Monday 19 April 2021

கடல்புறா... சுக அனுபவம்...

 சின்ன வயசில வாசிப்பு பழக்கம் ஆரம்பிச்சப்போ நிறைய தினசரி, வாரப்பத்திரிகைகளை படிப்பேன். அதுக்கப்புறம் ஆலங்குளம் லைப்ரரிக்கு போக ஆரம்பிச்சப்ப எனக்கு அறிமுகமானது அவரது எழுத்துகள். 

வரலாற்று நாவல்னாலே அவர்தான். அவர் மட்டும்தான். எனக்கு வேகமாக நகரும் கதையை விட காட்சிகளை நின்று நிதானமாக ரசித்து சொல்பவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் சாண்டில்யனின் நாவல்களும். என்னோட முதல் சாய்ஸ் அவர்தான்.

சாண்டில்யனுக்கு அப்புறமா, சின்ன காட்சிய கூட பல பக்கம்... பத்தி பத்தியா... சுவாரஸ்யமா எழுதுறவர், எஸ்.ரா. இது என்னோட எண்ணம். சாண்டில்யன் வரலாறுக்குன்னா இவர் சம கால சமூகத்துக்கு...

சின்ன வயசில லைப்ரரி மெம்பராகி கடல்புறா, ஜலதீபம், யவன ராணி, ராஜமுத்திரை மாதிரி நாவல்களையெல்லாம் ஒவ்வொரு பாகமா தேடித்தேடி சொல்லிவச்சி வாங்கிப் படிச்சிருக்கிறேன். அப்புறமா சென்னை பாண்டிச்சேரின்னு லைப்ரரிங்கள்ல மெம்பரானாலும் சாண்டில்யன் மட்டும் மிஸ்ஸாயிட்டே இருந்தாரு. சில நேரம் ரொம்ப பழைய புக்கா படிக்க உதவாதுன்னு சொல்லி ஓரங்கட்டி வச்சிருப்பாங்க...

ஒவ்வொரு முறை புத்தக கண்காட்சி போகும்போதும் சாண்டில்யன் புத்தகங்கள வாங்கனுமின்னு நினைச்சிப் போனா, வேற புத்தகங்கள வாங்கிட்டு இத வாங்க முடியாம போகும். டைம் இருக்காது.. இல்ல பணம் இருக்காது...



இந்த தடவை அப்பிடி இல்ல. இன்றைக்கு (பிப். 28) தி.நகர் பர்ச்சேஸ் முடிஞ்சி நேரா புத்தக கண்காட்சிக்குப் போய் மொதல்ல வாங்கினது, கடல்புறா புத்தகம்தான். ரொம்ப வருஷத்துக்கப்புறம் ஸோ ஹேப்பி..

.

.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம், (ஏப்.18) கடல் புறாவில் பயணம். உண்ணும்போதும் உறங்கும்போதும் அதில் கடல்வலம். காதல், வீரம், சோகம், அரசியல் சூழ்ச்சி, போர் வியூகம். இப்படியாக கடல்புறா தளத்தில் இளைய பல்லவன், அமீர், கண்டியத்தேவன், சேத்தனோடு கூடவே நானும்.

சிறு வயதில் இருந்தே பரிச்சயமான கடல்புறாவில் என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றவர், சாண்டில்யன். கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் காலத்துக்கு பின், மீண்டும் கீழ் திசை நாடுகளை கையகப்படுத்திய அநபாயன் எனும் குலோத்துங்க சோழன்காலத்து கதை.

தமிழகத்தின் புகாரில் புறப்பட்டு இன்றைய ஒரிசாவான அன்றைய கலிங்கத்தின் பாலூர் துறைமுகம் துவங்கி, ஸ்ரீவிஜயம், சுவர்ண தீவு, சாகர தீவு என கரம் பிடித்து கடல் வழியே அழைத்துச் சென்ற கடல் புறாவை பிரிய மனமில்லை. கதைக்களம் சரியாக இரண்டு ஆண்டுகள். ஒரு சித்திரா பவுர்ணமியில் துவங்கி, இரண்டாவது சித்ரா பவுர்ணமியில் நிறைவடைகிறது. நாவலை படித்து முடித்த இந்த தருணமும் கூட சித்திரா பவுர்ணமியின் நெருக்கம்தான்.


கடாரத்தின் கட்டழகி காஞ்சனா தேவி, சீனத்தின் கலப்பின மஞ்சளழகி என ஒரு புறம் மயக்க வைக்கின்றனர். சீனத்து கொள்ளைக்காரனும் பிற்கால சீன அரசனுமான அகூதா, அரேபியாவின் பிரம்மாண்ட அமீர், அவர்களிடம் கடல்போர் பயிற்சி பெற்ற நாயகன் சோழர் படை தளபதி இளைய பல்லவன் என மறுபுறம் வியக்க வைக்கின்றனர். 

கருணாகரன் என்ற இளையபல்லவன் என்ற கடல்புறாவின் தலைவர் வரும் காட்சிகளைப் படிக்கும் போது எல்லாம் எம்ஜிஆரும் அவரது சண்டைக் காட்சிகளும் நினைவில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. கடல்புறா நாவலின் மூன்றாம் பாக இறுதியை நோக்கிச் சென்றபோது, ஜெயா டிவியில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏதேச்சையாக ஔிபரப்பானது.

அந்த படத்துக்கும் கடல் புறாவுக்கும் பல ஒற்றுமைகள். மாநக்காவர தீவு தலைவன் கங்கதேவன், நம்பியாராகவும்... அட்சயமுனை தலைவனும் மஞ்சளழகியின் வளர்ப்புத் தந்தையுமான பலவர்மன், கன்னித்தீவு தலைவனும் ஜெயலலிதாவின் வளர்ப்புத் தந்தையுமான எஸ்வி ராம்தாஸாகவும்... தெரிந்தது. இப்படிப்பல... அதை தனியாகவே எழுதலாம். சாண்டில்யனின் கடல்புறா பாதிப்பில்தான் ஆயிரத்தில் ஒருவனை பி.ஆர்.பந்துலு எடுத்திருப்பார் போலும்.


சரி... கிட்டத்தட்ட ஒரு மண்டலமாக கடல்புறாவில் உலா வந்து, பிரிய மனமின்றி புகார் கரையில் இறங்கியாகி விட்டது. 

மறுபடியும் ஒரு கடல் பயணம் செல்லலாமா? என்ற யோசனை எழுந்த போது, சிவகாமியின் கொலுசு சத்தம் காதுகளில் கீதம் இசைக்கிறது. கூடவே மாறுவேட புலியான மகேந்திர வர்மரும் நரசிம்ம வர்மரும் அழைக்கிறார்கள், வாதாபியை நோக்கி... சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக...

#நெல்லை_ரவீந்திரன்