Friday 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் 4

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன், மொழிவாரி மாநில மறுவரையறை குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. 1948ல் அமைக்கப்பட்ட அந்த குழு, ஏழெட்டு ஆண்டு ஆய்வுக்கு பிறகு அளித்த பரிந்துரையை 1956ம் ஆண்டில் மத்திய அரசு ஏற்று 'மாநில மறுவரையறை சட்ட'த்தை கொண்டு வந்தது. அதன்படி, சென்னை மாகாணமும் பிரிக்கப்பட்டு சிறியதானது.

கேரளா, மைசூரு, ஆந்திரா என புதிய மாநிலங்கள் உருவானதால் சென்னை மாகாணத்தின் பகுதிகள் அங்கு சென்றன. இதனால், 75 எம்பிக்களை கொண்டிருந்த சென்னை மாகாணம் 34 உறுப்பினர்களை கொண்டதாக சுருங்கியது. அதே நேரத்தில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 494ஆக அதிகரித்தது. மூன்று உறுப்பினரை தேர்வு செய்யும் தொகுதி ரத்து செய்யப்பட்டது.

மொத்த தொகுதிகளான 403ல் 312 தொகுதிகளில் தலா ஒரு எம்பியும் 91 தொகுதிகளில் தலா 2 எம்பிககளும் (கூடுதலாக எஸ்சி அல்லது எஸ்டி வேட்பாளர்) தேர்வு செய்யும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான மாற்றங்களுடன் 1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.




வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்று ஐந்தாறு மாதங்களுக்கு தேர்தல் பணிகள் நீடித்தன. இந்தியாவின மேனோபோலி கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் மறுபடியும் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், திமுக களமிறங்கிய முதலாவது தேர்தல், சுயேச்சைகளின் ஆதிக்கம் என சுவாரஸ்யங்களுக்கு இந்த தேர்தலில் பஞ்சமில்லை.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 3

முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் 36 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானோர் மட்டுமே, அதாவது பத்தரை கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது 489 இடங்களில் 364 இடங்களை நேரு தலைமையிலான காங்கிரஸ் கைப்பற்றியது. பதிவான மொத்த வாக்குகளில் நான்கே முக்கால் கோடி வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 1952ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று மீண்டும் பிரதமரானார், நேரு.
16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இந்த தேர்தலில் பல பெருந் தலைகள் உருண்டன. ஆச்சார்யா கிருபளானியின் கிஸான் மஸ்தூர் கட்சி 9 இடங்களை பிடித்தபோதிலும் உத்திர பிரதேச மாகாணம் பைசாபாத்தில் கிருபளானி தோல்வியடைந்தார்.
இதுபோல அம்பேத்கரின் எஸ்சி பெடரேஷன் கட்சிக்கு இரண்டு இடம் கிடைத்தும் பம்பாய் வடக்கு மத்தி தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். 1954ல் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலிலும் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. மேல்சபை வழியாக நியமன உறுப்பினராகத்தான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது.




1952 தேர்தலில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம். இந்து அமைப்புகள் 10 இடங்களை பிடித்திருந்தன. இந்து மகாசபா கட்சிக்கு 4 ஜன சங்கம் மற்றும் ராம ராஜ்ய கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. இதில் ஜனசங்கம் மட்டும் 32.5 லட்சம் வாக்குகளை வாங்கியது. இரண்டாவது பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் வாங்கிய மொத்த வாக்குகள் 35 லட்சம் என்பதும் கவனிக்கத்தக்கது.
முதலாவது, தேர்தலின்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டில் ஆந்திரா, கேரளா, மைசூர் போன்ற பகுதிகளும் இணைந்திருந்ததால் உ.பி. மாகாணத்துக்கு அடு்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மாகாணமாக இருந்தது.
மொத்தம் 62 தொகுதிகளில் இருந்து 75 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாகாணத்தில் தேர்வான 75 பேரில் 35 பேர் காங்கிரஸ் கட்சியினர். கம்யூனிஸ்ட் சார்பாக 8 பேர் வெற்றி பெற்றனர்.
ஆனால், இரண்டாவது நாாளுமன்ற தேர்தல் 1957ல் நடந்தபோது சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 34ஆக குறைந்து விட்டது.
(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் 2

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தேர்தலில் களமிறங்க தலைவர்கள் பலர் தயாரானார்கள். ஜனநாயகம் என்றாலே பல கட்சிகளின் பங்களிப்பு தானே. நேரு தலைமையில் இருந்த தேசிய இடைக்கால அரசில் அங்கம் வகித்த தலைவர்கள் பலர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் கட்சிகளை தொடங்கினார்கள். தேர்தலில் போட்டியிடும் ஏற்பாடுகளையும் தொடங்கினார்கள்.
எஸ்சி பெடரேசன் என்ற கட்சியை அம்பேத்கர் தொடங்கினார். இந்த கட்சி தான் பின்னாளில் குடியரசு கட்சியாக மாறியது. கிஸான் மஸ்தூர் கட்சியை ஆச்சார்யா கிருபளானியும் ஜன சங்கம் கட்சியை ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தொடங்கினார்கள். இது போல ஏராளமான கட்சிகள் தொடங்கப்பட்டன. மாகாண அளவிலும் மாகாணங்கள் அளவிலும் செல்வாக்கு பெற்றிருந்தன, அந்த கட்சிகள். இது தவிர, அப்போது பலமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருந்தது.
உண்மையான ஜனநாயக நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 'சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்காக போராடிய காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் எனவும் சுதந்திர போராட்டத்துக்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது' எனவும் காந்தி கூறியது உண்டு. ஆனால், சுதந்திரம் பெற்ற சில மாதங்களியே காந்தி மறைந்து விட்டதால் அது ஈடேறவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சுதந்திம் வாங்கித் தந்த கட்சி என்ற கிரெடிட்டுடனேயே தேர்தலில் களமிறங்கியது. மக்களுக்கும் அதன் மீது பெரிதான கிரேஸ் இருந்தது.
இப்படியான காட்சிகளுடன் புதுப்புது கட்சிகளும் களமிறங்கிய முதலாவது பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பல கட்டங்களாக 120 நாட்கள் நடைபெற்றது. சென்னை மாகாணம் உட்பட 25 மாகாணங்கள். மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. முதல் தேர்தலிலேயே காஷ்மீரின் பங்களிப்பு கிடையாது. இமாச்சலில் பனி காரணமாக ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.



இந்தியா முழுவதும் வாக்களிக்க தகுதியானவர்களாக 36 கோடி பேர் இருந்தனர். 6 மாதங்களுக்கு மேலாக நீடித்த தேர்தல் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கிலான ஊழியர்கள் ஈடுபட்டனர். அன்றைய தேர்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் ரிசர்வ் (தனி) தொகுதிகள் கிடையாது. மாற்றாக இரட்டை பிரதிநிதித்துவ முறை அமலில் இருந்தது. எப்படி..?
நாடாளுமன்றத்துக்கு 489 பேரை தேர்வு செய்யும் தேர்தல் என்றாலும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 401தான்.
இந்த 401ல் 314 தொகுதிகளில் தலா ஒரு எம்பி தேர்வானார். 86 தொகுதிகளில் எஸ்சி அல்லது எஸ்டி ஒருவரை கூடுதலாக தேர்வு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது இரட்டை உறுப்பினர்கள் தொகுதிகள். ஒரே ஒரு தொகுதியில் மூன்று எம்பிக்கள் தேர்வானார்கள்.
இப்படியான பல்வேறு வித்தியாசமான அனுபவங்களுடன் நடந்த முதலாவது பொதுத் தேர்தலிலேயே பல அதிர்ச்சிகரமான முடிவுகளை இந்திய வாக்காளர்கள் அளித்தனர். முக்கியமான பிரபலமான தலைவர்கள் பலர் தோல்வியடையும் வரலாறும் அந்த தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 1


2016 பிப்ரவரியில் இதே நாளில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் பரவத் தொடங்கியும், தமிழக தேர்தல் பற்றிய நினைவுகளை எனது வலைப்பூவில் (திலீபன் சிந்தனை) அசை போட்டபோது 35 பகுதிகள் வரை போனது.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் காய்ச்சல் பரவ தொடங்கி விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்களாக இளம் தலைமுறையினர் வருகின்றனர். இந்த தேர்தலிலும் தான். சட்டப்பேரவை தேர்தல் போலவே நாடாளுமன்ற தேர்தல் நினைவுகளையும் சுழல விடலாம் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன்.
1947ல் சுதந்திரம் பெற்றபோது குத்தகைதாரரை காலி செய்து விட்டு ஹவுஸ் ஓனர் குடியேறிய வீடு போலத்தான் இந்தியா இருந்தது. இது, கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டு குத்தகையாக இருந்ததால் செப்பனிட வேண்டிய பணிகள் அதிகம். சமையலறை, ஹால் தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்தது புதுப்பிக்க வேண்டியிருந்தது.
அதாவது, தனி அரசியலமைப்பு உட்பட ஒட்டு மொத்தமாக மாற்றம் தேவைப்பட்டது. இதைத்தான் 1947 ஆகஸ்டில் அமைந்த நேரு, படேல் தலைமையிலான அரசு செய்தது. இந்தியாவுக்கென தனி அரசியலமைப்பு சட்ட கொள்கைகளை அம்பேத்கர் வகுத்தார். 1949 நவம்பரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட அனைத்து விதமான நிர்வாகங்களும் தயாரானது.
அடுத்தகட்டமாக குடியரசு நாடாக இந்தியாவை மாற்றும் பணிகள் தொடங்கின. நேரு தலைமையிலான அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் இடம் பெற்ற இடைக்கால தேசிய அரசு இந்த நடவடிக்கைகளை தொடங்கியது. 1950 ஜனவரியில் முறைப்படி குடியரசு எனப்படும் ஜனநாயக நாடாக இந்தியா மாறியது.
அதன் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கும் பணி. சுதந்திர அமைப்பாக தேர்தல் ஆணையத்தை ஏற்படுத்தியதும் அதில் ஒன்று. இந்த ஜனநாயக பணிகளில் கொஞ்சம் கோக்கு மாக்கு நடந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இப்போது நம்மால் பேச முடியாது. பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
புது வீட்டுக்கு குடியேறுவது போல பார்த்து பார்த்து செய்த வேலைகள் எல்லாம் நிறைவடைவதற்கு முழுமையாக 4 ஆண்டுகள் பிடித்தது. அதுவரையிலும் நேரு தலைமையில் தேசிய அரசு தொடர்ந்தது.
இறுதியாக 1951 மத்தியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் அறிவிப்பு வெளியானது. மிக நீண்ட காலம் நடைபெற்ற தேர்தல் அது..




(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்