Friday 23 December 2016

வெற்றியை நோக்கி - 2

கற்பனை கோட்டை கட்டுவோம்


இந்த உலகில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம், எழுதும் பேனா, சமையல் அடுப்பு, செல்போன், படிக்கும் கல்வி நிலையம் என அந்த பட்டியல் மிக நீளமானது. அனைத்துக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? கற்பனை. ஆச்சரியமாக இருக்கிறதா? பேனாவுக்கும் கற்பனைக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். சமையல் அடுப்புக்கும் கற்பனைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இருக்கிறது. நம் கண் முன்னே காட்சி தரும் ஒவ்வொரு பொருளுமே ஏதோவொரு மனிதனின் மூளையில் உதித்த கற்பனையின் நிஜக்காட்சிகள் தான். கற்பனை இல்லாவிட்டால் இந்த உலகில் எதுவுமே கிடையாது. சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஆகாய விமானம் என்பது முதலில் ஒரு மனிதரின் கற்பனையில் உதித்ததே. அதற்கு, அவனுக்கு உந்து சக்தியாக இருந்தது பறவை இனம். பறவையை சாதாரண கோணத்தில் பார்க்காமல் தேடலுடன் கூடிய கற்பனை கோணத்தில் பார்த்ததால் ஆகாய விமானம் பிரசவித்தது.

பல ஆயிரம் மக்களை சுமந்து கொண்டு பல நூறு கி.மீ தொலைவு ஓடும் ரயிலும் ஏதோ ஒரு மனிதரின் கற்பனையில் தான் முதலில் ஓடியது. அந்த பெட்டிகளின் வடிவமைப்பு, என்ஜின்களின் வகை என ஒவ்வொன்றும் வெவ்வேறு தனி மனிதனிடம் உதித்த கற்பனைகளே. இன்றும் கூட அரண்மனை போன்ற சொகுசு பெட்டிகள், டபுள் டெக்கர், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என புதுப்புது ரயில்கள் அறிமுகமாகின்றன. அதுவும் மனித கற்பனை வளத்தினால் விளைந்த கனிகளே.

உலகில் உள்ள வைரச் சுரங்கங்களும், தங்கச் சுரங்கங்களும், நிலக்கரி சுரங்கங்களும் ஒரு காலத்தில் சாதாரண மண் தரைகளே. தன்னுடைய காலுக்கு கீழே புதையல் இருக்கலாமோ என்ற கற்பனை, யாரோ ஒருவர் மனதில் உதித்ததாலேயே நிலத்தை ஊடுருவி தோண்டும் பணியை மனிதன் துவக்கினான். அந்த தேடல் தான் வைரச் சுரங்கமாகவும் தங்கச் சுரங்கமாகவும் மாறி நிற்கிறது.

சிந்தனையை கற்பனை சுரங்கமாக வைத்திருந்தால் புதிய யோசனைகளின் ஊற்றுக்கண்ணாக மாறும். சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் உபயோகம் மிகுந்த பொருட்கள் உருவாகும்.

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற தனி மனிதன் கற்பனை காணாமல் இருந்திருந்தால் இன்று பேசும் படக் கருவி முதல் பல்வேறு பொருட்களும் அதன் பரிணாம வளர்ச்சியினால் விளைந்த நவீன தொழில்நுட்ப கருவிகளும் நம்மை வந்து சேர்ந்திருக்காது. கிரகாம்பெல் கற்பனையில் நீண்டநாட்களாக மணி அடித்துக் கொண்டிருந்த தொலைபேசி என்ற கருவியை அவர் நிஜமாக்கி காட்டியதால் தான் இன்றைய கால கட்டத்தில் விதவிதமான செல்போன்கள் நமக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பயன்களை அள்ளித் தருகின்றன. எனவே, கற்பனை என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியம். உதாரணமாக ஒரு கதையை கூறலாம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். ராமு, சோமு என்பது அவர்களின் பெயர்கள். அவர்களின் தேர்வு எண்கள் கூட அடுத்தடுத்தே அமைந்திருந்தன. இதனால், ஒவ்வொரு தேர்வின்போதும் ராமுவின் தேர்வு தாளை பார்த்து எழுதுவதையே வழக்கமாக வைத்திருந்தான், சோமு. அது, ஓவிய தேர்வாக இருந்தால் கூட. ராமு எந்த ஓவியத்தை கற்பனையில் வரைகிறானோ அதையே சோமுவும் காப்பியடிப்பது வழக்கம். சோமுவின் வழக்கம் மாறவில்லை. பள்ளிப்பருவம் முடிந்தது. ஆண்டுகள் உருண்டோடின.

வளர்ந்து பெரியவனான சோமு வேலை தேடியபோது ஒரு ஜெராக்ஸ் கடையில் தான் பணி கிடைத்தது. ராமுவோ, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் எக்சிகியுடிவ் அளவுக்கு உயர்ந்தான். அவனுடைய கற்பனை கலந்த வரைபடங்களுக்கு கடும் கிராக்கி என்பதால் நிறுவனம் சார்பாக பல்வேறு வெளிநாடுகளையும் அவன் வலம் வந்தான். இது வெறும் கற்பனை கதை அல்ல. கற்பனை திறன் இருந்தால் மட்டுமே மனித வாழ்வில் ஜொலிக்க முடியும் என்பதை கூறும் கதை.   

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். வேலை தேடுபவராக இருக்கலாம். ஏதாவது ஒரு துறையில் பணியாற்றுபவராக இருக்கலாம். இல்லத்தரசியாக இருக்கலாம். மாணவராக இருக்கலாம். மிகப்பெரிய தொழிலதிபராக கூட இருக்கலாம். உங்களுக்கான கடமையில் கற்பனைத் திறனும் கலந்து இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியானது, தனித்துவமாக இருக்கும்.

இதனால் தான், சிறிய வயதிலேயே மாணவர்களை கனவு காணுங்கள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஊக்கப்படுத்தினார். கற்பனையின் மற்றொரு வடிவம் தான் கனவு. ஏதாவது ஒன்றை தொடர்ந்து கற்பனை செய்து பார்த்தால், அதை நிஜமாக்க வேண்டும் என்ற உத்வேகம் மனதுக்குள் எழும்.

தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், கல்வி, அறிவியல், விண்வெளி, கணினி என ஒவ்வொரு துறையும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்னும் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அடிப்படை காரணம், அந்த துறை சார்ந்துள்ளவர்களின் கற்பனை திறன். வெற்றி என்ற சாதனையை அடைய துடிக்கும் ஒவ்வொருவருக்கும் கடமையுடன் கூடிய தேடல் நிறைந்த கற்பனைத் திறன் அவசியம்.

(வெற்றிப் பயணம் தொடரும்...)

Wednesday 21 December 2016

வெற்றியை நோக்கி ... 1

வாங்க பழகலாம்

இது போட்டி நிறைந்த உலகம். உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் போட்டி நிலைமையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டாம். பரப்பளவில் பெரியதாக உள்ள நாடுகளில் கூட மக்கள் தொகை குறைவாகவே இருக்கிறது. ஆனால், குறைவான பரப்பளவு, நிறைவான மக்கள் என இந்தியா திண்டாடுகிறது. இப்படித்தான் பலருடைய கருத்துகளும் உள்ளது. மனித சக்தி என்ற மகத்தான வலிமை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு மனித சக்தி இந்தியாவில் இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையும் வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதால் சிந்தனை சக்தியும் நிறைந்து நிற்கிறது. இதை கருத்தில் கொண்டே, சர்வதேச நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து கடை விரிக்கின்றன என்பது தனிக்கதை.

எனவே, இந்த அளவுக்கு பெரிய அளவிலான கும்பலாகவும் தனித்த சிந்தனைகளுடனும் இருக்கும் ஒரு நாட்டில் வெற்றியாளராக வலம் வர வேண்டுமானால் நாம் தனித் திறமையை வித்தியாசமான முறையில் வெளிக்காட்டுவது மிக அவசியம். அது வெறும் அறிவுத் திறனை மட்டும் சார்ந்தது கிடையாது. வாழ்வியல் திறனை மேம்படுத்துவதிலும் இருக்கிறது. இதையே அனுபவ அறிவு அல்லது வெளி உலக அனுபவம் என அழைக்கின்றனர். அதாவது, பழகும் திறமை முக்கியமானது. அதனால் தான், ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே வளாக தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பலரும் இந்த திறமையாலேயே தேர்வாகின்றனர். மற்றவருடன் எளிதில் பழகும் திறன் உடையவர்களை அனைவருமே விரும்புவார்கள். அடுத்தவரை கவரும் பேச்சாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் இந்த திறமை இயல்பாகவே வாய்க்கும். பழகும் திறனில் கனிவான பேச்சும் கலந்தால் தேனோடு கலந்த தெள்ளமுதாகி விடும். இனிமையான சொல்லும் கனிவான பேச்சும் எதிரில் இருப்பவரை நம் வசப்படுத்தும். கனி இருக்கும்போது காயை யாராவது விரும்புவார்களா?

அப்படிப் பழகும்போது நம்மை விட சிறியவர்களையும் மரியாதையாக நடத்துவது சிறந்தது. 100 வயதை எட்டும் ஒருவர், சந்திக்கும் அனைவருமே வயதில் அவரை விட சிறியவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரு நிலையிலும் அனைவரையும் மரியாதையாக அணுகுவது சிறந்தது. தனது 90 வயதை கடந்த நிலையிலும் சிறிய குழந்தையை கூட, ‘வாங்க, உட்காருங்க’ என அழைத்தவர், ஈவேரா பெரியார். அதனால் தான், அவர் இன்றும் என்றும் பெரியாராக இருக்கிறார். இதையே, ‘கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்’ என கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.

காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. நேற்று முன்தினம் தான் புதிதாக பிறந்தது போல இருந்த இந்த ஆண்டின் ஓட்டம் முடிந்து எதிரில் புத்தாண்டு தயாராக நிற்கிறது. மனித வாழ்வும் தொடர் ஓட்டம் போலத்தான். அதில் குறுக்கிடும் அனைவருமே நமக்கு தேவை. நம்மை நாடி வரும் ஒவ்வொருவரும், நமக்காக ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பை உடுத்துக் கொண்டே நம்மை தேடி வருகின்றனர். எனவே, வாங்க பழகலாம் என பழகி வைப்பது முன்னேற்றத்துக்கான முதல் அடியாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு வாயில் கதவை தட்டுகிறது. கதவை திறந்து பார்த்தால் துதிக்கையில் பூமாலையை ஏந்தியபடி பிரமாண்டமான யானை கூட நிற்கலாம். அதை வரவேற்பதும், வரவேற்கும் முறையுமே நமது வாழ்க்கை ஓட்டத்தை நிர்ணயிக்கிறது.

எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல மாலையுடன் காத்திருக்கும் யானையை வரவேற்க செல்லும்போது கையில் தீப்பந்தம் ஏற்றியபடி வாயில் கதவை திறந்தால், அது யார் தவறு?

நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதவை கூட எதிர்காலத்தில் நிஜமாக கூடும். உதாரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன் பேஜர் என்ற ஒரு கருவி இருந்தது. வெறும் எஸ்எம்எஸ் தகவலை மட்டுமே அது அளிக்கும். நம்மில் பலருக்கும் அது மங்கலாக நினைவில் வரலாம். பேஜர் புழக்கத்தில் இருந்தபோது அதில் தமிழில் தகவல் வருவதே அதிசயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், இன்றைய செல்போன் உலகம் குறித்து யாராவது கற்பனையில் கூறியிருந்தால் அவரை ஒரு மாதிரியானவர் என்று தான் பரிகசித்து இருப்போம். ஆனால், செல்போன் வளர்ந்து ஆன்ட்ராய்டு, ஐ பேட் என பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. உள்ளங்கையில் உலகம் அடங்கி விட்டது. இது இன்னும் வளரலாம். நம்மால் நம்ப முடியாத அதிசயங்கள் கூட நடக்கலாம்.

இந்த இடத்தில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் சற்று பொருத்தமாக இருக்கும். உலகையே கதி கலங்கச் செய்த பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போர்னபார்ட் காலத்தில் தான் நீராவி என்ஜின் முதலில் வடிவமைக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் என்பவர் நெப்போலியனை சந்தித்து, ‘காற்றை கிழித்து படகை செலுத்தும் சக்தி அந்த என்ஜினுக்கு உண்டு’ என்பதை அவரிடம் விளக்கிக் கூற அனுமதி கேட்டு காத்திருந்தார். காற்றின் போக்கிலேயே படகுகளையும் கப்பல்களையும் கடலில் செலுத்திய காலம், அது. அதனால், காற்றை எதிர்த்து படகு செலுத்த முடியும் என்பதை நெப்போலியன் துளியும் நம்பவில்லை. அதை கண்டு பிடித்து விளக்கம் கூற வந்தவரையும் முட்டாள் என்றே நினைத்தார். எனவே, ‘முட்டாள்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என பதிலளித்து ராபர்ட் புல்டனை சந்திக்க மறுத்து விட்டார்.
அந்த கணத்தில் மட்டும், ராபர்ட் புல்டனை மாவீரன் நெப்போலியன் சந்தித்திருந்தால் வரலாற்றின் போக்கு மாறி இருக்கும். கிழக்கு நோக்கி தரை மார்க்கமாக ஆட்சி விஸ்தரிப்பில் முனைந்த நெப்போலியன், மேற்கு நோக்கி கடல் பயணம் செய்திருப்பார். அப்படி சென்று இருந்தால் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அவரிடம் மண்டியிட்டிருந்திருக்கலாம். பிரெஞ்சு ஆதிக்கமே உலகில் வியாபித்திருக்கலாம். பிரிட்டிஷ் மேலாதிக்கம் என்ற ஒன்று உலகில் தலை தூக்காமலே போய் இருக்கலாம்.

பழக வந்த ஒரு நண்பனை நெப்போலியன் உதாசீனம் செய்ததால் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவு காணவில்லை. தோல்வியையே கண்டிராத நெப்போலியன், ரஷ்யாவின் வாட்டர்லூ பகுதியில் தோல்வியின் கசப்பை ருசித்தார். எனவே, நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு  அவசியம் தேவை. வாங்க பழகலாம் என ஒவ்வொருவருடனும் கை குலுக்குங்கள்.


(வெற்றிப் பயணம் தொடரும்...)

Tuesday 20 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 24

புதுச்சேரி தினகரன் பதிப்பில் எனது சுதந்திரமான செயல்களுக்கு முழு ஆதரவை எங்கள் நிர்வாக இயக்குர் ஆர்.எம்.ஆர் சார் அளித்தார். பத்திரிகை சர்குலேசனை அதிகரிக்க புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். மற்ற பத்திரிகைகளில் சென்னை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அந்த முயற்சி தொடங்கும். தினகரனை பொறுத்தவரை, அந்தந்த பதிப்பு ஆசிரியர்களும் அதற்கான முயற்சிகளை செய்யலாம். அதன்படி, புதுச்சேரி பதிப்பில் புதுப்புது பகுதிகளை அறிமுகம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.

திங்கள் தோறும் மாணவர்களின் ஓவியங்கள், கவிதை கட்டுரைகள் அடங்கிய மாணவர் களம், செவ்வாய் தோறும் விவசாய செய்திகள் அடங்கிய வேளாண் பூங்கா, புதன் கிழமை தோறும் புதுவையின் பழமை கட்டுரைத் தொடர், வியாழன் தோறும் வேலைவாய்ப்பு செய்தி மற்றும் குழந்தைகளின் படங்களுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து என தொடங்கவும் அவர் உறுதுணையாக இருந்தார்.

சில மாதங்களில் ‘வெல்கம் வியாழன்’ என்ற தலைப்பில் 4 பக்க இணைப்பு இதழும் கொண்டு வந்தேன். இதுபோன்ற 4 பக்க இணைப்பிதழ் என்பது சென்னையில் இருந்து மட்டுமே வெளியாகும். பத்திரிகைகளில் உள்ளவர்களுக்கு இது பற்றி தெரியும். ஆனால், தனியாக ஒரு பதிப்பில் இருந்து இதுபோன்ற இணைப்பை கொண்டு வருவதற்கு முழுமையாக சுதந்திரம் அளித்ததோடு, அதை முறையாக கண்காணித்து ஆலோசனைகளையும் ஆர்.எம்.ஆர். சார் வழங்கியதை மறக்க முடியாது.

மத்திய அரசின் செய்தி துறை சார்பாக, பத்திரிகையாளர்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதுபோன்ற வாய்ப்புகளை பத்திரிகை நிர்வாகங்கள் வழங்கும். அதுபோல ராஜஸ்தான் மாநிலத்துக்கு பத்திரிகையாளர்களை 2012ல் மத்திய அரசின் தகவல் தொடர்பு அலுவலகம் அழைத்துச் சென்றது. அப்போது, புதுச்சேரியில் இருந்த எனக்கு அந்த வாய்ப்பை தந்தவர், ஆர்.எம்.ஆர். சார்.

சென்னையில் இருந்து மும்பை வழியாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் என ஒரு வார காலம் அந்த சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பயணத்தின் போது, தார் பாலைவனம், பொக்ரான், பாகிஸ்தான் எல்லை, ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ராணுவ ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஒரு நாள் தங்கி இருந்து சுற்றி பார்க்கும் வாய்ப்பு என நினைவில் இருந்து நீங்காத அனுபவங்களும் வாய்த்தன.

பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்து வருகிற பிப்ரவரி 1ஆம் தேதியுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1997ஆம் ஆண்டில் சென்னை கதிரவன் நாளிதழில் பணிக்கு சேர்த்துக் கொண்ட பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த எனது மரியாதைக்குரிய பாசமிகு மாமா ஆலடி அருணா இருவரும் எனது வாழ்வில் முக்கியமானவர்கள்.
வாழ்க்கை என்பதே அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் அடி மனதில் கற்கண்டாய் இனித்து கிடக்கும் அனுபவம் ஏதேனும் ஒன்று இருக்கும். என்னை பொருத்தவரை புதுச்சேரி வாழ்க்கை அதுபோன்றதே. பிரதிபலனாக, அங்கு உள்ளவர்களே அறியாத சில வரலாற்று தகவல்களை, எளிமையான அறிமுகம் செய்து வைத்த மன நிறைவு எனக்குள் இருக்கிறது. அங்குள்ளவர்களே, இதை என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
மாற்றம் (என்ற வார்த்தை) ஒன்றே மாறாதது. மற்ற அனைத்துமே மாற்றத்துக்கு உட்பட்டவையே. எனது, பத்திரிகை பணியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்த புதுச்சேரி அனுபவம் விரிவானது. எனினும், இந்த அளவில் அதை நிறைவு செய்து விட்டு, மற்றொரு சப்ஜெக்டுடன் சந்திக்கிறேன், நண்பர்களே…

நன்றி.

என்னை கவர்ந்த புதுச்சேரி - 23

புதுச்சேரி செய்தித் துறையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் செய்தியாளர்களுக்கான அங்கீகார (அக்ரிடேசன்) அட்டை வழங்குவது வழக்கம். அதற்கு, செய்தித் துறை இயக்குனர் தலைமையில் பத்திரிகையாளர்கள் 4 பேர் அடங்கிய குழு உண்டு. அதில் நானும் உறுப்பினராக இருந்தேன். அந்த குழுவில் புதுச்சேரி தினமலர் நிர்வாகி சுரேஷ் சாரும் (அந்துமணி ரமேஷ் சாரின் சகோதரர்) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் இந்த அளவுக்கு எனக்கு சிறப்பான இடம் கிடைப்பதற்கும், 5 ஆண்டு இனிய அனுபவத்துக்கும் முழு முதல் காரணகர்த்தா ஒருவர் உண்டு. எனக்கு எல்லாமுமாக இருந்த அந்த முதன்மையானவரை மறக்க முடியாது. அவர் தான், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர். என்னுடைய எழுத்துகள் மற்றும் அனைத்து முயற்சிக்கும் ஆதரவாக இருந்தவர் அவரே.

பத்திரிகை உலகிலும் சரி மீடியாவிலும் சரி திறமையானவர்களை கண்டறிந்து பயன்படுத்துவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் சன் குழுமம் முதன்மையானது என்பது எனது கருத்து. பெரும்பாலான மீடியாக்களில் மீண்டும் மீண்டும் ஒருவரிடமே வாய்ப்புகள் குவியும். சன் குழுமம் அப்படி அல்ல. அந்த வகையில் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர் எனக்கு அளித்த வாய்ப்பு மறக்க முடியாதது.

அவரை எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் சந்தித்தபோது, எனக்கு மூன்று வாய்ப்புகள் தந்தார். புதுச்சேரி, பெங்களூர், வேலுர், மூன்று நகரங்களில் உள்ள தினகரன் பதிப்புகளில் ஏதாவது ஒரு பதிப்புக்கு செய்தி ஆசிரியராக செல்கிறாயா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது. சென்னையிலேயே 15 ஆண்டுகள் இருந்த எனக்கு வேறு ஊருக்கு செல்ல சற்று தயக்கமாக இருந்தது.

ஆனால், பத்திரிகை பணியில் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். பெங்களூர் நகரின் காஸ்ட் ஆப் லிவிங், வேலூரின் வெயில் ஆகியவற்றை கருதி, சற்று யோசனையுடனேயே புதுச்சேரிக்கு செல்வதாக ஆர்.எம்.ஆர். சாரிடம் கூறினேன்.

அவருடனான அறிமுகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, தலைமை நிருபர் சுரேஷ் மற்றும் எனது நண்பர் குமரன். சென்னையில் தினகரன் தலைமை செய்தி ஆசிரியர் கதிர் சார், அசோசியேட் ஆசிரியர் ராமன் சார் மற்றும் ரவீந்திரன் சார் உள்ளிட்ட செய்தி ஆசிரியர்கள் அளித்த பயிற்சிக்கு பிறகு, அமைந்தது எனது புதுச்சேரி பயணம்.

(அனுபவம் இனிக்கும்)

Sunday 18 December 2016

வெற்றியை நோக்கி … முன்னுரை

வாழ்க்கை பொக்கிஷம்..
(இந்த தொடரை வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்)

கற்கால ஆதி மனிதன் தொடங்கி நவநாகரீக மனிதன் வரை அனைவருடைய இலக்கும் வெற்றியை நோக்கியே உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் அந்த வெற்றியின் பொருள் மாறுபடலாம். பள்ளியில் பயிலும் மாணவனுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவதே வெற்றி. கம்பியில் ஆடும் கழை கூத்தாடிக்கு தட்டில் விழும் அதிகபட்ச சில்லறை காசுகளே வெற்றி. படித்த இளைஞனாக இருந்தால் நல்லதொரு வேலையை தேடி கண்டுபிடித்து சேருவதே மிகப்பெரிய வெற்றி. அப்படி ஒரு வேலை கிடைத்து விட்டால் சம்பள உயர்வு, பதவி உயர்வு என வெற்றியின் எல்லைகள் விரிவடைகின்றன. பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்கும் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் போடப்படும் தொழில் உடன்படிக்கைகளே வெற்றி.

ஆனால், இந்த வெற்றியை அடைவது மிகவும் எளிதானதல்ல. அவரவர் பார்வையில் அவரவர்களின் வெற்றி இலக்கு மிகவும் கடினமானது. பிரம்மாண்டத்தின் உச்சம். வெற்றி என்பது தனி நபருக்கு மட்டுமே சொந்தமானது. அவருடைய சொந்த முயற்சியுடன் தொடர்புடையது. ஆனால், அதற்கான பயணம் கூட்டு முயற்சியால் ஆனது. மற்றவர்களின் கூட்டுறவு இல்லாமல் பயணத்தில் வெற்றி பெறலாம் என்பது அறியாமை. எனவே, அது போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது எப்படி? அது வெற்றிக் கூட்டணியாக அமையுமா?

அதே நேரத்தில், ‘நான் தனித்துவமானவன்’ என்ற கருத்து ஒவ்வொருவருடைய மனதிலும் நிலை கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர் முதுகில் சாய்ந்து கொண்டும், பிறர் தோளில் சவாரி செய்து கொண்டும் வெற்றியை ருசிப்பது என்பது மிகவும் அவலமான ஒன்று. வாழ்க்கை முழுவதும் பிறர் ஒருவரை சார்ந்தே இருப்பது சோம்பேறிகளின் செயல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சுயமாக நின்று சவால்களை எதிர் கொள்ள தனித்திறமை வேண்டும். கூட்டணியா? தனி அணியா? 

மனிதனாக பிறந்தால் தேங்கி கிடப்பதும் சோம்பி திரிவதும் சரியல்ல. கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் கோழி போல ஒரே இடத்தில் தங்கி அங்கேயே சகலத்தையும் கழித்து துர்நாற்றத்துடன் வாழ்வது வாழ்க்கையா? குளம், குட்டை என தேங்கி கிடக்கும் நீர் நிலைகளை பாருங்கள். சல சலத்து ஓடும் நதி நீரை பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? குட்டை தேங்கியே கிடக்கும். நதி ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் நதியாக மாறுவது எப்படி?

மலை முகட்டில் நீரூற்றாக துவங்கும் நதியானது, நீர் வீழ்ச்சியாக வீழ்வது உண்டு. உடனே, அந்த நதி வீழ்ந்து விட்டதாக கருத முடியுமா? அத்துடன் அதன் சகாப்தம் முடிந்து விட்டதா? இல்லையே. வயல்களை வளப்படுத்தும் நதியாக அது ஓடவில்லையா? அந்த நீர் வீழ்ச்சியை போலவே வீழ்ச்சிக்கு பிறகும் பரபரத்து உற்சாகத்துடன் ஓடுவது எப்படி?
எதை போட்டாலும் தன்னுள் ஜீரணித்து கொள்வது மண்ணின் குணம். இலை, தழைகள் துவங்கி மனித உடல் வரை அனைத்தையுமே மட்கச் செய்து துகள்களாக மாற்றி விடுகிறது. ஆனால், அந்த மண்ணையும் வெற்றி காண்கிறது, சிறு விதை. உருவத்தில் மிகச் சிறியதாக உள்ள விதைக்கு இருக்கும் விடா முயற்சி நமக்குள் இல்லையா?
வரலாற்றில் பாடங்களாகவும் படங்களாகவும் அறிமுகமான சரித்திர நாயகர்கள் முதல் நிகழ்காலத்தில் கண் முன்னே நடமாடும் சாதனை நாயகர்கள் வரை நம்மை ஆச்சரியப்படுத்தும் மனிதர்களின் பட்டியல் மிக நீளம். எந்த வித மந்திரக்கோலாலும் அந்த பட்டியலில் அவர்கள் இடம் பிடிக்கவில்லை.  அவர்களின் சாதனை சரித்திர பின்னணி வித்தியாசமானது. அது போன்ற பட்டியலில் நமக்கும் இடம் கிடைக்குமா என எதிர் பார்க்கிறீர்களா?

வெற்றியை தேடி ஓடும் மனிதர்களுக்குள் தான் எத்தனை கேள்விகள்? ஒவ்வொரு கேள்விக்கும் ஏராளமான பதில்கள் உள்ளன. அது என்ன என்ற ஆவல் மேலிடுகிறதா? ஒவ்வொருவரும் முயற்சித்தால் சாதனை மகுடத்தை சூட்டலாம். சரியான திட்டமிடலுடன் எட்டிப் பிடித்தால் வானமும் நம் வசப்படும்.

மிகப்பெரிய தோட்டங்களும் வயல் வெளிகளும் சோலைகளும் ஒரே நாளில் உருவானவை அல்ல. வெறும் மண் தரையை பூத்துக் குலுங்கும் நறுமணம் வீசும் சோலைகளாக்கி நம்மை விழி விரிய காணச் செய்தது பாட்டாளி தோழர்களின் வியர்வையும் உழைப்புமே. அதுபோன்ற உண்மையான உழைப்பை அளித்தால் நிச்சய பரிசுடன் காலம் காத்திருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பாக இருந்தால் சாதனை சிகரத்தை எட்ட முடியும். அதற்கான படிக்கட்டுகள் ஏராளம். தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, அனுபவம், கல்வி, பொறுமை, விடா முயற்சி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த படிகளை கடந்தால் வெற்றிக் கனியை சுவைக்கலாம். தொடர்ந்து வரும் பாடங்களில் அந்த படிக்கட்டுகளை நாம் காணலாம். 

(வெற்றிப் பயணம் தொடரும்...)

Saturday 10 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 22

இந்த கொண்டாட்ட பூமியில், எனது 5 ஆண்டுகளும் பெரும்பாலும் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களாகவே நிறைந்திருந்தன. தினகரன் செய்தியாசிரியராக சென்ற சில மாதங்களிலேயே புதுச்சேரியின் பழைய புகைப்படங்கள் சிலவற்றை நண்பர் குரூஸ் தனம் தந்தார். அதுதான், புதுச்சேரி பற்றிய எனது ஆர்வத்துக்கான கருவாக அமைந்தது.



பின்னர், தினகரன் நாளிதழில் அந்த புகைப்படங்களுடன் கூடிய எனது கட்டுரைத் தொடர் வெளிவரத் தொடங்கியது. அந்த தொடர் மூலம் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம். புதுச்சேரி தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி பிரதீஷ், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் தனி செயலாளர் ஜெகஜோதி, அமைச்சர் ராஜவேலுவின் தனிச் செயலாளர் முருகன் என அரசியல் ரீதியான நட்புகள் தொடங்கி, பேராசிரியரும் குறும்பட இயக்குநருமான மு.இளங்கோவன், நூலக அதிகாரி சம்பந்தம், புஸ்தக் மந்திர் சம்பத் என பலருடைய ஆதரவும் கிடைத்தது. செய்தித் துறையில் எழுத்தாளர் கணபதி (மகரந்தன்), தனசேகர் ஆகியோரையும் மறக்க முடியாது.



இது ஒருபுறம் இருக்க மூத்த பத்திரிகையாளர் உதய நாராயணன், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன், பத்திரிகையாளர்கள் தயாளன், இளவமுதன், பழனிசாமி, பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான குணவதி மைந்தன், புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் கலாபன் தொடங்கி, எங்கள் தினகரனின் சக நண்பர்கள் வரை அனைவரின் ஆதரவையும் மறக்க முடியாது.



மூன்றாண்டு தினகரன் பணியின்போதும், இரண்டாண்டு தி இந்து பணியின்போதும் விழாக்களை மறக்க முடியாது. எழுத்தாளர்கள் கி.ரா., எஸ்.ரா, இமையம், ஜோடி குரூஸ், இந்திரன் ஆகியோர் பங்கேற்ற மேடைகளில் சிறிய இடம். தினகரன் மற்றும் தி இந்து விழா மேடைகளில் இடம் என புதுச்சேரியில் எனது 5 ஆண்டு அனுபவமும், அது ஒரு விழாக்காலம்.


(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 21

புதுச்சேரி என்றதும் பலருக்கும் ஒரே மாதிரியான பிம்பம் மட்டுமே மனதில் பதிவாகி இருக்கும். வார இறுதி நாட்களில் இங்கு வரும் கூட்டமே அதற்கு சாட்சி. ஆனால், புதுச்சேரியில் இருந்து 100 கி.மீ தொலைவுக்குள் இருப்பவர்கள் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அளவுக்கு, கோவில்கள் நிறைந்த ஊர் புதுச்சேரி. மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் போன்ற பழமையான கோவில்கள் இருக்கின்றன.
இது தவிர, மிக உயரமான பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்ச நேயர், 48 அடி உயர மொரட்டாண்டி சனீஸ்வரர், மிக பிரமாண்டமான பாதாள பிரத்தியங்கிரா காளி கோவில், மயிலம் முருகன், திருவக்கரை வக்கிரகாளி அம்மன் என முக்கியமான பல கோவில்கள் உள்ளன.
பிரெஞ்சியர் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் பழமையான தேவாலயங்களுக்கும் குறைவில்லை. கடற்கரையோரம் ஐ.ஜி அலுவலகம் அருகில் இருக்கும் கப்ஸ் கோவில் முக்கியமானது. கடலோர உப்புக்காற்றால் பாதிக்கப்படாத வகையில் சுண்ணாம்புக் கல், முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை கொண்டு கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தது, அந்த தேவாலயம். மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி மாதா தேவாலயமும் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயம் தான்,



கப்ஸ் கோவில் அருகே உள்ள சிறிய கல்லறை தோட்டத்தில், பிரெஞ்சு தளபதி புஸ்ஸி கல்லறை இருக்கிறது. ஆங்கிலேயருக்கு ராபர்ட் கிளைவ் போல, பிரஞ்சியருக்கு வரப்பிரசாதமாக வந்தமைந்த டூப்ளெக்ஸின் வலது கரம் தான் இந்த புஸ்ஸி. ஆற்காடு, செஞ்சி போன்ற இடங்களை பிரெஞ்சு ஆதிக்கத்தில் கொண்டு வந்ததில் புஸ்ஸியின் பங்கு குறிப்பிடத்தக்கது.



இதுபோல, உப்பளம் பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டம், சுமார் 2 நூற்றாண்டு பழமையானது. நீண்ட தூண் போன்ற வடிவிலான சமாதி, பூ வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கண்கவரும் சமாதி என விதம் விதமான பிரெஞ்சியர் சமாதிகளை இங்கு பார்க்கலாம். புதுச்சேரியின் முதல் முதலமைச்சரான எதுவார் குபேர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறைகளும் இங்குதான் இருக்கின்றன. நவம்பர் மாதத்தில் கல்லறை தினத்தன்று ஏராளமான பிரெஞ்சியர்கள் இங்கு வந்து, தங்கள் முன்னோருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
(அனுபவம் இனிக்கும்)

Wednesday 30 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 20

ஆயிரமாண்டுகளை கடந்த அதிசயம் ஒன்றும் புதுச்சேரியில் இருக்கிறது. அது வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் கோபுரங்களை, பிரெஞ்சியர் காலத்தின்போது பீரங்கிகளை நிறுத்தி வைக்க பயன்படுத்தி உள்ளனர். புதுச்சேரியின் பிரெஞ்சிந்திய பகுதிக்குள் ஆங்கிலேயர் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு அரணாக உதவி இருக்கிறது. அதனாலேயே, இந்த கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகளை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். கோவிலுக்கு பிரான்சில் இருந்து பெரிய மணி ஒன்றும் வரவழைத்து தந்தனர்.

சமீபத்தில், கும்பாபிஷேக பணிகளுக்காக கோவிலை புதுப்பித்தபோது நிலவறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. சோழர்கள், பிரெஞ்சியர் என காலங்களை கடந்து தற்போது வரை கம்பீரமாக அருள் பாலித்து கொண்டிருக்கிறார், திருக்காமீஸ்வரர்.



வில்லியனூர் அருகிலேயே திருக்காஞ்சியில் உள்ள சிவன் கோவில் விசேஷமானது. சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலின் சிவ லிங்கம், மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. கங்கை வராக நதீஸ்வரராக சிவ பெருமான் வீற்றிருக்கும் இந்த தலம், பித்ரு தோஷத்துக்கு பிரசித்தி பெற்றது. காசியை விட, மிகச் சிறந்த புண்ணிய தலம் திருக்காஞ்சி என கூறுவது உண்டு. நான் அங்கிருந்த சமயத்தில் தான், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்தது. அகத்தியர் வழிபட்டதாக கருதப்படும், சிவ லிங்கத்தை கும்பாபிஷேக தருணத்தில் வழிபடும் பாக்கியம் வாய்த்தது.

மாசி மகம் அன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா மிகவும் சிறப்பானது. பவுர்ணமி தினமான அன்று, மூதாதையருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம். தீர்த்தவாரி விழாவுக்காக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்திருப்பார்கள். ஆறு முழுவதுமே, மனித தலைகள் தான் தென்படும். திருக்காஞ்சி மட்டுமல்ல, அன்றைய தினம் புதுச்சேரி நகரமே களை கட்டும்.

புதுச்சேரி மற்றும் திண்டிவனம், செஞ்சி, மயிலம் என சுற்றுப்பகுதியில் இருக்கும் ஏராளமான கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுச்சேரி வந்து அருள் பாலிப்பார்கள். கடற்கரை சாலை அருகே உள்ள வைத்திக்குப்பம் கடலோரத்தில், எல்லா சாமிகளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். அன்னதானம், நீர் மோர் பந்தல், கடைத்தெரு என புதுச்சேரியே விழாக்கோலம் பூண்டிருக்கும். மாசி மக தீர்த்தவாரிக்காக உள்ளூர் விடுமுறை உண்டு. பவுர்ணமி தினத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை, அன்றைய தினத்தில் புதுச்சேரியில் பார்க்கலாம்.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 19

பிரியமானவர்களை மருத்துவமனை படுக்கையில் பார்ப்பது மிகவும் கொடுமை. அது போன்ற அனுபவமும் புதுச்சேரியில் எனக்கு வாய்த்தது. அங்கு சென்ற சில மாதங்களிலேயே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட எனது தந்தை, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 45 நாள், எனக்கு மருத்துவமனையில் தான் இரவு வாசம். அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு, இரவு 11 மணிக்கு ஜிப்மர் சென்று, வார்டின் வெளிப்பகுதியில் உறவினர்கள் தங்குமிடத்தில், தரையில் பெட்ஷீட் விரித்து படுத்துக் கொள்வேன். மிகத் தீவிரமான பாதிப்பில் இருந்து 10 நாளில் அவர் மீண்ட பிறகு, அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள் எழுப்புவார்கள். வார்டுக்குள் சென்று தந்தையை எழுப்பி, வீல் சேரில் அமர வைத்து, அவரை குளிப்பாட்டி மீண்டும் பெட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 7 மணிக்குள் டிபனும் ஊட்டி விடுவேன். டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வந்து சென்ற பிறகே, வீட்டுக்குச் சென்று குளிப்பது, காலை உணவு போன்ற எனது வேலைகள் தொடரும்.

மருத்துவமனையில் இதுபோன்று கழிந்த எனது நாட்களில் பலவும் கசப்பானவை. எத்தனை நோயாளிகள், எத்தனை உறவினர்கள், ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சோகங்கள். சேலம் மாவட்ட எல்லையோர கிராமத்தில் இருந்தெல்லாம் உள் நோயாளியாக வந்திருந்தனர். ஒருநாள், எனது தந்தையின் பக்கத்து படுக்கையில் இருந்த 45 வயது நிறைந்த ஒருவருக்கு தீவிர மூச்சிறைப்பு. வென்டிலேசன் உதவியோடு அவரை எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் நன்றாக திரும்பி வந்தார். ஆனால், மறுநாள் ஹீ நோ மோர். 45 நாட்களில் இதுபோன்று பல அனுபவங்கள்.

இறைவனையோ, நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதையோ மறுப்பவர்களும் கூட, இது போன்ற அனுபவத்தை பார்த்தால், அவர்களையும் மீறி, நம்மை எல்லாம் மிஞ்சிய எல்லாம் வல்ல சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக உணருவார்கள்.

ஓரளவுக்கு உடல்நிலை தேறிய பிறகு, பிசியோதெரபி மட்டுமே தேவை என்ற நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட எனது தந்தை, வீட்டுக்கு வந்த ஒரு வாரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்ததை மறக்க முடியாது. கண் எதிரிலேயே உயிர் பிரியும் கணத்தை, வாழ்க்கையில் முதன் முதலில் அன்று தான் நேரில் பார்த்தேன். குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், நான், எனது மனைவி, அண்ணி மூவரின் முன்பாக அவரது சுவாசம் மெதுவாக அடங்கிய தருணம், ஒரு வித சப்தத்துடன் வெளியேறிய அவரது கடைசி மூச்சு, நீண்ட நாள் என்னை உறங்க விடாமல் செய்தது. சித்தர்களின் பூமியான புதுச்சேரியில் தான், எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடந்தன.

நெல்லையில் பிறந்து, சென்னையில் குடியேறி, பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று 73 வயது வரை வாழ்ந்த எனது தந்தை, தனது இறுதி மூச்சு புதுச்சேரியில் அடங்கும் என எதிர்பார்த்திருப்பாரா…? இது(இவ்வளவு)தான் மனித வாழ்வு…
(அனுபவம் இனிக்கும்)

Sunday 20 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 18

அது, அருமையான ஒரு அதிகாலைப்பொழுது. இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக புதுச்சேரி வந்திருந்த எழுத்தாளர் எஸ்.ரா., என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் வெளியாகி இருந்த தருணம். கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் எனவும், அவரது வீட்டுக்கு அழைத்து செல்ல முடியுமா எனவும் கேட்டார். கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன? அன்று மாலையே எனக்கு அந்த அருமையான, வேறு யாருக்கும் கிடைக்காத அந்த தருணம் வாய்த்தது.

புதுச்சேரியில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தான் கி.ரா. வீடு. அரசு ஊழியர் குடியிருப்பில் இருக்கிறது. அதே குடியிருப்பில், கி.ரா வீட்டில் இருந்து இரண்டு மூன்று தெருக்களுக்கு அடுத்தாற்போல் மாடியில் எழுத்தாளர் பிரபஞ்சன் குடியிருந்தார்.
கடற்கரை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழகத்தின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே குட்டியாக ஒரு புத்தகம் எழுதலாம்.



கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டது, ஆங்கிலேய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது, புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் அவரது உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது.

இந்த உரையாடலின்போது, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி. அவர் தேசாந்திரி என்பது அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்த அனுபவங்களை எஸ்.ரா. பகிர்ந்து கொண்டார். அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. கிராமங்களுக்கு பெயர் வைப்பது பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழ் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார். தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார்.

இரண்டு பெரிய எழுத்து இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது. அதன்பிறகு, ‘தி இந்து‘ நாளிதழில் வெளிவந்த ஒரு தொடரின் கட்டுரைக்காக மானா.பாஸ்கரன் சார் கேட்டுக் கொண்டதற்காக ஒரு முறை கி.ரா. அவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இரண்டு சந்திப்புகளையும் அப்போதே குறிப்புகளாக எழுதி வைத்திருந்தேன், விரிவான கட்டுரை எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால், குறிப்புகள் காணாமல் போனதாலும், அப்போதைய வேலைப் பளுவாலும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

அப்புறம், கி.ரா வீட்டில் அவரை சந்தித்து விட்டு அதீதி ஓட்டலில் எஸ்.ரா அவர்களை கொண்டு விடுவதற்காக திரும்பியபோது, சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், ‘இப்போது 90 வயது தாண்டிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்‘. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
(அனுபவம் இனிக்கும்)

Wednesday 16 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 17

புதுச்சேரியின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு உதவும் நூல்களில், ‘அனந்தரங்கப் பிள்ளை டைரி குறிப்புகள்’ முக்கியமானது. அடிப்படையில் தறி நூல் மற்றும் சாய வியாபாரியான அனந்தரங்கப் பிள்ளை, பிரெஞ்சு கவர்னர்களுக்கு தலைமை மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்தவர். அந்த சமயத்தில், தான் அறிந்த, கேள்விப்பட்ட, நேரில் பார்த்த ராஜாங்க விஷயங்களை டைரி குறிப்புகளாக எழுதி வைத்தார். அதுதான், இன்றளவும் புதுச்சேரியின் காலக் கண்ணாடி. 300 ஆண்டுகளுக்கு முன் சென்னை பெரம்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக குடியேறியவர் தான், அனந்தரங்கப் பிள்ளை.

சாதாரண தறி நூல் வியாபாரியாக வந்த ஒருவருக்கு அரசாங்கத்தின் மிக உயரிய பதவி வரை வழங்கி, அவரின் தினசரி டைரி குறிப்புகளையும் கூட, காலம் கடந்த அரிய பொக்கிஷமாக மாற்றும் இயற்கையான ரசவாத வித்தை நிறைந்த மண், புதுச்சேரி.

அத்தகைய பெருமை மிகுந்த இலக்கிய மணம் வீசும் மண்ணில் வாழ்ந்த நாட்கள், எனது (எங்களது) ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள். 15 ஆண்டுகளாக வெறும் பத்திரிகையாளராக, கட்டுரையாளனாக மட்டுமே இருந்த என்னை எழுத்தாளர் என்ற ஒரு நிலைக்கு உயர்த்தியதில் புதுச்சேரியை மறக்கவே முடியாது. எனது ஆதர்ச எழுத்தாளர்களில் முதன்மையானவரான எஸ்.ரா அவர்களின் அறிமுகமும் அங்கு இருந்தபோது கிடைத்தது எனது பாக்கியம். என்னுடைய புத்தகத்தின் நூல் அறிமுக, விமர்சன கூட்டத்துக்கு வந்து அவர் கவுரவித்ததும் மறக்க முடியாதது.



அந்த நிகழ்வுக்கு முழு முதல் காரணமாக இருந்தவர்களான புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் முத்து, எனது அலுவலக சகாவும் மூத்த சகோதரருமான வில்லியனூரை சேர்ந்த செய்தியாளர் பாரதி, போட்டோகிராபரான அருமை தம்பி ஸ்டீபன் மற்றும் உறுதுணையாக இருந்த ஒவ்வொரு நண்பர்களும் எனது நன்றிக்குரியவர்கள். புதுச்சேரி பற்றிய நினைவு எழும்போதெல்லாம் எனது நினைவலைகளில் இவர்களின் பெயர்களும் தவழ்கிறது. இந்த நினைவலைகளுக்குள், இரண்டு பெரிய எழுத்து இமயங்களை ஒரே சமயத்தில் சந்தித்த ஒரு பொன்மாலை பொழுதும் நினைவுக்கு வந்து செல்கிறது.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 16

இலக்கியம் வளர்ப்பதில் புதுச்சேரியை போன்ற நகரம் எதுவும் இல்லை. வெறும் 10 கி.மீட்டர் சுற்றளவிலான நகர எல்லைக்குள் ஏராளமான இலக்கிய அமைப்புகள் உண்டு. அவற்றுக்கு பெயர் வைப்பதிலும் ரசனையானவர்கள். குறளிசை கூடு, புதிமம் (திருக்குறள் அமைப்பு) என்பது போன்ற வித்தியாசமான பெயர்களை பார்க்க முடியும். இது தவிர, திருக்குறள் மன்றம், கம்பன் கழகம் போன்ற பெரிய அமைப்புகளும் உண்டு. வாராந்திர கூட்டம், மாதாந்திர ஆலோசனை, கவிதை வாசிப்பு, நூல் ஆய்வு என வித்தியாசமான நிகழ்வுகள்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு துறைகள், புதுச்சேரி தமிழ்ச்சங்கம், கம்பன் அரங்கம் போன்றவை அதிக அளவில் இலக்கிய சொற்பொழிவு அரங்கேறும் இடங்களில் முக்கியமானவை. இது தவிர, நகருக்குள் உள்ள ஓட்டல்களின் கருத்தரங்குகள், மினி ஹால்கள் போன்றவற்றிலும் அவ்வப்போது இலக்கிய கூட்டங்கள் களை கட்டும். நூல் அறிமுக கூட்டம், நூல் மதிப்புரை கூட்டம் ஆகியவற்றோடு பல்கலைக்கழக அரங்கம் போன்ற ஒரு சில இடங்களில் நவீன நாடக அரங்கேற்றங்களும் உண்டு. உண்மையில், புதுச்சேரியில் தமிழ் இலக்கியம் மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.



இந்தியாவில் உள்ள நூற்றாண்டுகளை கடந்த ஒரு சில நூலகங்களில், ரோமன் ரோலண்ட் நூலகமும் ஒன்று. பிரெஞ்சியர்கள் மட்டுமே படிப்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பின்னாளில் பொதுமக்களும் படிக்கும் வகையில், ‘பிப்ளியோதிக் பிப்லிக்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் பிறகு, பிரான்சை சேர்ந்த பிரபல இலக்கிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ரோமன் ரோலண்ட் பெயரில் மூன்று தளங்களில் மிகப் பெரிய பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள புத்தகங்களில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள், மிகவும் அரிதானவை.



