Thursday, 16 April 2015

திரு அணங்கையர்





அரி அரன் அரவான்
அடுக்கடுக்காய் கடவுள்
நாமங்களைக் கூறினாலும்
கடவுளுக்கே தாலி கட்டியபோதும்
சமூகத்தின் ஜனத் திரளுக்குள்
தொலைந்து விட்ட மனித இனம்.


குரோமாசோம்களின்
குளறுபடியான குறும்பில்
குழந்தையாய் விளைந்த
மலர முடியாத அரும்புகள்
வண்டுகள் நாடா மலர்கள்

ஒரு பாதி ஆணாய்
ஒரு பாதி பெண்ணாய்
அர்த்தநாரீஸ்வரராய் இருந்தும்
அங்கீகாரத்துக்காக போராடும்
அங்கீகாரமற்ற ஆண் தேவதைகள்...?

இயற்கையின் முரண்பாட்டால்
விளைந்த மூன்றாம் பாலினம்
மனித(?) சமுதாயத்தின் தவறால்
தவறே இழைக்காமல்
தண்டனை அனுபவிக்கும் சிற்றினம்

சீழ்க்கை ஒலிகளும்
சகிக்க முடியா கேலிகளும்
புல்லினமாக கூட மதிக்க முன் வரா
சமூகத்தின் கழுகுப் பார்வைக்குள்
பாதுகாப்பை தேடும் பறவைக் குஞ்சுகள்

(ஏப்ரல் = 15  திருநங்கையர் தினம்)

= வை.ரவீந்திரன் 

No comments: