Saturday 10 April 2010

'ரா' உளவு அமைப்பில் தலையிட்ட சோனியா

வெவ்வேறு நாடுகளில் உள்ள உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் கசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக 1968ல், இந்திய உளவுத்துறை நிறுவப்பட்டது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு. இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார்.

இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்பு கொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக கூறிவிட்டனர். ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்?

காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார். இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.

ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பலண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிப்பந்திக்கப் பட்டனர். நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது.

சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழி பாவமற்ற பதி-பக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர்.

ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடி மகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது.

பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்!
உண்மையில் இத்தாலிய உளவு அமைப்புகளை RAW திரும்பிப் பார்க்காததற்குக் காரணமே, பிரதமரின் வீட்டில், குடும்பத்தில் சோனியா இருந்தது தான். இந்திய-இத்தாலிய உளவு அமைப்புகள் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளிக்கப் பட்டால், அது வெறும் RAWவுடன் நின்றுவிடாது, பிரதம மந்திரி வீடு வரை நீளும்; விபரீத விளைவுகளை பின்னர் ஏற்படுத்தக் கூடும் ; தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு RAWவுக்கு இருந்தது.
************
பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி குண்டு துளைக்க முடியாத மோட்டார் வாகனத்தில் தான் எந்தப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசனை தந்தனர். இந்திரா காந்தி இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே குண்டு துளைக்க முடியாத வாகனமாக மாற்றி விட விரும்பினார். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அப்போது இல்லை (1985ல் தான் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானது).

எனவே, ஒரு ஜெர்மன் நிறுவனத்திடம் அச்சமயத்தில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி என்பவர். இவர் சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர். இதற்கு வெகுமதியாக, வால்டர் வின்சிக்கு சிறிய கமிஷன் கிடைத்திருக்கலாமென RAW வுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை விட கவனிக்கவேண்டிய விஷயம் - பிரதமரின் பாதுகாப்பு என்ற அதி-ரகசியமான முக்கிய விஷயம் சோனியாவின் உறவினர் மூலமாகக் கொடுக்கப் பட்டது என்பது.

1984ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக அதிரடித் தாக்குதல் படை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. 1986ல், சோனியாவின் பரிந்துரைக்குப் பின்னர், இதே வால்டர் வின்சி மூலமாகத்தான், இத்தாலிய பாதுகாப்பு அமைப்பினால் SPGக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க அளிக்கப்பட்டது. இதற்காக வால்டர் வின்சிக்கு ரொக்கமாக, ஆம், ரொக்கப் பணமாக, கணிசமான தரகுக் கூலியும் (கமிஷன்) கட்டாயமாகக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அப்படியே கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது!

இந்தப் பயிற்சி படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம்.

இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயிற்சியாளர் இந்தியப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் பளாரென அறைந்தார். இத்தாலியர்கள் இதே போல பல தடவை SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது. இதன் விளவாக SPG commandos படைக்கு ராஜீவ் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியும், மனக் கசப்பும் ஏற்பட்டு விடும் எனவும், இது ராஜீவின் பாதுபாப்புக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கப் பட்டது; ராஜீவும் உஷாராகி வால்டர் வின்சி ஏற்பாடு செய்த பயிற்சி முகாமுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த திடீர் முடிவின் விளைவு, படைகளுக்கு குறிப்பிட்ட பயிற்சியும் கிடைக்காமல், கணிசமான ரொக்கப் பணமும் பறிபோனது. இதெல்லாம் சோனியா-இத்தாலிய கைங்கரியம்!
*********************

1985ல் ராஜீவ் சோனியாவுடன் பாரிஸ் நகருக்கு பயணம் சென்ற போது, பாதுகாப்புக் கருதி வழக்கமான SPG அதிகாரிகளோடு கூட, பிரெஞ்சு மொழி அறிந்த RAW அதிகாரி ஒருவரும் (பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் உரையாடுவதில் உதவ) கூட பிரான்ஸுக்கு அனுப்பப் பட்டார். பிரான்ஸில் உள்ள லியோன் (Leon) நகரில், திடீரென்று ராகுலும், பிரியாங்காவும் காணாமல் போய் விட்டனர். இதை அறிந்த SPG அதிகாரிகள் மிகவும் கலவரமடைந்தனர். ஆனால், “கலவரமடையத் தேவையில்லை; ராகுலும், பிரியாங்காவும் சோனியாவின் மற்றொரு சகோதரி, நாடியாவின் கணவன், ஜோஸ் வால்டிமாரோவுடன் (Jose Valdemaro) பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று வால்டர் வின்சி தெரிவித்தார்.

மேலும், ராகுலும், பிரியாங்காவும் வால்டிமாரோவுடன் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு ரயில் மூலமாக சென்று விட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ஸ்பெயின் அதிகாரிகள் முன்னரே ஏற்பாடு செய்து விட்டதாகவும் வின்சி கூறினார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாமல் இவர்கள் இப்படி பயணம் செய்தது இத்தாலிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்த வசதி என அறிந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறி கலங்கிப் போனார்கள்.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சோனியா இப்படி செய்ததாக எவரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். இதன் மூல காரணம் சோனியாவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் கொஞ்சமும் நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை என்பது தான்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?

வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டால் இது தெளிவாகப் புரியும்.
1986ல் ஒருநாள் ஜெனிவா நகரத்தில் இருந்த RAW அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது - “இத்தாலியில் இருந்து வந்த பிரபலஸ்தர்களான வி.ஐ.பி குழந்தைகள் பத்திரமாக ஜெனிவாவிலிருந்து மறுபடி இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்து விட்டனர்”. செய்தி அளித்தவர் ஜாக் குன்ஸி, ஜெனிவா நகரக் காவல் ஆணையர்.

யார் இந்த வி.ஐ.பி குழந்தைகள், எங்கு போகிறார்கள் எதுவுமே இந்திய அதிகாரிகளுக்குப் புலப்பட வில்லை. இந்திய வி.ஐ.பி குழந்தைகளின் பயணத்தைப்பற்றியும் RAW அதிகாரி களுக்கு ஒன்றுமே தெரியாது.
அதோடு விடவில்லை காவல் ஆணையர் ஜாக் குன்ஸி.

இந்திய RAW அதிகாரியைப் பார்த்து, படு நக்கலாகக் கேட்டாராம் - “ உங்கள் பிரதமரின் மனைவிக்கு உங்கள் மீதோ அல்லது இந்திய தூதரகத்தின் மீதோ சற்றும் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இத்தாலியர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார் போலிருக்கிறது”.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி தகவல்கள் காட்டுத் தீ போன்று உலகளவில் உள்ள உளவு வலைப் பின்னல்கள் அனைத்திலும் உடனுக்குடன் பரவி விடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்திய தூதரகங்கள், இந்திய பாதுகாப்புப் படையினர் ஆகியவை மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை என்கிற விஷயம், உலக அரசியல்-உளவு வட்டங்களில் இன்று சகலரும் அறிந்த தகவல்.

இதற்கு மேலும் இவ்விஷயத்தைப் பற்றித் தெரிய வெண்டுமா? மேலும் படியுங்கள்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, SPG பாதுகாப்பு ஏற்பாடுகளுப்புப் பொறுப்பேற்றிருந்த RAW அதிகாரிக்கு, இவர்கள் பயண விவரங்கள் ஒன்றுமே தெரிவிக்கப் படவில்லை.

ஆனால், மேலை நாட்டு உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய அதிகாரிகளுக்குத் தெரியுமுன்பாகவே எல்லாமே தெரிந்திருந்தது. இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதோ கொஞசம் தான் தெரியும்; பல சமயங்களில் அதுவும் வேற்று நாட்டு உளவு அமைப்புகள் மூலமாகத் தான் தெரியவரும். இதனால் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எவ்வளவு பாதகம், அவமதிப்பு, மதிப்புக் குறைவு, தலை குனிவு ஏற்பட்டது என இந்த இத்தாலிய பெண்மணி சோனியாவுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா?

சோனியாவின் பிரத்யேக காரியதரிசி ஜார்ஜ், டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் மூலமாக, ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அலுவலகத்துடனும், மேலை நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் நேரடியாகவே வழக்கமாகத் தொடர்பு கொள்வாராம்.

மேற்குறிப்பிட்ட நேர்மையான RAW அதிகாரி, தன் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் மேற்கூறிய விஷயங்களை தலைமை அதிகாரியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முறையீடு அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் (அதாவது சோனியா) மிக முக்கியமான பாதுகாப்பு விஷயஙகளைக் கூட இந்திய அமைப்புகளை நம்பாமல் அல்லது கலந்து கொள்ளாமல், நேராக இத்தாலிய தூதரகத்தின் மூலமாக செயல்படுத்துவது பற்றி அறிந்து ராவ் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், இதில் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.

எனவே, 1980களிலேயே, சோனியா இத்தாலிய உளவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்; பற்பல அபாயங்களும், திகில்களும் நிரம்பிய உளவு அமைப்புகளின் வேலைகளில் பின்னல்களை உருவாக்கும் அளவு செயல் திறன் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

ஆனால், வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் போதே மிக முக்கியத்துவமான இந்திய பாதுகாப்பு விஷயங்களில் சோனியா தன் இத்தாலியக் குடும்பத்தை ஈடுபடுத்தி உள்ளார்; ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும் போதே, இத்தாலியப் பாதுகாப்பை இந்தியாவின் மீது சோனியா திணித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைப்புகள் மீது தன் அவ நம்பிக்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட அளவில் தன் பாதுகாப்புக்காக இத்தாலிய அமைப்புகளுடன் உடன்படிக்கையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். இத்தகைய செயல்களை இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிருடன் இருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த பதவியிலும் இல்லாத போதே சோனியா செய்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவர் கையில் உண்மையிலேயே அதிகாரபூர்வமாக அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்? அல்லது என்ன தான் செய்ய மாட்டார்?

இருப்பினும், இன்று இந்தியாவுக்காக தன் உயிரையும் தரத் தயார் என்று சோனியா பாசாங்கு செய்கிறார். இப்போது நாம் காணும் சோனியா, அசல் சோனியாவே அல்ல. இந்திய நாட்டுடன் அவ்வளவாகத் தோழமை கொள்ளாத மேலை நாடுகளுக்கும் கூட இவரைப் பற்றி சரியாகத் தெரியும். நாம், அதாவது, இந்திய மக்கள் தான் இன்னமும் இவரை இனம் கண்டு கொள்ளவில்லை.

- தி ஹிந்து

சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்

மூலம்: எஸ்.குருமூர்த்தி (ஏப்ரல் 17, 2004 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”.

புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை.

உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள்.

சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக,குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர்.

இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? சற்றுப் பொறுங்கள்.

இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப்பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG - Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனாக நடந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி உங்களுக்கு திகைப்பூட்டுகிறதா?

1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியாங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரிடையாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா.

உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?

இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார்.

சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை!
இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்).

அவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.

= வை.ரவீந்திரன் 

Tuesday 6 April 2010

தமிழன் என்று ஒரு இனம் உண்டு

தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவர்தம் மொழியாம் .....
இந்த பாடலை கேட்டதும துவண்டு கிடக்கும் தமிழனின் தோள்கள் தினவு எடுக்கும். தற்போது, இந்த வரிகள் எல்லாம் தமிழன் என்ற இனத்துக்கு பொருத்தமானவை தானா?
இது சற்றே ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்.
தமிழனின் பூர்வீக பூமியில் இருந்து (அதாங்க .... நம்ம சிங்கார தமிழ்நாட்டை விட்டு) சற்று வெளியே இருந்து பார்த்தால் தான் தமிழனின் குணங்களை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
ஏன் என்றால், தமிழ் நாடு முழுவதும்இப்போது வாழ்த்து கோஷமும் பாராட்டு விழாக்களும் சேர்ந்து கண்ணையும்கருத்தையும் குருடாக்கி விட்டன. அவ்வப்போது நடக்கும் போர்க்கள காட்சிகள் மற்றும் கொலை களங்கள் அனைத்தும் வருங்கால முதல்வர் விஜய் படத்தை நினைவூட்டுகின்றன. அதனால், தமிழ் நாட்டை தெளிவாக பார்க்க வேண்டுமானால் வெளியே இருந்து தான் உற்று நோக்க வேண்டும்.
சரி விசயத்துக்கு வருவோம்.
இந்தியாவிலே அதிக அளவில் தியட்டர்கள் உள்ள மாநிலம் தமிழ் நாடு தான். பல நகரங்களில் தியட்டர்களை இடித்து வணிக வளாகங்கள் கட்டிய போதிலும் தமிழ்நாட்டுக்கே முதலிடம். தமிழனின் சினிமா, தொலைக்காட்சி ஆர்வம் காரணமாக டிஸ்கவரிசேனல் கூட தமிழ் பேசுகிறது.
கள்ளுண்ணாமை என தனி அதிகாரம் படைத்த தெய்வ புலவர் வள்ளுவர் தோன்றிய தமிழ்நாட்டில் தான் அதிக அளவு சாராயக் கடைகள் உள்ளன. அதுவும் முத்தமிழ் அறிஞர் என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் மூ... அறிஞர் ஆட்சியில்.
உங்களுக்கு தெரியுமா? ராட்சசனை போலவும் காந்தியை கொன்ற கோட்சே போலவும் உருவக படுத்தப்படும் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மது வாசனைகிடையாது. மது வருமானம் இல்லாமலேயே தொழில் துறையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கள்ளுன்னாமையை வலியுறுத்திய தமிழனின் பூமியில் காவிரியும் முல்லை பெரியாரும் ஓடுகிறதோ இல்லையோ, வீதி தோறும் சாராய ஆறு தாரளமாக ஓடுகிறது.
மது மயக்கத்தில் மதி மயங்கி கிடக்கிறான், மானமிகு தமிழன்.
புலால் மறுத்த வள்ளுவரின் பூமியில், இந்தியாவிலேயே அதிக கசப்பு கடைகள் உள்ளன. தமிழுக்கும் தமிழனுக்கும் தனது உயிரை கொடுப்பதாக கூறும் அனைத்து தமிழர்களும் தமிழனின் தொடையில் 'திரி' திரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திரை கடல் ஓடி திரவியம் தேடிய தமிழன், கடல் கடந்து நாடுகளை வென்ற தமிழன், இப்போது கூனிக் குறுகி நிற்கிறான், இலவசத்துக்காக.
அரிசி, வேட்டி, சேலை, டி.வி. வாக்களிக்க பணம் என தன்மானத்தை இலவசங்களுக்கு அடகு வைத்து விட்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். தமிழனின் சிறப்பு குணங்கள் 'தவறி'விட்டன.
போர்க்குணம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, வேற்று நாகரிங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல், தொலை நோக்கு சிந்தனை இல்லாமை, தனி நபர் துதி பாடி சுய சிந்தனை இல்லாமை இப்படி ஏராளமான '(ஆ)மை' ஓட்டுக்குள் முடங்கி கிடக்கிறான்.
தெலுங்கானாவுக்கு ஐந்து லட்சம் தெலுங்கு மாணவர்கள் திரண்டனர். ரத்த சொந்தமான ஈழத் தமிழனை காக்க ஐந்து ஆயிரம் பேர் கூட திரளாமல் போர் குணத்தை இழந்து நிற்கின்றான், மானமிகு மறத் தமிழன்.
காகித புலியாகவே இருக்கும் தமிழன், வரிப் புலியாவது எப்போது? ரசிகர் மன்றங்களை கட்டிக் காக்கும் தமிழன் மத்தியல் சிந்தனை மன்றங்களும் தமிழ் ஆய்வு மன்றங்களும் பெருகாதது ஏன்?
கேள்விகள் எழுந்தால் மட்டுமே தமிழன் வாழ்வில் மாற்றம் வரும்.சிந்தித்தால் மட்டுமே தமிழனுக்கும் தமிழுக்கும் விடியல் நிகழும். வருங்கால தமிழ் தலைமுறைக்காக இப்போதே சிந்திப்போம்.
சிந்தனை திறன் ஓய்வு எடுத்தால், அதில் பாசி படர்ந்து உதவாமல் போகும்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாவர் -இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே .....' 

= வை.ரவீந்திரன் 

கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?

என்வழி என்ற இணைய தளத்தில் வந்துள்ள செய்தி
கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?
-------------------------------------------------
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு திடீரென அணை கட்ட முடிவெடுத்து வேக வேகமாக வேலைகளைத் துவங்கியுள்ளது. வழக்கம் போல தமிழக அரசு மவுனம் சாதிக்க, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த விவகாரத்தை கையிலெடுத்து சில தினங்களாகப் பிரச்சாரம், போராட்டம் என நடத்தி வருகிறார்.
பாம்பாறு என்பது கேரளப் பகுதிக்குள் ஓடும் ஆறு. ஆனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பாயும் அமராவதிக்கு மறையூர் பகுதியில் ஓடும் பாம்பாறுதான் நீர்ப்பிடிப்புப் பகுதி. இங்கிருந்துதான் 80 சதவிகித தண்ணீர் வருகிறது.
அமராவதி அணையை நம்பி பல்லாயிரம் ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில். குடிநீருக்கும் அமராவதியை நம்பித்தான் உள்ளனர் இப்பகுதிவாசிகள்.
இப்போது பாம்பாற்றின் குறுக்கே, தமிழக எல்லையிலிருந்து 1 கிமீ தொலைவு மட்டுமே உள்ள கேரள எல்லைப் பகுதியில் ஒரு பெரிய அணை மற்றும் தூவானம் அருவி அருகே நாச்சிமுத்து ஓடை பகுதியில் நீர்மின்சக்தி நிலையத்தை அமைக்கிறது கேரளா.
புது சட்டசபை புகுவிழா பிஸியிலும், புகுந்த பிறகு சாமான்களை அடுக்கி ஒதுக்கி வைக்கும் குடும்பஸ்தனின் பரபரப்பிலும்' காணப்படும் முதல்வரோ அட, 'புள்ளிவிவரப் புலி' பொதுப்பணித் துறை அமைச்சரோ குறைந்தபட்சம் இதைப் பற்றி ஏதும் பேசியதாகத் தெரியவில்லை.
எதிர்க் கட்சிகள், குறிப்பாக வைகோ மட்டுமே தனி ஆளாக இந்த பிரச்சினையை கையிலெடுத்துப் போராடி வருகிறார். டுமலைப் பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட அமராவதி அணைப்பகுதி மக்களிடையே இந்தப் பிரச்சினை குறித்து விளக்கமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தங்கள் கட்சியால் செய்ய முடிந்ததை அவர் செய்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் மதுரை யானை மலைக்கு, சிற்ப நகரம் என்ற பெயரில் நடக்கவிருந்த மிகப் பெரிய மோசடியைத் தடுத்ததில் வைகோவின் பங்கு பெரியது என்பதை மறந்துவிடக் கூடாது.
உடுமலைப் பேட்டைக்கு வந்த வைகோ, கேரள அரசு அணை கட்ட ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் எல்லைப் பகுதியைப் பார்க்கச் சென்றபோது தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தாம் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யப் போகவில்லை என்றும், அந்த இடத்தை தமிழக எல்லையிலிருந்தபடி பார்த்துவிட்டு வருவதாகவும் உறுதி கூறியும் திருப்பூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மீறிப் போக முயன்றதால் அவரும் , உடன் வந்த ம.தி.மு.க.வினர் 250-க்கும் மேற்பட்டோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவரும் தொண்டர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றாலும், நமக்குள் எழும் கேள்வி இதுதான்:
எல்லைப்புறங்களில் உள்ள எல்லா ஆறுகளையும் கிட்டத்தட்ட தடுத்து நிறுத்திக் கொண்டார்கள் அண்டை மாநிலத்தவர்கள். காவிரி, முல்லைப் பெரியாறு எல்லாம் கோர்ட்டு வாசலில் முடக்கப்பட்டுவிட்டன.
வட மாவட்டங்களில் மழைக் காலத்தில் கூட ஆறுகளில் தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை வந்துவிட்டது. அந்த ஆற்றுப் பகுதிகளை முழுமையாக வயல்களாக்கிவிட்டனர். சிலர் அந்த வயல்களையும் பிளாட் போட்டு விற்று வருகிறார்கள்.
இந்த மாதிரி 'பா(லா)ழாறு'களை உருவாக்கத்தான் இத்தனை தீவிரம் காட்டுகிறார்களா ஆட்சியிலிருப்பவர்கள்? கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே சர்வதேச எல்லைக் கோடா போட்டு வைத்திருக்கிறார்கள்? ஒரு இந்தியப் பிரஜையாக, இந்திய எல்லைக்குள் தடை செய்யப்படாத ஒரு பகுதியைப் போய் பார்வையிட ஒருவருக்கு அனுமதி மறுப்பதேன்?
அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைக் கூட விட்டுவிடுங்கள்.

இதே தடையை ஒரு மலையாளிக்கு கேரளா போட்டிருக்கிறதா?
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசியல்வாதிகள், அதிகாரிகள் அத்துமீறல்கள் எவ்வளவு நடக்கின்றன. கேரளாவிலிருந்து மலையாளிகள் சுதந்திரமாக தமிழகத்துக்குள் வருகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் பிரபலமான ஒரு அரசியல் தலைவர் கேரள எல்லைப் பகுதியைப பார்க்கச் செல்லக் கூடாதா… அதுவும் மக்கள் பிரச்சினைக்காக?
சில மாதங்களுக்கு முன் ஒகேனக்கல் தமிழக எல்லைப் பகுதியில் பரிசலை எடுத்துக் கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா வந்து பார்த்து விட்டுப் போய் ஏக பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார். அன்று தமிழக போலீசார் சும்மா வேடிக்கைதானே பார்த்தார்கள்…
இன்று வைகோவைத் தடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
முக்கியமான விஷயம்…
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட, கேரளா அரசு, காவிரி ஆணையம், மத்திய சுற்று சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின் வாரியம் ஆகியவற்றின் அனுமதி பெற்றாக வேண்டும். முக்கியமாக, பாம்பாற்றின் மூலம் பாசன வசதி பெறும் தமிழகத்தின் அனுமதியும் பெற வேண்டும்.
இப்போது அணை கட்ட அவர்கள் காட்டும் வேகத்தைப் பார்த்தால் தமிழகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது போலல்லவா தெரிகிறது…எங்கே இவையெல்லாம் வெளிவந்துவிடுமோ என்ற கடுப்பைத்தான் வைகோ மீது காட்டுகிறதா தமிழக அரசு

= வை.ரவீந்திரன் 

Sunday 4 April 2010

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை

செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.

பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.

ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமா பான்மையினைப் போன்று லகோர் பின்பற்றும் தன்மையாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றினாலும் அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்:

'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன.

அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது.

இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

= வை.ரவீந்திரன்