Monday 19 January 2015

ஹேப்பி பொங்கல்...!

கழனிகளை திருத்தி
காலனிகளாக்கி விட்டோம்
விளை நிலங்கள் அனைத்தும்
விலை நிலங்களாகி விட்டன
சாலையோர வயல்களை அழித்து
நெடுஞ்சாலை என தார் ஊற்றி
நடுவில் மலர்க்கொத்து நட்டாகி விட்டது


ஊருக்கு சோறிட்ட உழவனின் வயிறு
உள்வாங்கி பரிதாபமாக நிற்கிறான்
உழவனின் உபகாரியான
காளைகளும் காணாமல் போய்விட்டன
தமிழன், தமிழ், வேட்டி, தமிழர் திருநாள்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
உச்சரிக்கும் சம்பிரதாய சொற்களாகி விட்டன

அதிகாலை எழுந்து வாசலில்
சாணம் தெளித்து கோலமிட்டு
புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு
மாடுகளை அலங்கரித்து
மஞ்சள், கரும்பு, மாவிலை தோரணத்துடன்
கதிரவனை வணங்கி வரவேற்று கொண்டாடிய
தமிழனின் பொங்கல் போய் விட்டது

அடுக்குமாடி குடியிருப்பில்
அடுத்தவருக்கு தெரியாமல்
எரிவாயு அடுப்பில் பொங்குகிறது
தமிழனின் தமிழ் பொங்கல்
அதனாலென்ன...!
நாமும் சொல்வோம்...!
ஹேப்பி பொங்கல்...!

= வை.ரவீந்திரன்  
 


No comments: