Thursday 27 July 2023

அம்மா...

ஜூலை 27. 

இதே நாளின் இரவில் தான் இடியாய் வந்தது அந்த செய்தி. தொலைபேசி மட்டுமே இருந்த காலம் அது. ஊரில் இருந்து அண்ணாசாலையில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து அறையில் இருந்த என்னை வந்து சேர்ந்தது, செய்தி.

ஆறு மாதத்துக்கு முன்பு தான், ஒற்றை பையுடன், வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலை. ஆனாலும் கூட, 40 நாட்களுக்கு முன் தான் புற்று நோயுடன் போராடியவரை கலங்கிய விழிகளுடன் ஊருக்கு சென்று பார்த்து விட்டு வந்திருந்தேன். செவியில் அந்த செய்தி விழுந்ததுமே தரை நழுவிச் சென்றது போன்ற உணர்வு.

ஒருவாறாக சமாளித்து, அடுத்து என்ன செய்வது? ஊருக்கு உடனே செல்ல வேண்டுமே. பணம்...? இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் பணம் கடனாக கேட்க முடியுமா? நண்பர்களும் என்னைப்போலவே... ஆனாலும் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் அலுவலக சர்குலேஷன் கலெக்சன் பணத்தை அறை நண்பர் ஒருவர் வைத்திருந்தார். இரவு வேளையில் மேனேஜரிடம் அனுமதி பெற்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பியபோது நள்ளிரவை நெருங்கி விட்டது.

பாரீசில் திருவள்ளுவரை பிடித்து, பிறர் அறியாமல் மனதுக்குள்ளேயே அழுது, புலம்பி உறங்காத விழிகளுடன் ஊர் சென்றபோது மறுநாள் மதியத்தை கடந்து விட்டது. அங்கே எல்லாம் முடிந்து விட்டது. 

ஊரில் அண்ணன் இருந்ததால் அவனை வைத்தே எல்லா காரியமும் முடிந்து விட்டது. ஆறு மாதமாக புற்று நோயுடன்  போராடித் தோற்றுப்போன உடல் தாங்காது என்றார்கள். எப்படியோ, எனக்கு உயிரும் உடலும் தந்த அந்த தெய்வத்தின் இறுதி நாளில் அருகில் இருக்கும் கொடுப்பினை வாய்க்கவில்லை.

இருபது ஆண்டுகளில் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். இன்பம், துன்பம், அதிர்ஷ்டம் என்று பல... ஆனால், கடைசி முகம் பார்க்க முடியாத அந்த துரதிர்ஷ்டம் மட்டும் நெஞ்சு கூட்டுக்குள் துடித்துக் கொண்டே இருக்கிறது, வேறு எவருக்கும் இந்த நிலைமை வரவே வேண்டாம் என்ற முணுமுணுப்புடன்...

#நெல்லை_ரவீந்திரன் 

No comments: