Thursday 15 December 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளஙகள் -38

30 வருடங்களுக்கு முன்பு ரேடியோவே கதியென கிடக்கும் வானொலி நேயராக இருந்தால் இவரை கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. சென்னை, திருச்சி என தமிழக வானொலி நிலையங்களில் பழைய பாடல்கள் ஒலிபரப்பாகும்போது இந்த பெயரும் நிச்சயம் ஒலிக்கும்.

இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது துவங்கி ராஜா, ராஜேஸ்வரி சண்முகம் மாதிரியான அறிவிப்பாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த பெயரை சொல்லியிருப்பார்கள்னு அவர்களுக்கே தெரியாது. தென் தமிழகத்தில் 1980களின் வானொலி ரசிகர்களுக்கு இது தெரியும். அந்த பெயர் கண்டசாலா.



அடுத்ததாகபாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடும் பாடல் என்ற அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் "அமைதி இல்லா என் மனமே..." பாடலும் 80ஸ் வானொலி நேயர்கள் காதில் இன்றும் ஒலிக்கும்.

1950, 1960களில் இந்திய திரையுலகில் கண்டசாலா மிகவும் பிரபலம். இவர் பின்னணி பாடகர் கம் இசையமைப்பாளர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த கண்டசாலா தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கோலோச்சியவர். சங்கீதத்தில் முறைப்படி தேர்ந்தவர். 



தெலுங்கில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மன தேசம்' படம்தான் ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கும் முதல் படம்

தமிழில் சுமார் 20 படங்களுக்கு கண்டசாலா இசையமைத்திருக்கிறார். திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இவரிடம் உதவியாளராக இருந்தவர். மாயாபஜார், பாதாள பைரவி, கள்வனின் காதலி, கல்யாணம் பண்ணிப்பார்... இதெல்லாம் கண்டசாலா இசையமைத்தவற்றில் குறிப்பிடத்தகும் தமிழ் படங்கள்.

இன்றளவும் ரசிகர்களை ஈர்க்கும் "கல்யாண சமையல் சாதம், காய்கனிகளும் பிரமாதம்..."  பாடலுக்கு இசை கண்டசாலாதான்.



ஆனால், பின்னணி பாடகராகத்தான் கண்டசாலாவை தமிழ் சினிமா அறியும். 1950 துவங்கி 1960கள் வரை ஏராளமாக பாடி இருக்கிறார். ஏஎம் ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் கலந்த ஒரு குரல் இவருக்கு. இவரது வசீகர குரலுக்காக 'கான கந்தர்வன்' பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என திராவிட மொழிகள் அனைத்திலும், இந்தியிலும் பாடி இருக்கிறார் கண்டசாலா. பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா, எஸ்.பி.பி போன்ற பிரபலங்களுக்கு ஆதர்ச குரு.


"உலகே மாயம் வாழ்வே மாயம் உலகில் நாம் காணும் சுகமே மாயம்..."

"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..."

"உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா சல்சா  செய்யடா..."

"ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா..."

'அமைதியில்லா தென் மனமே..."

இது போன்ற ஹிட் பாடல்கள் பல கண்டசாலா பாடியவை தான். 1960களில் திரைப்பட பாடல்களின் இசைத் தட்டுக்களை (ரிக்கார்டுகள்) பெரும்பாலும் பிரபல இசை நிறுவனமான ஹெச்எம்வி தான் வெளியிடும். அந்த நிறுவனத்தின் ஆஸ்தான பாடகராக இருந்தவர் கண்டசாலா. ஹெச்எம்விக்காக தனி இசை ஆல்பங்களையும் பண்ணி கொடுத்திருக்கிறார்.



திருப்பதி கோயிலின் ஆஸ்தான பாடகராகவும் இருந்தவர் கண்டசாலா. பகவத் கீதை பற்றி கண்டசாலா பண்ணிய ஆல்பம் திருப்பதி கோயிலில் ஒலிப்பது வழக்கம். 

'ஜகதேசா வீருணி கதா' என்ற தெலுங்கு படத்தின் சுமார் 7 நிமிட நீள பாடலான "சிவ சங்கரி சிவாநந்த லஹரி..." என்ற மிக பிரபலமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கலந்த ஒரு சிக்கலான பாடலை ஒரே டேக்கில் பாடியவர் கண்டசாலா. புராண, இதிகாச, பாகவதர் டைப் படங்களில் இருந்து குடும்பக் கதைகளுடன் துவங்கிய ஜனரஞ்சக சினிமாவின் மூத்த  பின்னணி பாடகர் என்ற அவரை சொல்லலாம்.

பழம்பெரும் பாடகர் கண்டசாலாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (4-12-2022) சமயத்தில் அவருக்கான அஞ்சலி இந்த பதிவு

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 11 December 2022

பாபா... ரீ ரிலீஸ்... அரசியல்...

இருபது வருஷத்துக்கு பிறகு 'பாபா' ரீ ரிலீஸ். ரஜினி ரசிகர்கள் கிட்ட அவரோட படங்களோட பெயர்கள  கேட்டா 'பாபா' பெயரை சொல்லுவாங்களோ இல்லையோ, ரஜினி ஹேட்டர்ஸ் கண்டிப்பா 'பாபா' பெயர சொல்வாங்க.



அது பிளாப் படம்னு அவங்க கணக்கு. அந்த படத்தோட அவரோட சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போச்சின்னு அப்போ  கொண்டாடுனவங்க கூட உண்டு. ஆனா இன்னைக்கும் அவருதான் சூப்பர் ஸ்டார். ரஜனி படத்தில வாய்ப்புன்னா இந்த ஹேட்டர்ஸ்தான் மொத ஆளாவும் நிப்பாங்க...!!!



'குரு சிஷ்யன்' படத்தில "நாற்காலிக்கு சண்டை போடும்..."னு பாடி அரசியல்ல மெதுவா எட்டிப் பார்த்தவர, 'அண்ணாமலை', 'முத்து' படத்தில பேசுன வசனங்களை ஜெயலலிதாவுக்கு எதிரானது மாதிரியே கொண்டாந்து கடைசியில 'பாட்ஷா' வெற்றி விழாவில அவர நேரடியாவே எதுக்கிற அளவுக்கு கொண்டாந்து விட்டாங்க.


அப்படியே 1996, 1998 தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாய்சுன்னு,  இப்போதைய விஜய் மாதிரியே அரசியல் ஜர்னலையும் விடாம பிடிச்சிட்டு இருந்த ரஜினிக்கு பாமக தான் ரெட் கார்டு போட்டுச்சி, அது மூலமா அந்த கட்சியும் பப்ளிசிட்டி தேடிச்சி.



ரஜினி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதா? ரஜினிக்கு 14 கேள்விகள்னு ஆரம்பிச்சி அன்றைய அரசியல் பரபரப்புக்கு தீனி போட்ட கட்சி பாமக. 'பாபா' படப்பெட்டிய தியேட்டர்ல இருந்து (அப்போ பிலிம் சுருள்தான் சேட்டிலைட் டிஜிட்டல் கிடையாது) தூக்கிட்டு ஓடுனது வரை அட்ராசிட்டி நடந்திச்சி. 


கடுப்பான ரஜினி, 'ஜக்குபாய்'னு ஒரு படத்துக்கு பூஜை போட்டு "இறைவா எதிரிகளை நான் பார்க்கிறேன். துரோகிகளை நீ பார்த்துக் கொள்"னு பஞ்ச் டயலாக்கோட விளம்பரப் படுத்தினாரு. அப்புறமா அந்த படமே டிராப் ஆயிடுச்சி. பாபா படமும் பெரிசா போகலை.


2004 நாடாளுமன்ற தேர்தல்ல பாமக போட்டியிடும் தொகுதிகளில் தோக்கணும்னு கூட ரஜினி அறிக்கை விட்டார். ஆனா 5 தொகுதிகளிலயும் பாமக ஜெயிச்சிது. 'ஜக்குபாய்' டிராப், 'பாபா' தோல்வின்னு ரஜினியோட அரசியல் ஆசைக்கு அப்போ பிரேக் விழுந்தது. 



ரஜினிக்கு ஜனரஞ்சக படம்  மட்டுமே குடுக்கனும்னு பாடம் குடுத்தது பாபான்னு சொல்லலாம். சினிமா ரசிகனா பார்த்தா, அதில அவரு கெட்டப்பே அன்னியமா இருந்திச்சி. கதை (ரஜினி)யும் குழப்பம். படத்தோட வசனம் மட்டும் எழுத்தாளர் எஸ்.ரா. 'பாட்ஷா'ன்னு பிரியாணி பண்ணுன டைரக்டர வச்சி 'பாபா'ன்னு பஞ்சாமிர்தம் பண்ண வச்சா எப்பிடி இருக்கும்? ஆக, தீவிர ரஜினி ரசிகர்களை தாண்டி படம் ரீச் ஆகலை. இதுதான் உண்மையான காரணம். இதுக்கு நடுவில பாபா டி சர்ட், பாபா தொப்பின்னு லதா ரஜினி பண்ணுன தனி மார்க்கெட் அட்ராசிட்டியும் அதிருப்திக்கு காரணம்.


ரஜினி பிராண்ட் அதிரி புதிரி வெற்றி  இல்லைங்கிறதால பலரும் 'பாபா' படத்த போஸ்ட் மார்ட்டம் பண்ணி இப்ப வரைக்கும் பேசிட்டிருக்காங்க. ரஜினிய வேற மாதிரி எதிர் பார்த்த ரசிகர்களால, பாபா, ராகவேந்திரா மாதிரி ஏத்துக்க முடியல. அவரோட 100வது படமான ராகவேந்திராவும் வசூல் சாதனை படம் கிடையாது.



அடிக்கடி இமயமலை பயணம் போகிற ரகசியத்தை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லனும்கிற எண்ணத்திலதான் மகா அவதார் பாபா பற்றி அந்த படத்தை சொந்த தயாரிப்பாவே ரஜினி எடுத்தார். மிக அதிக எதிர்பார்ப்போட 17 கோடிக்கு விற்பனையாகி 13 கோடிய மட்டுமே வசூலிச்சதால தயாரிப்பாளரா அந்த 4 கோடி இழப்பை ரஜினி திரும்ப குடுத்தார். அதே நேரத்தில கோவை மண்டலத்தில மட்டும் பாபா வசூல் ஒண்ணரை கோடி. இதை மூணு வருஷம் கழிச்சி 2005ல ரஜினியோடட 'சந்திரமுகி' தான் முறியடிச்சிது.



ஆக, ரஜினியோட அரசியல் ஆசைக்கு பிரேக் போட்ட படம், இப்போ அரசியலுக்கு முழுக்கு போட்ட பிறகு மறுபடியும் ரிலீசாகுது. ஆனா இப்பவும் ரஜினி ஹேட்டர்ஸோட விமர்சனம் குறையல. அதுதான் இன்னமும் ரஜினியோட மவுசு குறையலங்கிறதுக்கும் உதாரணம்.

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 10 December 2022

அது ஒரு கனா (தியேட்டர்) காலம்

ஓடிடி, வெப் சீரிஸ், யூ டியூப், சினிமா சேனல்கள் இப்படி எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் தியேட்டர் தான் கண் கண்ட   தெய்வம். ஆனா, நினைச்ச உடனேயே நினைச்ச படத்த பார்க்க முடியாது. பிடிச்ச படம் எப்ப எந்த தியேட்டர்ல போடுவாங்கன்னு காத்திருக்கனும். அதனால தியேட்டருக்கு போறதே திருவிழா மாதிரிதான்.

பெருநகரங்களில் வார இறுதியில்  புதுப்படங்கள் ரிலீசாகும். பிலிம் சுருள் பிரிண்டுங்கிறதால  கம்மி தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ணுவாங்க. ஓரிரு மாதம் கழித்து சிறு நகரங்களுக்கு அந்த படங்கள் வரும். அப்படியும் கூட படம் கிடைக்கலன்னா பழைய எம்ஜிஆர், சிவாஜி ஹிட் படங்களையே வார இறுதி நாட்களில் போட்டு ஓட்டுவாங்க. 




அப்பிடித்தான் நிறைய எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி படங்கள் எல்லாம் அறிமுகமாச்சி. 1980, 1990களில் இதுதான் பெரும்பாலான வழக்கம். ஆனாலும் அதுதான் தியேட்டர்களின் பொற்காலம். 

திருநெல்வேலியில் சுமார் பத்து தியேட்டர் இருக்கும். ஆலங்குளத்தில ரெண்டு (வைதேகி, லட்சுமி நாராயணா). பக்கத்து ஊரு குருவன்கோட்டையில ஒண்ணு (முத்து). இது தவிர ஒரு கிலோ மீட்டர்  தொலைவில  ஒரு டூரிங் டாக்கீஸ் (குமரன் அப்புறம் அதன் பெயர் வசந்தம் ஆனது) உண்டு. படம் போடும் முன்ன திரைக்கு முன்னால இருக்கிற ஸ்கிரீன் மியூசிக்கோட மெல்ல மெல்ல மேலே தூக்கிப் போறதும் சண்டை, பாடல் காட்சியில திரையை சுற்றி லைட் போடுறதும் அன்றைய ஆச்சரியங்கள்.

ஊருலயும் சரி. நெல்லையில் படிச்சப்பவும் சரி. சிவகாசி, சென்னையில வேலைக்காக போனப்பவும் சரி. தியேட்டர்களும் மனசுக்கு நெருக்கமான நண்பர்கள். சிவகாசியில ஒலிம்பிக், கணேஷ், பால கணேஷ் தியேட்டர்கள் எல்லாம் ரொம்பவும் நெருக்கம். எனக்கு இந்தி படங்களை அறிமுகம் செய்ததும் அந்த தியேட்டர்கள்தான். ஒலிம்பிக்கில் பாட்ஷா நாலு முறை பார்த்ததுண்டு. 

சென்னைக்கு வந்தப்ப தேவி காம்ப்ளக்ஸ், அபிராமி காம்ப்ளக்ஸ், ஆனந்த், சாந்தி, அண்ணா, கேசினோ, உட்லண்ட்ஸ், ஆல்பர்ட், ஈகா, மோட்சம்னு நகரம் முழுசும் நிறைய தியேட்டர்களில் சுத்துனது உண்டு. இஙகேயும் ரீ ரிலிஸ் தியேட்டர்கள்லாம் 1990களின் இறுதி வரை இருந்திச்சி. ஒருதலை ராகம்லாம் 1998ல் ஹவுஸ் புல்லா ஓடிச்சி...!



சினிமா சேனல்களும் வீடுகளில்  டிவிக்களின் ஆதிக்கமும் அதிகமானதும் தியேட்டர்களோட மவுசு குறைய ஆரம்பிச்சது. ஆரம்பத்தில மலையாளம் அது, இதுன்னு ஏதாவது பலான படங்கள போட்டு மின் கட்டண செலவுக்காக ஓட்டிட்டிருந்த தியேட்டர்கள் எல்லாம் 2கேக்கு அப்புறம் தாக்குப் பிடிக்க முடியாம உருவம் மாற ஆரம்பிச்சிது. மண்டபங்களில் கல்யாணம் பண்ற வழக்கமும் துவங்கினதால, சில திருமண மண்டபங்களா மாறிச்சி. சில வணிக வளாகமாவும், ஒண்ணு ரெண்டு மட்டும் மல்டி பிளக்சாவும் மாற ஆரம்பிச்சிது.

ஆலங்குளத்தில் இருந்த வைதேகி, முத்து அப்புறம் அந்த டூரிங் தியேட்டர் எல்லாம் காணாமப் போய் புல் முளைச்சி போச்சு. லட்சுமி நாராயணா மட்டும் இரண்டு ஸ்கிரீன்களோட மல்டி பிளக்ஸா இப்போ நவீனமா மாறியிருக்கு.

நெல்லையில பார்வதி கல்யாண மண்டபமாயாச்சி. மிகப்பெரிய தியேட்டரான சென்ட்ரல் பரிதாபமா இருக்கு. கல்லூரி நாட்களில புதுசா தொடங்குன பேரின்ப விலாஸ் கூட இதே நிலைதான். பாப்புலர், லட்சுமி, ராயல்,  பூர்ணகலா, அருணகிரி, ஸ்ரீபுரத்தில் வயல்காட்டு நடுவில சிவசக்தின்னு தியேட்டர்களா குவிஞ்சி கிடந்த நெல்லையில இப்ப மதுரை ரோட்டில இருக்கிற மல்டி பிளக்ஸ் தான் சொல்லும் படியா இருக்கு.

குற்றால சீசன் சமயத்தில  தென்காசியில் படம் பார்க்கிற பரதன், பாக்கியலட்சுமி தியேட்டருங்க கூட இப்ப இல்ல.

சிறு, குறு நகரங்களிலேயே நிலைமை இப்படின்னா மெட்ரோ நகரமான சென்னை பத்தி கேக்கவா வேணும். அண்ணா சாலையிலேயே எல்ஐசி அருகில் இருந்த அலங்கார் (கடைசி படம் 1997 பொங்கலுக்கு பெரிய மருது போட்டாங்க) சாந்தி, வெலிங்டன், பிளாசா, சித்ரா, ஸ்டார், ஆனந்த், மயிலை லஸ் கார்னர் காமதேனு, ராயப்பேட்டை பைலட், சைதை ராஜ்,  (அமர்க்களம் இங்கதான் எடுத்ததா சொல்லுவாங்க) இப்பிடி நிறைய தியேட்டருங்க காணாமப் போயாச்சி.

சத்தியமூர்த்தி பவன் பக்கத்தில ஜெயப்பிரதா, எக்ஸ்பிரஸ் மால் எதிரே இருந்த தியேட்டர் இந்தி படங்களுக்கு பிரபலம். ஜிம்கானா கிளப்புக்குள்ள பிளாசா, திருவல்லிக்கேணி ஸ்டார் ரீ ரிலீஸ் படங்களுக்கு. கெயிட்டியும் ஃபேவரைட் தான் 🤪 கெயிட்டிக்கு மேற்கு பக்கம் கூவம் ஆற்றுக்கு மேற்கில் சித்ரா இருந்தது. எல்லாமே  கனவு மாதிரி போயாச்சி.

சித்ரா, சாந்தி, ஆனந்த், மோட்சம், ஸ்டார்னு பேருந்து நிறுத்தங்களே தியேட்டர் பெயரில்தான்  அடையாளப் படுத்துன நிலைமை சென்னையில மாறிட்டிருக்கு. பிராட்வே என்பதே பிராட்வே தியேட்டரின் (தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடுன தியேட்டர்) பெயர்தான். 


வட சென்னை மின்ட் பகுதியில் பஸ் டெப்போ அருகே பத்மநாபா தியேட்டர் இருந்தது. இப்போ அது குடியிருப்பு வளாகமாகிறது. புரசைவாக்கத்தில அபிராமி (4 தியேட்டர்) காம்ப்ளக்ஸ் இப்போ மாறியாச்சி. அருகிலேயே எம்ஜிஆர் படங்களையா போடுற மேகலா தியேட்டரும் என்ன ஆச்சின்னு தெரியல.

மகாராணி, பாண்டியன், பாரத், எம்எம் தியேட்டர் ராயபுரம் பிரைட்டன் (இப்போ ஐ ட்ரீம்ஸ்) அகஸ்தியான்னு பெரும்பாலான தியேட்டருங்கள பார்த்தாச்சி. திருமணமான பின் முதன் முதலில் படம் பார்க்கச் சென்ற தியேட்டர் அகஸ்தியா. படம் ஷாஜஹான்.


சென்ட்ரல் -திருவொற்றியூர் மெட்ரோ ரயில் பாதைக்காக அகஸ்தியாவில் ஏக்கர் கணக்கில் இருந்த மிகப் பெரிய முன் வளாகம் எடுக்கப்பட்ட பிறகு, அது தனது பிரமாண்டத்தை இழந்து, வாழ்ந்து கெட்ட பண்ணையார் போலவே மாறி இருந்தது. இப்போ முழுசாவே அதுக்கு மரண சாசனம் எழுதியாச்சி.



மல்டி பிளக்சில 5கே, 7கேன்னு கெத்தா பார்த்தாலும் தியேட்டர்ல 25ஆவது 100ஆவது நாள் காட்சியில கூட விசிலடிச்சி பார்த்ததுக்கு ஈடாகுமா?

வேகமாக வளரும் விஞ்ஞான பெருஞ் சுழலில் தியேட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டாலும் 1990ஸ் கிட்ஸ்கள் ஒவ்வொருவரின் நினைவு இடுக்குகளிலும் அவரவருக்கு நெருக்கமான தியேட்டர்களின் சுகந்தமும் அங்க ஹால்ல வச்சிருக்க சினிமா பட ஷீல்டுகளும் நிறைஞ்சி கிடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

#நெல்லை_ரவீந்திரன்

Monday 5 December 2022

அரசியல் ஆளுமை = அம்மா



ஆணாதிக்க அரசியலில்

சிகரம் தொட்டு

ஆகச் சிறந்த ஆளுமைகளும்

பெற்றிறாத வெற்றியை

தனியாளாய் பெற்று

அரசியல் அவமதிப்புகள்

தரக்குறைவு விமர்சனங்களை

வளர்ச்சிக்கு உரமாக்கி

எதிர்த்தவர்களுக்கு சிம்மமாய்

பெண்களில் ஒரு புதிராய்

.

.

நிராசை, அவமரியாதை

துரோகம், கூடா நட்பு

ஆணாதிக்க கொடுமை

இறப்புக்கு பிறகும் தொடரும் 

அரசியல் சேறு, அவதூறு என

உச்ச துயரம் கண்ட போதிலும்

ஆளுமைகளையும் கூட

தன்னை தேடி வரச் செய்த

தன்னிகரில்லா 

தமிழகத்தின் இரும்பு மனுஷி

.

.

சாதனையான சோதனை 

வாழ்க்கை நெடுகிலும்

இரும்புத் திரை மூடிய புதிர்கள்

இறப்புக்கு பின்னும் தொடரும்

விழிகளை நிறைக்கும் சோகம் 

புவியில் பிறந்தோருக்கு

அல்லவை நல்லவை என

எல்லாவற்றுக்கும் உதாரணம்

அனைத்து பெண்களுக்கும்

அரிச்சுவடி பாடம்...



#நெல்லை_ரவீந்திரன்

Sunday 20 November 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -36

80களில் இளையராஜாவின் ராஜாங்கம் என்றால் 90களுக்கு இவரது கானம் தான். நீண்ட தூர பயணங்களில் இவரது இசையும் கூட வழித் துணை. பலரும் இதை அறிந்திருக்க மாட்டார்கள். வாலியா கண்ணதாசனா என்ற மன மயக்கத்துக்கு நிகரானது, இந்த இசை மயக்கமும். அந்த மயக்கத்தை தந்தவர் மெல்லிசை மன்னரால் தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா.



இசையராஜாவின் இசைக்குழுவில் இசை பயணத்தை ஆரம்பித்த இவரது முதல் படம் 1986ல் வெளியான 'மாட்டுக்கார மன்னாரு'. ராமராஜனின் 'மனசுக்கேத்த மகராசா' (1989) ரசிகர்கள் மனதில் தடம் பதிக்க, 'வைகாசி பொறந்தாச்சி' படம் புகழ் உச்சிக்கு எடுத்துச் சென்றது. அப்புறம் பத்து பதினைந்து வருஷம் அடை மழைதான். ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், தேவா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த், கார்த்திக், சத்யராஜ், ஆர்.பாண்டியராஜன் படங்கள்  ஆரம்ப கால அஜித், விஜய், படங்கள் பெரும்பாலானவை தேவாவின் கைவண்ணமே.

ரஜினியின் எவர்கிரீன் மூவி பாட்ஷா ஒன்றே இவர் பெயர் சொல்லும். ரஜினி படங்களின் டைட்டில்களில் வரும் "S U P E R  S T A R  R A J N I  ரஜினி" என்ற எழுத்துக்களின் பிஜிஎம் இவரே. அண்ணாமலையில் துவக்கி வைத்தார். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட வேண்டும். அருணாச்சலம் போன்ற படங்களும்  இவர்தான். 



கமலுக்கு பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அவ்வை சண்முகி... இப்படி...

ரஜினிக்கு போலவே சரத்குமாருக்கு "வாராரு வாராரு அண்ணாச்சி..." பாடலை தந்ததும் தேவாதான். நம்ம அண்ணாச்சி, கட்டபொம்மன், சூரியன், ராஜபாண்டி, சாமுண்டி, நட்புக்காக, வேடன்... என சரத்தின்  மிக அதிக அளவிலான ஹிட் படங்களின் பாடல்கள் இவரின் இசையே.

ஆசை, வாலி, காதல் கோட்டை, வான்மதி, ரெட், ரெட்டை ஜடை வயசு, சிட்டிசன் என அஜித்துக்கும் குஷி, ஒன்ஸ்மோர், ரசிகன், தேவா என விஜய்க்கும் ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். இசையமைப்பாளராகும் ஆர்வம் கொண்டவராக அஜித் நடித்த முகவரி படத்தின் இசையும் இவரே. அஜித்தின் பெரும்பாலான ஆரம்ப கால ஹிட் பாடல்களின் முகவரி தேவா தான்.

'தகடுன்னா தமிழ்நாட்டுக்கே தெரியும்..'னு அடிதடி படத்தில் வரும் சத்யராஜ பத்தின பாடலுக்கும் இசை, குரல் இவர்தான்.

1975 -1990 இளையராஜாவின் பாடல்கள் வெகு பிரபலம் என்றால் 1990 -2005 தேவாவின் கானங்கள் தான் பொற்காலம்.

பொற்காலம், சோலையம்மா, தெற்கு தெரு மச்சான், பாரதி கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை மச்சான், காதலே நிம்மதி மாதிரியான 90களின் ஹிட்  படங்களின் இவரது பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் விருப்ப ரகம்

'தூதுவளை இலை அரைச்சி...,' 'அத்திப்பழம் சிவப்பா இந்த அத்த மக சிவப்பா...,' 'ஆடியில சேதி சொல்லி...' 'முத்து நகையே முழு நிலவே...' 'வைகறையில் வந்ததிந்த வான்மதி...,' 'சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது...' இவை எல்லாம்  சாம்பிள்.

பாடகராக தேவாவின் குரல் நடிகர் மணிவண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்தும். 'கோகுலத்தில் சீதை' படத்தில் "கோகுலத்து கண்ணா கண்ணா.." பாடலிலும், 'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜியுடன் பாடும் "உன்னில் என்னில் உள்ளது காதல்.." பாடலும் உதாரணம்.

"விதம் விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...", "சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா...', "அண்ணா நகரு ஆண்டாளு...," "ஒயிட்டு லெக்கான் கோழி ஒண்ணு கூவுது..."  இப்படியான பாடல்களால் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் தேவா.

இதனாலேயே கானா இசையமைப்பாளர் என்ற முத்திரையை குத்தி அவரது இசையை ஒதுக்க பார்த்தனர். டியூனை காப்பியடிப்பவர் என்றெல்லாம் கூட விமர்சித்தார்கள்.

ஆனால், அவரது தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்... சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் இறுதிச் சடங்கில் ஒலித்தது.

இந்த நிமிடம் கூட இவரது பாடல் என தெரியாமலேயே யாரேனும் தேவ கானத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். திரை இசையின் சாம்ராட் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், கொடுத்த 'தேனிசை தென்றல்' பட்டத்துக்கு பெருமையை சேர்த்தவர்  தேவா.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன் 

Friday 23 September 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -37

 சிவப்பு தோல் தான் நடிகைகளுக்கு சக்ஸஸ் என நினைத்த சினிமா அகராதியை தவிடு பொடியாக்கிய பெண். போதையூட்டும் விழிகளால் இரண்டு தசாப்த ரசிகர்களை கட்டிப் போட்ட கறுப்பு நிறத்தழகி. ஒற்றை  வார்த்தைக்கே 80ஸ், 90ஸ்  ரசிகர்கள்  தூக்கம் தொலைத்து கிறங்கிக் கிடந்தனர்.  அந்த வார்த்தை சில்க். தெலுங்கு விஜயலட்சுமியை மலையாளம்  ஸ்மிதாவாக்கியது. அவரை பட்டுப் போல வாரி அணைத்து சில்க் ஸ்மிதா ஆக்கிக் கொண்டது, தமிழ்.


வறுமையும் சின்ன வயதிலேயே திருமண வாழ்வில் தள்ளப்பட்டு குடும்ப பிரச்சினையும் துரத்தியதால் பிழைப்பு தேடி வந்த சில்க்கின் மொத்த பிழைப்புமே சோகம்தான். அவருக்கு காட் ஃபாதராக நடிகர் வினு சக்கரவர்த்தி இருந்த காலம் தான் கொஞ்சம் நிம்மதியாக சில்க் இருந்திருப்பார். 


தமிழ் சினிமாவில் டச்அப் கேர்ளாக இருந்த ஸ்மிதாவை 'வண்டிச் சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தவர் அவரே. நாட்டுப்புறமாக தெலுங்கு மட்டும் பேசிய விஜயலட்சுமிக்கு தமிழும் ஆங்கிலமும் நடனமும் கற்றுக் கொடுத்து நடிகையாக்கியதில் வினு சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.

'வண்டிச்சக்கரம்' படத்தில் ஸ்மிதாவின் வேடம் சாராயம் விற்கும் பெண்.  படத்தில் அவரது பெயர் சில்க்.  "வா மச்சான் வா வண்ணாரப் பேட்ட..." பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட பாடலால் பிரபலம் ஆனார். முதல் படத்திலேயே விழி மொழியாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை கட்டிப் போட்டார். சில்க்கும் ஸ்மிதாவும் சேர்ந்து சில்க் ஸ்மிதா ஆனார். அப்புறம் என்ன..? ஆடியன்ஸோட ரிப்பீட்டு... ரிப்பீட்டு....


17 வருஷத்தில் ஐந்து மொழிகளில் சில்க் நடித்த படங்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டும். ஆண்டுக்கு சராசரியாக 20 படங்கள்..! 1980களில் துவங்கி 1990களின் இறுதி வரை அவரது ஆட்டம்தான். அந்த சமயத்தில் வந்த படங்களில் எல்லாம் ஹீரோ, ஹீரோயின் மெயின் கதைன்னு ஒரு பக்கம் போகும். காமெடி தனி டிராக்கா இருக்கும்.  மொத்த படத்துக்கும் சுவை கூட்டி கல்லா கட்ட வைக்கும் அஜின மோட்டா தான் கவர்ச்சி நடனம். ரம்பா மேனகை திலோத்தமை போல சில்க், அனுராதா, ஜெயமாலினி என முக்க(ன்)னிகள் தான் அன்றைய திரை விருந்தின் உச்சம்.

1980ஸ் என்பது திரையுலகில் ரஜினி, கமல் முன்னேறத் துவங்கிய காலம். அன்றைய அவர்களின் படங்கள் எல்லாம் வசூலை வாரிக் குவித்ததில் சில்க் ஸ்மிதாவின் பங்கு மிகவும் முக்கியம். அவர்களுடன் சில்க் ஸ்மிதாவின் டூயட் ஒன்று நிச்சயம்.

 பாயும்புலி, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, தாய்வீடு, தங்க மகன், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன் இப்படி பல படங்களை சொல்லலாம். அவர்களோடு சில்க் ஸ்மிதா ஆட்டம் போட்ட "ஆடி மாசம் காத்தடிக்க...", "நேத்து ராத்திரி யம்மா...", "பொன்மேனி உருகுதே..." இன்றளவும் சுண்டி இழுக்கும் பாடல்கள்.


கதாநாயகிகளுக்கு இணையாக இருந்ததால் தான், மூன்று வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது. படத்தின் பெயரும் அவர் பெயர் தான், 'சில்க் சில்க் சில்க்'. 1983 ஒரு ஆண்டில் மட்டும் 45 படங்களில் நடித்து புதிய சாதனையையே படைத்தார் சில்க். அதே நேரத்தில் கவர்ச்சிக்குள் மட்டும் அவரை கட்டம் கட்டி விட முடியாது.


தியாகராஜன் ஜோடியாக பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை', 'நீங்கள் கேட்டவை' (அடியேய் மனம் நில்லுனானா நிக்காதடி...), பிரபு ஜோடியாக 'கோழி கூவுது' படங்களில் எல்லாம் இணை நாயகியாகவே படம் முழுவதும் அருமையாக நடித்திருப்பார். பின்னாளில் கதாநாயகிகளே கவர்ச்சி நடனங்களையும் கையில் எடுத்ததால் வாய்ப்புகள் குறைந்தாலும் சில்க்கின் கிரேஸ் ஒருபோதும் ரசிகர்களிடம் குறைந்ததில்லை.

1990களுக்கு பிறகும் அவரது கொடி பறந்தது. அவரது நடிப்பு திறமையை தெரிந்த பாக்யராஜ் தனக்கு ஜோடியா நடிக்க வைத்தார். 'அவசர போலீஸ் 100' என்ற அந்த படத்தால் எம்ஜிஆர் படத்தில் இடம் பெறும் வாய்ப்பும் சில்க் ஸ்மிதாவுக்கு வாய்த்தது.

 அப்புறம் பாண்டியராஜனின் 'பாட்டி சொல்லை தட்டாதே', பிரபுவின் 'பாண்டித்துரை' போன்ற படங்கள் எல்லாம் சேலை கெட்டப்பிலும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்தவை. சில்க் என்று சொன்னால் அந்த கிறக்கமான போதையூட்டும் கண்கள் போதாதா?


80, 90களில் இன்றைய பானை உடைத்தல் போட்டி போல, கிராமங்களில் பொங்கல்  விழாக்களில் 'மங்கைக்கு திலகமிடல்' என போட்டி வைப்பார்கள். சுவரில் ஒரு நடிகையின் படத்தை ஒட்டி வைத்து இளைஞர்களின் கண்களை கட்டி விட்டு சரியாக நெற்றியில் பொட்டு வைக்க சொல்வார்கள். அந்த போட்டிகளில் எல்லாம் தவறாமல் போஸ்டர் படங்களில் இடம் பிடிக்கும் நடிகை சில்க் ஸ்மிதா தான். அதில் அன்றைய இளசுகளுக்கு ஒரு கிக்..!

வாழ்க்கை வரலாறை மூன்று மொழிகளில் படமாக  (டர்ட்டி பிக்சர்) எடுக்கும் அளவுக்கு எவராலும் மறக்க முடியாத உச்சம் தொட்டவர் சில்க்.

1980, 90களின் முன்னணி நாயகர்கள் அனைவர் படங்களிலும் நடித்து ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட சில்க்கின் சொந்த வாழ்க்கை மிகவும் சோக மயமானது. இணையைத் தேடி என்ற மலையாள படம் மூலமாகத்தின் முதன் முதலில் திரை வாழ்க்கைக்கு சில்க் வந்தார். அவரால் நிஜ வாழ்க்கையில் இணையையும் தேட முடியவில்லை. நிம்மதியையும் தேட முடியவில்லை.

உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே வெளியில் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்திய சில்க் ஸ்மிதா, 35வது வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது சோகம்தான். அதுவே அவரது பிரச்சினைகளுக்கு இறைவன் அளித்த விடுதலையாக இருக்கலாம். 

இறந்த நாளன்று கூட சக நடிகை ஒருவருக்கு போன் போட்டு புலம்பியிருக்கிறார். தவிர, ரசிகர்களின் மனதில் எப்போதுமே அந்த இளம் சில்க் உருவம் மட்டும்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும் என  இறைவன் நினைத்திருக்கலாம். 

மறைந்து 25 ஆண்டுகளை கடந்தாலும் சினிமா ரசிகர்களால் மறக்காத முடியாத மூன்றெழுத்து மந்திரம் 'சில்க்'.

#நெல்லை_ரவீந்திரன் 

Friday 5 August 2022

கண்களும் கவி பாடுதே... கஜோல்

 கண்களும் கவி பாடுதே... கண்ணே உன் கண்களும் கவி பாடுதே...

இந்த பாடல் வரிகள் இவருக்குத்தான் பொருந்தும். கண்களாலேயே நடிக்கும் 1990களின் கனவு கன்னி. ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்தாலும் 20 ஆண்டுகள் கழித்தும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த காந்த கண்ணழகி. அவர் கஜோல்.

மின்சார கனவு. இந்த ஒரு தமிழ் படம் மட்டும் தான் கஜோல் நாயகியாக நடித்தது.

ஸ்ட்ராபெர்ரி கண்ணே...

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா(அட சினிமா டைட்டில்)..

தங்கத் தாமரை மகளே..

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..

இப்படி அந்த படத்தில் கஜோல் நடித்த அனைத்து பாடல்களும் இன்னும் ரசிகர்கள் முணுமுணுப்பவை. 

அரவிந்த் சாமி, பிரபு தேவா, நாசர், எஸ்பிபி,  கிரிஷ் கர்னாட் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கஜோல் ஸ்கோர் பண்ணியிருப்பார், உண்மையில்  பின்னியிருப்பார். இத்தனைக்கும் சொந்த குரல் கிடையாது. ரேவதி தான் கஜோலுக்கு குரல் கொடுத்திருப்பார்.

அந்த படத்திலேயே பிரபு தேவா சொல்வது போல பெரிய மூக்கு, பெரிய கண்கள் தான். ஆனாலும் திரையில் கஜோலை பார்த்தாலே ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். 

இதனால் தான், இருபது ஆண்டுகள் கழித்தும் தமிழ் சினிமா அவரை மறக்காமல் விஐபி 2 படத்துக்காக 2017ல் மீண்டும் அழைத்து வந்தது.

1990களில் இந்தியில் கலக்கிய கஜோலை ரசிகர்களுக்கு முதலில் சேர்த்த படம் 'பாஸிகர்'. ஷாருக்கான் ஜோடி. அடுத்தடுத்து  'தில்வாலே துல்ஹனியா லேஜயங்கே', 'குச் குச் ஹோதா ஹை' என பல ஹிட் படங்களை கொடுத்த இந்த ஜோடி தான் தமிழில் கமல்-ஸ்ரீதேவியைப் போல இந்தியில் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடி.

இப்போது போல அல்லாமல் 1990களில் நெல்லை உட்பட தமிழகத்தின் முக்கிய நகர திரையரங்குகளில் இந்தி படங்களும் தமிழ் படங்களுக்கு இணையாக ரிலீசாகும். சிறு நகரங்களில் கொஞ்சம் தாமதமாக இந்தி படங்கள் வரும். சென்னையில் தேவி போன்ற பெரிய தியேட்டர்களிலேயே சில இந்தி படங்கள் 50 நாட்களை கடந்ததும் உண்டு.

பாஸிகர் படத்தை சிவகாசியிலும் தில்வாலே துல்ஹனியா லேஜயங்கே படத்தை நெல்லையிலும் சென்னையில் குச் குச் ஹோதி ஹை உட்பட ஏராளமான இந்தி படங்களை பார்த்திருக்கிறேன்.

அந்த சமயங்களில் எல்லாம் திரையரங்குகளில் பாலிவுட் படங்களை பார்த்தபோது அறிமுகமான கனவு கன்னிகளில் மனம் கவர்ந்தவர் கஜோல். 

அந்த கனவு நாயகிக்கு இன்று பிறந்த நாள்.



Tuesday 21 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -35

சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார். ஆண் பிரபலங்களைக் கூட நாம் நினைத்து பார்த்திராத துறைகளிலும் களமிறங்கி வெற்றி கண்டவர். அநேகமாக இயக்குநரை கரம் பிடித்த முதல் கதாநாயகி அவராகத்தான் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களை பார்த்திருப்போம். ஆனால், அவர்களுக்கெல்லாம் சீனியர் நாயகி.



அவர் பானுமதி. அடிப்படையில், அவர் ஒரு தெலுங்கு நடிகை. 1939ஆம் ஆண்டு 13 வயதிலேயே தெலுங்கில் அறிமுகமாகி அடுத்த 5 ஆண்டுகளிலேயே இயக்குனர் ராமகிருஷ்ணாவை திருமணம் செய்தார். அத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தாலும் காலம் இடம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகே தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிரகாசித்தார்.



தெலுங்கில் இருந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து திருமணமான நாயகியாகத்தான் தமிழில் நுழைந்தார் பானுமதி. 



1940, 50களில் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், சித்தூர் நாகையா தொடங்கி 1960, 1970களில் கோலோச்சிய அடுத்த தலைமுறை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் என தென்னிந்திய ஜாம்பவான்களின் தேர்வாக இருந்தவர்.



நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜூனா போன்ற அடுத்த இளம் தலைமுறையினரின் படங்களிலும் நடித்த பெருமை உண்டு. இவரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. பானுமதி அறிமுகமான காலத்தில் நடிப்பவரே சொந்த குரலில் வசனம் பேசுவதோடு பாடலும் பாட வேண்டும். அதனால் ஆரம்பத்தில் இருந்தே பாடவும் செய்தார். தான் நடித்த அனைத்து பாடல்களையும் தானே பாடிய கதாநாயகியும் இவர் மட்டுமே.



நடிகை, பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர், சிறுகதை எழுத்தாளர் இப்படி 8 வித திறமைசாலி. 'அஷ்டவதானி' பட்டம் பெற்றவர். சினிமா ஸ்டுடியோ சொந்தமாக வைத்திருந்த ஒரே நடிகையும் இவர்தான். எப்போதுமே அவருக்குள் ஒரு துணிச்சல்தனம் உண்டு. அவரது நடிப்பிலேயே இதை ரசிகர்கள்  பார்க்கலாம். 



எம்ஜிஆரை திரை உலகில் ரொம்ப மரியாதையாக எல்லோரும் அழைத்த சமயத்தில் மிஸ்டர் ராமச்சந்திரன் என அழைத்த துணிச்சல்காரர். "நோ கட்டிப்பிடி ஸீன்,  நோ நெருக்கமான ஸீன்" என கட்டுப்பாடுகளை விதித்தும் கதாநாயகியாக நீண்ட நாள் கோலோச்சியவர்.



ஜெமினி நடித்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்து தயாரிப்பாளர் சக்கரபாணியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சாவித்திரி நடித்தார். அந்த தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் விதமாக 'சக்கரபாணி' என்ற பெயரிலேயே காமெடி படத்தை தயாரித்து இயக்கினார் பானுமதி. அவரது துணிச்சலுக்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த படம்  சூப்பர் ஹிட்டாகி இவரது இயக்குநர் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.



1945ல் சித்தூர் நாகையாவுடன் நடித்த 'ஸ்வர்க்க சீமா' தெலுங்கில் முதன் முதலில் இவரை அடையாளம் காண்பித்தது என்றால், தமிழில் அடையாளம் கொடுத்த படம் பி.யூ.சின்னப்பாவுடன் நடித்து 1949ல் வெளியான 'ரத்ன குமார்'. 1953லேயே இயக்குநராகவும் ஆகி விட்டார். 'சண்டிராணி' என்ற அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படத்தின் ஹீரோ என்.டி.ராமாராவ்.  



முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகையும் இவரே. படம் எம்ஜிஆரின் 'கலையரசி'. (தமிழில் வெளியான  விண்வெளி கதையம்சம் கொண்ட முதல் படமும் இதுதான்) பத்ம விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகையும் பானுமதி தான். ஆண்டு 1966.


1939 தொடங்கி 1998 வரை சுமார் 60 ஆண்டு காலம் திரை வானில் ஜொலித்த பானுமதியின் பெயரைச் சொன்னால் எம்ஜிஆர், சிவாஜி நடித்த கருப்பு வெள்ளை படங்கள்தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும்.



மலைக்கள்ளன், மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, தாய்க்குப்பின் தாரம், காஞ்சி தலைவன் என எம்ஜிஆருடன் நடித்த படங்களும்



மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, அறிவாளி, கள்வனின் காதலி என சிவாஜியுடன் நடித்த படங்களும் மனதில் நீங்காத எவர்கிரீன் ரகங்கள். தமிழில் வெளியான முதலாவது வண்ணப் படத்தின் (அலிபாபாவும் 40 திருடர்களும்) நாயகி. ஆனால் தமிழில் வண்ணப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை.


பின்னாளில் அம்மா, பாட்டி வேடங்களை போட்ட பானுமதிக்கு 1992ல் வெளியான பிரசாந்த், ரோஜா நடித்த 'செம்பருத்தி' படம் தான் தமிழில் கடைசி படம். சூட்டிங்கில் ஒரு சிங்கத்தை பார்ப்பது போல இருக்கும் என்பது நடிகை ரோஜா  கூறிய அனுபவம். அப்படியானால் இளம் வயது பானுமதியை கற்பனை செய்து பாருங்கள். 



தெலுங்கில் 1998 வரை நடித்திருக்கிறார். தமிழில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா நடித்த 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பம்மா மாட்டா பங்காரு பாட்டா'வில் மனோரமா வேடத்தில் நடித்தவர் பானுமதி.


திரையுலகைத் தாண்டி பார்த்தால் விருது பெற்ற  சிறுகதை எழுத்தாளர், இசைப் பள்ளியின் முதல்வர், நடிப்புக் கல்லூரி பேராசிரியர் என பானுமதி பெற்ற அங்கீகாரம் ஏராளம். இவ்வளவு திறமைகளையும், பெருமைகளையும் கொண்ட ஒரு நடிகையை தமிழ், தெலுங்கு மட்டுமல்ல, எந்த திரையுலகிலும் பார்க்க முடியாது என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்


Thursday 9 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -34

தமிழ் சினிமாவில் இவரோட ஸ்டைலே தனி. பெயரை சொன்னாலே கண்ணை சிமிட்டி புருவத்தை அசைத்தபடி அழுத்தமாக பேசும் டயலாக் டெலிவரிதான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வரும்.

"ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்"

"ஏண்டாாா எடுத்தேஏஏ எதுக்குடா எடுத்தேஏஏ"

இது மாதிரியான வசனங்களும் கூடவே நினைவிலாடுவதை தவிர்க்க முடியாது. அவர்தான் அசோகன்.



நம்பியார், எஸ்.வி.ரங்காராவ் இருவரும் கலந்த ஒரு கேரக்டரில் பொருந்துவது அசோகன்.

வில்லன்களில் நம்பியார் ஒரு ரகம் என்றால் இவர் வேறு ரகம். நம்பியார் படம் என்றால் நாலைந்து சண்டையாவது இருக்கும். ஆனால், இவரோ பெரும்பாலும் நேரடியாக மோதாத புத்திசாலி வில்லன். கிளைமாக்சில்தான் மூன்று அடி அடித்துவிட்டு அதன் பிறகு அடி வாங்குவார். நம்பியாருடன் சேர்ந்து இவரும் வில்லனாக மிரட்டினால் அந்த படம் பிளாக் பஸ்டருக்கு உத்தரவாதம். எம்ஜிஆரின் 'என் அண்ணன்' அதற்கு உதாரணம்.



வில்லன் தவிர்த்து அப்பா, மாமனார், பண்ணையார், ஊர் பெரியவர் என கேரக்டர் ரோல்களிலும் எஸ்.வி.ரங்காராவ் போலவே கலக்கியவர். நல்ல குணமான ஊர் பெரிய மனிதர், ஜமீன்தார் வேடங்களுக்கு ரங்காராவ் என்றால் அதே கேரக்டர்களின் கொடூரமான பிம்பத்தில் அதகளப்படுத்தியவர் அசோகன். இதற்கு 'ரிக்சாக்காரன்' படத்தை உதாரணம் காட்டலாம்

அசோகனின் திரையுலக வாழ்க்கை மொத்தம் 30 ஆண்டுகள். தனது  மொத்த வாழ்வையும் திரையிலேயே கழித்தவர். திருச்சியின் மிக பழமை வாய்ந்த பிரபலமான  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றதும் சினிமா ஆசையில் சென்னை வந்த அந்தோணியை அசோகன் ஆக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டிஆர் ராமண்ணா. 1953ல் வெளியான அன்றைய ஹிட் படமான கேபி சுந்தராம்பாள் நடித்த 'அவ்வையார்' தான் அறிமுகம். முதல் வேடமே மன்னன் வேடம் தான்.



அன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள், வறுமை போன்ற பல்வேறு சூழலால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் நாடகங்களில் வேஷம் கட்டிய கையோடு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்திருந்தனர். அதனால் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே சினிமாவில் நிறைந்திருந்தனர். அப்படி பார்த்தால் அசோகன்தான் தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்றே கூறலாம். டைட்டில் கார்டிலேயே அசோகன் பி.ஏ என்று தான் போடுவார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்னதாக தலை காட்டிய அசோகனுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால் 1960 தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டு காலம் அவர் காட்டில் அடைமழை பெய்தது. ஆண்டெின்றுக்கு தலா பத்து படங்களுக்கு மேல் எல்லாம் நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 80  படங்கள். (இது எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகம்)



எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் அசோகன்தான் மெயின் வில்லன். அதே நேரத்தில் 'அன்பே வா' படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் முறைப் பையனாக விமான பைலட் கேரக்டரில் மிக அமைதியான ஜென்டில்மேனாகவும் அசோகன் கலக்கி இருப்பார்.



சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காத மேதை, பாதகாணிக்கை, களத்தூர் கண்ணம்மா, கர்ணன் இப்படி அசோகனின் தரமான நடிப்பை சொல்லும் படங்கள் ஏராளம்.

கூடவே, பாடியும் இருக்கிறார் அசோகன். ஜெய்சங்கரின் அறிமுக படமான 'இரவும் பகலும்' படத்தில் "இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். அத இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துடடான்...' என்ற பாடலை பாடியவர் சாட்சாத் அசோகனே தான்.

வில்லன், குணசித்திரம் என கலக்கியதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  இது சத்தியம், தெய்வ திருமகள், காட்டு ராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன்... இவை அசோகன் ஹீரோவாக நடித்த படங்களில் சில. 



நாயகன் என்றால் டூயட் பாடல்கள் இல்லாமலா..?

"மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது...", 

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்..." 

"காட்டு ராணி, உன் முகத்தை காட்டு ராணி..." 

இவை அவரது டூயட்டுகளில் சில.

'பாத காணிக்கை' படத்தில் ஊன்று கோலுடன் தோன்றி நடித்த "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..." பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்களில் ஒன்று.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில திரைப்படங்களையும் அசோகன் தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'நேற்று இன்று நாளை' தயாரிப்பாளர் இவர்தான்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலகட்டத்துக்கு பின், 1980களில் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு', 'தர்மயுத்தம்',  'தீ', 'பில்லா', 'முரட்டுக்காளை', 'சவால்', 'சங்கர்லால்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களில் சிவகுமார், ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் அசோகன் நடித்திருக்கிறார். 

'ஆனந்த ஜோதி', 'களத்தூர் கண்ணம்மா' என குழந்தை கமலுடன் நடித்த அசோகன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் ஹீரோ கமலுடனும் நடித்திருக்கிறார்.  "ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்..."னு தனக்கே உரித்தான குரலில் பூதம் வேடத்தில் கமலுடன் கலக்கி இருப்பார்.



1950களில் துவங்கி 1980கள் வரை நீடித்த அசோகனின் திரைப் பயணம் அவரது 51வயதிலேயே முடிந்து போனது. 50 வயதிலேயே மறைந்த  டி.எஸ்.பாலையா, ரங்காராவ், என்எஸ்கே போன்ற தமிழ் திரையுலக பிரபலங்களின் பட்டியலில் அசோகனும் இடம் பிடித்து விட்டார்.

பவளங்கள் ஜொலிக்கும்

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 5 June 2022

பாடும் நிலா பாலு



 தமிழை சுமந்தபடி தவழும் தென்றல் காற்றை கற்கண்டாக மாற்றிய ரசவாதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவுக்கு முதன் முதலில் குரல் தந்து அரை நூற்றாண்டாக குரலில் மாயவித்தை காட்டிய மந்திரவாதி. இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் நிறைந்திருக்கிறார், எஸ்பிபி.

நான் அறிந்தவரை எவ்வளவு சிக்கலான பாடலாக இருந்தாலும் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடியது அவர் ஒருவர்தான். எவ்வளவு உச்சஸ்தாயி போனாலும் சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. எப்படி பாடினாலும் கூடவே சிரிப்போ, சோகமோ, எள்ளலோ அசால்ட்டாக நொடியில் கொண்டு வந்து வரிகளையும் பாடும் திறமைசாலி. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதை குறிப்பிடலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும்.  'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கான 'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இந்திரன் சந்திரன் படத்திலும் ஒரு கமலுக்கு இவர்தான் குரல். தசாவதாரத்திலும் ஒரு சில கேரக்டர்களுக்கு எஸ்பிபி குரல்தான். 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொரு பாடலும் எஸ்பிபியையே எனக்கு முன்னிறுத்தும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடுவதை வேறு யாரையும் கொண்டே நினைத்துப் பார்க்கவே முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என பயணித்து இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி,  உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வி இருவருமே புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே.

சிகரம், ரட்சகன், காதலன், மின்சார கனவு இப்படி நிறைய படங்களில் நடிகராகவும், பல படங்களை தயாரித்தும், துடிக்கும் கரங்கள் (அந்த படத்தின் மேகம் முந்தானை ஆடுது தன்னாலே...  பாடல் ஒன்றே போதும் அவரது இசைக்கு) போன்ற படங்களின் இசையமைப்பாளராகவும் ஜெயித்த அவரால் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன ஒரு காரணம்: என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. இயக்குநராக இருந்தால் அதை செய்ய நேரிடும். இதுதான் எஸ்பிபி

மக்கள் நாயகன் ராமராஜன்,  மைக் மோகன் இருவருமே திரை வானின் உச்சத்தில் ஜொலித்ததற்கு எஸ்பிபி பாடல்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. இருவரின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டடித்தன.

இசையால் பாடல் வரிகள் உயிர் பெற்றாலும், எஸ்பிபி பாடியதாலேயே   அவை அமரத்துவம் பெற்று ஜீவித்து நிற்கின்றன. மகிழ்ச்சி, சோகம், காதல், பாசம், தோல்வி இப்படி ஒவ்வொருவரின் அந்தந்த சமயத்தின் எந்தெந்த உணர்வுக்கும் அவர் குரலே அருமருந்து. தூக்கம் இல்லா நீள் இரவுகளில் அவரது குரலே நல் விருந்து. நீண்ட தூர பயணங்களுக்கும் அதுவே வழித்துணை.

இன்று எஸ்பிபி பிறந்த தினம்

#நெல்லை_ரவீந்திரன்

Monday 28 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -33

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத வசனங்கள் பல உண்டு. அவற்றை பட்டியலிட்டால் டாப் 10 ரகங்களுக்குள் இந்த வசனங்கள் நிச்சயமாக வரும். 

"சபாஷ்... சரியான போட்டி...", "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி...", "அண்டாக்கா கஸம் அபுக்கா குஸூம் திறந்திடு சீஸே..." இந்த வசனங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர், வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. நம்பியார் காலத்துக்கு முந்தைய அரசர் கால கதை களங்களில் அதகளம் செய்தவர்.



கம்பீரமான உருவம், அசால்ட்டான பார்வை, கணீர் குரலில் மிக அலட்சியமான வசன உச்சரிப்பு, அட்டகாசமான வில்லத்தன சிரிப்பு. இப்படி வில்லனுக்கே உரித்தான இலக்கணத்தை வகுத்தவர் இவரே. இவரது ஹஹா ஹஹா ஹஹா.. என்ற வெடிச் சிரிப்பே பயங்கரமானது. கேட்டாலே அச்சமூட்டும் ரகம்.



படத்தில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும்போது யார் ஜெயிப்பார் என்ற பரபரப்பை கூட்டும் விதமாகவே இருக்கும். இணையான வில்லன் ஒருவர் இருந்தால் தான் ஒரு ஹீரோவுக்கு சிறப்பு. அது போன்ற ஒரு வில்லன் பி.எஸ்.வீரப்பா.



கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் பிறந்து பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த பி.எஸ்.வீரப்பா, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தை பார்க்க வந்த கே.பி.சுந்தராம்பாள், இவரது நடிப்பை பாராட்ட, அவரிடமே சிபாரிசு கடிதம் பெற்று சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானார் பி.எஸ்.வீரப்பா. இவரை அறிமுகம் செய்தவர் அன்றைய பிரபல இயக்குநரான வெள்ளைக்காரர் எல்லீஸ் ஆர்.டங்கன்.


(எல்லீஸ் ஆர்.டங்கன் பற்றி அறிய...  http://thileeban81.blogspot.com/2020/08/15.html?m=1)


வீரப்பாவின் முதல் படம் 1939ல் வெளியான 'மணிமேகலை'.


இதே காலகட்டத்தில் குட்டி குட்டி வேடங்களில் தலைகாட்டிய எம்ஜிஆருடன் அறிமுகம் ஏற்பட்டு அது மிக நீண்ட கால நட்புறவாக மாறியது. நாயகனாக எம்ஜிஆர் நடிக்க துவங்கிய பின் அவருடன் ஏராளமான படங்களில் பி.எஸ்.வீரப்பா நடித்திருக்கிறார்.


தமிழின் முதல் முழு நீள கலர் படமான 'அலிபாபாவும் 40 திருடர்களும்', எம்ஜியாரின் சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்', எம்ஜியாரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி தயாரித்து இயக்கிய 'அரச கட்டளை', 'சக்கரவர்த்தி திருமகள்', 'மகாதேவி', 'மருதநாட்டு இளவரசி', 'கலையரசி', 'மன்னாதி மன்னன்', 'விக்கிரமாதித்தன்' என எம்ஜிஆருடனான பி.எஸ்.வீரப்பாவின் பட பட்டியல் மிக நீளம். 



நாடோடி மன்னனில் எல்லாம் இவர் மிரட்டியிருப்பார். "மார்த்தாண்டனாம் மன்னனாம்...", "சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை...", "நாடாம் நாடு... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..."


இந்த வசனங்களை எல்லாம் இவரது உச்சரிப்பில் கேட்பதே மிரட்டல் ரகம். இதுபோல 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் முகத்தில் முழு நீள வெட்டுத் தழும்புடன் மிக கொடூரமான திருடனாகவே வாழ்ந்திருப்பார்.



சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார், பி.எஸ்.வீரப்பா. ஜெமினியுடன் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரின் போட்டி நடனத்தின் நடுவே இவர் பேசும் வசனம் தான் தமிழ் சினிமா உலகில் சாகா வரம் பெற்ற "சபாஷ் சரியான போட்டி..." 


1960களுக்கு பின், குடும்ப கதை படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'ஆலயமணி', 'இரு துருவம்', 'ஆனந்த ஜோதி', 'மீனவ நண்பன்', 'பல்லாண்டு வாழ்க' எல்லாம் அந்த ரகங்கள் தான். அந்தந்த கால கட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுடனும் திரைப் பயணம் செய்தவர். ஆனாலும் அரசர் கதை படங்கள் தான் பி.எஸ்.வீரப்பாவின் பெயரை கூறுபவை.



எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல ரஜினி, கமலுடன் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1979) விஜயகாந்துடன் 'கரிமேடு கருவாயன்' (1986) என நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஆறு முதல்வர்களுடன் நல்ல அறிமுகம் உடையவர்.



நடிப்புடன், பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்ற பெயரில் ஏராளமான தமிழ், இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறார். 1960களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குநர் கே.சங்கருக்கு முதன் முதலில் அடையாளம் பெற்றுத் தந்த படம் 'ஆலயமணி'. சிவாஜி கணேசன் நடித்த அந்த படத்தை தயாரித்தவர், இவர்தான். இந்த படத்தை இந்தியிலும் தயாரித்தார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த ராமராஜன் இவரது அறிமுகம் தான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் துணை இயக்குநராக திரையுலகில் போராடிக் கொண்டிருந்த ராமராஜனை இயக்குநராக உயர்த்தியவர் பி.எஸ்.வீரப்பா. முதன் முறையாக ராமராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'மண்ணுக்கேத்த பொண்ணு' (1985) திரைப்படம் இவரது தயாரிப்புதான். பிரபல நடிகராகும் முன் பல வெற்றி படங்களை ராமராஜன் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த இடத்தில் கூடுதல் தகவல்.

1958 முதல் 1991 வரை ஏராளமான தமிழ், இந்தி படங்களை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருக்கிறார். அன்றைய பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இவரது நெருங்கிய நண்பர். இவரது வில்லன் சிரிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிரந்தர ரசிகர். தமிழ் திரையுலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் பி.எஸ்.வீரப்பாவின் "சபாஷ்... சரியான போட்டிக்கு..." முன் யாருமே போட்டி இல்லை என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)