Sunday 30 April 2023

அறிந்த பொக்கிஷம் அறியாத பவளங்கள் -48

தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய திறமையாளர்களில் இவரும் ஒருவர். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் இப்படி ஏதாவது ஒன்றில் சாதனை படைத்தாலே அவர்களை கொண்டாடி தீர்ப்போம். ஆனால், இவர் இந்த மூன்றிலுமே ஏராளமான ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர். கூடவே, தான் இயக்கிய படங்களுக்கு கதாசிரியர். பாடகர், பின்னணி குரல், நடிப்பு என்றும் பன்முகம் உண்டு.


அவர் தான் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் தம்பி. இளையராஜா கூடவே திரையுலகுக்கு வந்த கங்கை அமரன் பற்றி நிறைய எழுதலாம்.

1977ல் வெளியான '16 வயதினிலே' படத்தின் "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே..." பாடலும் இவர்தான். அஜித்தின் 'மங்காத்தா' படத்தின் "விளையாடு மங்காத்தா..." பாடலும் இவர்தான்..


1980ஸ் ஹிட்டான 'கோழி கூவுது' படம் இவர் இயக்கம் தான். 1990ஸ் ஹிட்டான 'கரகாட்டக்காரன்' இயக்கமும் இவர்தான்.


1970ஸ் இறுதியில்  துவங்கி பாடலாசிரியராக இவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடும் ரகம்...

"பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு தேதி வந்தாச்சி..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா..."

"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை..."

"வெத்தல வெத்தல வெத்தலயோ..."

"பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்..."

"என் இனிய பொன் நிலாவே..."

"ஆசய காத்துல தூது விட்டு.."

"காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே..."

"சிறு பொன்மணி அசையும் விழி... பொன்மணி தாள லயம்..."

"புத்தம் புது காலை பொன்னிற வேளை..."

"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..."

"போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..."

இவை எல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களின் சாம்பிள்கள். ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' விஜயகாந்தின்  'அம்மன் கோவில் கிழக்காலே' மாதிரி சில படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர்தான். 



1977 துவங்கி 2kஸ் படங்களான 'மங்காத்தா' படத்தில் "விளையாடு மங்காத்தா...", "இது எங்க பலே லக்கா..." பாடல்களையும்  'கோவா' படத்தில் ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில்..." பாடலும் 'சென்னை 28' படத்தில் "சரோஜா சாமா நிக்காலோ..." பாடலும் கங்கை அமரன் தான். தலைமுறைகளை கடந்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர்.


அடுத்ததாக, இசையமைப்பாளர் என எடுத்துக் கொண்டால், 1979ல் வெளியான 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை' படம்தான் இவரது முதல் இசை. சுமார் 75 படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். 

"பொன்மானத் தேடி நானும் பூவோட வந்தேன்..." பாடலின் எங்க ஊரு ராசாத்தி இவர் இசை தான்.



கமலின் 'வாழ்வே மாயம்' படத்துக்கு இவர் தான் இசை. இதை இளையராஜா இசை என்றே ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். பாக்யராஜின்  'சுவரில்லாத சித்திரங்கள்', 'மவுன கீதங்கள்', ராமராஜனின் 'நம்ம ஊரு நல்ல ஊரு'. பிரபுவின் 'சின்னத் தம்பி பெரியத் தம்பி', 'என் தங்கச்சி படிச்சவ'. 

அப்புறம் 'அத்தமக ரத்தினமே' ("அள்ளி அள்ளி வீசுதம்மா... அன்பை மட்டும் அந்த நிலா நிலா..." பாடல்) இப்படி இவர் இசையமைத்த ஹிட் படங்களை வரிசைப் படுத்தினால் ஆச்சரியமூட்டும்.

சுமார் 70 படங்களுக்கு கங்கை அமரன்  இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால 1980ஸ் படங்களுக்கு இசை உதவி இவர்தான். 



அடுத்ததா பார்த்தால், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இதுக்கும் மேல அவர் பல சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநரும் கூட. சுமார் 20க்கும் அதிகமான படங்களை இயக்கி இருக்கிறார், கங்கை அமரன்.

1982ல் வெளியான பிரபு, சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி நடித்த 'கோழி கூவுது' படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம்.  முதல் படமே சூப்பர் ஹிட். தமிழ் திரையுலகின் அழிக்க முடியாத சாதனை காவியமான 'கரகாட்டக்காரன்' படமும் இவர் இயக்கியதுதான். 

ராமராஜனுக்கு மட்டும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'வில்லுப் பாட்டுக்காரன்', 'செண்பகமே செண்பகமே' என சுமார் பத்து படங்களை கங்கை அமரன் இயக்கி இருக்கிறார்.



பிரபு நடித்த ஹிட் படமான 'கும்பக்கரை தங்கய்யா', விஜயகாந்தின் 'கோயில் காளை' (இந்த பட பாடல்கள்  ஹிட்) படங்களும் கங்கை அமரன் இயக்கியவைதான். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு கதாசிரியரும் பாடலாசிரியரும் கூட இவரேதான்.

இது தவிர, பாக்யராஜின் ஆரம்ப கால படங்களில் அவருக்கு கங்கை அமரன் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இது போலவே, "பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...", "வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாடி என நாக ரத்தினமே..." என பாடகராகவும் கங்கை அமரன் பாடிய பாடல்களை நிறைய சொல்லலாம்.


சினிமாவில் தனக்குத் தெரிந்த எல்லா துறையிலும் பாதம் பதித்து ஜொலிக்கும் அமர் சிங் என்ற கங்கை அமரன், 1977ல் துவங்கி அவரது வாரிசுகளான வெங்கட் பிரபு,  பிரேம்ஜியின் இன்றைய படங்கள் வரையிலும் ஹிட் அடித்து வருகிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Friday 28 April 2023

தண்ணீர் போல் வாழுங்கள்

இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாதது தண்ணீர். டைனோசர் இல்லை. மம்முத் இல்லை.  ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முன் வள்ளுவர் எழுதிய விசும்புல் துளி என்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது.

இந்த உலகில் எதனுடனும் தயங்காமல் சேருவது தண்ணீர். செம்புலப் பெயல் நீர் என தமிழ் இலக்கியம் சொல்லுகிறது. விண்ணில் இருந்து தூய்மையாக விழுந்தாலும் மண்ணில் மாசாவதை பற்றி கவலை படுவதில்லை. கழிவு நீர் வாய்க்காலில் முகம் கோணாமல் கலக்கிறது. 

ஆறுகளில் நிறைந்து ஓடினாலும், குறைவாக ஓடினாலும், உப்பு கடலில் கலந்தாலும் தன்னையே மாற்றி கொள்கிறது. வீழ்ச்சியை கூட மகிழ்ச்சியுடன் செய்வது தண்ணீர் மட்டும்தான். மனிதனுக்கு சிலிர்ப்பை தருவதும் அதுவே.

ஒவ்வொரு மனிதனும் தனது அந்தரங்கத்தை தண்ணீரிடம்  முழுமையாக காண்பிக்க தயங்குவதில்லை. அந்த ரகசியத்தை ஒருபோதும் பிறரிடம் தண்ணீர் சொல்லுவதில்லை. இந்த உலகமே தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. ஆனாலும் அதன் குணம் எக்காலத்திலும் மாறியது கிடையாது.

அதனால் தான், மனிதனை புனிதப் படுத்துவதற்கு பல்வேறு மதங்களிலும் நீரையே பயன் படுத்துகின்றனர். புனித நீர், புண்ணிய நதி, பரந்து விரிந்த கடல், சிறு குழந்தை கொட்டி மகிழும் விளையாட்டு பொருள், அருவெறுப்பான சாக்கடை எதுவாக இருந்தாலும் எதற்காக பயன் படுத்தினாலும் தன்மை மாறாத தண்ணீரைப் போலவே நாமும் இருப்போம்.



Saturday 8 April 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -47

80ஸ் மோகனையும் எஸ்.என். சுரேந்தரையும் பற்றி பேசியதுமே இவர் நினைவையும் தவிர்க்க முடியவில்லை. 1980களில் வெளியான படங்களில் பெரும்பாலும் காதல் காவியங்கள்தான். அதனால் ரொமான்டிக் ஹீரோக்களும் அதிகம். அவர்களில் மோகனுக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர் இவர். இன்றைய சிவகார்த்திகேயன், விமல் மாதிரி... அவர்தான் சுரேஷ்.



எடிட்டிங், டான்ஸ் இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தவர் சுரேஷ். நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட. ஆனால், நடிகராகி விட்டார். 1981ல் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' படம் தான் நடிகராக அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு பள்ளிக்கூட பிளஸ் டூ மாணவன் வேடம். அப்போது சுரேசுக்கு 20 வயது கூட ஆகவில்லை.



உண்மையில், பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படம் தான் இவரது அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், சந்தானபாரதி படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்டு விட்டதால், பாரதிராஜாவின் படத்தில் நடிக்கவில்லை. இதனால் தான், நவரச நாயகன் கார்த்திக்கை இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.


'பன்னீர் புஷ்பங்கள்' பட வெற்றிக்கு பிறகு அடுத்த ஆண்டே கங்கை அமரன் இயக்கத்தில் பிரபுவுடன் சுரேஷ்  நடித்த 'கோழிகூவுது' செம ஹிட். தபால்காரர் ராமகிருஷ்ணனாக சுரேஷ் வருவார். அவருக்கு ஜோடி விஜி. பிரபுவுக்கு சில்க்ஸ்மிதா. அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படும் ரகம்.

அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காதல் நாயகனாக வலம் வந்தார் சுரேஷ். நதியா, ரேவதி... இவருடைய வெற்றி ஜோடிகள். 'உன்னை நான் சந்தித்தேன்', 'பூக்களை பறிக்காதீர்கள்', என இந்த ஜோடிகளின் ஹிட் படங்கள் ஏராளம்.


'வெண்ணிற ஆடை', 'காதலிக்க நேரமில்லை' படங்களின் பிரபல  இயக்குநர் ஸ்ரீதர், இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தயங்கி நிராகரித்தார். ஆனால், 1985ல் அவரே 'உன்னைத் தேடி வருவேன்' படத்தில் சுரேஷை நடிக்க வைத்தார்.


நடிகர் சுரேஷ் மிக மிக உயரமானவர். சுமார் ஆறு அடி உயரம். அதனால் டூயட் பாடும்போதெல்லாம் முழங்காலை லேசாக வளைத்தபடியே ஆடுவார். அதுவும் உயரம் குறைந்த நதியா, ரேவதி போன்றவர்களுடன் எல்லாம் அவர் நடித்தது வேற லெவல். அதே நேரத்தில் 80ஸ்களில் டிரெண்டிங்கில் இருந்த டிஸ்கோ டான்சை மிக அருமையாக ஆடிய நடிகர்களில் சுரேஷும் முக்கியமானவர்.

 'அபூர்வ சகோதரிகள்' படத்தில் "ரோஸி மை நேம் இஸ் ரோஸி...", "என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை..." பாடல்களை சொல்லலாம். அந்த படத்தில் சுரேஷுக்கு ஜோடி ஊர்வசி. நம்பவே முடியாத அளவில் 'முந்தானை முடிச்சி' ஊர்வசி செம்ம கிளாமரா நடிச்சிருப்பார். அந்த டிஸ்கோ நடன பாடல்களுக்கு இசை பப்பிலஹரி. இந்தி இசையமைப்பாளர். 1980களில் இளையராஜா உச்சத்தில் இருந்ததால் பிற மொழி இசையமைப்பாளர்கள் பலர் வந்தனர். ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரிலால், வரிசையில் பப்பிலஹரியும் ஒருவர்.

1980களில் துவங்கி தமிழில் சுமார் 100 படங்களில் சுரேஷ் நடித்திருக்கிறார். எல்லா படங்களுமே  ரொமான்டிக் வேடமாவே வந்ததால் போரடித்து, 1990களின் துவக்கத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அங்கு வெரைட்டியான ரோல்களில் நடித்த சுரேஷ், அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களும் தயாரித்திருக்கிறார்.

நம்மில் பலரும் சுரேஷ் என்ற பெயரை நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து நண்பர்களாவது இருப்பார்கள். ஆனால், 2கே கிட்ஸுகளுக்கு இந்த சுரேஷ் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கான தகவல் இது...

அஜித்தின் 'அசல்' படத்து வில்லன்... விஜயின் 'தலைவா' படத்தில் ஆஸ்திரேலிய ஓட்டல் ஓனர் கம் போலீஸ் அதிகாரி... இவரேதான்.



1990களில் தெலுங்கு பக்கமா போன சுரேஷ்,  சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு திரும்பி வில்லன், குணச்சித்திரம் என நடித்ததோடு சின்னத்திரைகளிலும்  தலை காட்டி வருகிறார்.

பதிவின் ஆரம்பத்தில் சுரேஷை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என சொன்னோம் இல்லையா..? அதுதான் இந்த பதிவின் நிறைவு தகவல். 'ஆசை' படத்தில் அஜித் பேசும் குரல் இவருடையது தான். இதுபோல நாகார்ஜுனா நடித்து ஹிட்டான 'ரட்சகன்' போன்ற சில படங்களுக்கும் அவருக்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்தான்...

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்