எழுத்தாளர்கள் வேர் பிடித்து வளரவும், கற்பனை சிறகுகளை எல்லையின்றி விரித்து பறக்கச் செய்யவும் புதுச்சேரி மண்ணும் வானமும் உதவி செய்பவை என்றால் மிகையான வார்த்தைகள் அல்ல. ஆன்மிக போதனைகளை அருளிய அரவிந்தர் தொடங்கி, பாரதியார் வழியாக இன்றைய கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், விடுதலை சிறுத்தைகள் பிரமுகரும் சிறந்த இலக்கியவாதியுமான ரவிக்குமார் வரை புதுச்சேரியில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 15

அரசு அலுவலகங்கள் என்றதும் ஒருவித பிம்பம் மனதுக்குள் எழும். புதுச்சேரியில் அதுபோன்ற நிகழ்வை எங்குமே நான் பார்த்ததில்லை. மின்வாரிய அலுவலகம், கல்வி அலுவலகம், வழங்கல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு அலுவலகங்கள் என நான் பார்த்த ஒவ்வொரு அலுவலகத்திலுமே அரசு ஊழியர்கள் என்னை வியக்க வைத்தனர். தமிழகத்தில் ஏதோ ஒரு வேலைக்காக சென்று ஒரு கேள்விக்கு அடுத்து இரண்டாவது கேள்வியை கேட்டாலே எரிந்து விழுவதை பார்த்தே அனுபவப்பட்ட எனக்கு வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நாளாகும்? என்பதில் தொடங்கி பொறுமையாக பதில் சொல்வதில் வித்தியாசமானவர்கள். நமக்கு பின்னால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சந்தேகங்களுக்கு எரிச்சல் படாமல் விளக்குவார்கள். அரசு அலுவலகங்களில் வேலை துரிதமாக முடிகிறதோ இல்லையோ? அது வேறு விஷயம். வந்தவர்களுக்கு பொறுமையாக பதில் கூறுவதிலேயே பாதி வேலை முடிந்த திருப்தி, பொது மக்களுக்கு ஏற்படும். இது, அரசு கொண்டு வந்த நடைமுறையாக தெரியவில்லை. அரசு ஊழியர்களின் சுபாவமே, அதுதான்,

1964 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததாலும், இன்னமும் பிரான்சுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் பிரெஞ்சு மொழி நெருக்கமாக இருக்கிறது. அங்குள்ள மக்களின் பேச்சு வழக்கில் பிரெஞ்சு வார்த்தைகளின் கலவையை பார்க்கலாம். பள்ளியிலும் விருப்பப் பாடமாக பலர், பிரெஞ்சு மொழியை தேர்வு செய்கின்றனர். குளூனி பெண்கள் பள்ளி, பெத்தி செமினார் ஆண்கள் பள்ளி போன்றவை பிரெஞ்சியர் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள். பிரெஞ்சு பள்ளிகள் இன்னமும் புல்வார் பகுதியில் இருக்கின்றன.

பிரெஞ்சு பற்றி பேசும்போது, பிரெஞ்சு இன்ஸ்டிடியுட் பற்றிய சில தகவல்களும் நினைவுக்கு வருகிறது. கடற்கரையோரத்தில் அரவிந்தர் ஆசிரம கண் மருத்துவமனை அருகில் உள்ள அந்த நிறுவனத்தில் ஓலைச் சுவடி ஆராய்ச்சி, பழங்கால சிற்ப ஆராய்ச்சி போன்றவை பிரசித்தம். பல அரிய ஓலைச் சுவடிகளை சேகரித்து வைத்து, அவற்றை ஆய்வு செய்து வரும் பெரியவர் ஒருவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சாமி சிலைகளை அடையாளம் காண்பதில், இந்த நிறுவனம் உதவுகிறது. அங்குள்ள சிற்ப ஆராய்ச்சி பிரிவில் இந்தியா முழுவதும் உள்ள பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் மிக்க சிலைகளின் புகைப்படங்கள், அவற்றின் முழுமையான பயோ விபரங்களுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் இந்திய சிலைகளை அடையாளம் கண்டறிவதற்கு இந்த தகவல்கள் உதவுகின்றன. நான், அங்கிருந்த சமயத்தில், இந்த தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் சில சிலைகள் கண்டறியப்பட்டிருந்தது. அவற்றை, பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது அவரிடம் ஆஸ்திரேலிய அரசு வழங்கியது. இதுபோன்ற தகவல்களை பெறுவதற்காக, பல்வேறு நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் வருவது, அடிக்கடி நடைபெறும் நிகழ்வு…

(அனுபவம் இனிக்கும்)

Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 14

புதுச்சேரி குட்டி மாநிலம் என்பதாலும், அதிலும் புதுச்சேரி என்பது அந்த யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியம் என்பதாலும் அரசு சார்பிலான அனைத்து பரீட்சார்த்த முயற்சிகளும் அங்குதான் முதலில் அரங்கேறும். மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் மாநிலம் என்பதால், நல்லதோ, கெட்டதோ அங்கு சோதனை நடத்தி பார்ப்பது எளிது. அதனால், சில வசதிகளும் முதலில் கிடைத்தன.

சமையல் காஸ் மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை, முதன் முதலில் புதுச்சேரியில் தான் அறிமுகமானது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்த 45 மாவட்டங்களில் புதுச்சேரியும் ஒன்று. அங்கு 2013ம் ஆண்டிலேயே வங்கிக் கணக்கில் காஸ் மானிய தொகை செலுத்தப்பட்டது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதாலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதாலும் ஒன்றிரண்டு மாதங்களிலேயே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது, நாடு முழுவதும் அமலில் இருக்கும் அந்த திட்டத்தின் முதல் விதை அங்குதான் ஊன்றப்பட்டது.

தற்போது, ரேஷன் பொருட்களுக்கு பதிலாக மானிய தொகையை வங்கியில் நேரடியாக செலுத்துவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. அந்த முயற்சியும் புதுச்சேரியில் ஆரம்பமாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக மாதந்தோறும் 300 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னமும் அறிமுக நிலையிலேயே இருக்கிறது.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் முக்கிய தேவை, ஆதார். அதிலும் புதுச்சேரி முதன்மை மாநிலம். கிட்டத்தட்ட 100 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டு விட்டது. ரேஷன் கார்டு, ஆதார், வங்கிக் கணக்கு எண், சமையல் காஸ் இணைப்பு இவை எல்லாம் இணைந்த சிஸ்டம் அங்கு வெற்றிகரமாக ஓடுகிறது. 2 ஆண்டுக்கு முன்பே 25 ரூபாய்க்கு வண்ண பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை, அங்கு அறிமுகமாகி விட்டது.

வங்கி பற்றி கூறும்போது, இன்னொன்றையும் சொல்வது அவசியம். சில தனியார் ஏடிஎம் மையத்தில் செக் டெபாசிட் செய்யும் பாக்ஸ் இருப்பதை பார்த்திருப்போம். வங்கியில் காத்திருக்காமல் ஏ.டி.எம் இயந்திரத்திலேயே பணத்தை டெபாசிட் செய்யும் வசதி அங்கு உண்டு. பாஸ்புக்கில் கணக்கு வரவு, செலவை பதிவு செய்வதற்காக தனியாக ஒரு இயந்திரம் உண்டு. அதற்காக, பாஸ்புக்கின் பின்புறத்தில் அதற்கான ‘பார் கோடு’ பிரிண்ட் செய்து தந்து விடுவார்கள். நெட் பேங்கிங் வசதிகள் இருந்தாலும், வங்கிகளில் குவியும் சாதாரண வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க அது சிறப்பானது.

(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 13

புதுச்சேரியில் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம், இயற்கை உணவு. எங்கள் சொந்த மாவட்டத்தில் கூட, இந்த அளவுக்கு இயற்கை உணவையோ பசுமையையோ இப்போது பார்க்க முடியவில்லை. ஆனால், புதுச்சேரி அப்படி இல்லை. நகரை சுற்றிய புறநகர் பகுதி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாய பொருட்கள் வருகின்றன. திருக்கனூர், பண்டித சோழ நல்லூர், பாகூர் போன்ற பகுதிகளில் பருவமழை சமயங்களில் கண்ணுக்கு பசுமையாக இருக்கும்.

புதுச்சேரியில் ஏராளமான உழவர் சந்தைகள் உண்டு. விவசாயிகளே நேரடியாக வந்து விற்பதால் மிக சல்லிசான விலையில் நாட்டு காய் வகைகளை ஏராளமாக வாங்கலாம். 100 ரூபாய் செலவில் ஒரு வாரத்துக்கான காய், கனிகளை வாங்கி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தென்னாற்காடு மாவட்டத்துக்கே உரித்தான உணவு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வேர்க் கடலை, செடியில் இருந்து அப்படியே பறித்து வந்த தட்டை பயிறு, மொச்சை பயிறு என ஏராளமாக கிடைக்கும். கோடை காலங்களில், வீதிகளில் வெடித்த வெள்ளரிப்பழம் குவிந்து கிடக்கும். கோடையில் ஜூஸுக்கு ஏற்ற பழம் அது.

கம்பு, நாட்டு சோளம், கேழ்வரகு, சாமை, குதிரை வாலி, கம்பு போன்ற சிறு தானிய வகைகள் எல்லாம் புதுச்சேரியில் தான் எனக்கு அறிமுகமானது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் மினியேச்சராக இருக்கும் குபேர் மார்க்கெட், அதை சுற்றிய ரங்கபிள்ளை வீதி உள்ளிட்ட வீதிகளில் எல்லாம் பலவிதமான பொருட்கள் கிடைக்கும். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு பாடலில் அந்த மார்க்கெட்டை பார்க்கலாம்.



கடலோர பூமியான புதுச்சேரியில் கடல் உணவுக்கும் பஞ்சம் கிடையாது. கடலுடன் ஆறு கலக்கும் நோணாங்குப்பம் கழிமுக பகுதியில் விரால், கெண்டை, தேளீ போன்ற மீன்களை உயிருடன் வாங்கலாம். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் போன்ற சில இடங்களும் மீன்களுக்கு பிரபலம். தேங்காய் திட்டுக்கு அதிகாலை நேரத்தில் சென்றால் இறால், நண்டு போன்றவற்றை மொத்தம், மொத்தமாக வாங்கி வரலாம். சீசன் சமயங்களில் புதுச்சேரி கடலோர பகுதியில் குவியல் குவியலாக மத்தி மீன்கள் கிடைக்கும். கருவாடு மற்றும் கோழி தீவனத்துக்கு அந்த மீன் பிரசித்தம். கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வந்து அந்த மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

குறைந்த செலவில் ஆரோக்கியமான உணவு. இதுதான், நான் அறிந்த புதுச்சேரி.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி -- 12

புதுச்சேரியை நேரில் பார்த்து அறியாத ஒவ்வொருவரும் கோவா போன்ற பிம்பத்தை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். புதுச்சேரியில் எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் கூட, இது போன்ற எண்ணத்துடன் தான் வந்திருந்தார். எனது பைக்கில் சுமார் 3 மணி நேரம் நகரை சுற்றி காண்பித்ததும் அவரது எண்ணம் வடிந்து விட்டது. நகரை அழகிய சுற்றுலா தலமாக மாற்றலாம்.

ஆனால் வருவாய் பற்றாக்குறை, மத்திய அரசின் நிதி குறைப்பு போன்ற பல்லவியை ஆட்சியாளர்கள் பாடுவது வழக்கம். சுற்றுலா வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே தடுமாறிக் கொண்டிருந்தனர். வாரிய சேர்மனே (இப்போது அ.தி.மு.க. எம்எல்ஏ) இதை வருத்தமாக கூறியதும் வேதனை. இந்த நிலைமையை மாற்றலாம் என்பது எனது எண்ணம்.

நூற்றாண்டுகளை கடந்த தேவாலயங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை, கடற்கரையோரத்தில் அழகழகான தங்கும் விடுதிகள், கடைத் தெருக்கள் இப்படி நகருக்குள் பலப்பல சுவாரஸ்யங்கள். கடலுடன் ஆறு கலக்கும் கழிமுக பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம். சொகுசு படகில் அரை மணி நேரம் பயணம் செய்து கடற்கரைக்கு சென்று பொழுது போக்கி விட்டு, மீண்டும் அரை மணி நேர பயணத்தில் திரும்பலாம். இது தவிர, அதிவேக படகுகளும் உண்டு. தமிழக எல்லை வரை விரிந்து கிடக்கும் ஊசுடு ஏரியிலும் இதுபோன்ற படகு சவாரி உண்டு. கூடவே, அழகழகான பறகைவளை பார்த்து ரசிக்கலாம். அதன் அருகில், தனியார் அம்யுஸ்மென்ட் பார்க் போகோ லேண்டு என புதுச்சேரியில் ஏராளம்.

தமிழக பகுதிக்குள் இருக்கும் ஆரோவில், ஆரோவில் கடற்கரை, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், மொரட்டாண்டி பாதாள பிரத்தியங்கிரா தேவி, சனீஸ்வரர் கோயில் தனி. கடற்கரையோரத்தில் சர்வதேச தரத்திலான சொகுசு ரிசார்ட்டுகளும் உண்டு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இவ்வளவு ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. சரி விஷயத்துக்கு வருகிறேன்.



புதுச்சேரிக்கு மிக அதிக அளவில் வருவாயை தரும் மது விற்பனையை, தமிழகம் போல அரசே ஏற்கலாம். 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் தொடங்கி 15 ரூபாய் சாராய பாட்டில் வரை அங்கு விற்கப்படுகிறது. நகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கள், சாராய கடைகள் (1980களில் வெளியான தமிழ் படங்களில் காண்பிப்பார்களே அதே போன்ற கடைகள் தான்) ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அரசுக்கு 100 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், அவற்றின் விற்பனை ஆயிரம் கோடியை தாண்டும்.
உயர் ரக மதுபானக் கடைகள் ஏராளம் உண்டு. அவற்றின் உரிமங்களை புதுப்பிக்கும் வருவாய் மட்டுமே அரசுக்கு வருகிறது. ஆனால், அங்கு விற்பனையாகும் சரக்கு மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டும். கள், சாராயம் மற்றும் மதுபான கடைகளை அரசே நடத்தினாலே ஓராண்டு பட்ஜெட்டை போடலாம். இப்போது, அரசிடமே சொந்த சாராய வடி ஆலை உண்டு. அமுதசுரபி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, பேருந்து போக்குவரத்தையும் அரசுடைமை ஆக்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் யாரிடமும் அரசு கையேந்த தேவையில்லை. ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, குட்டி கட்சி, சிறிய கட்சி என பேதமில்லாமல் அனைவரின் வசம் தான் இவை அனைத்தும் இருக்கின்றன.…

(அனுபவம் இனிக்கும்…)

என்னைக் கவர்ந்த புதுச்சேரி - 11

சுற்றுலா செல்லும் பலருக்கும் புதுச்சேரியின் மிகச் சிறிய பரப்பிலான இடத்துக்கு தான் சென்று வருகிறோம் என்பது தெரியாது. கிழக்கு கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி சாலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் தொடங்கி அதீதி ஓட்டல், கடற்கரை சாலை, துறைமுகம், ரயில் நிலையம், பொட்டானிகல் கார்டன், அண்ணாசாலை, ராஜா தியேட்டர், ஆனந்தா இன் ஓட்டல் என அரை முட்டை வடிவில் ஒரு பகுதி. குறுக்காக நேரு வீதி, அனந்த ரங்க பிள்ளை வீதி உட்பட ஏழெட்டு வீதிகள். அதுதான், புதுச்சேரியின் முக்கியமான பகுதி. புல்வார் எனப்படும் பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத பகுதி.

கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சியர்கள் முதலில் இறங்கியது, கடலோர கிராமமாக இருந்த இங்கு தான். சென்னை செயின்ட் தாமஸ் கோட்டை போலவே, பிரெஞ்சியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் செயின்ட் லூயி கோட்டை என ஒரு கோட்டையை கட்டி இந்திய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். பின்னாளில், ஆங்கில பிரெஞ்சியர் இடையிலான நாடு பிடிக்கும் போட்டியில் அந்த கோட்டையை ஆங்கிலேயர் தரை மட்டமாக்கி விட்டனர்.

கல் குவியல்கள் நிறைந்த அழகிய கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், பிரெஞ்சு கட்டிடங்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், புதுவை அரசின் சின்னமான ஆயி மண்டபம், ரோமன்ட் ரோலன் நூலகம், அரசு பொது மருத்துவமனை, காவல்துறை தலைமை அலுவலகம், பிரெஞ்சு தூதரகம், புதுச்சேரியின் துறைமுகம், பல திரைப்படங்களில் தலை காட்டிய நீண்ட ஜெட்டி, கடல் காற்றை அனுபவித்துக் கொண்டே சிப் சிப்பாக மதுவை இறக்கும் வசதியுடன் கூடிய பால்கனிகள் நிறைந்த விடுதிகள் என சகலமும் நிறைந்த பகுதி. அருகில் உள்ள நேரு வீதி கடைத் தெரு பஜாரையும் சேர்த்தால் மொத்தம் 3 கி.மீ நீளம் 1 கி.மீ அகலம் மட்டுமே பரப்பளவு கொண்ட குட்டி சொர்க்கம்.

வங்கக் கடலை ஒட்டிய புல்வார் பகுதி மற்றும் அதன் நீட்சியாக இருக்கும் கடைத்தெருக்கள் நிறைந்த காந்தி வீதி, நேரு வீதி மற்றும் அதையொட்டிய நேர்க்கோடு வரைந்தது போன்ற தெருக்கள் ஆகியவையே புதுச்சேரியின் இதயம் போன்ற பகுதி. புதுச்சேரியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் எனது வார விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளின் பெரும்பாலான பிற்பகல் பொழுதுகளை களவாடியவை இந்த இடங்கள்தான். சென்னையில் இருந்த 15 ஆண்டு கால வாழ்க்கையில் மெரீனா சென்றதை விட, பல மடங்கு அதிகமாக புதுச்சேரி கடற்கரை மற்றும் புல்வார் பகுதிக்கு சென்றிருக்கிறேன், குடும்பத்துடன்.

இந்த பகுதிகளின் வடிகால் வசதி, சுத்தம் போன்றவை என்னை கவர்ந்தவை. 2015 இறுதியில் சென்னையே மூழ்கி கிடந்தபோது, அதற்கு சற்றும் குறைவில்லாத மழை, இங்கும் பெய்தது. ஆனால், புதுச்சேரி புல்வார் பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடந்ததை நான் பார்த்ததே இல்லை. 10 நிமிடம் மழை ஓய்ந்தால் போதும். தெருக்கள் பளீச். புல்வார் மட்டுமல்ல, புதுச்சேரியின் பெரும்பாலான மற்ற பகுதிகளிலும் கூட சிறப்பான வடிகால் வசதி. கிழக்கு கடற்கரை சாலையை ஓட்டிய கிருஷ்ணா நகர் போன்ற ஒரு சில இடங்களை தவிர.

கடற்கரையோர புல்வார் பகுதியில் ஏராளமான பிரெஞ்சியர்களையும் வெளி நாட்டினரையும், சுற்றுலா பயணிகளையும் பார்க்கலாம். புல்வாரில் உள்ள சிமெண்ட் சில்லுகளால் போடப்பட்ட தெருக்கள், தார் சாலைகள் மற்றும் அந்த பகுதியை பராமரிப்பதற்காக பிரெஞ்சு அரசிடம் இருந்து நிதி உதவி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்…

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 10

சுத்தமான காற்று, மாசு இல்லாத நிலத்தடி நீர் இவை எல்லாம் புதுச்சேரியின் அடையாளங்கள். நகரை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை விவசாய பூமி. தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்களின் ஆட்சிப்பரப்பின் எல்லை, புதுச்சேரி வரை விரிந்து கிடந்துள்ளது. அதனால் தானோ என்னவோ, பாகூர் ஏரி, ஊசுடு ஏரி என ஏரிகளுக்கு பஞ்சமில்லை. பாகூர், பண்டித சோழ நல்லூர், திருக்கனூர் போன்ற ஊர்களெல்லாம் பசுமை போர்த்தி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி வழியாக கடலில் கலக்கிறது. புதுச்சேரிக்குள் பாயும் ஆறுகளில் கூட பல இடங்களில் படுகை அணைகள் (தடுப்பணை அல்லது செக் டேம்) கட்டி இருக்கிறார்கள். ரங்கசாமியின் முந்தைய ஆட்சி காலங்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று. நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருப்பதால் தண்ணீருக்கு (குடிநீருக்கு) பஞ்சமே இல்லை. தினமும் மூன்று வேளை சராசரியாக 2 மணி நேரம் வீதம் குழாயில் தண்ணீர் விடுவது வழக்கம். முதலாவது தளம் வரை அந்த தண்ணீர் தானாக மேலேறி வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புறநகரம் மட்டுமல்லாமல் புதுச்சேரி நகரும் கூட, குளுமையானது தான். ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்களையாவது வளர்க்கின்றனர். இது தவிர, பூஞ்செடிகளும் வளர்ப்பது உண்டு. சாலையோர மரங்கள் தனி கணக்கு. ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்கா. இதன் வயது, 300 ஆண்டுகளுக்கு மேல்.

புதுச்சேரி மண்ணில் முதன் முறையாக அடி எடுத்து வைத்த சமயத்தில் தான், ‘தானே’ புயல் உக்கிரதாண்டவமாடி இருந்தது. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடந்தன. வீடுகளில் தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பாரதி பூங்காவும் உருக்குலைந்து கிடந்தது. பல ஆயிரம் மரங்கள் முறிந்து விட்டதாக அலுவலக சகாக்கள் என்னிடம் கூறியபோது மிகை என்றே எண்ணினேன். நாளடைவில் நகரை சுற்றி வந்தபோது அது பொய்யில்லை என்பது புரிந்தது.

தானே புயலின் பாதிப்பு சில மாதங்கள் தான் நீடித்தது. அரசும் மக்களும் உடனடியாக மரங்களை நடத் தொடங்கியதன் விளைவை 5 ஆண்டு கழித்து பார்க்க முடிந்தது. இப்போது மீண்டும் ஜொலிக்கும் பாரதி பூங்கா, புத்துணர்ச்சியுடன் மலர்ந்திருக்கும் தாவரவியல் பூங்கா எல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லை. புதுச்சேரி மக்கள் மற்றும் அரசின் முயற்சியின் பலன். அரசு ஊழியர்களுக்கும் கூட அதில் பங்கு உண்டு. கடமையாக கருதாமல் ஆத்மார்த்தமாக பணிகளை செய்பவர்கள். அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் பற்றி விரிவாக எழுதலாம்.

என்னுடைய வாழ்வில் புதுச்சேரியின் செழுமையையும் வற்றாத தண்ணீர் வளமையையும் மறக்கவே முடியாது. சொந்த ஊரில், எனது சிறிய வயதில் கூட இதுபோன்ற பசுமையை நான் பார்த்து அனுபவித்தது இல்லை. இப்படிப்பட்ட புதுச்சேரியில், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் கடல்நீர் உட்புகுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், அங்குள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில், அரசு பள்ளி ஆசிரியரும் எனது நலனில் அக்கறை கொண்டவருமான ராம் மூர்த்தி போன்றோரை நிர்வாகிகளாக கொண்ட செம்படுகை நன்னீரகம் (பெயரே எவ்வளவு இனிமை) போன்ற சுற்றுச் சூழல் அமைப்புகள் குரல் கொடுத்து வருவது ஆறுதல்.

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 9

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி என பார்த்தால் எதுவும் கிடையாது என்றே சொல்ல முடிகிறது. மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை பகுதியில் இருந்த சில தொழிற்சாலைகளும் அரசின் செயல்பாடு மாமூல் தொல்லை போன்றவற்றால் மூடப்பட்டன. ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பு தொழிற்சாலைகள் இரண்டு இருந்தன. ஏ.எடி.எம்மில் ஆயிரம் ரூபாய் திருடு போனால் கூட அங்கு சென்று போலீசார் விசாரிப்பது, உள்ளூர் ரவுடிகளின் மாமூல் தொல்லையால் அந்த நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டன. இது சிறிய உதாரணம்.

உயர் கல்வியை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் டெல்லி சென்று அனுமதி வாங்கி வருவது வழக்கம். தனியார் மருத்துவ கல்லூரிகளும் (ஏழு இருக்கின்றன) பொறியியல் கல்லூரிகளும் அரசு ஒதுக்கீடு இடங்களை அளிப்பதே கிடையாது. தமிழகம் போல இல்லை. அரசு ஒதுக்கீடு இடங்களை பெற ஆண்டுதோறும் அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படியும் கூட போதுமான இடங்களை தனியார் கல்வி தந்தைகள் வழங்குவதில்லை.

சென்டாக் (உயர்கல்வி சேர்க்கை மையம்) முன்பு ஆண்டுதோறும் மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்துவதும் ஈசிஆரில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வு. பொறியியல் கல்லூரிகளில் பாண்டிச்சேரி என்ஜினியரிங் கல்லூரி மட்டுமே அரசு கல்லூரி. மற்றவை தனியார் கல்லூரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிப்மரில் அகில இந்திய நுழைவு தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறும். அதில், புதுச்சேரிக்காக 25 இடங்கள் வரை உண்டு.

புதுச்சேரியில் பேருந்து மற்றும் மதுபானம் அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் அரசுக்கு வருவாய் கிடையாது. மதுபானம், கள், சாராயக்கடை ஏலம் மூலம் 100 முதல் 200 கோடி வரை மட்டுமே கலால் துறைக்கு கிடைக்கும். இதுபோக, சுற்றுலா வருவாய். அதுவும் தனியார் விடுதிகள் மற்றும் 5 கி,மீ தொலைவுக்கு 200 ரூபாய் வரை கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கே அது போய் சேரும்.

இப்படியாக தொழில், கல்வி, நிர்வாகம் என அனைத்திலும் ஆட்சியாளர்களிடம் திட்டமிடல் எதுவும் இல்லை. பேருந்துகள், மதுபானக் கடைகள் அனைத்தும் கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைகளிடம் தான் இருக்கின்றன. இப்படி ஒரு சூழ்நிலையில், மாநில அந்தஸ்து பெற்றால் வளம் கொழிக்கும் என்ற கோஷத்தையும்…. வெளி மாநிலத்தவர் வருகையால் தான் மாநில வளர்ச்சி முடங்கியது என்ற வாதத்தையும் புதுச்சேரி மக்களிடம் அரசியல் தலைவர்கள் பரப்புகின்றனரோ என்ற சந்தேகம் எனக்குள் உண்டு.

எல்லா மாநிலங்களையும் போலவே ஆளுங்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும், எதிர்க்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும் புதுச்சேரியில் உண்டு. அவற்றின் அணுகுமுறைகள் மற்றும் போராட்ட அறிவிப்புகளும் கூட இதையே பெரும்பாலும் பிரதிபலிக்கும்.
(அனுபவங்கள் இனிக்கும்…)

Saturday 22 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 8

மண்ணின் மைந்தர் என்ற உணர்வு, புதுச்சேரி மக்களின் மனதில் மிக ஆழமாகவே புதைந்து கிடக்கிறது. வெளிமாநிலங்களில் (தமிழக மக்களும் தான்…) இருந்து குடியேறும் மக்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் வாய்ப்புகள் தட்டிப் போவதாகவும் கருதுகின்றனர். அரசு கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரே இதுபோன்ற கருத்தை முகநூலில் எழுதினார் என்றால் சாதாரண மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியத்தை கூடவேறுபாட்டுடனேயே புதுச்சேரி மக்கள் பார்ப்பதை காண முடிகிறது. இனப்பற்றும் கூட, பரவலாக இருக்கிறது.

புதுச்சேரியில், எளிதில் ரேஷன் அட்டை பெற முடிவதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. தமிழகத்தில் டெலிட் செய்த சான்றிதழ், கேஸ் இணைப்பு, வாடகை வீட்டு ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களோடு விண்ணப்பித்தும் கூட 10 மாதங்கள் கழித்தே ரேஷன் அட்டை கிடைத்தது. ஜூனில் விண்ணப்பித்த எனக்கு மறு ஆண்டு மார்ச்சில்தான் ரேஷன் கார்டு வந்தது. சிவில் சப்ளைஸ் இணை இயக்குநரை நேரில் பார்த்து முறையிட்டும் இந்த நிலைமை. ஆனால், தமிழகம் திரும்பிய போது காலையில் சரண்டர் செய்த கார்டுக்கு மாலையிலேயே சான்றிதழ் தந்து விட்டனர். அவ்வளவு வேகம்…

சென்னையில் ஜூன் இறுதியில் விண்ணப்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் ரேஷன் அட்டையை பெற்றதோடு அக்டோபர் முதல் பொருட்களை வாங்க தொடங்கி விட்டேன் என்பதையும் இங்கு நினைவு கூறுகிறேன். இவ்வளவுக்கும் புதுச்சேரி ரேஷன் கடைகளில் சர்க்கரை விநியோகம் இல்லை. மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி, கோதுமை மட்டும் உண்டு. அதுவும் முறையாக வழங்குவது கிடையாது. ஜனவரி மாதத்துக்கான அரிசி என கூறிக் கொண்டு ஜூலை மாதம் விநியோகிப்பார்கள்.

அங்குள்ள மக்களின் உச்சபட்ச லட்சியம், பிரான்ஸ் குடியுரிமை பெறுவதே. 58 வயதுக்கு பிறகு பிரான்ஸ் அரசிடம் இருந்து சில ஆயிரம் பிராங்கோ (இந்திய மதிப்பில் ஒரு பிராங்கோ சுமார் 60 ரூபாய்) பென்சன் கிடைக்கும். இப்போதெல்லாம், குடியுரிமைக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மணமகன், மணமகளுக்கு கடும் கிராக்கி. பிறக்க போகும் குழந்தைக்கு தானாகவே பிரெஞ்சு குடியுரிமை கிடைத்து விடும். புதுச்சேரி அரசே கூட, 55 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் பென்சனாக 5 ஆயிரம் வரை வழங்குகிறது.

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 7

புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் ஒரு சட்டமன்ற தேர்தலையும் நேரில் பார்க்கும் அனுபவமும் எனக்கு வாய்ந்தது. தேர்தல் என்றாலே புதுச்சேரி மக்களிடம் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. என்னவென்று பார்த்தபோது, உண்மை முகத்தில் அறைந்தது. வேட்பாளர்கள் வாரி வழங்கும் பரிசு பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு வேனில் வந்து, தெரு முனைகளில் நின்றபடி வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு ஒரு டோக்கன் வீதம் விநியோகித்தனர். அந்த டோக்கனை பெற ரேஷன் கார்டுடன் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடந்தனர். ரேஷன் கார்டு எதற்கு என குழப்பத்தில் இருந்தபோது, அவர்களிடம் டோக்கன் வழங்கியதை ரேஷன் கார்டிலும் பதிவு செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அரசு ஆவணமான ரேஷன் அட்டையில் அரசியல் கட்சி வேட்பாளரின் பிரதிநிதி முத்திரை குத்துகிறார். பல்வேறு தேர்தல்களிலும் வெவ்வேறு முறைகேடுகளை பார்த்த எனக்கு இது புது மாதிரியாக இருந்தது. நீங்கள் டோக்கன் வாங்கவில்லையா என பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டபோது கூடுதல் அதிர்ச்சி.

ஏம்மா… இது ஓட்டுக்காக அவர்கள் தரும் லஞ்சம், அதை நாம் வாங்கலாமா..? என அறிவுரை கூறும் எண்ணத்தோடு ஆரம்பித்தால், அப்போ, இலவச மிக்சி, கிரைண்டர் மட்டும் வாங்கலாமா என எதிர்க்கேள்வி கேட்டார். அது, ரேஷன் கடை மூலமாக அரசாங்கமே இலவசமாக தரும் பொருள், இது, நம்மிடம் ஓட்டு வாங்குவதற்காக வேட்பாளர் தனது சொந்த பணத்தில் தரும் பொருள் என விளக்கினால், அதுவும் ரேஷன் கார்டுல தான் தர்றாங்க…? என கேட்டார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் கடைசி வரை அவருக்கு இரண்டுக்கும் வேறுபாடு புரியவில்லை. அந்த அளவுக்கு மக்களை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்.

பின்னர், அந்த டோக்கனை காண்பித்து குக்கர், கடாய், கேஸ் ஸ்டவ், ஹாட் பாக்ஸ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக வாங்கி வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொடுத்த பொருட்களை பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலேயே வாங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த தொகுதியில் வேறு விதமான பொருட்கள். பெரும் பண முதலைகள் போட்டியிடும் தொகுதி மக்கள் அந்த வகையில் அதிர்ஷ்டசாலிகள். மற்ற தொகுதி மக்கள், அது பற்றி பொறாமையுடன் பேசிக் கொள்வார்கள்.

நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட்டை, இந்திரா நகர் போன்ற நகரில் உள்ள சில தொகுதிகளும் புறநகரில் உள்ள சில தொகுதிகளும் கொடுத்த வைத்த தொகுதிகள். இவர்களை இன்னொரு விதமாகவும் அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்….

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி ... 6

மதுபானத்துக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் உயர் தர தனியார் மதுக்கடைகள், பார்கள், கள், சாராயக்கடைகள் ஏராளம். இரண்டு முதல் 5 லட்சம் வரையிலான மது பாட்டில் கூட கிடைக்கும். ஆனால், அங்குள்ளவர்களிடம் அந்த பழக்கம் அளவோடு இருக்கிறது. தண்ணி சாப்பிடுறாங்க… என்பது பரவலாக கேட்கும் வார்த்தை.

குடித்து விட்டு நடைபெறும் கலாட்டாக்களும் கொலைகளும் பார் மற்றும் கள், சாராயக் கடைகளிலேயே முடிந்துவிடும். அதே நேரத்தில் தெருக்களில் விழுந்து கிடப்பவரை பார்க்க முடியாது. பெருங்குடியுடன் தெருவில் ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார் என்றால் தமிழகத்திலிருந்து தண்ணி தொட்டி தேடி வந்த ஒரு கன்னு குட்டியாகத்தான் இருக்கும்.

வார இறுதி நாட்களில் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இருந்து திருவிழா கூட்டம் போல வருவது வழக்கம். விடுதிகள் நிரம்பி விடும். வெள்ளி இரவு தொடங்கி திங்கள் காலை வரை உற்சாகமான ஊர். இதை கோவா போன்றதொரு சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றாமல் இருப்பது அரசியல்வாதிகளின் தவறு.

லெட்டர் பேடு அமைப்புகள் சார்பாக போராட்டம், பந்த் அறிவித்தால் கூட நகரமே வெறிச்சோடி விடும். கடைகளின் மீது கல் எறிந்தால் என்னாவது என்ற அச்சமா? அல்லது எப்போது விடுப்பு கிடைக்கும் என்ற மக்களின் மனோபாவமா என்பது எனக்கு கடைசி வரை பிடிபடவே இல்லை. தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடப்படும். அரசு பள்ளி இயங்கும் என கூறினாலும் மாணவர், ஆசிரியர் யாரும் இருக்க மாட்டார்கள். 90 சதவீதம் தனியார் பேருந்து சேவை என்பதால் பேருந்தே இருக்காது.

அரசியல் பிரமுகர் ஒருவரின் கொலைக்காக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியே மாநிலம் தழுவிய ‘பந்த்’ நடத்திய அவலத்தையும் அங்கு நான் இருந்த கால கட்டத்தில் காண நேரிட்டது. ஜெ. தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தபோது கூட, புதுச்சேரியிலும் மூன்று நாட்கள் பந்த் நடந்தது. இவ்வளவுக்கும் புதுச்சேரியில் மூன்று அல்லது நான்காவது இடத்தில் தான் அ.தி.மு.க. இருக்கிறது.

இதுபோன்ற, காரணமே இல்லாத முழு அடைப்புகளை ஆண்டுக்கு 5 முதல் 10 முறையாவது பார்க்கலாம். ஆனால், வெறிச்சோடி கிடக்கும் நகரின் காட்சி, மாலை 6 மணிக்கு மேல் தலைகீழாக மாறி விடும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் அளவுக்கு டெரர் பாய்சாக புதுச்சேரி போலீசார் இல்லை என கூறுவது சங்கடமாகத்தான் இருக்கிறது. மக்களும் அதை எல்லாம் பெரிய விஷயமாக கருதுவதில்லை.

(அனுபவம் இனிக்கும்…)

Sunday 16 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 5

புதுச்சேரி மக்களின் வாழ்வியல் மற்றும் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றி கூற ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. தமிழகத்தின் சிறு நகரங்களில் வாழும் மக்களை போலவே மிகவும் அன்பானவர்கள். ஒரு குடியிருப்பு பகுதியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள அனைவரை பற்றிய தகவல்களையும் பெரும்பாலானோர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். புதிதாக வந்தவர்களை கூட….. சிலருக்கு பெரும்பாலான நகரவாசிகளைப் பற்றிய தகவல்கள் அத்துப்படி… அந்த விஷயத்தில் கிராமம் போன்ற நகரம் அது.

வீதியில் ஏதாவது பிரச்சினை என்றால் கை கொடுப்பது, விபத்து என்றால் வேடிக்கை பார்க்காமல் ஓடி வந்து உதவுவது என ஒவ்வான்றிலும் உதவும் எண்ணம் கொண்ட நல்ல மனசுக்காரர்கள். கொண்டாட்டத்திலும் குறைவு கிடையாது. சனி, ஞாயிறு நிச்சயம் ஓய்வு. பெரும்பாலான வார இறுதிகளில் கடற்கரையில் ஏதேனும் ஒரு விழா களை கட்டும். சில தினங்களில் காவல்துறையின் பாண்டு வாத்திய குழுவினரே கடற்கரையில் பாடல்களை இசைத்து மக்களை மகிழ்விப்பதுண்டு.

பொங்கல், தீபாவளி நாட்களில் ஒரு வார கொண்டாட்டம். குறைந்தது நான்கு நாட்களாவது எந்த கடைகளுமே இருக்காது. தீபாவளி முன் தினம் நள்ளிரவிலேயே மட்டன் கடைகள் களை கட்டும். அதிகாலையில் வெறிச்சோடி விடும்.

ஞாயிறுகளில் ஜொலிக்கும் சண்டே பஜார். விழா மற்றும் பள்ளி திறப்பு போன்ற காலங்களில் திண்டிவனம், கடலூர் வரையிலான பகுதிகளை சேர்ந்த ஏழை, நடுத்தர மக்களின் அட்சய பாத்திரம், இந்த சந்தை. மிகவும் அரிதான பழைய புத்தகங்கள் கூட சண்டே பஜாரில் கிடைக்கும்.

வலிந்து வேலை பார்ப்பதோ, வேலையை திணித்துக் கொள்வதோ கிடையாது என்பதால் ரிலாக்ஸ் மனதுக்கு சொந்தக்காரர்கள். காது குத்தில் தொடங்கி, திருமணம், இறுதி அஞ்சலி வரை டிஜிடல் பேனர்களுக்கு பஞ்சமில்லை. அரசியல் நிகழ்வு என்றால் கேட்கவே வேண்டாம். ஆகஸ்ட்டில் ரங்கசாமி பிறந்த நாளில் நகரமே பேனர்களால் களை கட்டும். ராம்போ சில்வஸ்டர் ஸ்டாலன் தொடங்கி பாகுபலி பிரபாஸ் வரை விதம் விதமான கெட்டப்களில் ரங்கசாமி சிரிப்பது கண்கொள்ளா காட்சி. புதுச்சேரி நகரை சுற்றி வந்தால் நல்ல பொழுதுபோக்கு. ரங்கசாமியே அதிகாலை வேளையில் பைக்கில் வலம் வந்து அவற்றை ரசிப்பார் என்பது கொசுறு தகவல்.



சுவாசமே, இதயமே, உயிரே இப்படியாக ஒற்றைச் சொல்லிலேயே பேனர்களில் கதறடிப்பார்கள். இது, அனைத்து கட்சியினருக்குமே பொதுவான விதி. உள்ளூர் கேபிள் சேனல்களும் அப்படித்தான். கிட்டத்தட்ட 100 சேனல்களை எட்டும். சினிமா பாடல்கள் ஒலிக்க பிறந்தநாள், திருமண நாள் விளம்பரங்கள் களை கட்டும். ஒரு வயது குழந்தை பிறந்த நாளுக்கு ‘யாரென்று தெரிகிறதா…இவன் வீரனென்று புரிகிறதா’ என்ற பாடல் ஒலிக்கும். இந்த அட்ராசிட்டிகளை வேடிக்கை பார்ப்பதே ரசனையான அனுபவம். வீட்டில் அதற்காகவே, டிஷ் கூட பொருத்தாமல் கேபிள் இணைப்பு வைத்திருந்தேன்.

அந்த சேனல்களில் பெரும்பாலானவற்றில் செய்திகளும் ஒளிபரப்பாகும். புதுச்சேரியை தாண்டிய வேறு செய்திகளில் மக்களுக்கு அதிக அளவு ஆர்வம் இல்லை என்பதால் அந்த சேனல்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம்.

(அனுபவங்கள் இனிக்கும்)

Monday 10 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 4

புதுச்சேரிக்குள் ஏராளமான சித்தர் சமாதிகள் இருக்கின்றன. அதில் முதலாவது சித்தர் மணக்குள விநாயகர் கோயிலுக்குள் உள்ள தொள்ளைக் காது சித்தர். பிரெஞ்சியரின் மத குரோதத்தை எதிர்கொண்டவர். 300 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மணக்குள விநாயகர் துணையாக இருந்து சில சித்து வேலைகளை பிரெஞ்சியருக்கு காட்டியதாக வரலாறு. கடலுக்குள் கட்டி வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் எழுந்தருளி ஆச்சரியம் ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.
தட்டாஞ்சாவடியில், கம்பளி சாமியார் சமாதி மற்றும் கோயில் இருக்கிறது. தினகரன், தினமலர் பத்திரிகை அலுவலகங்கள் அருகிலேயே இருக்கும் இந்த கோயிலின் நுழைவு வாயிலில் பதஞ்சலி முனிவரின் பிரமாண்டமான சிலை அனைவரையும் கவரும். சித்தர் சமாதியின் மீதுள்ள சிவலிங்கமும் சித்தர் அமர்ந்ததாக கருதப்படும் இருக்கையும் தெய்வீக அனுபவத்தை தருபவை.
விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வில்லியனூர் ரயில்வே கேட் அருகில் உள்ள சித்தரின் சமாதி, அக்கா சாமி மடம். இப்படி புதுச்சேரி முழுவதுமே சித்தர்களின் சமாதிகளும் ஆலயங்களும் இருப்பதால் இயற்கையாகவே அந்த மண்ணில் ஒரு சாந்தமும், அறிவுச் சுடரும் புதைந்து கிடக்கிறதோ என்னவோ? முதல்வராக இருந்த ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு தனது வீட்டு அருகிலேயே (ஜிப்மர் எதிர் பகுதியில்) கோயில் கட்டி இருக்கிறார்.


சென்னையில் இருந்து ஈசிஆர் வழியாக சென்றால் புதுச்சேரியின் நுழைவு வாயிலிலேயே கருவடிக் குப்பத்தில் சுவாமி சித்தானந்தர் என்ற சித்தரின் சமாதி உள்ளது. குரு ஸ்தலமாக கருதப்படும் இங்கு வியாழக்கிழமைகளில் புதுச்சேரி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை பார்க்க முடியும். சித்தரின் சமாதி மீதுள்ள சிவனுக்கு சிவராத்திரி நாளில் சலங்கை பூஜையுடன் விழா நடைபெறும். இந்த சித்தர் கோவிலிலும் சுற்றியிருந்த குயில் தோப்பிலும் தான் மகாகவி பாரதியார் அமர்ந்திருந்து ஏராளமான கவிதைகளை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


கருவடிகுப்பம் சித்தானந்தர் கோயில் அருகிலேயே ஒரு மயானம் இருக்கிறது. மின் மயானமாக மாற்றப்பட்ட இங்கு தான், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் நாடக, திரைப்பட கலைஞர்கள் ஊர்வலமாக சென்று இங்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த மயானத்தில் தான் எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடைபெற்றது. மண்ணுலகில் 73 ஆண்டுகள் வாழ்ந்த அவரது ஜீவன், இந்த சித்தர்களின் பூமியில் தான் முக்தி பெற்றது.

(அனுபவங்கள் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 3

புதுச்சேரி என்றாலே மருத்துவம், கல்வி இரண்டுக்கும் பிரசித்தம் என்று கூறுவது உண்டு. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். மிகச் சிறிய மைதானம், வகுப்பு அறையிலேயே மதிய உணவு என சென்ற சென்னை பள்ளி வாழ்க்கையில் இருந்து புதுச்சேரியில் நான்கு ஆண்டு பள்ளி அனுபவம் வித்தியாசமாகவே அமைந்தது எனது செல்வங்(ன்)களுக்கு.
பரந்து விரிந்த மைதானம், மைதானத்தில் நண்பர்களுடன் மதிய உணவு, ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, ஆசிரியர் தினம் முதற்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விழா, கெட் டுகதர் போல முதல்வராக இருக்கும் ரெவ்.பாதரே மாணவர்களுடன் உரையாடி திரைப் பாடல்களை பாடி மகிழ்வது (விழா தினத்தில் மட்டும்) … என அந்த கொண்டாட்டங்கள் வேறுபட்ட அனுபவம்... கொண்டாட்டங்களுக்கான பூமி புதுச்சேரி என்பதை டான்பாஸ்கோ பள்ளியிலும் உணர முடிந்தது.
எந்தவொரு இடத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை அமைந்தாலே போதும், நம்முடைய பணிகளும் முன்னேற்றமும் தானாகவே விரிந்து உயரும். அங்கு பள்ளிக் கல்வியும் அப்படித்தான். தமிழகத்தை ஒப்பிட்டால் பள்ளிக் கல்வியில் புதுச்சேரி ஒரு படி மேல் என்பது எனது எண்ணம்.
நகருக்குள் மட்டும் மூன்று அரசு மருத்துவமனைகள், அரசு மகப்பேறு மருத்துவமனை, சுற்றிலும் ஏழு மருத்துவ கல்லூரிகள் புறநகர் பகுதிகளில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுகாதார வசதியில் புதுச்சேரி கொஞ்சம் உயர்வாகவே உள்ளது. அதனால், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு சந்தேகம் இல்லை. சொந்த ஊரில் முடக்குவாதத்தால் முடங்கிய என்னுடைய தந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையையும் மறக்க முடியாது. அங்கு உள் நோயாளியாக சேர்ப்பதற்கு பெரிதும் உதவிய நண்பர் ஆதி கேசவன், மருத்துவமனை டீன் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோரின் உதவிகளை நன்றி என்ற மூன்று எழுத்துகளில் அடக்க முடியாது.


புதுச்சேரியை சுற்றிலும் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டம் வரையிலான தமிழக மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை தான் ஆபத்பாந்தவன் என்பது மிகையான வார்த்தை கிடையாது. எனினும், ஓபன் ஹார்ட் சர்ஜரி போன்ற சில மிகவும் சிக்கலான சிகிச்சைக்கு புதுச்சேரி இன்னமும் பக்குவப்படவில்லை. அதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதில், ஆட்சியாளர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிக்குள்ளான என்னுடன் பணியாற்றிய மூத்த ஊழியர் மோகன்ராஜ் சாரின் அனுபவமே அதற்கு சான்று.


அதற்காக அரசு மருத்துவமனையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து கூற முடியாது. எக்ஸ் ரே எடுப்பதில் தொடங்கி ஒவ்வொரு சிகிச்சை முறைகளையும் பார்க்கும்போது, தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளை விட கொஞ்சம் நல்ல மாதிரியாகவே அணுகுமுறைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட சிகிச்சை சரியில்லை என்றால் உடனடியாக போராட்டமும், முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
(அனுபவங்கள் இனிக்கும்….)