Monday 22 March 2010

விதியின் குற்றமா? வீணர்களின் குற்றமா?

பழைய மன்னர்கள் கால ஆட்சிகளை பற்றி விவரிக்கும்போது, 'நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடியது" என் சொல்லுவது வழக்கம். அந்த அளவுக்கு நாடு செழிப்பாக இருந்தது என அதற்கு அர்த்தம்.

இன்றைய தமிழகமும் கூட பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டு செல்வ செழிப்பாகவே காட்சி அளிக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தி தலை நகராக தலை நகர் சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதை சமைத்து சாப்பிட இலவச கியாஸ் ஸ்டவ். இலவச வேட்டி, சேலை, அறுபது லட்சா ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள்.
இப்படி அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது.

இவ்வளவும் கிடைத்ததும் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும் பொழுதை போக்குவதற்கும் இலவச டிவியும் உண்டு. இப்படி தமிழக மக்களை பொன்னை போல தாய் உள்ளத்துடன் பாதுகாக்கும் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது?.

வழக்கமான டிவி நிகழ்ச்சிகள் பார்த்து மக்கள் போரடிக்காமல் இருப்பதற்காக ஆளும் கட்சி டிவியில் திரை உலக பிரம்மாக்கள், தாரகைகள் பங்கு பெரும் மாபெரும் கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு. (தமிழக முதல்வரின் விருப்பத்துக்கு இணங்க நடைபெறும் பாராட்டு விழா என்று யாரவது கருதினால் அதற்கு முதல்வரோ, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களோ, திரை உலக பிரம்மக்களோ பொறுப்பு அல்ல)

மக்களை இவ்வளவு குஷியாக வைத்து இருந்தாலும் சிலருக்கு மது மீது மோகம் உண்டு. பண்டை காலத்தில் இருந்தே பழ ரசம் சாப்பிட்டவர்கள் தானே. அது போன்ற மக்களுக்காக 'டாஸ்மாக்' கடைகள் வீதி தோறும் திறக்கப்பட்டு இருக்கின்றன. தேனீர் கடைகளை கூட தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.
நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்த கையோடு முதியோர் ஓய்வு திட்டத்துக்கு, சத்துணவுக்கு, திருமண உதவி திட்டத்துக்கு, இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கு, மிதி வண்டி வழங்கும் திட்டத்துக்கு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய விவரங்களை முதல்வர் கருணாநிதி பட்டியல் இட்டு இருக்கிறார்.

இந்தியா முழுவதும் விலைவாசி விண்ணை முட்டினாலும், தமிழக மக்கள் துயரப் படக்கூடாது என்ர ஒரே காரணத்துக்காகவே இந்த அளவுக்கு கருணாநிதியும் அவரது அரசும் மெனக் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு செய்தி அவருடைய நல்ல? திட்டங்களை எல்லாம் பாழ் படுத்தி விட்டதே?

ஈரோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண், தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவன் இறந்த நிலையில், கூலி வேலை செய்து மூன்று குழந்தைகளை காப்பாற்றி வந்து இருக்கிறார், அந்த பெண்.
ஐந்து வயதுக்குட்பட்ட அந்த குழந்தைகளில் இரண்டு பேர் இரட்டை குழந்தைகள். அவருடைய மாமியாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
கூலி வேலையில் கிடைத்த வருமானத்தால் குடும்பம் நடத்த முடியவில்லை.
'வறுமை வந்து விட்டால் அனைவருமே பகைவர் போலவே தோன்றுவார்கள்'. வறுமையில் வாடுபவர் மட்டுமே அதை பற்றி உணருவார்கள்.
இங்கேயும் மாமியார் - மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், அந்த பெண் ஒரு 'பகிர்' முடிவு எடுத்துள்ளார். வறுமையோடு வாழ்வதை காட்டிலும் உயிரை விடுவதே மேல் என்று கருதி உள்ளார்.

விளைவு, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளை தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மாமியார் அதிர்ச்சி அடைந்து, தான் மட்டும் உயிர் வாழ்வதில் என்ன பிரயோஜனம் என்று கருதி இருக்கிறார்.

வீட்டில் இருந்த சாணி பவுடரை கரைத்து குடித்து இறந்து விட்டார். (பாருங்கள் சாவதற்கு கூட, விலை கொடுத்து ஒரு விஷப் பொருளை வாங்க அந்த குடும்பத்தில் காசில்லை)


நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் முழுவதும் கற்பனை அல்ல. ஈரோடு அருகே கடந்த வாரம் நடந்த உண்மை சம்பவம். அப்படி என்றால், தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவது உண்மையா? அரசு அளிக்கும் இலவசங்கள் எல்லாம் எதற்கு? தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் தாய் உள்ளத்தோடு தாங்குவதாக கூறும் தமிழ் இன காவலரின் ஆட்சியில் இப்படி ஒரு கொடுமையா?

இந்த கட்டுரை எழுதும் சமயத்தில் கூட, தமிழ் இன காவலரின் வீரா வேச அறிக்கை ஒன்று டிவியில் செய்தியாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த காவலரின் ஆட்சியே டிவி மற்றும் நாளிதழ்களின் செய்திகளில் மட்டுமே நடைபெற்று கொண்டு இருக்கிறது. எதுவுமே ஆக்கபூர்வமாக இல்லை என்பதையே ஈரோடு சம்பவம் காட்டுகிறது.

இது விதியின் குற்றமா? வீணர்களின் குற்றமா?
யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.

குடும்பத்தோடு மரணித்ததால் ஈரோடு பெண் வறுமை நோய் வெளியில் தெரிந்தது. இது போன்ற வெளியில் தெரியா அபலை பெண்களின் வறுமை கொடுமை என்ன?

குறிப்பு:------------
பெட்ரோல் பொருட்களுக்கு வரி, சேவை வரி, வாட் வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரி பாதி (அதாவது 50 சதவீதம்), அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவாகிறது.

இது தமிழ் நாடு நிதி செயலாளர் தெரிவித்துள்ள தகவல்.
மீதி உள்ள 50 சதவீத வருவாயில் இருந்து தான் மற்ற எல்லா பணிகளையும் கவனிக்க வேண்டும். இதில், இலவச டிவி, இலவச காப்பீடு இப்படி இலவசங்களுக்கு வேறு தனி செலவு. மொத்தம் 12 லட்சம் மட்டுமே உள்ள அரசு ஊழியர்கலின் சந்தோசத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடிக்கலாமா?

= வை.ரவீந்திரன் 

No comments: