Wednesday 22 January 2020

இடக்கை - நாவல்

 ஒவ்வொரு வருஷமும் புத்தக காட்சிக்கு போனாலும் சில புத்தகங்கள் சிலரது புத்தகங்கள் மட்டுமே என்னை கவரும். முன்பெல்லாம் படிப்பதற்கு நிறைய நேரம் இருக்கும்.  செய்தி சேனல் வேலையில் அது சாத்தியமில்லாதது இப்போது ஒரு காரணம். ஆபீஸ் வீடு இடையிலான பயண தூரம் நேரமும் கூட மற்றொரு காரணம் தான். இந்த முறையும் சென்று வந்ததோடு வழக்கம் போல சில புத்தகங்களை மட்டுமே வாங்கி வந்தேன். சின்னவன், பெரியவன் விருப்ப லிஸ்ட் தனி.


கதைகள், நாவல், வருணனை நிறைந்த கட்டுரைகள் என்னைக் கவருபவை. அந்த வகையில் எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்தாளர் சாண்டில்யன். மிகப்பெரிய கதையோட்டத்தின் ஊடே அவரது வருணனை பூஞ்சோலை. காட்சிகளை அவர் விவரிப்பது மனதுக்குள்ளேயே அழகிய திரைச் சீலையை விரித்து பயாஸ்கோப் காட்டும். வெறுமனே ஓடும் கதைகள் என்னை கவர்வதி்ல்லை. பொன்னியின் செல்வனை விடவும் கடல்புறா தான் எனது ஆல்டைம் ஃபேவரைட். போர்க்களக் காட்சி, நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரணை இது மாதிரி நிறைய சொல்லலாம். காதல் காட்சிகளும் கூடத்தான். சாண்டில்யன் வேற லெவல்.


சாண்டில்யனை போலவே, என்னை கவர்ந்த நான் ஆராதிக்கும் எழுத்தாளர் எஸ்ரா. இப்போது இந்த கணத்தில் கண் முன்னே நிகழும் ஒரு காட்சியை கூட அருமையான ரசனையான கட்டுரையாக மாற்றும் எழுத்தாற்றல் அவருக்கே சொந்தமானது. எனது மானசீக குருவும் கூட. விகடனில் வெளியான துணையெழுத்து, தேசாந்திரி தொடர்களில் இருந்தே அவரை தொடர்கிறேன். 



இந்த புத்தகக் காட்சியிலும் அவரது "இடக்கை" வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்தால், 20 பக்கங்களுக்குள் அவருக்கே உரித்தான எத்தனை மேற்கோள் வாசகங்கள். யான் பெற்ற அனுபவத்தை ஊரும் பேரும் பெற இதோ சில....


"எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை" 

- அந்திம அவுரங்கசீப் நினைவில்  எஸ்ரா வார்த்தைகள்.


"உறக்கம் இரவு புகட்டும் பால். முட்டி முட்டி பால் குடித்த குழந்தை கண் அயர்வது போலத்தான் மனிதர்கள் உறங்குகிறார்கள். உறக்கம் எவ்வளவு சிறந்த மருந்து. எல்லா இரவும் ஒன்றுபோல் தோன்றினாலும் ஒவ்வொரு இரவும் தனித்துவமானது. தனி வாசனையும் இயல்பும் கொண்டது"


"அதிகாரத்தை ருசிக்க விரும்புகிறவன் கடவுளையும் ஏமாற்றவே முயற்சிக்கிறான். அவன் மனக்குரல் கடவுளை சாந்திப்படுத்த என்ன வேண்டும். கடவுளிடம் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என கற்றுத் தருகிறது"


"எந்த பேரரசனாலும் உதிர்ந்த பூவை மரத்தில் ஒட்ட வைத்து விட முடியாது. இயற்கையை எவராலும் வெல்ல முடியாது. அது ஒரு மர்மம். புதிர். அவிழ்க்க அவிழ்க்க நீண்டு கொண்டே செல்லும் புதிர்"


"காலில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தால் உதறுவதில்லையா. மணலை நாம் கண்டு கொண்டா இருக்கிறோம். எளிய மனிதர்களின் சாவும் காலில் ஒட்டிய மணல் போலத்தானே என நினைத்திருந்தார். ஆனால், காலம் அந்த மணல் கண்ணில் விழுந்த துகள் போல உறுத்திக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தி விட்டது"


"மனித நாக்கு ஓநாயினுடையதை விடவும் சிறியது. ஆனால், அது எவ்வளவு பேசுகிறது. புரள்கிறது. சதி செய்கிறது"