Thursday 30 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -46

ஒரு நடிகரையே சூப்பர் டூப்பர் ஹீரோவாக்கிய குரல், இவருடையது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், நடிகர் இப்படி பன்முக கலைஞரான இவர், இளைய தளபதி விஜயின் தாய்மாமன். அவர்தான் எஸ்.என்.சுரேந்தர். 

சிறு வயதிலேயே குழந்தை பாடகராக பாடல்களை பாடியிருக்கிறார். 1960களின் ஹிட்டான 'பாமா விஜயம்' படத்தில் வரும் "வரவு எட்டணா செலவு பத்தணா..." பாடலில் வரும் குழந்தை குரல் இவருடையதுதான்.


சினிமாவில் நடிகராகவோ, பின்னணி பாடகராகவோ மாற வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் பின்னணி குரல் கொடுப்பவராகி விட்டார். சீயான் விகரம் கூட, முதலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதன் பிறகு தான் நடிகரானார் தெரியுமா?

கன்னடத்தில் இருந்து டப்பிங் செய்து தமிழில் வெளியான, 'அதிசய மாப்பிள்ளை' என்ற படத்தில்தான் சுரேந்தர் முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு, 'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தார். இதுதான் அவர் டப்பிங் பேசிய முதல் தமிழ் படம். ஆதன் பிறகு, பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக 600 படங்களில் முன்னணி ஹீரோக்கள் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு எஸ்.என்.சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். 

'மைக்' புகழ் நடிகர் மோகனுக்கு முற்றிலுமாக இவரது இரவல் குரல்தான். ஆனால், மோகனின் முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே', படத்தின் ஹீரோவான நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனுக்குத்தான் எஸ்.என். சுரேந்தர் குரல் கொடுத்திருப்பார்.

டி.ராஜேந்தரின் 'ரயில் பயணங்களில்' படத்தில் ஹீரோ ஸ்ரீநாத்துக்கு, 'ஒரு தலை ராகம்' சங்கருக்கு... 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்குக்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் விஜயகாந்துக்கு, 'ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் ரகுவரனுக்கு... 1980ஸ் டிஸ்கோ டான்சரான நடிகர் ரவீந்தர் என சுரேந்தர் குரல் கொடுத்த நடிகர்கள் பட்டியல் ஏராளம். 'அந்நியன்' படத்தில் விக்ரமின் தந்தையாக வரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணுவுக்கும் இவரது குரல்தான்.

தமிழ் சினிமாவில் 1980களின் பெரும்பாலான அறிமுக நடிகர்களுக்கு முதலில் இவரது குரலைத்தான் பயன் படுத்தி இருக்கிறார்கள். 

ஆனால், இவரது குரல் என்றாலே மோகன் தான் நினைவுக்கு வருவார். (எனக்கும் கூட மோக் பற்றி எழுதியதுமே இவர் நினைவுக்கு வந்ததால் தான் இந்த கட்டுரை) 1981ல் 'கிளிஞ்சல்கள்' படம் துவங்கி 1987 வரை 75 படங்களுக்கு மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். படங்களில் மோகன் தான் வசனம் பேசுவதாகவே ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இவரது குரல் கன கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

மென்மையான ரொமான்டிக்கான,  வார்த்தைகளுக்கு வலிக்காத மென்மையான குரல் எஸ்.என்.சுரேந்தருக்கு. கண்களை மூடியபடி கேட்டால், 1990ஸ் படங்களில் நடிகர் விஜயின் குரல் போலவே இருக்கும். அவரது தாய்மாமன் இல்லையா? 


விஜயுடன் 'நாளைய தீர்ப்பு', 'பிரியமுடன்', 'நெஞ்சினிலே' மாதிரியான சில படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் நடித்திருக்கிறார். 'சென்னை 28' படத்திலும் தலை காட்டியிருக்கிறார்.

டப்பிங் குரல் கொடுப்பதை தாண்டி, எஸ்.என். சுரேந்தர் மிக அருமையான பின்னணி பாடகர். நான்கு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். இவரது காதல் டூயட் பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடுபவை.


"மா மரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா..."

"பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே..."

"கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா..."

"தனிமையிலே ஏஏஏ ஒரு ராகம்.. " 

"தேவதை போலொரு பெண் ஒன்று வந்தது இங்கே..."

"மாலை என் வேதனை கூட்டுதடி..."

இவை எல்லாம் சாம்பிள்தான்.. 


விஜய்க்காக 'தேவா', 'ஒன்ஸ்மோர்', 'விஷ்ணு', 'மாண்புமிகு மாணவன்', 'காதலுக்கு மரியாதை' என பல படங்களில் பாடி இருக்கிறார். அதில் சில...

"பூவே பூவே பெண் பூவே.. என் பூஜைக்கு..."

"ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..."

"சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா பாட்டு வரும்..."


பின்னணி பாடகர் ஒருவர் பாடல்களையும் பாடிக் கொண்டு, படங்களில் பின்னணி குரலும் கொடுத்துக் கொண்டு தனது குரலாலேயே தமிழ் சினிமாவுக்கு உச்ச நட்சத்திரமாக ஒருவரை அடையாளப்படுத்தியவர், எஸ்.என்.சுரேந்தர் ஒருவராகத்தான் இருக்கும்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: