Thursday 9 April 2015

கூலித் தொழிலாளியின் கையறு நிலை









உன் இருட்டு தொழிலுக்குள்
எங்களை இழுத்துச் செல்கிறாய்...!
எங்கள் வறுமை நெருப்பின் மீது
கரன்சி நோட்டுகளை வீசிறி
மயக்கம் ஏற்படுத்துகிறாய்...!

வனத்தின் மூச்சு திணறும் வரை...
எங்களையும் சேர்த்து இழுக்கிறது
உனது அடங்கா பண வெறி...!
உன் பசிக்கு எங்களை தின்னுகிறாய்!
எங்களை முன்னிறுத்தி நடக்கிறது உனது ஆட்டம்

கரன்சி, காக்கி, கடத்தல், கவர்மென்ட்
வலிமையான ஆரவாரங்களுக்குள்
எங்களின் அவலக்குரல் அமுங்கி விட்டது...
சத்தமின்றி வனத்தில் தொடங்கிய பயணம்
பேரொலியோடு புறப்பட்ட புல்லட்டுகளின்
சத்தத்தில் சத்தமின்றி அடங்கி விட்டது...
மரக்கட்டைகளுடன் எங்கள் உடல் கட்டைகள்

எங்களின் மிச்ச சொச்சங்களை
கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டு
மீண்டும் தேடுகிறாய் எங்களைப் போல
மற்றொரு எங்களை...
பணமே பிரதானமாகிவிட்ட மண்ணில்
இந்த இரவு மட்டுமல்ல
நாளைய விடியலும் கூட
உனக்காக மட்டுமே...!



 = வை.ரவீந்திரன்.

No comments: