![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv-UG_h3_4skLtxHBs62jL8IlPe1qD6BhWIsRTxn1josxgye7tP0dfPBPgg3LmoqGof1QbQdULpJh7Hc2gSWd2EUb9xmjDfDivEY1a9iTClS22qe5fGxFYJLmKK-7tfvBZtidOAILZlxuU/s320/sand.jpg)
நண்டு நடக்கும்
நீரோடையில்
நீந்திக் குளித்த
ஞாபகம்
பெரிய ரோட்டில்
பழுதாகி நின்ற
பேருந்தில் படியேறி
விளையாடிய
ஞாபகம்
புளிய மரம் ஏறி
பழம் பறித்து &பின்
பங்கிட்டு சண்டையிட்ட
ஞாபகம்
பனை மரத்தின்
பாதியில் பார்த்திட்ட
கிளி பிடித்து வளர்த்த
ஞாபகம்
ஆணொன்று
பெண்ணொன்று என
ஆடும் பசுவும் வளர்த்த
ஞாபகம்
ஆலங்கட்டி மழையில்
ஆட்டம் போட்டு
அம்மாவிடம் அடி வாங்கிய
ஞாபகம்
எண்ணத் திரையில்
எப்போதாவது
எழுகின்றன ஞாபகங்கள்
பட்டணத்து இரைச்சலில்.....
தேவைகள் அதிகமானதால்
தேடல்கள் அதிகமானது
அவசர உலகில்
அவசர அவஸ்தைகள்
காலைக்கடன் கழிக்க
கால்மணி வரிசை
வாளி நீருக்கு
வரிசையோ வரிசை
அவசரக் குளியலில்
அவசரப் பயணம்
களைப்பை போக்க & ஒளிரும்
எலக்ட்ரான் திரை
சாப்ட்வேர்
வலைப் பின்னலில்
சகலமும்
அறியலாம்
அருமை மகன்
அருகமர்ந்து கேட்டான்
அப்பா! எப்படி இருக்கும்
அரிசி மரம்?
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment