Thursday 7 November 2019

கமல் '65... கலை.'60....

திரைத்துறையில் 60 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறையினரை சரியாக புரிந்து வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஏவி மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்.



'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

திரையுலக பிரபலத்தின் மூலம், அடுத்தகட்ட உயர்வை எதிர்பார்த்து கிடக்கும் நடிகர்கள் மத்தியில், தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 

பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது.

16 வயதினிலே, அவள் அப்படித்தான், ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள், குணா, மூன்றாம் பிறை, பேசும்படம், ஆளவந்தான், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

கமலின் 60 ஆண்டு கலைப்பயணத்தை 60 ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். கமலின் குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல். 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

எந்த துறையில் இருப்பவர்களுக்கும், அவரவர் துறையில் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா, வசூல் ராஜா என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. 

16 வயதினிலே, மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி,  என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்

ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விருமாணாடி, விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, இந்தியன் தாத்தா, அவ்வை சண்முகி மாமி, தசாவதாரம் பாட்டி என தன்னை முற்றிலும் மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 

மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 

கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி. அம்பிகா, ராதா, ரேகா. சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் தொடரும் முன்னணி நாயகன். 



இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு கடந்து சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னை அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம். 

அட... கமலின் தாயார் ராஜலட்சுமி, அவரை எப்போதுமே உண்மை பெயரான பார்த்தசாரதி என்றே கூப்பிடுவாராம்... தெரியுமா...?

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 29 October 2019

சுஜித்... ஒரு பாடம்...

வழக்கம் போலவே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஃபா்வர்டு மெஸேஜ் குவிகின்றன. விசேஷ தினங்களில் வாழ்த்து செய்திகள் போலவே, இப்போதும் துக்கம், கண்ணீர் என... எவ்வளவு அழுது புண்டாலும், குழந்தை சுஜித் திரும்பப் போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் இதை படிப்பினையாக எடுப்பார்கள். இது மில்லியன் டாலர் கேள்வி. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே சமாளிப்பது கடினம். அதுவும் தவழும் பருவத்தில் இருந்து நடக்கும் பருவம் என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையை சமாளிக்க பத்து பேராவது தேவை. அதாவது, பத்து இருபது கண்கள் அவசியம்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுவரில் மாட்டும் எல்ஈடி கிடையாது. அப்போது, வீடுகளில் ஸ்டாண்டில் இருக்கும் டிவியை இழுத்து தலையில் விழுந்து பலியான சோகங்கள் நடந்ததுண்டு. இப்போதும் பெரிய சைஸ் தண்ணீ்ர் பாததிரத்துக்குள் குழந்தை விழும் பரிதாபங்களும் நீடிக்கிறது.

சுஜித் வீடு இருப்பது பல ஏக்கர் விளை நிலத்துக்கு மத்தியில். அதில் சோளப்பயிர் வேறு. அவர்கள் வீட்டு ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டதோடு, அதன் அருகே நான்கு மற்றும் இரண்டு வயது குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தது அஜாக்கிரதை அல்லாமல் வேறு என்ன? அரை கிலோ மீட்டர் இடைவெளியில் தான் மற்ற வீடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

விடுமுறை காலங்களில் ஏரி, கல் குட்டைகளில் மூழ்கி பலியாவது சமீபத்திய பேனர் பலி வரை அஜாக்கிரதையோடு தனி மனித ஒழுக்கமும் குறைந்து வருவதே கூடுதல் காரணம். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானதும் குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் முதல் பிறந்த நாள் தொடங்கி காது குத்து,  பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பணி நிறைவு, 16ம் நாள் காரியம், நினைவு நாள் என அக்கம்பக்கத்தினர் பற்றிய சுய நினைவின்றி பேனர் வைத்திருப்பார்கள். எங்கள் தெரு முனையில் மாதந்தோறும் பத்து பதினைந்து பேனர்களாவது முளைத்து விடும், திருப்பத்தில் வரும் வாகனங்களை மறைத்தபடி... இதில் எதுவும் அரசியல் பேனர்கள் கிடையாது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தினசரி செய்தியான நிலையில், சாலையில் எத்தனை பேர் முறையான ஆவணங்கள், லைசன்சுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சின்ன சின்ன பசங்க கைகளில் இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது எதனால்..? அங்கும் தனி மனித ஒழுக்கம் மிஸ்ஸிங். 

அந்த சிறுவர், சிறுமிகள் எஸ்கேப்ஆகி போனாலும் அவர்களின் தாறுமாறு டிரைவிங்கால் எத்தனை விபத்துகள் தெரியுமா? ஒருவேளை அவர்களுக்கே ஏதாவது நேரிட்டால்...? எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் மூலம், வருங்கால தலைமுறைக்கும் தனி மனித ஒழுக்கத்தை மறக்கடித்து விட்டோம்.

அத்தி வரதர் என்றதும் ஒரு சிறிய நகருக்கு பெருங் கூட்டமாக கிளம்பி சென்று நெரிசலில் சிக்கி சாவது. மாமல்லபுரத்தை சுத்தமாக்கி வைத்திருந்தால் ஒரே நாளில் படையெடுத்துச் சென்று அந்த ஏரியாவையே ஒட்டு மொத்த குப்பையாக்கி வருவது. சுஜித் மீட்பு பணி என்றதும் வல்லுநர் குழு போல கிளம்பி வருவது. அவன் மறைந்ததும் நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி வருந்துவது.

உணர்வில் ஓவர் பொங்கலாகவும் சுய அறிவை கழற்றி வைத்து விட்டு, யாரோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டம் போடும் தோல் பொம்மையாகவும்  இருக்கும் மக்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தவிர...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 23 October 2019

ஊங்கூரு அம்மங் கொட

 புரட்டாசிய பெருமாளுக்கு குடுத்திட்டதால, ஆடி தான், சென்னையில அம்மன் மாசம். ஆனா, திருநவேலி பக்கம்லாம் புரட்டாசி, ஐப்பசி மாசந்தான் அம்மன் கோயிலுங்க எல்லாம் களை கட்டும். மூணு நாள் கொடை விழாவில ரெண்டு செட்டு மேளம், ரெண்டு ஜோடி கரகம், வில்லு கச்சேரி, கணியான் கூத்துன்னு செம போர்சா நடக்கும். திங்கள் கெழம ஆரம்பிச்சி, புதன்கெழம சாயந்திரம் கெடா வெட்டோட கொடை முடியும்.

கொஞ்சம் வசதியா இருக்க கோயிலா இருந்தா, ஞாயிற்று கெழம நைட்ல பெரிய தெர கட்டி சினிமா போடுவாங்க. திருநவேலி ஐங்சன்ல போய், படத்துக்கு புக் பண்ணிட்டு வருவாங்க. மொதல்ல கருப்பு வெள்ள படம். நைட் 10 மணிக்கு மேல த்ரீ பேஸ் கரண்டு வந்த பெறவு கலர் படம். பெரும்பாலும் எம்ஜிஆர் சிவாஜி படந்தான். பட்டிக்காடா பட்டணமா, மாட்டுக்கார வேலன் மாதிரி படங்கல்லாம் மண்ண குவிச்சி வச்சி பாத்திருக்கோம். இளவட்டங்க சங்கம் இருக்கிற ஊருல, கூட ஒரு புதுப்படமும் ஓடும். அப்பிடித்தான் நல்லவனுக்கு நல்லவன் படம் முடிஞ்சப்ப, திங்க கெழம விடிஞ்சிட்டு.

கால் நூற்றாண்டு ஓடுனதே தெரியல. எவ்ளோ மாற்றம். நான் மட்டும் என்ன அப்பிடியேவா இருக்கேன். ஒவ்வொரு ஊரும் பத்து வருஷத்துக்கு ஒருக்கா, பாம்பு சட்டய உரிச்ச மாதிரி, புதுசா மாறும்னு சொல்லுவாங்க. அத அனுபவிச்சி பாத்திருக்கேன். அப்பிடித்தான், எங்க ஊரு அம்மன் கொடயும். சுமாரா 10 வருஷத்துக்கு அப்புறமா, இந்த வருஷம் எப்பிடியாவது போயே தீரணும்னு முடிவு பண்ணி, போயிட்டு வந்தேன்

ஏழு நாள் கொடையா மாறிப் போயிருக்கு, எங்கூரு அம்மன் கொட. டிவியிலயே சகட்டு மேனிக்கு படம் போடுறதால சினிமாப்படம் பிடிச்சிருந்த இடத்த... நகைச்சுவை பட்டிமன்றம் ஒரு நாள், பாட்டுக் கச்சேரி ஒரு நாள், விளக்கு பூஜை ஒரு நாள்னு வரிசையா பிடிச்சிருந்திச்சி. அப்புறமா கோயில்ல வழக்கமா நடக்கிற பூஜை, பொங்கல், கெடா வெட்டுதான். ஆனா... நெறையவே மாற்றம்... 

ரெண்டு செட்டு மேளத்தில ஒண்ணு கட்... செண்ட மேளம் புதுசா சேந்திருக்கு... மூணு நாள் பாடுன கணியான் கூத்து... ஒரு நாள் நைட்  மட்டும்னு மாறியாச்சி. அங்கேயும் அஞ்சாறு பாட்டிங்க மட்டும் கத கேக்க இல்லைன்னா கணியான் கூத்து ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் தான். அப்புறம் நையாண்டி மேளம்,  கரகாட்டம்... அங்கன பாத்தா வழக்கம்போல நல்ல கூட்டம்... அம்மன் சன்னதிலயே நடந்ததால வில்லு பாட்டு பக்கம் கூட்டம் பரவால்ல.

செவ்வாய் கிழமை சாயந்தரம் சாமி ஊர் விளையாடி வரும்போது, நையாண்டி மேளம், செண்ட மேளம்னு வழக்கமான உற்சாகம் கொறையல. அந்த நேரத்தில, தெருவில குறுக்கால குறுக்கால ரெண்டு பக்க வீட்டை இணைக்கிறா மாதிரி  வேப்பிலை தோரணம் கட்டிட்டே போவாங்க. இப்ப அது முன்ன மாதிரி அதிகமா இல்ல. ஒவ்வொரு தெருவிலயும் பேருக்கு ஒண்ணு ரெண்டு தான். அத கட்டுறதுக்கு களம் இறங்குற ஆளுங்க இல்லயா... மாடி வீடுங்களா மாறினதாலயான்னு பட்டி மன்றம் வைக்கலாம் போல...

செவ்வா நைட்ல திரும்பவும் அடுத்த ரவுண்டு சாமி ஊர் சுத்தினப்ப... செண்ட மேளம், நையாண்டி மேளத்தோட ஆயிரங்கண் பானை, மொளப்பாரி ஊர்வலம்னு ஊரே களை கட்டிச்சி... நள்ளிரவுக்கு பிறவு, சப்பரத்தில வீதி, வீதியா முத்தாரம்மன் உலா வந்தது, எனக்கு புதுசு. எங்க வீட்டு முன்னால அதிகாலை 4 மணிக்கு சாமி வந்தப்ப... பரவசம்... மகிழ்ச்சி...

புதன்கிழமை மஞ்சப்பான பொங்கல்... கெடா வெட்டு... மொளப்பாரிய சுத்தி வந்து கும்மிப்பாட்டுன்னு கொடை நிறைவா முடிஞ்சிச்சி.




முத்தாரம்மனுக்கும் அசுரனுக்கும் நடக்கிற சண்டையில, கடைசியா சரணடையிற அசுரன், தனக்கு பலி கொடுக்கணுமின்னு வேண்டுவானாம். இது வில்லுப்பாட்டு கதையில பாடினாங்க. கெடா வெட்டும்போது அதுதான் நினைவுக்கு வந்திச்சி. கடைசி நாளில அண்டா கணக்கில சோறு வடிச்சி, கறிக் கொழம்பு வச்சி படையல் போட்டு முத்தாரம்மனுக்கு படைச்சிருந்தாங்க. இந்த பெரும் படப்பு பத்தி தனியாவே எழுதலாம்... 

எழுதியிருக்கேன்... 

👇👇

http://thileeban81.blogspot.com/2015/11/blog-post.html?m=1

கொடை விழாவில முத்தாரம்மன் தொடங்கி, சந்தன மாரியம்மன், கருப்பசாமின்னு ஒவ்வொரு கூடத்திலயும் ஆடின சாமியாடிங்கள பார்த்தப்ப...  சின்ன சின்ன பசங்களா தெரிஞ்சாங்க... அவங்களோட பழைய உருவம் தெரிஞ்சிது.. அப்பல்லாம் தாத்தாக்கள் தான் சாமியாடுவாங்க... இப்ப ரெண்டு பெண் சாமியாடிங்களும் இருந்தாங்க.. இவங்க அடுத்த தலைமுறைன்னு தெளிவானப்பத்தான், நம்ம வயசும் அரை சதத்தை எட்டுதேங்கிறது லேசா ஒறைச்சிது.

நெல்லை ரவீந்திரன்

Sunday 11 August 2019

காற்றின் மொழி

பைக் வேகம் அதிக பட்சம் 40, 45 கிலோ மீட்டர். 30 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற ஆபீசுக்கு போற வழியில பாதியில ஒரு குட்டி பிரேக். இது மாதிரி சில கொள்கையோட ஒரு வாரமா மறுபடியும் பைக் ஓட்ட ஆரம்பிச்சாச்சி. அப்பிடித்தான்  மெரினா பீச் பக்கம் ஆல் இண்டியா ரேடியோ எதிரில இன்னிக்கு காலையில குட்டி பிரேக். 

அந்த டீக்கடையில நாலு பேர் மேல என் கவனம் போச்சிது. ஒரு அம்மா, அப்பா, ரெண்டு பசங்க. அவங்களுக்கு சுமாரா பதினைஞ்சி வயசுக்கு மேல இருக்கும். பசங்க ரெண்டு பேருமே வித்தியாசமா சைகை பண்ணிட்டிருந்ததை கவனிச்சப்பத்தான் புரிஞ்சிது. அவங்க, டெஃப் அண்ட் டம்ப் பசங்க. அந்த ரோட்டிலேயே பக்கத்தில இருக்கிற பள்ளியில படிக்கிறவங்க போலும்.

விடுமுறை நாள்ங்கிறதால பையன பாக்க அப்பா, அம்மா வந்திருக்காங்க. கூட இருந்தது பையனோட பிரண்ட்... காத்துல கை வெரல்கள வீசி.. உள்ளங் கைகள குவிச்சி... ரெண்டு கைகளையும் ஒரு மாதிரியா விரிச்சி... தன்னோட மூக்கு, காது, வாய்னு தொட்டுகிட்டு ... 60 கிலோ மீட்டர் வேகத்தில அவங்க பேசுறத பாத்தப்ப எனக்கு என்னல்லாமோ நெனப்பு. அந்த அப்பாவுக்கு அந்த பாஷை பரிச்சயம் இல்ல போல. அந்த அம்மா ஓரளவுக்கு பையன்கிட்ட அவனோட மொழியில பேசிட்டிருந்தாங்க. 

என் பாஷை உன் பாஷைன்னு அடிச்சிட்டிருக்கோமே. காத்துல கோடு கிழிச்சி படம் வரைஞ்சி அபிநயம் பிடிச்சி பேசுற இந்த சைகைமொழி எவ்வளவு உயர்ந்தது. இத கிமு 5ம் நூற்றாண்டில கண்டு பிடிச்சிருக்காங்க. உலகம் முழுசும் 137 வகையான சைகை மொழி இருக்காம். இது மட்டும் இல்லைன்னா எத்தனை பேர் வாழ்க்கை இருண்டு போயிருக்கும். இன்னமும் கூட, எத்தனைை பேர்  இந்த மொழிய அங்கீகரிச்சிருக்கோம். சினிமா, டிவிய எல்லாம் இவங்களால பார்த்து லேசில புரிஞ்சிக்க முடியுமா? இது மாதிரி நிறைய கேள்விங்க எனக்குள்ள...



முன்னெல்லாம் தூர்தர்சன்ல இவங்களுக்காகவே ஒரு நியூஸ் டைம் உண்டு. இப்ப உண்டான்னு தெரியல. தூர்தர்சன்ல சினிமா போடும்போது கூட, விண்டோ பாக்ஸ் வச்சி அந்த பாஷை தெரிஞ்ச டீச்சர் ஒருத்தர் கைகளால வெளக்குவாருன்னு ஞாபகம். இப்ப உள்ள டிவிக்கள்ல புதிய தலைமுறை டிவியில அது மாதிரி ஒரு நியூஸ் புல்லட்டின் தெனமும் ஓடுது.

காலேஜ் டைம்ல டைப் ரைட்டிங் கிளாஸ் போனப்ப இது மாதிரி ஒரு பிரண்ட் உண்டு. அங்க வேலை பாத்துக்கிட்டே படிச்சிட்டிருந்தான். டைப்பிங், ஸ்டென்சில் கட்டிங் (80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும்), ஜெராக்சுன்னு அவன் பம்பரமா சுத்துவாப்ல. எனக்கு கிளாஸ் டைம் ஈவினிங்கிறதால அப்ப ஓய்வா இருப்பான். அந்த சமயத்தில இன்ஸ்டிடியூட் இன்சார்ஜ் அக்கா கூட உக்காந்து அரட்டை அடிக்கிறப்ப அவனோட பாஷை மெள்ள மெள்ள புரிஞ்சிது. ஜோக், அன்னிக்கு நடந்த சுவாரஸயம்னு அவனோட மொழியில கேக்கிறப்ப வித்தியாசமா இருக்கும்.

காலேஜுக்கு பிறகு பாளயங்கோட்டையில ஒரு சீட்டு கம்பெனில (அப்ப சீட்டு கம்பெனிங்க ரொம்ப பேமஸ்) வேல பாத்தப்ப ஜெயிலுக்கு பக்கத்தில ஹாஸ்டலோட சேந்து டெஃப் அண்ட் டம்ப் ஸ்கூல் ஒண்ணு இருந்திச்சி. அங்க உள்ள ஃபாதர் சீட்டு போட்டிருந்ததால மாசம் ரெண்டு மூணு தடவ அங்க போவேன். அந்த ஸ்கூல் பசங்க (எல்லாம் குட்டி பசங்க) பேசிட்டிருப்பத பாக்கிறப்ப மனசு லேசா வலிக்கும். என்னோட பழய நெனப்பையெல்லாம் ரெண்டு பசங்களும் இன்னிக்கு கிளறி விட்டிட்டாங்க. 

தினசரி வாழ்க்கையில ஓவரா பேசுறவங்க... இங்கேயும் அங்கேயும் போட்டு குடுக்கிறவங்க... பொரணி பேசுறவங்க.. இந்த மாதிரி கேரக்டருங்கள பாக்கிறப்ப... ஆண்டவா வாயையும் காதையும் ஏன் படைச்சேன்னு தோணும். ஆனா... அந்த நெனப்பு தப்புன்னு சொல்றதுக்காகவே இந்த பசங்க என் கண்ணில பட்டாங்கன்னு நெனைக்கிறேன்..

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...

கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது... என்ற அவ்வையின் பார்வையில் நாம் பாக்கியசாலிகள்.

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 24 July 2019

கண்களுக்கு நிகரானவை கைகள்...

அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.


வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.



வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்

போக்குவரத்து... விதிகளை மதிப்போம்...

 அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.




வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.

வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 25 June 2019

ஜனநாயகத்தின் கருப்பு தினம்

45 ஆண்டுகளுக்கு முன்.... 

இதே நாளில்... 

1975 ஜூன் 25... 

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம். 

அன்றைய தினம் தான் ரேபரேலி தொகுதி எம்பியாக தேர்வான தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவருடைய ஆணையை ஏற்று எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால், 1975 மிசா நிலைமை முற்றிலும் வேறானது. கொடுமைகள் நிறைந்தது.

சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்க தேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு சாதாரன மனிதன் தண்டனை தருவதா...? என்ற மனோபாவத்தில் எழுந்த எண்ணம்...! 

இந்திராவின் எமர்ஜென்சி ஐடியாவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்க முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே மற்றும் இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இந்திராவுக்கு எதிராக தேர்தல் வழக்கு போட்டவர் உட்பட... அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர். 

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி. 

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது. மாநில அளவிலும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அதற்கு இணையான கொடுமைகளும் அரங்கேறின. இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்களும் சிறையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. 

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் கூட எமர்ஜென்சியால் மனம் நொந்து இருந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்றாவது  எமர்ஜென்சி முடிவுக்கு வரும் (1977 ஜனவரி வரை எமர்ஜென்சி இருந்தது) என எதிர்பார்த்து இருந்த காமராஜரின் காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது வரலாறு. 

எந்த பதவியிலும் இல்லாத இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை காலத்தில் அதிகார மையமாக இருந்தார் என்றால்  நிலைமையை யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. 



பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன. 



1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (இது சர்வதேச நாடுகளின் கணக்கு) கைது செய்யப்பட்டனர். டெல்லி ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. 



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 45 ஆண்டுகளாகி விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கசப்பான வரலாறு.

- #நெல்லை_ரவீந்திரன்

Monday 24 June 2019

புகைப்படமாக மாறிப்போன கழுதை

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதையை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? 

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். 

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக  அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர். அதற்காக வீடுகளிலேயே கழுதைகளை வளர்த்து வந்தனர்.  

ஊர் முழுவதும் வீடுகளில் அழுக்கு துணியை எடுத்து வந்து வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். இந்த வெள்ளாவி வைப்பது தனி வேலை. வட்டமாக திறந்த வெளி அடுப்பு ஒன்று வீட்டு முன் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மீது அழுக்கு துணியை ஈரமாக்கி வேக வைப்பதுதான் வெள்ளாவி.

அதிலேயே விடாப்பிடி அழுக்கெல்லாம் லேசாக உதிர தொடங்கியதும் கழுதை மேல் பொட்டலத்தை ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் குளம், ஊருணியில் துவைத்து அங்கேயே காய வைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். 



இப்பல்லாம் குளமும் இல்லை ஊருணியும் இல்லை. அதனால கழுதைகளும் இல்லை. ஊரில் திருவிழா என்றால் பந்தலில் கலர் துணி அலங்காரத்துக்கு இப்பிடி துவைத்த சேலைகளைத்தான் பயன் படுத்துவார்கள். கோயிலில் தன்னோட சேலையை பார்த்து அதிர்ச்சியாகும் பெண்கள் பலரும் மறுநாள், அந்த சலவை தொழிலாளிக்கு தனியாக கொடை குடுப்பது தனிக் கதை. இப்பல்லாம் பந்தல் அலங்காரததுக்கு தனியாகவே துணி தயாராகிறது.

பண்டிகை, கோயில் கொடைவிழா மாதிரி விசேஷ தினங்கள் தான் கழுதைங்களுக்கு விடுமுறை நாட்கள். எங்கள் ஊரில் வைத்தியலிங்க சாமி கோயிலில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்தைப்பகுதியில் கூடி நிற்கும்.

அதை சீண்டிப் பார்ப்பதுதான் திருவிழா ஜாலி. கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும். நாங்களும் துரத்திச் செல்வோம்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் கம்ப்யூட்டர் கேமில் தொலைந்து விட்டார்கள். டெம்பிள் ஃபெஸ்டிவலில் ஓடிய சிறுவர்கள் இப்போது இல்லை. டெம்பிள் ரன் சிறுவர்கள் தான். 

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.

அது மாதிரியே... இப்பல்லாம் 'கழுத கெட்டா குட்டிச் சுவர்' கிடையாது... 'முகநூல் சுவருதான்'... 😂😂

#நெல்லை_ரவீந்திரன்

Monday 10 June 2019

காற்றில் கரைந்த கிரேஸி..

டிவி சீரியல்கள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் 'கிரேஸி டைம்ஸ்', 'விடாது சிரிப்பு' மாதிரியான தொடர்கள் தான் ஃபேவரைட். இரவு சாப்பாடு முடிந்ததும் ரிலாக்ஸ் அதுதான். அப்படித்தான் கிரேஸி மீது கிரேஸ் ஆனேன். அப்புறம் நம்ம ஃபேவரைட் ஹீரோவின் ஆஸ்தான எழுத்தாளர் என தெரிந்ததும் கூடுதல் பற்று. சென்னை வந்த புதிதில் அவ்வப்போது மேடை நாடகங்களும் பார்ப்பதுண்டு.

.



நகைச்சுவை நடிப்பு என்றால் வடிவேலுவுக்கு மாற்றாக யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல, நகைச்சுவை ஸ்கிரிப்ட் என்றால் கிரேஸி மட்டும் தான். சதிலீலாவதி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, வசூல்ராஜா மாதிரி படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. காரணம், இந்த விகடானந்தா தான்.


சேது ராமன் கிட்ட ரகசியமா..? 

ஓ நர்சோட பர்ஸா...?

மார்கபந்து முதல் சந்து...

மனமிருந்தா மார்க பந்து...

நீயும் எம்பி எம்பி பிஎஸ் படி...

ராமண்ணா... ஆங்.. அவரு பழைய டைரக்டரு...

முன்னாடி... பின்னாடி... 

என் பிரதர் கோ பரதன்...

எச்சக்கல சிங்கம்... எச்சக்கல புலி... இது மாதிரி... 

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளோவா நகைச்சுவை நீரோடை வழிந்தோடுவதும் டைமிங் காமெடியும் சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் கிரேஸி பெருங்கடலின் சில சொட்டுகள் தான். 

திரையுலக பயணம் ஒரு பக்கம் இருந்தாலும் 6500 நாடக அரங்கேற்றம். அதிலும் சாக்லேட் கிருஷ்ணா மட்டும் 500 முறை. தம்பி பாலாஜியோடு சேர்ந்து மாது, சீனு, மைதிலி, ஜானகி கேரக்டர்களோடு கிரேஸியின் அதகளம்.. தனி ரகம். ஜானகி, மைதிலி கேரக்டர் பெயர்களுக்கு தனது ஆசிரியை நினைவாக சூட்டிய பெயர் என அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

இதுபோல,  வெண்பா இலக்கண வரம்புக்குள் நான்கு வரி வெண்பா எழுதுவதிலும் வல்லவர் அவர். கூடவே கார்ட்டூன் வரைவதிலும் கில்லாடி. நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கம் வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவை எழுத்தாளர், வெண்பா கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என ஒரு மெக்கானிகல் என்ஜினீயருக்குள் ஏராளமான திறமைகளை நிரப்பி அனுப்பிய கடவுள், சாக்லேட் கிருஷ்ணனை திரும்பவும் அழைத்துக் கொண்டார். 

திரை, நாடக எழுத்தாளர், கவிஞர் என யாராவது மறைந்தால் அவரது துக்ககரமான வசனங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவரது வசனத்தில் ஒன்று கூட தேடிப் பார்த்தாலும் தென்படவே இல்லை. பாசக் கயிற்றுடன் வந்த எமன் கூட, நிச்சயமாக இவரது வசனங்களை கேட்டு, சிரித்தபடியேதான் உயிரை எடுத்துச் சென்றிருப்பான். எமனுக்கும் கூட அந்த சமயத்தில் ஏதாவது ஒரு டைமிங் காமெடி சொல்லி விட்டுத்தான் பயணித்திருப்பார், கிரேஸி...

ஜானகி, மைதிலி, மாது, சீனு இவர்களுடன் நாங்களும் மிஸ் யூ கிரேஸி...

-நெல்லை ரவீந்திரன்

Sunday 9 June 2019

இதே நாளில் அன்று

எமர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வென்று மத்திய ஆட்சியை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைப்பற்றி இருந்தார், இந்திரா காந்தி. தமிழ் நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை பிடித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக 2 எம்பி இடங்களை மட்டுமே பிடித்தது.

இதனால், ஆட்சியை கைப்பற்ற இதுவே சரியான தருணம் என நினைத்த கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்குமாறு இந்திராவுக்கு நிர்பந்தம் கொடுத்தார். விளைவு, மத்திய ஆட்சிக்கு வந்த மறு மாதமே எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திரா. தமிழகத்தில் எம்ஜிஆர் அரசு உட்பட இந்தியா முழுவதும் ஜனதா ஆதரவு கட்சிகளின் அரசு மற்றும் ஜனதா கட்சி அரசு என ஒரே நாளில் 17 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 பிரிவை பயன்படுத்தி எதிர்க்கட்சி மற்றும் பிடிக்காத முதல்வர்களின் அரசுகளை கலைப்பது காங்கிரசுக்கு கைவந்த கலை.

இப்படியாக, எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு 1980ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மீண்டும் களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ஜனதா, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு இரண்டும் தனியாக போட்டியிட்டன. குமரி அனந்தனின் காகாதேகா, பழ. நெடுமாறன் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 177 இடங்களில் அதிமுக களமிறங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்தாவது மாதத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக அணியில் அதிமுக மட்டும் 130 இடங்களை பிடித்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர். தமிழக மக்களின் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பை வைத்து கருணாநிதியும் இந்திராவும் கணித்த கணிப்பு பொய்யாக முடிந்தது.

தமிழக அரசியலில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றார், எம்ஜிஆர். (இந்த பட்டியலில் 2016ல் ஜெயலலிதா இடம் பெற்றார்) அப்படி இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழக  முதல்வராக எம்ஜிஆர் மீண்டும் பதவியேற்றது இதே நாளில் தான்... 9-6-1980.



அதன்பிறகு, 1984 தேர்தலிலும் மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தில் யாருமே முறியடிக்காத ஹாட்ரிக் வெற்றியை எம்ஜிஆர் அழுத்தமாக பதிவு செய்தார் என்பது வரலாறு.

Monday 27 May 2019

சைக்கிள் எனும் காதல் வாகனம்

 அத காதல் வாகனம்னும் சொல்லலாம். கனவு வாகனம்னும் சொல்லலாம். அதில ஏறி ஊர சுத்துறதே தனி சுகம். வீட்டுக்கு ஒண்ணு இருக்கிறதே அதிசயம். கொஞ்சம் வசதியான வீடுங்கள்ல ரெண்டு கூட இருக்கும். சைக்கிள் தாங்க அது.



மொத மொத அத ஓட்டிப் பழகிறதே பெரிய சாதன. சைக்கிள் கடைங்கள்ல குட்டி சைக்கிள், கொஞ்சம் பெரிசு, அத விட பெரிசுன்னு ரக வாரியா வாடகைக்கு கிடைக்கும் அப்பல்லாம்.. ஊருக்கு ரெண்டு மூணு சைக்கிள் கடைங்க இருக்கும். ஆனாலும் லீவு நாட்கள்ல சைக்கிள் கிடைக்காது. ஒரு மணி நேரத்துக்கு வாடகை 50 பைசா.


ஊரு பெரிய கோவில் ரத வீதிங்களும்… வியாழக்கிழமை சந்த நடக்கிற கிரவுண்டும் தான் சைக்கிள் பழகும் இடம். ரெண்டாப்பு படிக்கும்போது பழைய சைக்கிள் ஒண்ண எங்க வீட்டுக்கு வாங்கினப்ப ரொம்ப பெரிசா தெரிஞ்சிச்சி. குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து பழகி இருந்ததால, கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் பழக ஆரம்பிச்சேன். சைக்கிள் சீட்டுக்கும் முன்பக்க ஹேண்ட் பாருக்கும் நடுவில இருக்கிற கம்பிக்கு கீழ தொங்கிக்கிட்டே மிதிக்கிறது தான் கொரங்கு பெடல். 


அப்புறம், கொஞ்சம் வளந்ததும் பெடலுக்கு கால் எட்டாட்டாலும் சீட்டில உக்காராமலே அசைஞ்சி அசைஞ்சி மிதிக்கிறதே தனி சாதனையா நினைச்ச காலம். அப்புறம் டபுள்ஸ் வச்சி சைக்கிள் மிதிக்க படிக்கிறது தனிக் கத. நானெல்லாம் எங்க அண்ணன பின்னால உக்கார வச்சி ஓடைக்குள்ள குப்புறத் தள்ளி டபுள்ஸ் ஓட்ட படிச்சேன்.


குட்டி சைக்கிள்ல இருந்து படிப்படியா வளந்த முன்னேற்றம் இது. ரோட்டுல இறக்கத்தில வண்டிய ஓட்டி, வௌங்காட்டுக்கு போயிட்ட வந்த ஒரு தாத்தா மேல சைக்கிள மோதிட்டு பயந்து நடுங்கின அனுபவமும் உண்டு.

அதுக்கு பிறவு, நான் ஐஸ்கூல் போன சமயத்தில குலுக்கல் சீட்டுல புது சைக்கிள் வாங்கினோம். வாரம் 50 ரூபா கட்டணும். அந்த சைக்கிள ஓட்டுறதில அண்ணன் கூட பெரிய போட்டியே நடக்கும்.


சாயந்திர நேரம் சைக்கிள எடுத்திட்டு காசியாபுரத்திலேருந்து ஆலங்குளம் வரைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாறதும் வைகாசி பொறந்தாச்சி பிரசாந்த் மாதிரி யாரையாவது வம்பிழுத்து சைட் அடிச்சதும் தனிக் கதை.


ஆடியோ கேசட்டில இருக்கிற ஒலி நாடாவ ஒரே அளவா துண்டு துண்டா கட் பண்ணி, சைக்கிள் ஹேண்ட் பாரில் ரெண்டு பக்கமும் இருக்கிற கைப்பிடியில ஒட்ட வச்சி சில பேரு சைக்கிள ஓட்டுவாங்க. ராசுக்குட்டி படத்தில பாக்யராஜ்  புல்லட்டில ஒட்டி வச்சிருப்பாரே அத மாதிரி. அந்த புல்லட் அலங்காரம் மாதிரியே சைக்கிளிலும் விதம் விதமா அலங்கரிச்சி சுத்துறது தனி பேஷன். அதுவும் சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் நாட்கள்ல சைக்கிளையும் அலங்காரம் பண்ணி அதே அளவுக்கு அலங்காரத்தோட புது டிரஸ் போட்டு சுத்துற சுகமே தனி.


இளசுங்களோட சைக்கிள் கத இதுன்னா… பொடிசுங்களோட கத வேற லெவல். சைக்கிள் வீலுங்கள்ல இருக்கிற போக்ஸ் கம்பியில படுற மாதிரியே பலுன ஊதி கட்டி விட்டு, அது போடுற வித்தியாசமான சத்தத்தை ரசிச்சிகிட்டே சைக்கிள ஓட்டுவாங்க. இத மாதிரி சைக்கிள்ல நிறைய வித்தைங்கள காட்டுவாங்க.


அப்புறம் டைனமோ வச்ச சைக்கிள் வச்சிருந்தா அது தனி கெத்து. பின் வீல் டயரில் உரசிற மாதிரி, சின்ன எண்ணெய் பாட்டில் சைசில ஒரு டைனமோ இருக்கும். டயர் சுத்துற வேகத்துக்கு ஏத்த மாதிரி அதிலேருந்து கரண்டு உருவாகும். அந்த கரண்டினால சின்ன ஒயர் மூலமா முன்பக்கம் இணைச்சிருக்கும் டைனமோ லைட் எரியும். பைக் ஹெட் லைட் மாதிரி இது. இந்த லைட் இல்லாட்டா, நைட் நேரத்தில போலீஸ் பிடிச்சிக்கும். தாலாட்டு கேட்குதம்மா படத்தில பிரபும், கவுண்டமணியும் சைக்கிள்ல போவாங்களே அந்த சீன் மாதிரி நடக்கும். காலேஜ் பஸ்ட் இயர் படிச்சப்ப எனக்கும் அந்த அனுபவம் உண்டு.


இப்பிடி நிறைய பேரோட அனுபவங்கள தனக்குள்ள புதைச்சி வச்சி சுத்திகிட்டு இருக்கிற சைக்கிள், இப்பலாம் எக்சர்சைஸ் இன்ஸ்ட்ரூமென்டா போச்சி. பாண்டிச்சேரியில இருக்கிற வரைக்கும் காலங்காத்தால சைக்கிள எடுத்துகிட்டு சில கிலோ மீட்டர் ஓட்டுறது வழக்கமா இருந்திச்சி. இப்போ... ஹும்..


நெல்லை ரவீந்திரன்

Monday 20 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -25

இந்தியாவின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கான முயற்சியும் இரண்டே ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தாலும், 40 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆதிக்கத்தின் முடிவுரை துவங்கி வைக்கப்பட்டது. பிரதமர் சந்திரசேகர் அரசு கவிழ்ந்து 1991ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் காஷ்மீர், பஞ்சாபில் 19 தொகுதிகள் தவிர்த்து நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவித்தார்கள். 

திமுக ஆட்சி கலைக்கப் பட்டதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தது. ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எம்ஜிஆரின் கூட்டணி பார்முலாப்படி, சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு, நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு என ஒதுக்கப்பட்டது. இதனால், 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் அதிமுக களமிறங்கியது. 

இதுதவிர, பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கின. அத்வானியின் ரத யாத்திரையை தொடர்ந்து ராமர் கோவிலை தேர்தல் கோஷத்தில் முன் வைத்தது பாஜக. 1980 தேர்தல் போலவே, காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்ற கோஷத்தை எழுப்பியது. 1991 மே 20ம் தேதியன்று 211 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. 

இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தமிழகத்தில் மே 21ம் தேதியன்று தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என உயிரிழந்தது, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரம் வெடித்தது. திமுகவுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடியது. வெளி மாநிலங்களில் தமிழர்களை விரோதமாக பார்க்க, மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.





ஒத்தி வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு ஜூன் மாதத்தில் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் 1991 ஜூன் மாதத்தில் தான் இரண்டு தேர்தல்களும் நடைபெற்றன. ராஜீவ் கொலையால் நாடே உறைந்திருந்ததால் வாக்குச் சாவடிக்கு வர மக்கள் அச்சப்பட்டனர். இதனால், அதுவரை இல்லாத அளவில் 53% வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக வெளியாகின.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

Friday 17 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -24

1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதன்முறையாக அமைந்த சிறுபான்மை அரசு, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே நாட்களை கடத்தியது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை விபி சிங் அறிமுகம் செய்தபோது, ஆட்சி நாற்காலியின் முதலாவது கால் ஆடத் தொடங்கியது. உயர் வகுப்பினர் அதிகமாக இருக்கும் வட மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்தது.



மற்றொருபுறம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை ஆரம்பித்தார், பாஜக தலைவர் அத்வானி. இதற்கிடையே, ஜனதா தளத்துக்குள்ளேயே தலைவர்களிடையே வேறுபாடு ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், பீகாருக்குள் ரத யாத்திரையை நுழைய விடாமல், அத்வானியை கைது செய்தார், அம்மாநில முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ். சமஸ்திபூரில் 1990 அக்டோப் 23ம் தேதி நடந்த இந்த கைதைத் தொடர்ந்து, விபி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது, பாஜக. 


இதனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைமைக்கு ஆளானது, விபிசிங் அரசு. பதவியேற்ற ஓராண்டுக்குள் நவம்பர் 7ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சியை பறி கொடுத்தது, இந்தியாவின் முதலாவது சிறுபான்மை கூட்டணி அரசு. ஏற்கனவே உரசிக் கொண்டிருந்த சந்திரசேகர், 64 எம்பிக்களுடன் ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி சமாஜ்வாடி ஜனதா என்ற கட்சியை தொடங்கினார்.

இவரது கட்சி ஆட்சியமைக்க, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது, ராஜீவின் காங்கிரஸ் கட்சி. தேவிலால் துணை பிரதமராகவே நீடித்தார். 1979ல் சரண்சிங் பிரதமரானது போலவே, பத்து ஆண்டுகள் கழித்து அதே காட்சிகள் அரங்கேறின. கதாபாத்திரங்கள் மட்டும் மாற்றம். அன்று இந்திரா, இப்போது அவது மகன் ராஜீவ். அப்போது சரண்சிங் இப்போது அவரது சீடர் சந்திரசேகர். அப்போது மொரார்ஜி பதவியிழந்து அரசியல் ஓய்வு பெற்றார். இப்போது அந்த இடத்தில் விபி சிங்.



சரண்சிங் அரசு போலவே ஆறே மாதத்தில் சந்திரசேகர் அரசும் ஆறே மாதத்தில் கவிழ்ந்தது. ராஜீவை உளவு பார்த்ததாக கூறி ஆதரவை வாபஸ் பெற்றது, காங்கிரஸ். இதனால், 1991 மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார், சநதிரசேகர். ஒன்றரை ஆண்டுகளிலேயே அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. 1991 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. 'காங்கிரசால் மட்டுமே ஐந்தாண்டு நிலையான ஆட்சியை தர முடியும்' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

இதற்கிடையே பதவியில் இருந்த ஆறு மாதத்துக்குள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்திருந்தது, சந்திரசேகர் அரசு. ஜெயலலிதா கோரிக்கையை ராஜீவின் பரிந்துரையின் பேரில் சந்திரசேகர் நிறைவேற்ற, அதற்கு ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன். இதனால் 1991 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. தமிழக தேர்தல் களத்தில் நடந்த அந்த பயங்கரம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday 15 May 2019

நாடாளுமன்ற தேர்தல் 23

ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி சந்தித்த நாடாளுமன்ற தேர்தல், 1989 நவம்பரில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ராஜீவின் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. 1984 தேர்தலில் 400க்கு மேல் வென்ற காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 195 இடங்களே கிடைத்தது. தனது சொந்த செல்வாக்கில் சந்தித்த ஒரே தேர்தலில், ராஜீவ் தோல்வியடைந்தார் என்ற வரலாறை, இந்திய தேர்தல் களம் தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை பெற்ற கட்சி காங்கிரஸ்தான். தமிழகம், ஆந்திரா என தென் மாநிலங்கள், வழக்கம்போல காங்கிரசுக்கு கை கொடுத்திருந்தன. ஆனால்,  ஆட்சியமைக்க 272 பேர் தேவை.

மறுபுறம் ராஜீவுக்கு எதிராக அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதாதளம் 142 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வென்றது. அந்த கூட்டணியின் முக்கிய பங்காளியான தெலுங்கு தேசம் 2 இடத்தில்தான் வென்றது. திமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்த போதிலும், 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ஜெயலலிதா தலைமையில் ஒன்று சேர்ந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வென்றது. திமுக அணியில் நாகை தொகுதியில் வலது கம்யூனிஸ்ட் மட்டும் வென்றது.

கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் 89 இடங்களை பிடித்தது. இது தவிர மார்க்சிஸ்ட் 34 உட்பட இடதுசாரி கட்சிகளும் கணிசமான இடங்களை பிடித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய முன்னணி கூட்டணியின் தலைவரான விபி சிங்கை பிரதமராக தேர்வு செய்தன. தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்தது. சுதந்திர இந்தியாவில் முதலாவது சிறுபான்மை அரசு இதுதான். பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்த அரசும் இதுதான்.



150க்கு சற்று அதிகமான எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த  விபி சிங் அரசுக்கு பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தபடி ஆதரவை அளித்தன. அந்த வகையில் பாஜக மற்றும் கம்யூனிஸ்டுகளை ஒரே புள்ளியில் இணைத்த ஒரே அரசும் விபி சிங் அரசுதான். தேசிய முன்னணியில் இருந்த எல்லா கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளித்தார், விபி சிங். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க துணை பிரதமர் பதவி, ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான தேவிலாலுக்கு கொடுக்கப்பட்டது.



ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மாநிலங்களவை திமுக உறுப்பினராக இருந்த முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கினார். அவர்தான் திமுக சார்பாக பதவியேற்ற முதலாவது மத்திய அமைச்சர். 1977ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றதை இங்கே நினைவில் கொள்ளலாம். 

இப்படியாக பாஜக, இடதுசாரி ஆதரவோடு 1989 டிசம்பர் 2ம் தேதி பதவியேற்ற விபி சிங் அரசு, அடுத்த ஓராண்டு கூட முழுமையாக நிலைக்கவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. அதற்குள் பல அரசியல் அதிர்ச்சிகளும் குழப்பங்களும்...

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 13 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -22

1984 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 3 ஆண்டுகளில் எம்ஜிஆர் மறைந்தார். இப்போது போலவே, அதிமுக பிளவுபட்டதோடு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பின்னர் கட்சி ஒன்று சேர்ந்து சின்னமும் மீட்கப்பட்டது. இப்போது போலவே அப்போதும் இந்த முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது, அன்றைய மத்திய அரசு. அதாவது ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு. இப்படியாக 1984 முதல் 1989 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் கட்சி ஒன்று சேர்ந்தது.


 (இந்த விபரங்களை எனது தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு பதிவில் பார்க்கலாம் http://thileeban81.blogspot.com/2016/04/?m=1)


அதிமுக அணிகள் இணைப்புக்கு முன்னதாக 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே நடந்த தமிழக தேர்தலில் திமுக வென்று, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல்வரானார், கருணாநிதி.


அதே நேரத்தில், 1984 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜீவ்காந்தி அரசின் மீது,  போபார்ஸ் ராணுவ பீரங்கி ஊழல் புகார் எழுந்தபோது அந்த ஆட்சியின் முடிவுரை வரையப்பட்டு, இந்தியாவின் முதலாவது பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறைக்கு முகவுரை எழுதப்பட்டது. ராஜீவ் அமைச்சரவையில் நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த விபி சிங் எழுப்பிய இந்த புகாரால் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பிரச்சார பீரங்கியாக போபார்ஸ் பேர ஊழல் மாறியது.



நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை அவையிலேயே கிழித்து எறிந்து ஆவேசமாக பேசினார், காங்கிரஸ் கூட்டணியான அதிமுகவை சேர்ந்த எம்பி ஆலடி அருணா. பாஜக, இடதுசாரிகள், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிசத் என ஏராளமான கட்சிகளும் ராஜீவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒன்று திரண்டன. இதற்கிடையே, இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதாக கூறி, ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், அங்குள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பகைத்ததால் எழுந்த கோபமும் அவர் மீது சேர்ந்தது.

ராஜீவுக்கு மாமா உறவு முறை கொண்டவரான அன்றைய பிரபல தலைவர்களில் ஒருவரான அருண் நேருவும் அவருக்கு எதிராக இருந்தார்.

இப்படியான சூழலில் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட விபி சிங், அருண் நேருவுடன் சேர்ந்து 'ஜன மோர்ச்சா' என்ற கட்சியை தொடங்கினார். பிறகு ஜனதாதளம் கட்சியுடன் இணைந்தார். மறுபுறம், ராஜீவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கினார், தெலுங்கு தேசம் தலைவர் ராமாராவ். அந்த முயற்சியின் விளைவாக தோன்றியது தேசிய முன்னணி என்ற பல கட்சி கூட்டணி.



திமுக, தெலுங்கு தேசம், அசாம் கணபரிசத், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என பல கட்சிகள் அமைத்த தேசிய முன்னணி கூட்டணியின் தலைவராக, விபி சிங் தேர்வானார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ராமாராவ். போபர்ஸ் என்ற ஒற்றைச் சொல்லே ராஜீவுக்கு எதிராக இந்திய அளவில் கட்சிகள் ஒன்று திரள வழி வகுத்தது. 1989 தேர்தலில் ராஜீவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அஜென்டாவுடன் தயாரானது, தேசிய முன்னணி கூட்டணி. அவர்கள் எதிர்பார்த்தபடியே 1989 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதன் முடிவுகள் இரு தரப்புக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தன.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Sunday 5 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -21

 இந்திரா காந்தி கொல்லப்பட்டு சரியாக 60 நாட்களுக்குள் 1984 டிசம்பர் இறுதி வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நடந்த அந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு மாநில தொகுதிகளில் 10ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தியின் அனுதாப அலையில் மற்ற கட்சிகள் காணாமல் போயின.

ஜனசங்கத்தில் இருந்து மாறிய பிறகு, பாஜக போட்டியிட்ட அந்த முதல் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற தேசிய கட்சிகளின் நிலையும் அப்படியே. ஆனால், இந்திரா காந்தி அனுதாப அலையிலும் கூட,  ஆந்திராவில் என்டி ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களை வென்று, அகில இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்தது. 



சுதந்திர இந்தியாவில் மாநில கட்சி ஒன்று இரண்டாம் இடத்தை பிடித்தது அதுவே முதன்முறை. தற்போதைய மக்களவையில் அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 39 என நான்காவது, மூன்றாவது பெரிய கட்சிகளாக இருப்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். இதற்கு என்டிஆர் தான் முன் உதாரணம்.


இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அந்த அனுதாப அலையும் சேர்ந்தது. 'எம்ஜிஆர் ஃபார்முலா' அடிப்படையில் உருவான அதிமுக காங்கிரஸ் கூட்டணி, வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் இந்த கூட்டணி வென்றது. மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37ஐ (அதிமுக -12, காங்கிரஸ் - 25) இந்த கூட்டணி கைப்பற்றியது. இரண்டு இடங்களை மட்டுமே திமுக பிடித்தது.

நாடாளுமன்ற தேர்தலுடன், 1984 டிசம்பர் 24ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 195 இடங்களை (அதிமுக 132, காங்கிரஸ் 61, குமரிஅனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2) அதிமுக கூட்டணி வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகி ஹாட்ரிக் சாதனை படைத்தார் எம்ஜிஆர். இந்த ஹாட்ரிக் சாதனை எம்ஜிஆருக்கு முன்னும் பின்னும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. நேரடியாக தேர்தல் களம் காணாமல், அமெரிக்காவில் இருந்தபடியே இந்த சாதனையை படைத்தார், எம்ஜிஆர்.



இப்படியாக தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பல அதிசயங்களை ஏற்படுத்தியது, 1984ம் ஆண்டு தேர்தல். அப்போது, இந்தியாவின் இளம் பிரதமராக அறியப்பட்ட ராஜீவ்காந்தி, தொழில்நுட்பம் உட்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டியதோடு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதை கட்டாயமாக்கும் 'பஞ்சாயத் ராஜ்' சட்டத்தையும் கொண்டு வந்தார். 

ஆனால், 1989ல் நடந்த அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்திய ஆட்சி முறையிலும் புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை வை.ரவீந்திரன்

Monday 29 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -20

காங்கிரஸ் மூத்த தலைவர்களை வெற்றி பெற்றதில் தொடங்கி, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியது, பாகிஸ்தான் போர் வெற்றி, இரண்டாண்டு எமர்ஜென்சி, பிரதமராகவே தோல்வியடைந்த ஒரே நபர் என்ற போதிலும் மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றிய மன உறுதி என வளர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை பொற்கோயிலுக்குள்ளேயே சென்று துவம்சம் செய்தது வரை பார்த்த இந்திய மக்கள், இந்திராவை வியப்புடன் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கிடந்தனர். ஆனால் இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான துணிச்சல்தான் அவருக்கு முடிவுரையை எழுதியது. 



புளூ ஸ்டார் ஆபரேஷன் முடிந்த நான்கே மாதத்தில் 1984 அக்டோபர் 31ம் தேதியன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திராகாந்தி. இரும்பு பெண்மணியின் சரித்திரம் அவரது சொந்த மெய்க் காவலர்களான சீக்கிய இனத்தை சேர்ந்த சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற இருவரால் சரிந்தது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்னமும் நீடிக்கும் அந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் ஒருவர். இது தனியொரு அத்தியாயம்.

இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் படலம் காங்கிரஸ கட்சியில் தொடங்கியது. அதில் முன்னணியில் இருந்தவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர். ஆனால், சஞ்சய் காந்தி மறைவால் அரசியலுக்கு வந்து அமேதி எம்பி யான ராஜீவ் காந்திக்கு அந்த பதவி வந்து சேர்ந்தது. கட்சியின் ஒற்றுமை என்ற காரணத்தால் அரசியலில் நுழைந்த மூன்றே ஆண்டில் பிரதமர் பதவி தேடிவந்தது ராஜீவ் காந்தி வசம். பிரதமரான சில வாரங்களிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாரானார், ராஜீவ்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி தலைவரான எம்ஜிஆர், 1984ம் ஆண்டு இறுதியில் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். சென்னை அப்பலோவில் இருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படட எம்ஜிஆருக்கு இந்திரா காந்தியின் மறைவு செய்தி கூட சொல்லப்படவில்லை. ஆம். இந்திராவின் இறுதிச் சடங்கின்போது அமெரிக்காவில் இருந்தார் எம்ஜிஆர்.



இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜீவ் காந்தி தயாரானதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் ஆறு மாதங்களுக்கு முன்பே எதிர்கொள்ள தீர்மானித்தது, அதிமுக அரசு. 1985 ஜூன் மாதம் வரை ஆட்சியின் பதவிக்காலம் இருந்தது. அப்போதைய இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன், மூத்த அமைச்சர் ஆர்எம் வீரப்பன் போன்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து இரண்டு தேர்தலையும் சேர்த்து எதிர்கொள்ள தமிழகம் தயாரானது. 

1984ம் ஆண்டின் இறுதி நாட்களில் நடந்த அந்த தேர்தல்களின் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நேரடியாக தேர்தல் களத்தில் இல்லை. 

இரும்பு மனுஷி இந்திரா காந்தியோ இந்த உலகிலேயே இல்லை. ஆனால், இருவரும் தான் அந்த தேர்தலின் பிரதானமாக இருந்தனர். இப்படியொரு சூழ்நிலையில் 1984ம் ஆண்டு தேர்தலை காங்கிரசும் அதிமுகவும் சந்தித்தன. 

(நினைவுகள் சுழலும்)

- வை.ரவீந்திரன்

Saturday 27 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -19

1980 தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழல்கள், அதிமுக காங்கிரஸ் இடையிலான பந்தத்தை உறுதி செய்தன. 'மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் அதிமுக' என்பதே அந்த பந்தத்தின் பிரதான அம்சம். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் காங்கிரசுக்கும் சட்டப்பேரவையாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு அதிமுகவுக்கும் ஒதுக்கப்படும் என்பதே அந்த ஒப்பந்தம். இவ்வாறாக, கூட்டணி நீடிக்க இந்திரா காந்தியும் எம்ஜிஆரும் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக உயர்ந்தனர்.

இவ்வாறாக, அடுத்த தேர்தலை நோக்கி சென்றது. அந்த தேர்தலுக்கு முன்னால் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. அதற்கு 'காலிஸ்தான்' என்ற இயக்கம் பற்றி சில வரிகள் தெரிந்து கொள்வது நல்லது. பஞ்சாப், அரியானா உட்பட சீக்கியர்களின் பூமியை தனி நாடாக அறிவிக்க கோரி 1970களில் உருவானது தான் 'காலிஸ்தான்' இயக்கம். வெளிநாடுவாழ் சீக்கியர்கள் துணையோடு உருவான இந்த இயக்கத்தை பாகிஸ்தானும் ஊக்குவித்ததாக கூறுவது உண்டு. 



இப்போது காஷ்மீர் போல, அப்போது பஞ்சாபும் இந்தியாவின் தலைவலி. நாடாளுமன்ற தேர்தல் கூட தனியாகவே நடக்கும் அல்லது பல மாதங்கள் நடக்காமலே கூட இருந்தது உண்டு.  காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைக்கு அளவில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த சூழ்நிலையில் தான், அதன் தளபதி பிந்தரன் வாலே, சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் இருந்தபடி வன்முறையை அரங்கேற்ற தொடங்கினார்.



இதனால், காலிஸ்தான் தலைமை பீடமாக பொற்கோவில் மாறி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கையை தொடங்கினார், பிரதமர் இந்திரா காந்தி. 'ஆபரேசன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பொற்கோவில் முன் ராணுவத்தை நிறுத்தினார். கோவிலுக்குள் இருந்த தீவிரவாதிகளை சரணடைய சொன்ன ராணுவததின் எச்சரிக்கை பலனளிக்கவில்லை. இந்திரா உத்தரவின் பேரில், பொற்கோவிலுக்குள் நுழைந்தது ராணுவம்.



1984 ஜூன் முதல் தேதியில் இருந்து எட்டு நாட்கள் கோவிலுக்குள் முகாமிட்டு, உள்ளிருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்தது இந்திய ராணுவம். புனிதமான பொற்கோவிலுக்குள் ரத்த ஆறா...? என கொதித்தது சீக்கியர்களின் உள்ளம். இதனால் விளைந்தது, இந்தியா அதுவரை காணாத ஒரு அதிர்ச்சிகரமான துயரம். அது...?

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Thursday 25 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -18

1980ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பிரமாண்டமான வெற்றியை பெற, அப்போதைய பிரதமர் சரண்சிங்கின் ஜனதா கட்சி 41 இடங்களையும் சந்திரசேகரின் ஜனதா கட்சி 31 இடங்களையும் மட்டுமே பெற்றன. இது தவிர மார்க்சிஸ்ட் 37 இடங்களை வென்றிருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் அணியில் இருந்த திமுக 16 இடங்களை கைபபற்றியது. ஆளுங்கட்சியான எம்ஜிஆரின் அதிமுக சிவகாசி, கோபி என இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இந்த வெற்றியின் களிப்பால், இந்திரா கந்தி பாரதமரான உடனேயே ஆட்சி கலைப்பு அரங்கேறியது. கருணாநிதியின் நெருக்கடியால் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைப்பது சாதாரணமான நிகழ்வுகளாக இருந்து. இதனால், தமிழக மக்கள் மறுபடியும் ஒரு தேர்தலை சந்தித்தனர்.

1980 ஜனவரியில்  நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தலா 114 என தொகுதிப் பங்கீட்டோடு களமிறங்கின, திமுக காங்கிரஸ் அணி. அதில் முஸ்லிம் லீக்குக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சிகள் இருந்தன.

ஆனால், திமுகவின் கணக்கு பொய்யானது. ஜனவரி நாடாளுமன்ற தேர்தலில், இந்திராவை ஆதரித்த தமிழக மக்கள் மே மாத சட்டப்பேரவை தேர்தலில் அம்ஜிஆரையே மீண்டும் தேர்வு செய்தனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை பிடித்தது. அதிமுக மட்டும் 129 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்றது. தலா 114ல் களமிறங்கிய  திமுகவுக்கு 37 காங்கிரசுக்கு 31 என வெற்றி கிடைத்தது.



மூன்றே மாதங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்த இந்திரா காந்தி, அதன்பிறகு எம்ஜிஆருடன் நட்பு பாராட்டினார். மத்திய அரசின் உதவி தேவை என்பதால் முதல்வர் எம்ஜிஆரும் நட்புக்கரம் நீட்டினார். இந்த நட்பானது அடுத்த 16 ஆண்டு காலத்துக்கு அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமானது.

இந்த காலகட்டத்தில் தான், 1980ல் அமேதி தொகுதியில் வென்ற இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி அகால மரணம் அடைந்தார். அந்த தொகுதிக்கு 1981ல் நடந்த இடைத்தேர்தல் மூலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார் விமானியாக இருந்த இந்திராவின் மூத்த மகன் ராஜீவ் காந்தி. 



இப்படியாக அரசியல்களம் பல மாற்றங்களை சந்தித்த நிலையில், எம்ஜிஆரும் இந்திராவும் அசைக்க முடியாத தலைவர்களாக மாறிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தான், 1984 நாடாளுமன்ற தேர்தலின் மையமாக இருநதனர்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 22 April 2019

நாடாளுமன்ற தேர்தல் 17

 கருத்து வேறுபாடு, அதிகார போட்டிகளால் இந்தியாவின் முதலாவது கூட்டணி அரசு, முழுமையாக கரை சேராமல் பாதியிலேயே கவிழ்ந்தது. 1977ல் பதவிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வந்தது. 1980 ஜனவரியில் நடந்த அந்த தேர்தலின்போது, 1977ல் பிரதமராக இருந்தபோதே  ரேபரேலி தொகுதியில் தோல்வியடைந்த அனுபவத்தை இந்திரா காந்தி மறக்கவில்லை. அதனால்,  தென்னிந்தியாவையே தனது பாதுகாப்பு பிரதேசமாக பார்த்தார்.

1978 இடைத்தேர்தல் மூலமாக கர்நாடகாவின் சிக்மகளூருவில் வென்ற அவர், 1980ல் ஆந்திர மாநிலம் மேடக் தொகுதியை தேர்வு செய்தார். முந்தைய தேர்தலில் பலமாக இருந்த எதிர்க்கட்சிகள் இந்த முறை சிதறிக் கிடந்தன. 85 வயதை எட்டிய மொரார்ஜி தேசாயும் களத்தில் இல்லை. ஆனாலும் சரண்சிங், சந்திரசேகர் என 1980 தேர்தல் களம் சூடாகவே தகித்தது.



தமிழகத்தில் 1977 தேர்தலில் ஜனதாவுடன் இருந்து இந்திராவை மிகக்கடுமையாக விமர்சித்த திமுக 1980ல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அதுவும் காங்கிரசுக்கு 22 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. எம்ஜிஆரின் செல்வாக்கு வளர்ந்ததே இதற்கு காரணம். அதே நேரத்தில் நெருக்கடி நிலையின்போதே இந்திராவுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் சரண்சிங்கின் ஜனதா அணியில் சேர்ந்திருந்தார்.

மிகவும் பரபரப்பான இந்த தேர்தலில் இந்திராகாந்தி எதிர்பார்த்தபடியே தென் மாநிலங்கள் அவரை கைவிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் அதிகார போட்டியை பார்த்து வெறுத்துப் போயிருந்த இந்திய மக்களுக்கு இரும்பு பெண்மணியாக  இந்திரா காந்தி தெரிந்தார். அவரது நெருக்கடி நிலை கால அனுபவங்களை மூன்றே ஆண்டுகளில் மறந்து அவரையே மீண்டும் கொண்டாடினார்கள். ஏகபோக வெற்றியை ருசித்தது காங்கிரஸ். அகில இந்திய அளவில் 374 இடங்களை காங்கிரஸ் வென்று மீண்டும் பிரதமரானார் இந்திராகாந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி 37 இடங்களை பெற்றது. இதன் விளைவு அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் வெப்பம் கூட்டியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 15 April 2019

இது '94

உணவின் சூட்டை உள்வாங்கி கிறங்கி கிடக்கும் வாழை இலை போல மனதுக்குள் உறங்கி கிடக்கிறது நினைவுகள் தாலாட்டும் மூன்றாண்டு பிஎஸ்சி கணிதம். பதின்ம வயதுக்கே உரித்தான குறும்புகள், சேட்டைகள் எல்லாம் கரைந்த பின்னும் அடிநாக்கில் இனித்துக் கிடக்கும்  கற்கண்டாய் 

இன்றளவும் சுவை கூட்டுகிறது.

கால சக்கரத்தின் கோரப்பிடியில் சிக்கி சுழன்றாலும் மேலும் மேலும் சுவை கூட்டும் பண்டங்களில் மனிதனின் பழைய நினைவுகளும் ஒன்று. 

கல்லூரியின் முதல் நாள் வகுப்பு தொடங்கி நிறைவு நாளில் ஆட்டோகிராப், சினிமா, பிரியாணி என சுழன்ற 1994 நினைவுகளை மூளை நரம்புகள் பசுவாய் மாறி அசை போடுகின்றன. அந்த பொக்கிஷ நினைவுகளோடு இன்றைய நனவுகளும் சேர்ந்தது.


தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலேயே எனது 1991-1994 பிஎஸ்சி கணிதம் நண்பர்களின் சந்திப்பு ஈடேறியது. இன்றே தீர்த்தவாரியில் எழுந்தருளும் சுவாமிகளைப் போல எங்கள் பேராசிரியர்கள் பதின்மரை சந்திக்கும் வரம் பெற்ற பாக்கியசாலிகளானோம். அவர்களில் இருவர் எங்கள் கல்லூரியின் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த மனோன்மணியம் சுந்தரனார் தான் எங்கள் கல்லூரியின் முதல் முதல்வர். புதுமைபித்தன்,  பாரதி தொடங்கி சாகித்ய அகாடமி பெற்ற அறுவரை தந்த கல்லூரியும் எங்களதே. நெல்லை மண்ணுக்கே உரித்தான ஏலேய், மக்கா, மாப்ளே என விளித்த வார்த்தைகளை 45 பிளஸில் கேட்டபோது, சந்திப்பின் நோக்கம் கூடுதல் அர்த்தம் பெற்றது.

- நெல்லை ரவீந்திரன்

.


நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியின் 1991-1994 கணிதர்களின் சில்வர் ஜூப்ளி சந்திப்பு.

Wednesday 10 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -16


1977 பொதுத்தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். 1977 மார்ச்சில் அவருடன் சரண்சிங், ஜெகஜீவன் ராம் இருவரும் துணை பிரதமரானார்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரபல தலைவரான ஜெகஜீவன் ராம், கடைசி நேரத்தில் இந்திராவிடம் இருந்து ஜனதா கட்சிக்கு வந்திருந்தார். அவர், கடந்த ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்த மீராகுமாரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 


மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது, அப்போது புழக்கத்தில் இருந்து வந்த அந்தக்கால 1000, 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும்  செல்லாததாக அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த மறு ஆண்டில் 1978 ஜனவரியில் இந்த அறிவிப்பு வெளியானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முன்னோடி மொரார்ஜி தேசாய் தான்.



ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஜனதா தலைவர்களுக்குள் கருத்து மோதல் வெடித்தது. இதற்கிடையே 1978ல் கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்பியாகி இருந்தார் இந்திரா காந்தி. அதே நேரத்தில் ஜனதா தலைவர்களின் மோதலால் ஆட்சி கலகலக்க தொடங்கியது. இடதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் வலதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் இடையே தொடங்கிய கருத்து வேறுபாடானது வெவ்வேறு வடிவங்கள் எடுத்தது.


தலைவர்களுக்குள் எழுந்த அதிகார போட்டியின் விளைவாக 64 எம்பிக்களுடன் கட்சியை உடைத்தார் சரண்சிங். இதனால் 1979 ஜூலை 19ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மொரார்ஜி தேசாய். ஜூலை 28ல் புதிய பிரதமரானார் சரண்சிங். ஒவ்வொரு கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு நின்ற அவருக்கு அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்தன. எனினும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


கடைசியில், எந்த இந்திராவுக்கு எதிராக ஒன்று திரண்டு ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதோ அந்த இந்திராவிடமே சென்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டார் சரண்சிங். ஆனால்,  இந்திராகாந்தி ஆதரவு தர மறுத்ததால் ஐந்தரை மாதத்திலேயே சரண்சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1980 ஜனவரியில் இந்தியாவின் 8வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.



இதற்கிடையே, பதவி விலகிய மொரார்ஜி தேசாய் அரசியலுக்கு முழுக்கு போட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஜனதா கட்சியை நிறுவிய ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன் உடல்நலக் குறைவால் ஓதுங்கி விட்டார். ஜனதா கட்சியின் தலைவர்களுக்கிடையிலான மோதலால், சுதந்திரமடைந்த நாளில் இருந்தே ஏகபோகமாக ஆட்சி செய்து வந்த காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் மூன்றே ஆண்டுகளில் கருகிப் போனது.


ஜனதா கட்சிக்குள் ஐக்கியமான பலவேறு கட்சிகள் வெளியேற தொடங்கின. சில கட்சிகள் பெயர்களை மாற்றி புது அவதாரம் எடுத்தன. அதில் ஒன்றுதான் பாஜக. 1977 தேர்தலுக்கு முன் ஜனதாவில் ஜனசங்கமாக நுழைந்த அந்த கட்சி 1980ல் பாஜகவாக மாறியது. இதற்கிடையே சரண்சிங் தலைமையில் ஒரு ஜனதா கட்சி, சந்திரசேகர் (பின்னாளில் இந்திய பிரதமராக இருந்தவர்) தலைமையில் மதசார்பற்ற ஜனதா கட்சி என இரண்டாக பிரிந்தது ஜனதா. 



இப்படியான அரசியல் சூழலுடன் 1980 பொதுத்தேர்தல் நெருங்கியது. தமிழகத்தை பொருத்தவரை  சரண்சிங் தலைமையிலான ஜனதா கட்சியுடன் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி அமைத்தது. எதிரணியில் இந்திராவையும் அவரது எமர்ஜென்சி கால கொடுமையையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்த கருணாநிதி தலைமையிலான திமுக, இந்திராவின் காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி அமைத்தது. தேசிய அளவில் இந்திராவுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் பிளவுபட்ட நிலையிலேயே சந்தித்த 1980 பொதுத் தேர்தலில் மக்களின் முடிவானது ஒரு தகவலை சொல்லியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Friday 5 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -15

இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியால் வழக்கத்தை விட ஓராண்டு தள்ளி நடைபெற்ற இந்தியாவின் 6வது பொதுத் தேர்தலில் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான, அரசியல் வரலாற்று திருப்ப முடிவுகளை மக்கள் தந்தனர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு உருவான ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்றது. திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கூட்டணியுடன் அதன் பலம் 345. ஜனதா கட்சி சார்பாக பிரதமர் பதவியை ஏற்றார் மொரார்ஜி தேசாய். இந்தியா சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகள் கழித்து முதன் முதலாக காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் இந்திய பிரதமரானார்.


அதே நேரத்தில், ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெறும் 153 இடங்களில் மட்டுமே வென்றது. உ.பி. மாநிலம்  ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியே 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தவர் ராஜ்நாராயணன்.இவர்,  முந்தைய தேர்தலில் இந்திராவின் எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்தவர். பதவியில் இருக்கும் பிரதமரே தோல்வியடைந்த வரலாறை இந்திய ஜனநாயகம் பதிவு செய்து கொண்டது.



இதுமட்டுமல்ல, எமர்ஜென்சியில் இந்திராவுக்கு வலதுகரமாக இருந்த அவரது இளையமகன் சஞ்சய்காந்தி, அமேதி தொகுதியில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார். சஞ்சய் காந்தியை தோற்கடித்தவர் ரவீந்திரன் பிரதாப்.

உ.பி., மேற்கு வங்கம், டெல்லி, பீகார் என வட மாநிலங்கள் எல்லாம் காங்கிரசை மிகக் கடுமையாக விரட்டியடித்த நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம் என தென் மாநிலங்கள் மட்டும் இந்திரா பின்னால் நின்றன. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி 189 இடங்களை பெற்றிருந்தது. இதில்,  கட்சி ஆரம்பித்து முதலாவது தேர்தலை சந்தித்த அதிமுக மட்டும் 19 இடங்களில் வென்றிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பிறகு மொரார்ஜி தேசாய் அரசுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தது அதிமுக. பலாப்பழனூரார், சத்தியவாணி முத்து என இருவர் அதிமுக மந்திரிகளாகினர். இதன் மூலம் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாதவர்களை, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரிகளாக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார் எம்ஜிஆர். மொரார்ஜி தேசாயின் இந்த மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை மந்திரியாக வாஜ்பாயும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக அத்வானியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த மூன்றே மாதங்களில், இந்திரா காந்தியால் கலைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களை மொரார்ஜி அரசு நடத்தியது. தமிழகத்தில் 1977 ஜூன் 10ம் தேதி நடந்த இந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 முனைப் போட்டிக்கு இடையே ஆட்சியை கைப்பற்றியது, எம்ஜிஆரின் அதிமுக. 144 இடங்களை அதிமுக கூட்டணி வென்றது. தனித்து போட்டியிட்ட இந்திரா  காங்கிரஸ் 32 இடங்களையும் 9 ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக 48 இடங்களையும் பெற்றன.

இதற்கிடையே, கூட்டுக்கலவையான மத்திய ஜனதா அரசுக்குள் தலைவர்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு, மற்றொரு அரசியல் குழப்பத்தை நோக்கி இந்தியாவை இழுத்துச் சென்றது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday 3 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -14

 நாட்டில் நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977 ஜனவரி 18ல் பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். "இந்திய ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை இந்த தேர்தல்" என்றார் மொரார்ஜி தேசாய். ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கினார்கள். 



தேர்தல் அறிவித்த ஐந்தே நாளில் ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஜெயபிரகாஷ் நாராயணன். ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜர் போன்ற இந்திரா எதிர்ப்பு தலைவர்களின் சிண்டிகேட் காங்கிரஸ்), ஜனசங்கம் (பழைய பாஜக), லோக்தளம், சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி என 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கலைக்கப்பட்டு ஜனதாவுக்குள் ஐக்கியமாகின. கட்சியின் சின்னம் ஏர் உழவன்.

ஜனதா கட்சியின் தலைவரானார் மொரார்ஜி தேசாய். பொதுச் செயலாளராக ராமகிருஷ்ண ஹெக்டே, செய்தி தொடர்பாளராக அத்வானி தேர்வாகினர். வாஜ்பாய், பிஜு பட்நாயக், ராஜ் நாராயண், கிவத்ராம் கிருபளானி, ஜெகஜீவன்ராம்  போன்றவர்கள் எல்லாம் ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள். இப்படி, பல்வேறு கொள்கைகள் கொண்ட தலைவர்கள் இணைந்து உருவான கட்சி ஜனதா. கலவையான சாப்பாட்டை 'ஜனதா சாப்பாடு' என அழைத்தது இப்படித்தான். 40 பிளஸ் வயதில் இருப்பவர்களுக்கு இது தெரியும்.



இந்திராவை வீழ்த்தும் ஒற்றை நோக்கோடு 10 கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சியுடன் திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தன. 1977 பிப்ரவரி 10ம் தேதியன்று ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. "சுதந்திரமா...? அடிமைத்தனமா...?" இதுதான் ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதான கோஷமாக இருந்தது.

இந்திராவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய கட்சிகளும் தலைவர்களும் திரண்ட போதிலும் இந்திராவின் இண்டிகேட் காங்கிரசுடனும் சில கட்சிகள் கைகோர்த்தன. அதில், அதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் முக்கியமானவை. அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த பிறகு சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் இதுதான்...

தமிழகத்தில் ஜனதா, திமுக ஒரு அணியாகவும் இந்திரா காங்கிரஸ் அதிமுக ஒரு அணியாகவும் களமிறங்கிய 1977 நாடாளுமன்ற தேர்தல், அதிர்ச்சி, மாற்றம், திருப்பம் என விதம் விதமான முடிவுகளை தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்.

Saturday 30 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -13

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நெருக்கடி நிலைநோக்கி இழுத்துச் சேன்ற தேர்தல், 1971ம் ஆண்டு தேர்தல். ஏராளமான தேரதல் முறைகேடு புகார்களை எதிர்க்கட்சியினர் கூறி வந்த நிலையில் உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்து நின்ற ராஜ் நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம் (நீதிபதி ஜக்மோகன்லால் சின்கா) இந்திராகாந்தியின் எம்பி வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் (நீதிபதி கிருஷ்ண அய்யர்) அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 1975ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. ஏற்கனவே, அலகாபாத் தீர்ப்பு வெளியானதுமே இந்திராவை பதவி விலகச் சொல்லி ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்திக் கொண்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்று நள்ளிரவிலேயே அரசியல் சட்டத்தின் 352வது பிரிவை பயன்படுத்தி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார், இந்திரா காந்தி. அதற்கு இந்திரா கூறிய காரணம், இந்தியாவில் உள்நாட்டு குழப்பம் அதிகரித்து விட்டது என்பதாகும். நெருக்கடி நிலை உத்தரவில் கையெழுத்திட்டார், இந்திராவால் ஜனாதிபதி பதவிக்கு வந்திருந்த அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது.



இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தலுக்கு சரியாக பத்து மாதங்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தமிழகம் உட்பட பல மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டன. பதவி பறிக்கப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைத்து முன் கூட்டியே தேர்தலை இந்திரா நடத்தி இருக்கலாம். அப்படி செய்யாமல், சர்வாதிகாரியாக மாறினார். 

1975 மார்ச் ஜூன் 25ல் அமலான நெருக்கடி நிலை அல்லது எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் இருண்ட காலம், இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எமர்ஜென்சி நீட்டிக்கப்பட்டது. எமர்ஜென்சி காலம் என்பது மிக நீளமான, சோகமான கருப்பு சரித்திரங்கள் நிரம்பியது. மிசா கொடுமைகள் தாண்டவமாடிய அந்த வரலாறு தனிக்கதை.



அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திராவும் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தியும் மட்டுமே இந்தியாவின் ஏகபோக முதலாளிகள் போல செயல்பட்டனர். நெருக்கடி நிலை அமலானதும் முதல் கைது, இந்திராவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராஜ் நாராயணன்தான். அதன்பிறகு,  மொரார்ஜி தேசாய், ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன், சரண்சிங், வாஜ்பாய், அத்வானி, அருண் ஜெட்லி என தேச தலைவர்கள் தொடங்கி மாநில அரசியல் தலைவர்கள் வரை பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளும் கூட சென்சார் செய்தே வெளியிடப்பட்டன. இந்திரா அரசுக்கு எதிரான செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



கட்டாய கருத்தடையை கொண்டு வந்தார் சஞ்சய் காந்தி. மக்கள் தொகையை காரணம் கூறி ஒரே ஆண்டில் 83 லட்சம் பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகமும் கருத்தடை செய்யப்பட்டு கிடந்த நிலையில் ஒரு வழியாக, நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 25 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -12

 

இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஒருபுறம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலான மற்றொரு காங்கிரஸ் மறுபுறம் என களை கட்டியது 1971ல் நடைபெற்ற ஐந்தாவது பொதுத் தேர்தல். இது தவிர, 1967க்கு பிறகு மாநில கட்சிகளின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. எனவே எதிர் பார்ப்பு எகிறத் தொடங்கியது.



தேர்தல் முடிவில் 352 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்திராவின் காங்கிரஸ். நாடு முழுவதும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக உயர்ந்தார். அதே சமயத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் 51 இடங்களில் மட்டுமே வென்றது. 

இது தவிர, ஜனசங்கம் 22, இந்திய கம்யூனிஸ்ட் 23, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 என வெற்றி பெற்றன. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் இரும்பு பெண்மணியாக மாறத் தொடங்கினார் இந்திரா காந்தி. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. 1971ம் ஆண்டு டிசம்பர் 3ல் தொடங்கிய போர் சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது.

இந்தியாவுக்கு மேற்கு பக்கம், கிழக்கு பக்கம் என இரண்டு பக்கமும் இருந்த பாகிஸ்தானால் இந்தியாவுக்கு தொல்லை அதிகமாக இருந்தது. இதற்கிடையே, மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) நிர்வாகம் தங்களை இரண்டாம்தரமாக நடத்துவதாக கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

பாகிஸ்தானின் இந்த உள்நாட்டு குழப்பத்தை சாதகமாக்கி களத்தில் இறங்கியது. இந்திராவின் தலைமையிலான இந்தியா. கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்க இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வெடித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கு வெற்றி. அதன் விளைவாக, இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, பாகிஸ்தான். 



ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்திராவால் இப்படி இரண்டாக பிரிந்தது. இந்தியாவின் உதவியோடு, 1971 டிசம்பர் 16ம் தேதி கிடைத்த உள்நாட்டு கிளர்ச்சியின் வெற்றியை தொடர்ந்து 1972 மார்ச்சில் வங்கதேசம் என்ற தனி நாடாக கிழக்கு பாகிஸ்தான் மாறியது. இதனால், இந்திய மக்களின் மத்தியில் இந்திராகாந்தி என்ற பெயரே பிரமிப்பை ஏற்படுத்தியது. அது, இந்திராகாந்தியை சர்வாதிகார பாதையை நோக்கி பயணம் செய்ய வைத்தது.

ஏற்கனவே கட்சிக்குள் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி தேர்தலில் வென்ற இந்திராவை,  மக்கள் தந்த வெற்றியும் போருக்கு பிந்தைய செல்வாக்கும் வேறு பரிமாணம் நோக்கி அழைத்துச் சென்றது. கூடவே, அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. விளைவு, இந்திய ஜனநாயகமானது பேராபத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்