Tuesday 6 April 2010

கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?

என்வழி என்ற இணைய தளத்தில் வந்துள்ள செய்தி
கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது?
-------------------------------------------------
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு திடீரென அணை கட்ட முடிவெடுத்து வேக வேகமாக வேலைகளைத் துவங்கியுள்ளது. வழக்கம் போல தமிழக அரசு மவுனம் சாதிக்க, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த விவகாரத்தை கையிலெடுத்து சில தினங்களாகப் பிரச்சாரம், போராட்டம் என நடத்தி வருகிறார்.
பாம்பாறு என்பது கேரளப் பகுதிக்குள் ஓடும் ஆறு. ஆனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பாயும் அமராவதிக்கு மறையூர் பகுதியில் ஓடும் பாம்பாறுதான் நீர்ப்பிடிப்புப் பகுதி. இங்கிருந்துதான் 80 சதவிகித தண்ணீர் வருகிறது.
அமராவதி அணையை நம்பி பல்லாயிரம் ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில். குடிநீருக்கும் அமராவதியை நம்பித்தான் உள்ளனர் இப்பகுதிவாசிகள்.
இப்போது பாம்பாற்றின் குறுக்கே, தமிழக எல்லையிலிருந்து 1 கிமீ தொலைவு மட்டுமே உள்ள கேரள எல்லைப் பகுதியில் ஒரு பெரிய அணை மற்றும் தூவானம் அருவி அருகே நாச்சிமுத்து ஓடை பகுதியில் நீர்மின்சக்தி நிலையத்தை அமைக்கிறது கேரளா.
புது சட்டசபை புகுவிழா பிஸியிலும், புகுந்த பிறகு சாமான்களை அடுக்கி ஒதுக்கி வைக்கும் குடும்பஸ்தனின் பரபரப்பிலும்' காணப்படும் முதல்வரோ அட, 'புள்ளிவிவரப் புலி' பொதுப்பணித் துறை அமைச்சரோ குறைந்தபட்சம் இதைப் பற்றி ஏதும் பேசியதாகத் தெரியவில்லை.
எதிர்க் கட்சிகள், குறிப்பாக வைகோ மட்டுமே தனி ஆளாக இந்த பிரச்சினையை கையிலெடுத்துப் போராடி வருகிறார். டுமலைப் பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட அமராவதி அணைப்பகுதி மக்களிடையே இந்தப் பிரச்சினை குறித்து விளக்கமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தங்கள் கட்சியால் செய்ய முடிந்ததை அவர் செய்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் மதுரை யானை மலைக்கு, சிற்ப நகரம் என்ற பெயரில் நடக்கவிருந்த மிகப் பெரிய மோசடியைத் தடுத்ததில் வைகோவின் பங்கு பெரியது என்பதை மறந்துவிடக் கூடாது.
உடுமலைப் பேட்டைக்கு வந்த வைகோ, கேரள அரசு அணை கட்ட ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் எல்லைப் பகுதியைப் பார்க்கச் சென்றபோது தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தாம் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யப் போகவில்லை என்றும், அந்த இடத்தை தமிழக எல்லையிலிருந்தபடி பார்த்துவிட்டு வருவதாகவும் உறுதி கூறியும் திருப்பூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மீறிப் போக முயன்றதால் அவரும் , உடன் வந்த ம.தி.மு.க.வினர் 250-க்கும் மேற்பட்டோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவரும் தொண்டர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றாலும், நமக்குள் எழும் கேள்வி இதுதான்:
எல்லைப்புறங்களில் உள்ள எல்லா ஆறுகளையும் கிட்டத்தட்ட தடுத்து நிறுத்திக் கொண்டார்கள் அண்டை மாநிலத்தவர்கள். காவிரி, முல்லைப் பெரியாறு எல்லாம் கோர்ட்டு வாசலில் முடக்கப்பட்டுவிட்டன.
வட மாவட்டங்களில் மழைக் காலத்தில் கூட ஆறுகளில் தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை வந்துவிட்டது. அந்த ஆற்றுப் பகுதிகளை முழுமையாக வயல்களாக்கிவிட்டனர். சிலர் அந்த வயல்களையும் பிளாட் போட்டு விற்று வருகிறார்கள்.
இந்த மாதிரி 'பா(லா)ழாறு'களை உருவாக்கத்தான் இத்தனை தீவிரம் காட்டுகிறார்களா ஆட்சியிலிருப்பவர்கள்? கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே சர்வதேச எல்லைக் கோடா போட்டு வைத்திருக்கிறார்கள்? ஒரு இந்தியப் பிரஜையாக, இந்திய எல்லைக்குள் தடை செய்யப்படாத ஒரு பகுதியைப் போய் பார்வையிட ஒருவருக்கு அனுமதி மறுப்பதேன்?
அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைக் கூட விட்டுவிடுங்கள்.

இதே தடையை ஒரு மலையாளிக்கு கேரளா போட்டிருக்கிறதா?
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசியல்வாதிகள், அதிகாரிகள் அத்துமீறல்கள் எவ்வளவு நடக்கின்றன. கேரளாவிலிருந்து மலையாளிகள் சுதந்திரமாக தமிழகத்துக்குள் வருகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் பிரபலமான ஒரு அரசியல் தலைவர் கேரள எல்லைப் பகுதியைப பார்க்கச் செல்லக் கூடாதா… அதுவும் மக்கள் பிரச்சினைக்காக?
சில மாதங்களுக்கு முன் ஒகேனக்கல் தமிழக எல்லைப் பகுதியில் பரிசலை எடுத்துக் கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா வந்து பார்த்து விட்டுப் போய் ஏக பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார். அன்று தமிழக போலீசார் சும்மா வேடிக்கைதானே பார்த்தார்கள்…
இன்று வைகோவைத் தடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
முக்கியமான விஷயம்…
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட, கேரளா அரசு, காவிரி ஆணையம், மத்திய சுற்று சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின் வாரியம் ஆகியவற்றின் அனுமதி பெற்றாக வேண்டும். முக்கியமாக, பாம்பாற்றின் மூலம் பாசன வசதி பெறும் தமிழகத்தின் அனுமதியும் பெற வேண்டும்.
இப்போது அணை கட்ட அவர்கள் காட்டும் வேகத்தைப் பார்த்தால் தமிழகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது போலல்லவா தெரிகிறது…எங்கே இவையெல்லாம் வெளிவந்துவிடுமோ என்ற கடுப்பைத்தான் வைகோ மீது காட்டுகிறதா தமிழக அரசு

= வை.ரவீந்திரன் 

No comments: