Wednesday 8 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -45

சினிமா என்றாலே வெவ்வேறு விதமான மயக்கம் தான். வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்றோ வாணி ஜெயராமுக்கும் சுசீலாவுக்கும் வேறுபாடு அறியாமலோ 1990களின் தேவா பாடல்களை இளையராஜா என்றோ நினைத்து பலரும் மயங்குவதுண்டு. அப்படித்தான் 1980களின் இவரது பல பாடல்களை இளையராஜா என்றே நினைப்போம். ஆனால் இவர் இளையராஜாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகுக்கு வந்தவர். அவர்தான் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.



தமிழின் மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தியிடம் தான் இவரும் சங்கரும் இசை படித்தனர். பிறகு, எம்.எஸ்.வி. தனியாக இசையமைத்தபோது அவரிடம் உதவியாளர்களாக சேர்ந்தனர். சங்கர் கணேஷ் இரட்டையர்களை தனியாக இசையமைப்பாளராக்கியவர் கவியரசர் கண்ணதாசன். அவர் தயாரித்த 'நகரத்தில் திருடர்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் நின்று போனது. அதன் பிறகு சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 'மகராசி' படத்துக்கு அவர்களை கண்ணதாசன் சிபாரிசு செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகன் ரவிச்சந்திரனுக்கு உடல் நல குறைவால் படம் தள்ளிப் போக, நாயகியான ஜெயலலிதாவும் தேவரிடம் இவர்களுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்.

காரணம், திரைக்கு வரும் முன்பே ஜெயலலிதாவின் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாட்டிய நாடகப் பணிகளில் சங்கர் கணேஷ்  இருந்திருக்கின்றனர். நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக போயஸ் தோட்ட இல்லத்துக்கும் சென்றதால் அறிமுகம். பல தடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 'மகராசி' படம் 1967ல் வெளியானது. 

அதன் பிறகு ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற இரண்டாம்கட்ட நாயகர்களின் படங்களில் இசையமைத்த இவர்களுக்கு 1971ல் எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில், "உனது விழியில் எனது பாடல்...", "சித்திரச் சோலைகளே..." "தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு..." என அனைத்து பாடல்களுமே ஹிட்.  இதுபோல 1972ல் வெளியான எம்ஜிஆரின் 'இதய வீணை' படத்துக்கும் (காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்... பொன்னந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு... மாதிரியான ஹிட் பாடல்கள்) இவர்தான் இசை. அப்போதிருந்தே எம்ஜிஆருடன் கணேஷூக்கு நல்ல பழக்கம்.

1970களில் நிறைய படங்களுக்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இதற்கிடையே சங்கர் மரணமடைய, சங்கர் கணேஷ் என்ற இரட்டை பெயரிலேயே கணேஷ் தொடர்ந்து இசையமைத்தார். தமிழ் ரசிகர்களிடம் அவரை அடையாளம் காட்டிய படம், 1977ல் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு'. தேவர் தயாரித்த அந்த படத்தில் "பருத்தி எடுக்கையில என்ன பல நாளும் பாத்த மச்சான்...", "ஆத்துல மீன் பிடிச்சி..." பாடல்கள் இன்றளவும் ஹிட்...

கமலுக்கு 'நீயா', 'மங்கம்மா சபதம்'. ரஜினிக்கு 'தாய்வீடு', 'ரங்கா', 'ஊர்க்காவலன்'. பாக்யராஜுக்கு 'கன்னிப் பருவத்திலே', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'எங்க சின்ன ராசா'. விசுவுக்கு 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'வீடு மனைவி மக்கள்' என தொடங்கி 1990களின் ஆரம்பம் வரை 15 ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்திருக்கிறார் கணேஷ். 

சில்க் ஸ்மிதா அறிமுகமான 'வண்டிச்சக்கரம்' படத்தின் இசையமைப்பாளரும் கணேஷ் தான். அந்த படத்தில் எஸ்பிபி பாடிய "வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட..." பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ரகம். 

இதே டைப்பிலான 'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் டிகேசி நடராஜன் பாடிய, "என்னடி முனியம்மா ஒன் கண்ணில மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..." பாடலும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த பாடல்தான்.

1950, 1960களில் பிரபலமான பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜாவை திரும்ப அழைத்து வந்து "செந்தாமரையே செந்தேன் இதழே..." பாடலை பாட வைத்து ஹிட்டாக்கினார்.



"செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..."

"உத்தரவின்றி உள்ளே வா, உன்னிடம் ஆசை கொண்டேன் வா..."

"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..."

"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..."

"பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம்..."

"மேகமே மேகமே பால் நிலா காயுதே... தேகமே தேயினும்..."

"ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு..."

"மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..."

"ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்..."

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது..."

"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட..."

"ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்..."

"பட்டுக்கோட்டை அம்மாளே பாத்துப்புட்டான் நம்மாளே..."

"மாசி மாசம் தான் சொல்லு சொல்லு... மேள தாளம் தான்..."

"மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்  மண்ணில் இறங்குது ஆகாசம்..."


இப்பிடி ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் சங்கர் கணேஷின் ஹிட் பாடல்கள் ஏராளம். 1980களின் வானொலிகளில் இளையராஜாவுக்கு இணையாக இவர் பாடல்கள் ஒலிப்பது வழக்கம்.

1980களில் 'டிஸ்கோ டான்ஸ்' மிக  பிரபலமாக இருந்தபோது 'டிஸ்கோ டான்சர்' இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்த எடுத்த 'பாடும் வானம்பாடி' படத்துக்கும் இவர்தான் இசை. நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நாயகனாக நடித்த இந்த படத்தில் அனைத்து டான்ஸ் பாடல்களுமே ஹிட்.

எம்.எஸ்.வி.யிடம் இருந்தபோது 'கலாட்டா கல்யாணம்' மாதிரி ஒரு சில படங்களில் கணேஷ் பாடியும் இருக்கிறார்.  இது போலவே 1980 வரை சில படங்களிலும் கணேஷ் நடித்திருக்கிறார். 'ஒத்தையடி பாதையிலே' படத்தின் ஹீரோ இவர்தான். அதில் கே.ஜே.யேசுதாஸ் குரலில் "செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா நான் விக்கிப் போறேன் தாகத்தில நில்லம்மா..." ன்னு டூயட் பாடலும் கணேஷுக்கு உண்டு.

1986ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் தபாலில் அனுப்பிய குண்டு வெடித்ததால் கணேஷின் கை விரல்கள் சிதறியதோடு வலது கண் பார்வையும் பறி போனது. இன்று வரை கையில் உறையுடனும் கருப்பு கண்ணாடி அணிந்தபடியும் கணேஷ் இருப்பதற்கு இதுதான் காரணம்.

குண்டு வெடிப்பால் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அப்பலோவில் சிகிச்சை பெற்ற கணேஷுக்கு முழு உதவியும் செய்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். எம்ஜிஆரை தனது தெய்வம் என்றுதான் கணேஷ் சொல்வார். அவரது படத்துக்கு இசையமைத்ததில் இருந்தே கணேஷூக்கு எம்ஜிஆருடன் நல்ல பழக்கம். ஆரம்ப கால அதிமுக காரர் என்றே கணேஷை சொல்லலாம். 

ஐந்து ஆண்டுகள் கழித்தும் கணேஷை வெடிகுண்டு தாக்குதல் துரத்தியது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் ஸ்ரீபெரும்புதுரில் கொலை  செய்யப்பட்டபோது அங்கு நடந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவரது இசைக் கச்சரிதான். மனித வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் மேடையில் இருந்தார்.

1980க்கு பிறகு திரைப்படம், இசைக் கச்சேரி மட்டுமே என இருந்த கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆயிரம் படங்களில் சுமார் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். உடலை ஒட்டி பிடித்தபடி டைட்டான சட்டை, கழுத்து கைகளில் நகைகள், 1960, 70களில் பிரபலமாக இருந்த நறுக்கு மீசை, இதுதான் இசையமைப்பாளர் கணேஷின் அடையாளம்.



இவரது மகனும் நடிகர் தான் சன், விஜய் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ இவரது மகன் தான்.

இசையமைப்பாளர் கணேஷுக்கு மார்ச் 4ல் 80ஆவது பிறந்த நாள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: