Thursday 27 November 2014

மண்டல் கமிஷன் நாயகன்...

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இன்று நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) என்ற பிரிவை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அறிமுகம் செய்தவர். அதற்காக, மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற தனது பிரதமர் பதவியையே பணயம் வைத்தவர்.

இத்தனைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் பி.பி.மண்டல் அறிக்கை அளித்தும் 10 ஆண்டுகளாக பரணில் கிடந்தது. அந்த அறிக்கையை 10 ஆண்டுகள் கழித்தும் மறந்து விடாமல் தூசிதட்டி எடுத்து, அமல்படுத்தி சாமானிய மக்களுக்கு வாழ்வு அளித்தவர்.

இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா என நெருங்கவே இயலாத இரண்டு வெவ்வேறு துருவங்களின் ஆதரவோடு ஆட்சி நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். ராமர் கோயில் கோஷம் எழுந்தபோது ரத யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்ட துணிச்சல்காரர்.

ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பவர்புல் இலாகாவில் இருந்தாலும் பிரதமர் ராஜீவ் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டும் ஆமாம் சாமியாக இல்லாமல் தவறை துணிச்சலாக தட்டிக் கேட்டவர். போபர்ஸ் ஊழலை தோலுரித்த நேர்மையாளர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராஜ வம்சத்தில் பிறந்த போதிலும் ஏழை மக்களைப் பற்றியும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் சிந்தித்த சிந்தனையாளர். 

இந்தியாவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற உண்மையை தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி நிரூபித்து காட்டியவர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணியின் பிரதமராக பதவியேற்றபோது, தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களை அதிமுக=காங்கிரஸ் அணி கைப்பற்றி இருந்தது. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

அந்த சூழ்நிலையிலும், மந்திரிசபையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பதவியை அளித்து நகர்ப்புற வளர்ச்சி துறையை ஒதுக்கியவர்.

இப்படி, அவரின் பெயரைப் போலவே அவரது பெருமைகளும் சாதனைகளும் மிக நீளமானவை. அவர்
.
.
.
.
.
.
.
.

முன்னாள் பாரத பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இன்று அவரது நினைவு தினம் (27-11-2008)

= வை.ரவீந்திரன் 

மங்காத வீரம்... மண்டியிடாத மானம்

கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் இணையற்ற இனமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் இனம், தமிழ் இனம்.

உடலில் தொண்ணூற்று மூன்று விழுப்புண்களை பெற்று, மகன் ஆதித்த சோழனுக்கு மகுடம் சூட்டிய பிறகும் கூட முதிய வயதில் இரண்டு கால்களை இழந்த நிலையில் போர்க்களம் புகுந்த விஜயாலய சோழன் பிறந்தது, தமிழ் மரபு. இரண்டு வீரர்கள் தோளில் சுமந்து செல்ல இரண்டு கைகளிலும் வாள்களை ஏந்தி எதிரிகளின் தலைகளை பந்தாடியவன், விஜயாலய சோழன்.
எண் கொண்ட தொன்னூற்றின் மேலுமிரு மூன்று
புண் கொண்ட வெற்றிப் புரவலன்’

= என விஜயாலயச் சோழனை புலவர்கள் பாடி வைத்துள்ளனர்.

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட (சேர, சோழ, பாண்டிய) தமிழ் தேசத்தின் பெருமையை இமயமலையில் வில் கொடியை பதித்து பறை சாற்றினான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனது இந்த பெருமையை,
‘அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க....’

= என்று பதிற்றுப்பத்து இலக்கியம் பாடுகிறது.

18 வயது சிறுவனாக இருந்தபோதிலும் மிகப்பெரிய படைகளை தலையலங்கானம் என்ற இடத்தில் தன்னந்தனியனாக எதிர் நின்று வென்ற தலையலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பிறந்ததும், இந்த தமிழ் மரபில் தான்.

குடம் நிறைய ஆயர் குல பெண்டிர் சேமித்து வைத்திருக்கும் பாலுக்குள் துளி அளவு மோர் கலந்து அதை கலங்கச் செய்வது போல, எதிரியின் படைக்குள் புகுந்து கலங்கச் செய்பவன், என பண்டைய தமிழகத்தின் சாதாரண படை வீரர்களுக்குள் கூட மிகப்பெரிய அளவில் பராக்கிரமம் நிறைந்து கிடந்தது என்பதை,
‘குடப்பால் சில்லுறைப் போல படைக்கு
நோய் எல்லாம் தான் ஆயினவே’

= என்று புறநானூறு பாடல் விளக்கி கூறுகிறது.

வடநாட்டு மன்னர்கள் கனகர் மற்றும் விசயனை வென்று அவர்களுடைய தலை மீது கற்களை ஏற்றி சுமந்து வந்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை எடுத்தவர்கள், தமிழ் மன்னர்கள். இலங்கையை வென்று மீன் கொடி ஏற்றிய பாண்டியனும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று ஈழத்தை கைப்பற்றியதோடு முந்நீர் பழந்தீவு என அழைக்கப்பட்ட மாலத்தீவுக்கு கடல் கடந்து சென்று போர் முரசம் கொட்டிய ராச ராச சோழனும் தமிழரின் வீரம் செறிந்த மரபின் வரலாற்று உதாரணங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து மாபெரும் கடற்படையை திரட்டிச் சென்று மலேசியா எனப்படும் கடாரம் தீவை வெற்றி கொண்ட ராசேந்திர சோழனின் வீரத்தை என்னவென்று வியப்பது....?
தமிழ் மரபில் இந்த அளவுக்கு வீரமும் தீரமும் செறிந்தவர்கள் இருந்தார்களா...? மனதுக்குள் இதுபோன்ற ஒரு ஐயம் எழுந்ததும் அதை போக்கும் விதமாக பிறந்தவர், பிரபாகரன்.

நான்கு வகை படைகளை நடத்திய தமிழ் மன்னர்களை நினைவூட்டும் வகையில் இந்த நவீன விஞ்ஞான உலகில் ஆதரவு ஏதுமின்றி முப்படைகளை திறமாக நடத்தி வெற்றிகளை குவித்தவர். காய்த்தல், உவர்த்தல் இன்றி தனி மனிதனாக அவரை உற்று நோக்கினால் தமிழர் வீரத்தின் மிச்சம் அவர் என்பதை உணரலாம்.

நாகரீக உலகில் நாடு பிடிப்பதற்காக இதுபோன்று சண்டை போடுவதா? என்ற கேள்வி எழும்போது, அவரது அருமை தம்பி திலீபன் நடத்திய அறவழி போராட்டத்தினால் கிடைத்த பலன் பற்றி அறிந்தால் எழுந்த வேகத்திலேயே அந்த கேள்வி அடங்கி விடும்.

சொந்த மண்ணிலேயே அடிமைகளாக கிடந்து அடிப்படை உரிமைகளுக்கு கூட போராடி, வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலைக்காக வீறு கொண்டு எழுந்து,

பாரதி கூறிய, ‘ரவுத்திரம் பழகி’ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த வீரத் திருமகன் அவதரித்த தினத்தில் (நவம்பர் 26) தமிழ் இனத்தின் மங்காத வீரத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 




வீரனின் வாழ்வு...
வீழ்ந்து விடுவதில்லை...
விதைக்கப்படுகிறது....
வரலாறாய் மாறுகிறது

= வை.ரவீந்திரன் 

Tuesday 25 November 2014

அமைதி நோக்கி பயணம்

ஆள் அரவமற்ற வெட்ட வெளி
அதிகாலை பனித் துளிகளை
தாங்கி நிற்கும் தாவரங்கள்
வேகமாக நடந்தால் கூட
தூரம் குறுகியதாக தெரியவில்லை
சமவெளியை கடந்தால்
ஆழமான பள்ளத்தாக்கும்
கூடவே அதி பயங்கர நீர் வீழ்ச்சியும்
நிச்சயமாக ஏற்ற இடம் தான்

இன்னும் கொஞ்சம் நடையை
எட்டிப் போட்டால் அடைந்து விடலாம்
மனது எண்ணியதை கால் செயல்படுத்தியது

அடையாளங்களை தொலைத்து
சாதாரண மனிதனாக வாழ தீர்மானித்து
தொடங்கிய பயணம் இது
அனைத்தையும் உதறி விட்டு
கால்கள் பரபரத்து ஓடின
சற்று தொலைவில் இருக்கும்
அடையாளம் ஏதுமற்ற அமைதி நோக்கி.... 


= வை.ரவீந்திரன்

Monday 24 November 2014

அப்பிராணியும்.... அதானியும்....




வணக்கமுங்க... நடுத்தர வர்க்கமுன்னு சொல்றாங்கள... அந்த வர்க்கத்துல நானும் ஒருத்தன். என் பேரு... அது அவ்ளோ முக்கியமில்லீங்க... அப்பிராணின்னு வச்சிக்கோங்களேன். வந்தார வாழ வைக்கிற சென்னைக்கு குடியேறி 17 வருசம் ஓடிட்டு. சொன்னது போலவே, நல்லாவே சென்னை வாழ வச்சுதுங்க. புறநகர் பக்கமா 10 வருசத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு வூடு வாங்குனேங்க. அது ஒரு சென்டு இடம் இருக்குங்க... அப்போ பொழச்ச பொழப்புக்கு அதுவே பெரிய விஷயங்க.

அப்ப வூடு வாங்குறதுக்காக அரசாங்க பேங்குல 20 வருசத்துக்கு ரூ.3 லட்சம் கடன வாங்கினேங்க. மாச சம்பள வேல பாத்ததால லோன குடுத்தாங்க. மாசா மாசம் நான் கட்டுன தொகையில வட்டிக்கு தாங்க அதிகமா போய்கிட்டு இருந்துச்சு. எப்படியாச்சும் இந்த தொல்லைய ஒழிச்சு கட்டணுமின்னு ராப்பகலா யோசிச்சேங்க.. அதே சிந்தனையா இருந்ததால ஒரு வழியா 10 வருசத்துக்குள்ள அந்த கடன முழுசா அடைச்சிட்டேங்க.

இப்போ, வீட்ட சுத்தி பாத்தா நெறய வீடுங்க வளந்து நின்னுகிட்டு இருக்குங்க. அத பாத்ததும் இந்த மனசுக்குள்ள ஒரு ஆச வந்து ஆட்டிச்சு. அதுக்கு நாலே கால் லட்சம் வரை செலவாகுமுன்னு சொன்னாங்க. கடன தான் அடைச்சிட்டோமே... அதனால மாடிய கட்டதுக்கு அதே வங்கில போயி லோன கேட்டா என்ன? நம்ம வூட்டு பத்திரம் கூட பத்திரமா அங்க தான இருக்கு? இப்படி மனசுக்குள்ள கேள்வியோட மேனசர போய் பாத்தேங்க.

அவரும் சம்பளம் என்ன?ங்கிற விவரம் எல்லாம் கேட்டுட்டு... மாடி கட்ட பிளான மட்டும் வாங்கிட்டு வாங்கன்னாரு. இந்த 10 வருசத்துக்குள்ள மாநகராட்சிய விரிச்சிட்டாங்க. என் வீடும் மாநகராட்சிக்குள்ள வந்துட்டு. அதனால, மாடி கட்ட பிளான் கேட்டு மாநகராட்சிக்கு போனேங்க. அந்த நேரத்துல தான் மவுலிவாக்கங்கிற இடத்துல பெரிய கட்டிடம் ரெண்டு இடிஞ்சு விழுந்துடுச்சு.

உடனே, பிளான குடுக்குறதுல பயங்கரமா கெடுபுடி காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வழியா அறுபது ஆயிரம் ரூபா வரைக்கும் (சத்தியமாங்க... ஒரு சென்டு இடத்துல மாடி கட்டத்தான்) செலவு பண்ணி பிளான வாங்கிட்டேன். அதுவும் 5 மாசத்துக்கு மேல ஆயுடுச்சு. அத வாங்கிக்கிட்டு பேங்குக்கு போனா, அங்க புது மேனேசரு ஒக்காந்து இருக்காரு. மனசுக்குள்ள சின்னதா அதிர்ச்சி.

ஆனாலும், மனச திடப்படுத்திக்கிட்டு அவருகிட்ட போயி முழு விவரத்தையும் சொன்னேன். பழைய மேனேசர் சொன்னதையும் சொல்லி பிளானயும், பில்டரு கொடுத்த எஸ்டிமேட்டையும் என்னோட சம்பள பட்டியலயும் (இந்த பத்து வருசத்துல சம்பளமும் கணுசமா கூடிட்டுங்க.. அத நான் சொல்லியே ஆகணும்) கொடுத்தேங்க.. மாடிய கட்றதுக்கு எனக்கு 3 லட்சம் லோன் குடுங்க சார். மீதிய நானே பாத்துக்கறேன்னேன். 

அதுக்கு அந்த மேனேசரு சொன்னாரு பாருங்க. ‘வீட்டுக்கு ஒரு எவாலுயசன் ரிப்போர்ட்ட வாங்கிடுங்க. அப்படியே லீகல் ஒப்பினீயன் வாங்கிடுங்க. ஈசியும் போட்டு எடுத்துட்டு வாங்க. சீக்கிரமா லோன குடுத்துரலாம்’ இந்த பதில கேட்டதும் ஆடிப் போயிட்டேங்க. ஏன்னா, என்னோட வூட்டு பத்திரம் அந்த பேங்குலதாங்க இருக்கு.  

சரி. அது என்ன எவாலுயசன், லீகல் ஒப்பீனியன் அப்படின்னு விசாரிச்சேன். அந்த பேங்குக்குன்னு வக்கீலும் என்ஜீனீயரும் இருந்தாங்க. அவங்க கிட்ட போன போட்டு பேசுனா ஒரு 15 ஆயிரத்துக்கு பில்ல போடுறாங்க. நாலே கால் லட்சத்துல மாடிய  கட்டுறதுக்கு ஏற்கெனவே, பினானுக்கு 60 ஆயிரம் செலவழிச்ச நெலமையில இது என்னடா எக்ஸ்ட்ரா செலவுன்னு நொந்து போயிட்டேங்க.. ஒரு 3 லட்சம் லோனா தரதுக்கு இவ்ளோ பார்மாலிட்டியா...?

இவ்ளோத்துக்கும் இப்போ என்னோட வீட்டு சந்த மதிப்பு 15 லட்சத்த தாண்டிடுச்சுங்க. என்னோட சம்பளத்த மட்டும் வச்சே பர்சனல் லோனா தனியார் பேங்குங்கள்ல ரூ.3 லட்சம் வரை வாங்கலாங்கிறதையும் விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டேங்க. இப்பிடி இருக்கும்போது என்னோட வீட்டு பத்திரத்த வச்சிகிட்டே 3 லட்சம் தரதுக்கு பேங்கில இந்த அளவுக்கு யோசிக்கிறாங்களே...?ன்னு எனக்கு கோபம் கோபமா வந்துச்சுங்க.. அப்புறமா... பரவாயில்ல. நம்ம அரசாங்க பேங்குல்லாம் ரொம்பவும் உஷாரா இருக்காங்களே.. இந்த அளவுக்கு உஷாரா இருந்தா சீக்கிரமே இந்தியா ரொம் முன்னேறிருமுன்னு நெனச்சுகிட்டேன். இந்தியா முன்னேறிச்சுன்னா நல்லதுதாங்களே..

அதுக்கு பொறவு கொஞ்ச நாளுல பேப்பருங்கள்ல பார்த்தேங்க. ஆஸ்திரேலியாவுல இருக்குற அதானின்னு ஒருத்தருக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய இந்தியாவுல இருக்க ஸ்டேட் பேங்கு கடனா குடுக்கப் போவுதாம். என்னோட பத்துரத்த பேங்குல வச்சிக்கிட்டே 3 லட்சத்துக்கு இந்த பாடு படுத்துன அரசாங்க வங்கிங்க, அந்த அதானியா என்ன பாடு படுத்த போறாங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். என்னோட வீடாவது பேங்கு பக்கத்துலேயே இருக்குது. இந்த அதானி, ஆஸ்திரேலியாவுலல்லா கம்பெனி ஆரம்பிக்காறாம். அதுக்கு என்னென்ன பார்மாலிட்டியோ? எவாலுயசேனோ? லீகல் ஒப்பீனியனோ? அத அந்த மனுஷன் எப்படி சமாளிக்க போறாரோ?ன்னு நெனச்சுக்கிட்டேன். இத அப்படியே எங்க ஆபீசுல ஒண்ணா வேல பாக்குற ஒருத்தருகிட்ட சொன்னேன்.


என்னைய மேலயும் கீழயும் பார்த்துகிட்டு அவரு சொன்னாருங்க.. “இவ்ளோ அப்பிராணியா இருக்கியே... அந்த லோன குடுக்கதுக்கு பிரதமரே சிபாரிசு பண்ணிட்டாருப்பா... ஏற்கெனவே, இப்படித்தான் மல்லையான்னு ஒருத்தரு மூவாயிரம் கோடிக்கு மேல பேங்குல வாங்கிட்டு மஞ்ச கடுதாசி குடுத்துட்டாரு... இந்த அதானி எப்போ மஞ்ச கடுதாசி குடுக்க போறாரோ...?’ ன்னு சலிச்சுக்கிட்டே சொன்னாரு.

இப்போ எனக்கு ஒரு சின்ன கேள்விங்க.. உங்கள்ல யாருக்காவது பிரதமர நல்லா தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி எனக்கு 3 லட்சத்த வாங்கி குடுங்கங்க. மல்லையா, அதானி மாதிரி நான் மஞ்ச கடுதாசில்லாம் குடுக்க மாட்டேன். ஏற்கெனவே, என்னோட 20 வருஷத்து  லோன 10 வருசத்துக்குள்ள வேற கட்டி முடிச்சிருக்கேங்க. அதனால... கொஞ்சம் பிரதமருகிட்ட சொல்லி அதானிக்கு மாதிரி இந்த அப்பிராணிக்கும் சிபாரிசு பண்ணுங்களேன்.

= வை.ரவீந்திரன்.
 

Monday 17 November 2014

தட்டழியும் தட்டச்சு இயந்திரங்கள்





கால் காசு உத்தியோகம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கணும். 40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த அறிவுரை இப்போதும் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அரசு வேலையை கைப்பற்ற 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய தகுதியாக கருதப்பட்டது, தட்டச்சு. இதனால், 1990களில் தட்டச்சு பயிற்சிக்கு இருந்த மவுசே தனி. சில பகுதிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலைமை எல்லாம் இருந்தது. மையங்களில் உள்ள தட்டச்சு இயந்திரங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசுகளும் கூட தேவைப்பட்ட காலம் அது. சில மையங்களில் டூடோரியலும் இணைந்து செயல்பட்டது.

இதனால், மினி கல்லூரி போல இயங்கிய தட்டச்சு மையங்களில் காதல் மலர்கள் மலர்ந்த அனுபவங்களையும் கல்லூரிகளுக்கு நிகரான காதல் கலாட்டாக்களையும்  நடுத்தர வயதை கடந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அப்போது 10வது தேர்ச்சி பெற்றால் மட்டுமே தட்டச்சு தேர்வு எழுத முடியும். இப்போது, 7வது முடித்தாலே ‘பிரி ஜூனியர்’ தேர்வை எழுதலாம். ஆனாலும், இன்றைய காலத்தில் தட்டச்சு வழக்கொழிந்து வருகிறது. மகாராஷ்டிராவில், 2015ம் ஆண்டு நவம்பருக்குள் தட்டச்சு மையங்களை முற்றிலுமாக நீக்கி விட்டு கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றுத் தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தட்டச்சு மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் தட்டச்சு மையங்களாக மாறி வருகின்றன. டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது அமலாகி விட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை என காரணம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும் தட்டச்சு மையங்கள் தட்டழிந்து தான் வருகின்றன.

இன்றைய தட்டச்சு மையங்களில் பெரும்பாலானவை, முந்தைய தலைமுறையால் விட்டு செல்லப்பட்டு வாரிசுகள் நடத்தி வருபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டச்சு மையங்களின் நிலைமை குறித்து அவற்றின் நிர்வாகிகளிடம் கேட்டால், ‘தந்தை நினைவாக இதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்’ என்ற பதிலே அதிகமாக கிடைக்கிறது. கம்ப்யூட்டர் கீ போர்டு பயிற்சிக்காகவே மாலை நேரங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அந்த காலத்தில் ஒவ்வொரு மணவருக்கும் மெஷின்களை ஒதுக்கி கால அட்டவணை போடுவதே தனி வேலையாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது.

இன்றைய அலுவலகங்களில் தனியாக நெட்வொர்க் என்ஜினீயர்கள் இருப்பது போன்று. முன்பெல்லாம் தட்டச்சு இயந்திரங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் தனி மெக்கானிக்குகள் இருந்தனர். ரெமிங்டன், கோத்ரேஜ், பாசிட் போன்ற முன்னணி தட்டச்சு இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் செலவிலேயே மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்தன. இது மட்டுமல்ல தட்டச்சு தேர்விலும் தட்டச்சு இயந்திர பராமரிப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மெக்கானிசம் வகுப்புகள் தனியாக உண்டு. அதற்காக, தட்டச்சு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் மெக்கானிக் ஒருவர் வந்து பயிற்சி அளிப்பது உண்டு.

தற்போது, தட்டச்சு  மையங்களே தத்தளிக்கும் நிலையில் அந்த இயந்திரங்களின் மெக்கானிக்குகளுக்கு வேலை இல்லை. பிளம்பிங், வயரிங் என வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். எனினும், 60 வயதை கடந்த ஒரு சிலர் மட்டும் ‘அந்த காலத்தில் ஓய்வே இல்லாமல் ஊர் ஊராக சென்று சர்வீஸ் செய்து வந்தோம்’ என்று வீட்டில் விட்டத்தை வெறித்தபடி நினைவலைகளை அசை போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில், ஒரு சிலர் இன்னமும் அந்த மெக்கானிக் பணியையே தொடருகின்றனர். தபால் அலுவலகங்களில் இருந்த தந்தி முறை வழக்கொழிந்து விட்டது போல, தட்டச்சும் முடிந்து விடுமோ என்ற நிலைமை உருவாகி உள்ள போதிலும், அப்படி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளுகின்றன, தட்டச்சு பள்ளிகள். நம்பிக்கை தானே வாழ்க்கை....!!!!

= வை.ரவீந்திரன் 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். 

இந்த பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பத்து என்ன என்று தெரியுமா?
.
.
.
.
.
1) தன்மான உணர்வு,
2) குடும்ப கவுரவம்,
3) கல்வி,
4) அழகு,
5) அறிவு,
6) இரக்க குணம்,
7) அற சிந்தனை,
8) உயர்ந்த பெருமை,
9) விடா முயற்சி அல்லது ஊக்கம்,
10) பெண் ஆசை அல்லது காம உணர்வு.


இதை நான் சொல்லலீங்க...
தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்லி வச்சிருக்காங்க... அவர் எழுதிய பாடல் இதோ.....
.
.
.
.
.
மானம்குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம். 


-  நல்வழி பாடல்

Monday 10 November 2014

வதந்தியால் வீழ்ந்த துய்ப்ளக்ஸ்






 = வை.ரவீந்திரன்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றிய வரலாறு எழுதும்போது ராபர்ட் கிளைவ் பெயரை எழுதாமல் நிறைவு பெறாது. அதுபோல, பிரெஞ்சு ஆட்சி பற்றி எழுதினால் ஒருவரை தவிர்க்கவே முடியாது. அவர், துய்ப்ளக்ஸ். இந்தியாவுக்குள் இருந்த பிரெஞ்சு காலனி பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். இந்தியாவுக்குள் வணிக நோக்கில் நுழைந்த மேலை நாட்டவர்களில் பிரெஞ்சியரும் உண்டு. அதற்காக, ‘பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி’ என்ற வணிக நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதில் பணி புரிவதற்காக 1731ல் தனது 35வது வயதில் இந்தியாவுக்கு வந்தார் துய்ப்ளக்ஸ்.

தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்திர நாகூர் என்ற மாநகரம், அப்போது பிரெஞ்சியர் வசம் இருந்தது. அங்கு தான் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அதன் இயக்குநராக 10 ஆண்டு பணிபுரிந்த துய்ப்ளக்ஸ் திறமையை பார்த்து இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக பிரான்ஸ் மன்னர் நியமித்தார். இதையடுத்து, காலனி ஆதிக்க தலைநகரான புதுச்சேரியில் 1942ம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றார்.

துய்ப்ளக்ஸ் பதவியேற்றபோது தற்போதைய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் செயின்ட் லூயி என்ற பிரமாண்டமான கோட்டை இருந்தது. அதுவரை கவர்னர் ஜெனரலின் ஆளுகை அலுவலகமாகவும் தங்கும் இடமாகவும் அந்த கோட்டை இருந்தது. துய்ப்ளக்ஸ் வந்த பிறகு, கவர்னருக்கென தனி மாளிகை உருவாக்கினார். அது தான், இன்றளவும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் மாளிகையாக செயல்படும் ராஜ்நிவாஸ். துய்ப்ளக்ஸ் காலத்துக்கு பிறகு சென்னையில் இருந்து வந்த ஆங்கிலேய படைகளால் அந்த கோட்டை சின்னா பின்னமாக்கப்பட்ட போதிலும், ஆளுநர் மாளிகை மட்டும் மீண்டும் எழுந்தது.

இந்தியா முழுவதையும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட துய்ப்ளக்ஸ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயருடன் அடிக்கடி போர் நேரிட்டது. அதில் முக்கியமான போராக சென்னை போரை கூறலாம். தளபதி மாகே லாபுர்தனே தலைமையில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பெரிய கடற்படை ஒன்று 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று சென்னையை கைப்பற்றியது.  அப்போது பிரெஞ்சு படையிடம் அடி பணிந்த ஆங்கில படையின் தளபதியாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இது மட்டுமல்ல மேற்கில் செஞ்சி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, தக்காணம் என துய்ப்ளக்சின் வெற்றியால் பிரெஞ்சு ராஜ்ஜியம் மேற்கு நோக்கி விரிவடைய தொடங்கியது.

ஆனால், திருச்சி, ஸ்ரீரங்கம் என தெற்கு நோக்கி சென்ற அவருடைய படைகள் தோல்வியை ருசிக்க தொடங்கின. அதற்கு காரணமாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இதற்கிடையே, துய்ப்ளக்ஸ் அடைந்த வெற்றிகள் குறித்த செய்திகளை விட தோல்வி பற்றிய செய்திகளும் அது தொடர்பான வதந்திகளும் மிக வேகமாக பிரான்சுக்கு இறக்கை கட்டி பறந்தன. இதனால், அவரை பதவியில் இருந்து பிரான்ஸ் அரசு 1754ம் ஆண்டு நீக்கியது. அவரையும் நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. இந்தியாவில் துய்ப்ளக்சின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஆதிக்கப் பகுதிகளில் தனது புகழை நிலைநாட்டி விட்டு தனது 60வது வயதில் நாடு திரும்பினார்.

துய்ப்ளக்ஸ் ஆட்சி காலம் முழுவதும் அவருக்கு துபாசாகவும் (மொழிபெயர்ப்பாளர்) வர்த்தக ஆலோசகராகவும் இருந்தவர், அனந்தரங்க பிள்ளை(1709-1761). அவர், 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகாலம் எழுதி வைத்த நாட்குறிப்புகள் தான் இன்றளவும் புதுச்சேரியின் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவுகின்றன. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலுக்கு என தனியாக பிரத்தியேக ஆடையை வடிவமைத்ததோடு பிரெஞ்சிந்திய ராணுவ சிப்பாய்களுக்கும் சீருடை அறிமுகம் செய்தவர், துய்ப்ளக்ஸ்.  இந்தியாவில் கைம்பெண் திருமணம் என்ற வார்த்தையே கேள்விப்படாத காலத்தில் கைம்பெண் திருமணத்தை அறிமுகம் செய்தவரும் துய்ப்ளக்ஸ் தான். தனது நண்பன் ஆல்பர்ட் இறந்த பிறகு ஆதரவற்று நின்ற அவரது மனைவி ழான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சியை விரிவு படுத்தும் முயற்சிகள் தொடங்கி பல்வேறு வழிகளிலும் புகழ் பரப்பி நின்ற துய்ப்ளக்சின் இறுதி காலம் மிகக் கொடுமையானது. இந்தியாவில் சிம்மமாக உலவிய அவர், பிரான்ஸ் திரும்பியதும் தேச துரோக குற்றத்தை எதிர்நோக்கினார். நீதிமன்ற விசாரணையில், அவரது சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அவருக்கு முன்னதாகவே பிரான்சுக்கு திரும்பி இருந்த வதந்திகளே வெற்றி பெற்றன. அவரால், தீர்ப்பை மட்டுமே தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடிந்தது. அதற்குள், விதி முந்திக் கொண்டது. இந்தியாவில் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவடைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை  பின்னாளில் தான் பிரான்ஸ் அரசு அறிந்தது. 

ஆனால், தனது மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய குறிப்பில், “ஆசியாவில் எனது நாட்டை வளப்படுத்துவதற்காக எனது இளமை, செல்வம், வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்தேன். ஆனால், எனது பணிகள் அனைத்துமே வெறும் கட்டுக் கதைகளாக இங்கு (பிரான்ஸ்) கருதப்படுகின்றன. மனித இனத்திலேயே மிக மோசமானவனாக நடத்தப்படுகிறேன். எனது சிறிதளவு சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் கொடிய வறுமையில் வாடுகிறேன்” என குமுறி இருக்கிறார், துய்ப்ளக்ஸ். இத்தகைய மனக் குமுறலுடனேயே 1763ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். இன்றைய காலத்தை போல கணினி, மெயில் என தொழில்நுட்ப வசதிகள் பெருகாத சூழ்நிலையில் மிக வேகமாக பிரான்சுக்கு பறந்து சென்ற வதந்தி, துய்ப்ளக்சின் புகழை சிதைத்ததோடு அவரது உயிரையும் பறித்தது.

இந்தியாவில் ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் துய்ப்ளக்சின் பெருமைகளை பிரெஞ்சு கலாச்சாரத்தை கைவிடாமல் உள்ள புதுச்சேரி மாநிலம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அவரது சிலையை காணலாம். வாழும்போது அவதிப்பட்டு, வாழ்க்கைக்கு பிறகு கொண்டாடப்படுபவர்களில் துய்ப்ளக்சும் ஒருவர்.


(நவ.10  - 1763 துய்ப்ளக்ஸ் நினைவு தினம்)

= வை.ரவீந்திரன்  
(புதுவையின் பழமை - நூலாசிரியர்)

Friday 7 November 2014

ஆறில் இருந்து அறுபது .....

= வை.ரவீந்திரன்





ஒரு துறையில் 50 ஆண்டுக்கு மேல் நிலைத்து இருப்பதும் சிறந்தவராக கோலோச்சி நிற்பதும் சாதாரண விஷயம் கிடையாது. வெகுஜன ரசிப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட திரையுலகில் அதை நிகழ்த்துவது என்பது இரண்டு தலைமுறைகளின் ரசிப்புத் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அதை சரியாக உணர்ந்து உலக நாயகனாக உலா வருபவர் கமல்ஹாசன்.

தனது இளமை பருவத்தில் ‘ஏக் துஜே கேலியே’, ‘மரோ சரித்திரா’, ‘மூன்றாம் பிறை’ என கமலை பல்வேறு மொழிகளிலும் ரசித்து பார்த்து தனது காதலை வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தன்னுடைய இளமை பருவ காலத்தில் கமல் திரைப்படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் கரம் பிடித்து 6 வயதில், ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம் திரையுலகில் பிரவேசித்தவர், இந்த பரமக்குடி தமிழன். மெத்த படித்த குடும்பத்தில், பல வக்கீல்களை கொண்ட குடும்பத்தில் பிறந்த கமல், பள்ளி படிப்பை தாண்டாதவர். திரையுலக பிரபலம் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட உயர்வு எப்போது கிடைக்கும் என சிந்திக்கும் நடிகர்கள் மத்தியில் தமிழ் திரையுலகையும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்துக் கொண்டு இருப்பவர்.  

பால்யம் முடிந்து பருவம் தொடங்கிய கால கட்டத்தில் நடிப்பா?, நடனமா? என்ற மயங்கி நின்று, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர். ஆனால், காலம் அவரை பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி இழுத்து வந்தது. உண்மையில், காலம், விதி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத நாத்திகர் கமல். ஆனால், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வழியில் நடப்பவர்.

அதனால் தான், நடிப்பையும் தாண்டி எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றிருக்கிறது. 16 வயதினிலே, அவள் அப்படித்தான்,  ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள் குணா,  மூன்றாம் பிறை, பேசும்படம், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அவரது படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக  அரசியலில் அங்கீகாரம் பெற நடைபெறும் முயற்சிகளை காணும்போது, தன்னை காய்த்த மரம் என அவர் நிரூபித்துக் கொண்டிருப்பது புரிகிறது.  

ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அந்த கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் கமலுக்கு உண்டு. அதனால், தான் சண்டியர் என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியபோது அந்த கதைக்கு சண்டியரை விட மிகவும் பொருத்தமான விருமாண்டி என்ற தலைப்பை அவரால் உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. உண்மையில், ‘விருமாண்டி’ என்பது தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குல தெய்வத்தின் பெயர். சண்டியர் என்பது ஊருக்குள் அடங்காமல் திரிபவர்களை குறித்த பொதுப் பெயர். எந்த ஒரு சமுதாயத்துக்கும் உரித்தான பெயர் அல்ல.

திரையுலகை தாண்டி இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு நல்ல பரிச்சயம் அனுபவம் இருந்தாலும் திரையுலகில் மட்டுமே அவரது முழுமையான அர்ப்பணிப்பு உள்ளது. இந்த உலகில் உள்ள வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் கமலின் திரை தொழில் மீதான பற்றுதலானது நல்ல படிப்பினை. ஒவ்வொரு தனி நபரும் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் மேலும் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதை கமலிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவரது, சக ஊழியர்களான திரை உலகினருக்கும் இது பொருந்தும்.

சினிமா என்பது பலருக்கும் பொழுதுபோக்கு. மிகச் சிலருக்கோ கலைப் படைப்பு. ஆனால், கலைப்படங்களை கொண்டாடும் சமுதாயத்தில் நாம் இல்லை. எனினும்,  பொழுதுபோக்கு படத்தையே கலையாக மாற்றும் வித்தையை கற்றவர் கமல். அதுபோன்ற முயற்சிகளில் கையை சுட்டுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அதை தொடருகிறார்.

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் அவரால் முடியும். ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகவும் அவரால் முடியும். இந்தியன் தாத்தா, தசாவதாரம் பாட்டி என முற்றிலுமாக தன்னை மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். அனைவரையும் போல, சாமான்ய ரசிகர்களை திருப்தி படுத்தும் மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் மகா நடிகர்.

அதனால் தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட, ‘ஏன் இன்னும் ஆஸ்கர் விருதை கமல் வாங்க முடியவில்லை’ என்று கேள்வி எழுப்புகின்றனர். கமல்ஹாசனால் மட்டுமே அத்தகைய விருதை பெற்றுத் தர முடியும் என அவர்களும் நம்புவதன் வெளிப்பாடே அது. அனைவரின் நம்பிக்கையை பெற்று ஆறில் தொடங்கி அறுபதை கடந்து பயணிக்கும் கமலின் கலைப் பயணம் தொடரட்டும்.

ஹாட்ஸ் ஆப் கமல்....

சிந்தனைக்கு....



”இந்தியா நாடு முழுவதும் வடக்கு, தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் முழுமையான சுற்றுப்பயணம் செய்தேன். ஒரு பிச்சைக்காரனையோ அல்லது ஒரு திருடனையோ என்னால் காண முடியவில்லை. அந்த நாட்டின் உயர்ந்தபட்ச நீதி நெறிமுறைகள் போன்ற சொத்தை எங்கும் நான் கண்டதில்லை. மிகச் சிறந்த கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம், ஆன்மிகம் என இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் சிலவற்றை நாம் உடைக்காதவரை அந்த நாட்டை நாம் நிரந்தரமாக ஆளுவது முடியாத காரியம் என நான் கருதுகிறேன்.

அதனால், அந்த நாட்டின் மிகப் பழமையான கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை மாற்றும் வகையிலான ஒரு திட்டத்தை இங்கு முன் மொழிகிறேன். தங்களுடைய சொந்த கல்வி முறை மற்றும் கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம் ஆகியவற்றை விட மேலைநாட்டு ஆங்கிலேய கல்வி முறையே சிறந்தது என இந்தியர் ஒவ்வொருவரும் கருதத் தொடங்கினால் அவர்களுடைய சுயத்தையும் இயற்கையான கலாச்சார பண்பாடு போன்றவற்றை இழப்பார்கள். எவ்வாறு அவர்கள் மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு தகுந்தவாறு அவர்கள் மாறுவார்கள். தொடர்ச்சியாக அவர்களை நம்மால் எளிதாக மேலாதிக்கம் செய்ய முடியும்”

= இது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பிரபு ஆற்றிய உரை.

(பி.கு: இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை அறிமுகம் செய்தவர் தான், இந்த மெக்காலே. இந்திய கல்வி முறைக்கு மெக்காலே கல்வி திட்டம் என்ற பெயரும் உண்டு)

Monday 3 November 2014

தத்தளிக்குமா? தப்பிப் பிழைக்குமா? புதிய தமாகா


தமிழக அரசியல் வானில் கூடுதலாக ஒரு கட்சி உதிக்க தொடங்கி விட்டது. ஏற்கனவே, 1996ம் ஆண்டு உதித்து 6 ஆண்டுகளில் உதிர்ந்து போன கட்சி தான். தற்போது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அப்போது, அந்த கட்சி உதயமான தருணத்தில் தமிழக மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குளத்தில் குளியல், தமிழகமெங்கும் இடங்களை வளைத்து போடுவது, ஊழல் என அதிமுக மீது மக்களுக்கு மிக அதிக அளவிலான வெறுப்பு நிலவியது. அதே நேரத்தில், திமுக மீதும் அதிக அளவில் பாசம் ஏற்பட்டு விடவில்லை. எம்ஜிஆர் காலம் தொட்டு நீடித்த வெறுப்பு அப்போதும் அடங்கவில்லை. அந்த வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலேயே 1989ம் ஆண்டு அமைந்த திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியும் இருந்தது. இப்படி இரண்டு கழகங்கள் மீதும் தமிழக மக்கள் வெறுப்பில் இருந்த சமயத்தில் தான் 1996ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. அப்போது, பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். காங்கிரஸ் மேலிட முடிவை எதிர்த்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற ஒற்றை அஜன்டாவுடன் உதித்தது தான் தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் மற்றும் முக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அணி திரண்டனர். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனையும் தமாகா கைப்பற்றியது. அதிமுக கூட்டணியை எதிர்த்ததன் மூலமாக காங்கிரஸ் பாராம்பரிய மானம் மற்றும் கவுரவத்தையே அந்த கட்சி காப்பாற்றி விட்டது போன்ற பிரச்சாரமும் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு எதிரான மன நிலையில் இருந்த ரஜினிகாந்தும் மூப்பனாருக்கு ஆதரவு கரம் நீட்டினார். நடிகர் சரத்குமாரும் வாலன்டியராக பிரசாரம் செய்ய முன்வந்தார். இவ்வளவு சாதகமான சூழ்நிலை கனிந்தும் கூட, மூப்பனாரால் தமிழக அரசியலில் ஒளிர முடியாமல் போய்விட்டது.

‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது, கருணாநிதியின் ராஜதந்திரம். அந்த சமயத்தில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதனால், மூப்பனாரை தேசிய அரங்குக்கு தள்ளி விடும் வகையில் கருணாநிதியின் அரசியல் சதுரங்க மூவ் அனைத்தும் அமைந்தன. தேசிய அரசியல் என்பது மிகப்பெரிய கடலில் சுறா மீன்களுக்கு இடையே ஜீவிப்பது. இது கருணாநிதிக்கு தெரியும். ஆனால், தேசிய அரசியலில் இருந்த மூப்பனாருக்கு தெரியவில்லை. மாநில கட்சி மூலமாக தேசிய அரசியல் செய்யும் அனுபவத்தின் ஆரம்ப கட்டத்தை அப்போது தான் அவர் தொடங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் சரிபாதியை மூப்பனாருடைய தமாகாவுக்கு ஒதுக்கி விட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதியை எடுத்துக் கொண்டது, திமுக. இந்த பார்முலாப்படி திமுக=தமாகா கூட்டணி தோன்றியது. உண்மையில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருந்தாலே ரஜினி ஆதரவோடு பெரிய வெற்றியை தமாகா பெற்றிருக்கும் அல்லது தமிழகத்தில் புதிய ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு பலத்தையாவது சட்டசபையில் தமாகா பெற்றிருக்கும். அதை கருணாநிதி அறிவார். அதனால் தான், சட்டப்பேரவை தொகுதிகளில் தமாகாவுக்கு குறைவாக ஒதுக்கினார். பாராளுமன்ற தொகுதிகளில் தாராளம் காட்டினார். இதை மூப்பனார் புரிந்து கொள்ளாதது அவரது துரதிர்ஷ்டம்

கட்சி ஆரம்பித்து சில நாட்களில் பெற்ற சைக்கிள் சின்னம், ரஜினிகாந்த் ஆதரவு, தென்மாவட்டங்களில் நடிகர் சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களின் இடைவிடாத தீவிர பிரசாரம், ‘றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமல சைக்கிள்’ என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் ஆகியவை இணைந்து கூட்டணியை வெற்றி முகட்டில் ஏற்றியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அறிமுகமில்லா வேட்பாளரிடம் பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். தமிழகமே சுத்தமாகி விட்டது போன்ற உணர்வு அப்போது நிலவியது. தமிழக ஆட்சியை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது, தமிழ் மாநில காங்கிரஸ்.

அதே நேரத்தில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்தது. இந்த சமயத்தில் தான், தேவகவுடா பிரதமரான அதிசயமும் நடைபெற்றது. ஏற்கனவே, 43 எம்பிக்களுடன் சந்திரசேகர் பிரதமரான அதிசயமும் 1990ல் இந்தியாவில் நடந்திருந்தது. அந்த வரிசையில் திமுக எம்பிக்களையும் சேர்த்தால் 40 எம்பிக்கள் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடனும் பிரதமர் பதவியில் மூப்பனார் அமருவதற்கான சூழ்நிலை கனிந்திருந்தது. தமிழகத்தில் ஏமாந்ததை தேசிய அளவில் அவர் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டது. தமிழன், பிரதமராகும் வாய்ப்பு கருகிப்போனது. அதற்கான காரணம், ஊரறிந்த ரகசியம். இதனால், இந்த கூட்டணி 3 ஆண்டுகள் வரையே தாக்குப் பிடித்தது. 1999ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு திமுக தாவியதால் கூட்டணி, ‘பணால்’ ஆனது.

1996ல் தானாக கனிந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ள மூப்பனார் தவறியதன் விளைவுகள், 1999 முதல் தொடங்கின. இறுதியாக, எந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி தமாகா கட்சியை 1996ல் தொடங்கினாரோ அதே அதிமுகவுடன் 2001 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ் மாநில காங்கிரஸ் கைப்பற்றியது. சில மாதங்களில் மூப்பனார் மறைந்தார். அதன்பிறகு, அந்த கட்சியின் தலைமை பதவிக்கு வந்த ஜி,கே.வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடனே தமாகாவை இணைத்து விட்டார். இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். புதிய கட்சியை தொடங்குகிறார்.

ஆனால், அப்போது தமாகாவில் இருந்தவர்கள் இப்போதும் அவருடன் இருக்கிறார்களா? 1996ல் வாய்ப்பை தவறவிட்ட வாய்ப்பை புதிதாக தொடங்கும் தமாகாவால் பெற முடியுமா?  இப்போது பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து நல்ல ஓட்டு வங்கியுடன் வலிமையாக உள்ளன. இந்த சூழ்நிலையில்,  புதிய கட்சியை கொண்டு ஜி.கே.வாசனால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே இலங்கையில் இன அழிப்பு சமயத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவை இன்னும் தமிழக மக்கள் மன்னிக்க தயாராக இல்லை. அந்த அரசில் தான் வாசனும் அமைச்சராக இருந்தார். இதுபோல, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது கூறப்படும் ஊழல்களில் வாசனுடைய பதில் என்னவாக இருக்கும்? காங்கிரசில் இருந்து வெளியேறும் தமாகாவுக்கும் அந்த ஊழல் குறித்து பொறுப்பு உண்டா...? இல்லையா...?

இது மட்டுமல்ல, கட்சியை காங்கிரசில் இணைத்த பிறகு இரண்டு முறை ராஜ்யசபா எம்பியாக (12 ஆண்டுகள்)வும் மத்திய அமைச்சராகவும் வாசன் இருந்துள்ளார். எனவே, மத்தியில் அதிகாரத்தை காங்கிரஸ் இழந்து விட்டதால் புதிதாக மீண்டும் தமாகா உருவாகிறதா? என்ற சந்தேகமும் சாதாரண மக்கள் மனதில் தோன்றுகிறது. ஏற்கனவே, 1996 முதல் 2004 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத சமயத்தில் தான் தமாகா என்ற கட்சி இயங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கட்சி தனித்து செயல்படுமா அல்லது தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளைப் போல கிடைத்த இடங்களை பெற்றுக் கொண்டு திராவிட கட்சிகளின் கீழ் அடங்கிப் போய் விடுமா ....? இந்த கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் அளிக்கும் பதில்களை பொறுத்தே தமிழக அரசியல் ஆழியில் தமாகா தத்தளிக்குமா? அல்லது தப்பிப் பிழைக்குமா? என்று தெரியவரும்.

= வை.ரவீந்திரன் 

புதுச்சேரி விடுதலை நாள் = நவம்பர் 1

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பகுதிகள் மட்டுமே விடுதலை அடைந்தன. பிரெஞ்சியர் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை பெறும்போதே புதுச்சேரிக்கும் பிரெஞ்சியரிடம் இருந்து விடுதலை பெற கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வ.சுப்பையா போன்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் அப்போது பலனளிக்கவில்லை.

இதனால், ஆங்கிலேயரிடம் இருந்த இந்திய பகுதிகளுக்கு விடுதலை கிடைத்த பிறகு, பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் விடுதலை போராட்டங்கள் தலை தூக்கின. ஆனால், தங்களுடைய காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவோ அல்லது இந்தியாவில் இருந்து வெளியேறவோ பிரெஞ்சியருக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் தான், இந்திய சுதந்திரத்துக்கு பிறகும் கூட, 1948ம் ஆண்டு அக்டோபரில் வழக்கம்போல பஞ்சாயத்து தேர்தலை பிரான்ஸ் அரசு நடத்தியது.

இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, ‘பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுடன் முதலில் இணைந்த பகுதி சந்திர நாகூர். தற்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு மாநகராட்சியாக அந்த நகரம் உள்ளது. சந்திர நாகூரில், 1949 ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் 1951ல் அந்த நகரம் இணைந்தது.

அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடுதலை போராட்டம் வலுவடையத் தொடங்கியது. உண்மையில் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தான் புதுச்சேரியில் வலிமையான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. அதை திலகர் வழியில் நடத்தியவர் வ.சுப்பையா. அதிகார வர்க்கத்துடன் பேச்சு நடத்தி முன்னெடுத்து சென்றவர், குபேர் போன்றோர்.
அந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்க பல வழிகளிலும் பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டியது. வ.சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதாவது, புதுச்சேரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், தமிழக எல்லையான காலாப்பட்டில் இருந்த படி போராட்டத்தை தீவிரமாக நடத்தினார். இதற்கிடையே, தனது ஆளுகையில் இருந்த இந்தோசீனா (வியட்நாம்) பகுதியில் இருந்து ராணுவத்தை பிரான்ஸ் வரவழைத்தது. ஆனால், புதுச்சேரி மக்களின் விருப்பத்தை அறிந்திருந்த சுதந்திர இந்தியாவும், தனது ராணுவத்தை புதுச்சேரியை சுற்றி நிறுத்தியது. மேலும், புதுச்சேரி பகுதியை சுற்றிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தியது.

இந்த காலகட்டத்தில், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்வதற்கு தனியாக பாஸ்போர்ட் முறையும் அமலில் இருந்திருக்கிறது. இந்தியாவுக்குள் சிதறிக் கிடந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கப்பரப்புக்குள் செல்ல அந்த பாஸ்போர்ட் தேவை. அது இருந்தால் தான் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாகே, ஏனாம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இவ்வளவு கெடுபிடிகளுக்கு பிறகு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இணைவது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர், அப்போது இந்திய அரசின் பிரதிநிதியாக புதுச்சேரியில் இருந்த கேவல்சிங். தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழுர் என்ற இடத்தை வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்தனர்.

1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கு 170 பேர் ஆதரவு தெரிவித்தனர். 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி வரலாற்றின் போக்கை மாற்றிய இந்த வாக்குப்பதிவை நினைவு கூறும் வகையில் கீழுர் பகுதியில் இன்றும் கூட அதற்காக நினைவிடம் அமைந்துள்ளது. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

கீழுர் வாக்கெடுப்பு முடிந்ததும் பெரும்பான்மை கருத்து அடிப்படையில், விடுதலை ஒப்பந்தம் தயாரானது. டெல்லியில், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு ஆதிக்க பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் புதுச்சேரிக்கு விடுதலை அளிக்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது. அதன்படி, புதுச்சேரியின் விடுதலை வைரவிழா ஆண்டு இது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே புதுச்சேரிக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவும் இல்லை. முழுமையாக இந்தியாவுடன் இணையவும் இல்லை. பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பிரெஞ்சு சட்டங்கள், இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேற கால அவகாசம், பிரெஞ்சு மொழியில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பது என பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண அவகாசம் கேட்டது, பிரான்ஸ். இதனால், அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) கையெழுத்தாகவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 1956ம் ஆண்டு மே மாதத்தில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு, அந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற 6 ஆண்டு காலம் பிடித்தது. இறுதியாக, 1962ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிறைவேறியது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆட்சி பரப்பு அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) முழுமையாக அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தான், இந்தியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி வந்தது. பிரெஞ்சு சட்டங்கள் நீக்கப்பட்டு இந்திய சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஏற்கெனவே, கேரளா பகுதியில் உள்ள மாகே, ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பிராந்தியங்களும் புதுச்சேரி, காரைக்கால் போலவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவுடன் இணைய தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. எனவே, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இந்தியா உருவாக்கியது. அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த போதிலும், அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்தே ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைந்தது. பின்னர், பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டு 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரியில் முதல் சட்டப்பேரவை அமைந்தது. பிரெஞ்சியரிடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்ற பிறகு அமைந்த முதல் கூட்டம் என்பதால், தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையின் 50வது பொன்விழா ஆண்டு என குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் புதுச்சேரியின் விடுதலை தினம் எது? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரி அரசை பொறுத்தவரை ஆகஸ்ட் 16ம் தேதியை அதிகார மாற்ற ஒப்பந்த தினம் (De Jure transfer day) என அறிவித்து அரசு விடுமுறையும் அளித்து வருகிறது. அன்றைய தினத்தையே சுதந்திர தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், கீழுர் வாக்கெடுப்பை தொடர்ந்து, விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தான 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்றே புதுச்சேரிக்கு பிரெஞ்சியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து விட்டதால் அந்த தினத்தையே புதுச்சேரி விடுதலை தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே புதுச்சேரியில் ஒலித்து வருகிறது.

சமீபத்தில், அந்த கோரிக்கையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். கடந்த சுதந்திர தின (ஆகஸ்ட் 15) உரையின்போது ‘இனிமேல் நவம்பர் 1 விடுதலை தினமாக கொண்டாடப்படும். அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்’ என்று அறிவித்தார். எனவே, புதுச்சேரியின் விடுதலை வைர விழா ஆண்டான இந்த ஆண்டில் இருந்து நவம்பர் 1ம் தேதியும் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.

பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தான் முதன் முறையாக உண்மையான சுதந்திர தினத்தை வைர விழா ஆண்டில் புதுச்சேரி கொண்டாடுகிறது.

(தி இந்து = தமிழ் நாளிதழில் 30/10/2014 அன்று



வெளியான கட்டுரை)

= வை.ரவீந்திரன் 

அகிலம் போற்றும் பாரதம், இது இணையில்லாத காவியம்


யாராவது ஒருவர் நீட்டி முழக்கி கதை அளந்து கொண்டு இருந்தால், ‘நீ என்ன மகாபாரத கதையா சொல்கிறாய்?’ என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு மகாபாரதம் என்றால் மிக நீநீநீளளமான இதிகாச காவியம். சாந்தனு மகாராஜாவுக்கு பிறகு விசித்திர வீரியன். அவனுக்கு பிறகு, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு. அவர்களுடைய வாரிசுகள் துரியோதனன் மற்றும் தர்மர், அர்ச்சுனன். அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அவனது புதல்வன் பரீட்சித்து என 6 தலைமுறையினரைப் பற்றிய நெடிய வரலாறு, அது. அந்த வரலாற்றில் 5 தலைமுறையினருடன் வாழ்ந்தவர், சாந்தனு மற்றும் கங்கா தேவிக்கு மகனாக பிறந்த தேவவிரதன் எனப்படும் பீஷ்மர். இன்றைய தலைமுறையிடம் இவ்வளவு நீண்ட நெடிய இதிகாச கதையை படிக்கும் பொறுமையை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

அதனால்தானோ என்னவோ? டிவி சேனல்களில் அவ்வப்போது மகாபாரதத்தை நெடிய தொடராக ஒளிபரப்புகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் ‘இத் கோ மஹாபாரத் கதா’ என்ற டைட்டில் பாடலுடன் தொடர் ஆரம்பிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் அதை ரசித்து பார்க்க பெரிய கூட்டமே காத்து கிடந்தது. பின்னர், மொழி வாரி சேனல்கள் பெருகிவிட்டதால் பிராந்திய மொழிகளிலேயே மகாபாரதம் காண முடிகிறது. ஆனாலும், அதன் நீண்ட நெடிய வடிவாக்கத்தை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சலிப்பு இல்லாமலும் மக்களுக்கு தருவதில் ஒவ்வொரு சேனலும் வேறுபட்டன. அதில் ஸ்டார் குழுமத்தை சேர்ந்த விஜய், வித்தியாசமாக நிற்கிறது. ஏற்கெனவே, ஸ்டார் பிளஸ் டிவியில் இந்தியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவுற்ற மகாபாரத தொடரை கடந்த ஓராண்டு காலமாக ஸ்டார் விஜய் டப்பிங் செய்து ஒளிபரப்பி வந்தது. இதே தொடரை, மலையாளத்தில் ஏசியா நெட் சேனல் ஒளிபரப்புவதும் குறிப்பிடத்தக்கது.

எந்த இடத்திலும் டப்பிங் நெடி சிறிது கூட இல்லாமல் அசல் தமிழ் தொடர் உணர்வை அளித்தது. குறிப்பாக, கிருஷ்ணன், சகுனி, துரியோதனன் ஆகிய வேடங்களை ஏற்றவர்களின் நடிப்பு பிரமிக்கத்தக்கது. முகத்தில் சாந்தமும், கருணையும், சமயோசித சாணக்கியத்தனமும் ஒருங்கே காட்சியளித்த கிருஷ்ணரை காணும்போது உண்மையில் கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கொண்டு சதி ஆலோசனைகளை அள்ளி விடும் சகுனி கதாபாத்திரத்தை ஏற்றவரின் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. இதிகாச சகுனி கூட, இப்படி இருந்திருப்பாரா என்பது சந்தேகமே?
பீஷ்மர், துரோணர், நேத்திரங்களை இழந்த திருதராஷ்டிரர், காந்தாரி, பாஞ்சாலி, அர்ச்சுனன், அசுவத்தாமன், கர்ணன், அபிமன்யு என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருந்தனர். தமிழில் எழுதப்பட்ட டப்பிங் வசனங்களும் கூட எதுகை, மோனையோடு மிக அழகாக அமைந்திருந்தன. கீதை உபதேசம் செய்யும் காட்சிகள், மிக முக்கியமான தருணங்களில் நடைபெறும் வாக்குவாதங்கள் போன்றவற்றில் கையாளப்பட்ட வார்த்தை ஜாலங்களே இதற்கு உதாரணம். இந்த தொடரில் தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர்களுக்கும் தொடரின் அபரிமிதமான வரவேற்பில் முக்கிய பங்கு உண்டு. காட்சி அமைப்பில் சிறு பிசிறு கூட இல்லாமல் இதிகாச காலத்தை கண்முன்னே நிறுத்தியதில் ஸ்டார் விஜய்க்கு ஷொட்டு.

அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்து கங்கா தேவியின் மூலமாக மானிட பிறவியை அடைந்தவரும் ராஜநீதிகளை அறிந்தவருமான பீஷ்மரால் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களின் தவறுகளை தடுக்க முடியவில்லை. பீஷ்மர் என்ற மாபெரும் துணை இருப்பதாலேயே அஸ்தினாபுர யுவராஜன் துரியோதனனின் அட்டகாசத்தை அண்டை நாட்டு அரசர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. தனது தமையன் பாண்டுவுக்கு சொந்தமான அரசை கூட, அவனது புத்திரர்களுக்கு அளிக்க திருதராஷ்டிரனுக்கு மனம் இல்லை. அவனது புத்திரபாசம் தடுத்தது. புத்திர பாசத்தால் தனது மகன் அசுவத்தாமனுக்கு ஒரு ராஜ்ய பரிபாலனம் கிடைக்கும் என்பதாலேயே துரியோதனனை சார்ந்து இருந்து அவனது தவறுகளை குரு துரோணராலும் இடித்துக் கூற முடியவில்லை.

இப்படி இன்மைகள் அதிகரித்தபோது அரசன் வழியிலேயே குடிமக்களும் செல்வார்கள் என்பதால் ஒரு யுகத்தை அழித்து புதிய யுகம் படைத்ததாக கிருஷ்ணர் கூறுகிறார். மாபெரும் சபையில் ஒரு பெண்ணுக்கு (அதுவும் ராஜகுலத்தை சேர்ந்தவருக்கே) நேரிட்ட அவமதிப்பு தொடங்கி உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பிரம்மாஸ்திரத்தால் அழிக்கும் அசுவத்தாமன் வரை ஒவ்வொரு தவறுக்கும் தண்டனைகளை வாரி வழங்கும் கிருஷ்ணரிடம் பாஞ்சாலி கேட்கும் கேள்விகள் சிந்திக்க தூண்டுபவை.

இவ்வளவு கோரமான யுத்தம் எதற்காக? எதிரிகளாக இருந்தாலும் மிக கொடூரமாக உயிரிழந்த பிறகு அவர்கள் மீது பரிதாபமே தோன்றுவதோடு எனது தரப்பிலும் வாரிசுகளை இழந்து நிற்கிறோமே? அனைத்து லீலைகளையும் புரிபவன் நீ என்பது உண்மை என்றால், மனிதர்களின் மனதை மாற்றி இருக்கலாமே? மாபெரும் நாசகார யுத்தத்தை நிகழ்த்தியது ஏன்? இப்படி அடுக்கடுக்காக துருபத கன்னிகை பாஞ்சாலி எழுப்பும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறும் பதில், எக்காலத்துக்கும் பொருந்தும்.

‘ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் அவர்களாகவே சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரம் உண்டு. (அதில் கடவுளும் தலையிட முடியாது). ஆனால், அக்கிரமம் அதிகரித்து அதர்மம் தலை தூக்கினால் அதை ஒட்டு மொத்தமாக அழித்து புதிய யுகம் படைப்பது கடவுளின் கடமை. அதுதான், இந்த யுத்தத்தில் நடைபெற்றது. உத்தரை வயிற்றில் வளரும், உலகை எட்டிப் பார்க்காத சிசு கூட கர்ப்பத்திலேயே உயிரை இழந்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அந்த சிசுவே, ‘பரிட்சீத்து மகராஜா’வாக புதிய பாரதத்தை தொடங்குவான்’ என்பதே அந்த பதில்.

18 நாட்கள் நடைபெற்ற மகாபாரத யுத்தத்தில் காந்தார அரசன் சகுனி, அஸ்தினாபுர அரசன் துரியோதனன், திரிகர்த்த தேச அரசன் சுதர்மன், சிந்து அரசன் ஜயத்ரதன், பாஞ்சால தேச அரசன் துருபதன், மத்ரிய அரசன் சல்லியன், அங்க தேச அரசன் கர்ணன், உத்தரதேச அரசன் விராடன் என பல்வேறு தேசத்து அரசர்களும் கொல்லப்படுகின்றனர். கிருஷ்ணர் கூறுவது போல முற்றிலுமாக அனைத்து ஆட்சிகளும் துடைத்து எறியப்பட்டு புதிய ஆட்சி மலருகிறது. அக்கினியில் உதித்த பாஞ்சாலி மற்றும் நாடிழந்து நின்ற பாண்டவர்கள் மட்டுமே யுத்தத்தின் முடிவில் உயிர் பிழைத்து நிற்கின்றனர்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினால் பல்வேறு கருத்துகள் பொதிந்த தத்துவ விசாரங்களாகவே உள்ளன. கூடுமான வரை அவற்றை ஸ்டார் விஜய் சரியாக கையாண்டு இருக்கிறது. ஆங்காங்கே சில தவறுகளும் குறைகளும் (உதாரணம்=அபிமன்யு வதத்தில் கோரம், குந்தி மற்றும் காந்தாரி போன்ற மூத்த ராஜமாதாக்களின் இளமை தோற்றம்) இருந்தாலும் நிறைவு பெற்ற மகாபாரதம், நிறைவாகவே இருக்கிறது. இனிமேல், மஹாபாரதம் இல்லா இரவுப் பொழுதை நினைக்கும்போது வெறுமை கவிழ்கிறது.

‘விதியாடும் விளையாட்டில்
சதி வலையில் வீழ்ந்தனரே
தர்மம்... இங்கு பலியானதே
சதி செய்த சூழ்ச்சி தனில்
கதியின்றி போயினரே...’

‘அகிலம் போற்றும் பாரதம்
இது இணையில்லா ஒரு காவியம்
தர்ம, அதர்ம வழியினிலே
நன்மை, தீமையின் நடுவினிலே
விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’

‘கிருஷ்ணனின் மகிமையும்
கீதையின் பெருமையும்
ஒன்றாக சங்கமிக்கும்
ஒரு புண்ணிய காவியம்
மகாபாரதம்... மகாபாரதம்...’
ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.

= வை.ரவீந்திரன்