Saturday 18 September 2010

ராணிக்கே இதுதான் கதி










ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர்.


மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தால் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



உலகின் முதல் பத்து அழகிகளில் ஒருவராக ‘வோக்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர், மகாராணி காயத்திரி தேவி. அவருடைய ஒரே மகன் ஜகத் சிங், 1997&ம் ஆண்டு இறந்து விட்டார். பேரன் தேவராஜ், சொத்தில் பங்கு பெறுவதற்காக கோர்ட்டுகளில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.


மகாராஜா மான்சிங்கின் மூன்றாவது மனைவியாக காயத்திரி தேவி இருந்தார் அல்லவா? ஏற்கனவே, மகாராஜா மணந்து கொண்ட இரண்டு மூத்த தாரங்களின் மூலமாக பிரித்விராஜ் சிங், ஜெய்சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வளவும் இருந்து என்ன பயன்?


ராஜஸ்தான் ராஜ குடும்ப வழக்கப்படி, மகாராஜாவோ அல்லது மகாராணியோ இறந்து விட்டால், அவர்களை எரியூட்டிய இடத்தில் ‘சத்ரி’ என்ற பெயரில் நினைவிடம் கட்டுவார்கள். அதுபோல மகாராஜா மான்சிங் மற்றும் அவருடைய முதல் இரண்டு மனைவிகளான மருதார் அன்வர், கிஷோர் அன்வர் ஆகியோர்க்கு ‘சத்ரி’ கட்டப்பட்டுள்ளன.


ஆனால், தன்னுடைய 90&வது வயதில் மரணமடைந்த மகாராணி காயத்திரி தேவிக்கோ, அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ராஜ குடும்ப வாரிசுகள் யாருக்கும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூட நேரமில்லை. ராஜ குடும்ப சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, தங்களுடைய கடமையை செய்ய யாருமே தயாராக இல்லை.


ராஜபுத்திர வழக்கப்படி ராஜ குடும்பத்தினரின் மறைந்த தினத்தன்று அவர்களுடைய நினைவாக, அவர்களுடைய நினைவிடத்துக்கு மக்கள் வந்து விளக்கேற்றி வைப்பார்கள்.


உலகப் பேரழகியாகவும், மக்களின் உள்ளம் கவர்ந்த ஜெய்ப்பூர் மகாராணியாகவும் கின்னஸ் சாதனை புரியும் வகையில் மக்களின் பேராதரவை பெற்ற தலைவியாகவும் வலம் வந்த மகாராணி காயத்திரி தேவிக்கு நினைவிடம் கட்டக்கூட யாருமே இல்லை என்றால், இதை என்னவென்று சொல்லுவது?


இவவளவு சிறப்பு வாய்ந்த ஜெய்ப்பூர் மகாராணிக்கே இது தான் கதி.


றேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகி இருக்கும் நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தன்னிலை மறந்து ஆடும் சாதாரண மனிதர்களும் இதில் இருந்து பாடம் படித்தால் நல்லது.

-நன்றி ‘தினமணி’

= வை.ரவீந்திரன் 

No comments: