Saturday 1 September 2018

கவனம் திருப்பும் குயிலிசை...

பாளம் பாளமாய் கிடந்த
வெடிப்புகளில் பாய்ந்த
புது வெள்ளத்தால்
பருவ பெண்ணாய்
பூத்து கிடக்கிறது கண்மாய்

உடை வேம்பு ஊடாய்
வேம்பு புளியை கடந்தலைந்த
வெயிலின் வெம்மை தணிந்து
குளுமை குளம்வலம் வருகிறது
உறுத்தாத நறுமணம் தரித்து...

பொட்டலில் காற்றுக் குடித்து
மயங்கி கிடந்த அரவங்களின்
கும்மாளம் குளக்கரையில்...
மஞ்சள் பாம்பாக நெளிகிறது
தண்ணீரில் தவறி விழுந்த
மத்தியான நேரத்து சூரியன்...

பழுத்த இலைகளை
துளி துளி கண்ணீராய்
உகுத்து நின்ற ஆலமரத்தில்
புதிதாக பரவிய பசுமை
புது பணக்காரன் போல
காற்றுடன் கலந்து
அருவியாய் சலசலக்கிறது

மனித இயற்கை பந்தயமாய்
மீன் கொக்கு சடுகுடு ஆட்டம்
சீட்டியடித்து உற்சாகமூட்டும்
குருவி, கிளிகளின் கூட்டம்
நொடியில் கவனம் திருப்பும்
தூரத்து குயிலிசை...

= நெல்லை ரவீந்திரன்


No comments: