்கு பொருத்தமாக இருப்பது மிகவும் விந்தையாக உள்ளது.

= வை.ரவீந்திரன்

கோவிந்த ராஜன் கமிட்டி & தமிழக அரசின் குள்ள நரித்தனம்



தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் (!), பாராட்டுகளுடனும் (!) பீடு நடை போட்டு வரும் தமிழக அரசின் புதிய முயற்சி, கோவிந்தராஜன் கமிட்டி.
அதாவது, தமிழகம் முழுவதும் புற்றீசல் போல முளைத்துள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காகவும் அப்பாவி பெற்றோர்களை பாதுகாக்கவும் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியும் மிக தீவிரமாக பரிசீலனை செய்து ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்புக்கும் எந்த அளவுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையை வெளியிடுவதிலேயே அரசின் குயுக்தி வெளியாகி விட்டது. அறிக்கையின் முழு விபரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது போல அரசு செய்யவில்லை. ஒவ்வொரு பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் கட்டண விபரங்களை ஒட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கவில்லை. மாறாக, கோவிந்தராஜன் கமிட்டியிலேயே மேல்முறையீடு செய்வதற்கு தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தவறு ஏதும் கிடையாது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிவாரணம் அளிப்பது சரியே.
அதைத் தொடர்ந்து, 6 ஆயிரம் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. தமிழகத்தில் மொத்தம் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த கோவிந்தராஜன் கமிட்டி, ‘இந்த ஆண்டு நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை பரிசீலித்து, அது தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த பணிகள் முடிந்தபிறகு நிர்ணயிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்லி ஆண்டு (2011&12) வசூலிக்கலாம்’ என்று கூறியது.
இங்கு தான், தமிழக அரசின் குள்ளநரித்தனம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆண்டான இந்த ஆண்டில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து விட்டால் பெற்றோரான பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அதனால், வித்தியாசமானதொரு முடிவை அறிவித்து விட்டது. சரி. இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டதா? என்றால் அது தான் இல்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் திரண்டு, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை முதல் பல்வேறு நகரங்களிலும் இது நடைபெறுகிறது.
கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை கண்டிப்பாக பின்பற்றுமாறு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு உத்தரவிடலாமே? அதை ஏன் செய்யவில்லை. தலைநகர் சென்னையில் சில மேல்தட்டு பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியாமல் நடைபெறுகிறதா? 11&ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட முதல் பாடப்பிரிவில் படிப்பதற்கு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஒரு பருவத்துக்கு ரூ.75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்துக்கு அந்த பள்ளிகள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? நல்ல பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. சிறந்த வகுப்பறை, மின் விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி இப்படி பல்வேறு வசதிகள் செய்து தரப்படுவதாகவும் கூறுகின்றன. இவை உண்மையாகவே இருக்கலாம். அரசு பள்ளிகளை விட, சற்று தரமானதாக இருப்பதால் தானே ரூ.75 ஆயிரம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் அளிக்கும் நிலையில், இத்தகைய மேல்தட்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் அதற்கு நிகராகவே சம்பளம் அளிக்கப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளில் பணி புரியும் பல ஆசிரியர்கள், அரசு வேலைக்கு செல்ல விரும்பவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட பள்ளிகளை கோவிந்தராஜன் கமிட்டி கட்டுப்படுத்துகிறதா? என்பதே எனது கேள்வி. ஏனெனில், கமிட்டியின் பரிந்துரையை அமல் படுத்த உத்தரவிடும் ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளோரின் வாரிசுகளே இந்த பள்ளிகளில் தானே படிக்கின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள இந்த பள்ளிகளை விட்டு விட்டு, மற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் தான் இப்போது படாதபாடு படுகின்றன. கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்றால் ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘கை வைக்க’ நேரிடும். (பல பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இன்கிரிமெண்ட் போடப்படவில்லை என்பது கூடுதல் தகவல்). அதே நேரத்தில், கட்டணத்தை வசூலிக்கும்போது பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கும் குள்ள நரித்தனம் தான் தமிழக அரசின் திட்டமாக இருக்கிறது. இல்லாவிட்டால், ஏதாவது ஒரு நிலையில் உறுதியாக இருந்திருக்குமே? முன்பே, நான் குறிப்பிட்டது போல கோவிந்த ராஜன் கமிட்டி பரிந்துரைகளில் உறுதியாக இருந்தால், அதை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடலாமே? அதை விட்டு விட்டு, பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையே மோத விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக அரசின் இத்தகைய செயல்களால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தான் படிக்கும் பள்ளிக் கூடத்தின் முன்னால், தன்னுடைய அம்மாவோ அப்பாவோ போராட்டம் நடத்துவதை பார்க்கும் ஒரு மாணவன், தனது பள்ளியைப் பற்றி என்ன நினைப்பான்? தனது ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பற்றிய அவனது மதிப்பீடு என்னவாக இருக்கும்?
இத்தகைய நிலையில் படித்து வளரும் அந்த எதிர்காலத் தலைமுறை எப்படி இருக்கும்? மாதா, பிதா, குரு, தெய்வம் & என தெய்வத்துக்கு ஒரு படி மேலாக வைத்து போற்றப்படும் ஆசிரியர்களை இந்த மாணவத் தலைமுறை போற்றிப் பாராட்டுமா?
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஏராளமாக சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு, சுமார் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் (சராசரியாக ஒரு பள்ளிக்கு 50 பேர் என்றால் கூட, 4 லட்சம் பேர்) நிலைமையை யோசித்து பார்க்கிறதா? அந்த ஆசிரியர்களுக்கென குறைந்தபட்ச ஊதியம் எதையாவது கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்து இருக்கிறதா? கட்டணத்தோடு, அது பற்றியும் பரிசீலித்து முடிவு எடுப்பது அவசியம்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் கட்டணக் கொள்ளை அடிப்பதாக கருதினால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றலாம். அல்லது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களைப் போல, அரசு பள்ளி ஆசிரியர்களையும் கடுமைமயாக வேலை வாங்கினால் தானாகவே அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் வியாபாரம் பிசு பிசுத்துப் போகும்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு பள்ளிகள் இல்லை என்றால், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கி விடலாமே? இலவச கலர் டி.வி. ஒரு ரூபாய் அரிசி போன்றவற்றுக்கு பதிலாக கல்விக்கு செலவிடலாமே? கலர் டி.வி.யை யார் கேட்டது? தனியார் பள்ளிகளை அரசுடையாக்கும் செலவுக்காக அரிசியின் விலையை ரூ.3 வரை உயர்த்தலாமே-? ‘அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புண்ணியம் யாவிலும் சிறந்தது’ என்பது நம்முடைய முன்னோர் வாக்கு.
இதை எல்லாம் விட்டு விட்டு, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கட்டண நிர்ணயம் என்ற நாடகத்தை நடத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பெற்றோரையும் & தனியார் பள்ளி நிர்வாகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ள நரித்தனத்தை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிக் கல்வியில் அரசியல் விளையாட்டை காண்பிப்பது, எதிர்கால சமூகத்தையே அரித்து விடும். குளறுபடியான பள்ளிக் கல்வியால் எதிர்காலத்தில் குழப்பமான சமுதாயம் உருவாகும்.

= வை.ரவீந்திரன் 

Monday 13 September 2010

காஷ்மீருக்கு ஒரு நீதி, ஈழத்துக்கு ஒரு நீதியா?




இந்தியாவின் தலை பகுதி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இன்று நேற்றல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக. ஆனால் கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். காஷ்மீர் பற்றி தான் சொல்லுகிறேன். இந்தியாவின் பிரஸ்டீஜ் போன்று கருதப்படும் காச்மீருக்காக மத்திய அரசு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிறது. இதன் மூலமாக, காஷ்மீருக்குள் இந்தியாவை சேர்ந்த வேறு யாரும் கை அகல நிலம் கூட வாங்க முடியாது. இது மட்டும் அல்ல. தேவையான அளவுக்கு தாரளமாக மத்திய அரசின் நிதி வேறு வாரி வழங்க படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போதைய மன்மோகன் சிங் அரசு சில லூசுத்தனமான முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறது.
அதாவது, கலவர பூமியான காஸ்மீரில் இருக்கும் ராணுவத்துக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்கள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில மாவட்டங்களில் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. இது தவிர, காஸ்மீருக்கு சுயாட்சி அளிக்கவும் பரிசீலனை நடைபெறுகிறது. இது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முன் வைப்பவர் யார் தெரியுமா? காஸ்மீரில் ஆட்சி செய்யும் அனுபவமே இல்லாத சின்ன பயன் முதல்-மந்திரி உமர் அப்துல்லா.
தமிழ் நாட்டை போலவே, தந்தை-மகன்-பேரன் என்று காஸ்மீரிலும் தொடருகிறது, பரம்பரை அரசியல்.
ந்த சின்ன பயன் கோரிக்கையை மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என்ன வெட்கக் கேடு. அதற்கு ஆமாம் சாமி போடுவது, நம்ம ஊரு சீமான் வீட்டு செல்ல பிள்ளை (உபயம் கருணாநிதி) ப. சிதம்பரம். ராணுவ மந்திரி அந்தோணி, நிதி மந்திரி பிரணாப் ஆகியோர் எதிர்த்தும் இத்தகைய கேடுகெட்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
இந்த இடத்தில, காஸ்மீரில் உள்ள பிரிவினை தலைவர்கள் குறிக்கோள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். 'நம்முடைய போராட்டங்கள் எந்த வடிவில் இருந்தாலும் சரி. நேரத்துக்கு ஏற்ப போராட்டங்கள் மாறலாம். அனால். நமது குறிக்கோள் ஒன்றே. சுதந்திர காஸ்மீர் மட்டுமே நமது லட்சியம்' - என்பது பிரிவின தலைவர்களின் முழக்கம். தற்போதைய போராட்டம், கல் வீச்சு.
தன்னுடைய கொடிய நோய்க்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு காஷ்மீர் சென்றதும் நடந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய கிலானி என்ற பிரிவினைவாத தலைவர், 'காஸ்மீரை சட்ட விரோதமாக இந்திய ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. எனவே, இந்திய மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என முழக்கமிட்டார்.இது போன்ற கொள்கை பிடிப்பு கொண்ட தலைவர்களின் உறுதி மொழியை ஏற்று இரண்டு நாட்களுக்கு முன்னால் ரம்ஜான் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தார், சின்ன பையன் உமர். இதுதான் சமயம் என்று, ஆயிரக்கணக்கான பிரிவினைவாத இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறை-இல் இறங்கி விட்டனர். அரசின் ஆசிர்வாதத்தோடு பிரிவினைவாதிகள் ஒன்று கூடி விட்டனர்.
இது போன்ற முன் யோசனை இல்லாத முட்டாள் தனமான முதல் மந்திரி மற்றும் பொறுப்பற்ற பிரதமரை எங்கேயாவது பார்க்க முடியுமா? இந்த கும்பல் காஸ்மீர் பிரச்சினையை தீர்க்க போகிறதாம்?
சரி, காஸ்மீர் பிரச்சினை எக்கேடு கேட்டும் போகட்டும். அது பற்றி விளக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தகவல்களும். இப்போ விசயத்துக்கு வருவோம்.
இப்போது காஷ்மீர் போராட்டத்தை தனி ஈழ போராட்டமாகவும், இந்தியாவை இலங்கையாகவும் ஒப்பிட்டு பார்க்கலாம். இதை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே ஒப்பிட்டுக் கொண்டது. இலங்கையில் கடந்த ஆண்டு யுத்தம் நடந்தபோது, 'காஸ்மீர் கலவரத்தை ஒடுக்கும் நாம், தனி ஈழத்தை எப்படி ஆதரிக்க முடியும்' என கேட்டவர்கல் தான் இந்த காங்கிரசார். மன்மோகன், சிதம்பரம் போன்றவர்கள் இப்படி தான் கூறிக் கொண்டார்கள்.
சரி.
அவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் இப்போது ராணுவத்தை முற்றிலுமாக இறக்கி காஸ்மீரில் முழு தாக்குதலை நடத்த வேண்டியது தானே? இலங்கை-இல் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க இந்திய உதவி செய்தது அல்லவா? அது போல, காஸ்மீரிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா, இங்கிலாந்து இப்படி உதவிகள் கேட்கலாமே, ராஜா பக்சே போல. மேலும், பொன்சேகா போல ஒரு தளபதியை நியமித்து முழு வீச்சில் தாக்குதல் நடத்தி காஸ்மீரை சுடுகாடக்கலாம்.
அரசியல் ரீதியாக, இதற்கும் கருணாநிதி ஆதரவு தருவார். வேண்டுமானால், அந்த தாக்குதலை சர்வதேச அளவில் மூடி மறைக்க தேவையான ஆலோசனைகளும் தருவார். ராஜா பக்சே விடமும் கூடுதல் அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதை விட்டு விட்டு, 370 வது சட்டப் பிரிவு, சுயாட்சி, ராணுவத்துக்கு அதிகாரத்தை விலக்குவது என்று சிறு பிள்ளை தனமாக செய்வது ஏன்? இலங்கை தமிழனுக்கு ஒரு நியாயம். காச்மீரிக்கு ஒரு நியாமமா? இது போன்ற தீர்வுகளை அப்போது இலங்கை அரசிடம் ஏன் கூறவில்லை. மாறாக, ஆயுதமும் ஆட்களும் அனுப்பி போரை முன் நின்று நடத்தியது ஏன்?
சண்டை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட, இன்னமும் ஈழத்தில் நெருக்கடி நிலை நீடிக்கிறதே? ஆனால், காஸ்மீரில் வெட்டு குத்து நடக்கும் போதே ராணுவத்துக்கு அதிகாரத்தை குறைக்கும் யோசனை முன் வைக்கப் படுகிறதே?
இலங்கையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் தனி நாடு போராட்டம் எழுந்து விடக்கூடாது என்பதற்காக சிங்களர்கள் குடி அமர்த்தப்பட்டு வருகின்றனர். ராஜ பக்சே செய்யும் இந்த முடிவை ஆதரித்து, அங்கு புனரைமைப்பு பணிகளுக்கு கோடிகளை கொட்டும் இந்திய அரசு, காஸ்மீரிலும் மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்களை குடி அமர்த்தலாமே?அனால், அங்கிருந்து விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு கூட, ஆதரவு அளிக்கவில்லையே ஏன்? ராஜா பக்செவுக்கு இருக்கும் துணிச்சல், தெனாவட்டு மிகப் பெரிய நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவுக்கும் அதை ஆளும் மன்மோகனுக்கும் இல்லையே? தமிழன் என்று கூறிக்கொள்ளும் சிடம்பரத்துக்கும் இல்லையே?
அப்போது தனி ஈழ போராட்டத்தை கடுமையாக எதிர்த்த சிதம்பரம், இப்போது வேறு மாதிரி வேஷம் போடுவது ஏன்?கஷ்மீர் பிரச்சினை என்றால் ஒரு நீதி! ஈழம் என்றால் தமிழன் என்றால் ஒரு நீதியா?


= வை.ரவீந்திரன் 

Sunday 12 September 2010

எனது மூத்த மகன்


* உன் பார்வை
முதன் முதலில்
என் பக்கம்
திரும்பியபோது
பனி பூக்களை
தூவிய பரவசம்

* தாயின் கருவறைக்கு
விடை கொடுத்து
நீ
பூமியை தொட்டு
பார்த்த அந்த
கணப் பொழுதில்
உணர்வுகளின்
உரசலை தாண்டி
காதலின்
அர்த்தங்களை - நாங்கள்
பூரணமாக
புரிந்து கொண்டோம் 

= வை.ரவீந்திரன் 

Friday 20 August 2010

விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்?

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம் - என்று ஆக்ரோசமாக விழி சிவந்த பாரதி பிறந்த பூமி இது.
ஆனால், இந்த புண்ணிய தேசத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் உணவு கிடைக்கிறதா என்றால் அது சற்றே சிந்தனைக்கு உரிய விசயம். இதற்குத்தானா நாம் சுதந்திரம் வாங்கினோம்? மனிதனின் அடிப்படை தேவை என கருதப்படும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் அனைவரும் தன்னிறைவு பெற்று விட்டோமா?
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அணைத்து பொருட்களுமே ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி விட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதா பொன்னி அரிசி விலை 40 ரூபாய் ஆகி விட்டது. சமையல் எண்ணெய் விலை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. அட சிங்கிள் டீ கூட ரெண்டு மடங்கு விலை ஏறி விட்டது. ஹோட்டலுக்கு சென்றால் விலை பட்டியலை பார்த்தாலே மயக்கம் வருகிறது. அந்த மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கேட்டால் அதற்கும் தனி விலை. குடிக்க தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் புண்ணிய தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை, மக்களே உணராமல் பிண்டங்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது?இது உணவு பிரச்சினை. உணவுக்கே பிரச்சினை என்ற நிலையில் மானத்தை காக்கும் உடை பற்றி கேட்கவே வேண்டாம். பலருக்கு மானமே கிடையாது என்பது வேறு விஷயம். அடுத்ததாக இருப்பிடம். நகர் பகுதிகளில் புறா கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். கிராமங்களிலோ நிலைமை பரிதாபம். விளை நிலங்கள் எல்லாம் அரசால் கையகப் படுத்தப் பட்டு விலை நிலங்களாகி வருகின்றன. அந்த நிலங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் விரிக்கப் படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் மட்டும் தேவை என்றால் கூட 500 முதல் ஆயிரம் ஏக்கர் வரை எடுக்கப் படுகின்றன. இது போக, உள்ளூர் அரசியல் தாதாக்களின் ரியல் எஸ்டேட் ஆதிக்கம் வேறு.
இப்படி, இந்திய குடிமகனுக்கு அணைத்து வழிகளிலும் இருந்து அடி விழுகிறது. வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறான். நகரம் முதல் கிராமம் வரை இது தான் நிலைமை. 10 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே கவலை இன்றி செல்வா செழிப்பில் உள்ளனர்.நிலைமை இப்படி இருக்க, நம்மை ஆட்சி செய்வதற்காக நம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களின் செயல்கள் வெட்கக் கேடாக உள்ளன. தனி ஒரு மனிதனுக்கு உணவு கிடைக்கிறதா என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தலைவர்களோ, தங்களுடைய சம்பளத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாத சம்பளம் 50 ஆயிரமாக உயர்த்தியதோடு, அலவன்சுகளும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வளவு கொடுத்த பிறகும் திருப்தி அடையவில்லை. பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு ஒத்திவைக்கும் நிலைமைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வெட்கக் கேட்டை எங்கேயாவது பார்க்க முடியுமா? சம்பளம் போதவில்லை என்று போராடும் லாலு மற்றும் முலாயம் ஆகியோரின் சொத்து விவரங்களை கேட்டால் தலை சுத்தும். பீகாரில் உள்ள மாடுகள் கூட, லாலு பிரசாத் பெயரை சொல்லுமே?
இவர்களை விடுங்கள், இப்போது எம்.பி.க்களாக இருக்கும் ஒவ்வரும் சோத்துக்கே கஷ்டப் படுபவர்களா? தேர்தலில் போட்டிடும் பொது இவர்கள் காண்பித்த சொத்து விபரங்கள் பல கோடியை தாண்டுமே? இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?
மத்திய மந்திரி சபை செயலாளரை விட ஒரு ரூபாயாவது அதிகம் பெற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். அதாவது என்பது ஆயிரத்து ஒரு ருபாய் வேண்டுமாம். என்ன கொடுமை இது? அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் சம்பளத்தில் போட்டி போடுகின்றன. இந்திய குடிமகனோ வயிற்றில் ஈர தஊணியை கட்டிக் கொண்டு அதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறான்.விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்? எங்கள் மக்களை.

Sunday 15 August 2010

வாழ்க ஜனநாயகம்

நாட்டின் 64 ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது.

''2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதும் விவசாய வளர்ச்சி 7 ,8 ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை என்று அறிந்தோம். அதனால் விவசாயத்தில் முதலீட்டை அதிகரித்தோம். மாவட்ட அளவில் விவசாய வளர்ச்சி திட்டங்களை ஊக்குவித்தோம். இதனால், தற்போதைய நிலையில் விவசாய வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் உயர்ந்து விட்டது"

இதை பார்த்ததும் நாட்டில் முப்போகம் விளைந்து விவசாயம் செழித்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அது பிரதமரின் தவறு கிடையாது. இதற்கு அவரே அடுத்த வரியில் பதில் சொல்லி இருக்கிறார். ''எனினும், நாம் அடைய வேண்டிய இலக்கு மிகப் பெரியதாக உள்ளது. அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் 4 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்"

பாருங்கள் மக்களே, 4 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்காம். அப்படி என்றால், அவருடைய பாஷையில் இப்போதைய வளர்ச்சி என்ன?
தொழில் வளர்ச்சி, ஒட்டு மொத வளர்ச்சி எல்லாம் 9 சதவீதம் வரை இலக்கு வைக்கும்போது விவசாயம் இப்படி கிடக்க காரணம் என்ன?
சிறப்பு பொருளாதார மண்டலம், கார், செல்போன் இப்படி கிடைத்தால் மட்டும் போதுமா? மனிதனின் வயிற்று பசியை இவை ஆற்றி விடுமா என்ன?
சரி. இவற்றை விடுங்கள். நாடு முழுவதும் பணவீக்கம், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டு இருப்பது பற்றி அவர் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன தீர்வு பற்றியும் பாருங்கள்.
'' கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் நீங்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே பணவீக்கத்தை கட்டுப் படுத்த முடியும்"

இப்படி ஒரு பிரதமரை எந்த நாடாவது பார்த்ததுண்டா? இவர் யார்? விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். இவருக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே கிடையாதோ?
வோட்டுக்கு காசு வாங்கும் ஜென்மங்கள் இருப்பதாலேயே இது போன்று அவரால் பேச முடிகிறது. பணவீக்கத்தை கட்டுப் படுத்தினால் விலை வாசி குறையுமா? விலைவாசியை குறைத்தால் பணவீக்கம் குறையுமா? இந்த பொருளாதார புலி விளக்குவாரா?

என்ன செய்வது? நாட்டில் நிலவும் எந்தவித பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத ஒரு அரசு. இலங்கை போன்ற சுண்டைக் காய் நாடுகளுக்கு கூட பயந்து நடுங்கும் பிரதமர். பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே மூக்கு உடை பட்டு திரும்பும் வெளிஉறவு மந்திரி. இப்படிப்பட்ட நாட்டில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் உணர்ச்சி இல்லா மக்கள்.
வாழ்க ஜனநாயகம். ஓங்குக நம் சுதந்திரத்தின் பெருமை.

= வை.ரவீந்திரன் 

Sunday 13 June 2010

யார் கவுரவர்?

