Tuesday 29 October 2019

சுஜித்... ஒரு பாடம்...

வழக்கம் போலவே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஃபா்வர்டு மெஸேஜ் குவிகின்றன. விசேஷ தினங்களில் வாழ்த்து செய்திகள் போலவே, இப்போதும் துக்கம், கண்ணீர் என... எவ்வளவு அழுது புண்டாலும், குழந்தை சுஜித் திரும்பப் போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் இதை படிப்பினையாக எடுப்பார்கள். இது மில்லியன் டாலர் கேள்வி. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே சமாளிப்பது கடினம். அதுவும் தவழும் பருவத்தில் இருந்து நடக்கும் பருவம் என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையை சமாளிக்க பத்து பேராவது தேவை. அதாவது, பத்து இருபது கண்கள் அவசியம்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுவரில் மாட்டும் எல்ஈடி கிடையாது. அப்போது, வீடுகளில் ஸ்டாண்டில் இருக்கும் டிவியை இழுத்து தலையில் விழுந்து பலியான சோகங்கள் நடந்ததுண்டு. இப்போதும் பெரிய சைஸ் தண்ணீ்ர் பாததிரத்துக்குள் குழந்தை விழும் பரிதாபங்களும் நீடிக்கிறது.

சுஜித் வீடு இருப்பது பல ஏக்கர் விளை நிலத்துக்கு மத்தியில். அதில் சோளப்பயிர் வேறு. அவர்கள் வீட்டு ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டதோடு, அதன் அருகே நான்கு மற்றும் இரண்டு வயது குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தது அஜாக்கிரதை அல்லாமல் வேறு என்ன? அரை கிலோ மீட்டர் இடைவெளியில் தான் மற்ற வீடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

விடுமுறை காலங்களில் ஏரி, கல் குட்டைகளில் மூழ்கி பலியாவது சமீபத்திய பேனர் பலி வரை அஜாக்கிரதையோடு தனி மனித ஒழுக்கமும் குறைந்து வருவதே கூடுதல் காரணம். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானதும் குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் முதல் பிறந்த நாள் தொடங்கி காது குத்து,  பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பணி நிறைவு, 16ம் நாள் காரியம், நினைவு நாள் என அக்கம்பக்கத்தினர் பற்றிய சுய நினைவின்றி பேனர் வைத்திருப்பார்கள். எங்கள் தெரு முனையில் மாதந்தோறும் பத்து பதினைந்து பேனர்களாவது முளைத்து விடும், திருப்பத்தில் வரும் வாகனங்களை மறைத்தபடி... இதில் எதுவும் அரசியல் பேனர்கள் கிடையாது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தினசரி செய்தியான நிலையில், சாலையில் எத்தனை பேர் முறையான ஆவணங்கள், லைசன்சுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சின்ன சின்ன பசங்க கைகளில் இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது எதனால்..? அங்கும் தனி மனித ஒழுக்கம் மிஸ்ஸிங். 

அந்த சிறுவர், சிறுமிகள் எஸ்கேப்ஆகி போனாலும் அவர்களின் தாறுமாறு டிரைவிங்கால் எத்தனை விபத்துகள் தெரியுமா? ஒருவேளை அவர்களுக்கே ஏதாவது நேரிட்டால்...? எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் மூலம், வருங்கால தலைமுறைக்கும் தனி மனித ஒழுக்கத்தை மறக்கடித்து விட்டோம்.

அத்தி வரதர் என்றதும் ஒரு சிறிய நகருக்கு பெருங் கூட்டமாக கிளம்பி சென்று நெரிசலில் சிக்கி சாவது. மாமல்லபுரத்தை சுத்தமாக்கி வைத்திருந்தால் ஒரே நாளில் படையெடுத்துச் சென்று அந்த ஏரியாவையே ஒட்டு மொத்த குப்பையாக்கி வருவது. சுஜித் மீட்பு பணி என்றதும் வல்லுநர் குழு போல கிளம்பி வருவது. அவன் மறைந்ததும் நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி வருந்துவது.

உணர்வில் ஓவர் பொங்கலாகவும் சுய அறிவை கழற்றி வைத்து விட்டு, யாரோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டம் போடும் தோல் பொம்மையாகவும்  இருக்கும் மக்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தவிர...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 23 October 2019

ஊங்கூரு அம்மங் கொட

 புரட்டாசிய பெருமாளுக்கு குடுத்திட்டதால, ஆடி தான், சென்னையில அம்மன் மாசம். ஆனா, திருநவேலி பக்கம்லாம் புரட்டாசி, ஐப்பசி மாசந்தான் அம்மன் கோயிலுங்க எல்லாம் களை கட்டும். மூணு நாள் கொடை விழாவில ரெண்டு செட்டு மேளம், ரெண்டு ஜோடி கரகம், வில்லு கச்சேரி, கணியான் கூத்துன்னு செம போர்சா நடக்கும். திங்கள் கெழம ஆரம்பிச்சி, புதன்கெழம சாயந்திரம் கெடா வெட்டோட கொடை முடியும்.

கொஞ்சம் வசதியா இருக்க கோயிலா இருந்தா, ஞாயிற்று கெழம நைட்ல பெரிய தெர கட்டி சினிமா போடுவாங்க. திருநவேலி ஐங்சன்ல போய், படத்துக்கு புக் பண்ணிட்டு வருவாங்க. மொதல்ல கருப்பு வெள்ள படம். நைட் 10 மணிக்கு மேல த்ரீ பேஸ் கரண்டு வந்த பெறவு கலர் படம். பெரும்பாலும் எம்ஜிஆர் சிவாஜி படந்தான். பட்டிக்காடா பட்டணமா, மாட்டுக்கார வேலன் மாதிரி படங்கல்லாம் மண்ண குவிச்சி வச்சி பாத்திருக்கோம். இளவட்டங்க சங்கம் இருக்கிற ஊருல, கூட ஒரு புதுப்படமும் ஓடும். அப்பிடித்தான் நல்லவனுக்கு நல்லவன் படம் முடிஞ்சப்ப, திங்க கெழம விடிஞ்சிட்டு.

கால் நூற்றாண்டு ஓடுனதே தெரியல. எவ்ளோ மாற்றம். நான் மட்டும் என்ன அப்பிடியேவா இருக்கேன். ஒவ்வொரு ஊரும் பத்து வருஷத்துக்கு ஒருக்கா, பாம்பு சட்டய உரிச்ச மாதிரி, புதுசா மாறும்னு சொல்லுவாங்க. அத அனுபவிச்சி பாத்திருக்கேன். அப்பிடித்தான், எங்க ஊரு அம்மன் கொடயும். சுமாரா 10 வருஷத்துக்கு அப்புறமா, இந்த வருஷம் எப்பிடியாவது போயே தீரணும்னு முடிவு பண்ணி, போயிட்டு வந்தேன்

ஏழு நாள் கொடையா மாறிப் போயிருக்கு, எங்கூரு அம்மன் கொட. டிவியிலயே சகட்டு மேனிக்கு படம் போடுறதால சினிமாப்படம் பிடிச்சிருந்த இடத்த... நகைச்சுவை பட்டிமன்றம் ஒரு நாள், பாட்டுக் கச்சேரி ஒரு நாள், விளக்கு பூஜை ஒரு நாள்னு வரிசையா பிடிச்சிருந்திச்சி. அப்புறமா கோயில்ல வழக்கமா நடக்கிற பூஜை, பொங்கல், கெடா வெட்டுதான். ஆனா... நெறையவே மாற்றம்... 

ரெண்டு செட்டு மேளத்தில ஒண்ணு கட்... செண்ட மேளம் புதுசா சேந்திருக்கு... மூணு நாள் பாடுன கணியான் கூத்து... ஒரு நாள் நைட்  மட்டும்னு மாறியாச்சி. அங்கேயும் அஞ்சாறு பாட்டிங்க மட்டும் கத கேக்க இல்லைன்னா கணியான் கூத்து ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் தான். அப்புறம் நையாண்டி மேளம்,  கரகாட்டம்... அங்கன பாத்தா வழக்கம்போல நல்ல கூட்டம்... அம்மன் சன்னதிலயே நடந்ததால வில்லு பாட்டு பக்கம் கூட்டம் பரவால்ல.

செவ்வாய் கிழமை சாயந்தரம் சாமி ஊர் விளையாடி வரும்போது, நையாண்டி மேளம், செண்ட மேளம்னு வழக்கமான உற்சாகம் கொறையல. அந்த நேரத்தில, தெருவில குறுக்கால குறுக்கால ரெண்டு பக்க வீட்டை இணைக்கிறா மாதிரி  வேப்பிலை தோரணம் கட்டிட்டே போவாங்க. இப்ப அது முன்ன மாதிரி அதிகமா இல்ல. ஒவ்வொரு தெருவிலயும் பேருக்கு ஒண்ணு ரெண்டு தான். அத கட்டுறதுக்கு களம் இறங்குற ஆளுங்க இல்லயா... மாடி வீடுங்களா மாறினதாலயான்னு பட்டி மன்றம் வைக்கலாம் போல...

செவ்வா நைட்ல திரும்பவும் அடுத்த ரவுண்டு சாமி ஊர் சுத்தினப்ப... செண்ட மேளம், நையாண்டி மேளத்தோட ஆயிரங்கண் பானை, மொளப்பாரி ஊர்வலம்னு ஊரே களை கட்டிச்சி... நள்ளிரவுக்கு பிறவு, சப்பரத்தில வீதி, வீதியா முத்தாரம்மன் உலா வந்தது, எனக்கு புதுசு. எங்க வீட்டு முன்னால அதிகாலை 4 மணிக்கு சாமி வந்தப்ப... பரவசம்... மகிழ்ச்சி...

புதன்கிழமை மஞ்சப்பான பொங்கல்... கெடா வெட்டு... மொளப்பாரிய சுத்தி வந்து கும்மிப்பாட்டுன்னு கொடை நிறைவா முடிஞ்சிச்சி.




முத்தாரம்மனுக்கும் அசுரனுக்கும் நடக்கிற சண்டையில, கடைசியா சரணடையிற அசுரன், தனக்கு பலி கொடுக்கணுமின்னு வேண்டுவானாம். இது வில்லுப்பாட்டு கதையில பாடினாங்க. கெடா வெட்டும்போது அதுதான் நினைவுக்கு வந்திச்சி. கடைசி நாளில அண்டா கணக்கில சோறு வடிச்சி, கறிக் கொழம்பு வச்சி படையல் போட்டு முத்தாரம்மனுக்கு படைச்சிருந்தாங்க. இந்த பெரும் படப்பு பத்தி தனியாவே எழுதலாம்... 

எழுதியிருக்கேன்... 

👇👇

http://thileeban81.blogspot.com/2015/11/blog-post.html?m=1

கொடை விழாவில முத்தாரம்மன் தொடங்கி, சந்தன மாரியம்மன், கருப்பசாமின்னு ஒவ்வொரு கூடத்திலயும் ஆடின சாமியாடிங்கள பார்த்தப்ப...  சின்ன சின்ன பசங்களா தெரிஞ்சாங்க... அவங்களோட பழைய உருவம் தெரிஞ்சிது.. அப்பல்லாம் தாத்தாக்கள் தான் சாமியாடுவாங்க... இப்ப ரெண்டு பெண் சாமியாடிங்களும் இருந்தாங்க.. இவங்க அடுத்த தலைமுறைன்னு தெளிவானப்பத்தான், நம்ம வயசும் அரை சதத்தை எட்டுதேங்கிறது லேசா ஒறைச்சிது.

நெல்லை ரவீந்திரன்