Monday 24 June 2019

புகைப்படமாக மாறிப்போன கழுதை

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதையை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? 

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். 

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக  அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர். அதற்காக வீடுகளிலேயே கழுதைகளை வளர்த்து வந்தனர்.  

ஊர் முழுவதும் வீடுகளில் அழுக்கு துணியை எடுத்து வந்து வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். இந்த வெள்ளாவி வைப்பது தனி வேலை. வட்டமாக திறந்த வெளி அடுப்பு ஒன்று வீட்டு முன் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மீது அழுக்கு துணியை ஈரமாக்கி வேக வைப்பதுதான் வெள்ளாவி.

அதிலேயே விடாப்பிடி அழுக்கெல்லாம் லேசாக உதிர தொடங்கியதும் கழுதை மேல் பொட்டலத்தை ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் குளம், ஊருணியில் துவைத்து அங்கேயே காய வைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். 



இப்பல்லாம் குளமும் இல்லை ஊருணியும் இல்லை. அதனால கழுதைகளும் இல்லை. ஊரில் திருவிழா என்றால் பந்தலில் கலர் துணி அலங்காரத்துக்கு இப்பிடி துவைத்த சேலைகளைத்தான் பயன் படுத்துவார்கள். கோயிலில் தன்னோட சேலையை பார்த்து அதிர்ச்சியாகும் பெண்கள் பலரும் மறுநாள், அந்த சலவை தொழிலாளிக்கு தனியாக கொடை குடுப்பது தனிக் கதை. இப்பல்லாம் பந்தல் அலங்காரததுக்கு தனியாகவே துணி தயாராகிறது.

பண்டிகை, கோயில் கொடைவிழா மாதிரி விசேஷ தினங்கள் தான் கழுதைங்களுக்கு விடுமுறை நாட்கள். எங்கள் ஊரில் வைத்தியலிங்க சாமி கோயிலில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்தைப்பகுதியில் கூடி நிற்கும்.

அதை சீண்டிப் பார்ப்பதுதான் திருவிழா ஜாலி. கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும். நாங்களும் துரத்திச் செல்வோம்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் கம்ப்யூட்டர் கேமில் தொலைந்து விட்டார்கள். டெம்பிள் ஃபெஸ்டிவலில் ஓடிய சிறுவர்கள் இப்போது இல்லை. டெம்பிள் ரன் சிறுவர்கள் தான். 

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.

அது மாதிரியே... இப்பல்லாம் 'கழுத கெட்டா குட்டிச் சுவர்' கிடையாது... 'முகநூல் சுவருதான்'... 😂😂

#நெல்லை_ரவீந்திரன்

No comments: