Monday 16 June 2014

கடவுளின் பூமி மாகே




மதுவுக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற புதுச்சேரிக்கு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான சிறப்பு உண்டு. இதன் 4 பிராந்தியங்களும் வெவ்வேறு இடங்களில்


பிரிந்து கிடக்கின்றன. புதுச்சேரியை தவிர்த்த மற்ற  பிராந்தியங்களான ஏனாம் ஆந்திராவிலும், காரைக்கால் தமிழகத்திலும், மாகே கேரளாவிலும் சிதறிக் கிடக்கிறது.

இதில் மாகே, கடவுளின் பூமி எனப்படும் கேரள மாநிலத்தின் அருகே அரபிக் கடலோரம் முத்துச் சிப்பியாய் கரை ஒதுங்கி கிடக்கும் எழில்மிகு நகரம்.  கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே குட்டி மல்லிகையாக மணம் பரப்பி நிற்கிறது. பசுஞ்சோலையாக பரவி கிடக்கும் மாகே நகரின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் மய்யழி. மய்யழி ஆற்று கரையோரம் இருந்ததால் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டது. மய்யழி எப்படி மாகே ஆனது என்பது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த கதை. 

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த பிரெஞ்சியரை சூரத்தில் இருந்து ஆங்கிலேயர் விரட்டியதால் 1720ம் ஆண்டு மய்யழி வந்து தஞ்சம் புகுந்தனர். அங்கு ஆட்சி செய்த படகரா மன்னர் அனுமதியோடு ஒரு கோட்டையை கட்டினர். ஆனால், ஆங்கிலேயரின் துரத்தல் தொடர்ந்தது. எனவே, பிரெஞ்சியரை காப்பாற்றுவதற்காக பிரான்சில் இருந்து வந்தார், கடற்படை தளபதி பிரான்சுவா மாகே லாபோர்தனே. ஆங்கிலேயரை அடக்கி பிரெஞ்சியர் நிரந்தரமாக தங்க வழி வகுத்து கொடுத்ததால் அவர் பெயரையே அந்த பகுதிக்கு பிரெஞ்சியர் சூட்டினர். இப்படித்தான் மய்யழி, மாகே ஆனது.

மலபார் கடற்கரைக்கே உரித்தான இளமை ததும்பும் அழகுடன் சுற்றுலா தலமாக ஜொலிக்கும் இன்றைய மாகே பகுதியில் கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், தாகூர் பூங்கா என முக்கியமான இடங்களுடன் கோயில், தேவாலயம், மசூதி என ஏராளமான வழிபாட்டு தலங்களும் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரி அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மய்யழி ஆற்றின் கரையோரத்தில் walk way எனப்படும் நடைபாதை அமைக்கும் திட்டம், அதில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இரு கரைகளிலும் கற்களை பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். இந்த நடைபாதையில் மாலை நேரத்தில் ஆற்றங்கரையோரம் நடைபயில்வது அலாதியான அனுபவமாக இருக்கும். இது தவிர, மய்யழி ஆற்றில் படகு சவாரி செய்யவும் புதுச்சேரி சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. மாகே பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடம் பிரெஞ்சியர் காலத்தில் கட்டப்பட்டது. அதை புனரமைப்பு செய்து சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை கேரள கரையோரம் சென்றால் பிரெஞ்சு, மலையாளம், தமிழ் கலந்து கதம்ப மணம் வீசும் மாகே பகுதியையும் கண்டு வரலாமே? 
••••••••••

ராபர்ட் கிளைவை வென்ற மாகே
==================================

மய்யழியில் ஆங்கிலேயரை ஒடுக்கிய பிறகு புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கி இருந்து பிரெஞ்சு எல்லையை விரிவு படுத்தும் பணியில் மாகே லாபோர்தனே ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு போரில் இந்தியாவில் இன்றளவும் நினைவு கூறப்படும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இவரிடம் தோற்றுப்போய் சரண் அடைந்தார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். கிபி 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் இந்த சரித்திர அதிசயம் நிகழ்ந்தது.

புதுச்சேரியில் இருந்து சின்னஞ்சிறு படையுடன் கடல் மார்க்கமாக வந்து சென்னை நகரை மாகே கைப்பற்றினார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படை மாகேயிடம் தோற்றுப்போனது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பதிலாக  ரூ.4 லட்சம் பவுண்டு பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பவும் ஆங்கிலேயரிடமே சென்னையை ஒப்படைத்தார், மாகே. இதனால், பின்னாளில் பிரான்சுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு ராஜ துரோக தண்டனை விதிக்கப்பட்டது.

= வை.ரவீந்திரன் 

No comments: