Friday 21 August 2015

புத்தபிரான்



 
நீண்டு வளர்ந்த காதுகள்
பாம்படம் அணிந்து அழகு பார்க்க
காது வளர்க்கும் கபடமற்ற
கிராமத்து மூதாட்டிகளை நினைவூட்டும்

உதடுகளில் கோடாய் விரியும்
மென்மையான சிரிப்பு
வெட்கத்தை வதனத்தில் தாங்கி
பூரித்து நிற்கும் பக்கத்து வீட்டு
அக்காளை நினைவூட்டும்

உயர்ந்து நிற்கும் குடுமியும்
தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
சாந்தமான முகமும்
ஊர் கோயிலில் இருக்கும்
ஜடாமுடீசுவரரை நினைவூட்டும்

நிலம் நோக்கி மூடிக் கிடக்கும்
கண்களை காணும்போதெல்லாம்
ஏரி, கண்மாயில் ஒற்றையாய்
தவமிருக்கும் கொக்குகளே
கண்முன்னே வந்து செல்லும்

பள்ளிக் கூட பருவத்தில்
இப்படித்தான் மனதினுள்
புதைந்து கிடந்தது
புத்தபிரானின் உருவம்...

= வை.ரவீந்திரன் 

No comments: