Friday, 28 April 2023

தண்ணீர் போல் வாழுங்கள்

இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாதது தண்ணீர். டைனோசர் இல்லை. மம்முத் இல்லை.  ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முன் வள்ளுவர் எழுதிய விசும்புல் துளி என்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது.

இந்த உலகில் எதனுடனும் தயங்காமல் சேருவது தண்ணீர். செம்புலப் பெயல் நீர் என தமிழ் இலக்கியம் சொல்லுகிறது. விண்ணில் இருந்து தூய்மையாக விழுந்தாலும் மண்ணில் மாசாவதை பற்றி கவலை படுவதில்லை. கழிவு நீர் வாய்க்காலில் முகம் கோணாமல் கலக்கிறது. 

ஆறுகளில் நிறைந்து ஓடினாலும், குறைவாக ஓடினாலும், உப்பு கடலில் கலந்தாலும் தன்னையே மாற்றி கொள்கிறது. வீழ்ச்சியை கூட மகிழ்ச்சியுடன் செய்வது தண்ணீர் மட்டும்தான். மனிதனுக்கு சிலிர்ப்பை தருவதும் அதுவே.

ஒவ்வொரு மனிதனும் தனது அந்தரங்கத்தை தண்ணீரிடம்  முழுமையாக காண்பிக்க தயங்குவதில்லை. அந்த ரகசியத்தை ஒருபோதும் பிறரிடம் தண்ணீர் சொல்லுவதில்லை. இந்த உலகமே தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. ஆனாலும் அதன் குணம் எக்காலத்திலும் மாறியது கிடையாது.

அதனால் தான், மனிதனை புனிதப் படுத்துவதற்கு பல்வேறு மதங்களிலும் நீரையே பயன் படுத்துகின்றனர். புனித நீர், புண்ணிய நதி, பரந்து விரிந்த கடல், சிறு குழந்தை கொட்டி மகிழும் விளையாட்டு பொருள், அருவெறுப்பான சாக்கடை எதுவாக இருந்தாலும் எதற்காக பயன் படுத்தினாலும் தன்மை மாறாத தண்ணீரைப் போலவே நாமும் இருப்போம்.



No comments: