Friday 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

Saturday 5 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -60




"நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு முட்டாளுங்க..."

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

"சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..."

"பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..."

"ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."

இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான தத்துவ பாடல்களை தனது சொந்த குரலிலேயே பாடியவர்.


அப்படியே,

"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..."

"குங்குமப் பூவே கொஞ்சிப் புறாவே தங்கமே உன்னை கண்டதும்..."

"உனக்காக... எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக..."

"உன் திருமுகத்த ஒரு முகமா காட்டு..."

"கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே..."

இப்பிடி ஹீரோக்களைப் போலவே டூயட்டுகளிலும் கலக்கியவர். காமெடியன், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக ஜொலித்தவர் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' சந்திரபாபு. 

அவரது தந்தை அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று முழு சொத்தையும் இழந்ததால், சந்திரபாபுவின் சின்ன வயதிலேயே தூத்துக்குடியில் இருந்து சிலோனுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம். 



அங்குதான் சந்திரபாபு கல்லூரி படிப்பு வரை முடித்தார். அங்குதான் வெளிநாட்டு பாணியில் கோட், சூட், நடனம், பாடல் எல்லாமே அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தது அவரது குடும்பம். சந்திரபாபுவின் தந்தை இலங்கையில் மட்டுமல்ல, சென்னையிலும் தினமணி போன்ற பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறார்.

சென்னை வந்ததும் சினிமா சான்சுக்காக அலைந்த சந்திரபாபு 1947ல் 'தன அமராவதி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் விரக்தியில் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றத்துக்காக கைதாகி நீதிபதி முன் நின்றபோது, நீதிபதியிடமே தனது சேஷ்டை கலந்த நடிப்பை நடித்து காண்பித்திருக்கிறார். பின்னர், எச்சரிக்கப்பட்டு விடுதலையானதும், நடந்த விஷயங்களை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) 1952ல் வெளியான 'மூன்று பிள்ளைகள்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.



சேஷ்டை, அஷ்ட கோணலில் முக பாவம், பாடகர் என காமெடியன்களில் தனித்து நின்ற சந்திரபாபுவின் 'சார்லி சாப்ளின்' டைப் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர,  அடுத்த 15 ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லாருடனும் மிக முக்கியமான வேடங்களில், நாயகனுக்கு நிகராகவே நடித்தார். 

'குலேபகாவலி', 'மகாதேவி', 'புதையல்', 'பதிபக்தி', 'நாடோடி மன்னன்', 'மரகதம்', 'கவலை இல்லாத மனிதன்', 'பாதகாணிக்கை', 'கவலை இல்லாத மனிதன்' என அவர் நடித்த படங்கள் ஏராளம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான கேரக்டர். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடி சரோஜாதேவி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாடோடி மன்னன் படத்தில் கருப்பு வெள்ளை, கலர் என இரண்டு பகுதியிலும் படம் முழுவதும் வரும் நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.



சந்திரபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு நிச்சயமாக பாடல் இருக்கும். அதை அவரே பாடி நடித்திருப்பார். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மற்றும் அவர்களுக்கு முந்தைய கால பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். 

டிஎம்எஸ், ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, ஜமுனா ராணி என பிரபல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுடன் பாடியவர். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'  படத்தில் இவர் பாடிய "ஜாலி லைப்... ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்" பாடலுக்கு வாயசைத்தவர்,  சிவாஜிகணேசன்...!



1960, 70 ஸ் மட்டுமல்ல இன்றளவும் சந்திரபாபு காமெடிக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்த சந்திர பாபுவின் திருமணமே தடபுடலாகத்தான் நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற திருமண விழா அது.



"உல்லாசமாகவே... உலகத்தில் வாழவே... கல்யாணம்... ஆஹா கல்யாணம்..." என திரையில் பாடியவருக்கு நிஜத்தில் கல்யாண வாழ்வு உல்லாசமாக அமையவில்லை. அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்ததால் அந்த நபருடனேயே மனைவியை சேர்த்து வைத்து விட்டார்.

மண வாழ்வு சோகத்தை தொடர்ந்து பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார், சந்திரபாபு. சொந்த படம் தயாரித்து  நஷ்டம் அடைந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணத்தால் எதிரிகளை சம்பாதித்தார். இப்படியாக, சந்திரபாபுவின் பின்னாளைய வாழ்க்கை பரிதாபமாகி போனது. வெஸ்டர்ன் ஸ்டைலிலான அவரது நடை, பாவனை, ஸ்பூனில் சாப்பிடும் அழகு என சக நடிகர்களே வியந்து பார்த்த சந்திரபாபு பரிதாபமாக சரிந்தார்.

எம்ஜிஆருடன் தகராறு இருந்ததாக சொல்வார்கள். ஆனால், தனது சொந்த படமான 'அடிமைப் பெண்' (1969) படத்தில் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆர் தயாரித்த நாடோடி மன்னனிலும் (1958) சந்திரபாபு உண்டு.

சந்திரபாபுவின் கடைசி காலங்களில் தனது வீட்டில் இடம் கொடுத்து உதவி இருக்கிறார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 1974ல் சந்திரபாபு மரணமடைந்தபோது இறுதிச் சடங்கை நடத்த உதவியவர், சிவாஜி கணேசன்.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து, நாடு விட்டு நாடு சென்று படிப்படியாக முன்னேறி, அப்படியே படிப்படியாக சறுக்கியவர் சந்திரபாபு. அவரது பாடல்கள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கற்றுத் தரும் பாடங்கள் பல....

ஆகஸ்ட் 5. சந்திரபாபு பிறந்த நாள்...


#நெல்லை_ரவீந்திரன்