யார் கவுரவர்?
யார் பாண்டவர்?
விடை அளிப்பதற்கு
இது கடினமான கேள்வி.

தர்மத்தின் ஆட்சி
போய் விட்டது!
சூதாட்டம் பெருகி விட்டது

பாஞ்சாலி -ஒவ்வொரு
பஞ்சாயத்திலும்
அவமானப் படுகிறாள்

மகாபாரத போர்
இப்போதும் நடைபெறுகிறது! - ஆனால்
கிருஷ்ண பரமாத்மா
மட்டும் இல்லை

யார் ஆட்சி நடத்தினாலும்
ஏழைகள் என்னவோ
வறுமையில் தான் உள்ளனர்

= வை.ரவீந்திரன் 

யானைக்கும் மதம் பிடிக்கும்

வேந்தர்களோடு போயிற்று
வேழத்தின் காலம்
பட்டத்து யானைகள்
தட்டழிகின்றன - பட்டணக் கரைகளில்!

காட்டுவாசியிடம்
கேட்டுத் தெரிந்து கொள்
கூட்டத்திலிருந்து பிரிந்த
ஒற்றை யானையின் துயரம்!

வனத்தில் பார்க்க வேண்டும்
அச்சமற்று திரியும் அந்த
கருப்பு கம்பீரங்களை
உயிர் வதை புரியாது
ஒரு பாவமும் அறியாது!

காற்றுக்கு அசையும்
மூங்கில் புதர் போல
காட்டுக்குள் அலையும்
சைவப்புதிர் இது!

நகரத்தில் யானைகள்
குற்றமிளைக்காத
ஆயுள் தண்டனை கைதிகள்

பிரியமானவர்களின் முகங்களை
சிறை கம்பிகளுக்கு பின்னோ
மருத்துவமனை படுக்கையிலோ
பார்க்க நேருவதை போன்ற
துயரத்துக்கு நிகரானது
நகரத் தெருக்களில் யாசிக்கும்
யானைகளை பார்ப்பது!

இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
யானை நடக்கிறது
தன பலம் அறியாமல்

ஆசைகளுக்கு தந்தங்களையும்
அதிர்ஷ்டங்களுக்கு வால் மயிரையும்
பறிகொடுத்து நிற்கும் யானைக்கும்
மதம் பிடிக்கும் ஒரு நாள்!


= வை.ரவீந்திரன் 

Saturday 10 April 2010

'ரா' உளவு அமைப்பில் தலையிட்ட சோனியா

வெவ்வேறு நாடுகளில் உள்ள உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் கசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக 1968ல், இந்திய உளவுத்துறை நிறுவப்பட்டது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு. இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார்.

இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்பு கொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக கூறிவிட்டனர். ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்?

காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார். இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.

ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பலண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிப்பந்திக்கப் பட்டனர். நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது.

சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழி பாவமற்ற பதி-பக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர்.

ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடி மகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது.

பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்!
உண்மையில் இத்தாலிய உளவு அமைப்புகளை RAW திரும்பிப் பார்க்காததற்குக் காரணமே, பிரதமரின் வீட்டில், குடும்பத்தில் சோனியா இருந்தது தான். இந்திய-இத்தாலிய உளவு அமைப்புகள் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளிக்கப் பட்டால், அது வெறும் RAWவுடன் நின்றுவிடாது, பிரதம மந்திரி வீடு வரை நீளும்; விபரீத விளைவுகளை பின்னர் ஏற்படுத்தக் கூடும் ; தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு RAWவுக்கு இருந்தது.
************
பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி குண்டு துளைக்க முடியாத மோட்டார் வாகனத்தில் தான் எந்தப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசனை தந்தனர். இந்திரா காந்தி இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே குண்டு துளைக்க முடியாத வாகனமாக மாற்றி விட விரும்பினார். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அப்போது இல்லை (1985ல் தான் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானது).

எனவே, ஒரு ஜெர்மன் நிறுவனத்திடம் அச்சமயத்தில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி என்பவர். இவர் சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர். இதற்கு வெகுமதியாக, வால்டர் வின்சிக்கு சிறிய கமிஷன் கிடைத்திருக்கலாமென RAW வுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை விட கவனிக்கவேண்டிய விஷயம் - பிரதமரின் பாதுகாப்பு என்ற அதி-ரகசியமான முக்கிய விஷயம் சோனியாவின் உறவினர் மூலமாகக் கொடுக்கப் பட்டது என்பது.

1984ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக அதிரடித் தாக்குதல் படை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. 1986ல், சோனியாவின் பரிந்துரைக்குப் பின்னர், இதே வால்டர் வின்சி மூலமாகத்தான், இத்தாலிய பாதுகாப்பு அமைப்பினால் SPGக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க அளிக்கப்பட்டது. இதற்காக வால்டர் வின்சிக்கு ரொக்கமாக, ஆம், ரொக்கப் பணமாக, கணிசமான தரகுக் கூலியும் (கமிஷன்) கட்டாயமாகக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அப்படியே கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது!

இந்தப் பயிற்சி படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம்.

இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயிற்சியாளர் இந்தியப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் பளாரென அறைந்தார். இத்தாலியர்கள் இதே போல பல தடவை SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது. இதன் விளவாக SPG commandos படைக்கு ராஜீவ் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியும், மனக் கசப்பும் ஏற்பட்டு விடும் எனவும், இது ராஜீவின் பாதுபாப்புக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கப் பட்டது; ராஜீவும் உஷாராகி வால்டர் வின்சி ஏற்பாடு செய்த பயிற்சி முகாமுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த திடீர் முடிவின் விளைவு, படைகளுக்கு குறிப்பிட்ட பயிற்சியும் கிடைக்காமல், கணிசமான ரொக்கப் பணமும் பறிபோனது. இதெல்லாம் சோனியா-இத்தாலிய கைங்கரியம்!
*********************

1985ல் ராஜீவ் சோனியாவுடன் பாரிஸ் நகருக்கு பயணம் சென்ற போது, பாதுகாப்புக் கருதி வழக்கமான SPG அதிகாரிகளோடு கூட, பிரெஞ்சு மொழி அறிந்த RAW அதிகாரி ஒருவரும் (பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் உரையாடுவதில் உதவ) கூட பிரான்ஸுக்கு அனுப்பப் பட்டார். பிரான்ஸில் உள்ள லியோன் (Leon) நகரில், திடீரென்று ராகுலும், பிரியாங்காவும் காணாமல் போய் விட்டனர். இதை அறிந்த SPG அதிகாரிகள் மிகவும் கலவரமடைந்தனர். ஆனால், “கலவரமடையத் தேவையில்லை; ராகுலும், பிரியாங்காவும் சோனியாவின் மற்றொரு சகோதரி, நாடியாவின் கணவன், ஜோஸ் வால்டிமாரோவுடன் (Jose Valdemaro) பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று வால்டர் வின்சி தெரிவித்தார்.

மேலும், ராகுலும், பிரியாங்காவும் வால்டிமாரோவுடன் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு ரயில் மூலமாக சென்று விட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ஸ்பெயின் அதிகாரிகள் முன்னரே ஏற்பாடு செய்து விட்டதாகவும் வின்சி கூறினார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாமல் இவர்கள் இப்படி பயணம் செய்தது இத்தாலிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்த வசதி என அறிந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறி கலங்கிப் போனார்கள்.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சோனியா இப்படி செய்ததாக எவரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். இதன் மூல காரணம் சோனியாவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் கொஞ்சமும் நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை என்பது தான்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?

வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டால் இது தெளிவாகப் புரியும்.
1986ல் ஒருநாள் ஜெனிவா நகரத்தில் இருந்த RAW அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது - “இத்தாலியில் இருந்து வந்த பிரபலஸ்தர்களான வி.ஐ.பி குழந்தைகள் பத்திரமாக ஜெனிவாவிலிருந்து மறுபடி இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்து விட்டனர்”. செய்தி அளித்தவர் ஜாக் குன்ஸி, ஜெனிவா நகரக் காவல் ஆணையர்.

யார் இந்த வி.ஐ.பி குழந்தைகள், எங்கு போகிறார்கள் எதுவுமே இந்திய அதிகாரிகளுக்குப் புலப்பட வில்லை. இந்திய வி.ஐ.பி குழந்தைகளின் பயணத்தைப்பற்றியும் RAW அதிகாரி களுக்கு ஒன்றுமே தெரியாது.
அதோடு விடவில்லை காவல் ஆணையர் ஜாக் குன்ஸி.

இந்திய RAW அதிகாரியைப் பார்த்து, படு நக்கலாகக் கேட்டாராம் - “ உங்கள் பிரதமரின் மனைவிக்கு உங்கள் மீதோ அல்லது இந்திய தூதரகத்தின் மீதோ சற்றும் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இத்தாலியர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார் போலிருக்கிறது”.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி தகவல்கள் காட்டுத் தீ போன்று உலகளவில் உள்ள உளவு வலைப் பின்னல்கள் அனைத்திலும் உடனுக்குடன் பரவி விடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்திய தூதரகங்கள், இந்திய பாதுகாப்புப் படையினர் ஆகியவை மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை என்கிற விஷயம், உலக அரசியல்-உளவு வட்டங்களில் இன்று சகலரும் அறிந்த தகவல்.

இதற்கு மேலும் இவ்விஷயத்தைப் பற்றித் தெரிய வெண்டுமா? மேலும் படியுங்கள்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, SPG பாதுகாப்பு ஏற்பாடுகளுப்புப் பொறுப்பேற்றிருந்த RAW அதிகாரிக்கு, இவர்கள் பயண விவரங்கள் ஒன்றுமே தெரிவிக்கப் படவில்லை.

ஆனால், மேலை நாட்டு உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய அதிகாரிகளுக்குத் தெரியுமுன்பாகவே எல்லாமே தெரிந்திருந்தது. இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதோ கொஞசம் தான் தெரியும்; பல சமயங்களில் அதுவும் வேற்று நாட்டு உளவு அமைப்புகள் மூலமாகத் தான் தெரியவரும். இதனால் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எவ்வளவு பாதகம், அவமதிப்பு, மதிப்புக் குறைவு, தலை குனிவு ஏற்பட்டது என இந்த இத்தாலிய பெண்மணி சோனியாவுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா?

சோனியாவின் பிரத்யேக காரியதரிசி ஜார்ஜ், டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் மூலமாக, ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அலுவலகத்துடனும், மேலை நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் நேரடியாகவே வழக்கமாகத் தொடர்பு கொள்வாராம்.

மேற்குறிப்பிட்ட நேர்மையான RAW அதிகாரி, தன் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் மேற்கூறிய விஷயங்களை தலைமை அதிகாரியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முறையீடு அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் (அதாவது சோனியா) மிக முக்கியமான பாதுகாப்பு விஷயஙகளைக் கூட இந்திய அமைப்புகளை நம்பாமல் அல்லது கலந்து கொள்ளாமல், நேராக இத்தாலிய தூதரகத்தின் மூலமாக செயல்படுத்துவது பற்றி அறிந்து ராவ் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், இதில் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.

எனவே, 1980களிலேயே, சோனியா இத்தாலிய உளவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்; பற்பல அபாயங்களும், திகில்களும் நிரம்பிய உளவு அமைப்புகளின் வேலைகளில் பின்னல்களை உருவாக்கும் அளவு செயல் திறன் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

ஆனால், வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் போதே மிக முக்கியத்துவமான இந்திய பாதுகாப்பு விஷயங்களில் சோனியா தன் இத்தாலியக் குடும்பத்தை ஈடுபடுத்தி உள்ளார்; ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும் போதே, இத்தாலியப் பாதுகாப்பை இந்தியாவின் மீது சோனியா திணித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைப்புகள் மீது தன் அவ நம்பிக்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட அளவில் தன் பாதுகாப்புக்காக இத்தாலிய அமைப்புகளுடன் உடன்படிக்கையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். இத்தகைய செயல்களை இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிருடன் இருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த பதவியிலும் இல்லாத போதே சோனியா செய்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவர் கையில் உண்மையிலேயே அதிகாரபூர்வமாக அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்? அல்லது என்ன தான் செய்ய மாட்டார்?

இருப்பினும், இன்று இந்தியாவுக்காக தன் உயிரையும் தரத் தயார் என்று சோனியா பாசாங்கு செய்கிறார். இப்போது நாம் காணும் சோனியா, அசல் சோனியாவே அல்ல. இந்திய நாட்டுடன் அவ்வளவாகத் தோழமை கொள்ளாத மேலை நாடுகளுக்கும் கூட இவரைப் பற்றி சரியாகத் தெரியும். நாம், அதாவது, இந்திய மக்கள் தான் இன்னமும் இவரை இனம் கண்டு கொள்ளவில்லை.

- தி ஹிந்து

சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்

மூலம்: எஸ்.குருமூர்த்தி (ஏப்ரல் 17, 2004 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”.

புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை.

உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள்.

சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக,குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர்.

இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? சற்றுப் பொறுங்கள்.

இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப்பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG - Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனாக நடந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி உங்களுக்கு திகைப்பூட்டுகிறதா?

1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியாங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரிடையாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா.

உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?

இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார்.

சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை!
இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்).

அவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.

= வை.ரவீந்திரன் 

Tuesday 6 April 2010

தமிழன் என்று ஒரு இனம் உண்டு

தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவர்தம் மொழியாம் .....
இந்த பாடலை கேட்டதும துவண்டு கிடக்கும் தமிழனின் தோள்கள் தினவு எடுக்கும். தற்போது, இந்த வரிகள் எல்லாம் தமிழன் என்ற இனத்துக்கு பொருத்தமானவை தானா?
இது சற்றே ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்.
தமிழனின் பூர்வீக பூமியில் இருந்து (அதாங்க .... நம்ம சிங்கார தமிழ்நாட்டை விட்டு) சற்று வெளியே இருந்து பார்த்தால் தான் தமிழனின் குணங்களை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
ஏன் என்றால், தமிழ் நாடு முழுவதும்இப்போது வாழ்த்து கோஷமும் பாராட்டு விழாக்களும் சேர்ந்து கண்ணையும்கருத்தையும் குருடாக்கி விட்டன. அவ்வப்போது நடக்கும் போர்க்கள காட்சிகள் மற்றும் கொலை களங்கள் அனைத்தும் வருங்கால முதல்வர் விஜய் படத்தை நினைவூட்டுகின்றன. அதனால், தமிழ் நாட்டை தெளிவாக பார்க்க வேண்டுமானால் வெளியே இருந்து தான் உற்று நோக்க வேண்டும்.
சரி விசயத்துக்கு வருவோம்.
இந்தியாவிலே அதிக அளவில் தியட்டர்கள் உள்ள மாநிலம் தமிழ் நாடு தான். பல நகரங்களில் தியட்டர்களை இடித்து வணிக வளாகங்கள் கட்டிய போதிலும் தமிழ்நாட்டுக்கே முதலிடம். தமிழனின் சினிமா, தொலைக்காட்சி ஆர்வம் காரணமாக டிஸ்கவரிசேனல் கூட தமிழ் பேசுகிறது.
கள்ளுண்ணாமை என தனி அதிகாரம் படைத்த தெய்வ புலவர் வள்ளுவர் தோன்றிய தமிழ்நாட்டில் தான் அதிக அளவு சாராயக் கடைகள் உள்ளன. அதுவும் முத்தமிழ் அறிஞர் என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் மூ... அறிஞர் ஆட்சியில்.
உங்களுக்கு தெரியுமா? ராட்சசனை போலவும் காந்தியை கொன்ற கோட்சே போலவும் உருவக படுத்தப்படும் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மது வாசனைகிடையாது. மது வருமானம் இல்லாமலேயே தொழில் துறையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கள்ளுன்னாமையை வலியுறுத்திய தமிழனின் பூமியில் காவிரியும் முல்லை பெரியாரும் ஓடுகிறதோ இல்லையோ, வீதி தோறும் சாராய ஆறு தாரளமாக ஓடுகிறது.
மது மயக்கத்தில் மதி மயங்கி கிடக்கிறான், மானமிகு தமிழன்.
புலால் மறுத்த வள்ளுவரின் பூமியில், இந்தியாவிலேயே அதிக கசப்பு கடைகள் உள்ளன. தமிழுக்கும் தமிழனுக்கும் தனது உயிரை கொடுப்பதாக கூறும் அனைத்து தமிழர்களும் தமிழனின் தொடையில் 'திரி' திரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திரை கடல் ஓடி திரவியம் தேடிய தமிழன், கடல் கடந்து நாடுகளை வென்ற தமிழன், இப்போது கூனிக் குறுகி நிற்கிறான், இலவசத்துக்காக.
அரிசி, வேட்டி, சேலை, டி.வி. வாக்களிக்க பணம் என தன்மானத்தை இலவசங்களுக்கு அடகு வைத்து விட்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். தமிழனின் சிறப்பு குணங்கள் 'தவறி'விட்டன.
போர்க்குணம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, வேற்று நாகரிங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல், தொலை நோக்கு சிந்தனை இல்லாமை, தனி நபர் துதி பாடி சுய சிந்தனை இல்லாமை இப்படி ஏராளமான '(ஆ)மை' ஓட்டுக்குள் முடங்கி கிடக்கிறான்.
தெலுங்கானாவுக்கு ஐந்து லட்சம் தெலுங்கு மாணவர்கள் திரண்டனர். ரத்த சொந்தமான ஈழத் தமிழனை காக்க ஐந்து ஆயிரம் பேர் கூட திரளாமல் போர் குணத்தை இழந்து நிற்கின்றான், மானமிகு மறத் தமிழன்.
காகித புலியாகவே இருக்கும் தமிழன், வரிப் புலியாவது எப்போது? ரசிகர் மன்றங்களை கட்டிக் காக்கும் தமிழன் மத்தியல் சிந்தனை மன்றங்களும் தமிழ் ஆய்வு மன்றங்களும் பெருகாதது ஏன்?
கேள்விகள் எழுந்தால் மட்டுமே தமிழன் வாழ்வில் மாற்றம் வரும்.சிந்தித்தால் மட்டுமே தமிழனுக்கும் தமிழுக்கும் விடியல் நிகழும். வருங்கால தமிழ் தலைமுறைக்காக இப்போதே சிந்திப்போம்.
சிந்தனை திறன் ஓய்வு எடுத்தால், அதில் பாசி படர்ந்து உதவாமல் போகும்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாவர் -இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே .....' 

= வை.ரவீந்திரன் 

கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?

என்வழி என்ற இணைய தளத்தில் வந்துள்ள செய்தி
கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?
-------------------------------------------------
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு திடீரென அணை கட்ட முடிவெடுத்து வேக வேகமாக வேலைகளைத் துவங்கியுள்ளது. வழக்கம் போல தமிழக அரசு மவுனம் சாதிக்க, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த விவகாரத்தை கையிலெடுத்து சில தினங்களாகப் பிரச்சாரம், போராட்டம் என நடத்தி வருகிறார்.
பாம்பாறு என்பது கேரளப் பகுதிக்குள் ஓடும் ஆறு. ஆனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பாயும் அமராவதிக்கு மறையூர் பகுதியில் ஓடும் பாம்பாறுதான் நீர்ப்பிடிப்புப் பகுதி. இங்கிருந்துதான் 80 சதவிகித தண்ணீர் வருகிறது.
அமராவதி அணையை நம்பி பல்லாயிரம் ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில். குடிநீருக்கும் அமராவதியை நம்பித்தான் உள்ளனர் இப்பகுதிவாசிகள்.
இப்போது பாம்பாற்றின் குறுக்கே, தமிழக எல்லையிலிருந்து 1 கிமீ தொலைவு மட்டுமே உள்ள கேரள எல்லைப் பகுதியில் ஒரு பெரிய அணை மற்றும் தூவானம் அருவி அருகே நாச்சிமுத்து ஓடை பகுதியில் நீர்மின்சக்தி நிலையத்தை அமைக்கிறது கேரளா.
புது சட்டசபை புகுவிழா பிஸியிலும், புகுந்த பிறகு சாமான்களை அடுக்கி ஒதுக்கி வைக்கும் குடும்பஸ்தனின் பரபரப்பிலும்' காணப்படும் முதல்வரோ அட, 'புள்ளிவிவரப் புலி' பொதுப்பணித் துறை அமைச்சரோ குறைந்தபட்சம் இதைப் பற்றி ஏதும் பேசியதாகத் தெரியவில்லை.
எதிர்க் கட்சிகள், குறிப்பாக வைகோ மட்டுமே தனி ஆளாக இந்த பிரச்சினையை கையிலெடுத்துப் போராடி வருகிறார். டுமலைப் பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட அமராவதி அணைப்பகுதி மக்களிடையே இந்தப் பிரச்சினை குறித்து விளக்கமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தங்கள் கட்சியால் செய்ய முடிந்ததை அவர் செய்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் மதுரை யானை மலைக்கு, சிற்ப நகரம் என்ற பெயரில் நடக்கவிருந்த மிகப் பெரிய மோசடியைத் தடுத்ததில் வைகோவின் பங்கு பெரியது என்பதை மறந்துவிடக் கூடாது.
உடுமலைப் பேட்டைக்கு வந்த வைகோ, கேரள அரசு அணை கட்ட ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் எல்லைப் பகுதியைப் பார்க்கச் சென்றபோது தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தாம் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யப் போகவில்லை என்றும், அந்த இடத்தை தமிழக எல்லையிலிருந்தபடி பார்த்துவிட்டு வருவதாகவும் உறுதி கூறியும் திருப்பூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மீறிப் போக முயன்றதால் அவரும் , உடன் வந்த ம.தி.மு.க.வினர் 250-க்கும் மேற்பட்டோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவரும் தொண்டர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றாலும், நமக்குள் எழும் கேள்வி இதுதான்:
எல்லைப்புறங்களில் உள்ள எல்லா ஆறுகளையும் கிட்டத்தட்ட தடுத்து நிறுத்திக் கொண்டார்கள் அண்டை மாநிலத்தவர்கள். காவிரி, முல்லைப் பெரியாறு எல்லாம் கோர்ட்டு வாசலில் முடக்கப்பட்டுவிட்டன.
வட மாவட்டங்களில் மழைக் காலத்தில் கூட ஆறுகளில் தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை வந்துவிட்டது. அந்த ஆற்றுப் பகுதிகளை முழுமையாக வயல்களாக்கிவிட்டனர். சிலர் அந்த வயல்களையும் பிளாட் போட்டு விற்று வருகிறார்கள்.
இந்த மாதிரி 'பா(லா)ழாறு'களை உருவாக்கத்தான் இத்தனை தீவிரம் காட்டுகிறார்களா ஆட்சியிலிருப்பவர்கள்? கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே சர்வதேச எல்லைக் கோடா போட்டு வைத்திருக்கிறார்கள்? ஒரு இந்தியப் பிரஜையாக, இந்திய எல்லைக்குள் தடை செய்யப்படாத ஒரு பகுதியைப் போய் பார்வையிட ஒருவருக்கு அனுமதி மறுப்பதேன்?
அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைக் கூட விட்டுவிடுங்கள்.

இதே தடையை ஒரு மலையாளிக்கு கேரளா போட்டிருக்கிறதா?
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசியல்வாதிகள், அதிகாரிகள் அத்துமீறல்கள் எவ்வளவு நடக்கின்றன. கேரளாவிலிருந்து மலையாளிகள் சுதந்திரமாக தமிழகத்துக்குள் வருகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் பிரபலமான ஒரு அரசியல் தலைவர் கேரள எல்லைப் பகுதியைப பார்க்கச் செல்லக் கூடாதா… அதுவும் மக்கள் பிரச்சினைக்காக?
சில மாதங்களுக்கு முன் ஒகேனக்கல் தமிழக எல்லைப் பகுதியில் பரிசலை எடுத்துக் கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா வந்து பார்த்து விட்டுப் போய் ஏக பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார். அன்று தமிழக போலீசார் சும்மா வேடிக்கைதானே பார்த்தார்கள்…
இன்று வைகோவைத் தடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
முக்கியமான விஷயம்…
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட, கேரளா அரசு, காவிரி ஆணையம், மத்திய சுற்று சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின் வாரியம் ஆகியவற்றின் அனுமதி பெற்றாக வேண்டும். முக்கியமாக, பாம்பாற்றின் மூலம் பாசன வசதி பெறும் தமிழகத்தின் அனுமதியும் பெற வேண்டும்.
இப்போது அணை கட்ட அவர்கள் காட்டும் வேகத்தைப் பார்த்தால் தமிழகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது போலல்லவா தெரிகிறது…எங்கே இவையெல்லாம் வெளிவந்துவிடுமோ என்ற கடுப்பைத்தான் வைகோ மீது காட்டுகிறதா தமிழக அரசு

= வை.ரவீந்திரன் 

Sunday 4 April 2010

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை

செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.

பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.

ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமா பான்மையினைப் போன்று லகோர் பின்பற்றும் தன்மையாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றினாலும் அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்:

'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன.

அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது.

இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

= வை.ரவீந்திரன் 

Monday 22 March 2010

விதியின் குற்றமா? வீணர்களின் குற்றமா?

பழைய மன்னர்கள் கால ஆட்சிகளை பற்றி விவரிக்கும்போது, 'நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடியது" என் சொல்லுவது வழக்கம். அந்த அளவுக்கு நாடு செழிப்பாக இருந்தது என அதற்கு அர்த்தம்.

இன்றைய தமிழகமும் கூட பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டு செல்வ செழிப்பாகவே காட்சி அளிக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தி தலை நகராக தலை நகர் சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதை சமைத்து சாப்பிட இலவச கியாஸ் ஸ்டவ். இலவச வேட்டி, சேலை, அறுபது லட்சா ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள்.
இப்படி அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது.

இவ்வளவும் கிடைத்ததும் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும் பொழுதை போக்குவதற்கும் இலவச டிவியும் உண்டு. இப்படி தமிழக மக்களை பொன்னை போல தாய் உள்ளத்துடன் பாதுகாக்கும் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது?.

வழக்கமான டிவி நிகழ்ச்சிகள் பார்த்து மக்கள் போரடிக்காமல் இருப்பதற்காக ஆளும் கட்சி டிவியில் திரை உலக பிரம்மாக்கள், தாரகைகள் பங்கு பெரும் மாபெரும் கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு. (தமிழக முதல்வரின் விருப்பத்துக்கு இணங்க நடைபெறும் பாராட்டு விழா என்று யாரவது கருதினால் அதற்கு முதல்வரோ, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களோ, திரை உலக பிரம்மக்களோ பொறுப்பு அல்ல)

மக்களை இவ்வளவு குஷியாக வைத்து இருந்தாலும் சிலருக்கு மது மீது மோகம் உண்டு. பண்டை காலத்தில் இருந்தே பழ ரசம் சாப்பிட்டவர்கள் தானே. அது போன்ற மக்களுக்காக 'டாஸ்மாக்' கடைகள் வீதி தோறும் திறக்கப்பட்டு இருக்கின்றன. தேனீர் கடைகளை கூட தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.
நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்த கையோடு முதியோர் ஓய்வு திட்டத்துக்கு, சத்துணவுக்கு, திருமண உதவி திட்டத்துக்கு, இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கு, மிதி வண்டி வழங்கும் திட்டத்துக்கு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய விவரங்களை முதல்வர் கருணாநிதி பட்டியல் இட்டு இருக்கிறார்.

இந்தியா முழுவதும் விலைவாசி விண்ணை முட்டினாலும், தமிழக மக்கள் துயரப் படக்கூடாது என்ர ஒரே காரணத்துக்காகவே இந்த அளவுக்கு கருணாநிதியும் அவரது அரசும் மெனக் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு செய்தி அவருடைய நல்ல? திட்டங்களை எல்லாம் பாழ் படுத்தி விட்டதே?

ஈரோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண், தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவன் இறந்த நிலையில், கூலி வேலை செய்து மூன்று குழந்தைகளை காப்பாற்றி வந்து இருக்கிறார், அந்த பெண்.
ஐந்து வயதுக்குட்பட்ட அந்த குழந்தைகளில் இரண்டு பேர் இரட்டை குழந்தைகள். அவருடைய மாமியாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
கூலி வேலையில் கிடைத்த வருமானத்தால் குடும்பம் நடத்த முடியவில்லை.
'வறுமை வந்து விட்டால் அனைவருமே பகைவர் போலவே தோன்றுவார்கள்'. வறுமையில் வாடுபவர் மட்டுமே அதை பற்றி உணருவார்கள்.
இங்கேயும் மாமியார் - மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், அந்த பெண் ஒரு 'பகிர்' முடிவு எடுத்துள்ளார். வறுமையோடு வாழ்வதை காட்டிலும் உயிரை விடுவதே மேல் என்று கருதி உள்ளார்.

விளைவு, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளை தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மாமியார் அதிர்ச்சி அடைந்து, தான் மட்டும் உயிர் வாழ்வதில் என்ன பிரயோஜனம் என்று கருதி இருக்கிறார்.

வீட்டில் இருந்த சாணி பவுடரை கரைத்து குடித்து இறந்து விட்டார். (பாருங்கள் சாவதற்கு கூட, விலை கொடுத்து ஒரு விஷப் பொருளை வாங்க அந்த குடும்பத்தில் காசில்லை)


நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் முழுவதும் கற்பனை அல்ல. ஈரோடு அருகே கடந்த வாரம் நடந்த உண்மை சம்பவம். அப்படி என்றால், தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவது உண்மையா? அரசு அளிக்கும் இலவசங்கள் எல்லாம் எதற்கு? தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் தாய் உள்ளத்தோடு தாங்குவதாக கூறும் தமிழ் இன காவலரின் ஆட்சியில் இப்படி ஒரு கொடுமையா?

இந்த கட்டுரை எழுதும் சமயத்தில் கூட, தமிழ் இன காவலரின் வீரா வேச அறிக்கை ஒன்று டிவியில் செய்தியாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த காவலரின் ஆட்சியே டிவி மற்றும் நாளிதழ்களின் செய்திகளில் மட்டுமே நடைபெற்று கொண்டு இருக்கிறது. எதுவுமே ஆக்கபூர்வமாக இல்லை என்பதையே ஈரோடு சம்பவம் காட்டுகிறது.

இது விதியின் குற்றமா? வீணர்களின் குற்றமா?
யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.

குடும்பத்தோடு மரணித்ததால் ஈரோடு பெண் வறுமை நோய் வெளியில் தெரிந்தது. இது போன்ற வெளியில் தெரியா அபலை பெண்களின் வறுமை கொடுமை என்ன?

குறிப்பு:------------
பெட்ரோல் பொருட்களுக்கு வரி, சேவை வரி, வாட் வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரி பாதி (அதாவது 50 சதவீதம்), அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவாகிறது.

இது தமிழ் நாடு நிதி செயலாளர் தெரிவித்துள்ள தகவல்.
மீதி உள்ள 50 சதவீத வருவாயில் இருந்து தான் மற்ற எல்லா பணிகளையும் கவனிக்க வேண்டும். இதில், இலவச டிவி, இலவச காப்பீடு இப்படி இலவசங்களுக்கு வேறு தனி செலவு. மொத்தம் 12 லட்சம் மட்டுமே உள்ள அரசு ஊழியர்கலின் சந்தோசத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடிக்கலாமா?

= வை.ரவீந்திரன் 

Monday 15 March 2010

ருத்ராட்ச பூனை கருணாநிதி....

இனி வரும் காலங்களில் கருணாநிதி என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் ஏராளமான விளக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. முரண்பாட்டு மூட்டையாக காட்சி அளிக்கும் அந்த மனிதரின் (மன்னிக்கவும்) செயல்களை அலசி பார்த்தால் வெட்கக் கேடு. எனினும், தமிழனின் தலைவிதி, அந்த மனிதனை பற்றி பேச veண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.
பண்டாரம். ரதேசி என்று சகட்டுமேனிக்கு திட்டிய கும்பலோடு கைகோர்த்து அதிகாரத்தில் பங்கு எடுத்தும், 'நான் இருக்கும் இடத்தில மதவாதம் இருக்காது' என்று உறுதி கூறினார். சுமார் எட்டு ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, அந்த கும்பலால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்ததும் 'மதவாத சக்திகளுடன் கூட்டணி முறிந்தது' என்றார்.
கருணாநிதியின் அந்தர் பல்டிக்கு 'இது ஒரு சின்ன உதாரணம்'. ஆனால், சில கொள்கைகளில் மட்டும் அவர் விடாப்பிடியாக இருந்து வருகிறார். 'ஆட்சி-அதிகாரத்தில் இல்லா விட்டால் தமிழனுக்காக போராடுவது, ஆட்சியில் இருந்தால் தன்னுடைய குடும்பத்துக்காக போராடுவது, சினிமா நடிகைகளின் குத்தாட்டத்தை பல மணி நேரம் ஆனாலும் 'ஜொள்ளு' விட்டு ரசிப்பது' இப்படி சில கொள்கைகள் அவருக்கு உண்டு.
ஒரு விஷயம். எந்த நேரமும் அவர் பேசிக்கொண்டு இருக்கும் நாத்திக கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்று யாராவது நினைத்தால் அது மிகவும் தப்பு. மஞ்சள் துண்டு போடுவதில் இருந்து அவருடைய மூட நம்பிக்கைகளை பட்டியல் இட்டால் கணக்கில் அடங்காது. எனினும். அது பற்றி கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்காது. அவற்றை இப்போது பேச விட்டால் எப்போது பேசுவது?
ஜெயலலிதா என்றால் பச்சை நிறம், 9 என்ற எண் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமாகி விட்டது. இந்த காரணநிதி கூட, தன்னை நல்லவர் போலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வந்தவர் போலவும் காட்டிக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தது உண்டு. ஆனால், கருணாநிதி பற்றிய ரகசியம் தெரியுமா?
உலக அளவில் அனைத்து மக்களும் அஞ்சி நடுங்கும் எண்கள் எது வென்றால் 8 மற்றும் 13 . மேலும், இந்தியாவை பொறுத்தவரை சனிக்கிழமை என்றால் யாருக்கும் ஆகாது. இந்த எண்களும், கிழமையும் கருணாநிதிக்கு பிடித்த ராசியனவை ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடங்கும் எந்த முக்கிய காரியமாக இருந்தாலும் இந்த எண்கள் அல்லது சனிக்கிழமை வருமாறு அமைப்பதே வழக்கமாக வைத்துள்ளார். 2006 -ம ஆண்டு அவர் பதவி ஏற்ற நாள் (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் (அவருடைய பதவியை காப்பாற்றுவது தொடர்பான நிகழ்வுகள்) எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
தேர்தல் தேதிகளில் கூட, அவருக்கு ராசியாக அமையுமாறு பார்த்துக்கொள்கிராரோ என்ற சந்தேகம் உள்ளது. இத்தாலி அம்மையாரின் ஆசியுடன் எதுவும் நடக்கலாம்.
பாராளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடந்த நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை நாள். சமீப காலமாக தமிழ் நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு இடை தேர்தலின் வாக்குபதிவு நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை இவற்றை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.
இவை எல்லாம் முடிந்து போனவை. தற்போதைய சூழ்நிலையில் ஒரு முக்கிய நிகழ்வை பார்த்தால் என்னுடைய கருத்து நிதர்சனமான உண்மை என்பது விளங்கும். புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு விழா - மார்ச் 13 (சனிக்கிழமை) நிரந்தர முதல்வராக இருக்கலாம் என்பதற்காக இந்த திட்டமோ என்னவோ?
அந்த கட்டத்தை கட்ட தொடங்கும்பொது நவரத்னா கற்களை பூமியில் கொட்டி பூஜை போட்டதும இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பூமி பூஜை போடப்பட்ட்ட பொது இந்த நிகழ்வுகள் எல்லாம் நடை பெற்றதக்கு கடும் கண்டனம் எழுப்பியது இந்த கருணாநிதி தான். அப்போது பகிரங்கமாக நடந்ததும், தற்போது கமுக்கமாக நடந்ததும் தான் வித்தியாசம்.
அதாவது, எதை பகிரங்கமாக வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு பத்திரிகைகளை அன்பாக (?) வேண்டி கொள்பவர் கருணாநிதி. தமிழ் நடிக பட்டாளம் சார்பாக. அவரோட சாதனைகளை (?) பாராட்டி சென்னையில் பிப்ரவரி 7 -ம தேதி பாராட்டு விழா நடந்தது. அட அது கூட, சனிக்கிழமை தாங்க.
இந்த ருத்ராட்ச பூனையின் மூட நம்பிக்கைகள் பற்றி இனிமேலாவது அனைவரும் அறிந்து கொண்டால் சரி.

முதல் பிரசவம்

நுண்ணிய வெண்மணியை
கருவாகக் கொண்டாள்
கருவில் உருவம்
செய்து வைத்தாள்

ஐயிரு திங்களாய்
உயிர் வளர்த்தாள்
மின்னல் கீற்றாய்
வலி பொறுத்தாள்

சூடாக அருந்தினால்
சுட்டுவிடும என்று
அனைத்துமே
சூடாற்றி அருந்தினாள்

பிஞ்சின் நலனை
நெஞ்சில் கொண்டாள்
பஞ்சு கால்கள் உதைப்பில்
பிரபஞ்சம் மறந்தாள்

மருந்துடனே தாதியும்
தந்த நாளும் வந்தது
மருத்துவமனையை
நாடியே சென்றாள்

ஓராயிரம் வேதனையை
ஈருதடில் தேக்கினாள்
வானவர் உலகை
எட்டி பார்த்து வந்தாள்

தாமரை அவளின்
மடியில் அல்லி மலர்ந்தது
அமுத மொழியாளின்
அழகு முகம் ஒளிர்ந்தது

முதல் பிரசவம்
மறு பிறவி என்றாலும்
அதுவும் ஒரு
சுகம் தானே?

= வை.ரவீந்திரன்