Sunday 31 December 2023

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

 "அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

பனி துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே..."

...




சாதி மதம் இனம் அரசியல் அனைத்ததையும் கடந்து தமிழகமே துடிக்குது, இந்த மனிதனின் இறப்பை கேட்டு...

எனக்கு தெரிந்தவரை ஒரு பெரிய நெடுஞ்சாலை முழுக்க 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வெள்ளம் நிறைந்து கிடக்க, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலம் நடந்தது ஈதுவே முதன் முறை.

தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளுக்கு கூட இப்படி பார்க்கவில்லை...!





மதுரையில் ரைஸ் மில் ஓனர் மகனாக இருந்தபோதே ஆரம்பித்த உதவும் குணம், கடைசி வரை தொடர்ந்தது. 

80, 90களில் நடிகர்கள் ஆட்டோகிராப் போட்டு படங்களை ரசிகர்களுக்கு அனுப்புவது வழக்கம். இவரோ ஒரு படி மேல்...  படிப்பு போன்று ஏதாவது உதவி கேட்டால் மணி ஆர்டரும் சேர்த்து அனுப்புவார். (9ம் வகுப்பில் நண்பன் ஒருவன் மூலம் தெரிந்தது)

சக நடிகர்களுக்கு படப்பிடிப்பு முதற் கொண்டு சொந்த வாழ்க்கை வரை உதவிக்கரம் நீட்டுவது பற்றி பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். கடந்த வாரம் நடிகர் போண்டா மணி மரணத்தின் போது கூட இவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் போனது.

1980களில் மிக உச்சத்தில் இருந்தபோது கூட 'பூந்தோட்ட காவல் காரன்', 'ஊமை விழிகள்' மாதிரி வயசான கேரக்டர்களிலும் 'வைதேகி காத்திருந்தாள்' மாதிரியான மனப்பிறழ்வு வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்தவர்.

வெற்றிப்பட இயக்குநர்களையே திரும்ப திரும்ப தேடி ஓடாமல் புதியவர்களை கைதூக்கி விட்டவர். 150  படங்கள் நடித்திருக்கிறார். அதில் 50க்கும் மேற்பட்டவை புதிய இயக்குநர்களின் படங்கள். ஆர்.கே.செல்வமணி உட்பட பலரை சொல்லலாம். பூந்தோட்ட காவல்காரனில் லிவிங்ஸ்டன், புலன் விசாரணையில் சரத்குமார், கேப்டன் பிரபாகரனில் மன்சூர் அலிகான், செந்தூரப்பூவே ராம்கி என  துவங்கி ஏராளமான திரை பிரபலங்கள் அவரால் திரையில் முகம் காட்ட துவங்கியவர்கள் தான். 

ஆரம்ப காலத்தில் விஜய் பெரிதாக சோபிக்காமல் இருந்தபோது அவரது தந்தை எஸ்ஏசி மீதான பாசத்தால் 'செந்தூரப் பாண்டி' மாதிரியான படங்களில் கூடவே நடிக்க வைத்தவர்.

இப்படி திரையுலகினருக்கு மட்டுமல்ல. நடிகர் சங்கத்துக்கே இவரால் தான் விடிவு காலம் பிறந்தது. எம்ஜிஆர் சிவாஜி என ஜாம்பவான்கள் கோலோச்சிய நடிகர் சங்கம் கடன் சுமையில் தள்ளாடியபோது இவர்தான் தலைமை ஏற்று நடிகர் சங்க கடனை முழுமையாக அடைத்து உபரி நிதியை சேர்த்தவர்.

இதற்காக நடிகர் நடிகைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த ஒருங்கிணைப்பு வேலை எல்லாம் அவ்வளவு லேசானதல்ல. இப்போதும் அவர் தலைவராக இருந்திருந்தால் சங்க கட்டிடம் கட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால் அவர் தகுதியான கேப்டன். மற்ற எந்த நடிகரையும் போல இல்லாமல் தனது நூறாவது படத்தை கூட மாபெரும் வெற்றிப் படமாக கொடுத்த கேப்டன்.

எம்ஜிஆருக்கு பிறகு தனது சொந்த செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கட்சி ஆரம்பித்து தனியாகவே எம்எல்ஏவாக வென்றவர். 2006 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்எல்ஏ. 

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் திமுக அதிமுக அல்லாத ஒரே எதிர்க்கட்சி தலைவர் இவர்தான். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மூத்த காபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஜெயலலிதா உடன் கூட்டணியால் கிடைத்தது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை இந்த கூட்டணிதான்  பெற்றது. திமுக அணிக்கு மூன்றாவது இடம்தான். இவரது கட்சி ஒரு எம்பி கூட பெறாதபோதும் டெல்லி சென்றபோது  பிரதமர் மோடி ஓடோடி வந்து கட்டித் தழுவி வரவேற்றார்.


இப்படி கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த தவறியது, விதிப்பயன்றி வேறென்ன...?

நல்ல மனிதர். மனதில் பட்டதை பேச்சிலும் செயலிலும் காட்டும் குணம் படைத்தவர். புனித மாதமான மார்கழியில் இறைவனிடம் சென்றிருக்கிறார்...

எந்த ஒரு உயர்ந்த பதவியிலும் இருந்தவர் இல்லை... 

ஆனாலும் குவிந்து கிடக்குது லட்சக்கணக்கான ஜனம்...

இந்த மனுசப்பயலுக குணமே இதுதான்...

இருக்கும்போது கண்டுக்காம கல்லறையில் வந்து பூ வைப்பாங்க...

...







இந்த வீடு நமக்கு சொந்தமில்லை...

அதனால நமக்கு துன்பமில்லை...

உள்ளவங்க எத்தனையோ

வந்து வந்து போனாங்க...

சந்தையில வெள்ளாட்டு

மந்தையைப் போல் ஆனாங்க...


எந்நாளும் நல்லவர்களுக்கு

ஏழைகளின் மனம்தான்

பொன்னான வீடாகும்...

ஊராரின் வாழ்த்துகள் தான்

நிலைத்திருக்கும் பொருளாகும்...


உன் பெயரை சரித்திரத்தில்

மனிதன் என்று பொறித்திடு...

இங்கு வெல்லுறவன் யாரு...

மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில்

நிற்கும் உந்தன் பேரு...


#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 7 November 2023

பிறவிக் கலைஞனுக்கு பிறந்த நாள்...

வெகுஜனங்களின் பொழுதுபோக்கும் துறையான சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாகவே ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறை ஜனங்களையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்து அவர்களுக்கேற்ப அப்டேட் ஆனால் மட்டுமே "தக் லைஃப்" காலம் வரை நீடிப்பது சாத்தியம்.




தமிழ் சினிமாவின் ஆரம்ப கால ஜாம்பவான்களில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்...!

'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவரது மகனோ, மகளோ..., இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான் அல்லது ரசிக்கிறாள்.



தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 



முழு நேர நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது. 

ரஜினிக்கு முன்பு 1970களின் இறுதி மற்றும் 1980களின் ஆரம்பத்தில் இவர்தான் தமிழின் உச்ச நட்சத்திரம். 16 வயதினிலே படத்தில் ரஜினியை விட பத்து மடங்கு சம்பளம் அதிகம், இவருக்கு...!



'16 வயதினிலே', 'அவள் அப்படித்தான்', 'ராஜபார்வை', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'இந்தியன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'குணா', 'மூன்றாம் பிறை', 'பேசும்படம்', 'ஆளவந்தான்', 'ஹே ராம்', 'பாசவலை', 'குருதிப் புனல்', 'தசாவதாரம்' என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் 'விஸ்வரூபம்' எடுத்து நிற்கிறது. 

இவரது  கலைப் பயணத்தை பல ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.  குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், ஜெமினி என பிரபலங்களுடன் நடித்த கமல்...

1970களில் 'அவர்கள்', 'அவள் ஒரு தொடர்கதை' போன்ற கருப்பு வெள்ளை படங்களின் கமல்...

1980களில் 'சகலகலா வல்லவன்' மாதிரியான ஹிட் கொடுத்த கமர்ஷியல் ஹீரோ கமல்...



1990களின் 'இந்தியன்' (சேனாதிபதி கிழவன் முன்பு அசல் கிழவன் தோற்றுப் போவான்...) போன்ற மெச்சூரான நடிப்பு பசி கொண்ட கமல்...

2000களின் 'தசாவதாரம்' போன்று புதுமைகளை பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கிய கமல்...


பாடகர் கமல்... 

டான்ஸ் மாஸ்டர் கமல்... 

இப்படி வெவ்வேறு விதமாக கமலைப் பற்றி தனித்தனியாகவே பக்கம் பக்கமாக எழுதலாம்...

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல்.

 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் செல்போனில் ஒலிக்கும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான். தான் நடனம் அமைத்த பாடலையே தனது படத்துக்கு பயன்படுத்தி இருப்பார்.



என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இயற்கையான நடிகர் என்றால் இவர் ஒருவரைத்தான் சொல்வேன்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

ஒருவர் எந்த துறையில் இருந்தாலும், தத்தமது துறையில் சிறப்பாக இருப்பது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

'மகராசன்', 'தெனாலி', 'சதி லீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்', 'பஞ்ச தந்திரம்', 'காதலா காதலா', 'வசூல் ராஜா' என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்...

'16 வயதினிலே', 'மூன்றாம் பிறை', 'குணா', 'மகாநதி', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து' என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

'பேசும்படம்', 'குருதிப் புனல்', 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்



'ஹே ராம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்' என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, 'இந்தியன்' தாத்தா, 'அவ்வை சண்முகி' மாமி, 'தசாவதாரம்' பாட்டி, 'அபூர்வ சகோதரர்கள்' குள்ள அப்பு என தன்னை முற்றிலுமாக மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 



மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர் மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 


அவர் கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி.... அம்பிகா, ராதா, ரேகா.... சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் இன்றும் தொடரும் முன்னணி நாயகன். 

இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னைக்கு அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம்...



சினிமாவை அடி ஆழம் வரை அலசிப் பார்த்த கமல், அரசியல் பாடத்தை மட்டும் ரஜினியிடம் கொஞ்சம்  படித்திருக்கலாம்...!


#நெல்லை_ரவீந்திரன்

Friday 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

Saturday 5 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -60




"நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு முட்டாளுங்க..."

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

"சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..."

"பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..."

"ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."

இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான தத்துவ பாடல்களை தனது சொந்த குரலிலேயே பாடியவர்.


அப்படியே,

"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..."

"குங்குமப் பூவே கொஞ்சிப் புறாவே தங்கமே உன்னை கண்டதும்..."

"உனக்காக... எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக..."

"உன் திருமுகத்த ஒரு முகமா காட்டு..."

"கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே..."

இப்பிடி ஹீரோக்களைப் போலவே டூயட்டுகளிலும் கலக்கியவர். காமெடியன், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக ஜொலித்தவர் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' சந்திரபாபு. 

அவரது தந்தை அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று முழு சொத்தையும் இழந்ததால், சந்திரபாபுவின் சின்ன வயதிலேயே தூத்துக்குடியில் இருந்து சிலோனுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம். 



அங்குதான் சந்திரபாபு கல்லூரி படிப்பு வரை முடித்தார். அங்குதான் வெளிநாட்டு பாணியில் கோட், சூட், நடனம், பாடல் எல்லாமே அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தது அவரது குடும்பம். சந்திரபாபுவின் தந்தை இலங்கையில் மட்டுமல்ல, சென்னையிலும் தினமணி போன்ற பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறார்.

சென்னை வந்ததும் சினிமா சான்சுக்காக அலைந்த சந்திரபாபு 1947ல் 'தன அமராவதி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் விரக்தியில் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றத்துக்காக கைதாகி நீதிபதி முன் நின்றபோது, நீதிபதியிடமே தனது சேஷ்டை கலந்த நடிப்பை நடித்து காண்பித்திருக்கிறார். பின்னர், எச்சரிக்கப்பட்டு விடுதலையானதும், நடந்த விஷயங்களை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) 1952ல் வெளியான 'மூன்று பிள்ளைகள்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.



சேஷ்டை, அஷ்ட கோணலில் முக பாவம், பாடகர் என காமெடியன்களில் தனித்து நின்ற சந்திரபாபுவின் 'சார்லி சாப்ளின்' டைப் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர,  அடுத்த 15 ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லாருடனும் மிக முக்கியமான வேடங்களில், நாயகனுக்கு நிகராகவே நடித்தார். 

'குலேபகாவலி', 'மகாதேவி', 'புதையல்', 'பதிபக்தி', 'நாடோடி மன்னன்', 'மரகதம்', 'கவலை இல்லாத மனிதன்', 'பாதகாணிக்கை', 'கவலை இல்லாத மனிதன்' என அவர் நடித்த படங்கள் ஏராளம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான கேரக்டர். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடி சரோஜாதேவி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாடோடி மன்னன் படத்தில் கருப்பு வெள்ளை, கலர் என இரண்டு பகுதியிலும் படம் முழுவதும் வரும் நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.



சந்திரபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு நிச்சயமாக பாடல் இருக்கும். அதை அவரே பாடி நடித்திருப்பார். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மற்றும் அவர்களுக்கு முந்தைய கால பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். 

டிஎம்எஸ், ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, ஜமுனா ராணி என பிரபல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுடன் பாடியவர். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'  படத்தில் இவர் பாடிய "ஜாலி லைப்... ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்" பாடலுக்கு வாயசைத்தவர்,  சிவாஜிகணேசன்...!



1960, 70 ஸ் மட்டுமல்ல இன்றளவும் சந்திரபாபு காமெடிக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்த சந்திர பாபுவின் திருமணமே தடபுடலாகத்தான் நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற திருமண விழா அது.



"உல்லாசமாகவே... உலகத்தில் வாழவே... கல்யாணம்... ஆஹா கல்யாணம்..." என திரையில் பாடியவருக்கு நிஜத்தில் கல்யாண வாழ்வு உல்லாசமாக அமையவில்லை. அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்ததால் அந்த நபருடனேயே மனைவியை சேர்த்து வைத்து விட்டார்.

மண வாழ்வு சோகத்தை தொடர்ந்து பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார், சந்திரபாபு. சொந்த படம் தயாரித்து  நஷ்டம் அடைந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணத்தால் எதிரிகளை சம்பாதித்தார். இப்படியாக, சந்திரபாபுவின் பின்னாளைய வாழ்க்கை பரிதாபமாகி போனது. வெஸ்டர்ன் ஸ்டைலிலான அவரது நடை, பாவனை, ஸ்பூனில் சாப்பிடும் அழகு என சக நடிகர்களே வியந்து பார்த்த சந்திரபாபு பரிதாபமாக சரிந்தார்.

எம்ஜிஆருடன் தகராறு இருந்ததாக சொல்வார்கள். ஆனால், தனது சொந்த படமான 'அடிமைப் பெண்' (1969) படத்தில் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆர் தயாரித்த நாடோடி மன்னனிலும் (1958) சந்திரபாபு உண்டு.

சந்திரபாபுவின் கடைசி காலங்களில் தனது வீட்டில் இடம் கொடுத்து உதவி இருக்கிறார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 1974ல் சந்திரபாபு மரணமடைந்தபோது இறுதிச் சடங்கை நடத்த உதவியவர், சிவாஜி கணேசன்.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து, நாடு விட்டு நாடு சென்று படிப்படியாக முன்னேறி, அப்படியே படிப்படியாக சறுக்கியவர் சந்திரபாபு. அவரது பாடல்கள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கற்றுத் தரும் பாடங்கள் பல....

ஆகஸ்ட் 5. சந்திரபாபு பிறந்த நாள்...


#நெல்லை_ரவீந்திரன்

Thursday 27 July 2023

அம்மா...

ஜூலை 27. 

இதே நாளின் இரவில் தான் இடியாய் வந்தது அந்த செய்தி. தொலைபேசி மட்டுமே இருந்த காலம் அது. ஊரில் இருந்து அண்ணாசாலையில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து அறையில் இருந்த என்னை வந்து சேர்ந்தது, செய்தி.

ஆறு மாதத்துக்கு முன்பு தான், ஒற்றை பையுடன், வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலை. ஆனாலும் கூட, 40 நாட்களுக்கு முன் தான் புற்று நோயுடன் போராடியவரை கலங்கிய விழிகளுடன் ஊருக்கு சென்று பார்த்து விட்டு வந்திருந்தேன். செவியில் அந்த செய்தி விழுந்ததுமே தரை நழுவிச் சென்றது போன்ற உணர்வு.

ஒருவாறாக சமாளித்து, அடுத்து என்ன செய்வது? ஊருக்கு உடனே செல்ல வேண்டுமே. பணம்...? இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் பணம் கடனாக கேட்க முடியுமா? நண்பர்களும் என்னைப்போலவே... ஆனாலும் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் அலுவலக சர்குலேஷன் கலெக்சன் பணத்தை அறை நண்பர் ஒருவர் வைத்திருந்தார். இரவு வேளையில் மேனேஜரிடம் அனுமதி பெற்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பியபோது நள்ளிரவை நெருங்கி விட்டது.

பாரீசில் திருவள்ளுவரை பிடித்து, பிறர் அறியாமல் மனதுக்குள்ளேயே அழுது, புலம்பி உறங்காத விழிகளுடன் ஊர் சென்றபோது மறுநாள் மதியத்தை கடந்து விட்டது. அங்கே எல்லாம் முடிந்து விட்டது. 

ஊரில் அண்ணன் இருந்ததால் அவனை வைத்தே எல்லா காரியமும் முடிந்து விட்டது. ஆறு மாதமாக புற்று நோயுடன்  போராடித் தோற்றுப்போன உடல் தாங்காது என்றார்கள். எப்படியோ, எனக்கு உயிரும் உடலும் தந்த அந்த தெய்வத்தின் இறுதி நாளில் அருகில் இருக்கும் கொடுப்பினை வாய்க்கவில்லை.

இருபது ஆண்டுகளில் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். இன்பம், துன்பம், அதிர்ஷ்டம் என்று பல... ஆனால், கடைசி முகம் பார்க்க முடியாத அந்த துரதிர்ஷ்டம் மட்டும் நெஞ்சு கூட்டுக்குள் துடித்துக் கொண்டே இருக்கிறது, வேறு எவருக்கும் இந்த நிலைமை வரவே வேண்டாம் என்ற முணுமுணுப்புடன்...

#நெல்லை_ரவீந்திரன் 

Monday 24 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -59

தமிழ் சினிமாவில் இயக்குநர் டூ நடிகர்கள் பலர் உண்டு. ஆனால், இசையமைப்பாளர் டூ நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நாகர்கோவில் காரர். அடிப்படையில் சவுண்ட் என்ஜினீயர். அவருக்கு விஜய் என்ற பெயரை சூட்டியவர் இளைய தளபதி விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏசி.

2 கே சினிமாக்களில் இசையமைப்பாளராக  நுழைந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் ராப் பாடல்களுக்கு சொந்தக்காரர். 'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்', 'அங்காடி தெரு', 'உத்தம புத்திரன்', 'வேலாயுதம்' இப்படி பல படங்களில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம்.

"டைலமோ டைலமோ, டைல டைல டைலாமோ காலைலேக்கி ராத்திரி மேல் காதலே..."

"ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திச் சூடி..."

"அட்றா அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க.."

"மஸ்காரா போட்டு மயக்குறீயே..."

"என் உச்சி மண்டைல சுர்ருங்குது..."

"தப்பெல்லாம் தப்பே இல்லை..."

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..".

"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் வருமா..."

"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே..."

"கரிகாலன் கால போல கருத்திருக்கு குழலு...

"இடிச்ச பச்சரிசி புடிச்ச மா விளக்கு... "


இப்பிடியான வெரைட்டியான பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, பல பாடல்களை பாடியும் இருக்கிறார், குறிப்பா ராப் டைப் பாடல்கள்

 "ஆத்திச்சூடி.." பாடலில் அவரே ஆடிப்பாடி நடித்திருப்பார். அவர் முழுமையான நடிகராக மாறியது, 'நான்' படத்தில் தான்.  யாரையும் சோதனை செய்து பரீட்சித்து பார்க்காமல் அவரே அந்த படத்தை சொந்தமாக தயாரித்தார்.



தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் இன்றைய நடிகர்களாக இரண்டு பேரை சொல்லலாம். ஒருவர் விஜய் ஆண்டனி. அடுத்தவர் அருள்நிதி.

கதையைப் போலவே தன்னுடைய படத்தின் டைட்டில்களிலும் வித்தியாசம் காட்டி, எதிர்மறையான பெயர்களாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாதவர், விஜய் ஆண்டனி.

விஜயகாந்த் நடித்த 'தெருப்பாடகன்' பட டைட்டிலையே 'புதுப்பாடகன்' என மாற்றிய அளவுக்கு சென்டிமெண்டில் சிக்கி தவிக்கும் தமிழ் திரையுலகில், இவரது பட டைட்டில்களைப் பாருங்கள். 'எமன்', 'சைத்தான்', 'பிச்சைக்காரன்', 'கொலை', 'கொலைகாரன்'... 



விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' படம், சாமான்யன் ஒருவன் முதல்வர் ரேஞ்சுக்கு உயருவது போன்ற கதை. ஒரு மாஸ் ஹீரோ அதில்  நடித்திருந்தால் அரசியலுக்கு அச்சாரம் போடும் படமாக இருந்திருக்கும்.

'திமிரு பிடிச்சவன்' - மாநரில் போதை பொருள் கடத்தல் தாதாவை ஒழிக்கும் காவல் அதிகாரியின் கதை.

'காளி' - டிஎன்ஏ மூலமாக தனது தந்தையை கண்டு பிடிக்கும் ஒரு டாக்டரின் கதை.

அவரது படம் எல்லாமே ஒன் லைனில் மிக எளிமையாக இருந்தாலும் திரைக்கதையும் படத்தை கொண்டு செல்லும் விதமும் அருமையாக இருக்கும். விஜய் ஆண்டனி படம் என்றால் போரடிக்காமல் போகும் என்பது உறுதி.



பெரும்பாலும்  திரில்லர் கலந்த கிரைம் ஸ்டோரியாகத்தான் அவரது படம் இருக்கும். அதே நேரத்தில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனது படங்களில் மிகத் தெளிவாக பதிவு செய்பவர், விஜய் ஆண்டனி.

'பிச்சைக்காரன்' படம் அவரது திரை வாழ்வின் அச்சீவ்மெண்ட். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தை அவரது பிச்சைக்காரன் படத்தில் முன்கூட்டியே பேசியதெல்லாம் வேற லெவல்.

கிரைம் பிளஸ் திரில்லரை தாண்டி, 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் எம்.எஸ் பாஸ்கர்,  மனோபாலா ஜெகன் ஆகியோருடன் காமெடியில் கலக்கி இருப்பார். 

'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில், மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கி மறு பிறவி எடுத்து வந்துள்ள விஜய் ஆண்டனி அவரது பாணியிலேயே மேலும் பல படங்களை கொடுக்க வாழ்த்துகள்.

 கூடவே, இசையமைப்பாளராக  துள்ளல் பாடல்களும் நிறைய தர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

ஜூலை 24, அவரது பிறந்த தினம்.

#நெல்லை_ரவீந்திரன்

Friday 21 July 2023

சிவாஜியை வியக்க வைத்த குரு, சிஷ்யன்

முதல் படத்திலேயே மிக நீளமான வசனங்களை பேசி பெயர் பெற்றதாலோ என்னவோ, சினிமாவில் வசனங்கள் என்றால் சிவாஜியே அழைக்கப்பட்டார். 

சிவன் துவங்கி வீரபாகு வரை கடவுள்களையும் புராணங்கள்,  வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கதாபாத்திரங்களை பார்த்தது, இவர் வடிவில்தான். 

'தெய்வமகன்', 'பாசமலர்', 'படிக்காத மேதை', 'திரிசூலம்', 'புதியபறவை' என ஏராளமான படங்களில் நடிப்புக்காகவே கொண்டாடப் படுபவர்.

நடிப்பு ஒருபுறம் என்றால் வசனம் தான் சிவாஜியின் மற்றொரு அடையாளம். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'திருவிளையாடல்', 'மனோகரோ' மாதிரியான படங்கள் எல்லாம் வேற லெவல். 

உண்மையில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் எம்ஜிஆருக்கானது. ஆனால் கடைசியில் இறப்பது போன்ற காட்சி கடடாயம் என்பதால் எம்ஜிஆர் அதில் நடிக்கவில்லை. மதுரை வீரனுக்கு பிறகு அதை கொள்கையாகவே எம்ஜிஆர் வைத்திருந்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', சிவாஜியால் வசன காவியமானது.  எம்ஜிஆர் நடித்திருந்தால் அது வேறு விதமாகி இருந்திருக்கும்.

நிற்க...


இப்படி வசனத்தாலேயே தூள் கிளப்பிய சிவாஜி, 1984ல் வெளியான 'தாவணிக் கனவுகள்' படத்தில் ஸ்கிரிப்டுக்காக தவித்திருக்கிறார். துணை இயக்குநர்களிடம் வசன பேப்பர் கேட்பாராம். ஆனால், முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எழுதி வசனத்தை மனப்பாடம் செய்வது கே.பாக்யராஜ் ஸ்டைல் கிடையாது. எல்லாமே ஷூட்டிங்கில்தான். அப்படித்தான் சிவாஜிக்கும். அதுவும் ஒன்றிரண்டு வசனங்கள் தான் இருக்கும். 



இந்த படத்தில், எக்ஸ் மிலிட்டரி மேனான சிவாஜி, சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பார். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக, வேலையில்லாத வாலிபராக சைக்கிள் கடையின் எதிர் வீட்டில் வசிப்பவராக பாக்யராஜ். இந்த படத்தில் சிவாஜியை தனக்கு இணையாக ஒரு காமெடியனாகவே மாற்றி இருப்பார், பாக்யராஜ்.

படம் சூப்பர்ஹிட். "எப்பிடிடா... இப்பிடி படம் எடுக்கிறீங்க. ஹிட் குடுக்கிறீங்க..."ன்னு தன்னோட நீண்ட வசனம் பேசிய சினிமா அனுபவத்தோடு முடிச்சிப் போட்டு ஆச்சரியப்பட்டிருக்கார், சிவாஜி.


இதுக்கு அடுத்த வருடமே 1985ல் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படம். சிஷ்யன் பாக்யராஜாவது சிவாஜிக்கு ஒன்றிரண்டு வசனம் குடுத்திருப்பார். ஆனால், 'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் கூட குருநாதர் பாரதிராஜா, சிவாஜிக்கு கொடுத்திருக்க மாட்டார். 


"சும்மா இப்பிடி அப்பிடி நடங்கண்ணே போதும். இப்பிடி பாருங்க.. இந்தப் பக்கமா போங்க்ணே.."ன்னு பெரிதாக வசனமே இல்லாமல் சிவாஜியின் உடல், முக அசைவுகளைக் கொண்டே அந்த படத்தை ஹிட்டாக்கி  இருப்பார் பாரதிராஜா.

"சிஷ்யனாவது ஏதாவது டயலாக் குடுத்தான். நீ அது கூட தரலியேப்பா..."ன்னு பாரதிராஜா கிட்ட சலிச்சிகிட்ட சிவாஜி, அந்த படம் முழுமையானதும், "அட... இது தெரியாம இத்தன வருஷமா மூச்சப் பிடிச்சி வசனம் பேசி நடிச்சிருக்கேனப்பா..."ன்னாராம்.

பாடல்களுக்காகவும் கொண்டாடப்படும் 'முதல் மரியாதை'யில், சிவாஜியின் மனைவியாக வரும் வடிவுக்கரசி முழம் முழமாக வசனம் பேசுவார். கிராமத்து சொல்வடயில் கழுவி கழுவி ஊற்றுவார். ஆனால், சிவாஜிக்கு ஒரு வார்த்தை கூட வசனம் இருக்காது...! முக பாவனை மட்டுந்தான். 

இந்த படத்தில், "சாமி எனக்கு ஒரு உண்ம தெரியணும்..." என்ற டயலாக் நல்ல பேமஸ்... ஆனால், அது சிவாஜிக்கு அல்ல... சிவாஜியை சந்திக்கும் மற்றொரு கேரக்டருக்கானது...!

சிவாஜின்னதும் அவரது வசனங்களையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த ரெண்டு படங்களும் தான் எனக்கு நினைவுக்கு வருது...

இன்று சிவாஜி கணேசன் நினைவு நாள்...

  #நெல்லை_ரவீந்திரன்