Wednesday 23 October 2019

ஊங்கூரு அம்மங் கொட

 புரட்டாசிய பெருமாளுக்கு குடுத்திட்டதால, ஆடி தான், சென்னையில அம்மன் மாசம். ஆனா, திருநவேலி பக்கம்லாம் புரட்டாசி, ஐப்பசி மாசந்தான் அம்மன் கோயிலுங்க எல்லாம் களை கட்டும். மூணு நாள் கொடை விழாவில ரெண்டு செட்டு மேளம், ரெண்டு ஜோடி கரகம், வில்லு கச்சேரி, கணியான் கூத்துன்னு செம போர்சா நடக்கும். திங்கள் கெழம ஆரம்பிச்சி, புதன்கெழம சாயந்திரம் கெடா வெட்டோட கொடை முடியும்.

கொஞ்சம் வசதியா இருக்க கோயிலா இருந்தா, ஞாயிற்று கெழம நைட்ல பெரிய தெர கட்டி சினிமா போடுவாங்க. திருநவேலி ஐங்சன்ல போய், படத்துக்கு புக் பண்ணிட்டு வருவாங்க. மொதல்ல கருப்பு வெள்ள படம். நைட் 10 மணிக்கு மேல த்ரீ பேஸ் கரண்டு வந்த பெறவு கலர் படம். பெரும்பாலும் எம்ஜிஆர் சிவாஜி படந்தான். பட்டிக்காடா பட்டணமா, மாட்டுக்கார வேலன் மாதிரி படங்கல்லாம் மண்ண குவிச்சி வச்சி பாத்திருக்கோம். இளவட்டங்க சங்கம் இருக்கிற ஊருல, கூட ஒரு புதுப்படமும் ஓடும். அப்பிடித்தான் நல்லவனுக்கு நல்லவன் படம் முடிஞ்சப்ப, திங்க கெழம விடிஞ்சிட்டு.

கால் நூற்றாண்டு ஓடுனதே தெரியல. எவ்ளோ மாற்றம். நான் மட்டும் என்ன அப்பிடியேவா இருக்கேன். ஒவ்வொரு ஊரும் பத்து வருஷத்துக்கு ஒருக்கா, பாம்பு சட்டய உரிச்ச மாதிரி, புதுசா மாறும்னு சொல்லுவாங்க. அத அனுபவிச்சி பாத்திருக்கேன். அப்பிடித்தான், எங்க ஊரு அம்மன் கொடயும். சுமாரா 10 வருஷத்துக்கு அப்புறமா, இந்த வருஷம் எப்பிடியாவது போயே தீரணும்னு முடிவு பண்ணி, போயிட்டு வந்தேன்

ஏழு நாள் கொடையா மாறிப் போயிருக்கு, எங்கூரு அம்மன் கொட. டிவியிலயே சகட்டு மேனிக்கு படம் போடுறதால சினிமாப்படம் பிடிச்சிருந்த இடத்த... நகைச்சுவை பட்டிமன்றம் ஒரு நாள், பாட்டுக் கச்சேரி ஒரு நாள், விளக்கு பூஜை ஒரு நாள்னு வரிசையா பிடிச்சிருந்திச்சி. அப்புறமா கோயில்ல வழக்கமா நடக்கிற பூஜை, பொங்கல், கெடா வெட்டுதான். ஆனா... நெறையவே மாற்றம்... 

ரெண்டு செட்டு மேளத்தில ஒண்ணு கட்... செண்ட மேளம் புதுசா சேந்திருக்கு... மூணு நாள் பாடுன கணியான் கூத்து... ஒரு நாள் நைட்  மட்டும்னு மாறியாச்சி. அங்கேயும் அஞ்சாறு பாட்டிங்க மட்டும் கத கேக்க இல்லைன்னா கணியான் கூத்து ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் தான். அப்புறம் நையாண்டி மேளம்,  கரகாட்டம்... அங்கன பாத்தா வழக்கம்போல நல்ல கூட்டம்... அம்மன் சன்னதிலயே நடந்ததால வில்லு பாட்டு பக்கம் கூட்டம் பரவால்ல.

செவ்வாய் கிழமை சாயந்தரம் சாமி ஊர் விளையாடி வரும்போது, நையாண்டி மேளம், செண்ட மேளம்னு வழக்கமான உற்சாகம் கொறையல. அந்த நேரத்தில, தெருவில குறுக்கால குறுக்கால ரெண்டு பக்க வீட்டை இணைக்கிறா மாதிரி  வேப்பிலை தோரணம் கட்டிட்டே போவாங்க. இப்ப அது முன்ன மாதிரி அதிகமா இல்ல. ஒவ்வொரு தெருவிலயும் பேருக்கு ஒண்ணு ரெண்டு தான். அத கட்டுறதுக்கு களம் இறங்குற ஆளுங்க இல்லயா... மாடி வீடுங்களா மாறினதாலயான்னு பட்டி மன்றம் வைக்கலாம் போல...

செவ்வா நைட்ல திரும்பவும் அடுத்த ரவுண்டு சாமி ஊர் சுத்தினப்ப... செண்ட மேளம், நையாண்டி மேளத்தோட ஆயிரங்கண் பானை, மொளப்பாரி ஊர்வலம்னு ஊரே களை கட்டிச்சி... நள்ளிரவுக்கு பிறவு, சப்பரத்தில வீதி, வீதியா முத்தாரம்மன் உலா வந்தது, எனக்கு புதுசு. எங்க வீட்டு முன்னால அதிகாலை 4 மணிக்கு சாமி வந்தப்ப... பரவசம்... மகிழ்ச்சி...

புதன்கிழமை மஞ்சப்பான பொங்கல்... கெடா வெட்டு... மொளப்பாரிய சுத்தி வந்து கும்மிப்பாட்டுன்னு கொடை நிறைவா முடிஞ்சிச்சி.




முத்தாரம்மனுக்கும் அசுரனுக்கும் நடக்கிற சண்டையில, கடைசியா சரணடையிற அசுரன், தனக்கு பலி கொடுக்கணுமின்னு வேண்டுவானாம். இது வில்லுப்பாட்டு கதையில பாடினாங்க. கெடா வெட்டும்போது அதுதான் நினைவுக்கு வந்திச்சி. கடைசி நாளில அண்டா கணக்கில சோறு வடிச்சி, கறிக் கொழம்பு வச்சி படையல் போட்டு முத்தாரம்மனுக்கு படைச்சிருந்தாங்க. இந்த பெரும் படப்பு பத்தி தனியாவே எழுதலாம்... 

எழுதியிருக்கேன்... 

👇👇

http://thileeban81.blogspot.com/2015/11/blog-post.html?m=1

கொடை விழாவில முத்தாரம்மன் தொடங்கி, சந்தன மாரியம்மன், கருப்பசாமின்னு ஒவ்வொரு கூடத்திலயும் ஆடின சாமியாடிங்கள பார்த்தப்ப...  சின்ன சின்ன பசங்களா தெரிஞ்சாங்க... அவங்களோட பழைய உருவம் தெரிஞ்சிது.. அப்பல்லாம் தாத்தாக்கள் தான் சாமியாடுவாங்க... இப்ப ரெண்டு பெண் சாமியாடிங்களும் இருந்தாங்க.. இவங்க அடுத்த தலைமுறைன்னு தெளிவானப்பத்தான், நம்ம வயசும் அரை சதத்தை எட்டுதேங்கிறது லேசா ஒறைச்சிது.

நெல்லை ரவீந்திரன்

No comments: