Tuesday 26 October 2010

நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகன்


பெரோஸ் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே. இவர், நேருவின் மருமகன். இந்திராவின் கணவர், ராஜீவின் தந்தை, சோனியாவுக்கு மாமனார், ராகுலுக்கு தாத்தா. பெரோஸ் காந்தியிடம் இருந்து தான், ராகுல் வரையிலும் ‘காந்தி’ என்ற பெயர் ஒட்டிக் கொண்டு வருகிறது. இந்திராவின் தந்தை ‘நேரு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பெரோஸ் காந்தியின் தந்தை ஜெஹாங்கீர் காந்தி. தாயார் ரத்தினமாய் காந்தி. இவர்கள், பார்சி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு மகனாக 1912&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பம்பாய் நரிமன் மருத்துவமனையில் பெரோஸ் பிறந்தார். மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம், இது.

ஆனால், இந்திராவோ அலகாபாத்தில் அரண்மனை போன்ற பங்களாவில் பிறந்தவர். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு காலத்தில் இருந்தே பெரிய பணக்காரர்கள். அந்த காலத்திலேயே வெளிநாட்டுக்கு சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக் காருக்கு வெள்ளைக்காரர் ஒருவரையே டிரைவராக நியமிக்கும் அளவுக்கு வசதி மிகுந்தது, நேரு குடும்பம். இந்தியாவில் முதன் முதலில் வெள்ளைக்கார டிரைவரை வேலைக்கு வைத்ததும் நேரு குடும்பம் தான்.

கமலா நேருவின் அறிமுகம் காரணமாக அலகாபாத் ஆனந்தபவனில் (இந்திராவின் பங்களா) நடைபெறும் அனைத்து விழாவிலும் கலந்து கொண்டார், பெரோஸ் காந்தி. கமலா நேருவை தனது தாயார் போலவே கருதி அன்பு செலுத்தி வந்தார். நேரு குடும்பத்து அறிமுகத்தின் பரிணாம வளர்ச்சியாக, பெராஸ் & இந்திரா இடையே காதல் மலர்ந்தது.
1942&ம் ஆண்டு மார்ச் 16&ந் தேதி அன்று அலகாபாத் ஆனந்த பவனில் பெரோஸ் & இந்திரா திருமணம் நடந்தது. நேரு குடும்பத்து மகளான இந்திரா, ‘இந்திரா காந்தி’ ஆன தினம் அது.

மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில், முக்கிய விருந்தினர்கள் யாருமே இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, மகாத்மா காந்தி கூட கலந்து கொள்ளவில்லை.
திருமணத்துக்கு பிறகு, போர்ட் ரோட்டில் உள்ள சிறிய வீட்டில் பெராஸ் & இந்திரா தம்பதி குடியேறியது. பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு பெரோஸ் குடும்பத்தை நடத்தினார்.
துணிச்சலான, நேர்மைத் திறன் மிக்க பத்திரிகையாளர், அவர். அவருடைய பெரும்பாலான எழுத்துகளால் ஆங்கில அரசு நிலை குலைந்தது. ஆங்கிலேயே அரசின் தந்தி தொடர்பு சேவையை துண்டிக்கும் திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார். 1930&ம் ஆண்டு மாணவப் பருவத்திலேயே சுதந்திர போராட்டத்தில் குதித்தார்.
1942&ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.200 (அந்தக் காலத்தில்) அபராதமும் விதிக்கப்பட்டது. அதே, போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திராவும் தடியடிக்கு ஆளானதோடு, 243 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
கணவன்&மனைவி இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இருவரும் சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொள்ளலாம். ஒரே சிறைக்குள் இருந்து கொண்டு இருவரும் கடிதம் எழுதிக் கொண்டாலும் கடுமையான சோதனைக்கு பிறகே கையில் கொடுக்கப்பட்டன. அதுவும் 90 சதவீதம் வரை அழிக்கப்பட்டிருக்கும்.
திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள்ளேயே, இளம் தம்பதிகளாக இந்த சோதனைகளை அனுபவித்தனர்.

மணவாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திராவிடம் இருந்து அன்பு, அரவணைப்பு, ஆறுதல் போன்றவற்றை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு பெரோஸ் வந்தார். ஏற்கனவே, மது மற்றும் புகைப் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது, அவை வரம்பு மீறிய நிலைக்கு சென்றன.
இந்திரவோ தனது எதிர்காலம் மற்றும் தனது குழந்தைகள் (ராஜீவ், சஞ்சய்) எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய விரும்பவில்லை.

அதே நேரத்தில், தனது மருமகன் பெரோஸ் காந்திக்கு நிரந்தர வேலை ஏதாவது இருந்தால் நல்லது என மாமனாரும் பிரதமருமான ஜவஹர்லால் நேரு விரும்பினார். அந்த எண்ணத்தை புரிந்து கொண்ட இந்திரா, தனது தந்தையின் எண்ணத்தை தங்களுடைய குடும்ப நண்பரான ராம்நாத் கோயங்காவிடம் (இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர்) தெரிவித்தார். ஏற்கனவே, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரைகளை பெரோஸ் எழுதியவர் தான். எனவே, எக்ஸ்பிரஸ் நாளிதழில் இணையாசிரியர் வேலையை பெரோசுக்கு கோயங்கா அளித்தார்.
பெரோஸ் காந்தியின் இறுதிக் காலம் வரை அவருக்கு துணையாக இருந்தவர் என்பதால் ராம்நாத் கோயங்காவை ‘சாச்சா’ (மாமா) என்றே இந்திரா காந்தி அழைப்பது வழக்கம்.
1952&ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் (பின்னாளில் இந்திரா குடும்பத்தினரின் பரம்பரை தொகுதியாகி விட்டது) பெரோஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இன்சூரன்ஸ் கம்பெனிகளை நாட்டுடைமை ஆக்குவதை வரவேற்றார். பாராளுமன்றத்தில் சூறாவளியைப் போல பேசும் பெரோஸ் காந்தியின் சொல்லாற்றல் மற்றும் நேர்மையான வாதத்திறளால் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.
ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த டி.டி.கே. போன்றவர்களுக்கு எதிராக, வலுவான ஆதாரங்களுடன் பெரோஸ் காந்தி பேசிய பேச்சுகள் அனைத்தும் நேருவையே கலங்கச் செய்தன. நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகனாக பெரோஸ் இருந்ததால், நேரு அவருடைய நிரந்தர பகைவரானார். நேருவுக்கு பாராளுமன்றத்தில் அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தார், பெரோஸ் காந்தி. பெரோசின் நேர்மை, துணிவு, உண்மை போன்ற குணங்கள் நேருவை பகைவராக்கியது.

ஒரு நாள், கடுமையான மார்பு வலி காரணமாக பெரோஸ் காந்தி நினைவு இழந்தார். அதற்கு முன்பு, ‘இந்து எங்கே?’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார். அதாவது, மனைவி இந்திரா காந்தியை தேடினார். திடீர் என ஒருமுறை அவர் கண் விழித்தபோது சோகமே உருவாக இந்திரா அமர்ந்திருப்பதை பார்த்தார். அவரிடம், ‘எப்போது வந்தாய்? ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறாய்?’ என்று கேட்டு விட்டு மீண்டும் மயக்கமானார்.

எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரே குடும்பமாக வாழலாம் என முடிவு எடுத்த சமயத்தில் தான் மரணம் அவரை தழுவியது. இறக்கப்போகும் தருணத்தில் இனிமையான நினைவுகள் வரும். எனவே தான், தனது மனைவியிடம், ‘ஏன் கவலையுடன் இருக்கிறாய்?’ என அன்புருக கேட்டார். அரசியலில் உச்ச கட்டத்தில் இருந்தபோதே, பெரோஸ் காந்தி மரணமடைந்து விட்டார். 1960&ம் ஆண்டு செப்டம்பர் 8&ந் தேதி அன்று பெரோஸ் காந்தி இறக்கும்போது அவருக்கு வயது 47.


பெரோஸ் காந்தியின் உடலை சுத்தம் செய்யும் பொறுப்பை இந்திரா காந்தியே செய்தார். யாரையும் துணைக்கு வைத்துக் கொள்ளவில்லை. பெரோஸ் காந்தியின் இறுதி ஊர்வலம் சுமார் 2 கி.மீ.க்கு மேல் சென்றது. வழி நெடுகிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
பெரோஸ் காந்திக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா? என நேருவே வியந்தார். இவ்வளவு இருந்தும் என்ன பயன்? பெரிய குடும்பத்தின் வேண்டாத மருமகனாயிற்றே?

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவிடத்துக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஆனால், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு ஒருவர் கூட வந்து அஞ்சலி செலுத்துவது கிடையாது. கேட்பாரின்றி அந்த நினைவிடம் கிடக்கிறது.
வாழும்போது எப்படி இருந்தார் என்பதை விட, சாகும்போது ஒரு மனிதர் என்னவாக இருந்தார் என்பது தான் இந்த உலகத்தில் முக்கியம் போல தெரிகிறது.

= வை.ரவீந்திரன் 

No comments: