Tuesday 6 January 2015

வெள்ளைக் கொடியில் படிந்த ரத்த துளிகள்

வௌ்ளைக் கொடி ஏந்தி வந்த
வீரா்கள் வீழ்த்தப்பட்டனர்
கொடியில் படிந்த ரத்தத் துளிகளும்
உறைந்து நாளாகி விட்டன
நெஞ்சம் நிமிர்த்தி நின்ற
வேங்கைகளும் வதைக்கப்பட்டன
ஏதுமற்ற ஏதிலிகளாய்
எல்லோரும் துரத்தப்பட்டனர்

பச்சிளம் பாலகனின் பசியாற்றி
புல்லட்டுகள் இரை எடுத்துக் கொண்டன
 நந்திக்கடலும் குருதி பூசி
செந்நிறமாகிக் கிடக்கிறது
யுத்தம் முடிந்து விட்டதாக
அறிவித்த பேரொலிகள் அடங்கி விட்டன
வேதனை முனகலும் வலிகளின்
கதறலும் காற்றில் கரைந்து விட்டன
காய்ந்து போன கண்ணீரில்
சமாதிகளும் மவுனித்து விட்டன   

சம்பிரதாய போர் செய்திகளும்
உருவம் மறைத்து அருவமாகி விட்டன
சோலைவனமாக பூத்துக் குலுங்கி
பாலைவனமாகி விட்ட பூமியில்
புதிதாக சில கூக்குரல்கள்
பூபாளம் இசைத்து வலம்வருகின்றன

சொந்த மண்ணில் சொந்தம்
இழந்து நிற்கும் ஏதிலிகளிடம்
பசப்பு வார்த்தைகள்
பல்லிளித்து வட்டமிடுகின்றன
வெந்து தணிந்த கரங்களில்
வைக்கப்பட்ட வாக்கு ஆயுதம்
என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்?
கேள்விகள் தொக்கி நிற்கிறது
வழியற்றவா்களின் விழிகளில்.....

= வை.ரவீந்திரன்  



No comments: