Saturday 1 September 2018

சிதறிப்போன எழுத்துகள்...

குதிருக்குள் குவிந்து கிடக்கும்
நெல்மணிகளாய் எழுத்துகள்...
வெல்லக்கட்டியை இழுத்துச்
செல்லும் எறும்பாக மாறி
துண்டுகளாக சேகரித்து 
வைக்கிறேன் எழுத்துகளை
கதிரின் ஊடாக பறந்து
கம்பும் சோளமுமாக
கொத்திச் செல்லும்
கிளியாக எடுத்து வந்து
உள்ளங் கையில் சேமித்து
வைக்கிறேன் எழுத்துகளை
இடையில் முடிந்திருக்கும்
சில்லறை காசுகளை
திரும்ப திரும்ப எண்ணும்
பராரியாக ஒவ்வொன்றாய்
எண்ணிப் பார்த்து
வைக்கிறேன் எழுத்துகளை
எப்படியாவது எழுத்துகளை
வார்த்தைகளாக்கி
கவிதை தோரணம்
கட்டி விடும் வேகம் எனக்குள்
எழுத்துகள் ஒன்று கூடி
வார்த்தையாகும் தருணம்
சிறுவாடாய் சேகரித்த
எழுத்துகள் எல்லாம்
சில்லறையாய் சிதறின
உன் விழி ஈர்ப்பு விசை கண்டு..


No comments: