Friday 31 July 2015

உரு பெற்று அலையும் தனிமை

பூட்டிய அறைக்குள்
தனிமை உரு பெற்று
பராரியாய் அலைகிறது

புகையாய் அலையும் நினைவுக்கு
வெளிச்சம் காட்டியபடி
ஊரடங்கும் நடுச்சாமத்தில்
என் கரம் பற்றி அழைக்கிறது


மெய்யை விழுங்கிய இருட்டுக்கு
செரிமானம் ஆகாமல்
பொய்யை துப்பலாம்
அந்த பொய்யே மெய்யென
வீதியுலா போகலாம்

உண்மையின் குரல்வளையை
பொய்மை நெறிக்கலாம்
அடிமைகளின் விம்மல் ஒலி
அடங்கி போகலாம்

ஊமைகளின் மனக்காயங்களை
காலம் ஒருநாள் மாற்றும்
பேருண்மை என்ற பேரொளியில்
ஒருநாள் மெய் வெளிப்பட்டே தீரும்

= வை.ரவீந்திரன் 

No comments: