Tuesday 30 December 2014

கோபம் ஏன் அன்னையே?


தலைகோதி அன்பை
சொரியும் அன்னையாய்
அலைக்கரங்களால்
படகை தழுவும் கடல் அன்னையே!
 

பசியை தானே உண்டு
அந்த ஒற்றை சொல் மகனாய்
வளர்க்கும் தெய்வமாய்
மடி சுரக்கும் மீன்வளம் தந்தாய்!


கரையில் காத்திருக்கும்
தாயையும் பிரிந்து
உன் மடியில் தஞ்சமடைந்தோம்
உன் மீதான எங்கள்
நம்பிக்கையை பொய்ப்பித்தது ஏன்?

அதிகாலையில் ஆவேசம் கொண்டு
கடலோர குழந்தைகளை
உதைத்து எழுப்பியது ஏன்?

தாயாய் காப்பாய் என
நம்பி இருந்த எங்களை
கபளீகரம் செய்தது ஏன்?

குஞ்சுகளை இரையாக்கும்
பகாசுர மீனாகியது ஏன்?

உன் சதிராட்டத்தில்
உறவுகளை தொலைத்தோர் எத்தனை?
உயிர் பிரியும் தருணத்தில்
தனுஷ்கோடி லெமூரியா
கண்டோர் எத்தனை?

கண்டிக்கும் அன்னையிடம்
காணும் கனிவு உன்னிடம்
காணாமல் போனதெங்கே?
இனியாவது அன்பு காட்டும்
அன்னையாய் இரு
உன் கோபத்தை தாங்கும்
சக்தி இல்லை எங்களுக்கு....

= வை.ரவீந்திரன்

Wednesday 24 December 2014

அணுகுண்டு சோதித்த தலைவர்



வாஜ்பாய் பிறந்த நாள் கவிதை (25-12-2011)


=============================

இந்தியாவின் தன்னிகரற்ற
தலைவர்களில் தனிப்பெரும் தலைவா,
அருமைமிகு கலாமுடன் அன்பு கரம் கோர்த்து
அணுகுண்டு சோதித்தாய்,

இந்தியாவின் பெருமை உயர்ந்தது
வல்லரசுகளின் எதிர்ப்பும் வலுத்தது. - அந்த
எதிர்ப்புகளையும் பொருளாதார தடைகளையும்
துணிவுடன் தகர்த்தெறிந்த தலைவா,

அன்னிய சிட்டுக் குருவிக்கும் 
அஞ்சி நடுங்கும் ஆட்சியாளர்களையும்
அசையா உறுதியுடன் நின்ற உமது ஆட்சியையும்
அண்ணலே, அசைபோட்டு பார்க்கிறோம்
  
நீ நடத்திய ஏழாண்டு
ஆட்சியில் எழுந்தது பாரதம்
ஏழு ஜென்மத்துக்கும்
மறக்குமோ மனம்  அதை

அனைவரையும் அரவணைப்பதில்
அன்னையான வாழும் மகாத்மாவே - உமது
அவதார நாளில் வணங்குகிறோம் உம்மையே 
உமக்காக  வேண்டுகிறோம் இறையையே

= வை.ரவீந்திரன் 


மனித நேயர் எம்ஜிஆர்


 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

= வை.ரவீந்திரன்




மடைமை ஒழித்த வெண்தாடியார்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச அறியார்
அறியாதோர் புத்தியில்
அறையும்படி கூறும் புலியார்

மூட பழக்கத்தின்
மாயையை சிறிதும் தெரியார்
பாரதிக்கு பின் மாதர் தம்
குரலாய் ஒலித்த ஒலியார்

திக்கற்ற தமிழருக்கு ஒளியாய்
திகழும் பேரொளியார்
சிறியோரையும் மரியாதையுடன்
விளிக்கும் பெரியார்

வாழ்க்கை நெறியை
வகுத்து தந்த எளியார்
மடைமையை ஒழித்து
தூய்மை படுத்திய வெண்தாடியார்

= வை.ரவீந்திரன்

Tuesday 23 December 2014

ஊதா நிற நூல்

புத்தகக் கண்காட்சி
கடைகள் தோறும்
கேள்வி கணைகளால்
துளைத்தெடுத்தாய்
எந்த நூல் பிடிக்கும் என்று
பதிலெதும் கூறாமல்
மவுனமாக இருந்தேன்


உனக்கு தெரியுமா
முந்தைய சந்திப்பில்
உனது தாவணியில் இருந்து
உனக்கு தெரியாமல்
உருவி எடுத்த ஊதா நிற
நூல் மட்டுமே பிடிக்கும் என்று

= வை.ரவீந்திரன் 

Monday 15 December 2014

மறதியை மறக்கலாம்

(காற்றுவெளி / இலக்கிய இணைய இதழில் வெளியான கட்டுரை)
 
வீட்டில் மூக்குக் கண்ணாடியை தேடுவது முதல் 10 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நண்பரின் பெயரை நினைவுபடுத்துவது வரை மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதில் மறதிக்கு முக்கிய இடம் உண்டு. ஆண்டுதோறும் வயது அதிகமாகும்போது மறதி குணமும் அதிகமாகி தொல்லை கொடுக்கிறது. வயதான காலத்தில் அல்சீமர் என்ற மறதி நோயால் அவதிப்படும் சிலரை கண் கூடாகவே நாம் காண்கிறோம்.

இதுபோன்ற மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டு பிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணு முணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த மிகச் சிறந்த பயிற்சி.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ண பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பஸ் பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவு படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.

மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

நினைவாற்றலை பெருக்குவதற்காக மேற்சொன்ன முறைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய தலைமுறையினரிடம் இத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்து வந்தன என்பதே அந்த உண்மை. பழைய பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களும் ஓய்வு நேரங்களில் புத்தகங்களை வாசிப்பவர்களும், குழந்தைகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் நினைவாற்றலும் நம்மை பிரமிக்கச் செய்பவையே. 

= வை.ரவீந்திரன் 





Saturday 13 December 2014

இறைவன் தோட்டத்தின் பாத்திகள்

இறைவன் படைத்த  பூமி தோட்டத்தில்
மனிதர்கள் கட்டி வைக்கும்
பாத்திகள் எதுவும் எப்போதும்
நிரந்தரமாக இருப்பதில்லை

தூது சென்ற புறாக்கள்
மறைந்து விட்டன
தபால்காரனும் தந்தியும்
தேவையற்று போய் விட்டன

போகாமல் கெட்டது உறவு
என்ற வசனம் பொய்த்து போனது
நேரில் பார்க்காமலேயே
இணைய வழியில்
நட்பு சிறகு விரித்து
உறவு பாலம் பிணைக்க
இ மெயிலும் முக நூலும்
வாட்ஸ் அப்பும் வந்து விட்டன

= வை.ரவீந்திரன் 



Thursday 11 December 2014

பாரதியின் வாழ்வில் புதுச்சேரி

‘உள்ள நிறைவிலோர்
கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? நன்னெஞ்சே,
தெள்ளிய தேனிலோர்
சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? நன்னெஞ்சே?’


சூரத்தில் 1907ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. திலகர், அரவிந்தர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் என புரட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து தனி அணியமைத்தனர். அவர்களின் வேகத்தின் முன்னால் ஆங்கிலேயரால் ஈடு கொடுக்க முடியவில்லை. சென்னையில் ‘இந்தியா‘ பத்திரிகை ஆசிரியராக இருந்த பாரதியின் புரட்சிகரமான கட்டுரைகளால் ஆக்ரோஷமடைந்த ஆங்கிலேயர், பாரதியை கைது செய்ய முடிவு செய்தபோது அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாடுகளுக்கு பதில் செக்கில் பூட்டப்பட்ட வ.உ.சிதம்பரனார், தொழுநோய்க்கு ஆளான சுப்பிரமணிய சிவா போன்றோரின் சிறைக் கொடுமைகளை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்ததால் பாரதியை சென்னையை விட்டு அனுப்ப தீர்மானித்தனர். அப்போது நினைவில் வந்த ஊர், புதுச்சேரி.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்கு அவர்கள் பாரதியை அனுப்பி வைத்தனர். நண்பர்களின் ஏற்பாட்டின்படி, புதுவைக்கு 1908ம் ஆண்டு ரயிலில் வந்திறங்கிய பாரதியின் கையில் குப்புசாமி அய்யங்கார் என்பவருக்கு நண்பர் ஒருவர் எழுதிக் கொடுத்த கடிதம் மட்டுமே இருந்தது. புதுவையில் அவருக்கு யாரையும் தெரியாது. அவரையும் யாருக்கும் தெரியாது. ஏனடா, இந்த புதுச்சேரிக்கு வந்த சோதனை? என அவர் நினைத்தபோது குவளைக் கண்ணன், சுந்தரேச அய்யங்கார் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலமாகவே தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தார்.

சில மாதங்களில் இந்தியா பத்திரிகையின் முதலாளி மண்டையம் ஸ்ரீனிவாச்சாரியும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவர், புதுவையில் படித்தவர் என்பதால் புதுச்சேரி நகரம் அவருக்கு நல்ல பரிச்சயமாக இருந்தது. எனவே,  ‘இந்தியா‘ பத்திரிகையை புதுவையில் தொடங்கினார். அதற்கு பாரதியை ஆசிரியராக நியமித்தார். பின்னர், புரட்சியாளர்களின் அடைக்கல பூமியானது, புதுவை. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், ‘இந்தியா‘ பத்திரிகையை இந்திய பகுதிக்குள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

அதன் பிறகு விஜயா, கர்மயோகி, தருமம், பாலபாரதம், சூரியோதயம் என பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக புதுவையில் பாரதியார் பணியாற்றினார். அத்துடன், சுதேசமித்திரனில் சுதந்திர வேட்கை ஊட்டும் கவிதைகளையும் எழுதினார். தமிழ் பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடும் வழக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர், பாரதியார். அந்த சாதனையை புதுவை மண்ணில் தான் அவர் ஆரம்பித்து வைத்தார். முழுநீள கார்ட்டூன் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், அது கனவாகவே போனது.

கொல்கத்தாவில் இருந்து 1910ம் ஆண்டு புதுவைசெட்டித் தெருவில் தங்கி இருந்த அரவிந்தருக்கு துணையாகவும் இருந்திருக்கிறார். அரவிந்தர் நடத்திய ஆர்யா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். அரவிந்தருக்கு தமிழ் கற்றுத் தந்தவர், பாரதியார். பாரதியாரிடம் தமிழ் பயின்ற அரவிந்தர், பின்னாளில் தமிழில் இருந்து திருக்குறள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பத்திரிகை, தேசப்பணி என இருந்த பாரதியை பாட்டுக்கொரு புலவனாக மாற்றியது, புதுவை மண். அதுவரை பாரதி எழுதி வைத்திருந்த கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சுதேச கீதங்கள் என்ற பெயரில் புத்தகமாக 1908ம் ஆண்டு புதுவையில் வெளியிடப்பட்டது. அதுவே, அவருடைய முதல் புத்தகத் தொகுதி. பின்னர், பாரதியின் கனவு, ஜன்ம பூமி, மாதா மணிவாசகம் என பாரதியின் எழுத்துப் பணி தொடர்ந்தது. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பகவத் கீதை மொழி பெயர்ப்பு என காலத்தால் அழியாத காவியங்கள் அனைத்தும் புதுவை மண்ணில்தான் கருத்தரித்தன. அவற்றை 1912ம் ஆண்டில் பாரதி எழுதினார். பின்னாளில், அவை தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளியாகின.

புதுவையில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், குயில் தோப்பு, மணக்குள விநாயகர் கோவில், உப்பளம் முத்துமாரியம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் ஆலயம் என அவர் பாடித் திரிந்த இடங்கள் ஏராளம். குறிப்பாக, குயில் தோப்பு தான் அவருடைய கவிதை வளத்துக்கு ஆதார சுருதியாக அமைந்தது. ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என பாட வைத்தது, குயில்தோப்பு. ‘சித்தானந்த சாமி திருக்கோயில் வாசலில் தீபவொளியுண்டாம் பெண்ணே’ என்றும் ‘நானும் ஒரு சித்தன் வந்தேனே, நான் சாகாமல் இருப்பேனே’ என்றும் சித்தானந்தர் கோவிலில் அமர்ந்து எழுதினார்.

1882ம் ஆண்டு பிறந்து 1921ம் ஆண்டு வரை 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த பாரதியாரை 10 ஆண்டு காலம் புதுச்சேரி மண் பாதுகாத்தது. வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை புதுவையில் தான் அந்த தேசியக்கவி வாழ்ந்தார். புதுவை மண்ணை விட்டு பிரிந்த 3 ஆண்டுக்குள் உலகை விட்டே பிரிந்த பாரதியின் நினைவு வாசத்தை குயில் தோப்பு இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

= புதுவையின் பழமை நூலில் இருந்து
    நூல் ஆசிரியர் வை.ரவீந்திரன்



ஆதாம் ஆப்பிளின் மிச்சம்

முன் பின் அறியாத
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது


= வை.ரவீந்திரன் 

Wednesday 10 December 2014

பறவையின் சுயசரிதை

வானமே எல்லை என
பறக்கும் பறவை
காற்று வெளியின்
முற்றுப் பெறா பக்கங்களில்
எழுதிச் செல்கிறது
தனது சுய சரிதையை...
சிறகுகள் என்னும்
மெல்லிய தூரிகை கொண்டு

= வை.ரவீந்திரன் 


கூத்து முடிந்த கொட்டகை


நதிக் கரையோர நாணல்கள்
நெட்டி முறித்துக் கொள்கின்றன
வௌ்ளம் வடிந்து விட்டாலும்

செவ்வரி பூசிய தண்ணீர்
நீர்ச் சூழலின் மிச்சம் கூறிச் செல்கிறது


கழனிகள் தத்தளிக்கின்றன
நெடுவயல்களில் நதியின்
கால் தடம் பதிந்து கிடக்கிறது
ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம்
கோரிக்கைகளும் அறிக்கைகளும்
 

அச்சில் ஏற பரபரத்து கிடக்கின்றன
வாய்க்கால் தூர்வாருவதில்
லாவணி கச்சேரி கூச்சல்
மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்தது
கூத்து முடிந்து கலைத்த
கீற்றுக் கொட்டகையாய் விளை நிலம்


= வை.ரவீந்திரன் 

Tuesday 9 December 2014

வார்த்தைகளற்ற கவிதை....

கவிதை சொல் என்றாய்
நீயே கவிதை தானே என்றேன்
உன்னை ஓவியம்
வரையட்டுமா என கேட்டபோது
ஓவியமும் வரைவாயா..? என
விழி விரித்து வியந்தாய்
 

உன் பெயரை எழுதினாலே
ஒரு ஒவியம் தானே என்றேன்
எந்நேரமும் பொய் என
பொய் கோபம் கொண்டாய்


அப்படியே இரு
அழகான ஒரு ஓவியக் கவிதை
தீட்டுகிறேன் என கூறியபடி
உன் முகம் பார்த்தேன்

செல்ல சிணுங்கலுடன் என்
தலையில் தட்டி விட்டு
குதித்தோடிச் சென்றாய்
உன்னைத் தொடர்ந்து
வார்த்தைகளும் ஓடோடிச் சென்றன
எப்படி நான் கவிதை எழுதுவது...?

= வை.ரவீந்திரன் 

Monday 1 December 2014

அழிந்து போன அளத்தல் அளவைகள்



பள்ளிக்கூட பாடங்களில் மில்லி லிட்டர், லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவை பற்றி படித்திருப்போம். ஆனால் உழக்கு, படி, நாழி, மரக்கால் போன்ற அளவைகள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இவை எல்லாம் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் உபயோகப்படுத்திய அளவை முறை. அப்போதெல்லாம் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இவற்றைக் கொண்டு தான் அளந்தார்கள். இதற்காகவே அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்று 20 வகையான அளத்தல் அளவைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆழாக்கு அரிசிய போட்டு சோறு வடிக்கத் தெரியாதா?’ என்று கிராமங்களில் ஒரு  சொல்வடை உண்டு. அதாவது, ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆழாக்கு அளவு அரிசியை எடுத்து சோறு வடித்தால் போதும் என்பதே அதன் உள் அர்த்தம். இந்த ஆழாக்கு என்பது அளத்தல் அளவையில் ஒரு சிறிய அளவீடு. தோராயமாக 400 கிராம் அளவுக்கு இருக்கும்.

இதே மாதிரி, ‘படி’ என்பது ஆழாக்கை விட கொஞ்சம் பெரிய அளத்தல் கருவி. வயலில் விளைந்த நெல் மணிகளை கதிரடிக்கும் களத்தில் மொத்தமாக குவித்து வைத்து அங்கிருந்து மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்து வருவார்கள். அப்போது மூட்டைகளில் இருந்து நெல்லை அளந்து போடுவதற்கு படி என்ற அளத்தல் கருவியை பயன்படுத்தினர். மேலும், வயலில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கூலியாக நெல் வழங்கிய காலம், அது. அதனால், படியை வைத்து அளந்தே கூலியை வழங்கினர். இதில் இருந்து தான், ‘படியளத்தல்’ என்ற வார்த்தை தோன்றியது. இப்போதும் கூட, ‘ஏதோ, ஆண்டவன் படியளந்து கொண்டு இருக்கிறான்’ என்ற வார்த்தைகளை சிலர் கூறுவதை கேட்கலாம்.
  
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற அளவை கருவிகள் மிக பிரபலமாக இருந்துள்ளன. கி.பி.10ம் நூற்றாண்டில சோழ பேரரசர் ராஜராஜன் ஆட்சி புரிந்தபோது, நெல் மணிகளை அளப்பதற்கு ‘மரக்கால்’ என்ற அளவை கருவியை அதிகமாக பயன்படுத்தினர். இப்போது உள்ள மில்லி லிட்டர், லிட்டர் அளவை கருவி போலவே உருளை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு அளவைக்கு ஏற்ப அதன் வடிவமும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காணப்படும்.

மன்னராட்சி காலத்தில், பாசனத்துக்கு ஏரிகளை திறந்து விடும் பணியை கண்காணிக்க, ‘கலிங்கு வாரியம்’ என்ற ஒரு அமைப்பை ஒவ்வொரு ஊரிலும் சோழ மன்னர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வாரியம் முறையாக செயல்பட, அதற்கு பொருளாதார வசதி தேவை. எனவே, வரி வசூல் முறை அமலில் இருந்தது. அதன்படி, வயலில் விளையும் தானியங்களில் 250 மரக்கால் அளவுக்கு நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியத்தை கலிங்கு வாரியத்துக்கு விவசாயிகள் அளந்து வழங்க வேண்டும். அதைக் கொண்டு அந்த வாரியம் செயல்படும். மரக்கால் என்ற கருவியை ‘பக்கா’ என்றும் அழைப்பது உண்டு.

மரக்காலை விட சற்று சிறிய அளவிலான அளவை கருவியின் பெயர் நாழி. பொங்கல் திருநாள் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் நாழி கருவியில் நெல்மணிகளை நிறைத்து வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இதை, ‘நிறை நாழி’ என்று நமது முன்னோர் அழைத்தனர்.


ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட விவசாயிகளின் வீடுகளில் பயன்படுத்தி வந்த இந்த கருவிகள் அனைத்தும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சிறிது சிறிதாக காணாமல் போயின. இந்திய விடுதலைக்கு பிறகு அந்த அளவை முறைகளை சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பது போன்ற வார்த்தைகள் அனைத்தும் புத்தகங்களில் தான் இருக்கின்றன. ஒரு சில கிராமங்களில் மட்டும் விசேஷ தினங்களில், ‘நிறை நாழி’யை காண முடிகிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ.....?

இதுதவிர, தானியங்களை மொத்தமாக சேகரித்து வைப்பதற்கு அந்த காலத்தில் சரியான வசதிகள் கிடையாது. அதனால், வீடுகளிலேயே பெரிய சைஸ் மண் பானை போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அதன் பெயர், ‘குதிர்’. பெரும்பாலும் நெல் சேமித்து வைக்க பயன்படுத்தியதால், ‘நெல்லு குதிரு’ என்று கிராமங்களில் அதை அழைப்பது உண்டு. பழங்கால முதுமக்கள் தாழி போன்ற வடிவத்தில் ஒரு சராசரி மனிதன் உயரத்துக்கு தோற்றமளிக்கும் ‘குதிர்’ என்ற பெரிய சைஸ் பானையை குக்கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. 

= வை.ரவீந்திரன்