Sunday 20 November 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -36

80களில் இளையராஜாவின் ராஜாங்கம் என்றால் 90களுக்கு இவரது கானம் தான். நீண்ட தூர பயணங்களில் இவரது இசையும் கூட வழித் துணை. பலரும் இதை அறிந்திருக்க மாட்டார்கள். வாலியா கண்ணதாசனா என்ற மன மயக்கத்துக்கு நிகரானது, இந்த இசை மயக்கமும். அந்த மயக்கத்தை தந்தவர் மெல்லிசை மன்னரால் தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா.



இசையராஜாவின் இசைக்குழுவில் இசை பயணத்தை ஆரம்பித்த இவரது முதல் படம் 1986ல் வெளியான 'மாட்டுக்கார மன்னாரு'. ராமராஜனின் 'மனசுக்கேத்த மகராசா' (1989) ரசிகர்கள் மனதில் தடம் பதிக்க, 'வைகாசி பொறந்தாச்சி' படம் புகழ் உச்சிக்கு எடுத்துச் சென்றது. அப்புறம் பத்து பதினைந்து வருஷம் அடை மழைதான். ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், தேவா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த், கார்த்திக், சத்யராஜ், ஆர்.பாண்டியராஜன் படங்கள்  ஆரம்ப கால அஜித், விஜய், படங்கள் பெரும்பாலானவை தேவாவின் கைவண்ணமே.

ரஜினியின் எவர்கிரீன் மூவி பாட்ஷா ஒன்றே இவர் பெயர் சொல்லும். ரஜினி படங்களின் டைட்டில்களில் வரும் "S U P E R  S T A R  R A J N I  ரஜினி" என்ற எழுத்துக்களின் பிஜிஎம் இவரே. அண்ணாமலையில் துவக்கி வைத்தார். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட வேண்டும். அருணாச்சலம் போன்ற படங்களும்  இவர்தான். 



கமலுக்கு பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அவ்வை சண்முகி... இப்படி...

ரஜினிக்கு போலவே சரத்குமாருக்கு "வாராரு வாராரு அண்ணாச்சி..." பாடலை தந்ததும் தேவாதான். நம்ம அண்ணாச்சி, கட்டபொம்மன், சூரியன், ராஜபாண்டி, சாமுண்டி, நட்புக்காக, வேடன்... என சரத்தின்  மிக அதிக அளவிலான ஹிட் படங்களின் பாடல்கள் இவரின் இசையே.

ஆசை, வாலி, காதல் கோட்டை, வான்மதி, ரெட், ரெட்டை ஜடை வயசு, சிட்டிசன் என அஜித்துக்கும் குஷி, ஒன்ஸ்மோர், ரசிகன், தேவா என விஜய்க்கும் ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். இசையமைப்பாளராகும் ஆர்வம் கொண்டவராக அஜித் நடித்த முகவரி படத்தின் இசையும் இவரே. அஜித்தின் பெரும்பாலான ஆரம்ப கால ஹிட் பாடல்களின் முகவரி தேவா தான்.

'தகடுன்னா தமிழ்நாட்டுக்கே தெரியும்..'னு அடிதடி படத்தில் வரும் சத்யராஜ பத்தின பாடலுக்கும் இசை, குரல் இவர்தான்.

1975 -1990 இளையராஜாவின் பாடல்கள் வெகு பிரபலம் என்றால் 1990 -2005 தேவாவின் கானங்கள் தான் பொற்காலம்.

பொற்காலம், சோலையம்மா, தெற்கு தெரு மச்சான், பாரதி கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை மச்சான், காதலே நிம்மதி மாதிரியான 90களின் ஹிட்  படங்களின் இவரது பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் விருப்ப ரகம்

'தூதுவளை இலை அரைச்சி...,' 'அத்திப்பழம் சிவப்பா இந்த அத்த மக சிவப்பா...,' 'ஆடியில சேதி சொல்லி...' 'முத்து நகையே முழு நிலவே...' 'வைகறையில் வந்ததிந்த வான்மதி...,' 'சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது...' இவை எல்லாம்  சாம்பிள்.

பாடகராக தேவாவின் குரல் நடிகர் மணிவண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்தும். 'கோகுலத்தில் சீதை' படத்தில் "கோகுலத்து கண்ணா கண்ணா.." பாடலிலும், 'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜியுடன் பாடும் "உன்னில் என்னில் உள்ளது காதல்.." பாடலும் உதாரணம்.

"விதம் விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...", "சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா...', "அண்ணா நகரு ஆண்டாளு...," "ஒயிட்டு லெக்கான் கோழி ஒண்ணு கூவுது..."  இப்படியான பாடல்களால் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் தேவா.

இதனாலேயே கானா இசையமைப்பாளர் என்ற முத்திரையை குத்தி அவரது இசையை ஒதுக்க பார்த்தனர். டியூனை காப்பியடிப்பவர் என்றெல்லாம் கூட விமர்சித்தார்கள்.

ஆனால், அவரது தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்... சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் இறுதிச் சடங்கில் ஒலித்தது.

இந்த நிமிடம் கூட இவரது பாடல் என தெரியாமலேயே யாரேனும் தேவ கானத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். திரை இசையின் சாம்ராட் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், கொடுத்த 'தேனிசை தென்றல்' பட்டத்துக்கு பெருமையை சேர்த்தவர்  தேவா.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்