Tuesday 7 November 2023

பிறவிக் கலைஞனுக்கு பிறந்த நாள்...

வெகுஜனங்களின் பொழுதுபோக்கும் துறையான சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாகவே ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறை ஜனங்களையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்து அவர்களுக்கேற்ப அப்டேட் ஆனால் மட்டுமே "தக் லைஃப்" காலம் வரை நீடிப்பது சாத்தியம்.




தமிழ் சினிமாவின் ஆரம்ப கால ஜாம்பவான்களில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்...!

'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவரது மகனோ, மகளோ..., இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான் அல்லது ரசிக்கிறாள்.



தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 



முழு நேர நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது. 

ரஜினிக்கு முன்பு 1970களின் இறுதி மற்றும் 1980களின் ஆரம்பத்தில் இவர்தான் தமிழின் உச்ச நட்சத்திரம். 16 வயதினிலே படத்தில் ரஜினியை விட பத்து மடங்கு சம்பளம் அதிகம், இவருக்கு...!



'16 வயதினிலே', 'அவள் அப்படித்தான்', 'ராஜபார்வை', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'இந்தியன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'குணா', 'மூன்றாம் பிறை', 'பேசும்படம்', 'ஆளவந்தான்', 'ஹே ராம்', 'பாசவலை', 'குருதிப் புனல்', 'தசாவதாரம்' என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் 'விஸ்வரூபம்' எடுத்து நிற்கிறது. 

இவரது  கலைப் பயணத்தை பல ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.  குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், ஜெமினி என பிரபலங்களுடன் நடித்த கமல்...

1970களில் 'அவர்கள்', 'அவள் ஒரு தொடர்கதை' போன்ற கருப்பு வெள்ளை படங்களின் கமல்...

1980களில் 'சகலகலா வல்லவன்' மாதிரியான ஹிட் கொடுத்த கமர்ஷியல் ஹீரோ கமல்...



1990களின் 'இந்தியன்' (சேனாதிபதி கிழவன் முன்பு அசல் கிழவன் தோற்றுப் போவான்...) போன்ற மெச்சூரான நடிப்பு பசி கொண்ட கமல்...

2000களின் 'தசாவதாரம்' போன்று புதுமைகளை பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கிய கமல்...


பாடகர் கமல்... 

டான்ஸ் மாஸ்டர் கமல்... 

இப்படி வெவ்வேறு விதமாக கமலைப் பற்றி தனித்தனியாகவே பக்கம் பக்கமாக எழுதலாம்...

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல்.

 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் செல்போனில் ஒலிக்கும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான். தான் நடனம் அமைத்த பாடலையே தனது படத்துக்கு பயன்படுத்தி இருப்பார்.



என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இயற்கையான நடிகர் என்றால் இவர் ஒருவரைத்தான் சொல்வேன்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

ஒருவர் எந்த துறையில் இருந்தாலும், தத்தமது துறையில் சிறப்பாக இருப்பது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

'மகராசன்', 'தெனாலி', 'சதி லீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்', 'பஞ்ச தந்திரம்', 'காதலா காதலா', 'வசூல் ராஜா' என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்...

'16 வயதினிலே', 'மூன்றாம் பிறை', 'குணா', 'மகாநதி', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து' என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

'பேசும்படம்', 'குருதிப் புனல்', 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்



'ஹே ராம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்' என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, 'இந்தியன்' தாத்தா, 'அவ்வை சண்முகி' மாமி, 'தசாவதாரம்' பாட்டி, 'அபூர்வ சகோதரர்கள்' குள்ள அப்பு என தன்னை முற்றிலுமாக மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 



மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர் மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 


அவர் கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி.... அம்பிகா, ராதா, ரேகா.... சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் இன்றும் தொடரும் முன்னணி நாயகன். 

இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னைக்கு அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம்...



சினிமாவை அடி ஆழம் வரை அலசிப் பார்த்த கமல், அரசியல் பாடத்தை மட்டும் ரஜினியிடம் கொஞ்சம்  படித்திருக்கலாம்...!


#நெல்லை_ரவீந்திரன்