Tuesday 29 October 2019

சுஜித்... ஒரு பாடம்...

வழக்கம் போலவே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஃபா்வர்டு மெஸேஜ் குவிகின்றன. விசேஷ தினங்களில் வாழ்த்து செய்திகள் போலவே, இப்போதும் துக்கம், கண்ணீர் என... எவ்வளவு அழுது புண்டாலும், குழந்தை சுஜித் திரும்பப் போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் இதை படிப்பினையாக எடுப்பார்கள். இது மில்லியன் டாலர் கேள்வி. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே சமாளிப்பது கடினம். அதுவும் தவழும் பருவத்தில் இருந்து நடக்கும் பருவம் என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையை சமாளிக்க பத்து பேராவது தேவை. அதாவது, பத்து இருபது கண்கள் அவசியம்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுவரில் மாட்டும் எல்ஈடி கிடையாது. அப்போது, வீடுகளில் ஸ்டாண்டில் இருக்கும் டிவியை இழுத்து தலையில் விழுந்து பலியான சோகங்கள் நடந்ததுண்டு. இப்போதும் பெரிய சைஸ் தண்ணீ்ர் பாததிரத்துக்குள் குழந்தை விழும் பரிதாபங்களும் நீடிக்கிறது.

சுஜித் வீடு இருப்பது பல ஏக்கர் விளை நிலத்துக்கு மத்தியில். அதில் சோளப்பயிர் வேறு. அவர்கள் வீட்டு ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டதோடு, அதன் அருகே நான்கு மற்றும் இரண்டு வயது குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தது அஜாக்கிரதை அல்லாமல் வேறு என்ன? அரை கிலோ மீட்டர் இடைவெளியில் தான் மற்ற வீடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

விடுமுறை காலங்களில் ஏரி, கல் குட்டைகளில் மூழ்கி பலியாவது சமீபத்திய பேனர் பலி வரை அஜாக்கிரதையோடு தனி மனித ஒழுக்கமும் குறைந்து வருவதே கூடுதல் காரணம். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானதும் குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் முதல் பிறந்த நாள் தொடங்கி காது குத்து,  பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பணி நிறைவு, 16ம் நாள் காரியம், நினைவு நாள் என அக்கம்பக்கத்தினர் பற்றிய சுய நினைவின்றி பேனர் வைத்திருப்பார்கள். எங்கள் தெரு முனையில் மாதந்தோறும் பத்து பதினைந்து பேனர்களாவது முளைத்து விடும், திருப்பத்தில் வரும் வாகனங்களை மறைத்தபடி... இதில் எதுவும் அரசியல் பேனர்கள் கிடையாது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தினசரி செய்தியான நிலையில், சாலையில் எத்தனை பேர் முறையான ஆவணங்கள், லைசன்சுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சின்ன சின்ன பசங்க கைகளில் இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது எதனால்..? அங்கும் தனி மனித ஒழுக்கம் மிஸ்ஸிங். 

அந்த சிறுவர், சிறுமிகள் எஸ்கேப்ஆகி போனாலும் அவர்களின் தாறுமாறு டிரைவிங்கால் எத்தனை விபத்துகள் தெரியுமா? ஒருவேளை அவர்களுக்கே ஏதாவது நேரிட்டால்...? எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் மூலம், வருங்கால தலைமுறைக்கும் தனி மனித ஒழுக்கத்தை மறக்கடித்து விட்டோம்.

அத்தி வரதர் என்றதும் ஒரு சிறிய நகருக்கு பெருங் கூட்டமாக கிளம்பி சென்று நெரிசலில் சிக்கி சாவது. மாமல்லபுரத்தை சுத்தமாக்கி வைத்திருந்தால் ஒரே நாளில் படையெடுத்துச் சென்று அந்த ஏரியாவையே ஒட்டு மொத்த குப்பையாக்கி வருவது. சுஜித் மீட்பு பணி என்றதும் வல்லுநர் குழு போல கிளம்பி வருவது. அவன் மறைந்ததும் நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி வருந்துவது.

உணர்வில் ஓவர் பொங்கலாகவும் சுய அறிவை கழற்றி வைத்து விட்டு, யாரோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டம் போடும் தோல் பொம்மையாகவும்  இருக்கும் மக்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தவிர...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: