Monday 10 June 2019

காற்றில் கரைந்த கிரேஸி..

டிவி சீரியல்கள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் 'கிரேஸி டைம்ஸ்', 'விடாது சிரிப்பு' மாதிரியான தொடர்கள் தான் ஃபேவரைட். இரவு சாப்பாடு முடிந்ததும் ரிலாக்ஸ் அதுதான். அப்படித்தான் கிரேஸி மீது கிரேஸ் ஆனேன். அப்புறம் நம்ம ஃபேவரைட் ஹீரோவின் ஆஸ்தான எழுத்தாளர் என தெரிந்ததும் கூடுதல் பற்று. சென்னை வந்த புதிதில் அவ்வப்போது மேடை நாடகங்களும் பார்ப்பதுண்டு.

.



நகைச்சுவை நடிப்பு என்றால் வடிவேலுவுக்கு மாற்றாக யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல, நகைச்சுவை ஸ்கிரிப்ட் என்றால் கிரேஸி மட்டும் தான். சதிலீலாவதி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, வசூல்ராஜா மாதிரி படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. காரணம், இந்த விகடானந்தா தான்.


சேது ராமன் கிட்ட ரகசியமா..? 

ஓ நர்சோட பர்ஸா...?

மார்கபந்து முதல் சந்து...

மனமிருந்தா மார்க பந்து...

நீயும் எம்பி எம்பி பிஎஸ் படி...

ராமண்ணா... ஆங்.. அவரு பழைய டைரக்டரு...

முன்னாடி... பின்னாடி... 

என் பிரதர் கோ பரதன்...

எச்சக்கல சிங்கம்... எச்சக்கல புலி... இது மாதிரி... 

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளோவா நகைச்சுவை நீரோடை வழிந்தோடுவதும் டைமிங் காமெடியும் சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் கிரேஸி பெருங்கடலின் சில சொட்டுகள் தான். 

திரையுலக பயணம் ஒரு பக்கம் இருந்தாலும் 6500 நாடக அரங்கேற்றம். அதிலும் சாக்லேட் கிருஷ்ணா மட்டும் 500 முறை. தம்பி பாலாஜியோடு சேர்ந்து மாது, சீனு, மைதிலி, ஜானகி கேரக்டர்களோடு கிரேஸியின் அதகளம்.. தனி ரகம். ஜானகி, மைதிலி கேரக்டர் பெயர்களுக்கு தனது ஆசிரியை நினைவாக சூட்டிய பெயர் என அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

இதுபோல,  வெண்பா இலக்கண வரம்புக்குள் நான்கு வரி வெண்பா எழுதுவதிலும் வல்லவர் அவர். கூடவே கார்ட்டூன் வரைவதிலும் கில்லாடி. நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கம் வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவை எழுத்தாளர், வெண்பா கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என ஒரு மெக்கானிகல் என்ஜினீயருக்குள் ஏராளமான திறமைகளை நிரப்பி அனுப்பிய கடவுள், சாக்லேட் கிருஷ்ணனை திரும்பவும் அழைத்துக் கொண்டார். 

திரை, நாடக எழுத்தாளர், கவிஞர் என யாராவது மறைந்தால் அவரது துக்ககரமான வசனங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவரது வசனத்தில் ஒன்று கூட தேடிப் பார்த்தாலும் தென்படவே இல்லை. பாசக் கயிற்றுடன் வந்த எமன் கூட, நிச்சயமாக இவரது வசனங்களை கேட்டு, சிரித்தபடியேதான் உயிரை எடுத்துச் சென்றிருப்பான். எமனுக்கும் கூட அந்த சமயத்தில் ஏதாவது ஒரு டைமிங் காமெடி சொல்லி விட்டுத்தான் பயணித்திருப்பார், கிரேஸி...

ஜானகி, மைதிலி, மாது, சீனு இவர்களுடன் நாங்களும் மிஸ் யூ கிரேஸி...

-நெல்லை ரவீந்திரன்

No comments: